Saturday, May 26, 2018

04.34 – கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம் / திருமயானம்)


04.34கடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம் / திருமயானம்)


2013-12-23
கடவூர் மயானம் (இக்கால வழக்கில் 'திருமெய்ஞ்ஞானம்' / 'திருமயானம்')
----------------------------------
(நேரிசை வெண்பா.
எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)
நிலைபெற் றிடநீ நினைதியேல் நெஞ்சே
தலைமேற் பிறையன் சடையன் மலைபோற்
கருமான் உரியன் கடவூர் மயானப்
பெருமான் அடிகளைப் பேணு.



நிலைபெறுதல் - நற்கதி அடைதல்;
நீ நினைதியேல் - நீ நினைந்தால்;
கருமான் - யானை; (அப்பர் தேவாரம் - 6.1.3 - "கருமானின் உரியதளே உடையா வீக்கிக்");
பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்; விரும்புதல்;
கடவூர் மயானப் பெருமான் அடிகளை - திருக்கடவூர் மயானத்தில் உறையும் கடவுளை; ("கடவூர் மயானத்தில் உறையும் பெருமானது திருவடிகளை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
* பெருமான் அடிகள் - இத்தலத்து இறைவன் திருநாமம்.



2)
இன்னற் கடலில் இளையா வழிதனை
உன்னு மனமே உயர்கயிலை மன்னன்
கருவார் வினைதீர் கடவூர் மயானப்
பெருமான் அடிகளைப் பேணு.



இளையா வழி - வருந்தாத வழி; (இளைத்தல் - மெலிதல்; சோர்தல்);
உன்னு - நினை;
கரு ஆர் வினை தீர் - கருவிற் பிணிக்கும் வினையைத் தீர்க்கும்; (கரு - பிறப்பு; உடம்பு); (ஆர்த்தல் - பிணித்தல்);



3)
நெஞ்சேநீர் பூவால் நிதமேத்து மாணிக்குத்
துஞ்சா நிலைதந்தான் சுட்டெரித்த நஞ்சார்
கருமா மிடற்றன் கடவூர் மயானப்
பெருமான் அடிகளைப் பேணு.



நிதம் - தினந்தோறும்;
மாணி - மார்க்கண்டேயர்;
துஞ்சா - இறப்பு இல்லாத; (துஞ்சுதல் - இறத்தல்);
நிலை தந்தான் - நிலையைத் தந்தவன்;
நஞ்சு ஆர் கரு மா மிடற்றன் - விடத்தை உண்ட கரிய அழகிய கண்டத்தை உடையவன்; (ஆர்தல் - உண்ணுதல்);



4)
அணையாச் சுடரனையான் ஆரார் புரங்கள்
கணையால் எரித்தான் கடலிற் புணையாய்
வருவான் கடவூர் மயானம் மகிழும்
பெருமான் அடிகளைப் பேணு.



அணையாச் சுடர் அனையான் - அணையாத விளக்கு ஒத்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா ஒண்சுடரே" - அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே);
ஆரார் - பகைவர்;
எரித்தான் - எரித்தவன்;
கடல் - வினைக்கடல், பிறவிக்கடல், துன்பக்கடல்;
புணை - தெப்பம்;
குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;



5)
வினைகள் விலகிட வேண்டுதியேல் நெஞ்சே
நனைவெள்ளம் பாய்வேணி நம்பன் சினவெள்
ளெருதே றிறைவன் கடவூர் மயானப்
பெருமான் அடிகளைப் பேணு.



வேண்டுதியேல் - நீ வேண்டினால்; நீ விரும்பினால்;
நனை வெள்ளம் பாய் வேணி நம்பன் - நனைக்கின்ற கங்கைப்புனல் பாயும் சடையை உடைய சிவபெருமான்; (வேணி - சடை); (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன்);
சின வெள் எருது ஏறு இறைவன் - சினக்கும், வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;



6)
மேதினியில் இன்புற வேண்டுதியேல் நன்னெஞ்சே
காதினில் தோடணியும் காரிகை பாதி
உருவான் கடவூர் மயானத் துறையும்
பெருமான் அடிகளைப் பேணு.



மேதினி - உலகம்;
காதினில் தோடு அணியும் காரிகை பாதி உருவான் - காதில் தோட்டை அணியும் உமையம்மையை உருவில் பாதியாக உடையவன்;
"... காரிகை பாதி உருவான் கடவூர் ...." - இதனை "... காரிகை பாதி உரு, வான் கடவூர் ..." என்று கொண்டும் பொருள்கொள்ளலாம். (வான் - அழகிய);



7)
தெளியாய் மனமே திருமலிய வேண்டில்
எளியான் இரப்பவர்க் கென்றும் ஒளியான்
கருதார்க் களியான் கடவூர் மயானப்
பெருமான் அடிகளைப் பேணு.



தெளியாய் - தெளிவாயாக; திரு - செல்வம்; நன்மை; மலிதல் - மிகுதல்;
எளியன் - எளியவன் - எளிதில் பெறப்படுபவன்; இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்;
ஒளியான் - ஒளித்தல் இல்லாதவன்; (ஒளித்தல் - மறைத்தல்);
எளியான் இரப்பவர்க் கென்றும் ஒளியான் - வேண்டிப் பணியும் அன்பர்களுக்கு என்றும் எளியவன்; வேண்டிப் பணியும் அன்பர்களுக்கு என்றும் ஒளித்தல் இன்றி வாரி வழங்குபவன்;
கருதார்க்கு அளியான் - கருதாதவர்களுக்கு கொடாதவன்; (அளியான் = அளித்தல் இல்லாதவன்; "அளிதல் இல்லாதவன்" என்றும் பொருள்கொள்ளலாம்);
(அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்கு வானலன்" - மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான். அடியவர்களுக்கு நாள்தோறும் நன்மை செய்வான். அடியர் அல்லாரை வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான்.);



8)
இருவரை பேர்த்த இலங்கையர்கோன் வாடத்
திருவிரல் ஒன்றைச் சிறிதிட் டொருவாள்
தருவான் கடவூர் மயானத்தில் தங்கும்
பெருமான் அடிகளைப் பேணு.



இரு வரை - பெரிய மலை - கயிலைமலை;
இலங்கையர் கோன் - இராவணன்;
ஒரு வாள் - சந்திரஹாஸம் என்ற வாள்;
குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;



9)
புரமூன் றெரியப் பொருப்புவில் ஏந்து
பரமன் மலர்மேற் பயிலும் பிரமன்
கருமாற் கரியான் கடவூர் மயானப்
பெருமான் அடிகளைப் பேணு.



பொருப்பு வில் - மேரு மலையை வில்லாக;
பயில்தல் - தங்குதல்;
பிரமன் கரு மாற்கு அரியான் - பிரமனுக்கும் கரிய திருமாலுக்கும் அரியவன்;
குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;



10)
வெய்யவினை விட்டின்பம் மேவ மடநெஞ்சே
பொய்யினையே நற்றவமாப் பூண்டொழுகும் கையர்க்
கருளான் கடவூர் மயானம் அமரும்
பெருமான் அடிகளைப் பேணு.



வெய்ய வினை விட்டு - கொடிய வினைகள் நீங்கி;
மேவுதல் - அடைதல்; பொருந்துதல்;
நற்றவமா - நல்ல தவமாக;
கையர்க்கு அருளான் - வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவன்;
அமரும் - விரும்பும்; விரும்பி உறையும்;



11)
பிணிவினைதீர்ந் தின்பம் பெருக மனமே
துணிமதி பொற்சடைச் சூடி மணிபோற்
கருளார் மிடற்றன் கடவூர் மயானப்
பெருமான் அடிகளைப் பேணு.



பிணி வினை தீர்ந்து இன்பம் பெருக மனமே - நெஞ்சே, பிணிகளும் வினைகளும் தீர்ந்து இன்பம் பெருக வேண்டும் எனில்; (பிணிவினை - பிணிக்கின்ற வினை; பிணிகளும் வினைகளும் என்றும் பொருள்கொள்ளலாம்);
துணிமதி பொற்சடைச் சூடி - பிறைச்சந்திரனைப் பொன் போன்ற சடையின்மேல் சூடியவன்; (துணிமதி - பிறைச்சந்திரன்; (துணி - துண்டம்; துணிதல் - வெட்டுண்ணுதல்; துணித்தல் - வெட்டுதல்);
மணிபோல் கருள் ஆர் மிடற்றன் - நீலமணி போலக் கரிய நிறம் திகழும் கண்டம் உடையவன்; (கருள் - கறுப்பு; இருள்);
கடவூர் மயானப் பெருமான் அடிகளைப் பேணு - திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் அடிகளைப் போற்றுவாயாக.



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) திருக்கடவூர் மயானம்: இத்தலத்து இறைவன்/இறைவி திருநாமம்: அருள்மிகு மலர்க்குழல் மின்னம்மை உடனுறை பெரிய பெருமான் அடிகள்.
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மூவர் பதிகங்களிலும் - 2.80, 5.38, 7.53 - " பெருமான் அடிகள் " என்ற நாமம் பாடல்தோறும் வந்துள்ளது.


2) திருக்கடவூர் மயானம் - பிரமபுரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: : http://temple.dinamalar.com/New.php?id=777
----------- --------------

No comments:

Post a Comment