Saturday, November 27, 2021

P.276 - சாட்டியக்குடி - பண்பயில் தமிழ்கொடு

2015-03-07

P.276 - சாட்டியக்குடி

(திருவாரூர்க்குத் தென்கிழக்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

-------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே");

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்");


1)

பண்பயில் தமிழ்கொடு பரவிடும் அடியவர் பற்ற றுப்பான்

பெண்மயில் போன்றவள் தனையொரு பங்கெனப் பேணும் அன்பன்

கண்பயில் நெற்றியன் கடல்விடம் உண்டருள் கறைமி டற்றன்

தண்வயல் புடையணி சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பண் பயில் தமிழ்கொடு பரவிடும் அடியவர் பற்று அறுப்பான் - பண் பொருந்தும் தமிழ்ப்பாமாலைகளால் போற்றும் அடியார்களது பந்தங்களை வேரறுப்பவன்; (பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்);

பெண்மயில் போன்றவள்தனை ஒரு பங்கு எனப் பேணும் அன்பன் - மயில் போன்ற உமாதேவியை ஒரு பாகமாக விரும்பிய காதலன்;

கண் பயில் நெற்றியன் - நெற்றிக்கண்ணன்;

கடல்விடம் உண்டருள் கறைமிடற்றன் - பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டருளிய நீலகண்டன்; (மிடறு - கண்டம்);

தண்-வயல் புடை-ணி சாட்டியக்குடி உறை தந்தைதானே - குளிர்ந்த வயல் சூழ்ந்த சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


2)

புதுமலர் கொண்டடி போற்றினார் வல்வினை போக்கும் அண்ணல்

மதுமலர்க் கொன்றையும் மத்தமும் புனைந்தவன் மானை ஏந்தி

பொதுவினில் ஆடிடும் புண்ணியன் வெண்பொடி பூசும் ஈசன்

சதுர்மறை ஓதிய சாட்டியக் குடியுறை தந்தை தானே.


புதுமலர் கொண்டு அடி போற்றினார் வல்வினை போக்கும் அண்ணல் - நாண்மலர் தூவித் திருவடியை வணங்கும் பக்தர்களது வலிய வினையைத் தீர்க்கும் பெருமான்;

மதுமலர்க்-கொன்றையும் மத்தமும் புனைந்தவன் - தேன் நிறைந்த கொன்றைமலரையும் ஊமத்தமலரையும் சூடியவன்;

மானை ஏந்தி - கையில் மானை ஏந்தியவன்;

பொதுவினில் ஆடிடும் புண்ணியன் - அம்பலத்தில் கூத்தாடும் புண்ணியமூர்த்தி; (பொது - அம்பலம்); (சம்பந்தர் தேவாரம் - 3.93.2 - "வையமார் பொதுவினில் மறையவர் தொழுதெழ நடமதாடும் ஐயன்")

வெண்பொடி பூசும் ஈசன் - வெண்ணீற்றைப் பூசிய ஈசன்;

சதுர்மறை ஓதிய சாட்டியக்குடி உறை தந்தைதானே - நால்வேதங்களைப் பாடியருளிய (& நால்வேதங்களால் பாடப்பெற்ற), சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


3)

நந்திவட் டம்மலர் கொண்டடி தொழவினை நாசம் ஆக்கும்

அந்திவண் ணத்தரன் அரையினில் அரவினை ஆர்த்த ஐயன்

சுந்தர நீற்றினன் தொன்மறை பாடிய தூய நாவன்

சந்திர சேகரன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


நந்திவட்டம்மலர் கொண்டு அடி தொழ வினை நாசம் ஆக்கும் அந்திவண்ணத்து அரன் - நந்தியாவட்டைப்பூக்களைத் தூவித் திருவடியைத் தொழும் அன்பர்களது வினையை அழிக்கும் மாலைநேரத்துச் செவ்வானம் போன்ற செம்மேனியுடைய ஹரன்; (நந்திவட்டம் - நந்தியாவட்டம் - நந்தியாவட்டை); (நந்திவட்டம்மலர் - மகரஒற்று விரித்தல் விகாரம்);

அரையினில் அரவினை ஆர்த்த ஐயன் - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய தலைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

சுந்தர நீற்றினன் - அழகிய திருநீறு பூசியவன்;

தொன்மறை பாடிய தூய நாவன் - பழமை மிகுந்த வேதங்களைப் பாடிய தூய திருநாவினன்;

சந்திரசேகரன் - சந்திரனைத் திருமுடியில் அணிந்தவன்;

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


4)

அலைகிற ஐம்புலன் அடக்கிய யோகியர் அன்பர் நெஞ்சில்

நிலையென நின்றவன் நெற்றியிற் கண்ணினன் நீல கண்டன்

சிலையினிற் கணையினைச் சேர்த்தெயில் செற்றவன் சென்னி மீது

தலைமலி மாலையன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


அலைகிற ஐம்புலன் அடக்கிய யோகியர் அன்பர் நெஞ்சில் நிலையென நின்றவன் - அலையும் ஐம்புலன்களை அடக்கிய யோகியர் நெஞ்சிலும் பக்தர்கள் நெஞ்சிலும் குடிகொண்டவன்;

நெற்றியில் கண்ணினன் - நெற்றிக்கண்ணன்;

நீலகண்டன் - கரிய கண்டம் உடையவன்;

சிலையினில் கணையினைச் சேர்த்து எயில் செற்றவன் - வில்லில் ஓரம்பைத் தொடுத்து முப்புரங்களை எரித்தவன்; (சிலை - வில்); (எயில் - கோட்டை); (செறுதல் - அழித்தல்);

சென்னி மீது தலைமலி மாலையன் - தலைக்குத் தலைமாலை அணிந்தவன்; (தலை - மண்டையோடு);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


5)

அடைவது சிவனடி எனவறிந் திறைஞ்சிடும் அன்பர் கட்குத்

தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் எம்மிறை தாயின் நல்லன்

கடைதொறும் பலிக்குழல் காரணன் ஆரணன் கங்கை யாளைச்

சடையிடைக் கரந்தவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


அடைவது சிவனடி என அறிந்து இறைஞ்சிடும் அன்பர்கட்குத் தடைகளைத் தகர்த்தருள் சங்கரன் - அடையவேண்டியது (/அடையத் தக்கது) சிவனது திருவடி என்று அறிந்து வணங்கும் அன்பர்களுக்கு எல்லாத் தடைகளையும் நீக்கி அருளும் சங்கரன்; (அடைதல் - பெறுதல்; சரண்புகுதல்); (அப்பர் தேவாரம் - 5.31.6 - "தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே");

எம் இறை - எங்கள் இறைவன்;

தாயின் நல்லன் - தாயினும் நல்லவன்; (இன் - ஐந்தாம்வேற்றுமை உருபு);

கடைதொறும் பலிக்கு உழல் காரணன் - வீடுகளின் வாசல்தோறும் பிச்சையேற்கத் திரியும் காரணன்; (கடை - வாயில்); (பலி - பிச்சை); (காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய சிவபிரான்);

ஆரணன் - வேதப்பொருளாக உள்ளவன்; (ஆரணம் - வேதம்);

கங்கையாளைச் சடையிடைக் கரந்தவன் - கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (கரத்தல் - ஒளித்தல்);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


6)

பாங்கொடு பதமலர் பரவிடும் அடியவர் பந்த(ம்) மாய்ப்பவன்

கோங்கன குவிமுலைக் கொடியிடை மலைமகள் கூறு கந்தான்

யாங்கணும் திரிமதில் அவைபட மலைவிலும் அம்ப தொன்றும்

தாங்கிய கையினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


பாங்கொடு பதமலர் பரவிடும் அடியவர் பந்த(ம்) மாய்ப்பவன் - தகுந்தபடி பாதமலரைப் போற்றி வணங்கும் அடியார்களது பந்தங்களைத் தீர்ப்பவன்; (பாங்கு - அழகு; தகுதி); (பதம் - பாதம்); (சம்பந்தர் தேவாரம் - 3.120.9 - "பாண்டிமா தேவி பாங்கினாற் பணிசெய்து பரவ");

கோங்கு அன குவி-முலைக் கொடியிடை மலைமகள் கூறு உகந்தான் - கோங்கின் அரும்பு போன்ற குவிந்த முலையும் கொடி போன்ற இடையும் உடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்தவன்; (அன - அன்ன); (சம்பந்தர் தேவாரம் - 2.41.5 - "கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப் பாங்கென்ன வைத்துகந்தான்");

யாங்கணும் திரி-மதில் அவை பட மலைவிலும் அம்பது ஒன்றும் தாங்கிய கையினன் - எங்கும் திரிந்த முப்புரங்கள் அழியக் கையில் மேருவில்லையும் ஓர் அம்பையும் தாங்கியவன்; (யாங்கணும் - எங்கும்); (படுதல் - அழிதல்); (விலும் - வில்லும்); (அது - பகுதிப்பொருள்விகுதி);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


7)

மழவிடை ஊர்தியன் குழையொரு காதினன் வாழ்த்து வார்தம்

பழவினை தீர்ப்பவன் பாய்புலித் தோல்மிசைப் பாம்பை ஆர்த்தான்

மழையன மிடறினன் மாசுணம் அசைதரு மார்பில் நூலன்

தழலன மேனியன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மழவிடை ஊர்தியன் - இளைய எருதை வாகனமாக உடையவன்; (மழ - இளைய);

குழை ஒரு காதினன் - ஒரு காதில் குழை அணிந்தவன்;

வாழ்த்துவார்தம் பழவினை தீர்ப்பவன் - வாழ்த்தும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவன்;

பாய்-புலித்தோல்மிசைப் பாம்பை ஆர்த்தான் - பாயும் புலியின் தோலை ஆடையாகக் கட்டி அதன்மேல் பாம்பைக் கச்சாகக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

மழை அன மிடறினன் - மேகம் போன்ற கரிய கண்டன்; (மழை - மேகம்); (மிடறு - கண்டம்);

மாசுணம் அசைதரு மார்பில் நூலன் - பாம்பு அசைகின்ற மார்பில் பூணூல் அணிந்தவன்; (மாசுணம் - பாம்பு); (தருதல் - ஒரு துணைவினை);

தழல் அன மேனியன் - தீப் போன்ற செம்மேனியன்;

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


8)

கையினால் மலையெறி காரரக் கன்றனைக் கதற வைத்த

ஐயனோர் கண்தனை அரியிடந் தடியிட ஆழி ஈந்தான்

பையரா பனிமதி படர்சடை வைத்தவன் பால்வெ ணீற்றன்

தையலோர் பங்கினன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


கையினால் மலை எறி கார்-அரக்கன்-தனைக் கதற வைத்த ஐயன் - கைகளால் கயிலைமலையைப் பெயர்த்து வீசிய கரிய அரக்கனான இராவணனைக் கதறி அழவைத்த தலைவன்;

ஓர் கண்தனை அரி இடந்து அடி இட ஆழி ஈந்தான் - ஒரு கண்ணைத் தோண்டிப் பூவாகத் திருவடியில் இட்டு வணங்கிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அருளியவன்;

பை-அரா பனி-மதி படர்-சடை வைத்தவன் - படத்தை உடைய பாம்பையும் குளிர்ந்த திங்களையும் படரும் சடையில் சூடியவன்; (பை - பாம்பின் படம்);

பால்வெணீற்றன் - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவன்; (வெணீற்றன் - வெண்ணீற்றன்);

தையல் ஓர் பங்கினன் - உமையொரு பங்கன்; (தையல் - பெண்);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


9)

மாலயன் நேடிட மாலெரி ஆயினான் வான வர்க்கா

ஆலமுண் டருளினன் அருமறை விரித்திட ஆல மர்ந்தான்

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காத லர்க்குச்

சாலவும் இனியவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


மால் அயன் நேடிட மால் எரி ஆயினான் - திருமால் பிரமன் இருவரும் தேடுமாறு பெரிய ஜோதி ஆனவன்; (மால் எரி - பெரிய ஜோதி); (சம்பந்தர் தேவாரம் - 3.18.9 - "மாலவன் மலரவன் நேடி மால்கொள மாலெரி ஆகிய வரதர்");

வானவர்க்கா ஆலம் உண்டருளினன் - தேவர்களுக்காக ஆலகாலத்தை உண்டு அருளியவன்;

அருமறை விரித்திட ஆல் அமர்ந்தான் - அரிய வேதங்களின் பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் இருந்தவன்;

காலையும் மாலையும் கடிமலர் தூவிடும் காதலர்க்குச் சாலவும் இனியவன் - இருபொழுதும் வாசமலர்களைத் தூவும் பக்தர்களுக்கு மிகுந்த இனிமை பயப்பவன்; (கடி - வாசனை);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


10)

வஞ்சனை மிக்கவர் வாயிலில் வந்துபொய் வார்த்தை சொல்வார்

உஞ்சிட அறிகிலர் உரைமதி யேன்மினீர் ஒற்றை ஏற்றன்

வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவகன் வேண்டி னார்தம்

சஞ்சலம் தீர்ப்பவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


வஞ்சனை மிக்கவர், வாயிலில் வந்து பொய்-வார்த்தை சொல்வார், உஞ்சிட அறிகிலர் உரை மதியேன்மின் நீர் - மிகுந்த வஞ்சனை உடையவர்கள், உங்கள் வீட்டுவாசலில் வந்து பொய்கள் சொல்பவர்கள், உய்ய அறியாதவர்கள் சொல்லும் பேச்சை நீங்கள் பொருட்படுத்தவேண்டா (/ மதிக்கவேண்டா); (உஞ்சிட - உய்ந்திட என்பது மருவியது / போலி); ( அப்பர் தேவாரம் - 6.31.8 - "நெஞ்சமே உஞ்சு போக வழியாவது இதுகண்டாய்");

ஒற்றை ஏற்றன் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவன்; (ஒற்றை - ஒப்பற்ற);

வெஞ்சினக் கூற்றினை விலக்கிய சேவகன் - கடுங்கோபம் உடைய காலனை உதைத்து அழித்த வீரன்; (விலக்குதல் - தடுத்தல்); (சேவகன் - வீரன்); (சுந்தரர் தேவாரம் - 7.29.8 - "தருமனார் தமர் என்னைக் கலக்குவான் வந்தாலும் கடுந்துயர் வாராமே விலக்குவாய்");

வேண்டினார்தம் சஞ்சலம் தீர்ப்பவன் - இறைஞ்சும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;

(அப்பெருமானை வணங்கி உய்யுங்கள் என்பது குறிப்பு);


11)

ஆழ்கடல் கக்கிய அருவிடம் எரித்திட அஞ்சி வானோர்

போழ்மதி சூடியே புண்ணியா என்றடி போற்ற உண்டு

வாழ்வளித் தருளிய மணிமிட றுடையவன் வஞ்சம் இன்றித்

தாழ்பவர்க் கீபவன் சாட்டியக் குடியுறை தந்தை தானே.


ஆழ்கடல் கக்கிய அருவிடம் எரித்திட, அஞ்சி வானோர் - ஆழம் மிக்க கடல் உமிழ்ந்த ஆலகாலம் சுட்டெரிக்க, மிக அஞ்சிய தேவர்கள்;

"போழ்-மதி சூடியே; புண்ணியா" என்று அடி போற்ற - "துண்டத்-திங்களைச் சூடியவனே; புண்ணியமூர்த்தியே" என்று போற்றித் திருவடியை வணங்க; (போழ் - துண்டம்);

உண்டு வாழ்வளித்து அருளிய மணிமிடறுடையவன் - அந்த விஷத்தை உண்டு அவர்களுக்கு வாழ்வளித்த நீலமணிகண்டம் உடையவன்;

வஞ்சம் இன்றித் தாழ்பவர்க்கு ஈபவன் - நெஞ்சில் வஞ்சம் இல்லாத அன்பர்களுக்கு அளிப்பவன்; அன்பர்களுக்குச் சிறிதும் வஞ்சமின்றி வாரி வழங்குபவன்; (தாழ்தல் - வணங்குதல்);

சாட்டியக்குடி உறை தந்தைதானே - சாட்டியக்குடியில் உறையும் நம் அப்பன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment