2014-12-25
P.263 - பொது - தலமாலை - ஒருநாளும் மறவாமல்
–--------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்")
முற்குறிப்பு: ஒவ்வொரு பாடலிலும் ஒரு தலம்; ஈற்றுப்-பாடலில் பல தலங்கள்;
1) --- கருவூர் (கரூர்) ---
ஒருநாளும் மறவாமல் உள்ளத்தில் அன்போடு
திருநாமம் செபித்திருந்த சீலருயிர் கொல்வதற்கு
வருகாலன் மார்பிலுதை மணிகண்டன் வரம்நல்கு
கருவூரன் சீர்கேளார் காதிருந்தும் செவிடர்களே.
மறத்தல் இன்றித் தினமும் உள்ளத்தில் பக்தியோடு திருவைந்தெழுத்தை ஜபம் செய்த சீலரான மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த காலனது மார்பில் உதைத்த நீலமணிகண்டன். அவன் வரம் அருள்பவன். கருவூரில் (கரூரில்) உறைபவன். அப்பெருமானது புகழைக் கேளாதவர்கள் காது இருந்தும் செவிடர்களே.
2) --- சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி) ---
இராவிலரு நடம்புரியும் எம்பெருமான் எருதேறி
அராவலையும் திருமுடிமேல் அலைமலிந்த தண்புனலும்
குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற
சிராமலையான் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.
இராவில் அருநடம் புரியும் எம்பெருமான் - நள்ளிருளில் அரிய கூத்தை ஆடுகின்ற எம்பெருமான்; (இரா - இரவு);
எருதேறி - இடபவாகனன்;
அரா அலையும் திருமுடிமேல் அலை மலிந்த தண்புனலும் குராமலரும் கூவிளமும் கொக்கிறகும் சூடுகின்ற – பாம்பு உலாவும் சென்னிமேல் அலை மிகுந்த குளிர்ந்த கங்கையையும் குரவமலரையும் வில்வத்தையும் கொக்கின் இறகையும் அணிகின்ற; (அரா - பாம்பு); (கூவிளம் - வில்வம்); (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்குவடிவுடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);
சிராமலையான் சீர் கேளார் - திருச்சிராப்பள்ளியில் உறைகின்ற சிவபெருமானது புகழைக் கேளாதவர்கள்; (ஐயடிகள் காடவர்கோன் - சேத்திரத் திருவெண்பா - 11.5.17 - "நெஞ்சே சிராமலையான் பாதமே சேர்");
செவி இருந்தும் செவிடர்களே - காது இருந்தும் செவிடர்களே;
3) --- சிக்கல் ---
முக்கணுடை எம்பெருமான் மூவர்க்கும் முதலானான்
நக்கெயில்கள் மூன்றெரித்த நாதனுமை நங்கையையோர்
பக்க(ம்)மகிழ் கின்றபரன் பாரொடுவிண் பணிந்தேத்தும்
சிக்கலரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.
முக்கணுடை எம்பெருமான் - மூன்று கண்களையுடைய எம்பெருமான்;
மூவர்க்கும் முதல் ஆனான் - மும்மூர்த்திகளுக்கும் முதல்வன்;
நக்கு எயில்கள் மூன்று எரித்த நாதன் - சிரித்து முப்புரங்களை எரித்த தலைவன்; ( நகுதல் - சிரித்தல்);
உமை நங்கையை ஓர் பக்க(ம்) மகிழ்கின்ற பரன் - உமாதேவியைத் திருமேனியில் ஒரு பக்கம் பாகமாக விரும்பிய பரமன்;
பாரொடு விண் பணிந்தேத்தும் சிக்கல் அரன் சீர் கேளார் - மண்ணோரும் வானோரும் வணங்கித் துதிக்கும், திருச்சிக்கலில் உறைகின்ற சிவபெருமானது திருப்புகழைக் கேளாதவர்கள்;
செவி இருந்தும் செவிடர்களே - காது இருந்தும் செவிடர்களே;
4) --- தெங்கூர் ---
பொங்கார்வம் கொண்டடியைப் போற்றிசெயும் பத்தர்க்கு
மங்காத செல்வமருள் மாதேவன் நள்ளிருளில்
வெங்கானில் நடம்செய்யும் கங்காளன் விரிபொழில்சூழ்
தெங்கூரன் சீர்கேளார் செவியிருந்தும் செவிடர்களே.
பொங்கு-ஆர்வம் கொண்டு அடியைப் போற்றிசெயும் பத்தர்க்கு மங்காத செல்வம் அருள் மாதேவன் - பொங்கியெழும் பக்தியால் திருவடியைப் போற்றும் பக்தர்களுக்குக் குன்றாத செல்வத்தை அருளும் மகாதேவன்;
நள்ளிருளில் வெங்கானில் நடம்செய்யும் கங்காளன் - நள்ளிருளில் சுடுகாட்டில் கூத்தாடும், எலும்பால் ஆன மாலை அணிந்த சிவபெருமான்; (வெங்கான் - சுடுகாடு); (கங்காளன் - எலும்பு மாலை அணிந்த சிவபெருமான்);
விரிபொழில்சூழ் தெங்கூரன் சீர் கேளார் - விரிந்த சோலை சூழ்ந்த திருத்தெங்கூரில் உறையும் சிவபெருமானது திருப்புகழைக் கேளாதவர்கள்;
செவி இருந்தும் செவிடர்களே - காது இருந்தும் செவிடர்களே;
5) --- கொடுமுடி ---
நெடுமலையை வில்லாக்கி நெருப்பரிகால் சேர்ந்தமைந்த
சுடுகணையால் புரங்களெய்து சுரர்க்கருள்செய் ஈசனன்பர்
கொடுவினையைத் தீர்க்கின்ற கூத்தனவன் உறைகின்ற
கொடுமுடியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.
நெடுமலையை வில் ஆக்கி, நெருப்பு அரி கால் சேர்ந்து அமைந்த சுடுகணையால் புரங்கள் எய்து சுரர்க்கு அருள்செய் ஈசன் - நீண்ட மேருமலையை வில் ஆக்கி, அக்கினி திருமால் வாயு மூவரும் ஒன்றாகச் சேர்ந்த எரிக்கும் அம்பால் முப்புரங்களை எய்து தேவர்களுக்கு அருளிய ஈசன்; (கால் - காற்று); (சுரர் - தேவர்);
அன்பர் கொடுவினையைத் தீர்க்கின்ற கூத்தனவன் உறைகின்ற கொடுமுடியைக் கூறாதார் - பக்தர்களது கொடிய வினையைத் தீர்த்தளும் கூத்தன் உறையும் கொடுமுடியைத் துதிசெய்யாதவர்கள்; (அப்பர் தேவாரம் - 5.81.5 - "திருக்கொடும்முடி என்றலும் தீவினைக் கருக்கெடும்");
வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தும் ஊமைகளே; (ஊமன் - ஊமையன்);
6) --- கோளிலி (திருக்கோளிலி) - (திருக்குவளை) ---
வாளியென மலரெய்யும் மதனாகம் பொடிசெய்தான்
ஆளிலையென் றருந்தமிழ்சொல் ஆரூரர்க் கருள்புரிந்தான்
தோளிருநான் குடையீசன் தூயனினி துறைகின்ற
கோளிலியைக் கூறாதார் வாயிருந்தும் ஊமர்களே.
வாளி என மலர் எய்யும் மதன் ஆகம் பொடி செய்தான் - மலர்களை அம்பாக ஏவும் மன்மதனுடைய உடலைச் சாம்பலாக்கியவன்; (வாளி - அம்பு); (மதன் - காமன்); (ஆகம் - உடல்); (பொடி - சாம்பல்);
"ஆள் இலை" என்று அரும்-தமிழ் சொல் ஆரூரர்க்கு அருள்புரிந்தான் - "நெல்லைத் திருவாரூருக்கு எடுத்துச் செல்ல ஆள்கள் இல்லை" என்று பதிகம் பாடிய சுந்தரருக்கு அருள்புரிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே");
தோள் இருநான்குடை ஈசன் - எட்டுப் புஜங்களை உடைய ஈசன்;
தூயன் இனிது உறைகின்ற கோளிலியைக் கூறாதார் - பரிசுத்தனான சிவபெருமான் உறைகின்ற திருக்கோளிலியைத் துதிசெய்யாதவர்கள்;
வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தாலும் அதன் பயன் இல்லாத ஊமைகள்;
7) --- மருகல் (திருமருகல்) ---
பெருகுவிடம் கண்டஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்சவுண்டு
கருமணிபோல் திகழ்கண்டன் காழியர்கோன் உரைசெய்த
திருமருவு செந்தமிழ்கேட் டொருவணிகற் குயிர்தந்த
மருகலரன் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.
பெருகு-விடம் கண்டு அஞ்சிப் பெருந்தேவர் இறைஞ்ச, உண்டு, கருமணி போல் திகழ் கண்டன் - பெருகிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சிய பெரிய தேவர்களெல்லாம் வழிபட, அவர்களுக்கு இரங்கி அதனை உண்டு, கரியமணி விளங்குகின்ற கண்டத்தை உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.44.6 - "பித்தனைப் பெருந்தேவர் தொழப்படும் அத்தனை");
காழியர்கோன் உரைசெய்த திரு மருவு செந்தமிழ் கேட்டு ஒரு வணிகற்கு உயிர் தந்த மருகல் அரன் அடி வாழ்த்தார் - திருஞான சம்பந்தர் பாடியருளிய திருப் பொருந்திய செந்தமிழான தேவாரத்தைக் கேட்டு மகிழ்ந்து, ஒரு வணிகனுக்கு மீண்டும் உயிரைத் தந்த திருமருகல் ஈசனது திருவடியை வாழ்த்தாதவர்கள்; (காழி - சீகாழி); (வணிகற்கு - வணிகன் + கு - வணிகனுக்கு); (சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால்" - பதிக வரலாற்றைக் காண்க);
வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தாலும் அதன் பயன் இல்லாத ஊமைகள்;
8) --- வலிவலம் (திருவலிவலம்) ---
வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் மாமலைக்கீழ்
நலிவுறத்தான் விரலூன்றி நாளொடுவாள் ஈந்தபிரான்
புலியதளை அரைக்கசைத்த புராதனன்பூம் பொழில்சூழ்ந்த
வலிவலத்தான் அடிவாழ்த்தார் வாயிருந்தும் ஊமர்களே.
வலிமிகுந்த இருபதுதோள் வாளரக்கன் - வலிமை மிக்க இருபது புஜங்களையுடைய கொடிய அரக்கனான இராவணனை; (வலி - வலிமை); (வாள் - கொடிய);
மாமலைக்கீழ் நலிவுறத்தான் விரல் ஊன்றி - கயிலைமலைக்கீழ் வருந்தும்படி திருப்பாதவிரல் ஒன்றை மலைமேல் ஊன்றி அவனை நசுக்கி;
நாளொடு வாள் ஈந்த பிரான் - (பின் அவன் அழுது தொழக் கேட்டு இரங்கி) அவனுக்கு நீண்ட ஆயுளையும் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளிய பெருமான்;
புலி-அதளை அரைக்கு அசைத்த புராதனன் - புலித்தோலை அரையில் கட்டிய தொன்மையானவன்; (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்);
பூம்பொழில் சூழ்ந்த வலிவலத்தான் அடி வாழ்த்தார் - அழகிய சோலை சூழ்ந்த திருவலிவலத்தில் உறைகின்ற சிவபெருமானது திருவடியை வாழ்த்தாதவர்கள்;
வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தும் ஊமைகளே;
9) --- நன்னிலம் ---
முன்னயனும் திருமாலும் முடியடியைக் காணாராய்ச்
சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்றபிரான்
வன்னிகொன்றை சடைப்புனைந்த மாதேவன் வயல்சூழ்ந்த
நன்னிலத்தான் நலம்புகழார் நாவிருந்தும் ஊமர்களே.
முன் அயனும் திருமாலும் முடியடியைக் காணாராய்ச் சென்னிமிசைக் கைகூப்பத் தீயாகி நின்ற பிரான் - முன்பு பிரமனும் திருமாலும் அடிமுடி தேடிக் காணாராகித் தலைமேல் கைகூப்பி வணங்குமாறு ஜோதி-வடிவில் நின்ற பெருமான்;
வன்னி கொன்றை சடைப் புனைந்த மாதேவன் - வன்னி, கொன்றைமலர் இவற்றைச் சடையில் அணிந்த மகாதேவன்;
வயல் சூழ்ந்த நன்னிலத்தான் நலம் புகழார் நாவிருந்தும் ஊமர்களே - வயல் சூழ்ந்த நன்னிலத்தில் எழுந்தருளிய சிவபெருமானது புகழைப் பேசாதவர்கள் நாக்கு இருந்தும் ஊமைகளே; (சம்பந்தர் தேவாரம் - 2.44.7 - "ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே");
10) --- மறைக்காடு (வேதாரண்யம்) ---
அறக்கூற்றா அவம்பேசும் அறிவிலிகள் நிலையென்னே
மறக்கூற்றம் வந்தக்கால் வஞ்சமொழி காத்திடுமோ
பிறைக்காற்றுச் சடையீந்த பிஞ்ஞகனார் உறைகின்ற
மறைக்காட்டை வாழ்த்தாதார் வாயிருந்தும் ஊமர்களே.
அறக்-கூற்றா அவம் பேசும் அறிவிலிகள் நிலை என்னே - அறம் போல அவமொழி பேசும் மதியினர்களின் கதி என்ன?; (அறக்கூற்றா - அறக்கூற்றாக); (என்னே - 1. என்ன? 2. ஓர் அதிசய இரக்கக் குறிப்பு);
மறக்-கூற்றம் வந்தக்கால் வஞ்சமொழி காத்திடுமோ - கோபமும் கொலைத்தொழிலும் உடைய காலன் வரும்பொழுது அவர்களது வஞ்சனை நிறைந்த வார்த்தைகள் அவர்களைக் காப்பாற்றுமா?; (மறம் - கோபம்; கொலை); (வந்தக்கால் - வந்தபொழுது);
பிறைக்கு ஆற்றுச்-சடை ஈந்த பிஞ்ஞகனார் உறைகின்ற மறைக்காட்டை வாழ்த்தாதார் - கங்கையை அணிந்த சடையில் பிறைக்கும் இடம் தந்த பெருமானார் உறையும் வேதாரண்யத்தை வாழ்த்தாதவர்கள்; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (மறைக்காடு - வேதாரண்யம்);
வாய் இருந்தும் ஊமர்களே - வாய் இருந்தும் ஊமைகளே;
11) --- பல தலங்கள் ---
சேவூரும் பெருமானைத் திரிசூலப் படையானைத்
தேவூரும் பாம்புரமும் சிறுகுடியும் வாய்மூரும்
காவாரும் கைச்சினமும் கன்றாப்பும் உறைவானை
நாவாரத் துதிப்பாரை நலியாதீ வினைதானே.
சே ஊரும் பெருமானைத் - இடபவாகனம் உடைய பெருமானை; (சே - எருது);
திரிசூலப் படையானைத் - சூலாயுதத்தை ஏந்தியவனை; (படை - ஆயுதம்);
சே ஊரும் பெருமான் - இடப வாகனம் உடையவன்;
தேவூரும், பாம்புரமும், சிறுகுடியும், வாய்மூரும், கா ஆரும் கைச்சினமும், கன்றாப்பும் உறைவானை - தேவூர், பாம்புரம், சிறுகுடி, வாய்மூர், சோலை சூழ்ந்த கைச்சினம், கன்றாப்பு (கன்றாப்பூர்) முதலிய தலங்களில் உறைகின்றவனை; (கா - சோலை); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);
நாவாரத் துதிப்பாரை நலியா தீவினைதானே - வாயார வாழ்த்தும் அடியார்களைத் தீவினை வருத்தாது; (ஈசன் அவர்களது தீவினையைத் தீர்த்தருள்வான்);
பிற்குறிப்பு : யாப்பிலக்கணக் குறிப்பு:
செவிடர்களே, ஊமர்களே போன்ற சொற்றொடர்களை அலகிடும்போது "ர்" என்ற ஒற்றை நீக்கி அலகிட்டுக் காய்ச்சீராகக் கொள்ளவேண்டும்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment