Wednesday, February 3, 2021

P.256 - திருத்தவத்துறை - சேம வைப்பென

2014-12-01

P.256 - திருத்தவத்துறை (லால்குடி)

(லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில்)

---------------------------

(அறுசீர் விருத்தம் - மா கூவிளம் விளம் விளம் விளம் மாங்காய் - வாய்பாடு;

முதற்சீர் ஈற்றில் குறில் / குறில்+ஒற்று)

(சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "என்ன புண்ணியம் செய்தனை");


1)

சேம வைப்பென உள்ளவன் சேவடி தினந்தொழு தெழுகின்ற

தூம னத்தினர் தொல்வினைத் தொடரினைத் துடைத்தருள் புரிநாதன்

நாமம் ஆயிரம் உடையவன் விடையவன் நச்சர வரைநாணன்

சாம வேதியன் தண்வயல் புடையணி தவத்துறைப் பெருமானே.


சேமவைப்பு என உள்ளவன் சேவடி தினம் தொழுதெழுகின்ற - (பக்தர்களுக்கு) வைப்புநிதியாக உள்ள ஈசனது சிவந்த திருவடியைத் தினமும் வழிபடும்; (சேமவைப்பு - சேமநிதி - வைப்புப்பொருள்);

தூ-மனத்தினர் தொல்வினைத் தொடரினைத் துடைத்துருள்புரி நாதன் - தூய நெஞ்சுடைய பக்தர்களது பழவினைப் பந்தத்தை அழித்து அருளும் தலைவன்; (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);

நாமம் ஆயிரம் உடையவன் - ஆயிரம் திருப்பெயர்கள் உடையவன்;

விடையவன் - இடபவாகனன்;

நச்சரவு அரைநாணன் - விஷப்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (அர / அரவு - பாம்பு);

சாமவேதியன் - சாமவேதம் ஓதுபவன்;

தண்-வயல் புடை-ணி தவத்துறைப் பெருமானே - குளிர்ந்த வயல் சூழ்ந்த திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


2)

செந்த மிழ்த்தொடை செப்பிய நாவராய்த் திருவடி பணிவார்தம்

பந்தம் அற்றிடப் பரிந்தருள் கின்றவன் பாற்கடல் விடமுண்ட

அந்தம் இல்புகழ் உடையவன் ஆல்நிழல் அருமறை விரிபண்பன்

தந்தை தாயிலி தனிவிடை ஊர்தியன் தவத்துறைப் பெருமானே.


செந்தமிழ்த்தொடை செப்பிய நாவராய்த் திருவடி பணிவார்தம் பந்தம் அற்றிடப் பரிந்து அருள்கின்றவன் - தமிழ்ப்-பாமாலைகள் ஓதி வணங்கும் பக்தர்களது பந்தம் தீர இரங்கி அருள்பவ்ன்;

பாற்கடல் விடம் உண்ட அந்தம் இல் புகழ் உடையவன் - ஆலகாலத்தை உண்ட முடிவற்ற புகழ் உடையவன்;

ஆல்நிழல் அருமறை விரி-பண்பன் - கல்லாலமரத்தின்கீழ் அரிய வேதங்களை உபதேசித்தவன்; (விரித்தல் - உபதேசித்தல்);

தந்தை-தாயிலி - தனக்குத் தந்தை தாய் இல்லாதவன்;

தனி விடை ஊர்தியன் - ஒப்பற்ற இடபவாகனத்தை உடையவன்; (தனி - ஒப்பற்ற);

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


3)

கண்ப னித்திடக் கரதலங் குவிந்திடக் கரைமனம் உடையார்தம்

திண்ப வத்தொடர் சிந்திட இனிதருள் செய்திடும் திருவாளன்

விண்ப ராவிட வெங்கணை ஒன்றினால் மேவலர் புரமெய்தான்

தண்பு னல்சடைத் தாங்கிய சதுரினன் தவத்துறைப் பெருமானே.


கண் பனித்திடக் கரதலம் குவிந்திடக் கரைமனம் உடையார்தம் – கண்கள் நீர் கசியக், கைகள் குவியக், கரையும் மனம் உடைய பக்தர்களது; (சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்தந்தாதி - 11.6.11 - “நெஞ்சந் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம்மலர அஞ்செங் கரதலங் கூம்ப");

திண்-பவத்தொடர் சிந்திட இனிது அருள் செய்திடும் திருவாளன் - வலிய பிறவித்தொடர் தீரும்படி இன்னருள் செய்யும் திருவுடையவன்; (சிந்துதல் - அழிதல்);

விண் பராவிட வெங்கணை ஒன்றினால் மேவலர் புரம் எய்தான் - தேவர்கள் துதிக்க இரங்கிச் சுடுகணை ஒன்றால் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (பராவுதல் - பரவுதல் - ஏத்துதல்); (மேவலர் - மேவார் - பகைவர்);

தண்புனல் சடைத் தாங்கிய சதுரினன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கிய வல்லமையுடையவன்;

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


4)

ஐய னேஉனை அன்றியார் துணையெனும் அன்பருக் கருளண்ணல்

செய்ய மேனியன் திங்களை அரவினைச் செஞ்சடை அணிதேவன்

மைய ணிந்தமா மிடறினன் வெண்பொடி மார்பினன் மழுவாளன்

தைய லாள்தனைப் பங்கமர் அருத்தியன் தவத்துறைப் பெருமானே.


"ஐயனே; உனை அன்றி யார் துணை?" எனும் அன்பருக்கு அருள் அண்ணல் - "ஐயனே! உன்னைத் தவிர வேறு யார் என் துணை?" என்று இறைஞ்சும் பக்தர்களுக்கு அருளும் தலைவன்;

செய்ய மேனியன் - செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

திங்களை அரவினைச் செஞ்சடை அணி-தேவன் - சந்திரனையும் பாம்பையும் சிவந்த சடையில் அணிந்த தேவன்;

மை அணிந்த மா-மிடறினன் - அழகிய நீலகண்டம் உடையவன்; (மிடறு - கண்டம்); (மிடறினன் - மிடற்றினன்);

வெண்பொடி மார்பினன் - வெண்ணீற்றைத் திருமார்பில் பூசியவன்;

மழுவாளன் - மழுவை ஏந்தியவன்;

தையலாள்தனைப் பங்கு அமர்- அருத்தியன் - உமையை ஒரு பாகமாக விரும்பும் அன்புடையவன்; (அருத்தி - அன்பு; ஆசை);

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


5)

வேந்த னேஒரு வெள்விடை ஏறிய வெல்கொடி உடையானே

ஏந்த லேயென இணையடி தொழுபவர் இன்புற அருள்நம்பன்

மாந்து நஞ்சினை மணிசெய வல்லவன் மாசுணம் அரையார்த்தான்

சாந்த மாகவெண் ணீற்றினைப் பூசிய தவத்துறைப் பெருமானே.


"வேந்தனே; ஒரு வெள்விடை ஏறிய வெல்கொடி உடையானே - "அரசனே; ஒப்பற்ற இடபச்சின்னம் திகழும் வெற்றிக்கொடி உடையவனே;

ஏந்தலே" என இணையடி தொழுபவர் இன்புற அருள்-நம்பன் - "பெருமை மிக்கவனே" என்று போற்றி இருதிருவடிகளை வணங்கும் பக்தர்கள் இன்பம் அடைய அருளும் நம்பன்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);

மாந்து நஞ்சினை மணிசெய வல்லவன் - உண்ட விஷத்தை அரிய மணி ஆக்கியவன்; (மாந்துதல் - உண்ணுதல்); (செய - செய்ய; இடைக்குறை-விகாரம்);

மாசுணம்ரைர்த்தான் - வரிகள் உடைய பாம்பை அரையில் அரைநாணாகக் கட்டியவன்; (மாசுணம் - பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்);

சாந்தமாக வெண்ணீற்றினைப் பூசிய - சந்தனம்போல் திருநீற்றைப் பூசிய; (சாந்தம் - சந்தனம்); (சுந்தரர் தேவாரம் - 7.49.9 - "சாந்தமாக வெண்ணீறு பூசி");

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


6)

அக்கும் ஆமையும் அணிதிரு மார்பினன் அயன்சிரம் கரமேந்தி

நக்க னாய்ப்பலி தேர்ந்துழல் பெருமையன் நம்பனை மதியாத

தக்கன் வேள்வியைத் தகர்த்தவன் தழல்வணன் சடையினிற் சலமேற்றான்

சக்க ரத்தினாற் சலந்தர னைச்செறு தவத்துறைப் பெருமானே.


அக்கும் ஆமையும் அணி- திருமார்பினன் - திருமார்பில் எலும்பையும் ஆமையோட்டையும் அணிந்தவன்; (அக்கு - எலும்பு); (ஆமை - ஆமையின் ஓடு);

அயன்சிரம் கரம் ஏந்தி நக்கனாய்ப் பலிதேர்ந்து உழல் பெருமையன் - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தித் திகம்பரனாய் பிச்சையேற்று உழலும் பெருமை உடையவன்; (நக்கன் - ஆடை அணியாதவன்); (பலி தேர்தல் - யாசித்தல்);

நம்பனை மதியாத தக்கன் வேள்வியைத் தகர்த்தவன் - சிவனை இகழ்ந்து தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

தழல்வணன் - தீவண்ணன்;

சடையினில் சலம் ஏற்றான் - சடையில் கங்கையை ஏற்றவன்; (சலம் - ஜலம் - கங்கை);

சக்கரத்தினால் சலந்தரனைச் செறு- - சக்கரத்தால் ஜலந்தராசுரனை அழித்த; (செறுதல் - அழித்தல்);

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


7)

வாளி ஐந்துடை மன்மதன் அனங்கனா மாறிட விழிசெய்தான்

தோளில் வெண்பொடி துலங்கிடு சுந்தரன் சுடர்மதி புனையீசன்

வாளி லங்கிய மைவிழி பங்கினன் மாணியின் உயிர்காக்கத்

தாளி னால்நமன் தன்னக லத்துதை தவத்துறைப் பெருமானே.


வாளி ஐந்துடை மன்மதன் அனங்கனா மாறிட விழிசெய்தான் - ஐந்து அம்புகளை உடைய காமன் அனங்கனாக (= உருவம் அற்றவனாக) மாறும்படி நெற்றிக்கண்ணால் நோக்கி அவனை எரித்தவன்; (வாளி - அம்பு); (விழிசெய்தல் - கண்ணைத் திறந்து பார்த்து எரித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.8 - "வேள்பட விழிசெய்தன்று");

தோளில் வெண்பொடி துலங்கிடு சுந்தரன் - புஜங்களில் வெண்ணீற்றைப் பூசிய அழகன்;

சுடர்மதி புனை ஈசன் - ஒளிவீசும் திங்களை அணிந்த ஈசன்;

வாள் இலங்கிய மைவிழி பங்கினன் - ஒளியுடைய மையணிந்த கண்களையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (வாள் - ஒளி);

மாணியின் உயிர் காக்கத் தாளினால் நமன்தன்கலத்துதை - மார்க்கண்டேயரது உயிரைக் காக்கும்பொருட்டுத் திருவடியால் காலனது மார்பில் உதைத்த; (மாணி - மார்க்கண்டேயர்); (அகலம் - மார்பு);

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


8)

மிண்ட னாய்அரு வெற்பெறி அரக்கனை வீரிட விரலூன்றித்

தொண்ட னாய்அவன் துணையடி இசைகொடு துதிசெய வரமீந்தான்

பண்டை நான்மறை பாடிய நாவினன் பசுபதி அடிபோற்றித்

தண்ட மிழ்த்தொடை சாத்திடு வார்க்கருள் தவத்துறைப் பெருமானே.


மிண்டனாய் அருவெற்பு எறி- அரக்கனை வீரிட விரல் ஊன்றித் - கல்நெஞ்சனாகிக் கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற இராவணன் வீரிட்டு அழும்படி அவனைத் திருப்பாதவிரல் ஊன்றி நசுக்கி; (மிண்டன் - கல்நெஞ்சன்); (அருவெற்பு - கயிலைமலை); (வீரிடுதல் - திடீரெனக் கத்துதல்);

தொண்டனாய் அவன் துணையடி இசைகொடு துதிசெய வரம் ஈந்தான் - (பின்) அவன் பக்தனாகி இருதிருவடிகளை இசையால் துதித்துப் பாடக் கேட்டு இரங்கி வரங்கள் கொடுத்தவன்; (துணை - இரட்டை);

பண்டை நான்மறை பாடிய நாவினன் - தொன்மையான நால்வேதங்களைப் பாடியருளியவன்; (பண்டை - பழமை);

பசுபதி - உயிர்களுக்கெல்லாம் தலைவன்;

அடிபோற்றித் தண்-தமிழ்த்தொடை சாத்திடுவார்க்கு அருள்- - அவன் திருவடியைப் போற்றிக் குளிர்ந்த தமிழ்ப்பாமாலைகளைச் சூட்டும் பக்தர்களுக்கு அருள்கின்ற;

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


9)

பூவின் மேலயன் புள்ளமர் அரியிவர் போற்றிய உயர்சோதி

ஆவின் அஞ்சுகந் தாடினான் அரையினில் ஐந்தலை அரவார்த்தான்

தேவி பங்கினன் மூவிலை வேலினன் தேசினன் பிறவில்லான்

சாவி லாதவன் தாள்பணி வார்க்கருள் தவத்துறைப் பெருமானே.


பூவின்மேல் அயன் புள்மர் அரிவர் போற்றிய உயர்-சோதி - தாமரைமேல் உறையும் பிரமனும் பறவையை (கருடனை) வாகனமாக உடைய திருமாலும் போற்றிய எல்லையின்றி உயர்ந்த ஜோதி;

ஆவின்-அஞ்சுகந்து ஆடினான் - பசுவிடத்துப் பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்; (ஆவினஞ்சு - ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்); (உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்);

அரையினில் ஐந்தலை அரவு ஆர்த்தான் - ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

தேவி-பங்கினன் - உமைபங்கன்;

மூவிலை-வேலினன், தேசினன் - திரிசூலன், ஒளியுருவினன்; (தேசு - தேஜஸ் - ஒளி);

பிறவு இல்லான், சாவு இலாதவன் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (பிறவு - பிறப்பு); (1.110.1 - "பெருந்தகை பிறவினொ டிறவுமானான்");

தாள் பணிவார்க்கு அருள்- - திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற;

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


10)

அவமு ரைத்தலை அறமென நினைபவர் அலப்பலை மதியேன்மின்

சிவன்ம லர்க்கழல் தினந்தொறும் நினைந்தவன் திருப்பெயர் தனையோதிப்

பவம றுத்தருள் பரம்பர னேயெனப் படகெனக் கரைசேர்ப்பான்

தவமி யற்றிய எழுவருக் கருளிய தவத்துறைப் பெருமானே.


அவம் உரைத்தலை அறம் என நினைபவர் அலப்பலை மதியேன்மின் - அவமொழிகள் பேசுவதையே சிறந்த அறம் என்று நினைக்கும் புன்னெறியாளர்களது பிதற்றலை நீங்கள் மதிக்கவேண்டா; (நினைதல் - எண்ணுதல்); (அலப்பல் - பிதற்றல்); (மதியேன்மின் - நீங்கள் மதிக்கவேண்டா);

சிவன் மலர்க்கழல் தினந்தொறும் நினைந்து அவன் திருப்பெயர்தனை ஓதிப் - சிவபெருமானது மலரடியைத் தினமும் எண்ணி அவன் திருநாமத்தைச் சொல்லி;

"பவம் அறுத்தருள் பரம்பரனே" எனப், படகு எனக் கரைசேர்ப்பான் - "பிறவிகளைத் தீர்த்தருள்க, மிகவும் மேலானவனே" என்று இறைஞ்சினால், (வினைக்கடலில் / பிறவிக்கடலில்) படகு போல வந்து நம்மை உய்விப்பவன் (/ உய்விப்பான்); (திருவாசகம் - கோயில் மூத்த திருப்பதிகம் - 8.21.5 - "கரைசேர் அடியார் களிசிறப்ப");

தவம் இயற்றிய எழுவருக்கு அருளிய - சப்தரிஷிகளுக்கு அருள்செய்த; (* இத்தலவரலாற்றைச் சுட்டியது; சப்தரிஷீஸ்வரர் - இத்தலத்து ஈசன் திருநாமம்);

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


11)

இடையில் வஞ்சியும் நடையினில் அன்னமும் இணையென உடையாள்கோன்

படையிற் பாரிடம் பலவுடை இறையவன் பலிபெற மடவார்கள்

கடையில் நிற்பவன் கடிமலர்க் கொன்றையும் கங்கையும் அணிகின்ற

சடையில் ஒண்மதி தங்கிட அருளிய தவத்துறைப் பெருமானே.


இடையில் வஞ்சியும் நடையினில் அன்னமும் இணையென உடையாள்கோன் - கொடி போன்ற இடையும் அன்னம் போன்ற நடையும் உடைய உமைக்குக் கணவன்; (வஞ்சி - கொடி);

படையில் பாரிடம் பலவுடை இறையவன் - பலபூதங்கள் இருக்கும் படையை உடைய இறைவன்; (பாரிடம் - பூதம்); (இறையவன் - இறைவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.11.1 - "பல பூதப்படை யுடையான்"); (சம்பந்தர் தேவாரம் - 3.56.1 - "இறையவன் ஈசன் எந்தை");

பலி பெற மடவார்கள் கடையில் நிற்பவன் - பிச்சை பெறப் பெண்களின் வீட்டுவாசலில் வந்து நிற்பவன்; (பலி - பிச்சை); (கடை - வாயில்);

கடிமலர்க் கொன்றையும் கங்கையும் அணிகின்ற சடையில் ஒண்மதி தங்கிட அருளிய - வாசம் மிகுந்த கொன்றைமலரையும் கங்கையையும் அணிந்த சடையில் ஒளியுடைய சந்திரன் வாழ அருள்செய்த; (கடி - வாசனை);

தவத்துறைப் பெருமானே - திருத்தவத்துறையில் (லால்குடியில்) உறைகின்ற பெருமான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

No comments:

Post a Comment