Saturday, January 2, 2016

02.54 – திருமாந்துறை (வடகரை)

02.54 – திருமாந்துறை (வடகரை)



2012-08-27
திருமாந்துறை (வடகரை) - (லால்குடிக்கு அருகு உள்ள தலம்)
----------------------------------
(கலிவிருத்தம். "தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் சரண்நீ னுமால்")



1)
ஏறார் கொடியான் எழில்மா துமையோர்
கூறா உடையான் குளிர்வெண் பிறையான்
ஆறார் சடையான் அமர்மாந் துறையைக்
கூறாய் மனமே குறுகா வினையே.



மனமே! இடபக் கொடியை உடையவன், அழகிய உமையை ஒரு கூறாக உடையவன், குளிர்ந்த வெண்மதியைச் சூடியவன், கங்கைச்சடையன் மகிழ்ந்துறையும் மாந்துறையைக் கூறுவாயாக; வினைகள் அடையமாட்டா.



2)
விண்ணோர் தலைவன் விடையொன் றுடையான்
தண்ணீர்ச் சடையன் தழல்போல் உருவன்
கண்ணார் நுதலன் கவின்மாந் துறையை
எண்ணாய் மனமே இடர்நீங் கிடுமே.



விடை - இடபம்;
தண்ணீர்ச் சடையன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் உடையவன்;
தழல்போல் உருவன் - தீப்போல் செம்மேனியன்;
கண் ஆர் நுதலன் - நெற்றிக்கண்ணன்;
கவின் - அழகு;



3)
மூத்தான் முனமோர் முனியின் உயிரைக்
காத்தான் கயிலை மலையான் கருதும்
பூத்தார் பொழில்சூழ் புனைமாந் துறையை
ஏத்தாய் மனமே இடர்நீங் கிடுமே.



மனமே! மூத்தவன்; முன்பு மார்க்கண்டேயரின் உயிரைக் காத்தவன்; கயிலை மலையான்; அப்பெருமான் விரும்பி உறையும் தலமான, பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய மாந்துறையைத் துதிப்பாயாக! இடர்கள் நீங்கும்.



4)
சிறுமான் ஒருகைத் திகழும் பெருமான்
உறுகா மனுடல் பொடிசெய் ஒருவன்
அறுகால் இசையார் அணிமாந் துறையைக்
குறுகாய் மனமே குறைதீர்ந் திடுமே.



சிறுமான் ஒரு கைத் திகழும் பெருமான் - மான்கன்றை ஒரு கையில் ஏந்திய பெருமான்;
உறு காமன் - அருகு அடைந்த மன்மதன்;
பொடி செய் - சாம்பல் ஆக்கிய;
ஒருவன் - ஒப்பற்றவன்;
அறுகால் இசை ஆர் - வண்டுகள் இசை ஒலிக்கின்ற;
அணி - அழகிய;
குறுகுதல் - அடைதல்;



5)
முன்னாய் நடுவாய் முடிவாய்த் திகழ்வான்
மின்னார் சடையன் விரைவெள் விடையன்
பொன்னார் வயல்சூழ் புனைமாந் துறையை
உன்னாய் மனமே உயர்வா கிடுமே.



முன் ஆய் நடு ஆய் முடிவு ஆய்த் திகழ்வான் - முதல், நடு, இறுதி எல்லாம் ஆகியவன்;
மின் ஆர் சடையன் - மின்னல் போன்ற சடையை உடையவன்;
விரை வெள் விடையன் - விரையும் வெள்ளை இடப வாகனன்;
பொன் ஆர் வயல் சூழ் - பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த;
(சம்பந்தர் தேவாரம் - 1.30.2 - "ஒன்னார் புர …. பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.)
உன்னுதல் - சிந்தித்தல்;



6)
வாவா எனும்வல் நமனார் மடியச்
சாவா நிலைதன் னடியார்க் கருள்வான்
பூவார் பொழில்சூழ் புனைமாந் துறையை
மேவாய் மனமே வினைநீங் கிடுமே.



வா வா எனும் வல் நமனார் மடிய - மார்கண்டேயரின் ஆயுள் ஆயிற்று என்று அவரை "வா வா" என்று இழுத்துச் செல்ல முயன்ற கொடிய எமனே மாளும்படி அவனை உதைத்து;
பூர் பொழில் சூழ் புனை மாந்துறையை - பூக்கள் நிறைந்த சோலை சூழ்ந்த அழகிய மாந்துறையை;
மேவுதல் - அடைதல் (To join; to reach); விரும்புதல்;



7)
துடியார் இடையாள் துணைவா எனவே
கடியார் மலரால் கழலைப் பணியும்
அடியார் திரளும் அணிமாந் துறையை
நொடியாய் மனமே மடியும் வினையே.



துடி ஆர் இடையாள் - உடுக்குப் போன்ற சிற்றிடை;
துணைவன் - கணவன்;
கடி ஆர் மலரால் - வாச மலர்களால்;
நொடிதல் / நொடித்தல் - சொல்லுதல்; (சம்பந்தர் தேவாரம் - 1.79.10 - "நோம்பலதவமறி யாதவர்நொடிந்த மூதுரைகொள்கிலா முதல்வர்" - நொடிந்த - சொன்ன);



8)
சினமே மலியச் சிலைபேர்த் தவனோ
எனுமா றொருமெல் விரலே இடுவார்
புனலார் வயல்சூழ் புனைமாந் துறையை
நினையாய் மனமே வினைநீங் கிடுமே.



ஓ எனுமாறு - ஓலம் என்னும்படி; (- ஓலம் - அபயம்வேண்டுங் குறிப்பு மொழி - Cry of lamentation, appeal; exclamation entreating succour in distress);


மனமே! கோபமே பொங்கி எழ ஓடிப்போய்க் கயிலைமலையைப் பேர்க்கமுயன்ற இராவணன் 'ஓலம்' என்று அலறும்படி ஒரு மென்மையான விரலை மட்டுமே அம்மலைமேல் இட்டவர்; அப்பெருமான் உறையும், நீர் நிறைந்த வயல்கள் சூழும் அழகிய மாந்துறையை நினைவாயாக! வினைகள் நீங்கும்.



9)
கருமால் கடிமா மலரான் அறியா
ஒருதீ உருவன் உமையாள் கணவன்
எருதே றிறைவன் எழில்மாந் துறையைக்
கருதாய் மனமே கழலும் வினையே.



கரு மால் - கரிய நிறமுடைய திருமால்; ( திருவாசகம் - புணர்ச்சிப் பத்து - 8.27.1 - "சுடர்பொற் குன்றை ... கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டா...");
கடி மா மலரான் - மணம் கமழும் தாமரைமேல் இருக்கும் பிரமன்;
ஒரு - ஒப்பற்ற;
எருது ஏறு இறைவன் - இடப வாகனன்;



10)
நள்ளார் சிவனை நயவஞ் சகமும்
விள்ளார் அவரை விடுவீர் விடையன்
புள்ளார் பொழில்சூழ் புனைமாந் துறையில்
உள்ளான் கழலேத் திடுவார்க் குயர்வே.



நள்ளார் - விரும்பமாட்டார்; (நள்ளுதல் - விரும்புதல்);
நயவஞ்சகம் - இனிமைகாட்டி ஏமாற்றுகை (Smiling villainy, hypocrisy);
விள்ளார் - நீங்கார்; (விள்ளுதல் - நீங்குதல்);
புள் ஆர் பொழில் சூழ் - பறவைகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த;
புனை மாந்துறையில் உள்ளான் கழல் ஏத்திடுவார்க்கு உயர்வே - அழகிய திருமாந்துறையில் உறையும் சிவபெருமான் திருவடிகளைப் போற்றுவார்களுக்கு உயர்கதி உறுதி.



11)
நிரைமா மலரும் நிலவும் புனைவான்
அரைநா ணெனவோர் அரவம் அணிவான்
வரைமா துடையான் மணிமாந் துறையை
உரையாய் மனமே உயர்வா கிடுமே.



நிரை - வரிசை;
வரைமாது - மலைமகள்;
(அப்பர் தேவாரம் - 6.6.7 - "... வரைமாதை வாடாமை வைக்கும்மடி ...");
உடையான் - (பதி - தலைவன்) - சுவாமி (Master, lord);
வரைமாது உடையான் - உமாபதி; மலைமகளை ஓர் பங்கு உடையவன்;
மணி - அழகு;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம். "தனனா தனனா தனனா தனனா" என்ற சந்தம்.
பாடல்களில் முதற்சீர் 'தானா' என்றும் வரலாம்.
மற்ற சீர்களில், ஒரோவழி தனனா என்பது தானா என்று இவ்வமைப்பு உள்ள சம்பந்தர் தேவாரத்தில் வரக் காணலாம்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.18.7 -
வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவாள் உடையாய் மருகற் பெருமான்
தொழுவாள் இவளைத் துயராக் கினையே..



3) மாந்துறை - ஆம்ரவனேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=151

-------------- --------------

No comments:

Post a Comment