Wednesday, March 5, 2025

P.361 - சிரபுரம் (காழி) - பெரியவன் அரியவன்

2016-11-13

P.361 - சிரபுரம் (காழி)

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனதன தனதன தனதன தனதன - திருவிராகம் ஒத்த அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - "பிடியத னுருவுமை")


1)

பெரியவன் அரியவன் ஒருமத கரியதன்

உரிபுனை வடிவினன் உமையிடம் உடையவன்

அரிவையர் இடுபலி அதுபெற உழலிறை

திரிபுரம் எரியரன் நகர்சிர புரமே.


பெரியவன் அரியவன் - மிகவும் பெரியவன் (/மகாதேவன்), மிகவும் அரியவன்;

ஒரு மதகரி அதன் உரி புனை வடிவினன் - பெரிய ஆண்யானையின் தோலை மார்பு சூழப் போர்த்த கோலத்தினன்;

உமை இடம் உடையவன் - உமையை இடப்பாகமாக உடையவன்;

அரிவையர் இடுபலிஅது பெற உழல் இறை - பெண்கள் இடும் பிச்சைக்காகத் திரியும் இறைவன்;

திரிபுரம் எரி அரன் - முப்புரங்களை எரித்த ஹரன்;

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் தலம் சிரபுரம் (சீகாழி); (சிரபுரம் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);


2)

அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட

நஞ்சணி மிடறினன் நடமிடு கழலினன்

வெஞ்சின விடையினன் விரிபுனல் அலைதரு

செஞ்சடை யினனுறை நகர்சிர புரமே.


அஞ்சிய இமையவர் அடியிணை பரவிட நஞ்சு அணி மிடறினன் - ஆலகால விஷத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் இரு-திருவடிகளைப் போற்றவும், இரங்கி அவ்விடத்தைக் கண்டத்தில் அணிந்தவன்; (மிடறு - கண்டம்; மிடற்றினன் என்றும், சந்தம் நோக்கி "மிடறினன்" என்றும் பாடல்களில் வரும்);

நடமிடு கழலினன் - கூத்தன்; (கழல் - திருவடி);

வெஞ்சின விடையினன் - சினக்கும் இடபத்தை ஊர்தியாக உடையவன்;

விரிபுனல் அலைதரு செஞ்சடையினன் - பரந்த கங்கையாறு அலைமோதுகின்ற (/அலைகின்ற) சடையை உடையவன்; (அலைத்தல் - அலைமோதுதல்; அலைதல் - திரிதல்); (தருதல் - ஒரு துணைவினை);

உறை நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் பதி சிரபுரம் (சீகாழி);


3)

புகலியர் பதிமொழி தமிழுரை தகவினர்

அகமகிழ் வுறவினை அறவருள் புரிசிவன்

இகலிய எயிலெரி இறையவன் இளமதி

திகழ்சடை முடியினன் நகர்சிர புரமே.


புகலியர்பதி மொழி-தமிழ் உரை-தகவினர் அகம் மகிழ்வுற வினை அறருள்புரி சிவன் - காழியர்கோனான திருஞான சம்பந்தர் பாடியருளிய தேவாரத்தைச் சொல்லும் அடியார்கள் மனம் மகிழ அவர்களது வினையெல்லாம் தீர அருள்கின்ற சிவன்; (புகலி - சீகழியின் 12 பெயர்களில் ஒன்று); (பதி - தலைவன்); (தகவு - தகுதி; குணம்);

இகலிய எயில் எரி இறையவன் - பகைத்த முப்புரங்களை எரித்த இறைவன்; (இகல்தல் - பகைத்தல்); (எயில் - கோட்டை);

இளமதி திகழ் சடைமுடியினன் நகர் சிபுரமே - இளம்பிறை விளங்குகின்ற சடையை உடைய பெருமான் நகர் சிரபுரம் (சீகாழி); (சடைமுடி - ஜடாமகுடம்);


4)

சேவடி யிணையவை தின(ம்)நினை அடியவர்

காவலன் அளிகொடு கவுணியர் பரவிய

பாவமர் செவியினன் அமரர்கள் பணிபதி

சேவமர் சிவனுறை நகர்சிர புரமே.


சேவடி-ணை-வை தினம் நினை அடியவர் காவலன் - சிவந்த இரு-திருவடிகளைத் தினமும் நினைகின்ற பக்தர்களைக் காப்பவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.87.1 - "வனமுலை யிணையவை");

அளி-கொடு கவுணியர் பரவிய பா அமர் செவியினன் - அன்பால் திருஞான சம்பந்தர் பாடியருளிய பாடல்களை விரும்பிக் கேட்கும் காதினன்; (அளி - அன்பு); (கவுணியர் - கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (அமர்தல் - விரும்புதல்);

அமரர்கள் பணி பதி - தேவர்கள் வழிபடும் தலைவன்;

சே அமர் சிவன் உறை நகர் சிரபுரமே - இடபத்தை ஊர்தியாக விரும்பிய சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


5)

தவமுனி வர்கள்தொழு தருநிழல் அமர்குரு

அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை

பவனறு மலர்மதி படர்சடை மிசையணி

சிவனவன் உறைதரு நகர்சிர புரமே.


தவ-முனிவர்கள் தொழு தருநிழல் அமர் குரு - தவமுனிவர்கள் நால்வர் போற்றக் கல்லாலமரத்தின்கீழ் இருந்த தட்சிணாமூர்த்தி; (தரு - மரம்);

அவனியில் வழிபடும் அடியவர் உறுதுணை - உலகில் வழிபடுகின்ற பக்தர்களுக்கு உற்ற துணை;

பவன் - என்றும் உள்ளவன்; (பவன் - சிவன் திருநாமம் - என்றும் இருப்பவன்);

நறுமலர் மதி படர்-சடைமிசை அணி சிவன்அவன் உறைதரு நகர் சிரபுரமே - வாசமலர்களையும் திங்களையும் படர்ந்த சடையின்மேல் அணியும் சிவபெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


6)

தினமரு மறையுரை சிறுவர துயிர்கொல

முனமடை மறலியை உயிரற முனிபவன்

அனநடை உமையொரு புடையினன் அடல்மிகு

சினவிடை அமரரன் நகர்சிர புரமே.


தினம் அருமறை உரை சிறுவரது உயிர் கொல - தினமும் அரிய வேதங்களைச் சொல்லி வழிபட்ட மறைச்சிறுவரான மார்க்கண்டேயரின் உயிரைக் கொல்வதற்கு;

முனம் அடை மறலியை உயிர் அற முனிபவன் - முன்பு அடைந்த காலனின் உயிர் அழியுமாறு அவனைக் கோபித்தவன் (சினந்து உதைத்தவன்); (மறலி - கூற்றுவன்); (முனிதல் - கோபித்தல்);

அன நடை உமை ஒரு புடையினன் - அன்னம் போன்ற நடையை உடைய உமையை ஒரு பக்கம் உடையவன்; (அனநடை - அன்னநடை);

அடல் மிகு சின-விடை அமர் அரன் நகர் சிரபுரமே - வலிய, சினம் மிகுந்த இடபத்தை ஊர்தியாக விரும்பிய ஹரன் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


7)

மங்கல வடிவினன் மலரடி தொழுதவர்

தங்களின் அருவினை தனையழி பரிவினன்

அங்கமும் அரவமு(ம்) மலர்களும் அழகிய

திங்களும் அணிசிவன் நகர்சிர புரமே.


மங்கல வடிவினன் - மங்கலத்தின் திருவுரு;

மலரடி தொழுதவர் தங்களின் அருவினைதனை அழி பரிவினன் - மலர் போன்ற திருவடிகளை வழிபட்டவரின் பழவினைகளை அழிக்கும் கருணாமூர்த்தி;

அங்கமும் அரவமும் மலர்களும் அழகிய திங்களும் அணி சிவன் - எலும்பையும் பாம்பையும் பூக்களையும் அழகிய சந்திரனையும் அணிந்த சிவபெருமான்; (அங்கம் - எலும்பு);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


8)

வரைபெயர் மதியிலி மணிமுடி ஒருபது

கரமிரு பதுநெரி விரலினன் அரவினன்

இரவினில் அருநடம் இடுபவன் ஒலிமலி

திரையடை சடையினன் நகர்சிர புரமே.


வரை பெயர் மதியிலி மணிமுடி ஒருபது கரம் இருபது நெரி விரலினன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவில்லாதவனான இராவணனின் கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையும் இருபது கைகளையும் திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி நசுக்கியவன்; (வரை - மலை);

அரவினன் - பாம்பை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.72.3 - "நீறணி மேனியன் நெருப்புமிழ் அரவினன்");

இரவினில் அருநடம் இடுபவன் - நள்ளிருளில் அரிய கூத்து இயற்றுபவன்;

ஒலி மலி திரை அடை சடையினன் - மிகவும் ஒலிக்கின்ற அலைகளை உடைய கங்கையை அடைத்த சடையை உடையவன்; (திரை - அலை; நதி);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


9)

முன்னரி முளரியன் அடிமுடி முயலெரி

உன்னிய அடியவர் உளமுறை விடமென

மன்னிய பெருமையன் வளர்மதி அலைநதி

சென்னியின் மிசையினன் நகர்சிர புரமே.


முன் அரி முளரியன் அடிமுடி முயல் எரி - முன்னர்த் திருமாலும் தாமரைமேல் இருக்கும் பிரமனும் அடியும் முடியும் தேடி முயலுமாறு உயர்ந்த ஜோதி; (முளரி - தாமரை); (சம்பந்தர் தேவாரம் - 1.92.9 - "அயனு மாலுமாய் முயலு முடியினீர்");

உன்னிய அடியவர் உளம் உறைவிடம் என மன்னிய பெருமையன் - தியானிக்கும் பக்தர்களின் உள்ளமே தான் தங்கும் இடமாக நிலைத்த பெருமையை உடையவன்; (உன்னுதல் - எண்ணுதல்); (மன்னுதல் - நிலைபெறுதல்; மிகுதல்);

வளர்மதி அலைநதி சென்னியின் மிசையினன் - வளர்கின்ற திங்களையும் அலைக்கின்ற (/அலையுடைய / அலைகின்ற) நதியையும் திருமுடிமேல் உடையவன்; (மிசை - மேல்);

நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


10)

ஐயனை அடைகிலர் அனுதினம் அவ(ம்)மொழி

பொய்யரின் நெறிதனை விலகுமின் அடிதொழு

கையினர் இடரவை களையிறை பொடியணி

செய்யவன் உறைதரு நகர்சிர புரமே.


ஐயனை அடைகிலர் - ஈசனை அடையாதவர்கள்;

அனுதினம் அவம் மொழி பொய்யரின் நெறிதனை விலகுமின் - தினந்தோறும் இழிந்த சொற்களைப் பேசும் அப்-பொய்யர்கள் சொல்லும் மார்க்கத்தை நீங்கள் நீங்குங்கள்;

அடிதொழு கையினர் இடர்அவை களை இறை - திருவடியைக் கையால் தொழும் பக்தர்களின் இடர்களை நீக்கும் இறைவன்; ( சம்பந்தர் தேவாரம் - 1,52.3 - "நின்னடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.");

பொடி அணி செய்யவன் - திருநீற்றைப் பூசிய செம்மேனியன்;

உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


11)

மூவரின் முதலினன் முடிவிலன் அருமறை

நாவினன் நகுதலை தரிகரன் நறைமலி

பூவணி திருமுடி யினனொளிர் பொடியணி

தீவணன் உறைதரு நகர்சிர புரமே.


மூவரின் முதலினன் - மும்மூர்த்திகளின் முதலானவன்; மும்மூர்த்திகளுக்கும் தலைவன்;

முடிவு இலன் - அழிவற்றவன்;

அருமறை நாவினன் - அரிய வேதங்களை நாவினால் ஓதியவன்;

நகு தலை தரி கரன் - ஒளிவீசும் மண்டையோட்டைக் கையில் தாங்கியவன்; (நகுதல் - சிரித்தல்; பிரகாசித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.133.8 - "நகுதலையிற் பலிதேர்ந்து");

நறை மலி பூ அணி திருமுடியினன் - தேன் மிக்க பூக்களைத் திருமுடிமேல் அணிந்தவன்;

ஒளிர் பொடி அணி தீவணன் - ஒளிவீசும் திருநீற்றை அணிந்த தீப்போன்ற செம்மேனியன்; (பொடி - திருநீறு); (தீவணன் - தீவண்ணன்);

உறைதரு நகர் சிரபுரமே - அப்பெருமான் உறையும் நகர் சிரபுரம் (சீகாழி);


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு :

  • சந்தக் கலிவிருத்தம் - "தனதன தனதன தனதன தனதன" என்ற சந்தம்.

  • முதற்சீர் "தானன" என்றும் சில பாடல்களில் வரலாம்.

  • பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "தனனா".

  • முடுகு ஓசை அமைந்த பாடல்கள். தேவாரத்தில் உள்ள திருவிராகம் ஒத்த அமைப்பு.

சம்பந்தர் தேவாரம் - 1.123.5 - பிடியத னுருவுமை கொளமிகு கரியது


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.360 - கோயில் (சிதம்பரம்) - மானன நோக்கி மடந்தை

2016-11-03

P.360 - கோயில் (சிதம்பரம்)

---------------------------------

(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தான தான - அரையடி)

(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூதநாதர்");


1)

மானன நோக்கி மடந்தை அஞ்ச

.. மதகரி தன்னை உரித்த கோனை

வானவர் கைதொழ நஞ்சை உண்ட

.. மணிதிகழ் கண்டனை வானி லாவும்

தேனமர் கொன்றையும் நச்ச ராவும்

.. சேர்சடை எந்தையை ஆல நீழல்

ஞான முதல்வனை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


மான் அன நோக்கி மடந்தை அஞ்ச மதகரி தன்னை உரித்த கோனை - மான் போன்ற பார்வையை உடைய உமாதேவி அஞ்சும்படி மதயானையின் தோலை உரித்த தலைவனை;

வானவர் கைதொழ நஞ்சை உண்ட மணி திகழ் கண்டனை - தேவர்கள் வணங்கவும் அவர்களுக்கு இரங்கி விடத்தை உண்ட நீலமணி திகழும் கண்டனை;

வான்-நிலாவும், தேன் அமர் கொன்றையும், நச்சு-அராவும் சேர் சடை எந்தையை - சடையில் வானில் விளங்கும் அழகிய திங்களையும், வண்டுகள் நாடும் தேன் திகழும் கொன்றை மலரையும், விஷப்பாம்பையும் அணிந்தவனை; (வானிலாவும் - வான் நிலாவும் - இச்சொற்றொடரை இருமுறை இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்); (வான் - வானம்; அழகு); (நிலா - சந்திரன்); (நிலாவுதல் - நிலவுதல் - இருத்தல்; தங்குதல்); (தேனமர் - தேன் அமர் - இச்சொற்றொடரை இருமுறை இயைத்தும் பொருள்கொள்ளல் ஆம்); (தேன் - வண்டு; மது); (அமர்தல் - இருத்தல்; விரும்புதல்);

ஆல-நீழல் ஞான முதல்வனை - கல்லாலின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை;

அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக; (உன்னுதல் - எண்ணுதல்);


2)

பொங்கர வைப்புனை மார்பி னானைப்

.. புலியதள் தன்னை அரைக்க சைத்த

சங்கர னைச்சின ஏற்றி னானைத்

.. தமருகம் ஏந்திய கையி னானைக்

கங்கையின் நீரலை சென்னி மீது

.. கவினுறு வெண்பிறை சூடி னானை

நங்கையொர் பங்கனை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


பொங்கு-அரவைப் புனை மார்பினானைப் - சீறும் பாம்பை மார்பில் அணிந்தவனை;

புலி-அதள் தன்னை அரைக்கு அசைத்த சங்கரனைச் -- புலித்தோலை அரையில் கட்டியவனை; (அதள் - தோல்); (அசைத்தல் - கட்டுதல்);

சின-ஏற்றினானைத் - கோபிக்கும் இடபத்தை வாகனமாக உடையவனை;

தமருகம் ஏந்திய கையினானைக் - கையில் உடுக்கையை ஏந்தியவனை; (தமருகம் - உடுக்கை);

கங்கையின் நீர் அலை சென்னி மீது கவின்-உறு வெண்பிறை சூடினானை - கங்கைநதி அலைமோதுகின்ற திருமுடிமேல் அழகிய வெண்திங்களைச் சூடியவனை;

நங்கை ஒர் பங்கனை - அர்த்தநாரீஸ்வரனை;

அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


3)

துதிசெயும் அன்பரின் அல்லல் நீக்கும்

.. தூயனை வேயன தோளு மைக்குப்

பதிதனை மூவிலை வேலி னானைப்

.. பன்னக நாணனை வந்த டைந்த

கதிர்மதி ஏறிய சென்னி மீது

.. கமழ்குர வத்தொடு கங்கை என்னும்

நதிபுனை நம்பனை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


துதிசெயும் அன்பரின் அல்லல் நீக்கும் தூயனை - வழிபடும் பக்தர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் தூயவனை;

வேய் அன தோள் உமைக்குப் பதிதனை - மூங்கில் போன்ற புஜங்களை உடைய உமாதேவி மணாளனை; (வேய் - மூங்கில்); (பதி - தலைவன்; கணவன்);

மூவிலை வேலினானைப் - திரிசூலத்தை ஏந்தியவனை;

பன்னக நாணனை - பாம்பை அரைநாணாகக் கட்டியவனை; (பன்னகம் - பாம்பு);

வந்து அடைந்த கதிர்மதி ஏறிய சென்னி மீது கமழ் குரவத்தொடு கங்கை என்னும் நதி புனை நம்பனை - வந்து சரணடைந்த திங்கள் பிரகாசிக்கின்ற திருமுடிமேல் வாசம் கமழும் குராமலரையும், கங்கையாற்றையும் அணியும் சிவபெருமானை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


4)

ஊனினை உண்கெனும் வேடர் அன்பின்

.. உருவினர் கண்ணது தோண்டி அப்ப

வானிடை வாழ்வொடு நாம(ம்) நல்கு

.. வார்சடை மேற்பிறை தாங்கி னானை

மானிகர் நோக்கியை வாமம் வைத்த

.. மைந்தனை மந்திர நாமம் ஓதும்

ஞானியர் நெஞ்சனை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


ஊனினை உண்கெனும் வேடர், அன்பின் உருவினர் கண்ணது தோண்டி அப்ப, வானிடை வாழ்வொடு நாமம் நல்கு - "மாமிசத்தை உண்க" என்று வேண்டிய வேடரான திண்ணனார், அன்பே வடிவம் ஆனவர், (ஈசன் கண்ணில் காயத்தைக் கண்டு) தம் கண்ணைத் தோண்டி அப்பவும், அவருக்குக் கண்ணப்பர் என்ற பெயரையும் வானுலக வாழ்வையும் அருளிய; (உண்கெனும் - உண்க எனும் - தொகுத்தல் விகாரம்);

வார்-சடைமேல் பிறை தாங்கினானை - நீண்ட சடைமேல் சந்திரனைத் தரித்தவனை;

மான் நிகர் நோக்கியை வாமம் வைத்த மைந்தனை - மான் போன்ற பார்வை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பக்கம் வைத்த அழகனை; (மைந்தன் - கணவன்; வீரன்);

மந்திர நாமம் ஓதும் ஞானியர் நெஞ்சனை - காக்கும் மந்திரமான ஐந்தெழுத்தை ("நமச்சிவாய") ஓதும் ஞானியர் நெஞ்சில் உறைபவனை;

அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


5)

வெல்ல அரும்புரம் மூன்றும் வேவ

.. மேருவை வில்லென ஏந்தி எய்ய

வல்ல அரன்றனை அன்பு மிக்க

.. மனமுடை நற்றவ மாணி தன்னைக்

கொல்ல நெருங்கிய கூற்று தன்னைக்

.. குரைகழ லாலுதை செய்த கோனை

நல்லவர் சேர்தில்லை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


வெல்ல அரும் புரம் மூன்றும் வேவ - தேவர்களால் வெல்ல இயலாத முப்புரங்களும் வெந்து அழியும்படி;

மேருவை வில்லென ஏந்தி எய்ய வல்ல அரன்-னை - மேருமலையை வில்லாக ஏந்திக் கணை எய்த ஹரனை;

அன்பு மிக்க மனமுடை நற்றவ மாணி தன்னைக் கொல்ல நெருங்கிய கூற்றுதன்னைக் குரைகழலால் உதைசெய்த கோனை - மனத்தில் அளவில்லாத பக்தியுடையவரும் நல்ல தவம் உடையவருமான மார்க்கண்டேயரைக் கொல்ல அணுகிய காலனை ஒலிக்கும் கழலை அணிந்த திருவடியால் உதைத்த தலைவனை;

நல்லவர் சேர் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - நல்லவர்கள் திரள்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


6)

தேன்மலர் தூவிய தேவர் வாழத்

.. திரைகடல் நஞ்சினை உண்ட தேவை

வான்மதி கூவிளம் வன்னி கொன்றை

.. மத்தம் இலங்கிய வேணி யானை

மான்மறி ஏந்திய கையி னானை

.. மார்பினில் முப்புரி நூலி னானை

நான்மறை ஆர்தில்லை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


தேன்மலர் தூவிய தேவர் வாழத் திரைகடல் நஞ்சினை உண்ட தேவை - தேன் நிறைந்த பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்கள் இறவாது இருக்கப், பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை உண்ட கடவுளை; (தே - கடவுள்);

வான்-மதி கூவிளம் வன்னி கொன்றை மத்தம் இலங்கிய வேணியானை - வெண்திங்கள், வில்வம், வன்னி, கொன்றைமலர், ஊமத்தமலர் இவற்றையெல்லாம் சடையில் அணிந்தவனை; (வான் - வானம்; அழகு); (வால் - வெண்மை); (வான்மதி = 1. வான்+மதி; 2. வால்+மதி);

மான்மறி ஏந்திய கையினானை - மான்கன்றைக் கையில் ஏந்தியவனை;

மார்பினில் முப்புரி நூலினானை - மார்பில் பூணூல் திகழ்பவனை;

நான்மறை ஆர் தில்லை அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - நால்வேதங்கள் ஒலிக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக; (ஆர்த்தல் - ஒலித்தல்); (நான்மறையார் தில்லை அம்பலத்தில் - "நால்வேதம் ஓதும் தில்லைவாழ் அந்தணர்கள் பூசிக்கின்ற தில்லைச் சிற்றம்பலத்தில்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);


7)

நெற்றியில் நாட்டனை நீறு பூசும்

.. நிமலனை உண்பலி தேர ஓடு

பற்றிய கையனை நாண தாகப்

.. பாம்பினை வீக்கிய தேவ தேவை

வெற்றி விடைக்கொடி காட்டு கின்ற

.. வேந்தனை ஐம்புலன் ஆசை வென்ற

நற்றவர் போற்றிடும் அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


நெற்றியில் நாட்டனை - நெற்றிக்கண்ணனை; (நாட்டம் - கண்); (குறிப்பு: தீவண்ணம் - தீவண்ணன் என்பதுபோல், நாட்டம் - நாட்டன்);

நீறு பூசும் நிமலனை - திருநீற்றைப் பூசிய தூயவனை;

உண்பலி தேர ஓடு பற்றிய கையனை - பிச்சைக்காகப் பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தியவனை;

நாண்அதாகப் பாம்பினை வீக்கிய தேவதேவை - அரைநாணாகப் பாம்பைக் கட்டிய தேவதேவனை; (வீக்குதல் - கட்டுதல்);

வெற்றி விடைக்கொடி காட்டுகின்ற வேந்தனை - வெற்றியுடைய இடபக்கொடி உடைய மன்னனை;

ஐம்புலன் ஆசை வென்ற நற்றவர் போற்றிடும் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - ஐம்புலன்களையும் ஆசைகளையும் வென்ற நல்ல தவம் உடையவர்கள் போற்றுகின்ற, சிற்றம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


8)

உம்பரும் அஞ்சும் இலங்கை மன்னன்

.. உயர்மலை தன்னை இடந்த போது

செம்பதம் ஊன்றி நசுக்கி னானைத்

.. திரிபுரம் மூன்றெரி செய்த தேவை

வம்பலர் ஐந்தினை வாளி யாக்கொள்

.. மன்மத னைச்சுடு கண்ணி னானை

நம்பியை அம்பொனின் அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


உம்பரும் அஞ்சும் இலங்கை மன்னன் உயர்-மலை தன்னை இடந்த போது - தேவர்களும் அஞ்சுகின்ற அளவு வலிமை உடைய இராவணன் கயிலைமலையைப் பெயர்க்க முயன்றபொழுது; (இடத்தல் - பெயர்த்தல்);

செம்-பதம் ஊன்றி நசுக்கினானைத் - சிவந்த திருவடியை ஊன்றி அவனை நசுக்கியவனை;

திரிபுரம் மூன்று எரி செய்த தேவை - எங்கும் திரிந்த முப்புரங்களை எரித்த கடவுளை; (திரிபுரம் - வினைத்தொகை - திரிந்த புரங்கள்);

வம்பு-அலர் ஐந்தினை வாளியாக் கொள் மன்மதனைச் சுடு கண்ணினானை - வாசமலர்கள் ஐந்தை அம்புகளாகக் கொண்ட மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணனை; (வம்பு - வாசனை); (வாளி - அம்பு; வாளியா - வாளியாக; கடைக்குறை விகாரம்);

நம்பியை - பெருமானை; (நம்பி - ஆடவரில் சிறந்தவன்);

அம்பொனின் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - அழகிய பொன்னம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


9)

மாலும் விரிஞ்சனும் நேடி வாடி

.. வழிபட ஓங்கிய சோதி யானைச்

சூல(ம்) மழுப்படை தாங்கி னானைத்

.. தோற்றமும் ஈறும் இலாப்பி ரானை

நீல மிடற்றனை மாசி லாத

.. நீற்றனை ஆற்றனை ஆழி சூழ்ந்த

ஞாலம் இறைஞ்சிடும் அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


மாலும் விரிஞ்சனும் நேடி வாடி வழிபட ஓங்கிய சோதியானைச் - விஷ்ணுவும் பிரமனும் தேடி வாடி வணங்கும்படி உயர்ந்த ஜோதி ஆனவனை; (விரிஞ்சன் - பிரமன்); (நேடுதல் - தேடுதல்);

சூலம் மழுப்படை தாங்கினானைத் - சூலத்தையும் மழுவாயுதத்தையும் ஏந்தியவனை;

தோற்றமும் ஈறும் இலாப் பிரானை - பிறப்பும் இறப்பும் இல்லாத தலைவனை;

நீல-மிடற்றனை - நீலகண்டனை;

மாசு இலாத நீற்றனை ஆற்றனை - தூய திருநீறு பூசியவனைக், கங்காதரனை;

ஆழி சூழ்ந்த ஞாலம் இறைஞ்சிடும் அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - கடல் சூழ்ந்த இவ்வுலக மக்கள் வணங்கும், அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


10)

வஞ்சக நெஞ்சினர் ஆகி என்றும்

.. மயலறு வெண்திரு நீறு பூச

அஞ்சிடு வாருரை பொய்யை நீங்கி

.. அடிதொழு வார்வினை நீக்கு வானைச்

செஞ்சடை மேலிள நாகம் ஊரும்

.. தேவனை வெள்விடை ஊர்தி யானை

நஞ்சணி கண்டனை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


வஞ்சக நெஞ்சினர் ஆகி என்றும் மயல் அறு வெண் திருநீறு பூச அஞ்சிடுவார் உரை பொய்யை நீங்கி அடிதொழுவார் வினை நீக்குவானைச் - மனத்தில் வஞ்சத்தை உடையவர்களும், என்றும் அறியாமையைப் போக்கும் வெண்ணீற்றைப் பூச அஞ்சுபவர்களுமான பேதையர் சொல்லும் பொய்களிலிருந்து விலகித் திருவடியைத் தொழும் அன்பர்களுடைய வினைகளைத் தீர்ப்பவனை; (மயல் - அறியாமை; மயக்கம்);

செஞ்சடைமேல் இள-நாகம் ஊரும் தேவனை - சிவந்த சடைமேல் இளம்பாம்பு ஊர்கின்ற தேவனை;

வெள்-விடை ஊர்தியானை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;

நஞ்சு அணி கண்டனை - நீலகண்டனை;

அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


11)

வேதனை ஆயின தீர வேண்டில்

.. வேலவன் அத்தனை அம்பு யம்போல்

பாதனைக் கண்ணமர் நெற்றி யானைப்

.. பரமனை வெண்குழை தோடி லங்கும்

காதனை வேட்டுவ னாகி அன்று

.. காண்டிவ னுக்கருள் நல்கி னானை

நாதனை வேதனை அம்ப லத்தில்

.. நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே.


வேதனை ஆயின தீர வேண்டில் - துன்பங்கள் எல்லாம் தீரவேண்டும் என்றால்;

வேலவன் அத்தனை - முருகனுக்குத் தந்தையை;

அம்புயம் போல் பாதனைக் - தாமரைமலர் போன்ற திருவடி உடையவனை; (அம்புயம் - அம்புஜம் - தாமரை);

கண் அமர் நெற்றியானைப் - நெற்றிக்கண்ணனை;

பரமனை - மேலானவனை;

வெண்குழை தோடு இலங்கும் காதனை - ஒரு காதில் வெண்ணிறக் குழையும் ஒரு காதில் தோடும் அணிந்த அர்த்தநாரீஸ்வரனை;

வேட்டுவன் ஆகி அன்று காண்டிவனுக்கு அருள் நல்கினானை - வேடன் கோலத்தில் சென்று அருச்சுனனுக்குப் பாசுபதம் தந்தவனை; (காண்டிவன் - காண்டீவன் - அர்ஜுனன்);

நாதனை வேதனை - தலைவனை, வேதப்பொருளை, வேதம் ஓதியவனை;

அம்பலத்தில் நட்டனை நாள்தொறும் உன்னு நெஞ்சே - அம்பலத்தில் ஆடுகின்ற கூத்தனைத் தினமும், நெஞ்சே, நினைவாயாக;


பிற்குறிப்பு - யாப்புக் குறிப்பு:

  • எண்சீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தான தான - அரையடி;

  • அரையடியின் முதற்சீர் "தனதன" என்றும் வரலாம்;

  • தானன என்ற விளச்சீர் வரும் இடத்தில் தான என்று மாச்சீர் வரல் ஆம். அப்படி வரின், அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். (வெண்டளை).

சம்பந்தர் தேவாரம் - 1.6.1 - "அங்கமும் வேதமும் ஓதும் நாவர்";


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, March 1, 2025

P.359 - பொது - ஓயாது உன்பெயரே

2016-10-22

P.359 - பொது

---------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தானா தானதனா தன தானன தானதனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய்")

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே")


1)

ஓயா துன்பெயரே உரை அன்புடை மாணியவர்

மாயா வாழ்வுபெற வரம் ஈந்த பரம்பரனே

தூயா செஞ்சடைமேல் துணி வெண்மதி வைத்தருளும்

நேயா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


ஓயாது உன் பெயரே உரை அன்புடை மாணி அவர் - எப்போதும் உன் திருநாமத்தையே சொல்லும் மார்க்கண்டேயர்;

மாயா வாழ்வுபெற வரம் ஈந்த பரம்பரனே - சிரஞ்சீவியாக வாழ வரம் தந்த பெருமானே; (மாயா - இறவாத);

தூயா - தூயவனே;

செஞ்சடைமேல் துணி வெண்மதி வைத்தருளும் நேயா - சிவந்த சடைமேல் வெண்திங்கள்-துண்டத்தை அணிந்த அன்பனே; (துணி - துண்டம்); (நே - நேயம் - அன்பு);

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


2)

இமையோர் தாம்பணிய எரி நஞ்சினை உண்டவனே

உமையோர் கூறுடையாய் ஒரு வெள்விடை ஊர்தியினாய்

அமரா அந்தகனை அயில் வேல்கொடு செற்றவனே

நிமலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


இமையோர் - தேவர்கள்;

எரி நஞ்சினை - சுட்டெரித்த விடத்தை;

ஒரு வெள்விடை ஊர்தியினாய் - ஒப்பற்ற இடபவாகனம் உடையவனே;

அமரா - இறவாதவனே; (சுந்தரர் தேவாரம் - 7.3.6 - "ஆலந்நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே");

அந்தகனை அயில் வேல்கொடு செற்றவனே - அந்தகாசுரனைச் கூரிய சூலத்தால் குத்தி அழித்தவனே; (அயில் - கூர்மை);

நிமலா - நிமலனே; தூயவனே;


3)

முத்தா முக்கணனே முதல் வாவென வாழ்த்தடியார்

சித்தா செம்பெருமான் திரு நீறணி மேனியினாய்

அத்தா பாம்புதனை அரை நாணென ஆர்த்தவனே

நித்தா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


முத்தன் - இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் - சிவன்;

முதல்வன் - தலைவன்; ஆதி;

அடியார் சித்தன் - அடியவர்களது சித்தத்தில் இருப்பவன்;

செம்பெருமான் - சிவந்த நிறத்தையுடைய பெருமான். (திருவாசகம் - திருத்தசாங்கம் - "ஆரூரன் செம்பெருமான்");

அத்தன் - தந்தை;

ஆர்த்தல் - கட்டுதல்;

நித்தன் - என்றும் அழியாது இருப்பவன்;


4)

சூலா போற்றிசெய்வார் துயர் ஆயின தீர்த்தருளும்

சீலா ஈரமிலாச் செறு காலனை அன்றுதைத்த

காலா கண்ணுதலே கடு நஞ்சினை உண்மிடற்றில்

நீலா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


சூலா - சூலனே;

போற்றிசெய்வார் துயர் ஆயின தீர்த்தருளும் சீலா - வழிபடுபவர்களது துயர்களைத் தீர்க்கும் சீலனே;

ஈரம் இலாச் செறு காலனை அன்று உதைத்த காலா - இரக்கமற்ற, கொலைத்தொழில் செய்யும், நமனைக் காலால் உதைத்தவனே; காலகாலனே;

கண்ணுதலே - நெற்றிக்கண்ணா;

கடு நஞ்சினை உண் மிடற்றில் நீலா - கொடிய விடத்தை உண்ட கண்டத்தில் நீலநிறம் உடையவனே; (கடுமை - கொடுமை); (அப்பர் தேவாரம் - 5.72.4 - "ஆலநஞ்சு உண்ட கண்டத்தமர் நீலன்");


5)

காற்றோ டொள்ளெரிமால் கணை ஆக வரைச்சிலையால்

மாற்றார் மாமதில்கள் வளர் தீப்புக எய்தவனே

ஏற்றாய் வெண்மழுவாள் இலை மூன்றுடை வேலுடையாய்

நீற்றாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


காற்றோடு ஒள்-எரி மால் கணை ஆக, வரைச்-சிலையால் மாற்றார் மா-மதில்கள் வளர் தீப் புக எய்தவனே - வாயு, ஒளியுடைய அக்னி, விஷ்ணு என்ற மூவரும் சேர்ந்து ஓர் அஸ்திரம் ஆக, மேருமலையை வில்லாக ஏந்திப், பகைவர்களது முப்புரங்களும் தீயில் புக்கு அழியும்படி எய்தவனே; (ஒள் - ஒளியுடைய); (வரை - மலை); (சிலை - வில்); (மாற்றார் - பகைவர்);

ஏற்றாய் - இடபவாகனனே;

வெண்மழுவாள் இலை மூன்றுடை வேல் உடையாய் - வெண்மையான மழுவாளையும் திரிசூலத்தையும் ஏந்தியவனே;

நீற்றாய் - திருநீறு பூசியவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


6)

பதியே பாய்விடையாய் படர் புன்சடை மேலரவே

மதியே வானதியே மல ரேபுனை பிஞ்ஞகனே

புதியாய் தொன்மையனே புகல் என்றடை வார்க்குலவா

நிதியே நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


பதியே - தலைவனே;

பாய்விடையாய் - பாயும் இடபத்தை வாகனமாக உடையவனே;

படர் புன்சடைமேல் அரவே மதியே வானதியே மலரே புனை பிஞ்ஞகனே - படர்ந்த செஞ்சடைமேல் பாம்பையும் திங்களையும் கங்கையையும் மலரையும் அணிகின்ற தலைக்கோலம் உடையவனே; (வானதி - வான் நதி - கங்கை); (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (ஏகாரம் - எண்ணேகாரம்); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.6 - "வானே நிலனே பிறவே அறிவரியான்");

புதியாய் தொன்மையனே - எல்லாவற்றினும் புதியவனே, எல்லாவற்றினும் பழையவனே; (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.9 - "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"); (திருவிளையாடற்புராணம் - "பழையாய் புதியாய் சரணம்");

புகல் என்று அடைவார்க்கு உலவா நிதியே - உன்னைச் சரணடைந்தவர்களுக்கு என்றும் அழியாத நிதி ஆனவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


7)

ஊரூர் உண்பலிதேர் ஒரு வாஉமை யாள்கணவா

காரார் வெற்புநிகர் கரி தன்னை உரித்தவனே

ஏரார் கொன்றையினாய் இள மாமதி சேர்சடையுள்

நீரா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


ஊர்-ஊர் உண்பலி தேர் ஒருவா - பல ஊர்களில் பிச்சை ஏற்கும் ஒப்பற்றவனே; (சம்பந்தர் தேவாரம் - 3.41.1 - "கருவார் கச்சித் திருவேகம்பத்து ஒருவா");

உமையாள் கணவா - பார்வதி மணவாளனே;

கார் ஆர் வெற்பு நிகர் கரி-தன்னை உரித்தவனே - கருமை பொருந்திய மலை போன்ற யானையின் தோலை உரித்தவனே;

ஏர் ஆர் கொன்றையினாய் - அழகிய கொன்றைமலரை அணிந்தவனே; (ஏர் - அழகு);

இள மாமதி சேர் சடையுள் நீரா - அழகிய இளந்திங்களை அணிந்த சடையுள் கங்கையை உடையவனே; (அப்பர் தேவாரம் - 4.64.5 - "சடையுள் நீரர்");

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


8)

ஓரா வாளரக்கன் உயர் வெற்பை எடுக்கலுறச்

சீரார் தாள்விரலைச் சிறி தூன்றி நெரித்தவனே

தீரா நோய்மருந்தே சிவ னேவிரி செஞ்சடையுள்

நீரா நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


ஓரா வாள்-அரக்கன் உயர் வெற்பை எடுக்கலுறச் - சிறிதும் எண்ணாமல், கொடிய அரக்கனான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கியபொழுது; (ஓர்தல் - சிந்தித்தல்; ஆராய்தல்); (வாள் - கொடுமை);

சீர் ஆர் தாள்விரலைச் சிறிது ஊன்றி நெரித்தவனே - பெருமை மிக்க பாதத்து விரலைச் சற்றே ஊன்றி அவனை நசுக்கியவனே;

தீரா-நோய் மருந்தே சிவனே - தீராத நோயான பிறவிப்பிணிக்கு மருந்தே, சிவபெருமானே;

விரி செஞ்சடையுள் நீரா - விரிந்த சிவந்த சடையுள் கங்கையை உடையவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


9)

பூண்டாய் பாம்புகளே பொலி சாந்தென மேனிமிசை

மாண்டார் வெண்பொடியே மகிழ் மாண்புடை மன்னவனே

ஆண்டான் யானெனுமால் அய னாரிடை அன்றழலாய்

நீண்டாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


பூண்டாய் பாம்புகளே - பாம்புகளை அணிந்தவனே;

பொலி சாந்து என மேனிமிசை மாண்டார் வெண்பொடியே மகிழ் மாண்புடை மன்னவனே - பொலிகின்ற சந்தனம் எனத் திருமேனிமேல் இறந்தவர் சாம்பலையே விரும்பிப் பூசும் பெருமை உடைய தலைவனே; (பொலிதல் - சிறத்தல்; விளங்குதல்); (சாந்து - சந்தனம்); (மாண்டார் - இறந்தவர்); (பொடி - சாம்பல்);

"ஆண்டான் யான்" எனும் மால்-அயனாரிடை அன்று அழலாய் நீண்டாய் - "நானே பரம்பொருள்" என்று வாதிட்ட பிரமன் விஷ்ணு இவர்களிடையே அன்று பெருஞ்சோதியாகி உயர்ந்தவனே; (ஆண்டான் - ஆண்டவன்);

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


10)

நன்றே நாடகிலா நய வஞ்சகர் கட்கிலனே

மன்றாக் கானகமே மகிழ் கூத்த சலந்தரனைக்

கொன்றாய் கும்பிடுவார் குறை நீக்கி அருந்துணையாய்

நின்றாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


நன்றே நாடகிலா நயவஞ்சகர்கட்கு இலனே - தாம் நல்லவற்றை விரும்பாதவர்கள் ஆகிப் பிறரையும் ஏமாற்றுகின்றவர்களுக்கு இல்லாதவனே (/ அருள் இல்லாதவனே); (நயவஞ்சகம் - இனிமைகாட்டி ஏமாற்றுகை); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

மன்றாக் கானகமே மகிழ் கூத்த - சுடுகாட்டை ஆடுகின்ற அரங்காக விரும்பும் கூத்தனே;

சலந்தரனைக் கொன்றாய் - ஜலந்தராசுரனை அழித்தவனே;

கும்பிடுவார் குறை நீக்கி அருந்துணையாய் நின்றாய் - வழிபடும் பக்தர்களது குறைகளைத் தீர்த்து அவர்களுக்கு அரிய துணை ஆகி நிற்பவனே;

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


11)

இறைவா ஐங்கணையான் எழில் ஆகம் எரித்தவனே

மறையார் நாவினனே மழு ஏந்திய கையினனே

பிறையார் சென்னியனே பெரி யாய்உல கங்களெலாம்

நிறைவாய் நின்கழலே நினை நெஞ்சது தந்தருளே.


இறைவா - இறைவனே;

ஐங்கணையான் எழில் ஆகம் எரித்தவனே - ஐந்து மலர்க்கணைகளை உடைய மன்மதனுடைய அழகிய உடலை எரித்துச் சாம்பல் ஆக்கியவனே; (ஆகம் - உடல்);

மறை ஆர் நாவினனே - திருநாவால் வேதத்தை ஓதுபவனே;

மழு ஏந்திய கையினனே - கையில் மழுவை ஏந்தியவனே;

பிறை ஆர் சென்னியனே - திருமுடிமேல் சந்திரனைச் சூடியவனே;

பெரியாய் - பெரியவனே;

உலகங்கள் எலாம் நிறைவாய் - எல்லா உலகங்களிலும் வியாபித்து இருப்பவனே; (நிறைதல் - வியாபித்தல்);

நின் கழலே நினை நெஞ்சது தந்தருளே - உன் திருவடியையே நினையும் நெஞ்சை எனக்கு அருள்வாயாக;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

சந்த விருத்தம் - "தானா தானதனா தன தானன தானதனா" என்ற சந்தம்.

இச்சந்தத்தைத் "தானா தானதனா தனதானன தானதனா" என்று நோக்கில் சந்தக் கலிவிருத்தம் என்று கருதலாம்.

  • அடிகளின் முதற்சீர் - தானா - இது "தனனா" என்றும் வரலாம்;

  • அடிகளின் முதற்சீர் - நெடிலில் முடியும்;

  • "தானன" என்ற 4-ஆம் சீர் "தான" என்றும் வரலாம். அப்படி அச்சீர் "தான" என்று வரின், 5-ஆம் சீர் "தனாதனனா" என்று அமைந்து அடியின் சந்தம் கெடாது வரும்.

(சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து")

(சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே")


வி. சுப்பிரமணியன்

----------- --------------