Saturday, November 27, 2021

P.275 - மறைக்காடு (வேதாரண்யம்) - (புஜங்கம்) - முளைக்கும் பொருட்கோர்

2015-02-28

P.275 - மறைக்காடு (வேதாரண்யம்) - ("புஜங்கம்")

-------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனானா தனானா தனானா தனானா;

தனாதான தானா தனாதான தானா - என்றும் நோக்கலாம்)

(இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)


1)

முளைக்கும் பொருட்கோர் முதல்வன் தொழும்பர்

இளைப்பைத் துடைப்பான் இளந்திங் களைத்தான்

வளர்த்தான் மதில்மூன் றெரிக்கப் பொருப்பை

வளைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


முளைக்கும் பொருட்கு ஓர் முதல்வன் - தோன்றிய எப்பொருளுக்கும் முதல்வன்; (முளைத்தல் - தோன்றுதல்); (பொருட்கு - பொருளுக்கு); (அப்பர் தேவாரம் - 4.71.3 - "விளைபொருள் மூலமான கருத்தனை");

தொழும்பர் இளைப்பைத் துடைப்பான் - அடியார்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (தொழும்பர் - அடியவர்); (இளைப்பு - சோர்வு; கிலேசம்); (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);

இளந்திங்களைத்தான் வளர்த்தான் - வளரும் பிறையைச் சூடியவன்;

மதில் மூன்று எரிக்கப் பொருப்பை வளைத்தான் இடம் - முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்த பெருமான் உறையும் தலம்; (பொருப்பு - மலை);

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்; (தென் - அழகிய);


2)

தழைக்கும் தமிழ்ப்பா தனைக்கேட் பதற்கா

வழக்கென்று புத்தூர் மணத்தைத் தடுத்தான்

அழைக்கும் சுரர்க்கார் அருள்செய்து நஞ்சுண்

மழைக்கண்ட னூர்தென் மறைக்காடு தானே.


தழைக்கும் தமிழ்ப்பாதனைக் கேட்பதற்கா வழக்கென்று புத்தூர் மணத்தைத் தடுத்தான் - சிறந்த தமிழ்ப்பாமாலைகளைக் கேட்க விரும்பி, "ஒரு வழக்கு உள்ளது" என்று சொல்லிப் புத்தூரில் நிகழவிருந்த திருமணத்தைத் தடுத்தவன்; (கேட்பதற்கா - கேட்பதற்காக); (* அடிகள் 1-2: சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு - சிவபெருமான் கிழவேதியராக வந்து வழக்கு ஒன்று உள்ளது என்று சொன்னதால் புத்தூரில் நிகழவிருந்த சுந்தரர் திருமணம் தடைப்பட்டது);

அழைக்கும் சுரர்க்கு ஆர்அருள்செய்து நஞ்சுண் மழைக்கண்டன் ஊர் - இறைஞ்சிய தேவர்களுக்குப் பேரருள் புரிந்து விஷத்தை உண்ட மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன் உறையும் தலம்; (சுரர் - தேவர்); (மழை - மேகம்);

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


3)

அடுத்தோர் சரத்தைத் தொடுத்தான் படத்தான்

கடுத்தே நுதற்கண் கனன்றான் கணஞ்சூழ்

நடத்தான் திருக்காப் பகற்றத் தமிழ்ப்பா

மடுத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


அடுத்து ஓர் சரத்தைத் தொடுத்தான் படத்தான் கடுத்தே நுதற்கண் கனன்றான் - நெருங்கி வந்து ஒரு கணையை எய்த காமன் அழியும்படி அவனைக் கோபித்து நெற்றிக்கண்ணால் எரித்தவன்; (அடுத்தல் - சமீபமாதல்); (சரம் - அம்பு); (படுதல் - சாதல்; அழிதல்); (கடுத்தல் - சினத்தல்; கோபித்தல்); (நுதற்கண் - நெற்றிக்கண்); (கனல்தல் - சிவத்தல்; சுடுதல்); சமீபமாதல்);

கணம் சூழ் நடத்தான் - கணங்கள் சூழும் கூத்தன்;

திருக்காப்பு அகற்றத் தமிழ்ப்பா மடுத்தான் இடம் - திருமறைக்காட்டில் கோயிற்கதவம் தாழ் நீக்கவேண்டித் திருநாவுக்கரசர் பாடிய தேவாரத்தைச் செவிமடுத்தவன்; (காப்பு - கதவு; கதவின் தாழ்); (அப்பர் தேவாரம் - 5.10.1 - "பண்ணினேர்மொழியாள்"); (பெரிய புராணம் - 12.21.266 - "தொல்லை வேதந் திருக்காப்புச் செய்த வாயில் தொடர்வகற்ற");

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


4)

வலப்பால் தழல்போல் வணத்தான் சிரத்திற்

சலத்தான் சிரிப்பால் தகித்தான் புரங்கள்

நிலத்தார் விசும்பார் நிதம்வாழ்த்தி ஏத்தும்

மலர்ப்பாத னூர்தென் மறைக்காடு தானே.


வலப்பால் தழல்போல் வணத்தான் - வலப்பக்கத்தில் தீப்போல் செவ்வண்ணம் உடையவன்;

சிரத்தில் சலத்தான் - தலைமேல் கங்கையை ஏற்றவன்; (சலம் - ஜலம் - கங்கை);

சிரிப்பால் தகித்தான் புரங்கள் - முப்புரங்களைச் சிரித்தே எரித்தவன்;

நிலத்தார் விசும்பார் நிதம் வாழ்த்தி ஏத்தும் மலர்ப்பாதன் ஊர் - மண்ணோரும் விண்ணோரும் தினமும் வாழ்த்திப் போற்றும் மலர்ப்பாதம் உடைய பெருமான் உறையும் தலம்;

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


5)

நினைத்தார் பிழைக்கச் சினக்கூற் றுதைத்தான்

வனப்போதி னான்றன் சிரத்தூண் மகிழ்ந்தான்

அனைத்தும் படைப்பான் அழிப்பான் துதிப்பார்

மனத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


நினைத்தார் பிழைக்கச் சினக்கூற்று உதைத்தான் - மிகவும் எண்ணி வழிபட்ட மார்க்கண்டேயர் உயிரைக் காத்துக் கோபம் மிக்க காலனை உதைத்தவன்;

வனப்-போதினான்தன் சிரத்து ஊண் மகிழ்ந்தான் - அழகிய தாமரைமலரின்மேல் உறையும் பிரமனது மண்டையோட்டில் உணவை விரும்பியவன்; (வனம் - அழகு; நீர்); (போது - பூ); (வனருகம் - vana-ruha - தாமரை) (ஊண் - உணவு);

அனைத்தும் படைப்பான் அழிப்பான் - எல்லாவற்றையும் தோற்றுவித்து ஒடுக்குபவன்;

துதிப்பார் மனத்தான் இடம் - வழிபடுவார் மனத்தில் இருப்பவன் உறையும் தலம்;

தென்-மறைக்காடுதானே - அழகிய திருமறைக்காடு (வேதாரண்யம்) ஆகும்;


6)

அணங்கோர் புறத்தான் அராவும் புனைந்தான்

கணங்கள் கரத்தில் விளக்கேந்த ஆடி

மணங்கொள் புதுப்பூ அடிச்சாத்தி வானோர்

வணங்கும் பிரானூர் மறைக்காடு தானே.


அணங்கு ஓர் புறத்தான் - ஒரு பக்கத்தில் உமையை உடையவன்; (அணங்கு - பெண் - உமை); (புறம் - பக்கம்);

அராவும் புனைந்தான் - பாம்பையும் அணிந்தவன்; (அரா - பாம்பு);

கணங்கள் கரத்தில் விளக்கு ஏந்த ஆடி - பூதகணங்கள் கையில் விளக்கை ஏந்தக் கூத்தாடுபவன்; (ஆடி - ஆடுபவன்); (இலக்கணக் குறிப்பு - அடியின் ஈற்றில் உள்ள லகு, பாடலின் வாய்பாடு கருதிக், குரு என்று அலகிடப்படும்);

மணங்கொள் புதுப்-பூ அடிச்-சாத்தி வானோர் வணங்கும் பிரான் ஊர் மறைக்காடுதானே - வாசமிக்க நாண்மலர்களை திருவடியில் இட்டுத் தேவர்கள் வணங்கும் தலைவன் உறையும் தலம் திருமறைக்காடு; (சாத்துதல் - அணிதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.8.11 - "சந்தமெல்லாம் அடிச் சாத்தவல்ல மறை ஞானசம்பந்தன செந்தமிழ்");


7)

இதத்தைக் கொடுப்பான் இலாடத்து நீற்றன்

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான்

நுதற்கண் திறந்தே சுதன்தந் தவன்மன்

மதற்சுட்ட மானூர் மறைக்காடு தானே.


இதத்தைக் கொடுப்பான் - நன்மை செய்பவன்; (இதம் - ஹிதம் - நன்மை);

இலாடத்து நீற்றன் - நெற்றியில் திருநீறு பூசியவன்; (இலாடம் - லலாடம் - நெற்றி); (அப்பர் தேவாரம் - 6.61.3 - "எவரேனுந் தாமாக இலாடத்து இட்ட திருநீறும்");

பதத்தைப் பணிந்தார் பவத்தைத் துடைப்பான் - திருவடியை வழிபடும் பக்தர்கள்து பிறவியை அறுப்பவன்; (பதம் - பாதம்); (பவம் - பிறவி); (துடைத்தல் - அழித்தல்);

நுதற்கண் திறந்தே சுதன் தந்தவன் மன் - நெற்றிக்கண்ணைத் திறந்து மகனைத் தந்தவன், தலைவன்; (சுதன் - மகன்); (மன் - தலைவன்);

மதற் சுட்ட மான் - (நெற்றிக்கண்ணைத் திறந்து) மன்மதனைச் சுட்டெரித்த பெரியோன்; (மதன் - காமன்); (மன்மதன் - காமன்); (மான் - பெரியோன்); (பரணதேவர் - சிவபெருமான் திருவந்தாதி - 11.23.86 - "கலைமான்கை ஏனப்பூண் காண்கயிலை மானின்" - கயிலைமான் = கயிலைப் பெரியோன்);

ர் மறைக்காடுதானே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு;

குறிப்புகள்:

1. "மன்மதற்சுட்ட" = 1. "மன் + மதற் சுட்ட"; 2. "மன்மதற் சுட்ட" - என்று இருவிதமாகப் பிரித்துப் பொருள்கொள்ளலாம்.

2. இலக்கணக் குறிப்பு: மதற் சுட்ட = மதன் + சுட்ட = "மதனைச் சுட்ட" என்ற பொருளில்; இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் வல்லொற்று மிகுதல், னகர ஒற்று றகர ஒற்றாகத் திரிதல், முதலியன நிகழும்);


8)

பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் மலைத்தோள்

இறத்தான் நெரித்தான் எரிக்கும் விடத்தை

மறைத்தா னிடம்தென் மறைக்காடு தானே.


பறக்கும் கடுந்தேர் இறங்கப் பதைத்தே - வானில் பறந்து விரைந்து செல்லும் தன் இரதம் பறவாமல் தரையில் இறங்கக் கண்டு சினந்து; (கடுமை - விரைவு); (அப்பர் தேவாரம் - 6.99.10 - "இலங்கை வேந்தன் கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற பொருவரையாய்"); (பதைத்தல் - ஆத்திரப்படுதல்); (அப்பர் தேவாரம் - 5.16.11 - "திருமாமலைக் கீழ்ப்புக்குப் பதைத்தங்கு ஆர்த்து எடுத்தான்");

மறத்தால் பொருப்பைப் பெயர்த்தான் மலைத்-தோள் இறத்தான் நெரித்தான் - தன் வலிமையால் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது மலை போன்ற புஜங்கள் முறியும்படி நசுக்கியவன்; (மறம் - வலிமை; சினம்); (பொருப்பு - மலை - கயிலைமலை); (இறுதல் - முறிதல்; கெடுதல்);

எரிக்கும் விடத்தை மறைத்தான் - ஆலகாலத்தை (உண்டு கண்டத்தில்) ஒளித்தவன்;

டம் தென்-மறைக்காடுதானே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு;


9)

அகழ்ந்தும் பறந்தும் மயன்மா லயர்ந்தார்

புகழ்ந்தும் விழுந்தும் பொலம்பூம் பதங்கள்

உகந்தார் மனத்தே உறைந்தான் இடம்பெண்

மகிழ்ந்தா னிடம்தென் மறைக்காடு தானே.


அகழ்ந்தும் பறந்தும் அயன்மால் அயர்ந்தார் - பிரமனும் திருமாலும் வானிற் பறந்துசென்றும் மண்ணை அகழ்ந்தும் அடிமுடி தேடிக் காணாது தளர்ந்தனர்; (பறந்தும்மயன் - பறந்தும் அயன் - மகரஒற்று விரித்தல் விகாரம்); (அகழ்ந்தும் பறந்தும் அயன் மால் - எதிர்நிரனிறையாக வந்தது); (அயர்தல் - தளர்தல்);

புகழ்ந்தும் விழுந்தும் பொலம்-பூம்-பதங்கள் உகந்தார் மனத்தே உறைந்தான் - பொன் போன்ற மலர்த்திருவடியைப் புகழ்ந்தும் விழுந்து வணங்கியும் விரும்பி வழிபடும் அன்பர்களது மனத்தில் உறைந்தவன்; (விழுதல் - விழுந்து வணங்குதல்); (பொலம் - பொன்; அழகு); (பொலம்பூம்பதங்கள் - பொலம்பூவடி); (பட்டினத்து அடிகள் - கோயில் நான்மணிமாலை - 11.26.40 - "போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே"); (உகத்தல் - விரும்புதல்);

இடம் பெண் மகிழ்ந்தான் - இடப்பக்கம் உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

டம் தென்-மறைக்காடுதானே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய திருமறைக்காடு;


10)

நிதிக்கா நிரம்பப் புறன்சொல் சழக்கர்

சதிச்சேற் றழுந்தேல் தவிப்பைத் தவிர்ப்பான்

நதிச்சென்னி மேலே நறும்போது நாகம்

மதிக்கண்ணி யானூர் மறைக்காடு தானே.


நிதிக்கா நிம்பப் புறன் சொல் சழக்கர் சதிச்சேற்று அழுந்தேல் - பணத்திற்காகப் பல பழிச்சொற்களைப் பேசும் தீயவர்களது வஞ்சனை என்ற சேற்றில் அழுந்தவேண்டா; (நிரம்ப - நிறைய; மிகுதியாக); (புறன் - பழிமொழி) (சழக்கர் - தீயவர்கள்; சழக்கு - குற்றம்; தீமை); (சதி - வஞ்சனை);

தவிப்பைத் தவிர்ப்பான் - பக்தர்களது வருத்தத்தை தீர்ப்பவன்;

நதிச்-சென்னிமேலே நறும்போது நாகம் மதிக்கண்ணியான் - கங்கையைத் தாங்கிய திருமுடிமேல் வாசமலர்கள் பாம்பு இவற்றோடு கண்ணிமாலைபோல் சந்திரனைச் சூடியவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலை);

ர் மறைக்காடு தானே - அப்பெருமான் உறையும் தலம் திருமறைக்காடு; (அவனை வழிபாடு செய்து உய்க - என்பது குறிப்பு);


11)

புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான்

கரங்கள் குவித்துக் கழல்போற்று வார்க்கே

வரங்கள் வழங்கும் பரன்மேய ஊராம்

மரங்கள் வளம்சேர் மறைக்காடு தானே.


புரங்கள் கனல்வாய்ப் புகத்தான் சிரித்தான் - முப்புரங்களும் தீயில் புகுந்து அழியும்படி சிரித்தவன்; (கனல் - நெருப்பு); (வாய் - ஏழாம்வேற்றுமை உருபு);

கரங்கள் குவித்துக் கழல்போற்றுவார்க்கே வரங்கள் வழங்கும் பரன் மேய ஊர் ஆம் - கைகூப்பித் திருவடியை வழிபடுபவர்களுக்கு வரங்கள் கொடுக்கும் பரமன் உறைகின்ற தலம் ஆவது;

மரங்கள் வளம் சேர் மறைக்காடுதானே - விருட்சங்களும் படகுகளும் வளம் சேர்க்கின்ற திருமறைக்காடு; (மரங்கள், மரக்கலங்கள் முதலிய வளங்கள் நிறைந்த வேதாரண்யம்); (மரம் - விருட்சம்; மரக்கலம் (கப்பல், படகு));


வி. சுப்பிரமணியன்

--- ---


No comments:

Post a Comment