Monday, March 31, 2025

P.367 - அம்பர் மாகாளம் (கோயில் திருமாளம்) - இறைவா காத்தருளாய்

2016-12-10

P.367 - அம்பர் மாகாளம் (கோயில் திருமாளம்)

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.40.1 - "எம்பிரான் எனக்கமுதம் ஆவானும்")


1)

இறைவாகாத் தருளாயென் றிமையோர்கள் அடிபரவக்

கறையேற்ற மிடற்றானைக் கண்ணிலங்கு நுதலானை

மறையானை அணிஅம்பர் மாகாளம் மேயானை

நறையார்பூக் கொண்டேத்த நமையிடர்கள் நண்ணாவே.


"இறைவா! காத்து அருளாய்" என்று இமையோர்கள் அடி பரவக் கறை ஏற்ற மிடற்றானைக் - "இறைவனே! காவாய்" என்று தேவர்கள் திருவடியைப் போற்றி வழிபடவும், (இரங்கி விடம் உண்டு) கண்டத்தில் கறையை ஏற்றவனை; (மிடறு - கண்டம்);

கண் இலங்கு நுதலானை - நெற்றிக்கண்ணனை; (நுதல் - நெற்றி);

மறையானை - வேதசொரூபனை; வேதங்களை அருளியவனை;

அணி அம்பர் மாகாளம் மேயானை - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

நறை ஆர் பூக்கொண்டு ஏத்த நமை இடர்கள் நண்ணாவே - வாசம் மிக்க பூக்களால் வழிபட்டால் நம்மை இடர்கள் அடையமாட்டா;


2)

பணியூரும் முடியானைப் பவளம்போல் மேனியனைப்

பிணியேதும் இல்லாத பெருமானைக் கண்டத்தில்

மணியானை அணிஅம்பர் மாகாளம் மேயானைப்

பணிவாரைப் பழவினைகள் பற்றாமல் அற்றிடுமே.


பணி ஊரும் முடியானைப் - நாகம் ஊர்கின்ற திருமுடி உடையவனை; (பணி - நாகப்பாம்பு);

பவளம் போல் மேனியனைப் - பவளம் போலச் செம்மேனி உடையவனை;

பிணி ஏதும் இல்லாத பெருமானைக் - பந்தங்கள் இல்லாத பெருமானை;

கண்டத்தில் மணியானை - நீலகண்டனை;

அணி அம்பர் மாகாளம் மேயானைப் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

பணிவாரைப் பழவினைகள் பற்றாமல் அற்றிடுமே - வணங்கும் அடியவர்களை அவர்களது பழைய வினைகள் பற்றமாட்டா; அவை அழியும்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்); (திருவாசகம் - அச்சோப்பதிகம் - 8.51.1 - "பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்");


3)

சிலையாக வரையேந்தித் திரிபுரங்கள் எய்தானைத்

தலைமீது தலைமாலை தரித்தானைக் கயிலாய

மலையானை அணிஅம்பர் மாகாளம் மேயானைத்

தலையாரக் கும்பிடுவார் தமைவினைகள் சாராவே.


சிலையாக வரை ஏந்தித் திரிபுரங்கள் எய்தானைத் - வில்லாக மலையை ஏந்தி முப்புரங்களை எய்தவனை; (சிலை - வில்); (வரை - மலை);

தலைமீது தலைமாலை தரித்தானைக் - தலைக்குத் தலைமாலை அணிந்தவனை;

கயிலாய மலையானை - கயிலைமலைமேல் வீற்றிருப்பவனை;

அணி அம்பர் மாகாளம் மேயானைத் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

தலையாரக் கும்பிடுவார்தமை வினைகள் சாராவே - தலையால் வணங்கும் அடியவர்களை வினைகள் அணுகமாட்டா;


4)

இளைத்திமையோர் இணையடியை இறைஞ்சவிடம் உண்டகருங்

களத்தினனைப் புரமெரிக்கக் கனவரையை வில்லாக

வளைத்தவனை அணிஅம்பர் மாகாளம் மேயானை

உளத்தினில்வைத் தடிதொழுதால் ஒல்லைவினை மாய்ந்தறுமே;


இளைத்து இமையோர் இணையடியை இறைஞ்ச, விடம் உண்ட கருங் களத்தினனைப் - வருந்தித் தேவர்கள் இரு-திருவடிகளை வழிபடவும், இரங்கி நஞ்சை உண்ட நீலகண்டனை; (இளைத்தல் - வாடுதல்; வருந்துதல்); (இமையோர் - தேவர்); (களம் - கண்டம்; கழுத்து);

புரம் எரிக்கக் கன-வரையை வில்லாக வளைத்தவனை - முப்புரங்களை எரிப்பதற்காகப் பெரிய மலையை வில்லாக வளைத்தவனை; (கனம் - பெருமை; பாரம்); (வரை - மலை);

அணி அம்பர் மாகாளம் மேயானை - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

உளத்தினில் வைத்து அடிதொழுதால் ஒல்லை வினை மாய்ந்து அறுமே - உள்ளத்தில் இருத்தித் திருவடியை வழிபட்டால் வினைகள் சீக்கிரம் அழிந்தொழியும்; (ஒல்லை - சீக்கிரம்; விரைவு);


5)

மாயானைப் பிறவானை வார்சடைமேற் பிறையானைத்

தூயானை ஆறங்கம் தொன்மறைகள் நாலோதும்

வாயானை அணிஅம்பர் மாகாளம் மேயானை

மாயானை உரியானை வாழ்த்தவினை மாய்ந்தறுமே.


மாயானைப் பிறவானை - இறப்பும் பிறப்பும் இல்லாதவனை; (மாய்தல் - அழிதல்; சாதல்);

வார்-சடைமேல் பிறையானைத் - நீண்ட சடையின்மேல் சந்திரனை அணிந்தவனை;

தூயானை - தூயவனை;

ஆறு-அங்கம் தொல்மறைகள் நாலு ஓதும் வாயானை - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் திருவாயால் ஓதியவனை;

அணி அம்பர் மாகாளம் மேயானை - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

மா-யானை உரியானை வாழ்த்த, வினை மாய்ந்து அறுமே - பெரிய யானையின் தோலைப் போர்த்தவனை வாழ்த்தினால், நம் வினை அழிந்தொழியும்; (உரி - தோல்);


6)

மதியாத தக்கன்செய் மாவேள்வி தகர்த்தானை

உதியானை மரியானை உரகஞ்சேர் சடைமீது

மதியானை அணிஅம்பர் மாகாளம் மேயானைத்

துதிபாடித் தொழுவார்தம் தொல்லைவினை மாய்ந்தறுமே.


மதியாத தக்கன் செய் மா வேள்வி தகர்த்தானை - அவமதித்த தக்கன் செய்த பெரிய யாகத்தை அழித்தவனை;

உதியானை மரியானை - பிறப்பும் இறப்பும் இல்லாதவனை; (உதித்தல் - பிறத்தல்); (கந்தர் அநுபூதி - 18 - "உதியா, மரியா, உணரா, மறவா");

உரகம் சேர் சடைமீது மதியானை - பாம்பு இருக்கும் சடையின்மேல் திங்களை அணிந்தவனை; (உரகம் - பாம்பு);

அணி அம்பர் மாகாளம் மேயானைத் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

துதி பாடித் தொழுவார்தம் தொல்லை-வினை மாய்ந்து அறுமே - தோத்திரம் செய்து வழிபடும் அன்பர்களுடைய பழைய வினைகள் அழிந்தொழியும்; (தொல்லை - பழைய); (திருவாசகம் திருவுந்தியார் - 8.14.13 - "தொல்லை வினைகெட உந்தீபற");


7)

கூன்பிறையைச் சூடிதனைக் கூரிலங்கு மூவிலைவேல்

மான்மழுவாள் தரித்தானை மார்பில்வெண் ணூலானை

வான்பொழில்சூழ் அணிஅம்பர் மாகாளம் மேயானைத்

தேன்மலரால் தொழுவார்தம் தீவினைகள் தேய்ந்தறுமே.


கூன்-பிறையைச் சூடிதனைக் - வளைந்த பிறையைச் சூடியவனை; (கூன் - வளைவு); (சூடி - சூடியவன்);

கூர் இலங்கு மூவிலைவேல் மான் மழுவாள் தரித்தானை - கூர்மை பொருந்திய திரிசூலம், மான், மழுப்படை இவற்றைக் கையில் ஏந்தியவனை;

மார்பில் வெண்ணூலானை - மார்பில் வெண்மையான பூணூல் அணிந்தவனை;

வான்-பொழில் சூழ் அணி அம்பர் மாகாளம் மேயானைத் - அழகிய சோலை சூழ்ந்த அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

தேன்மலரால் தொழுவார்தம் தீவினைகள் தேய்ந்து அறுமே - வாசமலர்களால் வழிபடும் அன்பர்களது பாவங்கள் எல்லாம் தீர்ந்தொழியும்;


8)

குணங்குறியில் தசமுகனைக் குன்றின்கீழ் நெரித்தானைக்

கணங்களிசை ஆர்க்கஇடு கானில்நடம் புரிந்தானை

மணங்கமழும் அணிஅம்பர் மாகாளம் மேயானை

வணங்கியெழும் அடியார்தம் வல்வினைகள் மாய்ந்தறுமே.


குணம் குறில் தசமுகனைக் குன்றின்கீழ் நெரித்தானைக் - நற்குணமோ நல்ல குறிக்கோளோ இல்லாத இராவணனைக் கயிலைமலையின் கீழே நசுக்கியவனை; (நெரித்தல் - நசுக்குதல்);

கணங்கள் இசை ஆர்க்க இடுகானில் நடம் புரிந்தானை - பூதகணங்கள் இசைபாடச் சுடுகாட்டில் திருநடம் செய்பவனை; (ஆர்த்தல் - ஒலித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி");

மணம் கமழும் அணி அம்பர் மாகாளம் மேயானை - (மலர்ச்சோலைகள் சூழ) வாசனை கமழும் அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

வணங்கி எழும் அடியார்தம் வல்வினைகள் மாய்ந்து அறுமே - வணங்கித் துயிலெழும் பக்தர்களது வலிய வினைகள் அழிந்தொழியும்; (சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "வழுவாள் பெருமான் கழல்வாழ்க எனா எழுவாள்");


9)

முன்னயனும் மாலுமடி முடிகாணாச் சோதியனைச்

சென்னிமிசைக் கொன்றையனைச் சேவேறிப் பலிக்குழலும்

மன்னவனை அணிஅம்பர் மாகாளம் மேயானைப்

பன்னியெழும் பத்தரவர் பண்டைவினை பற்றறுமே.


முன் அயனும் மாலும் அடிமுடி காணாச் சோதியனைச் - முன்னொரு காலத்தில் பிரமனும் திருமாலும் தன் அடியையும் முடியையும் தேடிக் காணா இயலாதபடி எல்லையின்றி நின்ற ஜோதி-வடிவனை;

சென்னிமிசைக் கொன்றையனைச் - திருமுடிமேல் கொன்றைமலரை அணிந்தவனை;

சே ஏறிப் பலிக்கு உழலும் மன்னவனை - இடபத்தின்மேல் ஏறிப் பிச்சைக்குத் திரியும் தலைவனை; (சே - எருது); (பலி - பிச்சை);

அணி அம்பர் மாகாளம் மேயானைப் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

பன்னி எழும் பத்தர் அவர் பண்டைவினை பற்று அறுமே - போற்றியவண்ணம் துயிலெழும் பக்தர்களது பழைய வினைகள் அழியும்; (பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்);


10)

பொய்யான நெறிபுகழும் புரட்டருரை மதியேன்மின்

மெய்யானை விண்ணவர்கள் வேண்டவிடம் உண்மிடற்றில்

மையானை அணிஅம்பர் மாகாளம் மேயானைச்

செய்யானைத் தொழுவார்க்குத் தீதில்லை திருவாமே.


பொய்யான நெறி புகழும் புரட்டர் உரை மதியேன்மின் - பொய்ம்மார்க்கங்களைப் புகழ்கின்ற வஞ்சகர்களின் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

மெய்யானை - மெய்ப்பொருளாக உள்ளவனை;

விண்ணவர்கள் வேண்ட விடம் உண் மிடற்றில் மையானை - தேவர்கள் வேண்டவும் அவர்களுக்கு இரங்கி விடம் உண்ட கண்டத்தில் கருநிறம் உடையவனை; (மை - கறை; இருள்; கருநிறம்);

அணி அம்பர் மாகாளம் மேயானைச் - அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

செய்யானைத் தொழுவார்க்குத் தீது இல்லை, திரு ஆமே - செம்மேனியானை வணங்கும் பக்தர்களுக்குத் தீமை இல்லை, செல்வங்கள் எல்லாம் கிட்டும்; (செய்யான் - சிவந்த நிறம் உடையவன்);


11)

களபமென நீறணிந்த கண்ணுதலைச் செஞ்சடைமேல்

வளர்மதியம் தரித்தானை மன்மதனை எரித்தானை

வளவயல்சூழ் அணிஅம்பர் மாகாளம் மேயானை

உளமகிழ்ந்து தொழுவாரை உயர்வானில் வைப்பானே.


களபம் என நீறு அணிந்த கண்ணுதலைச் - சந்தனம் போலத் திருநீற்றைப் பூசிய நெற்றிக்கண்ணனை; (களபம் - கலவைச்சாந்து);

செஞ்சடைமேல் வளர்-மதியம் தரித்தானை - சிவந்த சடையின்மேல் வளர்கின்ற பிறையைத் அணிந்தவனை; (தரித்தல் - அணிதல்; தாங்குதல்);

மன்மதனை எரித்தானை - காமனை எரித்தவனை;

வள-வயல் சூழ் அணி அம்பர் மாகாளம் மேயானை - வளம் மிக்க வயல் சூழ்ந்த அழகிய அம்பர் மாகாளம் என்ற தலத்தில் உறைகின்றவனை;

உளம் மகிழ்ந்து தொழுவாரை உயர்வானில் வைப்பானே - உள்ளம் குளிர்ந்து வழிபடும் அன்பர்களை அப்பெருமான் சிவலோகத்தில் சேர்த்தருள்வான்; ("அப்பெருமான்" என்ற சொல்லை வருவித்துப் பொருள்கொள்க);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.366 - அம்பர் (அம்பல்) - மத்தனே கூவிள

2016-12-09

P.366 - அம்பர் (அம்பல்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")


1)

மத்தனே கூவிள மாலையாய் வானவர் வாழ்த்த நஞ்சுண்

பித்தனே பெண்ணொரு பங்கனே காட்டினிற் பேயொ டாடும்

அத்தனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

முத்தனே நித்தலும் நின்திருப் புகழலால் மொழிகி லேனே.


மத்தனே கூவிள-மாலையாய் - ஊமத்தமலரையும் வில்வ-மாலையையும் அணிந்தவனே;

வானவர் வாழ்த்த நஞ்சு உண் பித்தனே - தேவர்கள் இறைஞ்ச, இரங்கி விடத்தை உண்ட பேரருளாளனே;

பெண் ஒரு பங்கனே - உமையொரு பாகனே;

காட்டினில் பேயொடு ஆடும் அத்தனே - சுடுகாட்டில் பேய்களோடு ஆடுகின்றவனே;

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

முத்தனே - இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவனே;

நித்தலும் நின் திருப்புகழ் அலால் மொழிகிலேனே - நாள்தோறும் உன் திருப்புகழை அன்றி வேறு மொழியமாட்டேன்;


2)

எண்ணிலாப் பேரினாய் மணமலி வாளியை எய்த வேளைக்

கண்ணினாற் கண்டுநீ றாக்கினாய் சடையிடைக் கங்கை தாங்கும்

அண்ணலே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

வெண்ணிலாச் சூடியே நின்னடித் துணையலால் வேறி லேனே.


எண் இலாப் பேரினாய் - எண்ணற்ற திருநாமங்கள் உடையவனே;

மணம் மலி வாளியை எய்த வேளைக் கண்ணினால் கண்டு நீறு ஆக்கினாய் - வாசமலர்க் கணையை எய்த மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்துச் சாம்பல் ஆக்கியவனே; (வாளி - அம்பு); (வேள் - மன்மதன்);

சடையிடைக் கங்கை தாங்கும் அண்ணலே - சடையில் கங்கையைத் தாங்கும் பெருமானே;

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

வெண்ணிலாச் சூடியே - சந்திரசேகரனே;

நின் அடித்-துணை அலால் வேறு இலேனே - உன் இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இல்லை; (துணை - இரண்டு; உதவி; காப்பு);


3)

செய்யனே செல்வனே உண்பலிக் கலனெனச் சிரம தேந்து

கையனே காலனைக் காய்ந்துமார்க் கண்டரைக் காவல் செய்த

ஐயனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

மெய்யனே நின்மலர்த் திருவடித் துணையலால் வேறி லேனே.


செய்யனே செல்வனே - செம்மேனியனே; திருவெல்லாம் உடையவனே;

உண்பலிக்-கலன் எனச் சிரம்அது ஏந்து கையனே - பிச்சைப்பாத்திரமாகப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தியவனே;

காலனைக் காய்ந்து மார்க்கண்டரைக் காவல் செய்த ஐயனே - கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயரைக் காத்த தலைவனே; (காய்தல் - கோபித்தல்; அழித்தல்);

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

மெய்யனே - மெய்ப்பொருள் ஆனவனே;

நின் மலர்த்-திருவடித்-துணை அலால் வேறு இலேனே - உன் மலர் போன்ற இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இல்லை; (துணை - இரண்டு; உதவி; காப்பு);


4)

கரியினீர் உரியினாய் கானிடை வேடனாய்க் காண்டி வற்குப்

பரிவினோ டொருபடை நல்கினாய் பரமனே பண்பு ரைக்க

அரியனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

பெரியனே நின்புகழ்ப் பேச்சலால் மற்றொரு பேச்சி லேனே.


கரியின் ஈர்-உரியினாய் - ஆனையின் உரித்த தோலைப் போர்த்தவனே; (ஈர்த்தல் - உரித்தல்); (உரி - தோல்);

கானிடை வேடனாய்க் காண்டிவற்குப் பரிவினோடு ஒரு படை நல்கினாய் - காட்டில் ஒரு வேடன் உருவில் சென்று அருச்சுனனுக்கு இரங்கிப் பாசுபதாஸ்திரம் அளித்தவனே; (காண்டிவன் - காண்டீவன் என்பதன் குறுக்கல் - அர்ஜுனன்); (படை - ஆயுதம்);

பரமனே பண்பு உரைக்க அரியனே - மேலானவனே; உன் குணாதிசயங்களையெல்லாம் சொல்வதற்கு அரியவனே;

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

பெரியனே - மகாதேவனே;

நின் புகழ்ப்-பேச்சு அலால் மற்றொரு பேச்சு இலேனே - உன் புகழைப் பேசுவது அன்றி வேறு பேச்சு எனக்கு இல்லை;


5)

தழலனே இகழ்ந்துரை தக்கன்செய் வேள்வியைத் தகர்த்த தேவா

மழவிடை ஊர்தியாய் வண்டமர் பூங்குழல் மங்கை பங்கா

அழகனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

குழகனே நின்கழற் புகழலால் மற்றொரு கூற்றி லேனே.


தழலனே - தீவண்ணனே; (தழல் - தீ);

இகழ்ந்து உரை தக்கன் செய் வேள்வியைத் தகர்த்த தேவா - அவமதித்த தக்கன் செய்த வேள்வியை அழித்த தேவனே;

மழ-விடை ஊர்தியாய் - இள-ஏற்றை வாகனமாக உடையவனே;

வண்டு அமர் பூங்குழல் மங்கை பங்கா - வண்டுகள் விரும்பும் மலர்க்குழல் உமையை ஒரு பங்காக உடையவனே; (* பூங்குழல் நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);

அழகனே - சுந்தரனே;

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

குழகனே - இளைஞனே; (குழகு - இளமை; அழகு);

நின் கழற்புகழ் அலால் மற்றொரு கூற்று இலேனே - உன் திருவடிப் புகழை அன்றி வேறு பேச்சு எனக்கு இல்லை; (கூற்று - கூறுகை; மொழி);


6)

தரையினிற் கீறிய ஆழியாற் சலந்தரன் தனைய ழித்தாய்

இரவினில் ஆடிடும் ஏந்தலே இளமதிச் சென்னி யின்மேல்

அரவனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

குரவனே நின்னடி பரவிடும் கூற்றலாற் கூற்றி லேனே.


தரையினில் கீறிய ஆழியால் சலந்தரன்தனை அழித்தாய் - நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி, அதனால் ஜலந்தராசுரனை அழித்தவனே;

இரவினில் ஆடிடும் ஏந்தலே - நள்ளிருளில் கூத்தாடும் பெருமானே; (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);

இளமதிச் சென்னியின்மேல் அரவனே - இளம்பிறை திகழும் திருமுடிமேல் பாம்பையும் அணிந்தவனே; (அரவு - பாம்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.43.3 - "வான்மதிச் சென்னியர்");

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

குரவனே - குருவே; (குரவன் - குரு);

நின் அடி பரவிடும் கூற்று அலால் கூற்று இலேனே - உன் திருவடியைப் புகழும் பேச்சு அன்றி வேறு பேச்சு எனக்கு இல்லை; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்);


7)

வேதியா அந்தகன் தனைச்செறு மூவிலை வேல னேபெண்

பாதியாம் மேனியாய் பாய்புலித் தோலினாய் பலிம கிழ்ந்த

ஆதியே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

சோதியே நின்னடித் துணையலால் மற்றொரு துணையி லேனே.


வேதியா - வேதியனே; (வேதியன் - வேதம் ஓதியவன்; வேதப்பொருள் ஆனவன்; வேதிப்பவன் என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

அந்தகன்தனைச் செறு மூவிலை வேலனே - அந்தகாசுரனைத் திரிசூலத்தால் குத்தி அழித்தவனே; (செறுதல் - அழித்தல்);

பெண் பாதி ஆம் மேனியாய் - திருமேனியில் ஒரு பாதி பெண் வடிவம் உடையவனே;

பாய்-புலித் தோலினாய் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவனே;

பலி மகிழ்ந்த ஆதியே - பிச்சையை விரும்பிய முதல்வனே; (பலி - பிச்சை); (மகிழ்தல் - விரும்புதல்);

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

சோதியே - ஜோதி வடிவானவனே;

நின் அடித்-துணை அலால் மற்றொரு துணை இலேனே - உன் இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இல்லை; (துணை - இரண்டு; உதவி; காப்பு);


8)

தூற்றிமா மலையெடு தூர்த்தன இருபது தோள்நெ ரித்தாய்

ஆற்றமாட் டாதவன் அழுதிசை பாடவும் அருள்பு ரிந்தாய்

ஆற்றனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

ஏற்றனே நின்னடி இணையலால் ஒருதுணை இங்கிலேனே.


தூற்றி மா மலை எடு தூர்த்தன இருபது தோள் நெரித்தாய் - இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கொடியவனான இராவணனின் இருபது புஜங்களையும் நசுக்கியவனே; (தூர்த்தன் - கொடியவன்); (- ஆறாம் வேற்றுமை உருபு); (அப்பர் தேவாரம் - 5.52.10 - "தூர்த்தன் தோள்முடி தாளும் தொலையவே சேர்த்தினார் திருப்பாதத் தொருவிரல்");

ஆற்றமாட்டாது அவன் அழுது இசை பாடவும் அருள்புரிந்தாய் - வலியைத் தாங்கமுடியாமல் அவன் அழுது இசைபாடித் தொழவும் அவனுக்கு அருளியவனே;

ஆற்றனே - கங்காதரனே;

அரிசிலின் புனல் அடை வயல் அணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

ஏற்றனே - இடபவாகனே;

நின் அடி-இணை அலால் ஒரு துணை இங்கு இலேனே - உன் இரு-திருவடிகளைத் தவிர வேறு ஒரு துணை எனக்கு இங்கு இல்லை;


9)

பங்கயத் தயனொடு பாம்பணை மேலினான் பாதம் ஏத்தப்

பொங்கழல் ஆயினாய் பொற்சடை மேல்மதி பூண்டு கந்த

அங்கணா அரிசிலின் புனலடை வயலணி அம்ப ரிற்கோச்

செங்கணான் கட்டிய கோயிலாய் சீரையே செப்பும் நாவே.


பங்கயத்து அயனொடு பாம்பணை மேலினான் பாதம் ஏத்தப் பொங்கு அழல் ஆயினாய் - தாமரைப்பூமேல் இருக்கும் பிரமனும் நாகப்படுக்கையின்மேல் இருக்கும் திருமாலும் திருவடியைத் துதிக்கும்படி ஓங்கி உயர்ந்த ஜோதி ஆனவனே; (பாம்பு அணை - ஆதிசேஷனாகிய படுக்கை);

பொற்சடைமேல் மதி பூண்டு உகந்த அங்கணா - பொன் போன்ற செஞ்சடைமேல் சந்திரனை விரும்பி அணிந்த அருட்கண்ணனே; (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன் - சிவபெருமான்);

அரிசிலின் புனலடை வயலணி அம்பரில் - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில்;

கோச்செங்கணான் கட்டிய கோயிலாய் - கோச்செங்கட்சோழன் கட்டிய கோயிலில் உறைகின்றவனே;

சீரையே செப்பும் நாவே - உன் திருப்புகழையே என் நாச் சொல்லும்;


10)

மிண்டராய் வெற்றுரை பேசுவார்க் கருளிலாய் வேத நாவா

பண்டைநாள் பிரமனுக் கருளினாய் வானவர் பரவ நின்ற

அண்டனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் நீல

கண்டனே நின்னறை கழலலால் ஒருதுணை காண்கி லேனே.


மிண்டராய் வெற்றுரை பேசுவார்க்கு அருள் இலாய் - கல்-நெஞ்சர்களாகிப் பொருளற்ற சொற்களைப் பேசுவார்க்கு அருள் இல்லாதவனே;

வேத-நாவா - வேதங்களைப் பாடியவனே;

பண்டைநாள் பிரமனுக்கு அருளினாய் - முற்காலத்தில் பிரமனுக்கு அருள்புரிந்தவனே; (* பிரமனுக்கு அருளியதைத் தலவரலாற்றில் காண்க. திருக்கோயிலின் உள்ளே "அன்னமாம் பொய்கை" என்று வழங்கப்படும் கிணறு உள்ளது; பிரமன் இக்கிணற்றுத் தீர்த்தத்தில் நீராடிச் சிவனை வழிபட்டு அன்ன-வடிவம் பெற்ற சாபம் நீங்கப் பெற்றான் என்பது தலவரலாறு);

வானவர் பரவ நின்ற அண்டனே - தேவர்களால் வணங்கப்படுகின்ற கடவுளே; (அண்டன் - கடவுள்);

அரிசிலின் புனலடை வயலணி அம்பர் நீலகண்டனே - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற நீலகண்டனே;

நின் அறை-கழல் அலால் ஒரு துணை காண்கிலேனே - உன் ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியைத் தவிர வேறு துணை எனக்கு இல்லை;


11)

இமையவர் போற்றிட எயிலொரு மூன்றினை எய்த எந்தாய்

கமலமார் பாதனே கனல்மழு வாளனே கால காலா

அமலனே அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய

விமலனே என்பழ வினைதனைத் தீர்த்திட வேண்டி னேனே.


இமையவர் போற்றிட எயில் ஒரு மூன்றினை எய்த எந்தாய் - தேவர்கள் இறைஞ்சவும் இரங்கி முப்புரங்களை ஒரு கணையால் எய்த எம் தந்தையே; (எயில் - கோட்டை);

கமலம் ஆர் பாதனே - தாமரைமலர் போன்ற திருவடியை உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);

கனல்-மழுவாளனே - ஒளிவீசும் மழுவை ஏந்தியவனே;

காலகாலா - காலனுக்குக் காலனே;

அமலனே - மாசற்றவனே;

அரிசிலின் புனலடை வயலணி அம்பர் மேய - அரிசிலாற்றின் நீர் பாயும் வயல் சூழ்ந்த திருஅம்பரில் உறைகின்ற;

விமலனே - தூயவனே;

என் பழவினைதனைத் தீர்த்திட வேண்டினேனே - என் பழவினைகளைத் தீர்த்து அருள வேண்டினேன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Saturday, March 29, 2025

P.365 - இடைமருதூர் (திருவிடைமருதூர்) - கன்னலார் மொழியினாள்

2016-12-03

P.365 - இடைமருதூர் (திருவிடைமருதூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")


1)

கன்னலார் மொழியினாள் பாகமாக் கருதினார் கங்கை யாளை

மின்னலார் சடையினில் தாங்கிய வித்தகர் வேத நாவர்

சென்னியால் சேவடி வணங்கினார் தீவினை தீர்க்கும் நல்லர்

செந்நெலார் வயலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


கன்னல் ஆர் மொழியினாள் பாகமாக் கருதினார் - கரும்பு போல் இனிய மொழி பேசும் உமையம்மையை ஒரு பாகமாக விரும்பியவர்; (கன்னல் - கரும்பு); (ஆர்தல் - ஒத்தல்); (கருதுதல் - விரும்புதல்);

கங்கையாளை மின்னல் ஆர் சடையினில் தாங்கிய வித்தகர் - மின்னல் போன்ற சடையில் கங்கையைத் தாங்கிய சமர்த்தர்; (வித்தகம் - சாமர்த்தியம்; வித்தகர் - வல்லவர்);

வேத-நாவர் - வேதங்களை ஓதியருளியவர்;

சென்னியால் சேவடி வணங்கினார் தீவினை தீர்க்கும் நல்லர் - சிவந்த திருவடியைத் தலையால் வணங்கும் பக்தர்களது பாவங்களைத் தீர்க்கும் நல்லவர்;

செந்நெல் ஆர் வயல் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - உயர்ந்த வகை நெல் நிறைந்த வயல்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


2)

கொன்றையும் மத்தமும் கூனிள மதியமும் கோள ராவும்

துன்றிடும் சென்னியார் தூமறை பாடினார் சுண்ண நீற்றர்

ஒன்றிய நெஞ்சராய் ஏத்தினார் தம்மிடர் ஒல்லை தீர்ப்பார்

தென்றலில் வாசமார் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


கொன்றையும் மத்தமும் கூன்-இள-மதியமும் கோள்-அராவும் துன்றிடும் சென்னியார் - திருமுடிமேல் கொன்றைமலர், ஊமத்தமலர், வளைந்த இளம்பிறை, கொடிய பாம்பு இவற்றை அணிந்தவர்; (கூன் - வளைவு);

தூ-மறை பாடினார் - தூய வேதங்களைப் பாடியவர்;

சுண்ண-நீற்றர் - திருநீற்றைப் பூசியவர்; (சுண்ணநீறு - கலவைச்-சந்தனம் போலக் கொள்ளப்படும் திருநீறு);

ஒன்றிய நெஞ்சராய் ஏத்தினார்தம் இடர் ஒல்லை தீர்ப்பார் - மனம் ஒன்றி வழிபடும் பக்தர்களது துன்பங்களைச் சீக்கிரம் தீர்ப்பவர்;

தென்றலில் வாசம் ஆர் திருவிடைமருது உறை செல்வர்தாமே - தென்றலில் மணம் கமழும் திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


3)

நாலுமா மறைகளை ஓதிய நாவினார் நமனை அன்று

காலினால் உதைத்தவர் கரியுரி போர்த்தவர் காள கண்டர்

ஏலுமா றேத்தினார் இடரெலாம் தீர்த்துவான் இன்பம் ஈவார்

சேலுலாம் வயலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


நாலு மா-மறைகளை ஓதிய நாவினார் - நால்வேதத்தை நாவால் ஓதியவர்;

நமனை அன்று காலினால் உதைத்தவர் - காலால் காலனை உதைத்தவர்;

கரி-உரி போர்த்தவர் - யானைத்தோலைப் போர்த்தவர்;

காள-கண்டர் - நீலகண்டர்;

ஏலுமாறு ஏத்தினார் இடர் எலாம் தீர்த்து வான்-இன்பம் ஈவார் - இயன்றபடி வழிபடும் பக்தர்களது துன்பங்களை எல்லாம் தீர்த்து அவர்களுக்கு வானுலக இன்பத்தை அளிப்பவர்;

சேல் உலாம் வயல் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - சேல்மீன்கள் உலவும் வயல்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (அப்பர் தேவாரம் - 4.67.9 - "சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே");


4)

தொழுதெழு சுரர்கள்தம் துயர்கெட முப்புரம் சுட்ட நாதர்

கழுதுகள் வாழ்தரு காட்டினில் நடமிடும் கமல பாதர்

கழுமலப் பிள்ளையார் தமிழுரை அடியவர் கவலை தீர்ப்பார்

செழுமலர்ப் பொழிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


தொழுது-ழு சுரர்கள்தம் துயர் கெட முப்புரம் சுட்ட நாதர் - இறைஞ்சிய தேவர்களின் துயரம் நீங்குமாறு முப்புரங்களை எரித்த தலைவர்;

கழுதுகள் வாழ்தரு காட்டினில் நடமிடும் கமல-பாதர் - பேய்கள் வாழும் சுடுகாட்டில் கூத்தாடும் தாமரைமலர்ப் பாதம் உடையவர்; (கழுது - பேய்); (தருதல் - ஒரு துணைவினை);

கழுமலப் பிள்ளையார் தமிழ் உரை அடியவர் கவலை தீர்ப்பார் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரின் பதிகங்களைப் பாடி வழிபடும் பக்தர்களின் கவலையைத் தீர்ப்பவர்;

செழுமலர்ப் பொழில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - செழுத்த மலர்கள் விளங்கும் சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


5)

வானவர்க் கமுதினை வழங்கிய வள்ளலார் வல்வி டத்தைப்

போனகம் செய்தவர் ஏற்றினர் நீற்றினைப் பூசு மார்பர்

கானலர் கொண்டடி பரவிடும் அடியவர் கவலை தீர்ப்பார்

தேனமர் பொழிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


வானவர்க்கு அமுதினை வழங்கிய வள்ளலார் - தேவர்களுக்கு அமுதத்தை அளித்த வள்ளல்;

வல்-விடத்தைப் போனகம் செய்தவர் - கொடிய நஞ்சை உண்டவர்; (போனகம் - உணவு);

ஏற்றினர் - இடபவாகனம் உடையவர்; (ஏறு - இடபம்);

நீற்றினைப் பூசு மார்பர் - திருநீற்றை மார்பில் பூசியவர்;

கான்-அலர் கொண்டு அடி பரவிடும் அடியவர் கவலை தீர்ப்பார் - வாசமலர்களால் திருவடியை வழிபடும் பக்தர்களது கவலையைத் தீர்ப்பவர்; (கான் - வாசனை); (சம்பந்தர் தேவாரம் - 3.42.2 - "கானி டங்கொளும் தண்வயற் காழியார்");

தேன் அமர் பொழில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - வண்டுகள் விரும்பும் சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (தேன் - வண்டு); (அமர்தல் - விரும்புதல்);


6)

தார்மலி மார்பினர் சலந்தரன் தனையழி சக்க ரத்தை

நீர்மிசைத் துயிலரி வேண்டிட ஈந்தவர் நீல கண்டர்

சீர்சொலும் செந்தமிழ் செப்பினார் தீவினை சிதறு விப்பார்

தேர்செலும் வீதிசூழ் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


தார் மலி மார்பினர் - மார்பில் மாலை அணிந்தவர்;

சலந்தரன்தனை அழி சக்கரத்தை நீர்மிசைத் துயில் அரி வேண்டிட ஈந்தவர் - ஜலந்தராசுரனை அழித்த சக்கராயுதத்தைப் பாற்கடலில் துயிலும் திருமால் இறைஞ்சி வேண்ட அவருக்குக் கொடுத்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3..33.1 - "நீரிடைத் துயின்றவன்");

நீலகண்டர் - கரிய மிடற்றர்;

சீர் சொலும் செந்தமிழ் செப்பினார் தீவினை சிதறுவிப்பார் - புகழைச் சொல்லும் செந்தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடும் பக்தர்களது பாவங்களை அழிப்பார்; (சிதறுதல் - அழிதல்; சிதறுவித்தல் - அழித்தல்);

தேர் செலும் வீதி சூழ் திருவிடைமருது உறை செல்வர்தாமே - தேர் செல்லும் வீதிகள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


7)

ஆணுரு வோடொரு பெண்ணுருக் காட்டினார் அரையில் நாக

நாணுடை நாதனார் நாரியர் இடுபலி நாடும் நம்பர்

பேணுதல் செய்துசீர் பேசுவார்க் கின்பமே பெருகு விப்பார்

சேணுயர் மதிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


ஆண் உருவோடு ஒரு பெண் உருக் காட்டினார் - அர்த்தநாரீஸ்வரர்;

அரையில் நாக-நாணுடை நாதனார் - அரையில் பாம்பை நாணாகக் கட்டிய தலைவர்;

நாரியர் இடுபலி நாடும் நம்பர் - பெண்கள் இடும் பிச்சையை விரும்பும் சிவபெருமானார்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவபெருமான் திருநாமம்);

பேணுதல் செய்து சீர் பேசுவார்க்கு இன்பமே பெருகுவிப்பார் - போற்றிப் புகழும் பக்தர்களுக்கு (இம்மை மறுமை) இன்பமே பெருகச்செய்பவர்; (பெருகுவித்தல் - பெருகச்செய்தல்; வி - பிறவினைவிகுதி; "உருகுதல் உருகுவித்தல்" என்பதனை ஒத்த பிரயோகம்); (அப்பர் தேவாரம் - 4.5.3 - "பெருகுவித்தென் பாவத்தை");

சேண் உயர் மதில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - மிக உயர்ந்த மதில்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (சேண் - உயரம்; ஆகாயம்);


8)

மாமலை பேர்த்தவன் வலிகெட ஊன்றினார் வாய்க ளெல்லாம்

நாமமே ஓதிடக் கேட்டொரு வாளொடு நாளும் ஈந்தார்

மாமலர் இட்டடி வாழ்த்தினார் வல்வினை மாய்த்த ருள்வார்

தேமலர்ப் பொழிலணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


மாமலை பேர்த்தவன் வலி கெட ஊன்றினார் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றியவர்;

வாய்கள் எல்லாம் நாமமே ஓதிடக் கேட்டொரு வாளொடு நாளும் ஈந்தார் - பின் அவனது எல்லா வாய்களும் திருநாமத்தைப் போற்றக் கேட்டு அவனுக்கு ஒரு வாளையும் நீண்ட ஆயுளையும் தந்தவர்;

மாமலர் இட்டு அடி வாழ்த்தினார் வல்வினை மாய்த்து அருள்வார் - சிறந்த பூக்களைத் தூவித் திருவடியை வாழ்த்தும் பக்தர்களது வலிய வினைகளை அழித்து அருள்பவர்;

தேமலர்ப் பொழில் அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (தேமலர் - தேம் + மலர்; தேம் - வாசனை; தேன்);


9)

கையினிற் சங்கினன் கடிமலர் மேலயன் காணொ ணாமல்

ஐயனே அருளென அடிதொழ நின்றவர் அம்மை யப்பர்

மெய்யினில் நீற்றராய் வேண்டுவார் வெவ்வினை வீட்டும் ஈசர்

செய்யினிற் சேலுலாம் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


கையினில் சங்கினன் கடிமலர்மேல் அயன் காணொணாமல் - சங்கை ஏந்திய திருமாலும் தாமரைமலர்மேல் இருக்கும் பிரமனும் (ஜோதியின் அடிமுடியைக்) காண இயலாமல்; (காணொணாமல் - காண ஒண்ணாமல்; தொகுத்தல், இடைக்குறை விகாரம்);

"ஐயனே அருள்" என அடிதொழ நின்றவர் - "தலைவனே! அருள்வாயாக" என்று வணங்கும்படி எல்லையின்றி ஓங்கி நின்றவர்;

அம்மையப்பர் - தாயும் தந்தையும் ஆவார்;

மெய்யினில் நீற்றராய் வேண்டுவார் வெவ்வினை வீட்டும் ஈசர் - தம் உடம்பின்மேல் திருநீற்றைப் பூசி வழிபடும் அடியவர்களது கொடிய வினையை அழிக்கும் ஈசனார்; (வீட்டுதல் - அழித்தல்);

செய்யினில் சேல் உலாம் திருவிடைமருதுறை செல்வர்தாமே - வயலில் சேல்மீன்கள் உலாவுகின்ற திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்; (செய் - வயல்); (உலாம் - உலாவும்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.67.9 - "சேலுலாம் பழனவேலி");


10)

உண்மையை மறைப்பவர் உய்ந்நெறி தேர்கிலார் உரைகொ ளேன்மின்

பெண்மயிற் சாயலாள் பேதையோர் பங்கினர் பெற்றம் ஊர்ந்தார்

பண்மலி பாச்சரம் சூட்டினார் பழவினை பாற்றும் ஈசர்

திண்மதில் புடையணி திருவிடை மருதுறை செல்வர் தாமே.


உண்மையை மறைப்பவர் உய்ந்நெறி தேர்கிலார் உரை கொளேன்மின் - உண்மையை மறைப்பவர்களும் உய்யும் நெறியை அறியாதவர்களுமான அவர்கள் பேசும் பேச்சை நீங்கள் மதியாதீர்கள்; (கொளேன்மின் - நீங்கள் கொள்ள வேண்டா);

பெண்மயில் சாயலாள் பேதை ஓர் பங்கினர் - பெண்மயில் போன்ற சாயல் உடைய உமையை ஒரு பங்கில் உடையவர்;

பெற்றம் ஊர்ந்தார் - இடபவாகனர்; (பெற்றம் - எருது);

பண் மலி பாச்சரம் சூட்டினார் பழவினை பாற்றும் ஈசர் - பண்கள் பொருந்திய பாமாலைகளைச் சூட்டி வழிபடும் பக்தர்களது பழைய வினைகளை அழிக்கும் ஈசனார்; (பாற்றுதல் - அழித்தல்);

திண்-மதில் புடை அணி திருவிடைமருது உறை செல்வர்தாமே - திண்ணிய மதில்கள் சூழ்ந்த திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


11)

மறைநவில் நாவினர் மார்பினில் நூலினர் வான்வ ணங்கு

கறையணி கண்டனார் காரிகை பங்கனார் கங்கை சூடி

நறைமலர் கொண்டடி போற்றினார்க் கின்னலம் நல்கும் நாதர்

சிறையளி அறைபொழில் திருவிடை மருதுறை செல்வர் தாமே.


மறை நவில் நாவினர் - வேதங்களை நாவால் ஓதியவர்;

மார்பினில் நூலினர் - மார்பில் பூணூல் அணிந்தவர்;

வான் வணங்கு கறை அணி கண்டனார் - தேவர்கள் வழிபடும் நீலகண்டர்;

காரிகை பங்கனார் - உமையொரு பங்கர்;

கங்கை சூடி - கங்காதரர்;

நறைமலர் கொண்டு அடி போற்றினார்க்கு இன்-நலம் நல்கும் நாதர் - தேன்மலர்களால் திருவடியை வழிபட்டவர்களுக்கு இனிய நலத்தை அளிக்கும் தலைவர்;

சிறை-அளி அறை பொழில் திருவிடைமருது உறை செல்வர்தாமே - இறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற (பொழில் சூழ்ந்த) திருவிடைமருதூரில் உறைகின்ற செல்வரான சிவபெருமானார்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------