Tuesday, February 17, 2026

N.053 - சம்பந்தர் & திருநாவுக்கரசர் துதி - காழியில் வந்த

2019-03-10

N.053 - சம்பந்தர் & திருநாவுக்கரசர் துதி - காழியில் வந்த

** அப்படிக் காசில் செப்படி வித்தை **

----------------

(ஆசிரியப்பா / அகவல்)


காழியில் வந்த கவுணியர் திலகமும்

ஆழியில் கல்லே அரும்புணை ஆகிக்

கரைசேர் நாவினுக் கரையரும் கங்கைத்

திரையணி முடியன் குரைகழல் போற்றி

அழகிய வீழி மிழலை அதனில் 5

பழவடி யார்கள் பலர்புடை சூழத்

தனித்தனி மடங்களில் இனிதுறைந் திருந்தார்;

சிலநாள் சென்றபின் சலமது பொன்னியில்

இலையென் றாகி உலகினில் மாரியின்

நிலையும் அதுவாய் நிலம்புல மெல்லாம் 10

பயிர்கள் குன்றி உயிர்கள் வாடி

அஞ்சிடு மாறு பஞ்சமும் உற்றதே;

ஒருதினம் அன்பர் இருவர் கனவிலும்

இருள்மலி கண்டன் அருளினன், "உங்கள்

அடியவர்க் காகப் படிக்கா சளிப்போம்; 15

படிமிசைப் பஞ்சம் முடிவடை யும்வரை";

அந்நாள் தொடங்கிப் பொன்னா ணயத்தைக்

கிழக்கிலும் மேற்கிலும் பீடத்தில் வழங்கினான்;

பறையறி வித்துப் பிறையணி பரமன்

தொண்டருக் கெல்லாம் உண்டி இட்டனர்; 20

சண்பையர் மன்னர் தமது மடத்தில்

நண்பகல் தாண்டி உண்பது கண்டு

காரணம் வினவ, "நாரணன் அறியாத்

தீவணன் காசை ஆவண வீதியில்

வாசி படுமெனப் பேசி னார்கள்; 25

அப்பர் காசை அப்படி எவரும்

செப்பிலர்" என்றார் அப்பரி சனங்கள்;

கைத்தொண்டின் பெருமை எத்துணை என்றே

முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார்;

மற்றைநாள் கோயிலிற் கற்றைச் சடையனை 30

நற்றமிழ் கொண்டு குற்றமில் காசை

நல்கிட வேண்ட, வெல்விடை ஊர்தி

மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான்;

படிக்கா சதனால் அடியார் பசிதீர்

தாண்டக வேந்தர் தாள்மலர் வாழி 35

காழியர் கோன்கழல் வாழி வாழியே.


சில சொற்பொருள்:

அப்படிக் காசில் செப்படி வித்தை - அப்-படிக்காசில் செப்படிவித்தை; (படி - தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்; படிக்காசு - படியாகப் பெறும் காசு);

காழியில் வந்த கவுணியர் திலகமும் - சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தரும்;

ஆழியில் கல்லே அரும்-புணை ஆகிக் கரைசேர் நாவினுக்கு அரையரும் - கடலில் கல்லே அரிய தெப்பம் ஆகிக் கரையை அடைந்த திருநாவுக்கரசரும்; (ஆழி - கடல்); (புணை - தெப்பம்); (அரையர் - அரசர்);

கங்கைத்-திரை அணி முடியன் குரைகழல் போற்றி - கங்கையின் அலையை முடியில் அணிந்த பெருமானது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டு; (திரை - அலை);

சலம் அது பொன்னியில் இலை என்று ஆகி - காவிரியில் நீர் வறண்டு; (சலம் - ஜலம்); (இலை - இல்லை);

உலகினில் மாரியின் நிலையும் அதுவாய் - உலகில் மழையும் இல்லை ஆகி; (மாரி - மழை);

இருள்மலி கண்டன் - நீலகண்டன்;

படிமிசைப் பஞ்சம் முடிவடையும்வரை - உலகில் பஞ்சகாலம் முடியும்வரை; (படி - பூமி);

சண்பையர் மன்னர் - சண்பை என்ற பெயரையும் உடைய சீகாழியின் தலைவர் - திருஞான சம்பந்தர்;

நாரணன் அறியாத் தீவணன் காசை ஆவண-வீதியில் வாசி படும் எனப் பேசினார்கள் - திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினனான சிவபெருமான் உங்களுக்கு அளித்த காசைக் கடைவீதியில் உள்ளவர்கள் தரம் நிர்ணயித்து வட்டம் (discount) கழிக்கவேண்டும் என்று சொன்னார்கள்;

பரிசனங்கள் - ஏவல்செய்வோர்;

முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார் - முத்தமிழ் வல்லவரான திருஞான சம்பந்தர் மனத்தில் எண்ணினார்;

மற்றைநாள் - அடுத்தநாள்;

நற்றமிழ்-கொண்டு குற்றம் இல் காசை நல்கிட வேண்ட - நல்ல தமிழ்ப்பாமாலையால் குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள; (தாம் பாடிய நல்ல தமிழ்ப்பாமாலைகளை ஏற்றுக்கொண்டு குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே");

வெல்விடை-ஊர்தி மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் அப்படியே இனிது அருள்புரிந்தான்;

தாண்டக-வேந்தர் தாள்மலர் வாழி - தாண்டகம் பாடுவதில் வல்லவரான திருநாவுக்கரசரது பாதமலர் வாழ்க; (தாண்டகம் - திருத்தாண்டகம் - அடிகள்தோறும் எட்டுச் சீர்கள் இருக்கும் ஒரு செய்யுள் அமைப்பு); (தாண்டகவேந்தர் - திருநாவுக்கரசரைச் சுட்டும் ஒரு பெயர்); (வாழி - வாழ்க);

காழியர் கோன் கழல் வாழி வாழியே - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரது திருவடி வாழ்க வாழ்க;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment