2015-01-25
P.271 - கன்றாப்பூர் (கோயில் கண்ணாப்பூர்)
-----------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
ஊண்பாறு வெண்டலையில் உகந்தானை, ஆகத்தில்
ஆண்பாதி பெண்பாதி ஆயவனை, அரவத்தைப்
பூண்போல அணிந்தானைப், பூவிட்டுப் புகழ்ந்தேத்திக்
காண்பார்தம் நெஞ்சகலான் கன்றாப்பூர் நடுதறியே.
ஊண் பாறு- வெண்-தலையில் உகந்தானை - உடைந்த வெள்ளிய மண்டையோட்டில் உணவு விரும்பியவனை; (ஊண் - உணவு); (பாறுதல் - அழிதல்); (சுந்தரர் தேவாரம் - 7.36.5 - "பாறு வெண்டலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர்");
ஆகத்தில் ஆண் பாதி பெண் பாதி ஆயவனை - திருமேனியில் ஒரு பாதி ஆணும் ஒரு பாதி பெண்ணும் ஆனவனை; (ஆகம் - உடல்);
அரவத்தைப் பூண் போல அணிந்தானைப் - நாகாபரணனை; (அரவம் - பாம்பு); (பூண் - அணி; ஆபரணம்);
பூ இட்டுப் புகழ்ந்து ஏத்திக் காண்பார்தம் நெஞ்சு அகலான் - மலர் தூவிப் புகழ்ந்து போற்றிக் கண்டு தொழுவார்களின் நெஞ்சத்தில் நீங்காமல் உறைகின்றவன்; (காண்தல் - தரிசித்தல்; வணங்குதல்);
கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்; (* நடுதறி - கன்றாப்பூரில் ஈசன் திருநாமம் "நடுதறியப்பன்"); (அப்பர் தேவாரம் - 6.61.1 - "முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்திக் காதன்மையால் தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே");
2)
மாதவஞ்செய் பகீரதற்கு வரமருளி வானதியைப்
பூதலத்தில் ஓடவிடு பொற்சடையன், இருநான்கு
போதகத்துக் கொண்டுதினம் பொன்னடியைப் போற்றிசெய்து
காதலிப்பார் நெஞ்சகலான், கன்றாப்பூர் நடுதறியே.
மாதவம் செய் பகீரதற்கு வரம் அருளி, வானதியைப் பூதலத்தில் ஓடவிடு பொற்சடையன் - பெருந்தவம் செய்த பகீரதனுக்கு வரம் தந்து, கங்கையை மண்ணுலகில் ஓடவிட்ட பொன் போன்ற சடையினன்; (வானதி - கங்கை);
இருநான்கு போது அகத்துக் கொண்டு தினம் பொன்னடியைப் போற்றிசெய்து காதலிப்பார் நெஞ்சு அகலான் - மலர்கள் எட்டை மனத்தில் கொண்டு (= அகமலர்கள் எட்டால்) தினமும் பொற்பாதத்தைப் போற்றி வணங்கும் அன்பர்கள் நெஞ்சில் நீங்காமல் குடிகொள்பவன்; (போது - பூ); (அப்பர் தேவாரம் - 6.34.9 - "நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்" - உள்ளத்தில் இருந்து ஞானபூசைக்கு உரியவாகும் மலர்கள் எட்டாவன "கொல்லாமை, பொறியடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, வாய்மை, தவம், அன்பு" என்பன);
கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;
3)
பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் தொழஉண்டு
கருகுமிட றுடையண்ணல் கல்லாலின் புடையமர்ந்தான்
உருகுமனத் தினராகி உமைபங்கன் கழலிணையே
கருதடியார் நெஞ்சிலுறை கன்றாப்பூர் நடுதறியே.
பெருகு-விடம் கண்டு அஞ்சிப் பெருந்தேவர் தொழ, உண்டு, கருகு-மிடறுடை அண்ணல் - பெருகிய ஆலகாலத்தைக் கண்டு பயந்த பெரிய தேவரெல்லாம் இறைஞ்ச, (அவர்களுக்கு இரங்கி அதனை) உண்டு, கறுத்த கண்டத்தை உடைய தலைவன்; (கருகுதல் - நிறங்கறுத்தல்; இருளுதல்); (அப்பர் தேவாரம் - 5.29.1 - "கருகு கண்டத்தன்");
கல்லாலின் புடை அமர்ந்தான் - கல்லாலமரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;
உருகு-மனத்தினர் ஆகி உமைபங்கன் கழலிணையே கருது-அடியார் நெஞ்சில் உறை - உருகும் மனம் உடையவர்கள் ஆகி உமைபங்கன் திருவடிகள் இரண்டையே எண்ணும் பக்தர்கள் நெஞ்சில் உறைகின்ற; (கருதுதல் - விரும்புதல்; சிந்தித்தல்);
கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;
4)
தண்ணதிபாய் சடைமீது தளிர்மதியம் தாங்குமரன்
ஒண்ணுதலாள் மாதுமையாள் ஒருபாகம் மகிழ்பெம்மான்
கண்ணுடைய கரும்பொன்றைக் கையேந்து மன்மதனைக்
கண்ணுதலால் பொடிசெய்த கன்றாப்பூர் நடுதறியே.
தண்-நதி பாய் சடைமீது தளிர்-மதியம் தாங்கும் அரன் - குளிர்ந்த கங்கை பாயும் சடைமேல் இளந்திங்களைச் சூடிய ஹரன்;
ஒண்-நுதலாள் மாதுமையாள் ஒரு பாகம் மகிழ்-பெம்மான் - ஒளிபொருந்திய நெற்றியை உடைய மாதுமையை ஒரு பாகமாக மகிழ்ந்த பெருமான்; (நுதல் - நெற்றி); (* மாதுமை - திருக்கன்றாப்பூர் இறைவி திருநாமம்);
கண்ணுடைய கரும்பு-ஒன்றைக் கை-ஏந்து மன்மதனைக் கண்ணுதலால் பொடிசெய்த - கணுக்கள் இருக்கும் கரும்பை வில்லாகக் கையில் ஏந்திய காமனை நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கிய; ((கண் - மரக்கணு);
கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;
5)
தினமலர்கள் பலதூவிச் சேவடியை வழுத்திமிக
நினையடியார் நெஞ்சத்தில் நீங்காது நின்றபரன்
சினவிடையான் திருநாமம் செபஞ்செய்ம்மார்க் கண்டர்க்காக்
கனைகழலால் நமனையுதை கன்றாப்பூர் நடுதறியே.
தினமலர்கள் பல தூவிச் சேவடியை வழுத்தி மிக நினை-அடியார் நெஞ்சத்தில் நீங்காது நின்ற பரன் - தினமும் புதிய மலர்கள் பல தூவிச் சிவந்த திருவடியை வணங்கி மிகவும் எண்ணுகின்ற பக்தர்கள் நெஞ்சில் நீங்காமல் உறையும் பரமன்; (தினமலர்கள் - 1. தினம் மலர்கள் - தினந்தோறும் பூக்கள்; 2. தினமலர் = நாண்மலர் (நாள்மலர்) = "அன்று பூத்த பூ" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
சின-விடையான் - கோபம் உடைய எருதை வாகனமாக உடையவன்;
திருநாமம் செபஞ்செய்ம் மார்க்கண்டர்க்காக் கனை-கழலால் நமனை உதை - திருவைந்தெழுத்தை ஜபம் செய்த மார்க்கண்டேயருக்காகக் காலனை ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியால் உதைத்த; (மார்க்கண்டர்க்கா - மார்க்கண்டேயருக்காக); (நமன் - இயமன்);
கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;
6)
சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்தவன்பின் மாலுக்கு
வலந்திகழ அதனையருள் மாதேவன் வார்கழலில்
நலந்திகழும் மலர்தூவி நாளு(ம்)நினை வார்நெஞ்சில்
கலந்துறையும் கண்ணுதலான் கன்றாப்பூர் நடுதறியே.
சலந்தரனைச் சக்கரத்தால் தடிந்தவன் - ஜலந்தராசுரனைச் சக்கரத்தால் அழித்தவன்; (தடிதல் - வெட்டுதல்);
பின் மாலுக்கு வலம் திகழ அதனை அருள் மாதேவன் - பிறகு திருமாலுக்கு வெற்றி திகழும்படி அந்தச் சக்கரத்தை அருளிய மகாதேவன்;
வார்கழலில் நலம் திகழும் மலர் தூவி நாளு(ம்) நினைவார் நெஞ்சில் கலந்து உறையும் கண்ணுதலான் - நீண்ட கழல் அணிந்த திருவடியில் நல்ல பூக்களைத் தூவித் தினமும் தியானிக்கும் அன்பர்கள் நெஞ்சில் கலந்து உறைகின்ற நெற்றிக்கண்ணன்;
கன்றாப்பூர் நடுதறியே - திருக்கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் நடுதறியப்பன்;
7)
பெருங்களிற்றின் உரிபோர்த்த பித்தனொரு வஞ்சியன
மருங்குலுடை மலைமகளை வாமத்தில் மகிழ்பெருமான்
அருங்கலமா அஞ்செழுத்தை அணிநாவர்க் கரணாவான்
கருங்குயிலார் பொழில்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.
பெரும்-களிற்றின் உரி போர்த்த பித்தன் - பெரிய யானையின் தோலைப் போர்த்த பித்தன்; (உரி - தோல்); (பித்தன் - பேரருளாளன்);
ஒரு வஞ்சி அன மருங்குல் உடை மலைமகளை வாமத்தில் மகிழ் பெருமான் - ஒரு கொடி போன்ற இடையை உடைய உமாதேவியை இடப்பாகத்தில் விரும்பிய பெருமான்; (வஞ்சி - வஞ்சிக்கொடி); (அன - அன்ன - போன்ற); (மருங்குல் - இடை); (வாமம் - இடப்பக்கம்);
அருங்கலமா அஞ்செழுத்தை அணி நாவர்க்கு அரண் ஆவான் - தம் நாவில் அணிகலனாகத் திருவைந்தெழுத்தை அணிந்தவர்களுக்குப் பாதுகாவல் ஆவான்; (அருங்கலம் - அணிகலன்);
கருங்குயில் ஆர் பொழில் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - கரிய குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (ஆர்த்தல் - ஒலித்தல்);
8)
நீர்புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால்
ஓர்விரலை வெற்பின்மேல் ஊன்றிநெரித் திசைகேட்டான்
சீர்பரவும் யாவர்க்கும் திருவருள்செய் நம்பெருமான்
கார்வளம்சேர் வயல்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.
நீர் புடைசூழ் இலங்கைக்கோன் நீள்வரையை இடந்தக்கால் - நீரால் சூழப்பெற்ற இலங்கைக்கு மன்னனான இராவணன் நீண்ட மலையான கயிலையைப் பெயர்த்தபொழுது; (இடந்தக்கால் - பெயர்த்தபோழுது);
ஓர் விரலை வெற்பின்மேல் ஊன்றி நெரித்து இசை கேட்டான் - திருப்பாதவிரல் ஒன்றை அந்த மலைமேல் ஊன்றி அவனை நசுக்கிப், பின் அவன் பாடிய இசையைக் கேட்டருளியவன்; (வெற்பு - மலை); ("கால்" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்து, "இடந்தக்கால், கால் ஓர் விரலை" என்று கொண்டும் பொருள்கொள்ளலாம்);
சீர் பரவும் யாவர்க்கும் திருவருள்செய் நம்பெருமான் - போற்றித் துதிக்கும் எவருக்கும் அருள்புரியும் நம்பெருமான்; (யாவர்க்கும் - எவருக்கும்; எல்லார்க்கும்);
கார்வளம் சேர் வயல் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - நீர்வளம் மிகுந்த வயல் சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (கார் - மேகம்; மழை; நீர்);
9)
புயல்வணனும் புண்டரிகப் போதினனும் அடிமுடியை
முயல்வணமோர் முடிவில்லா முழுத்தழலாய் ஓங்கியவன்
இயல்வணமேத்(து) அடியார்கட்(கு) எளியவனாய் நின்றருள்வான்
கயலுகளும் வயல்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.
புயல்வணனும் புண்டரிகப் போதினனும் அடிமுடியை முயல்வணம் ஓர் முடிவில்லா முழுத்-தழலாய் ஓங்கியவன் - முகில்வண்ணம் உடைய திருமாலும் தாமரைப்பூவில் இருக்கும் பிரமனும் அடிமுடியைத் தேடும்படி ஓர் எல்லையற்ற ஜோதிப்பிழம்பாகி ஓங்கியவன்; (புயல் - மேகம்); (வணன் - வண்ணன்); (புண்டரிகம் - தாமரை); (போது - மலர்);
இயல்வணம் ஏத்து-அடியார்கட்கு எளியவனாய் நின்று அருள்வான் - தங்களால் இயன்ற அளவில் வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு அவர்களால் எளிதில் அடையப்படுபவன் ஆகி அருள்செய்பவன்;
கயல் உகளும் வயல் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - கயல்மீன்கள் பாயும் வயல் சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (உகள்தல் - தாவுதல்; பாய்தல்);
10)
எந்தவழி நல்லவழி என்றறியார் இருவினைதீர்
வெந்தபொடி பூசாத மிண்டரவர் உரைகொள்ளேல்
வந்தனைசெய் தடைவார்க்கு மட்டின்றி வரமருள்வான்
கந்த(ம்)மலி பொழில்சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே.
எந்த வழி நல்ல வழி என்று அறியார் - எந்த நெறி நன்னெறி என்று அறியாதவர்கள்;
இருவினை தீர் வெந்த பொடி பூசாத மிண்டர் - இருவினையைத் தீர்க்கும் சுட்ட திருநீற்றைப் பூசாத கல்நெஞ்சர்கள்; (மிண்டன் - திண்ணியோன்; கல்நெஞ்சன்);
அவர் உரை கொள்ளேல் - அவர்களது பேச்சைப் பொருட்படுத்தவேண்டா;
வந்தனைசெய்து அடைவார்க்கு மட்டு இன்றி வரம் அருள்வான் - வழிபாடு செய்து சரண்புகுந்தவர்களுக்கு அளவின்றி வரங்கள் அருள்பவன்; (அடைதல் - சரண்புகுதல்); (மட்டு - அளவு);
கந்த(ம்)மலி பொழில் சூழ்ந்த கன்றாப்பூர் நடுதறியே - மணம் மிகுந்த சோலை சூழ்ந்த கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (கந்தம் - வாசனை);
11)
அளிமண்டு நெஞ்சினராய் அலர்தூவி அடிதொழுவார்க்(கு)
எளிவந்த எம்பெருமான் இருஞ்சடைமேல் இளமதியம்
மிளிர்கொன்றை அணிந்தபரன் விரிபொழிலில் மதுவுண்டு
களிவண்டு பண்முரலும் கன்றாப்பூர் நடுதறியே.
அளி மண்டு- நெஞ்சினராய் அலர் தூவி அடிதொழுவார்க்(கு) எளிவந்த எம்பெருமான் - அன்பு மிகுந்த நெஞ்சினர்கள் ஆகி மலர்கள் தூவித் திருவடியை வணங்கும் அன்பர்களால் எளிதில் அடையப்படுவனான எம்பெருமான்; (அளி - அன்பு); (மண்டுதல் - மிகுதல்); (அலர் - பூ); (எளிவருதல் - எளிதில் அடையப்படுதல்);
இருஞ்சடைமேல் இளமதியம் மிளிர்-கொன்றை அணிந்த பரன் - பெரிய சடையில் இளந்திங்களையும் மிளிரும் கொன்றைமலரையும் சூடிய பரமன்; (இருஞ்சடை - பெரிய சடை);
விரி-பொழிலில் மது உண்டு களி-வண்டு பண் முரலும் கன்றாப்பூர் நடுதறியே - விரிந்த சோலையில் தேனை உண்டு மகிழும் வண்டுகள் இனிய இசையை ஒலிக்கின்ற கன்றாப்பூரில் உறையும் நடுதறியப்பன்; (களித்தல் - மகிழ்தல்); (முரல்தல் - ஒலித்தல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment