Wednesday, July 5, 2017

03.04.054 - சிவன் - இராணுவ வீரன் (Soldier) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-05-27

3.4.54 - சிவன் - இராணுவ வீரன் (Soldier) - சிலேடை

-------------------------------------------------------------

கண்ணிற் பொறிபறக்கும் கையிற் படையிருக்கும்

நண்ணார் புரமெரிப்பா னாக மிகவளையும்

மண்ணோர் அவன்மாண்பை வாழ்த்தி மகிழ்ந்திடுவர்

திண்ணார்போர் வீரன் சிவன்.


சொற்பொருள்:

பொறிபறத்தல் - 1. கோபத்தோடு பார்த்தல்; / 2. தீப்பொறி சிதறுதல்;

படை - ஆயுதம்;

நண்ணார் - எதிரிகள்; பகைவர்;

புரம் - 1. நகரம்; / 2. முப்புரம்;

புரமெரிப்பா னாக மிகவளையும் - 1. புரம் எரிப்பான், ஆகம் மிக வளையும்; / 2. புரம் எரிப்பான் நாகம் மிக வளையும் (/ அளையும்);

எரிப்பான் - 1. எரியச் செய்வான் / செய்பவன்; 2. எரிக்க; எரிப்பதற்கு;

ஆகம் - உடல்;

நாகம் - பாம்பு; மலை;

அளைதல் - தழுவுதல்;

திண் ஆர் - வலிமை மிக்க;

இலக்கணக் குறிப்புகள் :

1. பான் = எதிர்கால வினையெச்ச விகுதி; (உதாரணம்: கற்பான் வருவான் = கற்க வருவான்);

2. தனிக்குறிலைச் சாராத இடத்தில், இரண்டாம் சொல் மெல்லினத்தில் தொடங்கினால், முதற்சொல்லின் ஈற்றில் உள்ள "ம்" கெடும்;


போர்வீரன்:

கண்ணில் பொறிபறக்கும் - (போரிடும் போது) கோபத்தோடு பார்ப்பான்;

கையில் படை இருக்கும் - அவன் கையில் ஆயுதம் இருக்கும்;

நண்ணார் புரம் எரிப்பான் - பகைவர்களது நகரங்களை (குண்டு வீசி) எரிப்பான்;

ஆகம் மிக வளையும் - அவன் உடல் மிக வளையும் - (supple body);

மண்ணோர் அவன் மாண்பை வாழ்த்தி மகிழ்ந்திடுவர் - நாட்டுமக்கள் அவன் பெருமையைப் போற்றுவர்;

திண் ஆர் போர்வீரன் - வலிமை மிக்க போர்வீரன்;


சிவன்:

கண்ணில் பொறிபறக்கும் - தீ உமிழும் நெற்றிக்கண்ணை உடையவன்;

கையில் படை இருக்கும் - கையில் மழுப்படை, சூலம் முதலியன இருக்கும்;

நண்ணார் புரமெரிப்பான் நாகம் மிக வளையும் (/ அளையும்) - பகைவர்களது முப்புரங்களை எரிக்க மேருமலையும் (அந்த வில்லில் நாணாகக் கட்டியிருந்த) நாகப்பாம்பும் மிகவும் வளையும்; (-அல்லது- முப்புரம் எரித்தவன்; அவன் மேல் பல நாகங்கள் பின்னியிருக்கும்);

மண்ணோர் அவன் மாண்பை வாழ்த்தி மகிழ்ந்திடுவர் - உலகத்தோர் அவன் பெருமையைப் போற்றி (அவன் அருள் பெற்று) மகிழ்வார்கள்;

சிவன் - சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment