Saturday, January 30, 2016

02.69 – திருப்பழனம்

02.69 – திருப்பழனம் 



2012-12-05
திருப்பழனம்
------------------
(திருவிருக்குக்குறள் அமைப்பில் - “மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு - வஞ்சித்துறை)
(சம்பந்தர் தேவாரம் - 1.93.6 - “மொய்யார் முதுகுன்றில்”)



1)
நச்சுப் பணிபூணும்
உச்சிப் பழனத்தாய்
நச்சும் அடியேன்றன்
அச்சம் களையாயே.



நச்சுப் பணி - விஷம் உடைய நாகப்பாம்பு;
உச்சி - தலை;
நச்சுப் பணி பூணும் உச்சிப் பழனத்தாய் - விஷப்பாம்பைத் தலையில் அணிந்த, திருப்பழனத்து ஈசனே;
நச்சும் அடியேன்றன் - உன்னை விரும்பும் அடியேனுடைய;
அச்சம் களையாய் - அச்சத்தைப் போக்கி அருள்வாயாக;
- ஈற்றசை (Expletive at the end of a line or sentence in a verse or at the end of a word);
(அப்பர் தேவாரம் - 4.66.1 - "கச்சைசே ரரவர் போலுங் ... தம்மை நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே");



2)
மங்கை ஒருகூறா
கங்கை முடிமீது
தங்கும் பழனத்தாய்
சங்கை களையாயே.



சங்கை - அச்சம்;



3)
காடும் திருநட்டம்
ஆடும் இடமாக
நாடும் பழனத்தாய்
பாடு களையாயே.



பாடு - கஷ்டம்; வருத்தம் (Affiction, suffering, hardship);



4)
வற்றல் தலையேந்தி
ஒற்றை விடையேறிச்
சுற்றும் பழனத்தாய்
உற்ற துணைநீயே.



வற்றல் தலைந்தி - பிரமனது உலர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்தி;
ஒற்றை விடைறி - ஒப்பற்ற இடப வாகனத்தின்மேல் ஏறி;



5)
விழியார் நுதலானே
அழியாப் புகழானே
பொழிலார் பழனத்தாய்
அழகா அருளாயே.



விழி ஆர் நுதலான் - நெற்றிக்கண்ணன்;
அழியாப் புகழானே - என்றும் அழியாதவனாய், நிலைத்த புகழை உடையவனே;
பொழில் ஆர் பழனத்தாய் - சோலைகள் நிறைந்த திருப்பழனத்தில் உறைபவனே;
அழகா அருளாய் - அழகனே, அருள்புரிவாயாக;



6)
சேவார் கொடியானே
பூவார் முடியானே
காவார் பழனத்தாய்
தேவா அருளாயே.



சே ஆர் கொடி - இடபக்கொடி;
பூர் முடியானே - தலையில் மலர்கள் அணிந்தவனே;
கா ஆர் பழனத்தாய் - சோலைகள் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைபவனே;



7)
மழையார் மிடறானே
உழையார் கரத்தானே
பழையா பழனத்தாய்
அழகா அருளாயே.



மழை ஆர் மிடறானே - மேகம் போன்ற கண்டம் உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);
உழை ஆர் கரத்தானே - கையில் மானை ஏந்தியவனே;
பழையா - பழையவனே; புராணனே;



8)
சிலம்பை அசைமூடன்
புலம்ப நெரித்தாய்புள்
அலம்பும் பழனத்தாய்
நலங்கள் அருளாயே.



சிலம்பு - மலை;
சிலம்பை அசை மூடன் - கயிலைமலையை அசைத்த அறிவில்லா அரக்கன் இராவணன்;
புலம்ப நெரித்தாய் - வருந்தி அழும்படி அவனை நெரித்தவனே;
புள் அலம்பும் பழனத்தாய் - பறவைகள் ஒலிக்கும் திருப்பழனத்தில் உறைபவனே;
(புள் - பறவை); (அலம்புதல் - ஒலித்தல்);
நலங்கள் - பலவகைச் செல்வ நலன்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.120.11 - "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி...");



9)
அயன்மால் அறியாத
உயர்தீ உருவானாய்
வயலார் பழனத்தாய்
துயர்தீர்த் தருளாயே.



அயன் மால் அறியாத - பிரமனாலும் விஷ்ணுவாலும் அறிய இயலாத;
உயர் தீ உரு ஆனாய் - உயர்ந்த சோதி வடிவம் ஆனவனே;
வயல் ஆர் பழனத்தாய் - வயல்கள் நிறைந்த திருப்பழனத்தில் உறைபவனே;



10)
இகழ்வார்க் கிலனானாய்
புகழ்வார் புகலானாய்
பகவா பழனத்தாய்
சுகவாழ் வருளாயே.



இகழ்வார்க்கு இலன் ஆனாய் - இகழ்பவர்களுக்கு இல்லாதவன் ஆனவனே; (இகழ்வார்க்கு அருள் இல்லாதவன்);
புகழ்வார் புகல் ஆனாய் - துதிப்பவர்களுக்கு அடைக்கலம் ஆனவனே;
பகவா பழனத்தாய் - பகவனே; திருப்பழனத்தில் உறைபவனே;
சுக வாழ்வு அருளாயே - அடியேனுக்கு இன்ப வாழ்வு அருள்வாயாக;



11)
குவியாக் கரத்தானே
செவியோர் குழையானே
கவினார் பழனத்தாய்
பவநோய் களையாயே.



தனக்கு ஒரு தலைவன் இன்மையால் குவியாத கரங்களை உடையவனே; ஒரு காதில் குழையை அணிந்தவனே; அழகிய திருப்பழனத்தில் உறைபவனே; என் பிறவிப்பிணியைக் களைவாயாக.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • தேவாரத்தில் உள்ள திருவிருக்குக்குறள் அமைப்பை ஒட்டியது.
  • தமிழ் யாப்பிலக்கணத்தில் "வஞ்சித்துறை";
  • இப்பதிகத்தில் "மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு பயில்கின்றது.



2) திருவிருக்குக்குறள் (திரு இருக்குக்குறள் ) அமைப்பு - வஞ்சித்துறை;
  • நான்கு அடிகள்; ஒவ்வோர் அடியிலும் இரண்டு சீர்கள் - (குறளடி நான்கு);
  • எவ்வித வாய்பாட்டிலும் இருக்கலாம். (வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்);
  • சம்பந்தர் தேவாரம் - 1.93.6 -
மொய்யார் முதுகுன்றில்
ஐயா எனவல்லார்
பொய்யார் இரவோர்க்குச்
செய்யாள் அணியாளே”.



3) A blog post on "சம்பந்தர் தேவாரத்தில் வஞ்சித்துறை”: http://mohanawritings.blogspot.com/2011/06/blog-post_21.html
4) திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=959

-------------- --------------

No comments:

Post a Comment