2014-12-08
P.259 - குரோம்பேட்டைக் குமரன் குன்றம்
-------------------
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")
முற்குறிப்பு: சென்னையின் தெற்கே தாம்பரம் அருகே உள்ளது குரோம்பேட்டை. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தனிக்கோயிலும் உள்ளது.
1)
பண்டும் இன்றும் என்றுமுளாய் .. பாவை பங்கா எனவாழ்த்தித்
தொண்டு செய்யும் அடியார்தம் .. தொல்லை வினையைத் துடைத்தருள்வான்
அண்டர் வேண்ட அவர்க்கிரங்கி .. அருநஞ் சத்தை அமுதுண்ட
கொண்டற் கண்டன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
பண்டும் இன்றும் என்றும் உளாய் - அன்றும் இன்றும் என்றும் உள்ளவனே;
பாவை-பங்கா என வாழ்த்தித் - உமைபங்கனே என்று வாழ்த்தி;
தொண்டு செய்யும் அடியார்தம் தொல்லை-வினையைத் துடைத்தருள்வான் - தொண்டு செய்யும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்வான்;
அண்டர் வேண்ட அவர்க்கு இரங்கி அருநஞ்சத்தை அமுதுண்ட கொண்டற்-கண்டன் - தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கிக் கொடிய விஷத்தை உண்ட, மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன்; (அண்டர் - தேவர்); (கொண்டல் - மேகம்);
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
2)
நீற்றைப் பூசி நெஞ்சத்தில் .. நிலைத்த நேயம் உடையவராய்
ஆற்றுச் சடையாய் அடல்விடையாய் .. அமரர் கோவே அருளென்று
போற்றி நாளும் பொன்னடியிற் .. பூவிட் டேத்து மாணிக்காக்
கூற்றை உதைத்தான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
நீற்றைப் பூசி நெஞ்சத்தில் நிலைத்த நேயம் உடையவராய் - திருநீற்றைப் பூசி, உள்ளத்தில் நீங்காத அன்பு உடையவர் ஆகி;
"ஆற்றுச்-சடையாய், அடல்-விடையாய், அமரர்-கோவே அருள்" என்று போற்றி - "கங்கையைச் சடையில் உடையவனே, வலிய இடபத்தை வாகனமாக உடையவனே, தேவர்தலைவா, அருள்க" என்று துதித்து;
நாளும் பொன்னடியில் பூ இட்டு ஏத்து மாணிக்காக் கூற்றை உதைத்தான் - தினமும் பொற்பாதத்தில் பூவைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்தவன்; (மாணி - மார்க்கண்டேயர்; மாணிக்கா - மாணிக்காக; கடைக்குறை விகாரம்);
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
3)
புத்தம் புதிய மலர்தூவிப் .. புகழ்ந்து பாடிப் பொன்னடியை
நித்தம் நீள நினைந்தேத்தும் .. நேயர்க் கன்பன் நீள்சடையன்
மத்தன் வலிய அந்தகன்றன் .. மார்பில் கூரார் சூலத்தால்
குத்திச் செற்றான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
புத்தம் புதிய மலர் தூவிப், புகழ்ந்து பாடிப், பொன்னடியை நித்தம் நீள நினைந்தேத்தும் நேயர்க்கு அன்பன் - புதிய பூக்களைத் தூவிப், போற்றிப் பாடிப், பொன்னடியைத் தினமும் தியானித்து வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்;
நீள்சடையன் - நீளும் சடையினன்;
மத்தன் - ஊமத்தமலர் அணிந்தவன்;
வலிய அந்தகன்-தன் மார்பில் கூர் ஆர் சூலத்தால் குத்திச் செற்றான் - வலிய அந்தகாசுரனது மார்பில் கூர்மையான சூலத்தால் குத்தி அவனை அழித்தவன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (செறுதல் - அழித்தல்);
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
4)
பொக்கம் இன்றிப் பொன்னடியைப் .. போற்றிப் பணியும் அடியார்தம்
துக்கம் எல்லாம் தீர்த்தருளித் .. தோன்றாத் துணையாய் நிற்குமரன்
அக்கும் அரவும் அணிமார்பன் .. ஆறு லாவும் சடைமீது
கொக்கின் இறகன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
பொக்கம் இன்றிப் பொன்னடியைப் போற்றிப் பணியும் அடியார்தம் துக்கம் எல்லாம் தீர்த்தருளித் தோன்றாத் துணையாய் நிற்கும் அரன் - வஞ்சனையின்றிப் பொன்னடியை வணங்கும் பக்தர்களது துன்பத்தையும் மனவருத்தத்தையும் தீர்த்துத், தோன்றாத துணையாக உடனிருந்து காக்கும் ஹரன்; (பொக்கம் - பொய்);
அக்கும் அரவும் அணி-மார்பன் - எலும்பையும் பாம்பையும் மாலையாக மார்பில் அணிந்தவன்; (அக்கு - எலும்பு);
ஆறு உலாவும் சடைமீது கொக்கின் இறகன் - கங்கை தங்கிய சடைமேல், கொக்கிறகை அணிந்தவன்; (கொக்கின் இறகு - 1, கொக்கிறகு என்ற மலர்; 2. கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்து அதன் அடையாளமாகச் சூடிய இறகு);
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
5)
ஒன்றும் பலவும் ஆகியவன் .. உமையாள் பங்கன் தில்லைதனுள்
மன்றில் ஆடும் மலர்ப்பாதன் .. மறவா அன்பர் மனத்தளியில்
என்றும் உள்ள எம்பெருமான் .. இளவெண் திங்கள் திகழ்முடிமேல்
கொன்றை சூடி குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
ஒன்றும் பலவும் ஆகியவன் - ஏகன் அனேகன்;
உமையாள் பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;
தில்லைதனுள் மன்றில் ஆடும் மலர்ப்பாதன் - சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் கூத்தாடும் மலர்ப்பாதன்;
மறவா அன்பர் மனத்தளியில் என்றும் உள்ள எம்பெருமான் - மறத்தல் இன்றித் தியானிக்கும் பக்தர்களது மனக்கோயிலில் உறையும் எம்பெருமான்; (தளி - கோயில்);
இள-வெண்-திங்கள் திகழ்-முடிமேல் கொன்றை சூடி - இளைய வெண்மையான பிறை திகழும் திருமுடிமேல் கொன்றைமலரைச் சூடியவன்;
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
6)
பறைகள் ஒலிக்க இருளில்நடம் .. பயிலும் பரமன் படுநஞ்சால்
கறைகொள் கண்டன் கணையெய்த .. காம னைக்காய் கண்ணுதலான்
மறைகள் பாடு மாதேவன் .. வணங்கு கின்ற அடியார்தம்
குறைகள் தீர்க்கும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
பறைகள் ஒலிக்க இருளில் நடம் பயிலும் பரமன் - பறைகள் ஒலிக்க நள்ளிருளில் கூத்தாடும் பரமன்; (இருளினடம் - இருளில் + நடம்); (பயில்தல் - தொடர்ந்து செய்தல்);
படுநஞ்சால் கறைகொள் கண்டன் - கொடிய ஆலகாலத்தால் கறையை அணிந்த கண்டம் உடையவன்; (படுத்தல் - கொல்லுதல்; அழித்தல்); (படு - கொடிய);
கணை எய்த காமனைக் காய்- கண்ணுதலான் - மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்;
மறைகள் பாடு மாதேவன் - வேதங்களைப் பாடியருளிய மகாதேவன்; வேதங்கள் போற்றிப் பாடுகின்ற மகாதேவன்;
வணங்குகின்ற அடியார்தம் குறைகள் தீர்க்கும் - வணங்கும் பக்தர்களது குறைகளைத் தீர்த்தருளும்;
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
7)
பிழைசெய் தாதை தாள்துணித்த .. பிள்ளை சண்டிக் கருளீசன்
பழையாய் பதியே அருளென்று .. பணிந்த தேவர் உயிர்காத்த
மழையார் மிடற்றன் கயிலாய .. மலையன் கையில் மழுவேந்தி
குழையோர் செவியன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
பிழைசெய் தாதை-தாள் துணித்த பிள்ளை சண்டிக்கு அருள் ஈசன் - (சிவவழிபாட்டைக் கெடுத்துக்) குற்றம் செய்த தந்தையின் இருகால்களையும் வெட்டிய மகனாரான சண்டீசருக்கு அருளிய ஈசன்; (தாதை - தந்தை); (துணித்தல் - வெட்டுதல்);
"பழையாய் பதியே அருள்" என்று பணிந்த தேவர் உயிர் காத்த மழை ஆர் மிடற்றன் - "புராதனனே; தலைவனே; அருளாய்" என்று இறைஞ்சிய தேவர்களது உயிரைக் காத்த, மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (மழை = மேகம்); (ஆர்தல் - ஒத்தல்);
கயிலாய மலையன் - கயிலைமலையில் வீற்றிருப்பவன்;
கையில் மழு ஏந்தி - கையில் மழுவை ஏந்தியவன்;
குழை ஓர் செவியன் - ஒரு காதில் குழை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
8)
சூலப் படையான் திருமலையைத் .. துணிந்து தூக்கு தசமுகனைச்
சால நாள்கள் அழுமாறு .. தனியோர் விரலால் நசுக்கியவன்
மூலர் மூவா யிரந்தமிழை .. மொழிய அருள்செய் முக்கண்ணன்
கோலப் பிறையன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
சூலப்படையான் திருமலையைத் துணிந்து தூக்கு தசமுகனைச் - சூலாயுதத்தை ஏந்தும் சிவபெருமான் உறையும் கயிலைமலையைத் துணிந்து பேர்த்துத் தூக்கிய இராவணனை;
சால நாள்கள் அழுமாறு தனி ஓர் விரலால் நசுக்கியவன் - பல காலம் அழும்படி அவனை ஒரே ஒரு விரலால் நசுக்கிய பெருமான்;
மூலர் மூவாயிரம் தமிழை மொழிய அருள்செய் முக்கண்ணன் - திருமூலரைத் திருமந்திரம் பாட அருள்செய்த நெற்றிக்கண்ணன்; (மூவாயிரம் தமிழ் - 3000 பாடல்களையுடைய திருமந்திரம்);
கோலப் பிறையன் - அழகிய பிறையை அணிந்தவன்;
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
9)
தோடி லங்கும் திருச்செவியன் .. சுடலைப் பொடியன் தூமறைகள்
பாடி யருளும் திருநாவன் .. பன்றி அன்னம் அடிமுடியைத்
தேடி நாண எழுசோதி .. சிவனே அருளென் றடியார்கள்
கூடிப் போற்றும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
தோடு இலங்கும் திருச்செவியன் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;
சுடலைப்பொடியன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;
தூமறைகள் பாடியருளும் திருநாவன் - தூய வேதங்களைப் பாடியருளியவன்;
பன்றி அன்னம் அடிமுடியைத் தேடி நாண எழு-சோதி - திருமாலும் பிரமனும் பன்றியும் அன்னப்பறவையும் ஆகி அடியையும் முடியையும் தேடிக் காணாது நாணுமாறு உயர்ந்த ஜோதி;
"சிவனே அருள்" என்று அடியார்கள் கூடிப் போற்றும் - "சிவனே அருளாய்" என்று பக்தர்கள் திரண்டு போற்றுகின்ற;
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
10)
பாதை அறியாப் புன்னெறியார் .. பகலில் விளக்கைப் பிடித்துழல்வார்
வாதை சேர்க்கும் அவர்மொழியில் .. மயங்கேல் திருவைந் தெழுத்தோதின்
தீதை நீக்கித் திருவருள்வான் .. திங்கள் திகழும் செஞ்சடையான்
கோதை பங்கன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
பாதை அறியாப் புன்னெறியார் பகலில் விளக்கைப் பிடித்து உழல்வார் - செல்லத்தக்க மார்க்கத்தை அறியாத புன்னெறிகளில் ஒழுகுபவர்கள் பகலில் ஒரு விளக்கை ஏந்தித் திரிபவர்கள் போன்றவர்கள்; (புன்னெறி - பொய்ச்சமயங்கள்; தீநெறிகள்);
வாதை சேர்க்கும் அவர்-மொழியில் மயங்கேல் - துன்பத்தில் சேர்க்கும் அவர்களது பேச்சில் மயங்கவேண்டா; (வாதை - துன்பம்); (ஏல் - எதிர்மறை ஏவல்ஒருமை விகுதி);
திருவைந்தெழுத்து ஓதின் தீதை நீக்கித் திரு அருள்வான் - பஞ்சாக்ஷரம் (நமச்சிவாய மந்திரம்) ஓதினால் தீமையை நீக்கித் திருவை அருள்பவன்;
திங்கள் திகழும் செஞ்சடையான் - சிவந்த சடையில் சந்திரனைச் சூடியவன்;
கோதை பங்கன் - உமைபங்கன்; (கோதை - பெண்);
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
11)
அரையா அருளென் றடிபோற்றி .. அமரர் இறைஞ்ச மேருவெனும்
வரையே வில்லா வளைவித்து .. வாயு மால்தீக் கணைகோத்து
விரவார் புரங்கள் மூன்றுமுடன் .. வெந்து பொடியாய் விழவெய்த
குரையார் கழலன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.
"அரையா அருள்" என்று அடிபோற்றி அமரர் இறைஞ்ச - "அரசனே அருளாய்" என்று திருவடியைத் தேவர்கள் வணங்க; (அரையன் - அரசன்);
மேரு எனும் வரையே வில்லா வளைவித்து, வாயு மால் தீக் கணை கோத்து - மேருமலையையே வில்லாக வளைத்து, அக்கினி திருமால் வாயு இம்மூவரையும் ஒரு கணையாகக் கோத்து; (வரை - மலை); (வளைவித்தல் - வளையச்செய்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.2 - "மலையார் சிலையா வளைவித்தவனே");
விரவார் புரங்கள் மூன்றும் உடன் வெந்து பொடியாய் விழ எய்த - எதிர்த்த அசுரர்களது முப்புரங்களும் ஒருங்கே உடனே வெந்து சாம்பலாகி அழிய எய்த; (விரவார் - பகைவர்);
குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்தவன்;
குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment