2018-03-06
V.050 - ஆள் ஆகு - மாலைமாற்று
---------------------------------
(குறள்வெண்செந்துறை) (மாலைமாற்று - Palindrome)
கேளா யாதி யோரை பேணு தாயனா
னாய தாணு பேரை யோதி யாளாகே.
பதம் பிரித்து:
கேளாய்; ஆதி, ஓர் ஐ, பேணு தாய் அனான்
ஆய தாணு பேரை ஓதி ஆள் ஆகே.
(மனமே! என் சொல்லை) நீ கேட்பாயாக; ஆதியும், ஒப்பற்ற தலைவனும், நம்மைப் பேணுகின்ற தாய் போன்றவனும் ஆன தாணுவின் திருநாமத்தை ஓதி அப்பெருமானுக்குத் தொண்டன் ஆவாயாக;
ஓர் - ஒப்பற்ற;
ஐ – தலைவன்;
பேணுதல் - பாதுகாத்தல்; போற்றுதல்;
அனான் - அன்னான் - அன்னவன் - ஒத்தவன்;
தாணு - சிவன் திருநாமங்களுள் ஒன்று - (தாணு = நிலையானது; மலை; தூண்);
ஆள் - தொண்டன்; அடிமை;
ஆகுதல் - ஆதல்;
ஏ - ஈற்றசை;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment