Monday, November 14, 2022

06.05.027 - சிவன் - விருந்து - மடக்கு

06.05 – பலவகை

2013-04-09

06.05.027 - சிவன் - விருந்து - மடக்கு

-------------------------------------------------------

(இன்னிசை வெண்பா)


குழம்பாய் மனமேதான் தோன்றியார் கூட்டால்

எழும்பழ வாசனையால் இங்காவி சென்று

விழும்போ துதவி இலையேஎன் னாதே

செழும்புனல் வேணியன்பேர் செப்பு.


பதம் பிரித்து:

குழம்பாய் மனமே தான்தோன்றியார் கூட்டால்,

எழும் பழ வாசனையால், இங்கு ஆவி சென்று

விழும்போது உதவி இலையே என்னாதே,

செழும்-புனல் வேணியன் பேர் செப்பு.


சொற்பொருள்:

குழம்புதல் - 1. மனம் கலங்குதல்; / 2. குழம்பு - மோர்க்குழம்பு, மிளகுக்குழம்பு, முதலிய உணவுவகை;

குழம்பாய் - 1. குழம்பமாட்டாய்; / 2. குழம்பு ஆகி;

தான் - குழம்பில் இருக்கும் வெந்த காய்கறித் துண்டம்;

தான்தோன்றி - அகம்பாவம் உடையவன்;

ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;

கூட்டு - 1. நட்பு; / 2. காய்களால் செய்யப்படும் கூட்டு என்ற உணவுப் பதார்த்தம்;

பழ வாசனை - 1. முற்பிறவியால் இப்பிறவியில் தொடரும் பற்றுகள்; / 2. பழங்களின் மணம்;

ஆவி - 1. உயிர்; / 2. மனம்; 3. சுடசுடச் செய்த உணவிலிருந்து எழும் ஆவி, நறுமணம்;

விழுதல் - 1. சாதல்; / 2. (தட்டு முதலிய பரிகலத்தில்) வீழ்தல்;

இலை - 1. இல்லை; / 2. (உணவு இடும்) வாழையிலை முதலியன;

என்னாதே - 1. என்று சொல்லாமல்; / 2. என்று சொல்லாதே;

வேணி - சடை;


குறிப்பு: பாடலின் முதல் 3 அடிகளை இருமுறை இயைத்துப் பொருள்கொள்க;


மனமே! குழம்பு ஆகி, அதில் தான்களும் தோன்றிப், பொருந்துகின்ற கூட்டு, பழங்கள் இவற்றின் வாசனைகளால், அவற்றிலேயே நாட்டம் கொண்டு, உண்ண அவற்றை இடும்போது இலைதான் உதவும் என்று சொல்லாதே! (அப்படி எண்ணி உழலாதே)!

மனமே! நீ குழம்பமாட்டாய்! ஆணவம் மிக்கவர்கள் சகவாசத்தாலும், இப்பிறவியில் எழுகின்ற பழைய பிறவிகளின் வாசனையாலும், உழன்று, உயிர் போய் உடல் விழும்போது ஒரு துணை இல்லையே என்று சொல்லி வருந்தாமல், (இப்பொழுதே) கங்கையைச் சடையில் வைத்த சிவபெருமான் நாமத்தைச் சொல்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment