Saturday, July 8, 2017

03.04.056 - சிவன் - சவுக்காரம் (soap) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-29

3.4.56 - சிவன் - சவுக்காரம் (soap) - சிலேடை

-------------------------------------------------------------

நிறையும் அழுக்ககற்றும் நீரோடு சேரும்

கறைமறையா தென்றும் இருக்கும் குறையும்

பறையுநங்கை சேரப் படுநோய் தவிர்க்கும்

இறைவன் சவுக்காரம் ஈங்கு.


சொற்பொருள்:

அழுக்கு - 1. புற அழுக்கு; / 2. மன அழுக்கு; ஆணவம் முதலிய மும்மலங்கள்;

நீர் - 1. ஜலம்; / 2. ஆறு; கடல்;

ஓடு - 1. மூன்றாம் வேற்றுமையுருபு; / 2. மண்டையோடு;

சேர்தல் - கலத்தல்; ஒன்றுகூடுதல்;

கறை - 1. துணிகளில் நிரந்தரமாகப் படியும் மாசு (stain); / 2. கறுப்புநிறம்; விஷம்;

பறைதல் - அழிதல்;

பறையுநங்கை - பறையும் நம் கை;

இலக்கணக் குறிப்பு: ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்: "146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்."

நங்கைசேர - 1. நம் கை சேர; / 2. நங்கை சேர; (நங்கை - பெண்);

படுநோய் - 1. கொடிய வியாதி; / 2. கொடிய பிறவிப்பிணி;

தவிர்த்தல் - 1. தடுத்தல்; / 2. நீக்குதல்;

ஈங்கு - இவ்விடம்; இப்படி;


சவுக்காரம் (soap):

நிறையும் அழுக்கு அகற்றும், நீரோடு சேரும் - (அது) நீருடன் சேரும்; (துணிமேல், நம்மேல்) நிறைகின்ற அழுக்கைப் போக்கும்;

கறை மறையாது என்றும் இருக்கும் - (ஆயினும், துணிமேல் இருக்கும் சில) கறைகள் எப்போதும் மறையாமல் இருக்கும்;

குறையும் பறையும் நம் கை சேரப் - (அது) நம் கையை அடைந்து (கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து) குறையும்; (பிறகு முற்றிலும்) அழிந்துவிடும்;

படுநோய் தவிர்க்கும் - கொடிய வியாதிகளைத் தடுக்கும்;

சவுக்காரம் ஈங்கு - சோப்பு (soap);


சிவன்:

நிறையும் அழுக்கு அகற்றும் - நிறைகின்ற (நமது மன) அழுக்கை அகற்றுவான்; (அல்லது - மும்மலங்களைப் போக்குவான்);

நீர் ஓடு சேரும் - (சடையில்) கங்கையும், (கையில்) மண்டையோடும் சேரும்;

கறை மறையாது என்றும் இருக்கும் - (கண்டத்தில்) கறை மறையாது எப்பொழுதும் இருக்கும். (-அல்லது- "நீரோடு சேரும் கறை..." - கடலோடு கலந்த விஷம் அவன் கண்டத்தில் என்றும் திகழும்); (சம்பந்தர் தேவாரம் - 3.4.1 - "கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே:):

குறையும் பறையும் நம் கை சேரப் - நாம் கரம்குவித்து வணங்க, நமது குறைகள் எல்லாம் அழியும்;

படுநோய் தவிர்க்கும் - கொடிய பிறவிப்பிணியைத் தீர்ப்பான்;

இறைவன் ங்கு - சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment