Friday, March 24, 2023

07.13 – கன்றாப்பூர் - அல்லொடு பகலும்

07.13 – கன்றாப்பூர்

2015-12-12

கன்றாப்பூர் (திருக்கன்றாப்பூர்) (இக்காலத்தில் "கோயில் கண்ணாப்பூர்")

------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.46.2 - "மனமெனுந் தோணி பற்றி")


1)

அல்லொடு பகலும் போற்றும் அன்புடை மாணி தன்னைக்

கொல்லவந் தடைந்த கூற்றைக் குமைத்தவர் தேவர் எங்கள்

அல்லலை நீக்காய் என்ன அருவிடம் தன்னை உண்ட

நல்லவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


* நடுதறியப்பர் - திருக்கன்றாப்பூர்த் தலத்து இறைவன் திருநாமம்;


அல்லொடு பகலும் போற்றும் அன்பு உடை மாணிதன்னைக் கொல்ல வந்து அடைந்த கூற்றைக் குமைத்தவர் - இரவும் பகலும் வழிபடும் பக்தரான மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த எமனை அழித்தவர்; (மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்");

தேவர் "எங்கள் அல்லலை நீக்காய்" என்ன, அருவிடம் தன்னை உண்ட நல்லவர் - தேவர்கள், "எம் துன்பத்தை நீக்கி அருளாய்" என்று வேண்டக், கொடிய விடத்தை உண்ட நல்லவர்; (நல்லவன் - நலத்தைச் செய்பவன்); (சுந்தரர் தேவாரம் - 7.61.7 - "நண்ணி னார்க்கென்றும் நல்லவன் தன்னை");

கன்றாப்பூரில் நடுதறியப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


2)

ஆதியும் நடுவும் ஆகி அந்தமும் ஆன ஐயர்

பாதியிற் பெண்ணை வைத்துப் பாய்புனல் சடையில் வைத்தார்

நீதியர் செய்ய பாதம் நினைந்தெழும் நேயர் கட்கு

நாதியர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


ஆதியும் நடுவும் ஆகி அந்தமும் ஆன ஐயர் - முதலும் நடுவும் இறுதியும் ஆன தலைவர்; (ஐயர் - தலைவர்);

பாதியிற் பெண்ணை வைத்துப் பாய்புனல் சடையில் வைத்தார் - திருமேனியில் ஒரு பாதியில் உமையை வைத்துக், கங்கையைச் சடையில் வைத்தவர்;

நீதியர் - நீதி வடிவானவர்;

செய்ய பாதம் நினைந்தெழும் நேயர்கட்கு நாதியர் - சேவடியைத் தியானித்து எழும் பக்தர்களுக்கு உறவினர்; (செய்ய - சிவந்த); (நாதி - உறவினன்; காப்பாற்றுவோன்); (சம்பந்தர் தேவாரம் - 1.38.4 - "நெஞ்சொன்றி நினைந்தெழுவார்மேல் துஞ்சும் பிணியா யினதானே"); (சுந்தரர் தேவாரம் - 7.97.1 - "எவ்வுயிர்க்கும் நாதியன் நம்பெருமான்");

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


3)

வேதனார் தலையை ஏந்தி வீதியிற் பலிக்கு ழல்வார்

மாதுமை பங்கர் ஆகி வார்குழை தோட ணிந்த

காதனார் காத லாகிக் கைதொழு வாரைக் காக்கும்

நாதனார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


* மாதுமை - திருக்கன்றாப்பூர்த் தலத்து இறைவி திருநாமம்;


வேதனார் தலையை ஏந்தி - வேதத்தை அருளிச்செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் சிவபெருமானார்; அவர் (பிரமனது) மண்டையோட்டைக் கையில் ஏந்தி; (வேதனார் - என்ற சொல்லை இப்பாடலில் இருவிதமாகவும் பொருள்கொள்ளல் ஆம் - 1. சிவபெருமான்; 2. பிரமன்); (சம்பந்தர் தேவாரம் - 3.29.6 - "வேதனார் வெண்மழு வேந்தினார்");

வீதியில் பலிக்கு உழல்வார் - தெருவில் பிச்சைக்குத் திரிபவர்;

மாதுமை பங்கர் ஆகி வார் குழை தோடு அணிந்த காதனார் - உமையொரு பாகர் ஆகி, நீண்ட குழையும் தோடும் அணிந்த காதுகள் உடையவர்;

காதலாகிக் கைதொழுவாரைக் காக்கும் நாதனார் - பக்தியோடு கைகூப்பி வணங்கும் அடியவர்களைக் காக்கும் தலைவர்;

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


4)

அடித்தலம் மறவா அன்பர் அகத்துறை கின்ற ஈசர்

முடித்திரை தங்க வைத்த முக்கணர் பூதம் பாட

வெடித்திடு துடியை ஏந்தி விரிசடை புரள வீசி

நடித்தவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


அடித்தலம் மறவா அன்பர் அகத்து உறைகின்ற ஈசர் - திருவடியை மறவாமல் தொழும் அடியவர்கள் மனத்தில் குடிகொள்கின்ற ஈசர்;

முடித் திரை தங்க வைத்த முக்கணர் - திருமுடியில் அலைமிக்க கங்கையைத் தங்க வைத்த முக்கண்ணர்; (திரை - அலை; நதி; - கங்கை);

பூதம் பாட, வெடித்திடு துடியை ஏந்தி, விரிசடை புரள வீசி நடித்தவர் - பூதகணங்கள் இசை பாட, வெடி போல் ஒலிக்கின்ற உடுக்கினைக் கையில் ஏந்தி, விரிந்த சடை புரளும்படி ஆடியவர்; (துடி - உடுக்கு); (நடித்தல் - ஆடுதல்); (அப்பர் தேவாரம் - 4.10.9 - "வெறியுறு விரிசடை புரள வீசிஓர்" - நறுமணம் கமழ்கின்ற விரிந்த சடை புரளுமாறு தலையை அசைத்து);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


(இலக்கணக் குறிப்பு : முடித்திரை - ஏழாம்வேற்றுமைத்தொகை - முடியின்கண் திரை;

ஏழாம் வேற்றுமைத்தொகையில் வரும் வலி மிகும்; உதாரணம்: காட்டிடைச்சென்றான்; குடிப்பிறந்தார்;)


5)

அக்கணி ஆர மாப்பூண் அழகனார் அவம தித்த

தக்கனைத் தலைய ரிந்த தலைவனார் தஞ்சம் என்று

புக்கவர் தமக்கி ரங்கிப் புரமவை மூன்றும் வேவ

நக்கவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


அக்கு அணி ஆரமாப் பூண் அழகனார் - எலும்பை அழகிய மாலையாகப் பூண்ட அழகர்; (அணி ஆரம் - அழகிய ஹாரம்; "அணிகின்ற ஹாரம்" என்று வினைத்தொகையாகவும் கொள்ளல் ஆம்);

அவமதித்த தக்கனைத் தலை அரிந்த தலைவனார் - இகழ்ந்த தக்கன் வேள்வியை அழித்து அவன் தலையை அறுத்தவர்; (அரிதல் - அறுத்தல்);

தஞ்சம் என்று புக்கவர் தமக்கு இரங்கிப் புரம் அவை மூன்றும் வேவ நக்கவர் - அடைக்கலம் புகுந்த வானவர்க்கு இரங்கி முப்புரங்களும் வெந்து அழியச் சிரித்தவர்;

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


6)

பாடினார் மறைகள் எல்லாம் படர்சடை மீது திங்கள்

சூடினார் குறட்பூ தங்கள் சூழ்ந்திசை ஆர்க்க நட்டம்

ஆடினார் அறமு ரைக்க அன்றுகல் லால நீழல்

நாடினார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


பாடினார் மறைகள் எல்லாம் - வேதங்களைப் பாடியவர்;

படர்சடை மீது திங்கள் சூடினார் - படரும் சடைமேல் சந்திரனை அணிந்தவர்;

குறட்பூதங்கள் சூழ்ந்து இசை ஆர்க்க நட்டம் ஆடினார் - குள்ள பூதங்கள் சுற்றி நின்று இசை ஒலிக்க திருநடம் செய்தவர்;

அறம் உரைக்க அன்று கல்லால நீழல் நாடினார் - முன்னம் சனகாதியருக்கு மறைப்பொருள் விரிக்கக் கல்லால மரத்தின்கீழ் இருந்தவர்;

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


7)

கச்சதா அரவம் கட்டிக் கையிலோர் கபாலம் ஏந்திப்

பிச்சைதான் கொள்ளும் பித்தர் பிள்ளைவெண் மதியம் மத்தம்

உச்சிமேற் சூடும் அத்தர் ஊர்தியா இடபம் தன்னை

நச்சினார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


கச்சதா அரவம் கட்டிக் - அரையில் கச்சாக ஒரு பாம்பைக் கட்டியவர்; (கச்சதா - கச்சதாக - கச்சுஅது ஆக);

பிள்ளை வெண் மதியம் மத்தம் உச்சிமேற் சூடும் அத்தர் - இள வெண்திங்களையும் ஊமத்த மலரையும் முடிமேல் அணிந்த தந்தையார்;

ஊர்தியா இடபம் தன்னை நச்சினார் - வாகனமாக இடபத்தை விரும்பியவர்; (ஊர்தியா - ஊர்தியாக - கடைக்குறை விகாரம்); (நச்சுதல் - விரும்புதல்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


8)

தொல்கயி லாயம் தன்னைத் தூக்கிய துட்டன் ஆண்மை

அல்கிட ஊன்றிப் பின்னர் அவற்கொரு வாளும் ஈந்தார்

பல்கணக் கூத்தர் பாதம் பணிசுரர்க் கமுதம் தன்னை

நல்கினார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


தொல் கயிலாயம் தன்னைத் தூக்கிய துட்டன் ஆண்மை அல்கிட ஊன்றிப் - தொன்மையான கயிலைமலையைப் பெயர்த்த துஷ்டனான இராவணனது வலிமையும் ஆணவமும் அழியும்படி திருப்பாத விரலை ஊன்றி; (ஆண்மை - வலிமை; அகங்காரம்); (அல்குதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.29.8 - "அரக்க னாண்மை யழிய வரைதன்னால் நெருக்க வூன்றும் விரலான்");

பின்னர் அவற்கு ஒரு வாளும் ஈந்தார் - பிறகு (அவன் அழுது தொழக் கண்டு இரங்கி) அவனுக்கு (நீண்ட ஆயுளையும்) ஒப்பற்ற சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவர்; (அவற்கு - அவன்+கு - அவனுக்கு); (ஒரு - ஒப்பற்ற);

பல்கணக் கூத்தர் - பல கணங்கள் சூழ ஆடும் கூத்தர்; (அப்பர் தேவாரம் - 6.56.4 - "பல்கணக் கூத்தப் பிரானே போற்றி" - பல்கணம் - பூத கணங்களே அன்றிப், பதினெண்கணங்களும் என்க. கணக் கூத்து, கணங்களின் இடையிற் செய்யப்படும் கூத்து);

பாதம் பணி சுரர்க்கு அமுதம் தன்னை நல்கினார் - திருவடியைப் பணிந்த தேவர்களுக்கு அமுதத்தை அளித்தவர்; (சுரர் - தேவர்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


9)

கஞ்சனும் அரியும் நேடிக் காணொணாச் சோதி ஆனார்

அஞ்சனக் கண்ணி பங்கர் அடியவர் மீது பாய்ந்த

வெஞ்சினக் காலன் தன்னை வீட்டினார் மிடறு தன்னில்

நஞ்சனார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


கஞ்சனும் அரியும் நேடிக் காணொணாச் சோதி ஆனார் - பிரமனாம் திருமாலாலும் அடிமுடி தேடிக் காண இயலாத ஜோதி ஆனவர்; (கஞ்சன் - பிரமன் - Brahmā, who was born in a lotus); (நேடுதல் - தேடுதல்);

அஞ்சனக் கண்ணி பங்கர் - மை தீட்டிய கண்களை உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவர்; (அஞ்சனம் - கண்ணிடு மை); (அஞ்சனக்கண்ணி - அஞ்சனாட்சி); (சம்பந்தர் தேவாரம் - 3.9.3 - "அஞ்சனக் கண்ணுமை பங்கினர்");

அடியவர் மீது பாய்ந்த வெஞ்சினக் காலன் தன்னை வீட்டினார் - மார்க்கண்டேயர் மீது பாய்ந்த கொடிய கோபம் உடைய கூற்றுவனை உதைத்து அழித்தவர்; (வீட்டுதல் - அழித்தல்);

மிடறு தன்னில் நஞ்சனார் - கண்டத்தில் நஞ்சை அணிந்தவர் - நீலகண்டர்; (அப்பர் தேவாரம் - 6.17.10 - "விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்" - கடல் நஞ்சுண்டவர்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


10)

பிட்டராய்த் திரிவார் பேசும் பேச்சினில் உண்மை இல்லை

விட்டுநீர் விலகும் செக்கர் மேனியில் திருவெண் ணீற்றர்

இட்டமாய்த் தொழுவார்க் கின்பம் ஈபவர் ஈமக் காட்டில்

நட்டனார் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


பிட்டராய்த் திரிவார் பேசும் பேச்சினில் உண்மை இல்லை - வேதநெறியை (வைதிகமார்க்கத்தை)ப் பழித்துப் பேசித் திரிபவர்கள் பேச்சில் உண்மை இல்லை; (பிட்டர் - பிரஷ்டர்);

விட்டு நீர் விலகும் - அவர்கள் பேச்சை மதியாமல் நீங்குங்கள்;

செக்கர் மேனியில் திருவெண்ணீற்றர் - செம்மேனியில் வெள்ளிய திருநீற்றைப் பூசியவர்; (செக்கர் - சிவப்பு);

இட்டமாய்த் தொழுவார்க்கு இன்பம் ஈபவர் - அன்போடு தொழும் அடியவர்க்கு இன்பர் அளிப்பவர்;

ஈமக் காட்டில் நட்டனார் - சுடுகாட்டில் திருநடம் செய்பவர்; (அப்பர் தேவாரம் - 6.29.5 - "ஈமக் காட்டில் ஓரிபல விடநட்ட மாடி னானைத்");

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


11)

கயந்திகழ் முடியில் திங்கட் கண்ணியர் மல்லார் எட்டுப்

புயந்திகழ் புராணர் பாடிப் போற்றிடும் அன்பர் தங்கள்

பயந்தவிர் கால காலர் பாவைநல் லாளைப் பாகம்

நயந்தவர் கன்றாப் பூரில் நடுதறி அப்ப னாரே.


கயம் திகழ் முடியில் திங்கட் கண்ணியர் - கங்கை தங்கிய திருமுடிமேல் திங்களைக் கண்ணிமாலையாக அணிந்தவர்; (கயம் - நீர்நிலை); (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

மல் ஆர் எட்டுப் புயம் திகழ் புராணர் - வலிய எண்தோள்கள் உடையவர், மிகவும் பழையவர்;

பாடிப் போற்றிடும் அன்பர்-தங்கள் பயம் தவிர் காலகாலர் - பாடி வணங்கும் அடியவர்களது அச்சத்தைத் தீர்ப்பவர், காலனுக்கே காலன் ஆனவர்;

பாவை நல்லாளைப் பாகம் நயந்தவர் - பாவைபோலும் நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவர்; (சுந்தரர் தேவாரம் - 7.17.9 - "பாவைநல் லாள்தனக்கும் வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய்")

கன்றாப்பூரில் நடுதறி அப்பனாரே - அவர் திருக்கன்றாப்பூரில் உறைகின்ற, நடுதறியப்பர் என்ற திருநாமம் உடைய சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


Friday, March 17, 2023

07.12 – வலிவலம் - செம்பொன் மேனியன்

07.12 – வலிவலம்

2015-12-11

வலிவலம் (திருவலிவலம்)

------------------

(அறுசீர் விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" - என்ற அமைப்பு -

"தனன தானன தானா தானன தானன தானா")

(சம்பந்தர் தேவாரம் - 2.90.1 - "எந்தை யீசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்");


1)

செம்பொன் மேனியன் சீரைத் தினமுரை காழியர் கோனுக்

கம்பொன் ஆயிரம் ஈந்த ஆவடு துறையினன் பொருத

கம்ப மாகரி உரியன் கையினில் அயன்சிரம் ஏந்தி

வம்பு லாம்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.


செம்பொன் மேனியன் சீரைத் - பொன் போன்ற திருமேனி உடையவனது திருப்புகழைத்;

தினம் உரை காழியர் கோனுக்கு - தினமும் பாடிய திருஞான சம்பந்தருக்கு;

அம்பொன் ஆயிரம் ஈந்த ஆவடு துறையினன் - ஆயிரம் பொன் அளித்த ஆவடுதுறை ஈசன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.56.1 - "கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே");

பொருத கம்ப மா கரி உரியன் - போர் செய்த பெரிய யானையின் தோலை அணிந்தவன்;

கையினில் அயன் சிரம் ஏந்தி - கையில் பிரம கபாலத்தை ஏந்தியவன்;

வம்பு உலாம் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம் மானே - மணம் கமழும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;. (மான் - தலைவன்; பெரியோன்);


* திருஞான சம்பந்தருக்கு ஈசன் ஆயிரம் பொன் அளித்ததைப் பெரிய புராணத்திற் காண்க;


2)

சீர்த்த செந்தமிழ் செப்பு திருவுடை நாவினுக் கரசர்

ஆர்த்த கல்புணை ஆகி ஆழ்கடல் நின்றுய்ய அருள்செய்

தீர்த்தன் ஏறமர் செல்வன் திரிபுரம் மூன்றொரு கணையால்

மாய்த்த மாமலை வில்லி வலிவலம் மேயவெம் மானே.


சீர்த்த செந்தமிழ் செப்பு திருவுடை நாவினுக்கு அரசர் - சிறந்த செந்தமிழான தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்க்கு;

ஆர்த்த கல் புணை ஆகி ஆழ்கடல்நின்று உய்ய அருள்செய் தீர்த்தன் - அவரோடு சேர்த்துக் கட்டிய கல்லே தெப்பம் ஆகி, ஆழம் மிக்க கடலிலிருந்து அவர் உய்யும்படி அருள்புரிந்த தூயவன்; (நின்று - A particle used in the ablative sense; ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச் சொல்);

ஏறு அமர் செல்வன் - இடபவாகனன்;

திரிபுரம் மூன்று ஒரு கணையால் மாய்த்த மாமலை வில்லி - எங்கும் திரிந்த முப்புரங்களையும் ஒரே அம்பால் அழித்த, பெரிய மேருமலையால் ஆன வில்லை ஏந்தியவன்; (திரிபுரம் - வினைத்தொகை - திரிந்த புரங்கள்); (மாய்த்தல் - அழித்தல்);

வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;.


* திருநாவுக்கரசருக்குக் கல்லே தெப்பம் ஆன வரலாற்றைப் பெரிய புராணத்தில் காண்க; (அப்பர் தேவாரம் - 5.72.7 - "கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்");


3)

வேழம் வீழ்ந்திடு மாறு வெகுண்டசி லந்தியைச் செங்கட்

சோழன் ஆக்கிய ஐயன் சுந்தரர் இன்தமிழ் கேட்டுத்

தோழன் என்றருள் செய்தான் தொண்டர்கள் மனத்துறை துணைவன்

மாழை யொண்கண்ணி பங்கன் வலிவலம் மேயவெம் மானே.


வேழம் வீழ்ந்திடுமாறு வெகுண்ட சிலந்தியைச் செங்கட்சோழன் ஆக்கிய ஐயன் - திருவானைக்காவில் யானை இறக்குமாறு அதனோடு போர்செய்த சிலந்தியை மறுபிறப்பில் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தவன்;

சுந்தரர் இன்தமிழ் கேட்டுத் தோழன் என்றருள் செய்தான் - நம்பி ஆரூரின் இனிய பாடல்களைக் கேட்டு அவருக்குத் தன்னைத் தோழன் என்று தந்தவன்;

தொண்டர்கள் மனத்து உறை துணைவன் - அடியவர்கள் நெஞ்சில் உறையும் துணைவன்;

மாழையொண்கண்ணி பங்கன் - மாவடுப் போலும் ஒளியுடைய கண்களையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவன்; (மாழை - மாவடு; அழகு); (சுந்தரர் தேவாரம் - 7.67.3 - "மாழையொண் கண்உமை யைமகிழ்ந் தானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே");

வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க;

* சுந்தரருக்குத் தன்னைத் தோழனாகத் தந்த வரலாற்றைப் பெரிய புராணத்தில் காண்க; (பெரியபுராணம் - 12.273 - "புற்றிடங்கொள் மன்னவனார் அருளால் ஓர் வாக்குத் தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம்");

* மனத்துணை நாதன் - திருவலிவலத்து ஈசன் திருநாமம்;

* மாழையொண்கண்ணி - திருவலிவலத்து இறைவி திருநாமம்;


4)

புயலின் வண்ணமி டற்றன் பொன்னடி போற்றிய மூர்க்கர்

செயலை ஏற்றருள் சீலன் செஞ்சடை மேலிள மதியன்

கயல்கள் பாய்புனல் அருகே கவினுறு சோலைக ளோடு

வயல்கள் சூழ்ந்தழ காரும் வலிவலம் மேயவெம் மானே.


புயலின் வண்ண மிடற்றன் பொன்னடி போற்றிய - மேகம் போல் கரிய கண்டம் உடைய சிவபெருமான் பொன்னடிகளைப் போற்றி வணங்கிய;

மூர்க்கர் செயலை ஏற்று அருள் சீலன் - மூர்க்க நாயனாரின் திருத்தொண்டை ஏற்று அருள்புரிந்த, சீலம் உடையவன்;

செஞ்சடைமேல் இள மதியன் - சிவந்த சடைமீது இளம்பிறையை அணிந்தவன்;

கயல்கள் பாய் புனல் அருகே கவின் உறு சோலைகளோடு வயல்கள் சூழ்ந்து அழகு ஆரும் - கயல்மீன்கள் பாய்கின்ற நீர்நிலைகள் பக்கத்தில் அழகிய சோலைகளோடு வயல்களும் சூழ்ந்து அழகு மிகுகின்ற;

வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


* மூர்க்க நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க;


5)

பாசம் பற்றிய கையால் பணிசெய்த தண்டிகண் காண

நேசம் அற்றபுன் சமணர் நிலைகெட அருள்புரி அண்ணல்

தேசம் மிக்கவன் ஈசன் செஞ்சடை மேற்பிறை சூடி

வாசம் ஆர்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.


பாசம் பற்றிய கையால் பணி செய்த தண்டி கண் காண - கயிற்றைக் கையால் பற்றி நடந்து சென்று திருக்குளப் பணி செய்த, பிறவிக்குருடரான தண்டியடிகள் கண்பார்வை பெறுவதற்கும்; (பாசம் - கயிறு);

நேசம் அற்ற புன் சமணர் நிலைகெட அருள்புரி அண்ணல் - அன்பில்லாத இழிந்த சமணர்கள் அழியவும் அருள்புரிந்த அண்ணல்;

தேசம் மிக்கவன் ஈசன் செஞ்சடை மேற்பிறை சூடி - ஒளி மிகுந்தவன், ஈசன், செஞ்சடைமேல் சந்திரனைச் சூடியவன்;

வாசம் ஆர் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம் மானே - மணம் பொருந்திய சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


* தண்டியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க; அவர் திருத்தொண்டு செய்தது திருவாரூரில்;


6)

அலர்சொல் ஆதர்கள் அஞ்ச அகன்குள நீர்கொடு தீபம்

பலவும் ஏற்றம லர்த்தாள் பணிநமி நந்திக்கி ரங்கும்

தலைவன் நீள்மதி தங்கு சடையினன் வண்டினம் நாடு

மலர்கள் ஆர்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.


அலர் சொல் ஆதர்கள் அஞ்ச - பழித்துப் பேசும் அறிவிலிகளான சமணர்கள் அஞ்சும்படி; (அலர் - பழி; ஆதன் - அறிவிலி;)

அகன் குளநீர்கொடு தீபம் பலவும் ஏற்ற - (திருவாரூரில் உள்ள கமலாலயம் என்ற) பெரிய குளத்து நீரால் பல விளக்குகளை ஏற்றும்படி;

மலர்த்தாள் பணி நமிநந்திக்கு இரங்கும் தலைவன் - திருவடியை வழிபட்ட நமிநந்தி அடிகளுக்கு இரங்கி அருளிய தலைவன்;

நீள்மதி தங்கு சடையினன் - வளரும் பிறையை அணிந்தவன்;

வண்டினம் நாடு மலர்கள் ஆர் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய ம்மானே - வண்டுகள் விரும்பி அடையும் பூக்கள் மிகுந்த சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


* நமிநந்தியடிகள் நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க; அவர் திருத்தொண்டு செய்தது திருவாரூரில்;


7)

கண்டன் அங்கழல் ஏத்திக் கடலிடை மீனினை விட்டுத்

தொண்டு செய்யதி பத்தர்த் தூயவிண் ணேற்றிய பெருமான்

பண்டு வில்லினில் நாணாப் பாம்பினை ஆர்த்தெயில் எய்தான்

வண்டு லாம்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.


கண்டன் அங்கழல் ஏத்திக் கடலிடை மீனினை விட்டுத் தொண்டு செய் - நீலகண்டனின் / வீரனான சிவபெருமானின் அழகிய கழல் அணிந்த திருவடியை வாழ்த்தித் தினமும் ஒரு மீனைக் கடலில் விட்டு வழிபட்ட; (கண்டன் - நீலகண்டன் - ஏகதேசம் - ஒருபுடைப்பெயர்); (கண்டன் - "வீரன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.74.6 - "கருப்பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன்" - கண்டன் - வீரன்);

அதிபத்தர்த் தூய விண் ஏற்றிய பெருமான் - மீனவர் தலைவரான அதிபத்தரைத் தூய சிவலோகத்திற்கு ஏற்றி அருளிய பெருமான்;

பண்டு வில்லினில் நாணாப் பாம்பினை ஆர்த்து எயில் எய்தான் - முற்காலத்தில் மேருமலை என்ற வில்லில் வாசுகி என்ற நாகத்தை நாணாகக் கட்டி முப்புரங்களை எய்தவன்;

வண்டு உலாம் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய ம்மானே - வண்டுகள் உலவும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


* அதிபத்த நாயனார் வரலாற்றைப் பெரிய புராணத்திற் காண்க; அவர் திருத்தொண்டு செய்தது நாகப்பட்டினத்தில்;


இலக்கணக் குறிப்பு: "அதிபத்தர்த் தூய விண் ஏற்றிய பெருமான்" - இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணைப் பெயர்களை அடுத்து வல்லொற்று மிகும்.

"நல்ல தமிழ் எழுத வேண்டுமா" - .கி.பரந்தாமனார் - "குறிப்பு : பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு."


8)

மாவி லங்கலை எடுத்த வாளரக் கன்தனை நெரித்து

நாவி னாலவன் ஏத்த நாளொடு வாளருள் நம்பன்

சேவி லங்கிய கொடியன் தேன்மலி கொன்றையந் தாரன்

வாவி யிற்கயல் உகளும் வலிவலம் மேயவெம் மானே.


மா விலங்கலை எடுத்த வாள் அரக்கன்தனை நெரித்து - பெரிய மலையான கயிலைமலையைப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணனை நசுக்கி; (விலங்கல் - மலை); (வாள் - கொடுமை); (சம்பந்தர் தேவாரம் - 2.90.8 - "செழுந்தண் மால்வரை எடுத்த");

நாவினால் அவன் ஏத்த நாளொடு வாள் அருள் நம்பன் - பின் அவன் நாக்கைக்கொண்டு போற்றிப் பாடவும் இரங்கி அவனுக்கு நீண்ட ஆயுளும் சந்திரஹாஸம் என்ற வாளும் அருளிய சிவன்;

சே இலங்கிய கொடியன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.91.6 - "விடையார் கொடியன் வேத நாவன்");

தேன்மலி கொன்றையந் தாரன் - தேன் மிகுந்த கொன்றைமாலை அணிந்தவன்;

வாவியிற் கயல் உகளும் வலிவலம் மேய ம்மானே - நீர்நிலைகளில் கயல்மீன்கள் பாயும் திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


9)

பணியின் மேல்துயில் திருமால் பைம்மலர் மேலயன் காணார்

அணியும் ஒண்திரு நீறே அருங்கலம் எனநினை அன்பர்க்கு

அணியன் ஐந்தலை அரவார் அரையினன் களந்தனில் நீல

மணியன் வார்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.


பணியின் மேல் துயில் திருமால் பைம்மலர் மேல் அயன் காணார் - பாம்பின்மேல் துயிலும் திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் (அடியும் முடியும்) காணமாட்டார்;

அணியும் ஒண் திருநீறே அருங்கலம் என நினை அன்பர்க்கு அணியன் - ஈசன் பூசும் / தாம் பூசும் ஒளியுடைய திருநீறே தமக்கு அணிகலன் என்று எண்ணும் அடியவர்களுக்கு அருகில் இருப்பவன்; (அருங்கலம் - ஆபரணம்); (அணியன் - One who is near by; நெருங்கினவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.9.1 - "தம்மடி போற்றியென் பார்கட் கணியரே");

ஐந்தலை அரவு ஆர் அரையினன் - ஐந்து தலை உடைய நாகத்தை அரையில் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

களந்தனில் நீல மணியன் - கண்டத்தில் நீலமணி உடையவன்; (களம் - கண்டம்);

வார் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம்மானே - உயர்ந்த சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


10)

அஞ்செ ழுத்துரை யாமல் அனுதினம் பொய்யுரைத் துழலும்

வஞ்சர் சொல்வழி மதியேல் மாணியைக் காத்துவெங் கூற்றின்

நெஞ்சி லேஉதை காலன் நீறணி மார்பினில் நூலன்

மஞ்சு சேர்பொழில் சூழ்ந்த வலிவலம் மேயவெம் மானே.


அஞ்செழுத்து உரையாமல் அனுதினம் பொய் உரைத்து உழலும் - திருவைந்தெழுத்தைச் சொல்லாமல் தினந்தோறும் பொய்யையே பேசி உழல்கின்ற;

வஞ்சர் சொல் வழி மதியேல் - வஞ்சகர்கள் சொல்லும் நெறியை மதிக்கவேண்டா;

மாணியைக் காத்து வெங் கூற்றின் நெஞ்சிலே உதை காலன் - மார்க்கண்டேயரைக் காத்துக், கொடிய கூற்றுவனின் மார்பில் உதைத்த காலகாலன் (/ காலால் உதைத்தவன்);

நீறு அணி மார்பினில் நூலன் - திருநீறு பூசிய மார்பில் முப்புரி நூல் அணிந்தவன்;

மஞ்சு சேர் பொழில் சூழ்ந்த வலிவலம் மேய எம் மானே - மேகம் வந்து பொருந்தும் சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


11)

அனைத்தும் ஆக்கியொ டுக்கும் ஆண்டவன் ஒருபடை அடைய

நினைத்த பாண்டவன் செய்த நீள்தவம் கண்டும கிழ்ந்து

வனத்தில் வேட்டுவ னாய்ப்போய் வரமருள் பசுபதி அன்பர்

மனத்தில் நின்றருள் நாதன் வலிவலம் மேயவெம் மானே.


அனைத்தும் ஆக்கி ஒடுக்கும் ஆண்டவன் - எல்லாவற்றையும் படைத்து முடிவில் சம்ஹாரம் செய்யும் கடவுள்;

ஒரு படை அடைய நினைத்த பாண்டவன் செய்த நீள் தவம் கண்டு மகிழ்ந்து - ஒப்பற்ற ஆயுதமான பாசுபதாஸ்திரத்தை அடைய விரும்பிய அருச்சுனன் செய்த பெரும்தவத்தைக் கண்டு மகிழ்ந்து;

வனத்தில் வேட்டுவனாய்ப் போய் வரம் அருள் பசுபதி - காட்டில் ஒரு வேடன் கோலத்திற் சென்று அவனுக்கு வரம் அருளிய பசுபதி;

அன்பர் மனத்தில் நின்று அருள் நாதன் - பக்தர்கள் நெஞ்சில் தங்கி அருளும் தலைவன்;

வலிவலம் மேய எம் மானே - திருவலிவலத்தில் உறையும் எம் தலைவன்;


* மனத்துணை நாதன் - திருவலிவலத்து ஈசன் திருநாமம்;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக்குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - "மா கூவிளம் மா விளம் விளம் மா" - என்ற அமைப்பு -

  • "தனன தானன தானா தானன தானன தானா"

  • அடிதோறும் முதற்சீரின் அமைப்பு - தனன என்பது தான என்றும் வரலாம். குறில், குறில் + ஒற்றில் முடியும்;

  • அடிதோறும் இரண்டாம் சீர் - நேரசையில் தொடங்கும்;

  • தானன என்ற இடத்தில் தனதன வரலாம்; தானா என்ற இடத்தில் தனனா வரலாம்.

  • விளச்சீர் வருமிடத்தில் ஒரோவழி மாங்காய்ச்சீர் வரலாம்;


2) சம்பந்தர் தேவாரம் - 2.90.4 -

துன்ன ஆடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றின ராகி

உன்னி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்

பொன்னு மாமணி உந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்

அன்னம் ஆருநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


Saturday, March 11, 2023

07.11 – தலக்காடு (Talakadu - ತಲಕಾಡು)

07.11 – தலக்காடு (Talakadu - ತಲಕಾಡು)

2015-12-02

தலக்காடு (Talakadu - ತಲಕಾಡು)

----------------------------------------------------

(13 பாடல்கள்)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")

* தலக்காடு - இத்தலத்தின் விவரங்களைப் பிற்குறிப்பில் காண்க.


1)

அஞ்சியடை சந்திரனை அஞ்சடையில் வைத்தசிவன்

வஞ்சியிடை மனோன்மனி மணவாளன் நஞ்சுண்டு

மஞ்சனைய கண்டத்தன் மணலாரும் தலக்காட்டில்

வஞ்சமின்றி வரமருளும் வைத்தியேச் சுவரனே.


அஞ்சி டை சந்திரனை அஞ்சடையில் வைத்தசிவன் - ; (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);

வஞ்சியிடை மனோன்மனி மணவாளன் - வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையை உடைய உமைக்குக் கணவன்; (* மனோன்மனி - இத்தலத்து இறைவி திருநாமம்);

(குறிப்பு : பரவலாகத் தமிழில் "மனோன்மணி" என்றே காணினும் திருமந்திரத்தில் "மனோன்மனி" என்றே வருகின்றது. வடமொழியில் இச்சொல்லின் ஈற்றெழுத்து னி தான். (ணி அன்று). சமஸ்கிருத அகராதியிலும் அப்படியே உள்ளது - मनोन्मनी - manonmanī - A form of Durgā ); (லலிதா சஹஸ்ரநாமத்தில் 207-ஆம் நாமம்: மனோன்மன்யை நம: ); (அபிராமி அந்தாதி உரையில் 5-ஆம் பாடலில் கி.வா.ஜ தரும் விளக்கம்: மனத்தை ஞான நிலைக்கு எழும்புகிறவள் என்பது ஒரு பொருள்.);

நஞ்சு ண்டு மஞ்சு அனைய கண்டத்தன் - விடத்தை உண்டு மேகம் போன்ற கரிய கண்டம் உடையவன்;

மணல் ஆரும் தலக்காட்டில் - மணல் மிகுந்த தலக்காடு என்ற தலத்தில்; (இத்தலம் எங்கும் மணலாக இருக்கக் காணலாம்);

வஞ்சம் இன்றி வரம் அருளும் வைத்தியேச்சுவரனே - வரங்களை வாரி வழங்கும் வைத்தியேஸ்வரன்; (* வைத்யேஸ்வரன் - இத்தலத்து ஈசன் திருநாமம்; பரமேஸ்வரன் என்பது பரமேச்சுவரன் என்று ஆமாப்போல், வைத்யேஸ்வரன் என்பது தமிழில் வைத்தியேச்சுவரன் ஆயிற்று); (சம்பந்தர் தேவாரம் - 1.67.4 - "பரமன்பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே.");


2)

இருகண்மேல் நெற்றியிலும் ஒருகண்ணன் வெற்பரையன்

மருகன்மா மதிசூடி வண்புனலில் மலருந்தி

வருபொன்னி வடகரைமேல் மணலாரும் தலக்காடு

மருவும்பத் தரைக்காக்கும் வைத்தியேச் சுவரனே.


இருகண்மேல் நெற்றியிலும் ஒருகண்ணன் - நெற்றிக்கண் உடையவன்;

வெற்பு அரையன் மருகன் - இமவான் மருமகன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");

மா மதிசூடி - அழகிய பிறைச்சந்திரனைச் சூடியவன்;

வண் புனலில் மலர் உந்தி வருபொன்னி வடகரைமேல் - வளம் மிக்க நீரில் பூக்களை அடித்துக்கொண்டு வருகின்ற காவிரியாற்றின் வடகரையில்; (வண்மை - ஈகை; வளப்பம்);

மணல் ஆரும் தலக்காடு மருவும் பத்தரைக் காக்கும் வைத்தியேச்சுவரனே - மணல் மிக்க தலக்காட்டில் விரும்பி வணங்கும் பக்தர்களைக் காக்கின்ற வைத்யேஸ்வரன்; (மருவுதல் - கலந்திருத்தல்; கிட்டுதல்); (அப்பர் தேவாரம் - 4.66.7 - "வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்" - );


3)

அரங்கமெனச் சுடுகாட்டில் ஆடுகின்ற ஆரழகன்

தரங்கமலி புனல்தாங்கு சடையன்வேர் வெளித்தெரியும்

மரங்களுயர் பொழில்சூழ்ந்த மணலாரும் தலக்காட்டில்

வரங்களருள் வள்ளலவன் வைத்தியேச் சுவரனே.


அரங்கம் - மன்று;

ஆர் அழகன் - அரிய அழகன்; பேரழகன்;

தரங்கம் மலி புனல் தாங்கு சடையன் - அலைகள் மிக்க கங்கையைத் தாங்கும் சடையினன்; (தரங்கம் - அலை);

வேர் வெளித் தெரியும் மரங்கள் உயர் பொழில் சூழ்ந்த மணல் ஆரும் தலக்காட்டில் - வேர்கள் வெளியே தெரியும்படி உள்ள மரங்கள் உயர்கின்ற சோலை சூழ்ந்த, மணல் மிக்க தலக்காட்டில்;

வரங்கள் அருள் வள்ளல் அவன் வைத்தியேச்சுவரனே - வரங்களை அருள்கின்ற வள்ளல் வைத்யேஸ்வரன்;


4)

மெய்யிலங்கு திருநீற்று வேடத்த ராய்நாளும்

நெய்யிலங்கு விளக்கேற்றும் நேயரிடர் நீக்குமிறை

வையிலங்கு மழுவாளன் மணலாரும் தலக்காட்டில்

மையிலங்கு திருமிடற்றன் வைத்தியேச் சுவரனே.


மெய் இலங்கு திருநீற்று வேடத்தராய் - உடம்பில் திருநீறு பூசிய கோலத்தர் ஆகி;

நாளும் நெய் இலங்கு விளக்கு ஏற்றும் நேயர் இடர் நீக்கும் இறை - தினந்தோறும் எண்ணெய்த்தீபம் ஏற்றி வழிபடும் அன்பர்களுடைய இடர்களைத் தீர்க்கும் இறைவன்;

வை இலங்கு மழுவாளன் - கூர்மையுடைய மழுவை ஏந்தியவன்;

மணல் ஆரும் தலக்காட்டில் - மணல் மிக்க தலக்காட்டில் உறைகின்ற;

மை இலங்கு திருமிடற்றன் - கருமை திகழும் கண்டம் உடையவன் - நீலகண்டன்;

வைத்தியேச்சுவரனே - வைத்யேஸ்வரன்;


5)

தலைமலிந்த மாலையினன் தண்மதியை நனைக்கின்ற

அலைமலிந்த நதிச்சடையன் அடிமறவார் அன்பென்னும்

வலைதன்னிற் படுமிறைவன் மணலாரும் தலக்காட்டில்

மலைமகளோ டுறைகின்ற வைத்தியேச் சுவரனே.


தலைமலிந்த மாலையினன் - தலைக்குத் தலைமாலை அணிந்தவன்;

தண்மதியை நனைக்கின்ற அலைமலிந்த நதிச்சடையன் - குளிர்ந்த திங்களை நனைக்கின்ற அலை மிக்க கங்கையைச் சடையில் அணிந்தவன்;

அடி மறவார் அன்பு என்னும் வலைதன்னில் படும் இறைவன் - திருவடியை மறவாத அன்பர்களின் பக்திவலையில் சிக்குபவன்; (திருவாசகம் - திருவண்டப் பகுதி - அடி 42 - "பத்தி வலையிற் படுவோன் காண்க" - பத்தியாகிய வலையில் அகப்படுவோன் - "வலை" என்றது ஏகதேச உருவகமாகலின், அதனுள் அகப்படுகின்ற மான் ஆகின்றவன் என உரைக்க);


6)

தேனாரும் மலர்தூவித் தெண்டனிட்டார் வினைதீர்ப்பான்

ஊனாரும் தலையேந்தி உண்பலிதேர் மாதேவன்

வானோர்கள் தம்பெருமான் மணலாரும் தலக்காட்டில்

மானோர்கை ஏந்தியவன் வைத்தியேச் சுவரனே.


தேன் ஆரும் மலர் தூவித் தெண்டனிட்டார் வினை தீர்ப்பான் - தேன் பொருந்திய பூக்களைத் தூவி வணங்கும் பக்தர்களின் வினைகளைத் தீர்ப்பவன்;

ஊன் ஆரும் தலை ஏந்தி உண்பலி தேர் மாதேவன் - ஊன் பொருந்திய பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பிச்சை ஏற்கும் மகாதேவன்;

மான் ஓர் கை ஏந்தியவன் - ஒரு கையில் மானை ஏந்தியவன்;


7)

நேசமலி நெஞ்சத்தால் நினைந்தேத்தும் அடியார்தம்

பாசவினை நீக்கியருள் பரமேட்டி படர்சடைமேல்

வாசமலர்க் கொன்றையினான் மணலாரும் தலக்காடே

வாசமென மகிழண்ணல் வைத்தியேச் சுவரனே.


நேசம் மலி நெஞ்சத்தால் நினைந்தேத்தும் அடியார்தம் பாசவினை நீக்கியருள் பரமேட்டி - அன்பு மிகுந்த நெஞ்சோடு தியானித்துத் துதிக்கும் பக்தர்களது பாசத்தையும் வினையையும் தீர்த்தருளும் பரமன்; (பாசவினை - பாசமும் வினையும்; வினைப்பாசம் என்றும் கூட்டலாம்); (சம்பந்தர் தேவாரம் - 1.93.4 - "வாச மலர்தூவப் பாச வினைபோமே"); (பரமேட்டி - பரம்பொருள்; மேலான இடத்தில் உள்ளவன்);

படர்சடைமேல் வாசமலர்க் கொன்றையினான் - படர்ந்த சடையில் மணம் மிகுந்த கொன்றைமலரைச் சூடியவன்;

தலக்காடே வாசம் என மகிழ் அண்ணல் - தலக்காடே உறைவிடம் என்று விரும்பி உறைகின்ற பெருமான்; (வாசம் - இருப்பிடம்); (மகிழ்தல் - விரும்புதல்);


8)

முன்னிலங்கை அரக்கர்கோன் முடிபத்தை நெரித்தவன்சீர்

பன்னியங்கை குவித்தேத்தும் பத்தரிடர் பாற்றுமரன்

வன்னியங்கை ஏந்தியவன் மணலாரும் தலக்காட்டில்

மன்னியமுக் கட்பரமன் வைத்தியேச் சுவரனே.


முன் இலங்கை அரக்கர் கோன் முடி பத்தை நெரித்தவன் சீர் - முன்னம், இலங்கையில் அரக்கர்கள் அரசனாக ஆண்ட இராவணனின் பத்துத் தலைகளையும் நசுக்கிய பெருமானுடைய புகழை;

பன்னி அங்கை குவித்து ஏத்தும் பத்தர் இடர் பாற்றும் அரன் - பாடிக் கைகூப்பிப் போற்றும் பக்தர்களுடைய இடர்களைத் தீர்க்கும் ஹரன்; (பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);

வன்னி அங்கை ஏந்தியவன் - கையில் தீயை ஏந்தியவன்; (வன்னி - நெருப்பு);

மணல் ஆரும் தலக்காட்டில் மன்னிய முக்கட் பரமன் வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில் நிலைத்து உறையும் முக்கண்ணன், பரமன், வைத்யேஸ்வரன்;


9)

அடிமுடியைத் தேடியமால் அயனறியா அழலுருவன்

கடிமலர்கள் கொண்டுதொழும் அடியவரைக் காக்குமிறை

வடியுடைமூ விலைவேலன் மணலாரும் தலக்காட்டில்

வடிவுடையா ளோடுறையும் வைத்தியேச் சுவரனே.


அடிமுடியைத் தேடிய மால் அயன் அறியா அழல் உருவன் - அடிமுடி தேடிய திருமால் பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத சோதி வடிவினன்;

கடிமலர்கள்கொண்டு தொழும் அடியவரைக் காக்கும் இறை - வாசமலர்களால் வழிபாடு செய்யும் பக்தர்களைக் காக்கும் கடவுள்;

வடியுடை மூவிலை வேலன் - கூர்மை பொருந்திய திரிசூலம் ஏந்தியவன்; (வடி - கூர்மை);

வடிவு உடையாளோடு உறையும் - அழகிய உமையம்மையோடு உறைகின்ற; (வடிவு - அழகு);


10)

தீதைத்தம் அகம்கரந்த தெண்ணருரை மதியேன்மின்

போதைக்கை யால்தூவிப் பொன்னடியைப் போற்றிடில்நம்

வாதைக்கு மருந்தாவான் மணலாரும் தலக்காட்டில்

மாதைத்தன் இடம்மகிழ்ந்த வைத்தியேச் சுவரனே.


தீதைத் தம் அகம் கரந்த தெண்ணர் உரை மதியேன்மின் - தீமையைத் தங்கள் மனத்தில் மறைத்துவைத்த அறிவிலிகள் சொல்லும் பேச்சை மதிக்கவேண்டா; (தெண்ணர் - அறிவிலி);

போதைக் கையால் தூவிப் பொன்னடியைப் போற்றிடில் - பூக்களைக் கைகளால் தூவிப் பொன் போன்ற திருவடியை வணங்கினால்; (போது - பூ);

நம் வாதைக்கு மருந்து ஆவான் - நம் வினைத்துன்பத்தைத் தீர்க்கும் மருந்து ஆவான்; (வாதை - துன்பம்; வேதனை செய்யும் நோய்);

மணல் ஆரும் தலக்காட்டில் - மணல் மிகுந்த தலக்காட்டில்;

மாதைத் தன் இடம் மகிழ்ந்த வைத்தியேச்சுவரனே - உமையைத் தன் இடப்பாகத்தில் விரும்பி ஏற்ற வைத்யேஸ்வரன்;


11)

கணங்களிசை ஆர்க்கவிடு காட்டினடம் ஆடியவன்

அணங்கொருபால் ஆகியவன் அரவூரும் அவிர்சடைமேல்

மணங்கமழும் கொன்றையினான் மணலாரும் தலக்காட்டில்

வணங்குமவர்க் கருளிறைவன் வைத்தியேச் சுவரனே.


கணங்கள் இசை ஆர்க்க, இடுகாட்டில் நடம் ஆடியவன் - பூதகணங்கள் இசை ஒலிக்கச் சுடுகாட்டில் திருநடம் செய்பவன்;

அணங்கு ஒருபால் ஆகியவன் - தன் திருமேனியில் ஒரு பக்கம் பெண் உருவம் உடையவன்;

அரவு ஊரும் அவிர் சடைமேல் மணம் கமழும் கொன்றையினான் - பாம்பு ஊர்கின்ற, பிரகாசிக்கும் சடையின்மேல் வாசம் கமழும் கொன்றையை அணிந்தவன்; (அவிர்தல் - பிரகாசித்தல்);

மணல் ஆரும் தலக்காட்டில் வணங்கும் அவர்க்கு அருள் இறைவன் வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில், வழிபடும் பக்தர்களுக்கு அருளும் இறைவன் வைத்யேஸ்வரன்;


12)

முந்தெயில்கள் செந்தழலில் வெந்தழியக் கணைதொட்டான்

கந்தமலர் உறைஅயனும் கரியவனும் இந்திரனும்

வந்தனைசெய் மணிகண்டன் மணலாரும் தலக்காட்டில்

வந்தடைந்தார்க் கருள்புரியும் வைத்தியேச் சுவரனே.


முந்து எயில்கள் செந்தழலில் வெந்து அழியக் கணை தொட்டான் - முன்பு முப்புரங்களும் தீயில் வெந்து அழியுமாறு ஒரு கணையை ஏவியவன்;

கந்த மலர் உறை அயனும் கரியவனும் இந்திரனும் வந்தனைசெய் மணிகண்டன் - தாமரையில் உறையும் பிரமனும் கரிய திருமாலும் இந்திரனும் தொழுது போற்றுகின்ற நீலகண்டன்;

மணல் ஆரும் தலக்காட்டில் வந்து அடைந்தார்க்கு அருள்புரியும் வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில், வந்து திருவடியிற் சரணடைந்த பக்தர்களுக்கு அருள்புரியும் வைத்யேஸ்வரன்;


13)

துதியன்பர் தமக்கென்றும் தொலையாத நிதியானான்

பதியென்று தேவரெலாம் பணிபரமன் பாம்போடு

மதியொன்று வார்சடையன் மணலாரும் தலக்காட்டில்

வதிகின்ற மாமருந்து வைத்தியேச் சுவரனே.


துதி அன்பர் தமக்கு என்றும் தொலையாத நிதி ஆனான் - துதிக்கின்ற அடியவர்களுக்கு எந்நாளும் அழியாத சேமநிதியும் அருள்நிதியும் ஆனவன்;

பதி என்று தேவர் எலாம் பணி பரமன் - தலைவன் என்று எல்லாத் தேவர்களும் பணிகின்ற பரமன்;

பாம்போடு மதி ஒன்று வார் சடையன் - பாம்போடு சந்திரன் ஒன்றாக இருக்கின்ற நீள்சடை உடையவன்;

மணல் ஆரும் தலக்காட்டில் வதிகின்ற மா மருந்து வைத்தியேச்சுவரனே - மணல் மிகுந்த தலக்காட்டில் உறைகின்ற பேரமுதம் வைத்யேஸ்வரன்; (வதிதல் - தங்குதல் - To dwell, abide); (மருந்து - அமுதம்);


பிற்குறிப்புகள்:

1. தலக்காடு (Talakadu - ತಲಕಾಡು) - மைசூரிலிருந்து கிழக்கே 50 கிமீ தொலைவில் காவிரிக்கரையில் உள்ள தலம்.

தலக்காட்டில் உள்ள கோயில்களுள் தலையாயது - "வைத்யேஸ்வரர் கோயில்".


2. கோயில் தகவல்கள்:

தலக்காடு - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=1621

Talakadu - Karnataka Govt site - info: https://mysore.nic.in/en/tourist-place/talkad/


வி. சுப்பிரமணியன்

--- ---