Thursday, September 3, 2015

02.21 – மயிலாடுதுறை

02.21 – மயிலாடுதுறை



2011-06-24
மயிலாடுதுறை
---------------------
(சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானன தானன தானா'' என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 2.35.5 -
"நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன்" - "நீறார்தரு மேனிய னெற்றியொர் கண்ணன்")



1)
வெம்போர்விடை ஊர்பவன் விண்ணவர் நாதன்
கொம்பேர்மட வாளொரு கூறினன் ஊராம்
அம்போதிடை இன்மது உண்டளி ஆர்க்கும்
வம்பார்பொழில் மாமயி லாடு துறையே.



பதம் பிரித்து:
வெம் போர் விடை ஊர்பவன்; விண்ணவர் நாதன்;
கொம்பு ஏர் மடவாள் ஒரு கூறினன் ஊர் ஆம்;
அம் போது இடை இன் மது உண்டு அளி ஆர்க்கும்
வம்பு ஆர் பொழில் மா மயிலாடுதுறையே.


வெம்மை - கோபம்; பராக்கிரமம்;
('சினவிடை', 'வெங்கண் விடை', 'போர்விடை' என்று திருமுறைப்பாடல்களில் வரக்காணலாம்);
கொம்பு ஏர் - பூங்கொம்பைப் போன்ற;
கூறினன் - கூறாக உடையவன்;
அம் போது இடை - அழகிய மலரில்;
இன் மது - இனிய தேன்;
அளி - வண்டு;
ஆர்த்தல் - ஒலித்தல்;
வம்பு ஆர் பொழில் - மணம் கமழும் சோலை;
மா மயிலாடுதுறை - அழகிய மயிலாடுதுறை;



2)
மஞ்சாவருள் என்றடை வானவர் உய்ய
அஞ்சாதரு நஞ்சினை ஆர்ந்தவன் ஊராம்
செஞ்சேலுகள் செய்புடை சூழ்ந்தழ காரும்
மஞ்சார்பொழில் மாமயி லாடு துறையே.



பதம் பிரித்து:
"மஞ்சா அருள்" என்று அடை வானவர் உய்ய,
அஞ்சாது அரு நஞ்சினை ஆர்ந்தவன் ஊர் ஆம்;
செஞ்சேல் உகள் செய் புடை சூழ்ந்து அழகு ஆரும்,
மஞ்சு ஆர் பொழில் மா மயிலாடுதுறையே.


மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ/போலி; - வீரன்;
ஆர்தல் - உண்ணுதல்;
(அப்பர் தேவாரம் - 6.55.8 - "அமையா ருநஞ்சம் ஆர்ந்தாய் போற்றி" - பொருந்தாத கொடிய விடத்தை உண்டவனே);
செஞ்சேல் உகள் செய் புடை சூழ்ந்து - சிவந்த சேல் மீன்கள் தாவும் (நீரை உடைய) வயல் நாற்புறமும் சூழ்ந்து; (உகளுதல் - தாவுதல்; செய் - வயல்);
மஞ்சு ஆர் பொழில் - வானளாவும் சோலை; (மஞ்சு - மேகம்);



3)
ஊனார்தலை ஒன்றினில் உண்பலி கொள்ளும்
மானார்விழி மாதொரு பங்கினன் ஊராம்
நானாவித வண்டினம் நல்லிசை பாடும்
வானார்பொழில் மாமயி லாடு துறையே.



ஊன் ஆர் தலை - மாமிசம் பொருந்திய தலை - பிரமனின் சிரம்;
பலி - பிச்சை;
மான் ஆர் விழி மாது - மான் போன்ற கண்ணை உடைய பார்வதி;
நானாவித வண்டினம் - பலவகையான வண்டுகள்;



4)
வந்தாரடி வாழ்த்தினும் அஞ்சல ளித்துச்
சிந்தாவினை தீர்த்தருள் செய்யரன் ஊராம்
செந்தேனுண வண்டினம் சென்றுபண் செய்யும்
மைந்தார்பொழில் மாமயி லாடு துறையே.



வந்து ஆர் அடி வாழ்த்தினும் - எவரே ஆயினும் வந்து திருவடியைப் போற்றினால்;
சிந்தா வினை - அழியாத வினை;
செந்தேன் உண வண்டு இனம் சென்று பண் செய்யும் - இனிய தேனை உண்ண வண்டுகள் சென்று ரீங்காரம் செய்யும்;
மைந்து ஆர் பொழில் - அழகிய சோலை; (மைந்து - அழகு);


(சம்பந்தர் தேவாரம் - 3.49.5
கொல்வா ரேனும் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே.)



5)
எந்தாயருள் என்றிமை யோர்தொழு தேத்த
முந்தோர்கணை யாலெயில் மூன்றெரித் தானூர்
தெந்தேதென என்றிசை தேனினம் பாடி
வந்தார்பொழில் மாமயி லாடு துறையே.



பதம் பிரித்து:
"எந்தாய் அருள்" என்று இமையோர் தொழுது ஏத்த
முந்து ஓர் கணையால் எயில் மூன்று எரித்தான் ஊர்
'தெந்தேதென' என்று இசை தேன் இனம் பாடி
வந்து ஆர் பொழில் மா மயிலாடுதுறையே.


தேன் இனம் - வண்டுகள்;
ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்;



6)
காவாயெனை என்றடை மாணியைக் காத்துச்
சாவாவரம் தந்தருள் சங்கரன் ஊராம்
பூவார்மது உண்டளி போற்றிசெய் பாடல்
ஓவாப்பொழில் ஒண்மயி லாடு துறையே.



காவாய் எனை – என்னைக் காத்தருள்வாயாக;
மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்;
பூவார் மது - பூ வார் மது / பூ ஆர் மது;
அளி - வண்டு;
ஒண்மை - அழகு; நன்மை;



7)
யாண்டும்துணை நீயென அண்டிய அன்பர்
வேண்டும்வரம் தந்தருள் வேணியன் ஊராம்
நீண்டங்கும ரங்களின் நெற்றிநி லாவைத்
தீண்டும்பொழில் தென்மயி லாடு துறையே.



பதம் பிரித்து:
"யாண்டும் துணை நீ" என அண்டிய அன்பர்
வேண்டும் வரம் தந்து அருள் வேணியன் ஊர் ஆம்
நீண்டு அங்கு மரங்களின் நெற்றி நிலாவைத்
தீண்டும் பொழில் தென் மயிலாடுதுறையே.


யாண்டும் - எப்பொழுதும்;
வேணி - சடை;
அங்கு - அசைச்சொல்;
நெற்றி - உச்சி;
தென் - அழகு;



8)
திண்டோளரக் கன்சிரம் பத்தும டர்த்த
எண்டோளினன் இன்னிசை கேட்டருள் எந்தை
வண்டாரெனப் பாம்பணி மாண்பினன் ஊராம்
வண்டார்பொழில் மாமயி லாடு துறையே.



பதம் பிரித்து:
திண் தோள் அரக்கன் சிரம் பத்தும் அடர்த்த
எண் தோளினன்; இன்னிசை கேட்டு அருள் எந்தை;
வண் தார் எனப் பாம்பு அணி மாண்பினன் ஊர் ஆம்;
வண்டு ஆர் பொழில் மா மயிலாடுதுறையே.


திண் தோள் அரக்கன் சிரம் பத்தும் அடர்த்த எண் தோளினன் - வலிய புஜங்கள் உடைய இராவணின் தலை பத்தையும் நசுக்கியவன் எட்டுப் புஜங்கள் உடைய சிவபெருமான்;
வண் தார் - வளப்பமான மாலை; அழகிய மாலை;



9)
ஓராவயன் மாலிவர் காணவொ ணாதான்
பேராயிரம் உள்ளபி ரானவன் ஊராம்
நீரார்வயல் நாற்றிடைக் கொக்கினம் நிற்கச்
சீரார்கிற தென்மயி லாடு துறையே.



பதம் பிரித்து:
ஓரா அயன் மால் இவர் காண ஒணாதான்;
பேர் ஆயிரம் உள்ள பிரான் அவன் ஊர் ஆம்;
நீர் ஆர் வயல் நாற்றிடைக் கொக்கினம் நிற்கச்
சீர் ஆர்கிற தென் மயிலாடுதுறையே.


ஓர்தல் - எண்ணுதல்;
அயன் மால் இவர் - பிரமன் திருமால் இவர்களால்;
ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்; நிறைதல்;



10)
எட்டாகிய ஈசனை நீறணிந் தேத்தா
ஒட்டாதவர்க் கென்றுமெட் டாதவன் ஊராம்
தட்டாதடை வண்டினம் தான்மகிழ் வெய்த
மட்டார்பொழில் மாமயி லாடு துறையே.



பதம் பிரித்து:
எட்டு ஆகிய ஈசனை நீறு அணிந்து ஏத்தா
ஒட்டாதவர்க்கு என்றும் எட்டாதவன் ஊர் ஆம்;
தட்டாது அடை வண்டினம் தான் மகிழ்வு எய்த
மட்டு ஆர் பொழில் மா மயிலாடுதுறையே.


எட்டு ஆகிய ஈசன் - அஷ்டமூர்த்தி;
ஒட்டாதவர் - அப்பெருமானிடத்து உள்ளம் பொருந்தாதவர்; (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 7: 'சட்டோ நினைக்க ... ஒட்டாத பாவித் தொழும்பரை ...);
எட்டுதல் - புலப்படுதல் (To be within mental grasp, within the powers of comprehension); அகப்படுதல் (To be attained, realised, gained);
தட்டாது - குறைவின்றி; (தட்டுதல் - குறைவுபடுதல்);
மட்டு ஆர் - தேன் நிறைந்த;



11)
காவாயெனக் கைதொழும் அன்பரைக் காக்கும்
நாவாயென வந்தருள் நம்மரன் ஊராம்
பூவாயிழி தேறலைப் போற்றிய பாடல்
ஓவாப்பொழில் ஒண்மயி லாடுது றையே.



நாவாய் - கப்பல்; படகு;
பூ வாய் இழி தேறல் - பூவின் வாயில் வழியும் தேன்; / பூவில் வழியும் தேன் (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு);
(சேந்தனார் அருளிச்செய்த திருவிசைப்பா - 9.5.3 - "மண்டலத் தொளியை ... விண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ் திருவீழி மிழலை" = மலர்வாய் - மலரின்கண் பொருந்திய. வேரி - தேன். வார் - ஒழுகுகின்ற. );


குறிப்புகள்:
நாவாய் - நாம் வினைக்கடலில்/இடர்க்கடலில் ஆழாவண்ணம் ஈசன் படகாக வந்து காத்தருள்வான்.
தேறலைப் போற்றிய பாடல் - வண்டுகளின் ரீங்காரத்தைக் குறித்தது.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்பு அமைப்பு :
  • சந்தக் கலிவிருத்தம் - "தானாதன தானன தானன தானா'' என்ற சந்தம்.
  • சில பாடல்களில் அடியின் முதற்சீர் தனனாதன என்றும் வரும்.
  • முதல் மூன்று சீர்களின் ஈற்றில் குறில் / குறில்+ஒற்று அமையும்;
  • சம்பந்தர் பதிகத்தில் "தானன" என்ற விளச்சீர் வரும் இடத்தில் ஒரோவழி "தான" என்ற மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கக் காணலாம்.
  • ஒரோவழி அடியின் ஈற்றுச் சீர் தனனா என்ற அமைப்பில் வரும்.



2) சம்பந்தர் தேவாரம் - 2.35.1 -
பரவக்கெடும் வல்வினை பாரிடஞ் சூழ
இரவிற்புறங் காட்டிடை நின்றெரி யாடி
அரவச்சடை யந்தணன் மேய வழகார்
குரவப்பொழில் சூழ்குரங் காடு துறையே..

----------------- ----------------

No comments:

Post a Comment