Saturday, January 30, 2016

02.68 – கானூர் (திருக்கானூர்)

02.68 – கானூர் (திருக்கானூர்)



2012-12-05
திருக்கானூர்
" கானூர்க் கரும்பு "
----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.76.1 - “திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை)



1)
பிறையார் செஞ்சடைப் பிஞ்ஞக னைப்பண்டு
மறையால் கீழ்விரிப் பானை மணிபோலக்
கறையார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
மறவா நெஞ்சர்க் குறவாய் வருவனே.



பிறை ஆர் செஞ்சடைப் பிஞ்ஞகனை - செஞ்சடைமேல் பிறைசூடிய பிஞ்ஞகனை;
பண்டு மறை ஆல்கீழ் விரிப்பானை - முன்பு கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருள் சொல்பவனை;
மணி போலக் கறை ஆர் கண்டனை - நீலமணி போல் கறை திகழும் கண்டம் உடையவனை;
கானூர்க் கரும்பினை - திருக்கானூரில் எழுந்தருளியிருக்கும் கரும்பு போல்பவனை;
மறவா நெஞ்சர்க்கு உறவாய் வருவனே - மறவாத மனம் உடையவர்க்கு அவன் உறவாகி வருவான்.



2)
நீரார் செஞ்சடை மீது நிரைகொன்றை
ஏரார் வெண்மதி இண்டை புனைவானைக்
காரார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
ஓராய் நெஞ்சே ஒழியும் வினைகளே.



ஆர்தல் - பொருந்துதல்;
நிரை கொன்றை - வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலை;
ஏர் - அழகு;
இண்டை - முடிக்கு அணியும் மாலை;
கார் - கருநிறம்;
ஓர்தல் - நினைதல்;



3)
நாளை எண்ணும் நமனவன் ஆருயிர்
மாள மார்பினில் அன்றுதை காலனைக்
காள கண்டனைக் கானூர்க் கரும்பினை
நீள எண்ணில் அரணென நிற்பனே.



நாளை எண்ணும் நமன் - நம் வாழ்நாளை எண்ணுகின்ற இயமன்;
நமனவன் ஆர் உயிர் மாள மார்பினில் அன்று உதை காலனை - நமனுடைய அரிய உயிர் நீங்குமாறு அவனுடைய மார்பில் உதைத்த திருவடியை உடைய சிவபெருமானை;
(சம்பந்தர் தேவாரம் - 1.76.3 - "பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளும் காலனாம்...." - CKS எழுதிய திருத்தொண்டர் புராண உரையில் , சம்பந்தர் வரலாற்றில் "அங்குள்ள பிறபதியி னரிக்கரியார் கழல்வணங்கிப்" என்று தொடங்கும் பாடலின் குறிப்புரையில், இப்பதிகப்பாடற்குறிப்பில் "காலன் - காலை உடையவன்; காலத்தைச் செலுத்துபவன் (காலம் - கால தத்துவம்);" என்று விளக்குகின்றார்);
காளகண்டன் - நீலகண்டன்;
நீள எண்ணில் - இடைவிடாது நினைந்தால்;
(சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்" - ' நீள ' என்றது, ' கால எல்லை இன்றி ' என்னும் பொருளதாய், இடைவிடாமையைக் குறித்தது);
அரண் - காவல்;



4)
மங்கை பங்கனை வன்னிவண் கூவிளம்
திங்கள் நாகம் திகழும் முடிமிசைக்
கங்கை சூடியைக் கானூர்க் கரும்பினை
அங்கை யால்தொழ அல்லலொன் றில்லையே.



வன்னி - வன்னியிலை;
கூவிளம் - வில்வம்;
கங்கை சூடியை - கங்கையை அணிந்தவனை;



5)
நாட்டம் மூன்றுடை நம்பனைப் பல்பிணக்
காட்டில் ஆடும் கழலனைக் கார்விடம்
காட்டும் கண்டனைக் கானூர்க் கரும்பினைப்
பாட்டும் பாடிப் பரவிப் பணிநெஞ்சே.



நாட்டம் - கண்;
நம்பன் - சிவன்; (நம்புதல் - விரும்புதல்);
பல் பிணக் காட்டில் - பல பிணங்களையுடைய சுடுகாட்டில்;
(சுந்தரர் தேவாரம் - 7.98.4 - "பாடிய நான்மறையான் படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத்தான்...");
பாட்டும் பாடிப் பரவி - உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து;
(சுந்தரர் தேவாரம் - 7.91.1 -
"பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் ....")



6)
பரந்த பாற்கடல் தோன்றிய நஞ்சினைக்
கரந்த கண்டனைக் கானூர்க் கரும்பினை
இரந்து கைதொழு தேத்திடும் அன்பரைப்
புரந்து நிற்பான் வரந்தரும் வள்ளலே.



பாற்கடற்றோன்றிய - பாற்கடல் + தோன்றிய - பாற்கடலில் தோன்றிய;
நஞ்சினைக் கரந்த கண்டனை - விடத்தைக் கண்டத்தில் ஒளித்தவனை; (கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்);
புரத்தல் - காத்தல்;



7)
ஆனில் அஞ்சுகந் தாடும் அடிகளை
வானில் ஓடு மதிபுனை மைந்தனைக்
கானில் ஆடியைக் கானூர்க் கரும்பினைப்
பாநல் மாலைகள் பாடிப் பணிநெஞ்சே.



ஆனில் அஞ்சு - பால், தயிர், நெய், முதலிய ஐந்து பொருள்கள்;
(சம்பந்தர் தேவாரம் - 3.92.5 - "ஏனவெண் கொம்பொடும் ... ஆனினல் ஐந்துகந் தாடுவர்..." - ஆனில் நல் ஐந்து - five good products of the cow - பசுவிற்கிடைப்பதாகிய நல்ல. பஞ்சகவ்வியத்தை);
அடிகள் - கடவுள்;
வானில் ஓடு மதி - வானில் உலவுகின்ற திங்கள்; (அப்பர் தேவாரம் - 4.4.1 - "பாடிளம் பூதத்தி னானும் ... ஓடிள வெண்பிறை யானும் ..." - ஓடு இள வெண்பிறை - வானில் ஓடும் பிறை, இளம் பிறை, வெண்பிறை);
மைந்தன் - இளைஞன்; வீரன்;
கானில் ஆடியை - சுடுகாட்டில் ஆடுபவனை; (கான் - சுடுகாடு);
பாநல் மாலைகள் - நற்பாமாலைகள்;



8)
மாலி னால்மலை ஆட்டினான் வாய்பத்தும்
ஓல மேசெய ஓர்விரல் ஊன்றிய
கால காலனைக் கானூர்க் கரும்பினைச்
சூல பாணியைச் சொல்ல வினைவீடே.



மால் - மயக்கம்; அறியாமை;
மாலினால் மலை ஆட்டினான் - ஆணவத்தால் கயிலைமலையை ஆட்டிய இராவணன்;



9)
கண்ணன் நான்முகன் நேடியும் காணொணா
வண்ணம் நின்ற வரையிலாச் சோதியைக்
கண்ணிற் றீயனைக் கானூர்க் கரும்பினை
அண்ண லைத்தொழும் அன்பருக் கின்பமே.



கண்ணன் - திருமால்;
நேடியும் காணொணா - தேடியும் காண ஒண்ணாத;
வரை இலாச் சோதியை - எல்லை இல்லாத ஒளிப்பிழம்பை;;
கண்ணிற் றீயனை - கண்ணில் தீயனை;



10)
பூதி யைப்புனை யார்புகல் ஒன்றிலர்
ஆதி மூர்த்தியை ஆதிரை யானையோர்
காதில் தோடணி கானூர்க் கரும்பினைக்
காதல் செய்வார் வினைகள் கழலுமே.



பூதி - திருநீறு;
புனைதல் - அணிதல்;
பூதியைப் புனையார் - திருநீறு பூசாதவர்கள்;
புகல் - அடைக்கலம்;
ஆதிரையான் - திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியவன்;
ஓர் காதில் தோடு அணி - ஒரு காதில் தோடு அணிகின் - அர்தநாரீஸ்வரன்;
காதல் - அன்பு;
கழலுதல் - நீங்குதல்;



11)
தலைவா நின்தாள் சரணெனும் உம்பர்க்காச்
சிலையால் முப்புரம் செற்ற பெருமானைக்
கலைமான் கையனைக் கானூர்க் கரும்பினைத்
தலையால் கும்பிடும் தன்மையர்க் கின்பமே.



உம்பர்க்கா - தேவர்களுக்காக; (கடைக்குறை விகாரம்);
சிலையால் முப்புரம் செற்ற - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களையும் அழித்த; (சிலை - மலை; வில்);
கலைமான் கையனை - கையில் மானை ஏந்தியவனை;
தலையால் கும்பிடுதல் - தலைதாழ்த்தி வணங்குதல்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.7 - "அலையார் புனல்சூடி ... சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.");



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
  • கலிவிருத்தம் - 4 அடிகள்; அடிக்கு 4 சீர்கள்;
  • முதற்சீர் மாச்சீர்;
  • இரண்டாம் சீர் நேர்சையில் தொடங்கும்;
  • 2-3-4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
  • அடி நேரசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள்; அடி நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்;
2) அப்பர் தேவாரம் - 5.4.1 -
திருவின் நாதனும் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தின் உயிர்க்கெலாம்
கருவ னாகி முளைத்தவன் கானூரில்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.



3) திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.
4) திருக்கானூர் - செம்மேனிநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=387
5) தலக்குறிப்பு: இறைவன் - செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்;
  • 'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது: 1924-ல் வெள்ளம் வந்தபோது கோயில் முழுவதும் மூடிவிட்டது. அதன்மீது ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருக்கக்கண்டு, திரு. N. சுப்பிரமணிய ஐயர் என்பவர் முயன்று தோண்டிப் பார்த்தபோது கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இப்பெருமானுக்கு கரும்பேஸ்வரர் என்று பெயராயிற்று.
  • தருமபுர ஆதீன உரையில் காண்பது: "சுவாமி பெயர் இட்சுபுரீசுவரர் என்று கல்வெட்டுக் குறிப்பாளர் எழுதுகிறார்".
  • திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15.2 - "ஆனைக் காவில் அணங்கினை .... கானூர் முளைத்த கரும்பினை ...")

-------------- --------------

No comments:

Post a Comment