Tuesday, February 17, 2026

T.214 - பொது - தெள்ளுபுனல்

2019-03-04

T.214 - பொது - தெள்ளுபுனல்

-----------------

(வண்ணவிருத்தம்;

தய்யதன தனதான .. தனதான)


தெள்ளுபுனல் சொரிமாணி .. உயிர்வாழச்

.. செய்யகழல் நமன்மீது .. படவீசீ

புள்ளிதிகழ் படநாக .. அரைநாணாய்

.. புல்லுமுமை பிரியாத .. மணிமார்பா

வெள்ளமடை சடைமீது .. பிறையானே

.. மெய்யதனில் ஒளிநீறு .. புனைவோனே

நள்ளுமவர் வினைதீர .. அருள்வோனே

.. நள்ளிருளில் நடமாடு .. பெருமானே.


பதம் பிரித்து:

தெள்ளு-புனல் சொரி-மாணி .. உயிர் வாழச்

.. செய்ய-கழல் நமன்மீது .. பட வீசீ;

புள்ளி திகழ் பட-நாக .. அரைநாணாய்;

.. புல்லும் உமை பிரியாத .. மணிமார்பா;

வெள்ளம் அடை சடைமீது .. பிறையானே;

.. மெய்யதனில் ஒளிநீறு .. புனைவோனே;

நள்ளுமவர் வினை தீர .. அருள்வோனே;

.. நள்ளிருளில் நடம்-ஆடு .. பெருமானே.


தெள்ளு-புனல் சொரி மாணி உயிர் வாழச் செய்ய-கழல் நமன்மீது பட வீசீ - தெளிந்த நீரைச் சொரிந்து வழிபாடு செய்த மார்க்கண்டேயர் இறவாமல் இருப்பதற்காகச் சிவந்த திருவடியைக் காலன்மேல் படுமாறு (& காலன்மேல் அவன் அழியும்படி) வீசியவனே; (தெள்ளுதல் - தெளிவாதல்); (செய்ய - சிவந்த); (படுதல் - 1. ஒன்றன்மீது ஒன்று உறுதல்; 2. அழிதல்; சாதல்); (வீசீ - வீசியவனே என்ற விளி); (பெரியபுராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.257 - "தெள்ளுபுனல் நிறைகுடங்கள் தீப தூபம்");

புள்ளி திகழ் பட-நாக அரைநாணாய் - புள்ளிகள் இருக்கும் படத்தை உடைய நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனே;

புல்லும் உமை பிரியாத மணிமார்பா - தழுவும் உமை என்றும் பிரியாமல் இருக்கும் அழகிய பவளம் போன்ற மார்பினை உடையவனே; (புல்லுதல் - தழுவுதல்); (மணி - அழகு; பவளம்);

வெள்ளம் அடை சடைமீது பிறையானே - கங்கையை அடைத்த சடையின்மேல் சந்திரனை அணிந்தவனே; (வெள்ளம் - நீர்ப்பெருக்கு; நீர்; - இங்கே, கங்கை);

மெய்யதனில் ஒளிநீறு புனைவோனே - திருமேனியில் ஒளிவீசும் திருநீற்றைப் பூசியவனே;

நள்ளுமவர் வினை தீர அருள்வோனே - விரும்புகின்றவர்களது (= பக்தர்களது) வினையெல்லாம் தீரும்படி அருள்பவனே; (நள்தல் - நட்டல் - விரும்புதல்; அடைதல்); (திருவாசகம் - திருச்சதகம் - 8.5.2 - "நள்ளேன் நினது அடியாரொடல்லால்");

நள்ளிருளில் நடம் ஆடு பெருமானே - நள்ளிரவில் கூத்தாடும் பெருமானே; (நள் - நடு);

* போற்றி என்பது குறிப்பு;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment