2019-03-10
N.053 - சம்பந்தர் & திருநாவுக்கரசர் துதி - காழியில் வந்த
** அப்படிக் காசில் செப்படி வித்தை **
----------------
(ஆசிரியப்பா / அகவல்)
காழியில் வந்த கவுணியர் திலகமும்
ஆழியில் கல்லே அரும்புணை ஆகிக்
கரைசேர் நாவினுக் கரையரும் கங்கைத்
திரையணி முடியன் குரைகழல் போற்றி
அழகிய வீழி மிழலை அதனில் 5
பழவடி யார்கள் பலர்புடை சூழத்
தனித்தனி மடங்களில் இனிதுறைந் திருந்தார்;
சிலநாள் சென்றபின் சலமது பொன்னியில்
இலையென் றாகி உலகினில் மாரியின்
நிலையும் அதுவாய் நிலம்புல மெல்லாம் 10
பயிர்கள் குன்றி உயிர்கள் வாடி
அஞ்சிடு மாறு பஞ்சமும் உற்றதே;
ஒருதினம் அன்பர் இருவர் கனவிலும்
இருள்மலி கண்டன் அருளினன், "உங்கள்
அடியவர்க் காகப் படிக்கா சளிப்போம்; 15
படிமிசைப் பஞ்சம் முடிவடை யும்வரை";
அந்நாள் தொடங்கிப் பொன்னா ணயத்தைக்
கிழக்கிலும் மேற்கிலும் பீடத்தில் வழங்கினான்;
பறையறி வித்துப் பிறையணி பரமன்
தொண்டருக் கெல்லாம் உண்டி இட்டனர்; 20
சண்பையர் மன்னர் தமது மடத்தில்
நண்பகல் தாண்டி உண்பது கண்டு
காரணம் வினவ, "நாரணன் அறியாத்
தீவணன் காசை ஆவண வீதியில்
வாசி படுமெனப் பேசி னார்கள்; 25
அப்பர் காசை அப்படி எவரும்
செப்பிலர்" என்றார் அப்பரி சனங்கள்;
கைத்தொண்டின் பெருமை எத்துணை என்றே
முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார்;
மற்றைநாள் கோயிலிற் கற்றைச் சடையனை 30
நற்றமிழ் கொண்டு குற்றமில் காசை
நல்கிட வேண்ட, வெல்விடை ஊர்தி
மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான்;
படிக்கா சதனால் அடியார் பசிதீர்
தாண்டக வேந்தர் தாள்மலர் வாழி 35
காழியர் கோன்கழல் வாழி வாழியே.
சில சொற்பொருள்:
அப்படிக் காசில் செப்படி வித்தை - அப்-படிக்காசில் செப்படிவித்தை; (படி - தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்; படிக்காசு - படியாகப் பெறும் காசு);
காழியில் வந்த கவுணியர் திலகமும் - சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தரும்;
ஆழியில் கல்லே அரும்-புணை ஆகிக் கரைசேர் நாவினுக்கு அரையரும் - கடலில் கல்லே அரிய தெப்பம் ஆகிக் கரையை அடைந்த திருநாவுக்கரசரும்; (ஆழி - கடல்); (புணை - தெப்பம்); (அரையர் - அரசர்);
கங்கைத்-திரை அணி முடியன் குரைகழல் போற்றி - கங்கையின் அலையை முடியில் அணிந்த பெருமானது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டு; (திரை - அலை);
சலம் அது பொன்னியில் இலை என்று ஆகி - காவிரியில் நீர் வறண்டு; (சலம் - ஜலம்); (இலை - இல்லை);
உலகினில் மாரியின் நிலையும் அதுவாய் - உலகில் மழையும் இல்லை ஆகி; (மாரி - மழை);
இருள்மலி கண்டன் - நீலகண்டன்;
படிமிசைப் பஞ்சம் முடிவடையும்வரை - உலகில் பஞ்சகாலம் முடியும்வரை; (படி - பூமி);
சண்பையர் மன்னர் - சண்பை என்ற பெயரையும் உடைய சீகாழியின் தலைவர் - திருஞான சம்பந்தர்;
நாரணன் அறியாத் தீவணன் காசை ஆவண-வீதியில் வாசி படும் எனப் பேசினார்கள் - திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினனான சிவபெருமான் உங்களுக்கு அளித்த காசைக் கடைவீதியில் உள்ளவர்கள் தரம் நிர்ணயித்து வட்டம் (discount) கழிக்கவேண்டும் என்று சொன்னார்கள்;
பரிசனங்கள் - ஏவல்செய்வோர்;
முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார் - முத்தமிழ் வல்லவரான திருஞான சம்பந்தர் மனத்தில் எண்ணினார்;
மற்றைநாள் - அடுத்தநாள்;
நற்றமிழ்-கொண்டு குற்றம் இல் காசை நல்கிட வேண்ட - நல்ல தமிழ்ப்பாமாலையால் குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள; (தாம் பாடிய நல்ல தமிழ்ப்பாமாலைகளை ஏற்றுக்கொண்டு குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே");
வெல்விடை-ஊர்தி மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் அப்படியே இனிது அருள்புரிந்தான்;
தாண்டக-வேந்தர் தாள்மலர் வாழி - தாண்டகம் பாடுவதில் வல்லவரான திருநாவுக்கரசரது பாதமலர் வாழ்க; (தாண்டகம் - திருத்தாண்டகம் - அடிகள்தோறும் எட்டுச் சீர்கள் இருக்கும் ஒரு செய்யுள் அமைப்பு); (தாண்டகவேந்தர் - திருநாவுக்கரசரைச் சுட்டும் ஒரு பெயர்); (வாழி - வாழ்க);
காழியர் கோன் கழல் வாழி வாழியே - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரது திருவடி வாழ்க வாழ்க;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment