Sunday, February 3, 2019

04.59 - ஆலவாய் - காலை மாலையும்

04.59 - ஆலவாய் - காலை மாலையும்

2014-04-20

ஆலவாய் (மதுரை)

----------------------------

(எழுசீர் விருத்தம் - மா விளம் மா விளம் மா விளம் விளம் - வாய்பாடு)

(சுந்தரர் தேவாரம் - 7.34.1 - "தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்");


1)

காலை மாலையும் கழலி ணைக்குளம் கசிந்து நீலமி டற்றனே

கால காலனே காம கோபனே காதல் மாதொரு பாதியாய்

சூல னேபுலித் தோல னேகுளிர் துண்ட வெண்மதி சூடிய

கோல னேயென ஞால மேதரும் கூடல் ஆலவாய் அண்ணலே.


காலை மாலையும் கழலிணைக்கு உளம் கசிந்து - காலையும் மாலையும் இரு-திருவடிகளை நினைந்து மனம் உருகி;

"நீல மிடற்றனே, காலகாலனே, காமகோபனே - "நீலகண்டனே, காலனுக்கே காலன் ஆனவனே, காமனைக் கோபித்து எரித்தவனே;

காதல் மாது ஒரு பாதியாய் - அன்புடைய உமையை ஒரு கூறாக உடையவனே;

சூலனே புலித் தோலனே குளிர் துண்ட வெண்மதி சூடிய கோலனே" என - சூலபாணியே, புலித்தோலை ஆடையாக அணிந்தவனே, குளிர்ந்த வெண்பிறையைச் சூடிய கோலம் உடையவனே" என்று போற்றி வழிபட்டால்;

ஞாலமே தரும் கூடல் ஆலவாய் அண்ணலே - (அப்படித் தொழும் பக்தர்களுக்கு) உலகை ஆளும் நிலையே தருவான் (= எல்லா வரங்களையும் அருள்வான்) மதுரையில் உள்ள திருஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்; (ஞாலம் - உலகம்); (தரும் - தருவான்; - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று); (கூடல் = மதுரை); (அப்பர் தேவாரம் - 5.60.7 - "வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே");


2)

வெஞ்சொல் நீங்கிய தூய நெஞ்சராய் மேலை வல்வினை தீர்ந்திடச்

செஞ்சொல் மாலைகள் செப்பி நாள்தொறும் சேவ தேறிய செல்வனே

அஞ்சொல் மாதொரு பாக னேவிட அரவும் மதியமும் ஆர்ந்திடும்

குஞ்சி யாயென அஞ்சல் என்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


வெஞ்சொல் நீங்கிய தூய நெஞ்சராய் - கடுஞ்சொற்களைத் தவிர்ந்து மனத்தூய்மையோடு;

மேலை வல்வினை தீர்ந்திடச் செஞ்சொல் மாலைகள் செப்பி நாள்தொறும் - பழவினைகள் எல்லாம் தீரும்படி தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைத் தினமும் சொல்லி;

"சேவது ஏறிய செல்வனே - "இடபவாகனம் உடைய திருவாளனே; (சே - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி);

அஞ்சொல் மாது ஒரு பாகனே - இன்மொழி பேசும் உமையை ஒரு பாகமாக உடையவனே; (அஞ்சொல் - அம் சொல் - இனிய மொழி);

விட-அரவும் மதியமும் ஆர்ந்திடும் குஞ்சியாய்" என – நாகமும் சந்திரனும் பொருந்தும் திருமுடியை உடையவனே" என்று போற்றி வழிபட்டால்; (ஆர்தல் - பொருந்துதல்); (குஞ்சி - தலை);

அஞ்சல் என்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே - அபயம் அளிப்பான் மதுரையில் உள்ள திருஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்;


3)

படியு றப்பணிந் துருகு நெஞ்சராய்ப் பரசு பாணியே பரமனே

கடிய ரண்களைப் பொடிசெய் வீரனே கறையி லங்கிய கண்டனே

கொடிய னாளொரு கூற னேமிளிர் கொன்றை சூடியே வெள்விடைக்

கொடியி னாயென மிடிய றுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

படி உறப் பணிந்து உருகு நெஞ்சராய்ப், "பரசு பாணியே; பரமனே;

கடி அரண்களைப் பொடிசெய் வீரனே; கறை இலங்கிய கண்டனே;

கொடி அனாள் ஒரு கூறனே; மிளிர் கொன்றை சூடியே; வெள்விடைக்

கொடியினாய்" என, மிடி அறுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


படி - நிலம்;

பரசு-பாணி - மழுவை ஏந்தியவன்;

கடி-அரண்கள் - காவல் மிக்க முப்புரங்கள்;

கொடி அனாள் - கொடி அன்னாள் - பூங்கொடி போன்ற உமை;

வெள்விடைக் கொடியினாய் - வெள்ளை இடபம் திகழும் கொடி உடையவனே;

மிடி அறுப்பவன் - துன்பத்தைத் தீர்ப்பவன்;


4)

பூத்தொ டுத்தடி போற்றிப் புண்ணியா பூத நாயகா ஓர்கணை

கோத்து முப்புரம் எய்த மைந்தனே கொக்கின் இறகணி பிஞ்ஞகா

நேத்தி ரந்திகழ் நெற்றி யாய்திரு நீற தாடிய அம்பலக்

கூத்த னேயெனக் காத்த ருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பூத் தொடுத்து அடி போற்றிப் - பூக்களைத் தொடுத்துத் திருவடியைப் போற்றி;

"புண்ணியா பூத நாயகா - "புண்ணியனே, பூதங்களுக்குத் தலைவனே;

ஓர் கணை கோத்து முப்புரம் எய்த மைந்தனே - ஓர் அம்பை வில்லில் கோத்து முப்புரங்களை எய்த விரனே; (மைந்தன் - வீரன்);

கொக்கின் இறகு அணி பிஞ்ஞகா - கொக்கிறகைச் சூடிய சிவபெருமானே; (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குருவம் கொண்ட குரண்டாசுரனை அழித்து, அதன் அடையாளமாகச் சிவபெருமான் தன் தலையில் அணிந்தது); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - "குலம்பாடிக் கொக்கிறகும் பாடி");

நேத்திரம் திகழ் நெற்றியாய் - நெற்றிக்கண்ணனே;

திருநீது ஆடிய அம்பலக் கூத்தனே எனக் - திருநீற்றைப் பூசியவனே, சபையில் ஆடும் நடராஜனே", என்று துதித்து வழிபட்டால்; (ஆடுதல் - பூசுதல்); (அம்பலம் - சபை; தில்லையில் சிற்றம்பலம்; மதுரையில் வெள்ளியம்பலம்);

காத்து அருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே - (அத்தகைய பக்தர்களைக்) காப்பவன் மதுரையில் உள்ள திருஆலவாய் என்ற கோயிலில் உறையும் சிவபெருமான்;


(* கச்சியப்ப சிவாச்சாரியார் - கந்தபுராணம் - 3. மகேந்திர காண்டம் - 9. சயந்தன் புலம்புறு படலம் - # 64 -

ஏங்கி அமரர் இரிந்தோடவே துரந்த

ஓங்கு குரண்டத்து உருக்-கொண்ட தானவனைத்

தீங்கு பெறத் தடிந்து சின்னமா ஓர்-சிறையை

வாங்கி அணிந்த அருள் இங்கு என்பால் வைத்திலையே. )


5)

இன்ற மிழ்த்தொடை நாவ ராய்மனம் இளகி ஏறமர் ஈசனே

மன்றில் ஆடிடும் மன்ன னேஅயன் மண்டை யோட்டினை ஏந்தினாய்

அன்றி னார்புரம் அட்ட ஐயனே ஆறு பாய்தரு சென்னிமேல்

கொன்றை யாயென வென்றி யேதரும் கூடல் ஆலவாய் அண்ணலே.


இன்-மிழ்த்தொடை - இனிய தமிழ்ப்பாடலான தேவாரம், திருவாசகம்;

ஏறு அமர் ஈசனே - இடப வாகனனே;

மன்றில் ஆடிடும் மன்னனே - அம்பலத்தில் ஆடும் நடராஜனே;

அயன் மண்டையோட்டினை ஏந்தினாய் - பிரமகபாலத்தில் பிச்சை எடுப்பவனே;

அன்றினார் புரம் அட்ட ஐயனே - பகைவர்களது முப்புரங்களை அழித்த தலைவனே; (அன்றினார் - பகைவர்); (அடுதல் - அழித்தல்);

ஆறு பாய்தரு சென்னிமேல் கொன்றையாய் - கங்கை பாய்கின்ற திருமுடியின்மேல் கொன்றைமலரைச் சூடியவனே; (தருதல் - ஒரு துணைவினைச்சொல்);

வென்றி - வெற்றி;


6)

பொய்த விர்ந்தடி போற்றிப் புனிதனே புற்ற ராவணி வேணியாய்

மைத யங்கிய மணிமி டற்றினாய் வன்னி தாங்கிய கையினாய்

எய்தி அம்பினை எய்த காமனை எரிசெய் தாய்பிர மன்சிரம்

கொய்த கோனெனக் கைகொ டுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

பொய் தவிர்ந்து, அடி போற்றிப், "புனிதனே; புற்றுஅரா அணி வேணியாய்;

மை தயங்கிய மணிமிடற்றினாய்; வன்னி தாங்கிய கையினாய்;

எய்தி அம்பினை எய்த காமனை எரிசெய்தாய்; பிரமன் சிரம்

கொய்த கோன்" எனக், கைகொடுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பொய் தவிர்ந்து - பொய்யை நீங்கி;

வேணியாய் - சடையானே;

மை தயங்கிய மணி மிடற்றினாய் - கருமை திகழும் அழகிய நீலகண்டனே; (தயங்குதல் - ஒளிவிடுதல்); (மணி - அழகு; நீலமணி);

வன்னி - நெருப்பு;

எய்தி - அடைந்து; அணுகி; (எய்துதல் - அடைதல்);

எய்த - செலுத்திய; ஏவிய; (எய்தல் - ஏவுதல்);

காமனை எரிசெய்தாய் - மன்மதனை எரித்தவனே;

பிரமன் சிரம் கொய்த கோன் - பிரமனின் தலை ஒன்றைக் கிள்ளிய தலைவனே; (கோன் - அண்மைவிளியாக வந்தது - கோனே);

கைகொடுத்தல் - உதவுதல்; வினைக்கடலில் ஆழாதவண்ணம் கைகொடுத்துக் காப்பவன்;


7)

ஏற தேறிய ஏந்த லேகடி இலங்கு கூவிளம் மல்லிகை

சீற ராநதி செஞ்ச டைப்புனை தேவ தேவனே சுடலைவெண்

நீற தேறிய மேனி யாய்மணி நீல கண்டனே மங்கையோர்

கூற னேயெனப் பேற ருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

"ஏறது ஏறிய ஏந்தலே; கடி இலங்கு கூவிளம் மல்லிகை

சீறு-அரா நதி செஞ்சடைப் புனை தேவதேவனே; சுடலை வெண்-

நீறது ஏறிய மேனியாய்; மணி-நீலகண்டனே; மங்கை ஓர்

கூறனே" எனப், பேறு அருள்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


கடி இலங்கு கூவிளம் மல்லிகை - வாசனை கமழும் வில்வம், மல்லிகை;

சீறு-அரா நதி செஞ்சடைப் புனை தேவதேவனே - சீறுகின்ற பாம்பு, கங்கை, இவற்றைச் செஞ்சடையில் அணிந்த பெருமானே; (அப்பர் தேவாரம் - 5.11.4 - "நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம்")


8)

தரையி றங்கிய தேர்க டாவிடத் தசமு கன்மலை பேர்க்கவும்

வரையின் கீழவன் வாட ஓர்விரல் வைத்து வாளருள் வள்ளலே

அரவ நாணசை அரைய னேபுலி அதள னேவட வாலமர்

குரவ னேயென வரம ளிப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

"தரை இறங்கிய தேர் கடாவிடத் தசமுகன் மலை பேர்க்கவும்,

வரையின்கீழ் அவன் வாட ஓர் விரல் வைத்து, வாள் அருள் வள்ளலே;

அரவ-நாண் அசை- அரையனே; புலி-அதளனே; வடவால் அமர்

குரவனே" என, வரம் அளிப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


தரை இறங்கிய தேர் கடாவிடத் தசமுகன் மலை பேர்க்கவும் - கயிலையின்மேல் பறக்க இயலாமல் தன் தேர் தரையில் இறங்கியது கண்டு, மிகச் சினந்து கயிலையைப் பெயர்க்க இராவணன் முயன்றபொழுது; (தேர் கடாவுதல் - தேரைச் செலுத்துதல்);

வரையின்கீழ் அவன் வாட ஓர் விரல் வைத்து, வாள் அருள் வள்ளலே - கயிலைமலையின்கீழ் அவன் வருந்தும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அருளிய வள்ளலே; (வரை - மலை);

அரவ-நாண் அசை- அரையனே - பாம்பை அரைநாணாகக் கட்டிய அரசனே; (அசைத்தல் - கட்டுதல்); (அரையன் - அரசன்);

புலி-அதளனே - புலித்தோலை ஆடையாக அணிந்தவனே; (அதள் - தோல்);

வடவால் அமர் குரவனே - கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியே; (வடவால் - கல்லால-மரம்); (குரவன் - குரு); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்கு ஈரிருவர்க்கு இரங்கிநின்று");


9)

மழையி னேர்வணன் மலரி னானிவர் வாழ்த்த மாலெரி ஆயினாய்

குழையி லங்கிய காதி னாய்எதிர் குஞ்ச ரத்துரி மூடினாய்

உழையி லங்கிய கையி னாய்சிரம் ஒன்றில் உண்பலி தேர்ந்துழல்

குழக னேயெனப் பிழைபொ றுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

"மழையின் நேர் வணன், மலரினான் இவர் வாழ்த்த மால் எரி ஆயினாய்;

குழை இலங்கிய காதினாய்; எதிர் குஞ்சரத்து உரி மூடினாய்;

உழை இலங்கிய கையினாய்; சிரம் ஒன்றில் உண்பலி தேர்ந்து உழல்

குழகனே" எனப் பிழை பொறுப்பவன் கூடல் ஆலவாய் அண்ணலே.


மழையின் நேர் வணன் - முகில்வண்ணன் - திருமால்; (மழை - மேகம்); (நேர்தல் - ஒத்தல்); (வணன் - வண்ணன் - இடைக்குறையாக வந்தது);

மலரினான் - பிரமன்; (சம்பந்தர் தேவாரம் - 1.47.9 - "மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது");

வாழ்த்துதல் - துதித்தல்;

மால் எரி - பெரிய ஜோதி;

எதிர் குஞ்சரத்து உரி மூடினாய் - எதிர்த்த யானையின் தோலைப் போர்த்தவனே; (அப்பர் தேவாரம் - 4.60.5 - "ஓடைசேர் நெற்றி யானை உரிவையை மூடினானை");

உழை - மான்;

குழகன் - அழகன்;

பிழை பொறுப்பவன் - அடியார்களது குற்றங்களையெல்லாம் மன்னிப்பவன்; ("குற்றம் பொறுத்த நாதர்" - திருக்கருப்பறியலூரில் ஈசன் திருநாமம்); (அப்பர் தேவாரம் - 6.47.7 - "உன்பால் அன்பர் பிழைபொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்றன் கடனன்றே");


10)

குற்ற நெஞ்சினர் வெற்று வாதினர் கூறு பொய்ம்மொழி கருதிடேல்

முற்றி லாமதி சூடி னாய்அரண் மூன்று தீப்புக வில்லினில்

ஒற்றை அம்பினைக் கோத்த வீரனே உரகத் தாரனே எம்மையாள்

கொற்ற வாவெனப் பற்றி ஏற்றுவான் கூடல் ஆலவாய் அண்ணலே.


குற்ற நெஞ்சினர் வெற்று வாதினர் - நெஞ்சில் வஞ்சத்தை வைத்துக்கொண்டு, பொருளற்ற தர்க்கம் செய்கின்றவர்;

கூறு பொய்ம்மொழி கருதிடேல் - அவர்கள் சொல்லும் பொய்களை மதிக்கவேண்டா; (கருதுதல் - மதித்தல்; விரும்புதல்);

"முற்றிலா-மதி சூடினாய் - இளம்பிறையைச் சூடியவனே; (அப்பர் தேவாரம் - 5.14.11 - "முற்றிலா-மதி சூடும் முதல்வனார்");

அரண் மூன்று தீப்-புக வில்லினில் ஒற்றை அம்பினைக் கோத்த வீரனே - மூன்று கோட்டைகளும் தீப்பற்றி அழியும்படி மேருமலை என்ற வில்லில் ஓர் அம்பைக் கோத்த வீரனே;

உரகத்-தாரனே - பாம்பை மாலையாக அணிந்தவனே;

எம்மை ஆள் கொற்றவா" எனப், பற்றி ஏற்றுவான் - எம்மை ஆளும் அரசனே" என்று போற்றி வழிபடும் பக்தர்கள் வினைக்கடலில் ஆழாதவண்ணம் அவர்கள் கையைப் பற்றி மேலே தூக்குவான்;


11)

தொண்ட ராய்மலர் தூவி நாள்தொறும் தூய னேசடை மேற்பிறை

இண்டை யாவணி எந்தை யேசுரர் ஏத்த நஞ்சினை உண்டிருள்

கண்ட னேகரி காட னேகயற் கண்ணி யாளையோர் பங்கெனக்

கொண்ட கோனென விண்ட ரும்பரன் கூடல் ஆலவாய் அண்ணலே.


பதம் பிரித்து:

தொண்டராய் மலர் தூவி நாள்தொறும், "தூயனே; சடைமேல் பிறை

இண்டையா அணி எந்தையே; சுரர் ஏத்த நஞ்சினை உண்டு இருள்

கண்டனே; கரிகாடனே; கயற்கண்ணியாளை ஓர் பங்கு எனக்

கொண்ட கோன்" என விண் தரும் பரன், கூடல் ஆலவாய் அண்ணலே.


தொண்டராய் மலர் தூவி - 1. தொண்டர் ஆகி, மலர் தூவி - சிவனுக்குப் பக்தர்கள் ஆகி மலர்களைத் தூவி; 2. தொண்டர் ஆய் மலர் தூவி - பக்தர்கள் ஆய்ந்தெடுத்த சிறந்த பூக்களைத் தூவி;

இண்டையா - இண்டையாக; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

சுரர் ஏத்த நஞ்சினை உண்டு இருள் கண்டனே - தேவர்கள் துதிக்க அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்டு கறுத்த கண்டத்தை உடையவனே; (இருள்தல் - கறுப்பாதல்);

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;

கயற்கண்ணி - அங்கயற்கண்ணி - ஆலவாயில் அம்பாள் திருநாமம் (மீனாட்சி);

விண் தரும் பரன் - விண்ணுலகை அளிக்கும் பரமன்; (சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்");

கோன் - அண்மைவிளியாக வந்தது - கோனே;


பிற்குறிப்பு : இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :

எழுசீர் விருத்தம் - "மா விளம் மா விளம் மா விளம் விளம்" என்ற வாய்பாடு.

பாடல்தோறும் ஈற்றடியில் 1-3 சீர்களிடை எதுகை அமைந்த பாடல்கள்.

இவ்வாய்பாடு போலத், "தான தானன தான தானன தான தானன தானனா" என்ற சந்தத்தில் சம்பந்தர், சுந்தரர் பதிகங்கள் உள்ளன.

சம்பந்தர் தேவாரம் - 3.39.1 - "மானினேர்விழி மாதராய்";

சுந்தரர் தேவாரம் - 7.34.8 - "எள்விழுந்திடம் பார்க்குமாகிலும்";


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

Saturday, November 17, 2018

03.04.071 - சிவன் - சாப்பாட்டுக்கடை (Restaurant) - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-12

3.4.71 - சிவன் - சாப்பாட்டுக்கடை (Restaurant) - சிலேடை

-------------------------------------------------------------

சிறந்திருக்கு மாறுசெய்வார் தேநீர் அடையும்

நிறையுமெப் போதும் நிலவு - மறையில்

தினமகிழ் வெய்திடச் சேர்கூட்டம் போற்றும்

கனற்கணன்சாப் பாட்டுக் கடை!


சொற்பொருள் :

தே - தெய்வம்;

நீர் - கங்கை;

தேநீர் - தேய்நீர் (tea);

நிறைதல் - நிரம்புதல்; பூரணமாக இருத்தல்; வியாபித்து இருத்தல்;

நிலவுமறையில் - 1. நிலவும் அறையில்; / 2. நிலவும் மறையில்;

மறை - வேதம்;

தினமகிழ்வெய்திட - 1. தின்ன மகிழ்வு எய்திட; / 2. தினம் மகிழ்வு எய்திட;

தின்னுதல் - உண்ணுதல்;

போற்றுதல் - விரும்புதல்; புகழ்தல்; வணங்குதல்;

கனற்கணன் - கண்ணில் நெருப்பை உடையவன் - நெற்றிக்கண்ணன்;


சாப்பாட்டுக்கடை (Restaurant):

சிறந்திருக்குமாறு செய்வார் தேநீர் அடையும் - மிகப் பக்குவமாகத் தேநீரும் அடையும் (மற்றவையும்) செய்வர்; (தேநீர் அடையும் - தேநீரும் அடையும் - உம்மைத்தொகை);

நிறையும் எப்போதும் - எப்போதும் (கூட்டம்) நிரம்பியிருக்கும்;

நிலவும் அறையில் தி[ன்], மகிழ்வெய்திடச் சேர் கூட்டம் - (அந்த உண்ணும்) அறையில் சாப்பிடக், களிக்கச் சேர்கின்ற கூட்டம் இருக்கும். (தின - தின்ன; - இடைக்குறை);

சாப்பாட்டுக் கடை - .


சிவன்:

சிறந்திருக்குமாறு செய்வார் - நல்ல நிலை அடையச் செய்வார்; (இலக்கணக் குறிப்பு - செய்வார் என்றது ஒருமை பன்மை மயக்கம்);

தே, நீர் அடையும் - கங்கை (சடையில்) அடைகின்ற தெய்வம்;

நிறையும் எப்போதும் - எப்போதும் பூரணமாக இருப்பான்.

நிலவும் மறையில் - வேதத்தில் இருப்பவன். (அப்பர் தேவாரம் - 6.66.7 - "மறையானை");

தினம் மகிழ்வெய்திடச் சேர் கூட்டம் போற்றும் - என்றும் இன்புற வேண்டிச் சேர்கின்ற (அடியவர்) கூட்டத்தினர் போற்றுகின்ற.

கனற்கணன் - நெற்றிக்கண்ணன்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.070 - சிவன் - சந்தை - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-10

3.4.70 - சிவன் - சந்தை - சிலேடை

-------------------------------------------------------------

அரிய கனிகா யுடன்மலியங் காடி

அரவமிகும் மாலை அதனில் - அரியும்

பதம்தேடிச் செல்வார் பணிசெய்வோர் சூழும்

விதம்திகழ் சந்தைமுக்கண் வேந்து!


சொற்பொருள் / குறிப்புகள்:

அரிய கனி காயுடன்மலியங்காடி - 1. "அரிய கனி; காய் உடல் மலி அங்கு ஆடி"; / 2. அரிய கனி காயுடன் மலி அங்காடி;

அரிய கனி - அருமையான கனி; கற்பகக் கனி; (திருவிசைப்பா - 9.5.2 - "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்");

காய் உடல் - எரிகின்ற உடல்; (காய்தல் - எரித்தல்; அழித்தல்);

மலிதல் - மிகுதல்;

அங்காடி - கடை; கடைவீதி;

அரவம் - 1. பாம்பு; / 2. சத்தம்;

மிகுதல் - 1. சிறத்தல்; / 2. அதிகமாதல்;

மாலை - 1. அணிகின்ற மாலை; / 2. சாயங்காலம்;

அரி - 1.விஷ்ணு; / 2. நறுக்கு; வெட்டு; (அரிதல்);

பதம் - 1. பாதம்; / 2. பொருள்; வஸ்து; பக்குவம்;

பணிசெய்வோர் - 1. தொண்டு செய்கின்ற பக்தர்கள்; / 1. வேலை செய்பவர்கள்;

சூழ்தல் - 1. வலம்செய்தல் / 2. சுற்றிவருதல்; மொய்த்தல்;

சந்தை - குறித்த காலத்தில் கூடும் கடைகள்; கடைவீதி;

வேந்து - அரசன்;

இலக்கணக் குறிப்பு : ல்+ = ன்ம; உதாரணம்: கல்+ மனம் = கன்மனம்;


சந்தை:

அரிய கனி காயுடன் மலி அங்காடி - அருமையான பழங்களும் காய்கறிகளும் மிகுந்திருக்கும் கடைவீதி;

அரவம் மிகும் மாலை அதனில் - சாயங்கால வேளையில் அங்கே இரைச்சல் மிகுந்து இருக்கும்;

அரியும் பதம் தேடிச் செல்வார் - நறுக்கக்கூடிய ( காய்கறிகள், கனிகள் ஆகிய ) பொருள்களைத் தேடி அங்கே போவார்கள் ; (--அல்லது-- நறுக்க ஏற்ற பக்குவம் உள்ள பொருளைத் தேடி அங்கே போவார்கள்).

பணி செய்வோர் சூழும் விதம் திகழ் சந்தை - வேலை செய்பவர்கள் பலர் இருக்கின்ற சந்தை;


சிவன் :

அரிய கனி - கற்பகக் கனி போன்றவன்;

காய் உடல் மலி அங்கு ஆடி - எரியும் உடல்கள் இருக்கும் அந்த இடத்தில் (சுடுகாட்டில்) ஆடுபவன்;

அரவம் மிகும் மாலை அதனில் - அவன் மேல் இருக்கும் மாலையில் (சீறும்) பாம்பு இருக்கும்; (--சிறந்த மாலையாகப் பாம்பு ஆகும்--);

அரியும் பதம் தேடிச் செல்வார் - விஷ்ணுவும் அவனது திருவடியைத் தேடிச் செல்வார்;

பணிசெய்வோர் சூழும் விதம் திகழ் முக்கண் வேந்து - திருத்தொண்டு செய்பவர்கள் வலஞ்செய்யும்படி இருக்கின்ற முக்கண் அரசன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

03.04.069 - சிவன் - முருகன் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2007-06-08

3.4.69 - சிவன் - முருகன் - சிலேடை

-------------------------------------------------------------

ஏறுமயில் வேலு மிருக்கும் அருணகிரி

கூறுடையான் கோவிலாக் குன்றாகும் - ஆறு

முகந்தெரியும் கைஏந்தி முன்பணிபத் தர்க்கிச்

சகந்தருமீ சன்முருகன் தான்!


சொற்பொருள்:

ஏறுமயில் வேலுமிருக்கும் - 1. ஏறும் அயில் வேலும் இருக்கும்; / 2. ஏறு மயில் வேலும் இருக்கும்;

ஏறு - 1. இடபம்; எருது; / 2. பல விலங்குகளின் ஆண்;

அயில் - கூர்மை;

ஏறு மயில் - ஆண் மயில்; சிறந்த மயில்; ஏறுகின்ற மயில்;

வேல் - 1. சூலம்; / 2. வேலாயுதம்;

அருணகிரி - 1. அண்ணாமலை; / 2. அருணகிரிநாதர் ;

கூறுடையான் - கூறு உடையான்;

கூறு - 1. பாகம்; பங்கு; / 2. கூறுதல் - சொல்லுதல்;

உடையான் - 1. உடையவன்; / 2. சுவாமி;

கோவிலா - 1. கோ வி[ல்]லாக; கோ இ[ல்]லா; / 2. கோவிலாக;

கோ - தலைவன்;

ஆறுமுகந்தெரியும் - 1. ஆறும் உகந்து எரியும்; / 2. ஆறு முகம் தெரியும்;

எரி - நெருப்பு;

இச்சகம் - 1. விருப்பம்; / 2. இந்த உலகம் (இச்-சகம்);


முருகன்:

ஏறு மயில் வேலும் இருக்கும் - ஆண்மயில் வாகனம், வேல் இவற்றை உடைய;

அருணகிரி கூறு உடையான் - அருணகிரிநாதர் துதிக்கும் சுவாமி;

கோவிலாக் குன்று ஆகும் - (அவனுக்குக்) கோயிலாகக் குன்று ஆகும்; (குன்றுதோறாடும் குமரன்);

ஆறுமுகம் தெரியும் - ஆறுமுகம் காணலாம்;

கை ஏந்தி முன் பணி பத்தர்க்கு இச்-சகம் தரும் - (வரம் வேண்டிக்) கையை ஏந்தி முன்னால் பணிகின்ற பக்தர்களுக்கு இவ்வுலகை ஆளத் தருகின்றவன்;


சிவன்:

ஏறும் அயில் வேலும் இருக்கும் - இடப வாகனமும், கூரான சூலமும் உடையவன்;

அருணகிரி - அண்ணாமலை; (அண்ணாமலையே இறைவன் திருமேனி ஆகும்)

கூறு உடையான் - பார்வதியை ஒரு கூறாக உடையவன்;

கோ வி[ல்]லாக் குன்று ஆகும் - (முப்புரம் எரித்தபொழுது) தலைவனுடைய வில்லாக மேரு மலை ஆகும்; ("கோ இலாக் குன்று ஆகும் - தனக்கு ஒரு தலைவன் இல்லாத மலை போன்றவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);

ஆறும் உகந்து எரியும் கை ஏந்தி - (சடையில்) கங்கையையும் விரும்பித் தரித்துக், கையில் தீயையும் ஏந்துபவன்;

முன் பணி பத்தர்க்கு இச்சகம் தரும் - முன்னால் பணிகிற பக்தர்களுக்கு அவர்கள் விரும்பியவற்றைத் தருகின்றவன்;


குறிப்புகள்:

1) அண்ணாமலையாகி நிற்பது - சம்பந்தர் தேவாரம் - திருமுறை 3.108.9 - "மாலு(ம்) நான்முகனும் காண்பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே");

2) "வில்லாக" என்பது இடைக்குறை, கடைக்குறையாக "விலா";

3) சிவனுக்கும் ஆறுமுகம் இருப்பதை இந்தத் திருமந்திரப் பாடல் விளக்கத்தில் காணலாம்:

"எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த் தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்" (சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறு முகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க)

எனவே, சிவனுக்கும் ஆறுமுகம் என்றும் "ஆறுமுகந்தெரியும்" என்ற தொடரைப் பொருள்கொள்ளலாம்.

4) ஈசனைக் 'குன்றே', 'மலையே' என்று சொல்லும் தேவாரப் பாடல்களுக்குச் சில உதாரணங்கள்:

அப்பர் தேவாரம் - 6.32.2 - "செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி".

சுந்தரர் தேவாரம் - 7.21.9 - "திரு மேற்றளி உறையும் மலையே உன்னையல்லால் மகிழ்ந்தேத்த மாட்டேனே".


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

04.58 - பொது - "உமைபங்கன் போற்றி"

04.58 - பொது - "உமைபங்கன் போற்றி"

2014-03-30

பொது - (உமைபங்கன் போற்றி)

----------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா)

(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")


முற்குறிப்பு - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

1)

காமன(து) ஆகமெ ரித்தனை போற்றி

சோமனை அஞ்சடை ஏற்றினை போற்றி

சேமம ளித்திடு சேவக போற்றி

கோமக னேஉமை கூறின போற்றி.


பதம் பிரித்து:

காமனது ஆகம் எரித்தனை போற்றி;

சோமனை அம் சடை ஏற்றினை போற்றி;

சேமம் அளித்திடு சேவக போற்றி;

கோமகனே; உமை கூறின போற்றி.


* போற்றி - வணக்கம்; "நம" என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்;

காமனது ஆகம் எரித்தனை - மன்மதனது உடலை எரித்தவனே; (ஆகம் - உடல்); (எரித்தனை - எரித்தாய் - எரித்தவனே);

சோமனை அம் சடை ஏற்றினை - சந்திரனை அழகிய சடையின்மீது ஏற்றியவனே; (சோமன் - சந்திரன்); (அம் - அழகு);

சேமம் அளித்திடு சேவக - க்ஷேமம் அளிக்கும் வீரனே; (சேவகன் - வீரன்);

கோமகனே, உமை கூறின - தலைவனே, உமையை ஒரு கூறாக உடையவனே; (உமை கூறினன் - உமையை ஒரு கூறாக உடையவன் - உமைபங்கன்); (கூறின – கூறினன் என்பதன் அண்மை விளி); (சம்பந்தர் தேவாரம் - 2.112.3 - "மங்கைகூறினன்");

(எரித்தனை போற்றி, ஏற்றினை போற்றி, போன்ற பிரயோக உதாரணம்: திருவாசகம் - போற்றித்திருவகவல் - 8.4: அடி-86: தாயே ஆகி வளர்த்தனை போற்றி; அடி-209: கருங்குருவிக்கு அன்று அருளினை போற்றி; அடி-210: இரும்புலன் புலர இசைந்தனை போற்றி);


2)

காலனை நெஞ்சிலு தைத்தனை போற்றி

பாலனை வாழ்ந்திட வைத்தனை போற்றி

வேலனை ஈன்றப ரம்பர போற்றி

கோலம டக்கொடி கூறின போற்றி.


காலனை நெஞ்சில் உதைத்தனை - காலனை மார்பில் உதைத்தவனே;

பாலனை வாழ்ந்திட வைத்தனை - மார்க்கண்டேயரை வாழவைத்தவனே;

வேலனை ஈன்ற பரம்பர - முருகனைப் பெற்ற பரம்பரனே; (பரம்பரன் - மிக மேலானவன்; முழுமுதற்கடவுள்);

கோல மடக்கொடி கூறின - அழகிய இளம்கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவனே;


3)

அன்றெரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி

அன்றினர் ஏரெயில் அட்டனை போற்றி

மன்றினில் ஆடிடு மன்னவ போற்றி

ஒன்றென மாதொடு நின்றனை போற்றி.


பதம் பிரித்து:

அன்று எரி நஞ்சினை ஆர்ந்தனை போற்றி;

அன்றினர் ஏர் எயில் அட்டனை போற்றி;

மன்றினில் ஆடிடும் மன்னவ போற்றி;

ஒன்று என மாதொடு நின்றனை போற்றி.


அன்று எரி நஞ்சினை ஆர்ந்தனை - முன்பு ஆலகால விடத்தை உண்டவனே; (ஆர்தல் – உண்ணுதல்);

அன்றினர் ஏர்-எயில் அட்டனை - பகைவர்களது அழகிய கோட்டைகளை எரித்தவனே; (அன்றினர் - பகைவர்); (ஏர் எயில் - அழகிய கோட்டைகள் - முப்புரங்கள்); (அடுதல் - எரித்தல்; அழித்தல்);

மன்றினில் ஆடிடும் மன்னவ - அம்பலத்தில் ஆடும் நடராஜனே;

ஒன்று என மாதொடு நின்றனை - உமையோடு ஒன்றாகி நின்றவனே;


4)

வெற்புவி லால்அரண் எய்தனை போற்றி

மற்புயம் எட்டுடை வல்லவ போற்றி

இற்பலி வெண்டலை ஏற்றனை போற்றி

அற்புத னேஉமை பங்கின போற்றி.


பதம் பிரித்து:

வெற்பு விலால் அரண் எய்தனை போற்றி;

மற்புயம் எட்டுடை வல்லவ போற்றி;

இல் பலி வெண் தலை ஏற்றனை போற்றி;

அற்புதனே உமைபங்கின போற்றி.


வெற்பு விலால் அரண் எய்தனை - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களை எய்தவனே; (அரண் - கோட்டை); (சம்பந்தர் தேவாரம் - 1.135.10 - "பருவிலால் எயில் எய்து பராய்த்துறை மருவினான்");

மற்புயம் எட்டுடை வல்லவ – வலிமைமிக்க எட்டுத்-தோள்கள் உடைய சமர்த்தனே; (மற்புயம் - மல் + புயம்); (வல்லவன் - வலிமையுடையவன்; சமர்த்தன்); (அப்பர் தேவாரம் - 4.9.2 - "எண்தோள் வீசிநின்றாடும் பிரான்");

இல்-பலி வெண் தலை ஏற்றனை - பல இல்லங்களில் வெண்ணிற மண்டையோட்டில் பிச்சை ஏற்றவனே;

அற்புதனே, உமைபங்கின - அற்புதனே, உமைபங்கனே;


5)

விண்ணவர் ஏத்திடு முக்கண போற்றி

தண்ணதி பாய்தரு வேணிய போற்றி

எண்ணடி யார்வினை தீர்த்தனை போற்றி

பெண்ணொரு பங்கில மர்ந்தனை போற்றி;


விண்ணவர் ஏத்திடும் முக்கண – தேவர்கள் துதிக்கும் முக்கண்ணனே;

தண்-நதி பாய்தரு வேணிய - குளிர்ந்த கங்கை பாயும் சடையினனே; (தண் நதி - குளிர்ந்த கங்கை); (தரு - ஒரு துணைவினைச்சொல்); (வேணி - சடை);

எண்டியார் வினை தீர்த்தனை - உன்னை நினையும் பக்தர்களது வினைகளைத் தீர்த்தவனே; (எண்ணுதல் - நினைதல்);

பெண் ஒரு பங்கில் அமர்ந்தனை - உமையை ஒரு கூறாக விரும்பியவனே;


6)

வெள்விடை ஏறிய வித்தக போற்றி

கள்விரி கொன்றைய ணிந்தனை போற்றி

ஒள்ளெரி வண்ணவு ருத்திர போற்றி

விள்ளரி யாய்உமை கூறின போற்றி.


வெள்-விடை ஏறிய வித்தக - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய வித்தகனே; (வித்தகன் - சாமர்த்தியம் உள்ளவன்; பேரறிவாளன்);

கள் விரி கொன்றை அணிந்தனை - தேன் நிறைந்த கொன்றைப்பூவைச் சூடியவனே; (கள் - தேன்); (விரிதல் - மலர்தல்);

ஒள்-எரி வண்ண உருத்திர - ஒளிவீசும் நெருப்புப் போன்ற செம்மேனியுடைய உருத்திரனே; ( "ஒள்-எரி வண்ண = தீவண்ணனே" என்று தனியாகவும் பொருள்கொள்ளலாம்);

விள்ளரியாய் - விள்ள அரியாய் (தொகுத்தல் விகாரம்) - சொல்லற்கு அரியவனே; (விள்ளுதல் - சொல்லுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.81.2 - "சொல்லரிய தொண்டர் துதிசெய்ய");

உமை கூறின – உமாதேவியை ஒரு கூறாக உடையவனே;


7)

நாரண னுக்கரி நல்கினை போற்றி

ஆரணம் ஓதிய நாவின போற்றி

வாரண ஈருரி போர்த்தனை போற்றி

பூரண மாதொரு பங்கின போற்றி.


பதம் பிரித்து:

நாரணனுக்கு அரி நல்கினை போற்றி;

ஆரணம் ஓதிய நாவின போற்றி;

வாரண ஈருரி போர்த்தனை போற்றி;

பூரண; மாது ஒரு பங்கின போற்றி.


நாரணனுக்கு அரி நல்கினை - திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியவனே; (அரி - சக்கரம்; 3. ஆயுதம்); (விஷ்ணு ஸஹஸ்ர-நாமத்தின் தியான-ச்லோகத்தில், "அரி நளின, கதா, சங்க பாணி:" என்னும் சொற்றொடரில் வரும் "அரி" சக்கரத்தைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல்); (நல்குதல் - கொடுத்தல்);

ஆரணம் ஓதிய நாவின - வேதங்களைப் பாடியருளியவனே; (ஆரணம் - வேதம்);

வாரண ஈருரி போர்த்தனை - ஆனையின் உரித்த தோலைப் போர்த்தவனே; (ஈர்த்தல் - உரித்தல்); (ஈர் - ஈரம்; பசுமை);

பூரண, மாது ஒரு பங்கின - பூரணனே, உமை ஒரு பங்கினனே;


8)

வாளவு ணன்வலி வாட்டினை போற்றி

நீளவ வன்தொழு நின்மல போற்றி

வாளவ னுக்களி பண்பின போற்றி

கோளர வாஉமை கூறின போற்றி.


பதம் பிரித்து:

வாள் அவுணன் வலி வாட்டினை போற்றி;

நீள அவன் தொழு நின்மல போற்றி;

வாள் அவனுக்கு அளி பண்பின போற்றி;

கோள் அரவா, உமை கூறின போற்றி.


வாள் அவுணன் வலி வாட்டினை - கொடிய அரக்கனான இராவணனது வலிமையை அழித்தவனே; (வாள் - கொடிய); (அவுணன் - இங்கே, அரக்கன்); (வலி - ஆற்றல்; வலிமை); (வாட்டுதல் - கெடுத்தல்); (அப்பர் தேவாரம் - 5.74.10 - "வாளரக்கன் வலி வாட்டினான் எறும்பியூர்மலை எம்மிறை"); (திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் - 2079 - "தென்னிலங்கை அரண் சிதறி அவுணன் மாளச் சென்று");

நீள அவன் தொழு நின்மல - பன்னெடுங்காலம் அவனால் தொழப்பெற்ற தூயனே; (நீள – நெடுங்காலமாக);

வாள் அவனுக்கு அளி பண்பின – பின்பு அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளை அருளியவனே; (பண்பு - குணம்; இயல்பு);

கோள்-அரவா, உமை கூறின - கொடிய பாம்பை அணிந்தவனே, உமைபங்கனே; (கோள் - கொடிய);


9)

மாலயன் நேடவ ளர்ந்தனை போற்றி

ஆலம துண்டமி டற்றின போற்றி

மூலமும் அந்தமும் ஆயினை போற்றி

கோலவ ணங்கொரு கூறின போற்றி.


பதம் பிரித்து:

மால் அயன் நேட வளர்ந்தனை போற்றி;

ஆலமது உண்ட மிடற்றின போற்றி;

மூலமும் அந்தமும் ஆயினை போற்றி;

கோல அணங்கு ஒரு கூறின போற்றி.


மால் அயன் நேட வளர்ந்தனை - திருமால் பிரமன் இவர்கள் தேடும்படி ஓங்கியவனே; (நேடுதல் - தேடுதல்); (வளர்தல் - ஓங்குதல்; நீளுதல்);

ஆலம் அது உண்ட மிடற்றின - ஆலகாலத்தை உண்ட கண்டனே - நீலகண்டனே; (மிடறு - கண்டம்);

மூலமும் அந்தமும் ஆயினை - முதலும் முடிவும் ஆனவனே;

கோல அணங்கு ஒரு கூறின - அழகிய உமையை ஒரு கூறாக உடையவனே;


10)

ஏசிடு வார்க்கிலன் ஆயினை போற்றி

பேசிடு வார்வினை தீர்த்தனை போற்றி

மாசில னேமழு வாளின போற்றி

மாசிவை வாமம கிழ்ந்தனை போற்றி.


பதம் பிரித்து:

ஏசிடுவார்க்கு இலன் ஆயினை போற்றி;

பேசிடுவார் வினை தீர்த்தனை போற்றி;

மாசு இலனே, மழுவாளின போற்றி;

மா-சிவை வாமம் மகிழ்ந்தனை போற்றி.


ஏசிடுவார்க்கு இலன் ஆயினை - இகழ்பவர்களுக்கு அருள் இல்லாதவனே; (ஏசுதல் - இகழ்தல்);

பேசிடுவார் வினை தீர்த்தனை - போற்றும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவனே; (பேசுதல் - துதித்தல்; திருப்புகழைப் பேசுதல்); (அப்பர் தேவாரம் - 6.1.1 - "பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே");

மாசு இலனே, மழுவாளின - குற்றமற்றவனே, மழுவை ஏந்தியவனே;

மா-சிவை வாமம் மகிழ்ந்தனை - அழகிய உமையை இடப்பக்கம் கூறாக விரும்பியவனே; (மா - அழகு); (சிவை - பார்வதி);


11)

கொக்கிற கும்புனை பிஞ்ஞக போற்றி

நக்கர ணஞ்சுடு நாயக போற்றி

முக்கண முப்புரி நூலின போற்றி

பக்கமு மைக்களி பாங்கின போற்றி.


பதம் பிரித்து:

கொக்கிறகும் புனை பிஞ்ஞக போற்றி;

நக்கு அரணம் சுடு நாயக போற்றி;

முக்கண, முப்புரி நூலின போற்றி;

பக்கம் உமைக்கு அளி பாங்கின போற்றி.


கொக்கிறகும் புனை பிஞ்ஞக - கொக்கிறகை அணிந்த தலைக்கோலம் உடையவனே; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (கொக்கிறகு - 1. கொக்கிறகு என்ற பூ; 2. கொக்குவடிவாய் இருந்த குரண்டாசுரனை அழித்து, அவன் இறகைச் சிவபிரான் தலையில் அணிந்தனன் என்பது புராண வரலாறு); (அப்பர் தேவாரம் - 6.39.2 - "கொக்கிறகு சென்னி உடையான் கண்டாய்");

நக்கு அரணம் சுடு நாயக - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவனே;

முக்கண, முப்புரி நூலின - முக்கண்ணனே, பூணூல் அணிந்தவனே;

பக்கம் உமைக்கு அளி பாங்கின - ஒரு பக்கத்தை உமைக்கு அளித்தவனே; (பாங்கு - இயல்பு);


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)


உதாரணம்: - லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்"


வி. சுப்பிரமணியன்

----------- --------------