04.60 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - மத்தமும் திங்களும்
2014-04-28
முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - தானன தானன தானா - அரையடி அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - மண்ணுமோர் பாகம் உடையார்);
(அப்பர் தேவாரம் - 4.4.1 - பாடிளம் பூதத்தி னானும்)
* யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க.
1)
மத்தமும் திங்களும் சூடி .. மழவெள் விடைமிசை ஏறி
கத்தும் கடலுமிழ் நஞ்சைக் .. கரந்தருள் செய்த மிடற்றன்
புத்தம் புதிய மலரால் .. பொன்னடி போற்றிசெய் கின்ற
பத்தர் பவமறுத் தாளும் .. பழமலை நின்ற பரனே.
மத்தமும் திங்களும் சூடி - ஊமத்தமலரையும் திங்களையும் சூடியவன்;
மழவெள் விடைமிசை ஏறி - இளைய வெள்ளேற்றை வாகனமாக உடையவன்;
கத்தும் கடல் உமிழ் நஞ்சைக் கரந்தருள் செய்த மிடற்றன் - ஒலிக்கும் பாற்கடல் கக்கிய ஆலகாலத்தை மறைத்தருளிய கண்டம் உடையவன்; (கரத்தல் - ஒளித்தல்); (மிடறு - கண்டம்);
புத்தம் புதிய மலரால் பொன்னடி போற்றிசெய்கின்ற பத்தர் பவம் அறுத்து ஆளும் - புதுமலர்கள் தூவிப் பொற்பாதத்தை வழிபடும் பக்தர்களது பிறவிப்பிணியைத் தீர்த்து ஆள்கின்ற (/ஆள்வான்); (பவம் - பிறவி; துன்பம்); (ஆளும் = ஆள்கின்ற; ஆள்வான் - செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று);
பழமலை நின்ற பரனே - திருமுதுகுன்றத்தில் எழுந்தருளிய பரமன்; (பழமலை - முதுகுன்றம்);
2)
மேவலர் முப்புரம் வேவ .. மேருவில் ஏந்திய வீரன்
நாவல ஊரர் தமிழை .. நச்சியம் பொன்தரு நம்பன்
காவல னேயருள் என்று .. கடிமலர் தூவும் அடியார்
பாவம் அறுத்தும்பர் நல்கும் .. பழமலை நின்ற பரனே.
* 2-ஆம் அடி சிவபெருமான் திருமுதுகுன்றத்தில் சுந்தரருக்குப் பன்னீராயிரம் பொன் தந்ததைச் சுட்டியது. (சுந்தரர் தேவாரம் - 7.25.1 - "பொன்செய்த மேனியினீர் " என்று தொடங்கும் பதிகத்தின் வரலாற்றினைக் காண்க).
மேவலர் - பகைவர்;
நாவல ஊரர் - ("நாவல" என்றதில் வந்த அகரம் சாரியை) - நாவலூராளி - சுந்தரர்;
நச்சி - விரும்பி; (நச்சுதல் - விரும்புதல்);
அம்-பொன் தரு - சிறந்த பொன்னைத் தரும்;
நம்பன் - சிவன்;
கடிமலர் தூவும் அடியார் பாவம் அறுத்து உம்பர் நல்கும் - வாசமலர்களைத் தூவி வழிபடும் பக்தர்களது பாவங்களைத் தீர்த்து வானுலகம் அளிப்பான்; (உம்பர் - வானுலகம்);
3)
சடையினில் தண்புனல் தாங்கி .. சாம்பலை மெய்யினில் பூசி
நடையில் பிடியை நிகர்த்த .. நாரியைப் பாகம் நயந்தான்
விடையின் மிசைவரும் ஐயன் .. வேட்டுவக் கோலத்தில் சென்று
படையினைப் பார்த்தற் கருளும் .. பழமலை நின்ற பரனே.
தாங்கி, பூசி - தாங்கியவன், பூசியவன்;
பிடி - பெண்யானை;
வேட்டுவக் கோலத்திற் சென்று - வேடன் வடிவத்தில் போய்;
படை - ஆயுதம் - இங்கே பாசுபதாஸ்திரம்;
பார்த்தற்கு - பார்த்தன்+கு = அருச்சுனனுக்கு;
4)
கானையம் பெய்ம்மதன் ஆகம் .. கண்ணுத லாற்பொடி செய்தான்
மானை ஒருகரம் ஏந்தி .. மழுவொடு சூலமும் தாங்கி
ஆனை உரிவையைப் போர்த்த .. அழகன் அரிவையொர் பங்கன்
பானெய் தயிருகந் தாடி .. பழமலை நின்ற பரனே.
பதம் பிரித்து:
கான்-ஐ-அம்பு எய்ம்-மதன் ஆகம் கண்ணுதலால் பொடி-செய்தான்;
மானை ஒரு கரம் ஏந்தி; மழுவொடு சூலமும் தாங்கி;
ஆனை-உரிவையைப் போர்த்த அழகன்; அரிவை ஒர் பங்கன்;
பால் நெய் தயிர் உகந்து ஆடி; பழமலை நின்ற பரனே.
கான்-ஐ-அம்பு எய்ம்-மதன் ஆகம் கண்ணுதலால் பொடி செய்தான் - வாசனையுடைய ஐந்து கணைகளை ஏவும் காமன் உடலை நெற்றிக்கண்ணால் நோக்கிச் சாம்பலாக்கியவன்; (கான் - வாசனை); (எய்தல் - செலுத்துதல்; எய்+மதன் - "எய்ம்மதன்" என்று "ம்" மிக்குப் புணரும்);
மானை ஒரு கரம் ஏந்தி - மானை ஒரு கையில் ஏந்தியவன்;
மழுவொடு சூலமும் தாங்கி - மழுவையும் சூலத்தையும் ஏந்தியவன்;
ஆனை-உரிவையைப் போர்த்த அழகன் - யானைத்தோலைப் போர்த்தவன்; (உரிவை - தோல்);
அரிவை ஒர் பங்கன் - உமைபங்கன்; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);
பால் நெய் தயிர் உகந்து ஆடி - பால் நெய் தயிர் அபிஷேகப் பிரியன்;
5)
எண்டிசை எங்கும் பரவி .. எரித்த கடல்விடம் தன்னை
உண்டிருள் கண்டத் தொருவன் .. ஒண்மழு வாளினன் தாளை
மண்டிய அன்பொடு வாழ்த்து .. மார்க்கண்டர் இன்னுயிர் காத்துப்
பண்டடற் கூற்றை உதைத்தான் .. பழமலை நின்ற பரனே.
எண்டிசை - எண் திசை;
இருள் கண்டத்து ஒருவன் - கறுத்த கண்டத்தை உடைய ஒப்பற்றவன்;
ஒண்மழு வாளினன் தாளை - ஒளியுடைய மழுவை ஏந்தியவனது பாதத்தை;
மண்டிய அன்பொடு வாழ்த்து மார்க்கண்டர் இன்-உயிர் காத்து - பெருகிய அன்பினால் வாழ்த்திய மார்க்கண்டேயரது இனிய உயிரைக் காத்து அருளி;
பண்டு அடற்கூற்றை உதைத்தான் - முன்பு வலிமை பொருந்திய கூற்றுவனை உதைத்தவன்;
6)
செந்தழல் போல்திரு மேனிச் .. செல்வனைச் சிந்தையில் வைத்து
வெந்தவெண் ணீற்றினைப் பூசி .. வெறிகமழ் மாலைகள் பாடி
கந்த மலர்களைத் தூவிக் .. கழலிணை கைதொழு வார்தம்
பந்தம் அறுத்தருள் செய்யும் .. பழமலை நின்ற பரனே.
வெந்த வெண்ணீற்றினைப் பூசி - நன்றாக வெந்த திருவெண்ணீற்றை அணிந்து; (சம்பந்தர் தேவாரம் - 1.107.1 - "வெந்தவெண் ணீறணிந்து");
வெறி கமழ் மாலைகள் பாடி - மணம் கமழும் (சொல்மலர்களால் ஆன) பாமாலைகளைப் பாடி; (வெறி - வாசனை);
கந்த மலர் - வாசமலர்;
7)
ஆரிடர் தீர்ந்திட வேண்டி .. அனுதினம் தாள்தொழு வார்கள்
கோரிடும் யாவையும் நல்கும் .. கொள்கையன் வெண்டலை ஏந்தி
ஊரிடும் உண்பலிக் காக .. உழலும் ஒருவன் இருளில்
பாரிடம் சூழ நடிக்கும் .. பழமலை நின்ற பரனே.
ஆர் இடர் - அரும் துன்பம்;
யாவையும் - யாவும் - எல்லாம்;
கொள்கை - இயல்பு; (சம்பந்தர் தேவாரம் - 3.81.6 - "அடிபணிந்தவர்கள் மேலைக் குற்றமது ஒழித்தருளு கொள்கையினன்");
வெண்டலை - வெண்-தலை - பிரமன் மண்டையோடு;
ஏந்தி - கையில் ஏந்தியவன்; கையில் ஏந்தியபடி;
ஊர் இடும் உண்பலிக்காக உழலும் ஒருவன் - ஊரார் இடுகின்ற பிச்சைக்காகத் திரிகின்ற ஒப்பற்றவன்; (உண்பலி - பிச்சை); (ஒருவன் - ஒப்பற்றவன்);
இருளில் பாரிடம் சூழ நடிக்கும் - நள்ளிருளில் பூதங்கள் சூழ ஆடுபவன்; (பாரிடம் - பூதம்);
8)
மாலத னால்மலை பேர்த்த .. வல்லரக் கன்தனை அன்று
காலதன் ஓர்விரல் இட்டுக் .. கன்றிட வைத்திசை கேட்டான்
சேலன கண்ணி மணாளன் .. செய்யவன் ஒண்மழு வாளன்
பாலன நீறணி மார்பன் .. பழமலை நின்ற பரனே.
மால் - அறியாமை; மயக்கம்;
கன்றுதல் - வருந்துதல்; நோதல்; வாடுதல்;
சேல் அன கண்ணி மணாளன் - சேல்மீன் போன்ற கண்ணுடைய உமைக்குக் கணவன்;
செய்யவன் - செம்மேனியன்; (செய் - சிவப்பு);
ஒண் மழுவாளன் - ஒளிவீசும் மழுவை ஏந்தியவன்;
பால் அன நீறு அணி மார்பன் - பால் போன்ற திருநீற்றை அணியும் மார்பை உடையவன்;
9)
முன்னயன் மாலிவர் நேட .. முடிவில் சுடருருக் கொண்டான்
வன்னியும் மத்தமும் கீற்று .. மதியும் அரவும் திகழும்
சென்னியன் தோடொர் செவியன் .. திருப்புகழ் தன்னைத் தினமும்
பன்னிடும் அன்பர் அகத்தன் .. பழமலை நின்ற பரனே.
அயன் மால் இவர் நேட முடிவு இல் சுடர் உருக் கொண்டான் - பிரமனும் திருமாலும் தேடும்படி எல்லையில்லாத ஜோதிவடிவானவன்; ( நேடுதல் - தேடுதல்);
வன்னி - வன்னி இலை;
மத்தம் - ஊமத்த மலர்;
தோடு ஒர் செவியன் - ஒரு காதில் தோடு அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;
திருப்புகழ் தன்னை - ஈசனது புகழை;
பன்னுதல் - பாடுதல்;
10)
வேம்பை இனிய கரும்பு .. விரைந்துவந் துண்ணுமின் என்னும்
தீம்பர்தம் சொல்மதி யேன்மின் .. தினந்தொறும் அஞ்செழுத் தோதி
ஓம்பும் அடியவர்க் கன்பன் .. உறுதுயர் தீர்க்கும் துணைவன்
பாம்பும் மதியும் புனைந்து .. பழமலை நின்ற பரனே.
வேம்பை "இனிய கரும்பு விரைந்துவந்து உண்ணுமின்" என்னும் - வேப்பங்காயை "இனிக்கும் கரும்பு இது; சீக்கிரம் வந்து உண்ணுங்கள்" என்று சொல்கின்ற; (வேம்பு - வேப்பங்காய்); (உண்ணுமின் - உண்ணுங்கள்);
தீம்பர்தம் சொல் மதியேன்மின் - துஷ்டர்களது பேச்சை மதிக்கவேண்டா; (தீம்பர் - துஷ்டர்கள்; கீழோர்); (மதியேன்மின் - நீங்கள் மதிக்க வேண்டா);
தினந்தொறும் அஞ்செழுத்து ஓதி ஓம்பும் அடியவர்க்கு அன்பன் - தினமும் நமச்சிவாய மந்திரத்தை ஓதி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;
உறுதுயர் தீர்க்கும் துணைவன் - அவர்களது துன்பங்களையெல்லாம் தீர்த்து அருளும் துணைவன்;
பாம்பும் மதியும் புனைந்து பழமலை நின்ற பரனே - பாம்பையும் சந்திரனையும் முடிமேல் அணிந்து திருமுதுகுன்றத்தில் நீங்காமல் உறைகின்ற பரமன்;
11)
அணியென வெண்திரு நீறும் .. அக்கும் புனைந்தர னுக்கே
பணிசெயும் பண்புடை யார்தம் .. பண்டை வினைகளைத் தீர்ப்பான்
மணியணி கண்டன் மதியம் .. மணங்கமழ் கூவிளம் கொன்றை
பணிமணி நீரணி சென்னிப் .. பழமலை நின்ற பரனே.
அணி என வெண்-திருநீறும் அக்கும் புனைந்து - வெண்மையான திருநீற்றையும் ருத்திராக்ஷத்தையுமே (ஆபரணம் போல) அணிந்து; (அக்கு - உருத்திராக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 3.49.3 - "அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார்");
அரனுக்கே பணிசெயும் பண்பு உடையார்தம் பண்டை வினைகளைத் தீர்ப்பான் - சிவனுக்குத் தொண்டு செய்யும் பக்தர்களது பழவினையைத் தீர்ப்பவன்;
மணி அணி கண்டன் - நீலகண்டன்;
மதியம், மணம் கமழ் கூவிளம், கொன்றை, பணி, மணி-நீர், அணி சென்னிப் - ஊமத்தமலர், மணம் வீசும் வில்வம், கொன்றைமலர், நாகம், கங்கை இவற்றையெல்லாம் திருமுடியில் அணிந்த; (கூவிளம் - வில்வம்); (பணி - நாகப்பாம்பு); (மணி நீர் - தெளிந்த நீர் - கங்கை);
பழமலை நின்ற பரனே - திருமுதுகுன்றத்தில் நீங்காமல் உறைகின்ற பரமன்;
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:
அறுசீர் விருத்தம் - தானன தானன தானா (= "x x மா") என்ற அரையடி அமைப்பு.
அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.
அரையடியில் சீர்களிடையே வெண்டளை பயிலும்.
அடிகளில் 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளைக் கட்டுப்பாடு இல்லை.
அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீர். (அதாவது, 3-ஆம், 6-ஆம் சீர்கள் மாச்சீர் - தேமா / புளிமா அமைப்பு).
x = மா / விளம் / மாங்காய். (அதாவது: தானன (x) என்ற சீர்கள் தனதன, தான, தனன, என்றெல்லாம் வரலாம். ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்).
தான என்ற சீர் தனன என்றும் வரலாம்.
உதாரணங்கள்:
சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாகம் உடையார் மாலுமோர் பாகம் உடையார்".
அப்பர் தேவாரம் - 4.4.1 - "பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும்".
சுந்தரர் தேவாரம் - 7.73.1 - "கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்". இந்தப் பதிகத்தில் முதல் பத்துப் பாடல்களில் 4-ஆம் அடிகளில் மட்டும் அரையடிகளிடையே "அவர்" என்ற தனிச்சொல்லும் வந்துள்ளது.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment