Sunday, January 17, 2016

02.60 – நன்னிலம் - (நன்னிலம் நயந்த எம்மான்)

02.60 – நன்னிலம் - (நன்னிலம் நயந்த எம்மான்)



2012-10-12
நன்னிலம்
"நன்னிலம் நயந்த எம்மான்"
----------------------
(12 பாடல்கள்)
(அறுசீர் விருத்தம் - 'மா கூவிளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு.
குறிப்பு: சில நாயன்மார்களுக்கு ஈசன் அருளியது இப்பாடல்களில் சுட்டப்பெறுகின்றன. ஆயின் அவ்வடியார்கள் இத்தலத்தில் (நன்னிலத்தில்) வாழ்ந்தவர்கள் அல்லர்.
(சம்பந்தர் தேவாரம் - 2.90.1 - "எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்")



1)
மேகம் போல்மிடற் றானும் மெய்ப்பொரு ளார்க்கருள் வானும்
ஏக மாய்விரிந் தானும் எவ்வித ஒப்புமில் லானும்
பாக மாலுடை யானும் பண்டெயில் மூன்றெரித் தானும்
நாக நாணுடை யானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* மெய்ப்பொருள் நாயனார்.


மேகம்போல் கரிய கண்டத்தை உடையவனும், மெய்ப்பொருள் நாயனார்க்கு அருளியவனும், ஒன்றாகிப் பலவாய் விரிந்தவனும், ஒப்பற்றவனும், திருமாலை ஒரு பாகமாக உடையவனும், முன்பு முப்புரங்களை எரித்தவனும், நாகத்தை வில்லின் நாணாகவும் அரைக்கச்சாகவும் உடையவனும், நன்னிலத்தில் விரும்பி எழுந்தருளிய எம் தலைவன் சிவபெருமான்.



2)
வான்பு னற்சடை யானும் வலைப்படு மீன்களுள் ஒன்றைத்
தான்வி டுத்ததி பத்தர் தாள்தொழ அவர்க்கருள் வானும்
மான்ம றிக்கரத் தானும் மாசுணம் அரையசைத் தானும்
நான்ம றைப்பொரு ளானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* அதிபத்த நாயனார்


மான்மறி - மான் கன்று;
மாசுணம் - பாம்பு;
அசைத்தல் - கட்டுதல் (To tie, bind, fasten);


கங்கையைச் சடையில் தாங்கியவனும், வலையில் அகப்படும் மீன்களுள் ஒன்றைச் சிவனுக்கு அர்ப்பணமாக மீண்டும் கடலில் விட்டு வழிபடும் அதிபத்தருக்கு அருளியவனும், மான் கன்றைக் கையில் தரித்தவனும், பாம்பை அரைநாணாகக் கட்டியவனும், நால்வேதப் பொருளாகத் திகழ்பவனும், நன்னிலத்தில் விரும்பி எழுந்தருளிய எம் தலைவன் சிவபெருமான்.



3)
தூம நற்பணி யாலே துணையடி போற்றிய அன்பர்
காமம் அற்றகுங் கிலியக் கலயருக் கருள்புரிந் தானும்
சாமம் ஓதிடு வானும் தாயொடு தந்தையி லானும்
நாமம் ஆயிரத் தானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* குங்கிலியக் கலய நாயனார்


தூமம் - புகை; நறும்புகை மணம்;
துணையடி - இரண்டு திருவடி; துணையாக உள்ள திருவடி;
காமம் - சிவனடியன்றி வேறொன்றில் செல்லாத பற்று;
சாமம் - சாமவேதம்;
(அப்பர் தேவாரம் - காலபாசத் திருக்குறுந்தொகை - 5.92.6 -
"வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே".)



4)
அம்பை ஏவிய காமன் அழகுடல் நீறுசெய் தானும்
வம்பர் கண்ணறத் தண்டி மலர்விழி பெறவருள் வானும்
உம்பர் தம்பெரு மானும் ஒற்றைவி டைக்கொடி யானும்
நம்பு வார்க்கினி யானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* தண்டி அடிகள் நாயனார்


உம்பர் - தேவர்கள்;
ஒற்றை - ஒன்று; ஒப்பற்ற;
நம்புதல் - விரும்புதல்;
(பெரிய புராணம் - தண்டியடிகள் நாயனார் புராணம் - :
தொழுது புனல்மேல் எழுந்தொண்டர் தூய மலர்க்கண் பெற்றெழுந்தார்
பொழுது தெரியா வகையிமையோர் பொழிந்தார் செழுந்தண் பூமாரி
இழுதை அமணர் விழித்தேகண் ணிழந்து தடுமா றக்கண்டு
பழுது செய்த அமண்கெட்ட தென்று மன்னன் பகர்கின்றான்.)



5)
தான கத்தின ரோடு தாபனம் செய்துலை ஏறி
வான கம்மமர் நீதி வந்திட அருள்புரிந் தானும்
கான கத்திடைக் கையில் கனலொடு நடம்புரி வானும்
ஞானம் நல்கிடு வானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



பதம் பிரித்து:
தான் அகத்தினரோடு, தாபனம் செய் துலை ஏறி,
வானகம் அமர்நீதி வந்திட அருள்புரிந்தானும்,
கானகத்திடைக் கையில் கனலொடு நடம்புரிவானும்,
ஞானம் நல்கிடுவானும், நன்னிலம் நயந்த எம்மானே.


* அமர்நீதி நாயனார்


தான் - படர்க்கை ஒருமைப்பெயர் (He, she or it);
அகத்தினர் - குடும்பத்தினர் - மனைவி மக்கள்;
தாபனம் செய்தல் - ஸ்தாபித்தல் - நிலைநிறுத்துதல் (To found, erect, place, plant, establish);
துலை - நிறைகோல் (தராசு) ( Steelyard);
கானகம் - சுடுகாடு;
(பெரிய புராணம் - அமர்நீதி நாயனார் புராணம் - :
நாதர் தந்திரு வருளினால் நற்பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.)



6)
முட்டி லாதடி யார்க்கு முளைநெலை வறுத்தமு தாக்கி
இட்ட மாய்இடு மாறர் இருவிசும் பாளவைத் தானும்
கொட்டு மாமுழ வோடு கூளிகள் சூழ்ந்திசை பாட
நட்டம் ஆடிடு வானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* இளையான்குடி மாற நாயனார்


முட்டு - தடை (Hindrance, obstacle, impediment); முட்டுப்பாடு; குறைவு (Shortness, deficiency);
முளைநெலை - முளைநெல்லை - விதைத்திருந்த முளைத்தற்குரிய நெல்லை;
மாறர் - இளையான்குடி மாற நாயனார்
இருவிசும்பு - பெரிய வானுலகம்;
கொட்டுதல் - வாத்தியங்களை முழக்குதல்;
கூளி - பூதகணம்;
நட்டம் - நடனம்;



7)
பொங்கும் அன்பொடு போற்றும் புகலியர் கோன்தமிழ்க் கிரங்கி
அங்கம் அங்கிளம் பாவை ஆக்கிய ருள்புரிந் தானும்
திங்க ளோடிள நாகம் சேர்ந்தணி செய்ம்முடி யானும்
நங்கை பங்குடை யானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* திருஞான சம்பந்தர்
* மயிலாப்பூரில் சம்பந்தர் 'மட்டிட்ட புன்னை' என்று தொடங்கும் பதிகம் பாடிப் பூம்பாவையை உயிர்ப்பித்தது.


புகலியர்கோன் - திருஞான சம்பந்தர்;
அங்கம் - எலும்பு; அஸ்தி;
இளம் பாவை - பூம்பாவை;
அணிசெய்தல் - அலங்கரித்தல்;



8)
வரையை ஆட்டிய அரக்கன் மணிமுடி பத்தடர்த் தானும்
புரையி லாப்புக ழானும் பொய்புக லாக்குய வர்க்குத்
திரையும் மூப்பும கற்றித் திரும்பவும் இளமைதந் தானும்
நரைவெள் ளேறமர் வானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* திருநீலகண்ட நாயனார்


வரை - மலை;
அரக்கன் - இராவணன்;
அடர்த்தல் - நசுக்குதல்;
புரை - ஒப்பு; குற்றம்;
திரை - தோற்சுருக்கம்;
நரை வெள் ஏறு - வெண்ணிற எருது;


கயிலைமலையை ஆட்டிய இராவணனின் மணிமுடி அணிந்த பத்துத் தலைகளையும் நசுக்கியவனும், குற்றமற்ற ஒப்பற்ற புகழ் உடையவனும், பொய் சொல்லாத திருநீலகண்ட நாயனார்க்குத் தோற்சுருக்கத்தையும் முதுமையையும் போக்கி அவர்க்கு இளமையை மீண்டும் தந்தவனும், வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனும், நன்னிலத்தில் விரும்பி எழுந்தருளிய எம் தலைவன் சிவபெருமான்.



9)
தக்க னார்புரி வேள்வி தகர்த்தவண் தலையரிந் தானும்
அக்க ராவணிந் தானும் அயனரி யார்க்கரி யானும்
செக்கர் வான்நிறத் தானும் சிலந்தியை ஆளவைத் தானும்
நக்க னாய்த்திரி வானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* கோச்செங்கட்சோழ நாயனார்


அவண் - அவ்விடம் (There);
அரிதல் - அறுத்தல்;
அக்கு - எலும்பு; உருத்திராக்கம்;
அரா - பாம்பு;
அயன் - பிரமன்;
அரி - திருமால்;


தக்கன் செய்த யாகத்தை அழித்து அங்கு அவன் தலையை வெட்டியவனும், எலும்பும் உருத்திராக்கமும் பாம்பும் அணிந்தவனும், பிரமன் திருமால் இவர்களுக்கு அரியவனும், செவ்வானம்போல் செம்மேனியானும், திருவானைக்காவில் தொண்டு செய்த சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தவனும், ஆடையின்றித் திரிபவனும், நன்னிலத்தில் விரும்பி எழுந்தருளிய எம் தலைவன் சிவபெருமான்.



10)
நேச ராய்த்தொழ மாட்டா நீசருக் கருளகில் லானும்
பூச லார்மனக் கோயில் புகுந்தவர்க் கினிதருள் வானும்
வாசம் ஆர்மலர் தூவி வாழ்த்தடி யார்பழ வினையை
நாசம் ஆக்கிடு வானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* பூசலார் நாயனார்


நேசர் - பக்தி உடையவர்;
அருளகில்லான் - அருளாதவன்;



11)
நெஞ்சில் அப்பரின் அடியே நிதம்நினைந் துருகுமப் பூதி
மஞ்சன் வல்விடம் மாற்றி மற்றவர்க் கருள்புரிந் தானும்
தஞ்சம் என்றிமை யோர்கள் தன்னடி போற்றிட அவர்க்கா
நஞ்சம் உண்மிடற் றானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* அப்பூதி அடிகள் நாயனார்; திருநாவுக்கரசர்;


மஞ்சன் - மைந்தன்;
மாற்றுதல் - நீக்குதல்;
மற்று - அசைச்சொல்;
இமையோர் - தேவர்;
மிடறு - கண்டம் (throat/neck);


தம் மனத்தில் திருநாவுக்கரசரின் திருவடிகளையே தினந்தோறும் எண்ணி உருகும் அப்பூதி அடிகளாரின் மகனை விடம்தீர்த்து உயிர்கொடுத்து அவர்க்கு அருள்புரிந்தவனும், அடைக்கலம் என்று அடைந்து தேவர்கள் வணங்கியபோது அவர்களுக்காக ஆலகால விஷத்தை உண்ட நீலகண்டனும், நன்னிலத்தில் விரும்பி எழுந்தருளிய எம் தலைவன் சிவபெருமான்.


* (இச்சமயத்தில் திருநாவுக்கரசர் பாடியருளிய பதிகம் - 'ஒன்றுகொலாம்' என்று தொடங்குவது);



12)
சீரி னார்சிறுத் தொண்டர் செயற்கருஞ் செயல்மகிழ்ந் தானும்
பேரி லாப்பழை யானும் பேசுதற் கரும்புக ழானும்
நீரி னைப்புனை வானும் நெற்றியிற் கண்ணுடை யானும்
நாரி பங்குடை யானும் நன்னிலம் நயந்தவெம் மானே.



* சிறுத்தொண்ட நாயனார்


சீரினார் - சீரின் ஆர் - புகழுடைய; சிறப்பு மிக்க;
நாரி - பெண்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • அறுசீர் விருத்தம் - 'மா கூவிளம் மா விளம் விளம் மா' - என்ற வாய்பாடு;
  • சம்பந்தர் தேவாரம் 2.90.1 - 'எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்'
  • அடிதோறும் முதற்சீரின் அமைப்பு : குறில் அல்லது குறில்+ஒற்று என்று முடியும்;
  • அடிதோறும் இரண்டாம் சீர் நேரசையில் தொடங்கும்.
  • விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்.
2) சம்பந்தர் தேவாரம் - 2.92.5 -
ஈச னேறமர் கடவுள் இன்னமு தெந்தையெம் பெருமான்
பூசு மாசில்வெண் ணீற்றர் பொலிவுடைப் பூம்புக லூரில்
மூசு வண்டறை கொன்றை முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமல ருடையார் வர்த்தமா னீச்சரத் தாரே.

3) நன்னிலம் - மதுவனேஸ்வரர் கோயில் - தகவல்கள் - திர்னமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=355

---- --------

No comments:

Post a Comment