Friday, January 1, 2016

02.53 – திருமாந்துறை (வடகரை)

02.53 – திருமாந்துறை (வடகரை)



2012-08-24
திருமாந்துறை (வடகரை) - (லால்குடிக்கு அருகு உள்ள தலம்)
----------------------------------
(கலிவிருத்தம். "தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் சரண்நீ னுமால்")



1)
இல்லாள் அழவே இறுதிப் பயணம்
செல்லா முனமே திருநட் டமிடும்
வல்லான் உறையும் வடமாந் துறையைச்
சொல்லாய் மனமே துயர்நீங் கிடவே.



நட்டம் - நடம்; கூத்து;
இல்லாள் அழவே இறுதிப் பயணம் செல்லா முனமே - மனைவி அழப் பாடைமேற் பயணம் செல்லும் நாள் வருவதன் முன்னமே;
திருநட்டம் இடும் வல்லான் உறையும் வட மாந்துறையைச் சொல்லாய் மனமே துயர் நீங்கிடவே - மனமே, திருக்கூத்து இயற்றுகின்றவனும், எல்லாம் வல்லவனும் ஆன சிவபெருமான் உறைகின்ற, காவிரியின் வடகரையில் உள்ள மாந்துறையிற் சென்று துதித்துத் துயர் நீங்குவாயாக;



2)
நணிவா எனவே நமனார் தமர்கள்
பிணியா முனமே பிறையார் முடியன்
மணியார் மிடறன் வடமாந் துறையைப்
பணியாய் மனமே பயமற் றிடவே.



நணி - நண்ணி - நெருங்கி; அடைந்து;


மனமே! எமபடர்கள் நெருங்கி அடைந்து, 'வா' என்று பாசத்தால் கட்டுவதன் முன்னமே, பிறைசூடும் பெருமான், மணிகண்டன் உறையும், காவிரியின் வடகரையில் உள்ள மாந்துறையைப் பணிவாயாக; பயம் தீரும்.



3)
இழையால் இருதாள் பிணையா முனமே
குழையோர் செவியன் குளிர்மா மதியன்
மழையார் மிடறன் வடமாந் துறையை
அழையாய் மனமே அழியும் வினையே.



இழை - நூல் - இங்கே கிழிக்கப்பட்ட துணி, நாடா போன்றவற்றைச் சுட்டியது;
பிணைத்தல் - கட்டுதல்;
* இறந்தோரது இரு காற் பெருவிரல்களையும் இத்தகைய இழையாற் சேர்த்துக் கட்டுதல் வழக்கம்.


மனமே! இருகால்களையும் துணிப்பட்டியால் கட்டும் நாள் வருவதன் முன்னமே, ஒரு காதில் குழை அணியும் பெருமான், குளிர்ந்த நிலவை அணியும் ஈசன், மேகம்போல் நீலமான கண்டத்தை உடையவன் உறையும் வடமாந்துறையை அழைப்பாயாக; வினைகள் அழியும்;


(11.5.6 – ஐயடிகள் காடவர்கோன் அருளிய சேத்திர வெண்பா:
காலைக் கரையிழையாற் கட்டித்தன் கைஆர்த்து
மாலை தலைக்கணிந்து மையெழுதி மேலோர்
பருக்கோடி மூடிப் பலரழா முன்னம்
திருக்கோடி காஅடைநீ சென்று.


11.5.3 – ஐயடிகள் காடவர்கோன் அருளிய சேத்திர வெண்பா:
குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி,
நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.


தலப் பெயரைச் சொல்லுதலும் அங்குள்ள இறைவன் பெயரைச் சொல்லுதலோடே ஒக்கும். இனி, 'ஐயாறு' என்பது ஆகுபெயரில் அங்கு எழுந்தருளியுள்ள இறைவனைக் குறித்தது என்றலும் ஆம்.)



4)
முதியா எனவெள் குவதன் முனமே
பதியா கியவன் பணிமா லையினான்
மதியார் சடையன் வடமாந் துறையைத்
துதியாய் மனமே துயர்நீங் கிடவே.



முதியா - முதியவனே; (முதியன் - முதியவன் - வயது முதிர்ந்தவன்);
எள்குதல் - இகழ்தல்;
பதி - தலைவன்;
பணி மாலையினான் - பாம்பை மாலையாக அணிந்தவன்;
மதிர் சடையன் - திங்களைச் சடையில் அணிந்தவன்;



5)
விழுநாள் மனையோர் மிகுதுக் கமதால்
அழுநாள் வருமுன் அலையார் சடையான்
மழுவாள் உடையான் வடமாந் துறையைத்
தொழுவாய் மனமே துயர்நீங் கிடவே.



விழுதல் - சாதல்;
அலை ஆர் சடையான் - கங்கை அலை பொருந்திய சடையை உடையவன்;


மனமே! இறக்கின்ற நாள், குடும்பத்தினர் மிகுந்த துக்கத்தால் அழுகின்ற நாள், அந்நாள் வந்தடைவதன் முன்னமே, கங்கைச்சடை உடையவனும் மழுவாள் ஏந்தியவனுமான சிவபெருமான் உறையும், காவிரியின் வடகரையில் உள்ள மாந்துறையைத் தொழுவாயாக! உன் துயர் நீங்கும்.



6)
உளநாள் அறிவார் உளரோ உமைகோன்
குளமார் சடையான் கொடிமேல் விடையான்
வளமார் வயல்சூழ் வடமாந் துறையை
உளமே நினையாய் உயர்வா கிடுமே.



குளம் ஆர் சடை - கங்கையைச் சடையில் தேக்கியதைச் சுட்டியது; (சுந்தரர் தேவாரம் - 7.28.9 - "கயமா ருஞ்சடையாய்")


மனமே! என்று உயிர்போகும் என்பதை யார் அறிவார்? உமாபதி, சடையிற் கங்கையைக் குளம்போல் தேக்கியவன், இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன் உறையும் தலமான, வளம் மிக்க வயல்கள் சூழும், காவிரியின் வடகரையில் உள்ள மாந்துறையை நினைவாயாக; உயர்கதி பெறலாம்.



7)
பணமா வியுடன் துணையா வருமோ
கணையால் எயிலெய் கடவுள் கருதூர்
மணமார் பொழில்சூழ் வடமாந் துறையை
அணையாய் மனமே அழியும் துயரே.



துணையா - துணையாக - கடைக்குறை விகாரம்;
கணை - அஸ்திரம்;
எயில் - கோட்டை;
எய்தல் - பாணம் பிரயோகித்தல்;
அணைதல் - சென்று அடைதல்; சார்தல் (To approach, come near);


மனமே! இறக்கும்போது உயிரோடு பணம் துணையாக உடன் வருமா? ஓர் அம்பால் முப்புரங்களை எய்த கடவுள் விரும்பி உறையும் ஊரான, மணம் கமழும் சோலை சூழ்ந்த, காவிரியின் வடகரையில் உள்ள மாந்துறையைச் சென்றடைவாயாக; துயர்கள் தொலையும்.



8)
உடலா ரழல்புக் கொழியா முனமே
மடவா ளவுணன் அழவூன் றியவன்
மடமா துடையான் வடமாந் துறையை
அடையாய் மனமே அடையா வினையே.



மட வாள் அவுணன் - அறியாமை மிக்க, கொடிய, அரக்கனான இராவணன்;
மனமே! இந்த உடல் ஆரழலில் புகுந்து அழிவதன் முன்னமே, கொடிய மூட இராவணன் அழும்படி அவனை ஒரு விரல் ஊன்றி நசுக்கியவனும், அழகிய உமையை ஒரு பாகமாக உடையவனுமான சிவபெருமான் உறையும், காவிரியின் வடகரையில் உள்ள மாந்துறையை அடைவாயாக; வினைகள் அடையமாட்டா.



9)
தண்டோர் துணையாத் தரியா முனமே
எண்டோள் இறைவன் இருவர்க் கரியான்
வண்டார் பொழில்சூழ் வடமாந் துறையை
அண்டாய் மனமே அழகா கிடுமே.



தண்டு - கோல்;
துணையா - துணையாக; (துணை - உதவி);
தரித்தல் - தாங்குதல்;
எண் தோள் இறைவன் - எட்டுப் புயங்கள் உடைய சிவபெருமான்;
இருவர்க்கு அரியான் - திருமால் பிரமன் இருவர்க்கும் காண அரியவன்;
வண்டு ஆர் பொழில் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை / வண்டுகள் நிறைந்த சோலை; (ஆர்தல் - நிறைதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);
அண்டுதல் - அடைதல்;



10)
அஞ்சா திகழும் மசடர்க் கருளான்
துஞ்சா ஒருவன் தொழுவார் துணைவன்
மஞ்சார் பொழில்சூழ் வடமாந் துறையை
நெஞ்சே நினையாய் நிலைபெற் றிடவே.



இகழ்தல் - தூற்றுதல்; அவமதித்தல்;
இகழும்மசடர்க்கு - (மகர ஒற்று விரித்தல் விகாரம்) - இகழும் அசடர்க்கு / இகழும் மசடர்க்கு;
அசடன் - மூடன்; கீழ்மகன்;
மசடன் - குணங்கெட்டவன்;
துஞ்சா - துஞ்சாத - இறப்பு இல்லாத; (துஞ்சுதல் - இறத்தல்; உறங்குதல்);
ஒருவன் - ஒப்பற்றவன்;
மஞ்சு ஆர் பொழில் - வானளாவும் சோலை;
நிலைபெறுதல் - நற்கதி அடைதல்;



11)
கோடா நிலையன் குனிவெண் பிறையைச்
சூடா மணியாய்ப் புனையும் துணைவன்
மாடார் மணியூர் வடமாந் துறையைப்
பாடாய் மனமே பறையும் வினையே.



கோடுதல் - வளைதல்; நடுநிலை பிறழ்தல்;
(அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான்);
குனிதல் - வளைதல்; வணங்குதல்;
சூடாமணி - தலையில் அணியும் முடிமணி (Jewel in a crest or diadem);
(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்" - சூளாமணி - சூடாமணி);
மாடு - செல்வம்;
மணி - அழகு;
பறைதல் - அழிதல்;


மனமே! நடுநிலை தவறாதவனும், வளைந்த வெண்பிறைச்சந்திரனைச் சூடாமணிபோல் அணிந்த துணைவனுமான சிவபெருமான் உறையும், செல்வம் மிக்க அழகிய ஊரான, காவிரியின் வடகரையில் உள்ள மாந்துறையைப் பாடுவாயாக; வினைகள் அழியும்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம். "தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்.
பாடல்களில் முதற்சீர் 'தானா' என்றும் வரலாம்.
மற்ற சீர்களில், ஒரோவழி தனனா என்பது தானா என்று இவ்வமைப்பு உள்ள சம்பந்தர் தேவாரத்தில் வரக் காணலாம்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.18.2 -
சிந்தாய் எனுமால் சிவனே எனுமால்
முந்தாய் எனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.



3) மாந்துறை - ஆம்ரவனேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=151

-------------- --------------

No comments:

Post a Comment