Monday, June 27, 2022

S.128 - சிவன் - கடல் - சிலேடை-3

2010-11-14

S.128 - சிவன் - கடல் - சிலேடை-3

------------------

நங்கையுஞ் சேரும் நதிசேரும் ஆவிவரும்

மங்கல மாமழை கண்டமுறும் - பொங்கும்

அரவமும் பூண்டிருக்கும் அங்கரைக்கண் ஆழி

சிரமலி மாலைச் சிவன்.


சொற்பொருள்:

நங்கை - 1. நம் கை; / 2. நங்கை - பெண்;

ஆவிவரும் - 1. ஆவி வரும்; / 2. ஆ இவரும்; (இவர்தல் - ஏறுதல்);

மங்கலமாமழை - 1. மங்கலம் ஆம் மழை; / 2. மங்கல மா மழை;

மழை - 1. மேகத்திலிருந்து பொழியும் நீர்; / 2. கரிய மேகம்;

கண்டம் - 1. நிலப்பரப்பு; / 2. மிடறு; கழுத்து;

உறுதல் - 1. இருத்தல்; நிகழ்தல்; / 2. ஒத்தல்;

பொங்குதல் - 1. கொந்தளித்தல்; மிகுதல்; / 2. கோபித்தல்;

அரவம் - 1. சத்தம்; / 2. பாம்பு;

அங்கரைக்கண் - 1. அம் கரைக்கண்; / 2. அங்கு அரைக்கண்;

அம் - அழகு;

கண் - ஏழாம்வேற்றுமை உருபு;


கடல்:

நம் கையும் சேரும் நதி சேரும் - நாம் வணங்கும் புண்ணிய நதிகளெல்லாம் சென்று சேரும்; ("நம் கையும் சேரும் = கடல் நம்மால் தொடக்கூடியபடி உள்ளது" என்றும் பொருள்கொள்ளலாம்);

ஆவி வரும் - (கடலிலிருந்து) நீராவி வரும்;

மங்கலம் ஆம் மழை கண்டம் உறும் - (அந்த நீராவியால் - மேகத்தால்) வளத்தைத் தரும் மழையை நிலப்பரப்புகள் அடையும்;

பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அம் கரைக்கண் - அழகிய கரையில் மிகுந்த ஒலியும் கொண்டிருக்கும்; ("பொங்கும் = கொந்தளிக்கும்" என்றும் பொருள்கொள்ளலாம்);

ஆழி - கடல்;


சிவன்:

நங்கையும் சேரும் நதி சேரும் - உமாதேவி (மேனியிலும்) கங்கை (சடையிலும்) சேர்ந்திருப்பர்;

ஆ இவரும் - இடபத்தின்மேல் ஏறுவான்;

மங்கல மாமழை கண்டம் உறும் - நன்மை தரும் அழகிய மேகத்தைக் கண்டம் ஒக்கும்; (நீலகண்டம்);

பொங்கும் அரவமும் பூண்டிருக்கும் அங்கு அரைக்கண் - சீறும் பாம்பையும் அரையில் நாணாகக் கட்டியிருப்பான்;

சிர(ம்)மலி மாலைச் சிவன் - மண்டையோட்டு-மாலை அணிந்த சிவபெருமான்;


பிற்குறிப்பு:

முன்னர் எழுதிய "கடல் - சிவன்" சிலேடைகள் - 3.4.25 & 3.4.93 - காண்க.


வி. சுப்பிரமணியன்

------------- -------------

2 comments: