Tuesday, November 17, 2020

03.08.009 - ஒலிசூழ் உமைகோன்

03.08 – பலவகை

2009-08-06

3.8.9 - ஒலிசூழ் உமைகோன்

----------------------------------------

(4 பாடல்கள்)


1) --- அறுசீர் விருத்தம் - (விளம் மா தேமா - அரையடி வாய்பாடு) ---

சடைமிசை அலைக்கும் கங்கை;

.. தழலன மேனி எங்கும்

படஅர வங்கள் சீறும்;

.. பலகுறட் கணங்கள் சூழ்ந்து

குடமுழ வங்கள் கொட்டும்;

.. கூடநான் மறைகள் பாடும்;

இடையடி யேன்விண் ணப்பம்

.. எப்படி நீகேட் பாயோ?


சடைமிசை அலைக்கும் கங்கை - சடையில் அலைத்து ஓடும் கங்கை உள்ளது;

தழல் அன மேனி எங்கும் பட அரவங்கள் சீறும் - தீப் போன்ற செம்மேனி எங்கும் படமுடைய பாம்புகள் சீறும்; (அன - அன்ன - இடைக்குறை விகாரம்);

பல குறட்-கணங்கள் சூழ்ந்து குடமுழவங்கள் கொட்டும் - பல குறட்பூதங்கள் சூழ்ந்து குடமுழாக்களை ஒலிக்கும்; (குறள் - குறுமை; குள்ளம்); (குடமுழவம் - முழவு வாத்தியவகை (Large hemispherical loud-sounding drum);

கூட நான்மறைகள் பாடும் - இவற்றோடு நால்வேதங்களும் உன் புகழைப் பாடும்;

இடைடியேன் விண்ணப்பம் எப்படி நீ கேட்பாயோ - இவ்வொலிகளின் நடுவே எனது விண்ணப்பத்தை நீ கேட்க இயலுமா?


2) --- அறுசீர் விருத்தம் - (மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

தண்ணீர் சடையில் பாய்ந்துவரச்,

.. சங்கக் கையாள் அருகிருக்க,

எண்ணா யிரம்பேர் எடுத்தோதி

.. இமையோர் கூட்டம் தொழுதிருக்க,

"அண்ணா அருள்"என் றயன்மாலார்

.. அழைக்க, இருவர் காதணியாய்ப்

பண்ணோ டிசைக்க, உன்செவியில்

.. படுமோ அடியேன் குரல்தானே?


தண்ணீர் சடையில் பாய்ந்துவரச் - சடையில் கங்கை அலைமோதிப் பாய;

சங்கக் கையாள் அருகு இருக்க - கையில் வளையணிந்த உமை பக்கத்தில் இருக்க; (சங்கம் - 1. ஊதுகின்ற சங்கு; 2. வளையல்);

எண்ணாயிரம் பேர் எடுத்து ஓதி இமையோர் கூட்டம் தொழுதிருக்க - எண்ணுகின்ற ஆயிரம் பேர் சொல்லித் தேவர்கள் கூட்டம் வழிபட்டிருக்க; (ஆயிரம் பேர் - சஹஸ்ரநாமம்);

"அண்ணா அருள்"என்று அயன்மாலார் அழைக்க - "அண்ணலே அருள்வாயாக" என்று பிரமனும் திருமாலும் வேண்ட; (அண்ணா - அண்ணால் (அண்ணலே) என்ற விளி அண்ணா என்று பாடல்களில் வரும்); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அண்ணா");

இருவர் காதணியாய்ப் பண்ணோடு இசைக்க - (பரமசிவன் தமது இருகாதிலும் கம்பளர், அசுவதரர் என்னும் வைணிக சிரோமணிகளைக் குண்டலமாகத் தரித்துக்கொண்டு அவர்களது கானத்தைச் சதா கேட்டுக்கொண்டிருக்கின்றார்);

ன் செவியில் படுமோ அடியேன் குரல்தானே - என் குரல் உன் திருச்செவிகளில் விழுமா?


3) --- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ---

தலைமாலை கிலுகிலுக்கச், சடைமீது சலசலத்துச்

சலமோடக், கைத்துடியும் தடதடவென்(று) அதிர்ந்திருக்கச்,

சிலம்பார்க்கத், தழல்முழங்கத், திருநடம்செய் பெருமானே!

வலம்செய்து வணங்குமென்சொல் வருமோநின் செவிகளுக்கே?


தலைமாலை - மண்டையோட்டு மாலை;

சலம் - நீர் - கங்கை;

துடி - உடுக்கை;

சிலம்பு ஆர்க்க - சிலம்பு ஒலிக்க;

வலம் செய்து - பிரதட்சிணம் செய்து;

வணங்குமென்சொல் - வணங்கும் என் சொல் / வணங்கும் மென்சொல்;

(சம்பந்தர் தேவாரம் - 2.51.3 - "கழல் சிலம்பார்க்க மாநடம் ஆட வல்லவனே");

(அப்பர் தேவாரம் - 4.96.1 - "முழங்கும் தழற்கைத் தேவா");


4) --- அறுசீர் விருத்தம் - (மா மா தேமா - அரையடி வாய்பாடு) ---

விண்ணும் நிலனும் ஆவாய்!

.. விடைமேல் எங்கும் போவாய்!

கண்ணில் உள்ள பாவாய்!

.. கரும்பே! என்றும் மூவாய்!

எண்ணும் நெஞ்சில் சேர்வாய்!

.. ஏதும் கேளா தீவாய்!

உண்ணின் றிருக்கும் அன்னே!

.. உன்னை இரப்ப தென்னே?!


விண்ணும் நிலனும் ஆவாய் - வானும் மண்ணும் ஆனவனே;

விடைமேல் எங்கும் போவாய் - இடபவாகனத்தின்மேல் எங்கும் செல்பவனே;

கண்ணில் உள்ள பாவாய் - கண்ணில் உள்ள பாவை போன்றவனே;

கரும்பே! என்றும் மூவாய் - கரும்பு போன்றவனே; என்றும் மூப்பு இன்றி இளமையோடு இருப்பவனே;

எண்ணும் நெஞ்சில் சேர்வாய் - உன்னைத் தியானிப்போர் நெஞ்சில் உறைபவனே;

ஏதும் கேளாது ஈவாய் - 1. அடியவர் ஒன்றை வேண்டிக் கேட்பதன் முன்னமே எல்லா நலங்களையும் கொடுத்தருள்பவனே; 2. எதுவும் உன் காதில் விழாவிட்டாலும், நீயாகவே வரங்களைக் கொடுப்பவனே; (கேட்டல் - 1. செவிக்குப் புலனாதல்; 2. வேண்டுதல்);

ள் நின்றிருக்கும் அன்னே - அடியவர் உள்ளத்தில் நிலைத்திருக்கும் தாயே; (உண்ணின்றிருக்கும் - உள் நின்றிருக்கும்); (உள் - உள்ளே; மனம்); (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே");

உன்னை இரப்பது என்னே - 1. "நீயே எல்லாம் கொடுத்தாலும் உன்னிடம் வேண்டிப்பெற எண்ணுவது விந்தையே!"; / 2. "நீயே எல்லாம் தானாகவே அளிக்கும்பொழுது, உன்னிடம் வேண்டிப் பெறுவது என்ன?". (என்று இருபொருள்பட வந்தது); (என்னே - 1. என்ன; 2. ஓர் அதிசய / இரக்கக் குறிப்பு);


பிற்குறிப்பு : முதல் 3 பாடல்களில் "என் விண்ணப்பம் உன் செவியில் விழுமோ" என்ற ஐயம் தொனிப்பதற்கு விடையாக 4-ஆம் பாடலில் "ஏதும் கேளாது ஈவாய்" என்ற தொடர் இருபொருள்பட வந்தது. "உன்னை இரப்பது என்னே" - என்ற தொடரும் இருபொருள்பட வந்தது.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Monday, November 16, 2020

03.04.095 - சிவன் - பழையது - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-10

3.4.95 - சிவன் - பழையது - சிலேடை

-------------------------------------------------------

நீர்மேல் இருக்க இரவெல்லாம் நின்றாடும்

பார்மகிழு மோரன்னம் நல்குமிகு - பேருண்டு

வாழ்த்துகின்ற மாண்பிருக்கும் மாவடு நற்றுணையாம்

ஏத்தும் அரன்பழைய(து) இங்கு.


சொற்பொருள்:

நின்று ஆடும் - 1. தங்கியிருந்து குளிக்கும்; / 2. காலில் நின்று நாட்டியம் செய்தல்;

பார்மகிழுமோர் - 1. பார் மகிழும் மோர்; / 2. பார் மகிழும் ஓர்;

ஓர் - 1. ஒரு; / 2. ஒப்பற்ற;

அன்னம் - 1. சாதம்; சோறு; / 2. வீட்டின்பம்;

மிகுதல் - அதிகமாதல்;

பேர் - 1. ஆள்; மனிதர்; / 2. பெயர்; நாமம்;

உண்டு - 1. சாப்பிட்டு; / 2. உள்ளது;

மாவடு - 1. மாம்பிஞ்சு; / 2. மா வடு - பெரிய பிரமசாரி;

நற்றுணையாம் - 1. நல் துணை ஆம்; / 2. நல் துணை, யாம்;


பழையது:

நீர் மேல் இருக்க இரவெல்லாம் நின்று ஆடும் - இரவு முழுதும் நீரில் மூழ்கி இருந்து குளிக்கும்;

பார் மகிழும் மோர் அன்னம் நல்கும் - உலகு மகிழ (மோரோடு சேர்ந்து) மோர்ச்சோறு அளிக்கும்;

மிகு பேர் உண்டு வாழ்த்துகின்ற மாண்பு இருக்கும் - பலரும் சாப்பிட்டுப் பாராட்டுகின்ற தன்மை இருக்கும்;

மாவடு நல் துணை ஆம் - (உண்ணும்பொழுது) மாவடுவும் தொட்டுக்கொள்ளச் சேரும்;

பழையது - பழஞ்சோறு;


சிவன்:

நீர் மேல் இருக்க இரவெல்லாம் நின்று ஆடும் - தலையில் கங்கையைத் தாங்கி, இரவு முழுதும் (சுடுகாட்டில்) நின்று நடம் ஆடுவான்;

பார் மகிழும் ஓர் அன்னம் நல்கும் - உலகோர் இன்புறும் ஒப்பற்ற முக்தி நிலையை அளிப்பான்; (அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" - அன்னம் - வீட்டின்பம். திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.7 - "பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்" - இங்கே, சோறு என்பது பேரின்பம் என்னும் பொருள்);

மிகு பேர் உண்டு - பல பெயர்கள் இருக்கும்;

வாழ்த்துகின்ற மாண்பு இருக்கும் - (அப்பெயர்களைக் கூறி அன்பர்) போற்றுகின்ற பெருமை இருக்கும்;

மா வடு நல் துணை - பெருமையுடைய பிரமசாரிக்கு (மார்க்கண்டேயருக்கு) நல்ல துணை ஆனவன்;

யாம் ஏத்தும் அரன் - நாம் துதிக்கும் சிவன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.07.009 – சுந்தரர் துதி - புரமூன்றெரி

03.07.009 – சுந்தரர் துதி - புரமூன்றெரி

2009-07-07

3.7.9 - சுந்தரர் துதி

-------------------------

(5 பாடல்கள்)


1) --- (கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா) ---

புரமூன்றெரி புகவேநகை புரிபுன்சடை முக்கட்

பரனேஒரு பழஆவணப் படிநீஎன தடிமை

விரையார்தமிழ் கொடுபோற்றென வேண்டிப்பணி கொண்ட

புரைதீர்திரு ஆரூரரின் பொற்றாளிணை போற்றி.


புரம்-மூன்று எரி புகவே நகை புரி- புன்சடை முக்கட்-பரனே - முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி சிரித்த, செஞ்சடையையும் முக்கண்ணையும் உடைய பரமனே;

ஒரு பழ ஆவணப்படி நீ எனது அடிமை - "ஒரு பழைய பத்திரத்தின் அடிப்படையில் நீ என்னுடைய அடிமை; (ஆவணம் - உரிமைப்பத்திரம்);

விரைர் தமிழ் கொடு போற்று" ன வேண்டிப் பணிகொண்ட - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளால் என்னைப் போற்று" என்று விரும்பி ஆட்கொண்ட;

புரை தீர் திரு ஆரூரரின் பொற்றாளிணை போற்றி - குற்றமற்ற சுந்தரமூர்த்திநாயனாரது பொற்பாதங்களை வணங்குகின்றேன்; (புரை தீர் - குற்றமற்ற);


2)

முன்னாளினில் முதலைக்கிரை ஆனான்தனை மீண்டும்

பின்னாளினில் உடலோடுயிர் பெறுமாறருந் தமிழைச்

சொன்னாவலர் கோன்பொன்னடி துதிப்போர்களுக் கென்றும்

இன்னாமிகு செய்தீவினை இல்லாநிலை தானே.


பதம் பிரித்து:

முன் நாளினில் முதலைக்கு இரை ஆனான்தனை மீண்டும்

பின் நாளினில் உடலோடு உயிர் பெறுமாறு அரும் தமிழைச்

சொல் நாவலர்கோன் பொன்னடி துதிப்போர்களுக்கு என்றும்

இன்னா மிகு செய்தீவினை இல்லா நிலைதானே.


முன்னொருநாள் முதலையால் உண்ணப்பட்ட சிறுவனைப் பின்னொருநாள் உடலும் உயிரும் பெற்று மீண்டு வரும்படி அரிய தமிழைப் பாடியருளிய நாவலர்கோன் (சுந்தரர்) பொற்பாதத்தைத் துதிப்பவர்களுக்கு என்றும் துன்பம் தரும் பழவினை இல்லாத நிலை நிச்சயம். (நாவலர்கோன் - திருநாவலூர்த் தலைவரான சுந்தரர்); (இன்னா - துன்பம்);

* திருப்புக்கொளியூர் அவிநாசியில் முன்பொரு சமயம் முதலை உண்ட சிறுவனைப் பின்னொரு நாள் சுந்தரர் மீட்டுத் தந்ததைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.92.4 - "முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே");


3) --- (கலிவிருத்தம் - மா மா மா மா) ---

வணங்கும் அரனே வந்த போதும்

பிணங்கிப் பின்னர்ப் பித்தா என்று

குணங்கள் கூறும் நாவ லூரர்

மணங்கொள் மலர்த்தாள் வாழ்த்து வோமே.


4) -- (கலிவிருத்தம் -- திருக்குறுந்தொகை அமைப்பில்) --

ஆற்றில் இட்டதை ஆரூர்க் குளத்தினில்

சேற்றில் தேடித் திகைத்தருள் செய்திடாய்

ஏற்றை ஏறும் இறைவா எனப்பாடும்

பேற்றைப் பெற்றார் பெயர்பாடும் எம்நாவே.


ஆற்றில் இட்டதை ஆரூர்க் குளத்தினில் சேற்றில் தேடித் திகைத்து - ஆற்றில் இட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் சேற்றில் அளைந்து தேடிக் காணாமல் திகைத்து;

ருள் செய்திடாய் ஏற்றை ஏறும் இறைவா எனப் பாடும் பேற்றைப் பெற்றார் - "இடப வாகனனே, இறைவனே, அருள்வாயாக" என்று பாடும் பேற்றைப் பெற்றவரான சுந்தரரது; (சம்பந்தர் தேவாரம் - 1.51.3 - "பாயும்வெள்ளை யேற்றையேறி");

பெயர் பாடும் எம் நாவே - நாமத்தையும் புகழையும் நாங்கள் பாடுவோம்; (பெயர் - நாமம்; புகழ்);

* திருமுதுகுன்றில் பெற்ற பொன்னை அங்கே மணிமுத்தாற்றில் இட்டுப் பின் திருவாரூரில் கமலாலயக் குளத்தில் தேடிக் காணாது சிவனைப் பாடி அப்பொன்னை அடைந்த வரலாற்றைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.25.9 - "கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங் கெடவே")


5) --- (எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா) ---

பந்தலில் வந்த பரமனை ஏசிப்

.. பாய்ந்தவர் ஓலையைப் பிடுங்கி

வெந்தழல் இட்டும் வெண்ணெய்நல் லூரில்

.. வேறொரு பத்திரம் காட்டி

அந்தமில் அடிகள் அடிமைகொண் டருளும்

.. அரும்புகழ்ச் சுந்தரர் தாளை

வந்தனை செய்யும் சிந்தையி னார்க்கு

.. வல்வினை போய்வரும் இன்பே.


பதம் பிரித்து:

பந்தலில் வந்த பரமனை ஏசிப், பாய்ந்து அவர் ஓலையைப் பிடுங்கி

வெம் தழல் இட்டும், வெண்ணெய் நல்லூரில் வேறு ஒரு பத்திரம் காட்டி

அந்தம் இல் அடிகள் அடிமைகொண்டு அருளும் அரும் புகழ்ச் சுந்தரர் தாளை

வந்தனை செய்யும் சிந்தையினார்க்கு வல்வினை போய் வரும் இன்பே.


தழல் - நெருப்பு; பத்திரம் - ஓலை; அந்தம் இல் அடிகள் - அழிவற்ற கடவுள்; சிந்தை - மனம்; எண்ணம்; இன்பு - இன்பம்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.094 - சிவன் - தேனீ - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2009-07-03

3.4.94 - சிவன் - தேனீ - சிலேடை

-------------------------------------------------------

மலரகத்துத் தங்கி மகிழும்தே னாடி

நலம்செய்யு மாறடிகள் காட்டும் - வலங்கொண்டோர்

கூடடையா வண்ணம் கொடுக்கு மிருக்குமிசை

பாடும்தே னீயேகம் பன்.


சொற்பொருள்:

மலரகத்து - 1. மலரினுள்; / 2a. மலர்ந்த மனத்துள்; (வினைத்தொகை) / 2b. அகத்தாமரையில்;

தேனாடி - 1. தேன் நாடி; / 2. தேன் ஆடி (தேன் அபிஷேகம் உடையவன்);

நலம்செய்யு மாறடிகள் - 1. நலம்செய்யும் ஆறு அடிகள்; / 2a. நலம்செய்யும் மாறு-அடிகள்; / 2b. நலம்செய்யுமாறு அடிகள்;

மாறு அடிகள் - வினைத்தொகை - வேறுபட்ட அடிகள் (அர்த்தநாரீஸ்வரக் கோலம்);

(அப்பர் தேவாரம் - திருமுறை 6.6.6 - "உருவிரண்டும் ஒன்றோடொன்று ஒவ்வா அடி" - வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன);

வலங்கொண்டோர் - 1. வலியவர்கள்; / 2. பிரதட்சிணம் செய்பவர்கள்;

கூடு - 1. தேன்கூடு; / 2. உடல்;

கொடுக்கு மிருக்குமிசை பாடும் - 1. கொடுக்கும் இருக்கும்; இசை பாடும்; / 2. கொடுக்கும்; இருக்கும் இசை பாடும்;

கொடுக்கு - தேனீயின் கொட்டும் உறுப்பு;

இருக்கும் - 1. உண்டு; / 2. வேதமும்;

இருக்கு - ரிக்வேதம்; வேதம்;

இசை - 1. சங்கீதம்; / 2. புகழ்;

ஏகம்பன் - கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளிய சிவபெருமான்;


தேனீ:

மலரகத்துத் தங்கி மகிழும் தேன் நாடி - மதுவை விரும்பி மலர்களுள் சென்றிருந்து களிக்கும்;

நலம் செய்யும் - (மகரந்தச் சேர்க்கைக்கு உதவி) நன்மை செய்யும்;

ஆறு அடிகள் காட்டும் - ஆறு கால்கள் இருக்கும்;

வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் இருக்கும் - வலியவர்கள் (தன்) கூட்டை நெருங்காதபடி அவர்களைக் கொட்டி விரட்டக் கொடுக்கு இருக்கும்;

இசை பாடும் தேனீ - ரீங்காரம் செய்யும் தேனீ.


சிவன்:

மலர்-அகத்துத் தங்கி மகிழும் தேன்-ஆடி - (அடியவர்களின்) மலர்ந்த மனத்துள் (அகத்தாமரையில்) உறைந்து மகிழ்பவன்; தேன் அபிஷேகம் உடையவன்;

நலம் செய்யும் மாறு [/செய்யுமாறு] அடிகள் காட்டும் - நன்மை செய்பவனாக, அர்த்தநாரீஸ்வரனாக (ஆண் பெண் என) வேறுபட்ட பாதங்களை உடையவன்; [/திருவடிகளைக் காட்டி நன்மை செய்பவன்];

வலங்கொண்டோர் கூடு அடையா வண்ணம் கொடுக்கும் - (தன்னைப்) பிரதட்சிணம் செய்யும் அடியவர்கள் மீண்டும் ஓர் உடலை அடையாதவாறு (பிறப்பை அறுத்து) அருள்செய்பவன்;

இருக்கும் இசை பாடும் ஏகம்பன் - வேதமும் புகழ் பாடுகின்ற கச்சி ஏகம்பன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, November 14, 2020

03.07.008 – மாணிக்க வாசகர் துதி - பணி ஆபரணன் பணியே

03.07.008 – மாணிக்க வாசகர் துதி - பணிபரணன் பணியே

2009-06-26

3.7.8 - மாணிக்க வாசகர் துதி

---------------------------------------

(3 பாடல்கள்)


1) -- (கலிவிருத்தம் - "புளிமா புளிமா புளிமா தேமா" என்ற வாய்பாடு) --

பணியா பரணன் பணியே என்றும்

பணியா உருகிப் பலபா மாலை

அணிவித் தரனார் அடிசேர் அன்பர்

மணிவா சகர்மா மலர்த்தாள் போற்றி.


பணி ஆபரணன் பணியே என்றும் பணியா - நாகாபரணனான சிவபெருமான் திருத்தொண்டே என்றும் தம் தொழிலாகக் கொண்டு; (பணி - 1. நாகம்; 2. தொண்டு; தொழில்); (பணியா - பணியாக);

உருகிப் பல பாமாலை அணிவித்து - மனம் உருகிப் பல பாமாலைகளைப் பாடி அவன் திருவடியில் சூட்டி;

அரனார் அடிசேர் அன்பர் - சிவனார் திருவடியை அடைந்த அன்பரான;

மணிவாசகர் மாமலர்த்தாள் போற்றி - மாணிக்க வாசகரது தாமரை போன்ற திருவடிகளை வணங்குகின்றேன்;


2) -- (கலித்துறை - "மா மா மா மா காய்" என்ற வாய்பாடு) --

ஆலம் உண்ட அரனே அன்போ டன்றொருநாள்

ஞாலம் உய்யக் குருவாய் நணுகிக் குருந்தின்கீழ்க்

காலைக் காட்டி ஆட்கொள் அடியார், கழல்மறவாச்

சீலர், வாத வூரர் செய்ய தாள்போற்றி


ஆலம் - ஆலகாலம்; நணுகுதல் - நெருங்குதல்; குருந்து - குருந்தமரம்; வாதவூரர் - வாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர்; செய்ய - சிவந்த;


3) -- வெண்பா --

உறங்குவோர் எல்லாம் உணர்வெய்தி இந்தப்

பிறப்பிறப் பில்லாப் பெருவாழ் - வுறநெஞ்சே

எம்பாவை பாடிய எம்மணி வாசகர்

செம்பொற் கழல்சிந்தை செய்.


பதம் பிரித்து:

உறங்குவோர் எல்லாம் உணர்வு எய்தி, இந்தப்

பிறப்பு இறப்பு இல்லாப் பெருவாழ்வு - உற, நெஞ்சே,

எம்பாவை பாடிய எம் மணிவாசகர்

செம்பொற்கழல் சிந்தை செய்.


மனமே! அறியாமையில் இருப்போரெல்லாம் நல்லறிவு பெற்று இந்த ஜனனமரணச் சுழலிலிருந்து விடுபட்டுப் பேரின்பம் அடையத் திருவெம்பாவை பாடியருளிய நம் மாணிக்கவாசகரது செம்பொற்பாதத்தை எண்ணு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.07.007 – திருஞான சம்பந்தர் துதி - அழுகைக்கு இரங்கி

03.07.007 – திருஞான சம்பந்தர் துதி - அழுகைக்கு இரங்கி

2009-06-07

3.7.7 - திருஞான சம்பந்தர் துதி

----------------------------------

(3 பாடல்கள்)


1) -- (எழுசீர்ச் சந்த விருத்தம் - "தனதான தான தனதான தான தனதான தான தனனா") --

(சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி உண்டு")


அழுகைக்கி ரங்கி அகிலங்கள் ஈன்ற அனைவந்து தந்த அமுதால்

முழுஞானம் எய்தி வழுவில்ல தான மொழிகொண்டு பாடி அமணர்

கழுவேற வென்று கடல்நஞ்சை உண்ட கருநீல கண்டன் அடியே

தொழுகாழி மன்னர் கழல்நாளும் உற்ற துணையாகும் இல்லை துயரே.


பதம் பிரித்து:

அழுகைக்கு இரங்கி, அகிலங்கள் ஈன்ற அனை வந்து தந்த அமுதால்

முழு ஞானம் எய்தி, வழு இல்லதான மொழிகொண்டு பாடி அமணர்

கழு ஏற வென்று, கடல் நஞ்சை உண்ட கருநீல கண்டன் அடியே

தொழு காழி மன்னர் கழல் நாளும் உற்ற துணை ஆகும்; இல்லை துயரே.


அழுகைக்கு இரங்கி - சம்பந்தரது அழுகையைக் கேட்டு இரங்கி,

அகிலங்கள் ஈன்ற அனை வந்து தந்த அமுதால் முழு ஞானம் எய்தி - அண்டங்களையெல்லாம் பெற்ற தாயான உமை வந்து கொடுத்த திருமுலைப்பாலால் முழுமையான ஞானத்தைப் பெற்று; (அனை - அன்னை - இடைக்குறையாக வந்தது);

வழு இல்லதான மொழிகொண்டு பாடி அமணர் கழு ஏற வென்று - குற்றமற்ற செந்தமிழ்ப் பாமாலைகள் பாடிச் சமணர்கள் கழுவேறும்படி அவர்களை வாதில் வென்று; (வழு - குற்றம்);

கடல் நஞ்சை உண்ட கருநீல கண்டன் அடியே தொழு - பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனது திருவடியையே தொழுத;

காழி மன்னர் கழல் நாளும் உற்ற துணை ஆகும் - காழியர் தலைவரான திருஞான சம்பந்தரது திருவடியே நமக்கு என்றும் சிறந்த துணை ஆகும்; (காழி - சீகாழி - சீர்காழி);

இல்லை துயரே - அவர் திருவடிகளைப் போற்றுவோர்க்குத் துயரம் இல்லை;


2) -- (வஞ்சி விருத்தம் - மா மா காய்) --

சைவம் தழைக்க என்றென்றும்

தெய்வத் தமிழும் சிறந்திருக்க

வையத் துதித்த சம்பந்தர்

செய்ய மலர்த்தாள் பணிவோமே.


சைவம் தழைக்க என்றென்றும் தெய்வத் தமிழும் சிறந்திருக்க - சைவமும் தெய்விகத் தமிழும் என்றும் தழைக்கும்படி;

வையத்துதித்த சம்பந்தர் - பூமியில் அவதரித்த திருஞான சம்பந்தரது;

செய்ய மலர்த்தாள் பணிவோமே - சிவந்த தாமரை போன்ற திருவடியை வணங்குவோம்; (செய்ய - சிவந்த);


3) -- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) --

மூவரண்கள் சுட்டெரித்த முக்கண்ணன் தலம்பலபோய்ப்

பாவவினை சுட்டெரிக்கும் பாமாலை பலபாடி

யாவருமே உய்யவழி அமைத்தளித்த சம்பந்தர்

சேவடிகள் என்றுமென்றன் சிந்தையினில் உள்ளனவே.


மூ-ரண்கள் சுட்டெரித்த முக்கண்ணன் தலம் பல போய்ப் - முப்புரங்களை எரித்த முக்கண்ணனான சிவபெருமான் உறையும் பல தலங்களுக்கும் சென்று;

பாவ-வினை சுட்டெரிக்கும் பாமாலை பல பாடி - நம் தீவினைகளைச் சாம்பலாக்கும் தமிழ்ப் பாமாலைகள் பல பாடி;

யாவருமே உய்ய வழி அமைத்து அளித்த சம்பந்தர் - எத்தகையவரும் உய்யும்படி நெறி அமைத்துத் தந்த திருஞான சம்பந்தரது;

சேவடிகள் என்றும் என்றன் சிந்தையினில் உள்ளனவே - சிவந்த திருவடிகள் என்றென்றும் எனது நெஞ்சில் இருக்கின்றன;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.06.043 - உள்ள - மதமாறும் - மடக்கு

03.06 – மடக்கு

2009-06-05

3.6.43 - உள்ள - மதமாறும் - மடக்கு

-------------------------

உள்ள அழுக்கை ஒழியாமல் உண்மையினை

உள்ள அறியா(து) உலகோரை - உள்ள

மதமாறும் என்பார்சொல் விட்டு மனமே

மதமாறும் சேரரனை வாழ்த்து.


உள்ள - 1. மனத்து; 2. சிந்திக்க; 3. இருக்கின்ற;

மதமாறும் - 1. மதம் மாறும் ("மதத்திலிருந்து மாறுங்கள்"); 2. மதம் ஆறும் - ஷண்மதங்கள்; (சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்னும் ஆறு வைதிக சமயங்கள்);

சேர்தல் - சென்றடைதல்;

சேர்த்தல் - அடைவித்தல்;


உள்ள அழுக்கை ஒழியாமல் - மனத்து அழுக்கை நீக்காமல்; (வஞ்சத்தையும் அறியாமையையும் மனத்தில் வைத்துக்கொண்டு);

உண்மையினை உள்ள அறியாது - மெய்ப்பொருளைச் சிந்திக்க (/தியானிக்க) அறியாமல்;

உலகோரை உள்ள மதம் மாறும் என்பார் சொல் விட்டு - உலக மக்களை (அவர்கள்) இருக்கின்ற மதத்திலிருந்து மாறுங்கள் என்று சொல்பவர்களது பேச்சை மதியாமல்;

மனமே மதம் ஆறும் சேர் அரனை வாழ்த்து - நெஞ்சே, நீ ஷண்மதங்களும் அடையும் (/கொண்டு சேர்க்கும்) சிவபெருமானைப் போற்றுவாயாக;

(சம்பந்தர் தேவாரம் - 2.29.5 - "முன்னம் இருமூன்று சமயங்களவை ஆகிப் பின்னை அருள்செய்த பிறையாளன்"); ( சம்பந்தர் தேவாரம் - 1.131.1 - "அரிவைபாகம் ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------