Wednesday, July 10, 2019

P.242 - கடம்பந்துறை - சேய்மதியோடு

2014-08-01

P.242 - கடம்பந்துறை

(கடம்பர்கோயில் - குளித்தலை)

----------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

சேய்மதி யோடு சீறிள நாகம் தேன்மலர் திகழ்திருச் சடையில்

பாய்புனல் தேக்கிப் பகீரதற் கருளும் பரிவினன் அஞ்செழுத் தோதி

ஆய்மலர் தூவி அடிதொழு மாணி ஆவியைக் காத்துவன் கூற்றைக்

காய்கழ லானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


சேய்-மதியோடு சீறு-ள நாகம் தேன்மலர் திகழ்-திருச்சடையில் - இளந்திங்களோடு சீறும் இளம்பாம்பும் தேன் நிறைந்த மலர்களும் திகழ்கின்ற திருச்சடையில்; (சேய் - இளமை); (சம்பந்தர் தேவாரம் - 2.71.7 - "கொன்றையும் பிள்ளை மதியும் புனலும் சூடிப்");

பாய்-புனல் தேக்கிப், பகீரதற்கு அருளும் பரிவினன் - பாய்ந்த கங்கையைத் தடுத்து நிறுத்திப் பகீரதனுக்கு அருளிய கருணையினான்;

அஞ்செழுத்து ஓதி, ஆய்-மலர் தூவி, அடிதொழு மாணி ஆவியைக் காத்து, வன்-கூற்றைக் காய்-கழலான் ஊர் - திருவைந்தெழுத்தை ஓதிச் சிறந்த பூக்களத் தூவி வழிபாடு செய்த மார்க்கண்டேயரது உயிரைக் காத்துக், கொடிய நமனை உதைத்த திருப்பாதத்தை உடைய சிவபெருமான் உறைகின்ற தலம்; (ஆய்மலர் - ஆய்ந்த மலர் - சிறந்த பூக்கள்); (மாணி - மார்க்கண்டேயர்);

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை; (சம்பந்தர் தேவாரம் - 1.10.4 - "அடிகட்கிடம் அண்ணாமலை யதுவே"); (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "திருமுல்லை வாயில் இதுவே");


2)

புலியதள் உடுத்துப் பொருவிடை ஏறும் புண்ணிய மூர்த்தியே பெண்ணாண்

அலியென ஆன அற்புத அண்ணால் அருளெனும் அன்பருக் கிரங்கி

நலிவினை நீக்கி நலமருள் நம்பன் நம்பெரு மானுறை ஊராம்

கலிகடல் அன்ன காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


"புலி-அதள் உடுத்துப் பொரு-விடை ஏறும் புண்ணிய மூர்த்தியே - "புலித்தோலை ஆடையாகத் தரித்துப் போர்செய்யவல்ல எருதை வாகனமாக ஏறிய புண்ணியனே; (அதள் - தோல்); (பொருதல் - போர்செய்தல்);

பெண் ஆண் அலி என ஆன அற்புத அண்ணா - பெண், ஆண், அலி என்று எல்லாம் ஆன அற்புத அண்ணலே; (அண்ணா - அண்ணல் என்பதன் விளியான அண்ணால் என்பது அண்ணா என்று மருவியது); (சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "அண்ணா உனக்காளாய்");

அருள்" எனும் அன்பருக்கு இரங்கி நலிவினை நீக்கி நலம் அருள் நம்பன் - அருளாய்" என்று இறைஞ்சும் பக்தர்களுக்கு இரங்கி, வருத்துகின்ற வினையைத் (/ துன்பத்தைத்) தீர்த்து நன்மை அருளும் நம்பன்; (நலிதல் - வருத்துதல்); (நலிவு - துன்பம்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);

நம் பெருமான் உறை ஊர் ஆம் - நம் பெருமான் உறையும் தலம்;

கலிகடல் அன்ன காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - ஒலிக்கின்ற கடல் போன்ற காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை; (கலித்தல் - ஒலித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.67.5 - "கடல்போற் காவேரி");


3)

மினலிடை யாளை மேனியிற் பங்கு விரும்பிய எம்மிறை கங்கைப்

புனலடை சடையான் போர்விடை உடையான் பொன்வெளி இருப்பெயில் மூன்றில்

அனலெழு மாறோர் அம்பினை ஏவி அமரரைக் காத்தவன் கையில்

கனல்மழு வானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


மினல்-இடையாளை மேனியில் பங்கு விரும்பிய எம் இறை - மின்னல் போன்ற நுண்ணிடை உடைய உமாதேவியைத் திருமேனியில் ஒரு பாகமாக விரும்பிய எம் இறைவன்;

கங்கைப்-புனல் அடை- சடையான் - கங்கையாற்றை அடைத்த சடையை உடையவன்;

போர்விடை உடையான் - போர்செய்யவல்ல இடபவாகனம் உடையவன்;

பொன் வெளி இருப்பு-எயில் மூன்றில் அனல் எழுமாறு ஓர் அம்பினை ஏவி அமரரைக் காத்தவன் - தங்கம், வெள்ளி, இரும்பு இவற்றால் செய்யப்பெற்ற முப்புரங்களும் தீப்பற்றி அழிய ஒரு கணையை எய்து தேவர்களைக் காத்தருளியவன்; (வெளி - வெள்ளி; இடைக்குறை விகாரம்); (எயில் - மதில்); (அனல் - தீ);

கையில் கனல் மழுவான் ஊர் - கையில் ஒளிவீசும் மழுவை ஏந்தியவன் உறையும் தலம்; (கனல்தல் - ஜொலித்தல்);

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


4)

தங்கைகள் குவித்துத் தாள்தொழு வார்க்குச் சங்கடம் தீர்த்தருள் கின்ற

சங்கரன் நீறு தாங்கிய மார்பன் தாவிடு மான்மறி ஏந்தி

அங்கையில் மழுவன் அரையினில் அரவன் ஆரழல் போல்திகழ் சடையிற்

கங்கையி னானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


தங்கைகள் - தம் கைகள்;

தாவிடு மான்மறி ஏந்தி - தாவும் மான்கன்றை ஏந்தியவன்;

அரையினில் அரவன் - அரையில் பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

ஆரழல் போல் திகழ் சடை - தீப் போலத் திகழ்கின்ற செஞ்சடை; (அப்பர் தேவாரம் - 4.57.6 - "நீரழற் சடையுளானே");

அங்கையில் மழுவன் - கையில் மழுவை ஏந்தியவன்;


5)

சலந்தரி சடையன் தண்மதி சூடி தாள்பணி வார்க்கருள் தந்தை

சலந்தரன் தன்னைத் தடிந்தசக் கரத்தைத் தாமரைக் கண்ணனுக் கீந்த

நலந்திகழ் அண்ணல் நரைவிடை ஏறி நளிர்மல ரான்சிரம் என்ற

கலந்தரித் தானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


சலம் தரி சடையன் - கங்கையைத் தரித்த சடையன்;

தண்மதி சூடி - குளிர்ந்த சந்திரனைச் சூடியவன்;

சலந்தரன் தன்னைத் தடிந்த சக்கரத்தைத் தாமரைக்கண்ணனுக்கு ஈந்த - ஜலந்தராசுரனை அழித்த சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அளித்த;

நரைவிடை ஏறி - வெண்ணிற இடபத்தை வாகனமாக ஏறியவன்;

நளிர்-மலரான்-சிரம் என்ற கலம் தரித்தான் - குளிர்ந்த தாமரையில் இருக்கும் பிரமனுடைய மண்டையோடு என்ற பிச்சைப்பாத்திரம் ஏந்தியவன்;


6)

பெரியவன் சிறிதிற் சிறியவன் எண்ணில் பேரினன் அரியவன் கண்டம்

கரியவன் நெற்றிக் கண்ணினில் தீயன் கனவிடை ஊர்தியன் எங்கும்

வரியர வேறும் வடிவினன் கயிலை மலையினன் மலைமகள் அஞ்சக்

கரியுரித் தானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


சிறிதிற் சிறியவன் - அணுவினும் நுண்ணியன்;

எண் இல் பேரினன் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவன்;

கன-விடை ஊர்தியன் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;

எங்கும் வரி-அரவு ஏறும் வடிவினன் - திருமேனியில் எங்கும் (= அரையில், மார்பில், சடையில் என்று பல இடங்களில்) வரிகளை உடைய நாகங்கள் ஏறுகின்ற உருவுடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.50.6 - "வரியரவா வந்துநல்காய்");

மலைமகள் அஞ்சக் கரி உரித்தான் ஊர் - உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்தவன் உறையும் தலம்;


7)

ஒருமட மங்கை உடலிடம் கொள்ள உச்சியிற் கங்கையை வைத்தான்

மருவிடும் அன்பர் வல்வினை மாய்த்து வானம ளித்திடும் வள்ளல்

அருவிடம் கண்டு வெருவிய தேவர் அடிதொழ அவர்களுக் கருள்செய்

கருமிடற் றானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


ஒரு மடமங்கை உடல் இடம் கொள்ள - அழகிய உமாதேவி திருமேனியில் இடப்பாகம் ஆக;

மருவுதல் - சார்தல்; (4.66.7 - "வஞ்சகர்க் கரியர் போலும் மருவினோர்க் கெளியர் போலும்");

வெருவுதல் - அஞ்சுதல்;

கருமிடற்றான் - நீலகண்டன்;


8)

எண்ணுதல் இன்றி எழில்மலை பேர்த்த இலங்கையர் மன்னனை நெரித்தான்

உண்ணுதல் ஒண்ணா நஞ்சினை உண்டு விண்ணவர்க் கின்னமு தீந்தான்

ஒண்ணுதல் மங்கை உமையவள் பங்கன் ஒளித்தெய்த காமனைக் காய்ந்த

கண்ணுத லானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


எண்ணுதல் இன்றி எழில்-மலை பேர்த்த இலங்கையர்-மன்னனை நெரித்தான் - (வழிபாடு செய்யும் எண்ணம் இன்றித்) தன் செயலின் விளைவுகளை எண்ணாமல் அழகிய கயிலைமலையைப் பெயர்த்த இலங்கைக்கோனை நசுக்கியவன்; ( நெரித்தல் - நசுக்குதல்);

உண்ணுதல் ஒண்ணா நஞ்சினை உண்டு விண்ணவர்க்கு இன்னமுது ஈந்தான் - ; யாராலும் உண்ண இயலாத ஆலகாலத்தை உண்டு, தேவர்களுக்கு இனிய அமுதை ஈந்தவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.49.9 - "உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி");

ஒண்ணுதல் மங்கை உமையொரு பங்கன் - ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமாதேவியை ஒரு பங்கில் மகிழ்ந்தவன்;

ஒளித்து எய்த காமனைக் காய்ந்த கண்ணுதலான் ஊர் - தன்னை மறைத்துக்கொண்டு மலர்க்கணை எய்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன் உறையும் தலம்; (பெரியபுராணம் - கண்ணப்ப நாயனார் புராணம் - 12.10.158 - " நாளைநீ ஒளித்திருந்தால் எனக்கவன்தன் பரிவிருக்கும் பரிசெல்லாம் காண்கின்றாய்");

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


9)

படந்திகழ் பாம்பைப் பால்மதிப் பாங்கர்ப் பயின்றிட வைத்தவன் பரவை

விடந்திகழ் கண்டன் மேருவில் வீரன் வேதனும் மாயனும் மேல்கீழ்

அடைந்திடத் தேடி அலந்தடி போற்ற ஆரழ லாய்உல கெல்லாம்

கடந்துநின் றானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


படம் திகழ் பாம்பைப் பால்மதிப் பாங்கர்ப் பயின்றிட வைத்தவன் - நாகத்தைத் பல் போன்ற வெண்திங்கள் அருகே இருக்கவைத்தவன்; (பாங்கர் - பக்கம்); (பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்);

பரவை விடம் திகழ் கண்டன் - கடல்விடத்தை உண்டு கண்டத்தில் அணிந்தவன்; (பரவை - கடல்);

வேதனும் மாயனும் மேல்கீழ் அடைந்திடத் தேடி அலந்து அடி போற்ற - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாமல் வருந்தி வணங்கும்படி; (நேடுதல் - தேடுதல்); (அலத்தல் - துன்புறுதல்);

ஆரழலாய் உலகெல்லாம் கடந்து நின்றான் ஊர் - அரிய ஜோதியாகி அண்டங்களையெல்லாம் கடந்து நீண்ட பெருமான் உறையும் தலம்;

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


10)

நறையில தான பொய்ம்மலர் தன்னை நன்மலர் என்றுரை செய்வார்

குறைபல உடைய கொள்கையி னார்தம் கூற்றினை நீர்மதி யேன்மின்

மறைதுதி பாடும் பிறைமதி சூடும் வல்லவன் நல்லவன் கண்டம்

கறையுடை யானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


நறை இலதான பொய்ம்மலர் தன்னை நன்மலர் என்று உரைசெய்வார் - வாசனை இல்லாத பொய்ப்பூவை நல்ல பூ என்று அவர்கள் சொல்வார்கள்; (நறை - தேன்; வாசனை);

குறை பல உடைய கொள்கையினார்தம் கூற்றினை நீர் மதியேன்மின் - பல குற்றங்களை உடைய கொள்கைகளை உடையவர்களது பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

மறை துதிபாடும் பிறைமதி சூடும் வல்லவன் - வேதங்கள் துதிக்கும் சந்திரசேகரன் சர்வ வல்லமை உடையவன்;

நல்லவன், கண்டம் கறை உடையான் ஊர் - நல்லவனும் நீலகண்டனுமான சிவபெருமான் உறையும் தலம்;

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


11)

மெய்யணி நாவர் மிகமகிழ்ந் தேத்தும் வேதியன் விருப்பொடு நாளும்

கொய்யணி மலர்கள் கொண்டடி போற்றில் குறைகளைந் தின்னருள் புரிவான்

மையணி கண்டன் வளர்மதி இண்டை வார்சடைப் புனைசிவன் வளையல்

கையணி வானூர் காவிரித் தென்பால் கவின்கடம் பந்துறை யதுவே.


மெய் அணி நாவர் மிக மகிழ்ந்து ஏத்தும் வேதியன் - உண்மையை அணிந்த நாவினர் மிகவும் அன்போடு போற்றும் ஈசன், வேதப்பொருள் ஆனவன், வேதங்களைப் பாடியருளியவன்;

கொய்-அணி மலர்கள் கொண்டு அடி போற்றில் - கொய்த அழகிய பூக்களால் அவன் திருவடியைத் தொழுதால்;

குறை களைந்து இன்னருள் புரிவான் - குறையைத் தீர்த்து இனிது அருள்புரிபவன்;

மை அணி கண்டன் - கருமை திகழும் கழுத்தை உடையவன் - நீலகண்டன்;

வளர்மதி இண்டை வார்சடைப் புனை சிவன் - வளரும் திங்களை இண்டைமாலையாக நீள்சடையில் அணிந்த சிவபெருமான்; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (வார்தல் - நீள்தல்);

வளையல் கை அணிவான் ஊர் - கையில் வளையலை அணிந்தவன் (= அர்த்தநாரீஸ்வரன்) உறையும் தலம்;

காவிரித் தென்பால் கவின் கடம்பந்துறை அதுவே - காவிரியாற்றின் தென்கரையில் உள்ள அழகிய கடம்பந்துறை;


வி. சுப்பிரமணியன்

-------------------  

No comments:

Post a Comment