2016-11-13
P.361 - சிரபுரம் (காழி)
---------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதன தனதன தனதன - திருவிராகம் ஒத்த அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை")
1)
பெரியவன் அரியவன் ஒருமத கரியதன்
உரிபுனை வடிவினன் உமையிடம் உடையவன்
அரிவையர் இடுபலி அதுபெற உழலிறை
திரிபுரம் எரியரன் நகர்சிர புரமே.
பெரியவன் அரியவன் - மிகவும் பெரியவன் (/மகாதேவன்), மிகவும் அரியவன்;
ஒரு மதகரி அதன் உரி புனை வடிவினன் - பெரிய ஆண்யானையின் தோலை மார்பு சூழப் போர்த்த கோலத்தினன்;
உமை இடம் உடையவன் - உமையை இடப்பாகமாக உடையவன்;
அரிவையர் இடுபலிஅது பெற உழல் இறை - பெண்கள் இடும் பிச்சைக்காகத் திரியும் இறைவன்;
திரிபுரம் எரி அரன் - முப்புரங்களை எரித்த ஹரன்;
நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் தலம் சிரபுரம் (சீகாழி); (சிரபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);
2)
அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட
நஞ்சணி மிடறினன் நடமிடு கழலினன்
வெஞ்சின விடையினன் விரிபுனல் அலைதரு
செஞ்சடை யினனுறை நகர்சிர புரமே.
அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட நஞ்சு அணி மிடறினன் - ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் இரு-திருவடிகளைப் போற்றவும், இரங்கி அவ்விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (மிடறு - கண்டம்; மிடற்றினன் என்றும், சந்தம் நோக்கி "மிடறினன்" என்றும் பாடல்களில் வரும்);
நடமிடு கழலினன் - கூத்தன்; (கழல் - திருவடி);
வெஞ்சின விடையினன் - சினக்கும் இடபத்தை ஊர்தியாக உடையவன்;
விரிபுனல் அலைதரு செஞ்சடையினன் - பரந்த கங்கையாறு அலைமோதுகின்ற (/அலைகின்ற) சடையை உடையவன்; (அலைத்தல் - அலைமோதுதல்; அலைதல் - திரிதல்); (தருதல் - ஒரு துணைவினை);
உறை நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் பதி சிரபுரம் (சீகாழி);
3)
புகலியர் பதிமொழி தமிழுரை தகவினர்
அகமகிழ் வுறவினை அறவருள் புரிசிவன்
இகலிய எயிலெரி இறையவன் இளமதி
திகழ்சடை முடியினன் நகர்சிர புரமே.
புகலியர்பதி மொழி-தமிழ் உரை-தகவினர் அகம் மகிழ்வுற வினை அற அருள்புரி சிவன் - காழியர்கோனான திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத்தைச் சொல்லும் அடியார்கள் மனம் மகிழ அவர்களது வினையெல்லாம் தீர அருள்கின்ற சிவன்; (புகலி - சீகழியின் 12 பெயர்களில் ஒன்று); (பதி - தலைவன்); (தகவு - தகுதி; குணம்);
இகலிய எயில் எரி இறையவன் - பகைத்த முப்புரங்களை எரித்த இறைவன்; (இகல்தல் - பகைத்தல்); (எயில் - கோட்டை);
இளமதி திகழ் சடைமுடியினன் நகர் சிரபுரமே - இளம்பிறை விளங்குகின்ற சடையை உடைய பெருமான் நகர் சிரபுரம் (சீகாழி); (சடைமுடி - ஜடாமகுடம்);
4)
சேவடி யிணையவை தின(ம்)நினை அடியவர்
காவலன் அளிகொடு கவுணியர் பரவிய
பாவமர் செவியினன் அமரர்கள் பணிபதி
சேவமர் சிவனுறை நகர்சிர புரமே.
சேவடி-இணை-அவை தினம் நினை அடியவர் காவலன் - சிவந்த இரு-திருவடிகளைத் தினமும் நினைகின்ற பக்தர்களைக் காப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.87.1 - "வனமுலை யிணையவை");
அளி-கொடு கவுணியர் பரவிய பா அமர் செவியினன் - அன்பால் திருஞான சம்பந்தர் பாடியருளிய பாடல்களை விரும்பிக் கேட்கும் காதினன்; (அளி - அன்பு); (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (அமர்தல் - விரும்புதல்);
அமரர்கள் பணி பதி - தேவர்கள் வழிபடும் தலைவன்;
சே அமர் சிவன் உறை நகர் சிரபுரமே - இடபத்தை ஊர்தியாக விரும்பிய சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
5)
தவமுனி வர்கள்தொழு தருநிழல் அமர்குரு
அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை
பவனறு மலர்மதி படர்சடை மிசையணி
சிவனவன் உறைதரு நகர்சிர புரமே.
தவ-முனிவர்கள் தொழு தருநிழல் அமர் குரு - தவமுனிவர்கள் நால்வர் போற்றக் கல்லாலமரத்தின்கீழ் இருந்த தட்சிணாமூர்த்தி; (தரு - மரம்);
அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை - உலகில் வழிபடுகின்ற பக்தர்களுக்கு உற்ற துணை;
பவன் - என்றும் உள்ளவன்; (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்);
நறுமலர் மதி படர்-சடைமிசை அணி சிவன்அவன் உறைதரு நகர் சிரபுரமே - வாசமலர்களையும் திங்களையும் படர்ந்த சடையின்மேல் அணியும் சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
6)
தினமரு மறையுரை சிறுவர துயிர்கொல
முனமடை மறலியை உயிரற முனிபவன்
அனநடை உமையொரு புடையினன் அடல்மிகு
சினவிடை அமரரன் நகர்சிர புரமே.
தினம் அருமறை உரை சிறுவரது உயிர் கொல - தினமும் அரிய வேதங்களைச் சொல்லி வழிபட்ட மறைச்சிறுவரான மார்க்கண்டேயரின் உயிரைக் கொல்வதற்கு;
முனம் அடை மறலியை உயிர் அற முனிபவன் - முன்பு அடைந்த காலனின் உயிர் அழியுமாறு அவனைக் கோபித்தவன் (சினந்து உதைத்தவன்); (மறலி - கூற்றுவன்); (முனிதல் - கோபித்தல்);
அன நடை உமை ஒரு புடையினன் - அன்னம் போன்ற நடையை உடைய உமையை ஒரு பக்கம் உடையவன்; (அனநடை - அன்னநடை);
அடல் மிகு சின-விடை அமர் அரன் நகர் சிரபுரமே - வலிய, சினம் மிகுந்த இடபத்தை ஊர்தியாக விரும்பிய ஹரன் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
7)
மங்கல வடிவினன் மலரடி தொழுதவர்
தங்களின் அருவினை தனையழி பரிவினன்
அங்கமும் அரவமு(ம்) மலர்களும் அழகிய
திங்களும் அணிசிவன் நகர்சிர புரமே.
மங்கல வடிவினன் - மங்கலத்தின் திருவுரு;
மலரடி தொழுதவர் தங்களின் அருவினைதனை அழி பரிவினன் - மலர் போன்ற திருவடிகளை வழிபட்டவரின் பழவினைகளை அழிக்கும் கருணாமூர்த்தி;
அங்கமும் அரவமும் மலர்களும் அழகிய திங்களும் அணி சிவன் - எலும்பையும் பாம்பையும் பூக்களையும் அழகிய சந்திரனையும் அணிந்த சிவபெருமான்; (அங்கம் - எலும்பு);
நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
8)
வரைபெயர் மதியிலி மணிமுடி ஒருபது
கரமிரு பதுநெரி விரலினன் அரவினன்
இரவினில் அருநடம் இடுபவன் ஒலிமலி
திரையடை சடையினன் நகர்சிர புரமே.
வரை பெயர் மதியிலி மணிமுடி ஒருபது கரம் இருபது நெரி விரலினன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவில்லாதவனான இராவணனின் கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியவன்; (வரை - மலை);
அரவினன் - பாம்பை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.72.3 - "நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்");
இரவினில் அருநடம் இடுபவன் - நள்ளிருளில் அரிய கூத்து இயற்றுபவன்;
ஒலி மலி திரை அடை சடையினன் - மிகவும் ஒலிக்கின்ற அலைகளை உடைய கங்கையை அடைத்த சடையை உடையவன்; (திரை - அலை; நதி);
நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
9)
முன்னரி முளரியன் அடிமுடி முயலெரி
உன்னிய அடியவர் உளமுறை விடமென
மன்னிய பெருமையன் வளர்மதி அலைநதி
சென்னியின் மிசையினன் நகர்சிர புரமே.
முன் அரி முளரியன் அடிமுடி முயல் எரி - முன்னர்த் திருமாலும் தாமரைமேல் இருக்கும் பிரமனும் அடியும் முடியும் தேடி முயலுமாறு உயர்ந்த ஜோதி; (முளரி - தாமரை); (சம்பந்தர் தேவாரம் - 1.92.9 - "அயனு மாலுமாய் முயலு முடியினீர்");
உன்னிய அடியவர் உளம் உறைவிடம் என மன்னிய பெருமையன் - தியானிக்கும் பக்தர்களின் உள்ளமே தான் தங்கும் இடமாக நிலைத்த பெருமையை உடையவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (மன்னுதல் - நிலைபெறுதல்; மிகுதல்);
வளர்மதி அலைநதி சென்னியின் மிசையினன் - வளர்கின்ற திங்களையும் அலைக்கின்ற (/அலையுடைய / அலைகின்ற) நதியையும் திருமுடிமேல் உடையவன்; (மிசை - மேல்);
நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
10)
ஐயனை அடைகிலர் அனுதினம் அவ(ம்)மொழி
பொய்யரின் நெறிதனை விலகுமின் அடிதொழு
கையினர் இடரவை களையிறை பொடியணி
செய்யவன் உறைதரு நகர்சிர புரமே.
ஐயனை அடைகிலர் - ஈசனை அடையாதவர்கள்;
அனுதினம் அவம் மொழி பொய்யரின் நெறிதனை விலகுமின் - தினந்தோறும் இழிந்த சொற்களைப் பேசும் அப்-பொய்யர்கள் சொல்லும் மார்க்கத்தை நீங்கள் நீங்குங்கள்;
அடிதொழு கையினர் இடர்அவை களை இறை - திருவடியைக் கையால் தொழும் பக்தர்களின் இடர்களை நீக்கும் இறைவன்; ( சம்பந்தர் தேவாரம் - 1,52.3 - "நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.");
பொடி அணி செய்யவன் - திருநீற்றைப் பூசிய செம்மேனியன்;
உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
11)
மூவரின் முதலினன் முடிவிலன் அருமறை
நாவினன் நகுதலை தரிகரன் நறைமலி
பூவணி திருமுடி யினனொளிர் பொடியணி
தீவணன் உறைதரு நகர்சிர புரமே.
மூவரின் முதலினன் - மும்மூர்த்திகளின் முதலானவன்; மும்மூர்த்திகளுக்கும் தலைவன்;
முடிவு இலன் - அழிவற்றவன்;
அருமறை நாவினன் - அரிய வேதங்களை நாவினால் ஓதியவன்;
நகு தலை தரி கரன் - ஒளிவீசும் மண்டையோட்டைக் கையில் தாங்கியவன்; (நகுதல் - சிரித்தல்; பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.133.8 - "நகுதலையிற் பலிதேர்ந்து");
நறை மலி பூ அணி திருமுடியினன் - தேன் மிக்க பூக்களைத் திருமுடிமேல் அணிந்தவன்;
ஒளிர் பொடி அணி தீவணன் - ஒளிவீசும் திருநீற்றை அணிந்த தீப்போன்ற செம்மேனியன்; (பொடி - திருநீறு); (தீவணன் - தீவண்ணன்);
உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);
பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :
சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.
முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.
பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".
முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.
சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வி. சுப்பிரமணியன்
----------- --------------