Monday, August 10, 2015

01.34 – பொது - (புஜங்கம்)

01.34பொது - (புஜங்கம்)



2008-08-04
பொது - புயங்கப் பெருமான் புஜங்கம் - 1
-------------------------------------------
(“தனானா தனானா தனானா தனானா” என்ற சந்தம்.
சமஸ்கிருதத்தில் உள்ள 'புஜங்கம்' என்ற பாடல் அமைப்பு).



புயங்கப் பெருமான் - பாம்பணிந்த பெருமான்; (புயங்கம் - புஜங்கம் - பாம்பு);
(8.45.1 - திருவாசகம் - யாத்திரைப்பத்து - “பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான்”)



1)
பொலாநோய்க டீர்க்கும் பெரும்பாவ மெல்லாம்
நிலாவாறு தீய்க்கும் பிறப்பின்றி ஆக்கும்
நிலாத்துண்டு சூடும் சிவன்பேரு ரைக்கும்
நலார்நாளு மின்பே அடைந்துய்ய லாமே.



( "தனானா தனானா தனானா தனானா" என்ற சந்தம் எளிதில் புலப்படப் பாடலை இப்படி நோக்கலாம்:
பொலாநோய் கடீர்க்கும் பெரும்பா வமெல்லாம்
நிலாவா றுதீய்க்கும் பிறப்பின் றிஆக்கும்
நிலாத்துண் டுசூடும் சிவன்பே ருரைக்கும்
நலார்நா ளுமின்பே அடைந்துய் யலாமே.)


பதம் பிரித்து:
பொலா நோய்கள் தீர்க்கும், பெரும் பாவம் எல்லாம்
நிலாவாறு தீய்க்கும், பிறப்(பு) இன்றி ஆக்கும்,
நிலாத் துண்டு சூடும் சிவன் பேர் உரைக்கும்
நலார் நாளும் இன்பே அடைந்(து) உய்யல் ஆமே.


பொலா, நிலாவாறு, நலார் - பொல்லா, நில்லாவாறு, நல்லார் - இவை இடைக்குறையாக வந்தன;



2)
ஒளிர்கின்ற திங்கள் ஒலிக்கின்ற கங்கை
தெளிக்கின்ற நீர்மா மலர்க்கொன்றை எல்லாம்
மிளிர்கின்ற சென்னிப் பரன்தன்னை வாழ்த்திக்
களிக்கின்ற அன்பர் கழல்பேணு நெஞ்சே.



பதம் பிரித்து:
ஒளிர்கின்ற திங்கள், ஒலிக்கின்ற கங்கை
தெளிக்கின்ற நீர், மா மலர்க் கொன்றை, எல்லாம்
மிளிர்கின்ற சென்னிப் பரன்தன்னை வாழ்த்திக்
களிக்கின்ற அன்பர் கழல் பேணு நெஞ்சே.


மா மலர்க் கொன்றை - அழகிய கொன்றை மலர்;
சென்னி - தலை;
(திங்கள் ஒலிக்கின்ற - இதைச் சந்தத்திற்காக "திங்கள்ளொலிக்கின்ற" என்று ஒற்று விரிந்ததாகக் கொள்ளலாம்)



3)
சுரும்பார் குழல்சேர் மடந்தைக் கிடத்தை
விரும்பிக் கொடுத்தான் திருக்கோ யிலிற்போய்
இருந்தும் கிடந்தும் வணங்கித் துதித்தால்
அருந்தேன் எனத்தான் இனிப்பான் நமக்கே.



பதம் பிரித்து:
சுரும்(பு) ஆர் குழல் சேர் மடந்தைக்(கு) இடத்தை
விரும்பிக் கொடுத்தான் திருக்கோயிலில் போய்,
இருந்தும் கிடந்தும் வணங்கித் துதித்தால்
அரும் தேன் எனத்தான் இனிப்பான் நமக்கே.


சுரும்பு ஆர் - வண்டு பொருந்திய; (ஆர்தல் - பொருந்துதல்);
மடந்தை - பெண்; பார்வதி;
இருந்தும் கிடந்தும் - அமர்ந்தும் நிலத்தில் கிடந்தும்; (சுந்தரர் தேவாரம் - 7.95.10 "செருந்தி .... இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழா தேத்துவோம் ...");
தான் - படர்க்கை ஒருமைப்பெயர். (he, she or it); தேற்றச்சொல் (a word used as intensive);
எனத்தான் - என்றே / என்று அவன்;



4) --- (2008-08-08 - ஆடிச் சுவாதி - சுந்தரர் குருபூஜை நாள் அன்று எழுதிய பாடல் இது) --
மணத்தைத் தடுத்தாய் மனத்தைக் கொடுத்தாய்
கணக்கில் தமிழ்ப்பாத் தரச்சுந் தரர்க்கு;
மணக்கின் றதேவா ரமோதிப் பணிந்தேன்
குணக்குன் றமேநின் திருத்தாள் புகழ்ந்தே.



பதம் பிரித்து:
மணத்தைத் தடுத்தாய், மனத்தைக் கொடுத்தாய்
கணக்கில் தமிழ்ப் பாத் தரச் சுந்தரர்க்கு;
மணக்கின்ற தேவாரம் ஓதிப் பணிந்தேன்,
குணக்குன்றமே நின் திருத்தாள் புகழ்ந்தே.


மணத்தைத் தடுத்தாய் - ம்பி ஆரூரரின் திருமணத்தைத் தடுத்தவனே;
கணக்கு இல் - அளவற்ற;
(சுந்தரர் தேவாரம் - 7.70.6 - "குறைவிலா நிறைவே குணக்குன்றே);



5)
பகைத்தார் புரங்கள் கனல்பற் றிவேவ
நகைத்தார்; நமன்மேல் சினங்கொண் டுதைத்தார்;
மிகத்தான் கொடுப்பார் வரம்தா மரைத்தாள்
அகத்தே இருத்தித் தினம்போற் றுவார்க்கே.



பதம் பிரித்து:
பகைத்தார் புரங்கள் கனல் பற்றி வேவ
நகைத்தார்; நமன்மேல் சினம் கொண்(டு) உதைத்தார்;
மிகத் தான் கொடுப்பார் வரம், தாமரைத் தாள்
அகத்தே இருத்தித் தினம் போற்றுவார்க்கே.


பகைத்தார் புரங்கள் - முப்புரங்கள்;
கனல் பற்றி வேவ - தீப் பிடித்துச் சாம்பல் ஆக;
நமன் - எமன்;
அகத்தே - மனத்தில்;



6)
சலம்பூ இவற்றால் தனக்கொப் பிலாதான்
சிலம்பார் திருத்தா ளினைப்போற் றுவார்க்கு
நலங்கள் கொடுப்பான் நகர்மூன் றெரித்தான்,
விலங்காய் இருக்கும் வினைக்கட் டழித்தே.



பதம் பிரித்து:
சலம் பூ இவற்றால் தனக்(கு) ஒப்(பு) இலாதான்
சிலம்(பு) ஆர் திருத்தாளினைப் போற்றுவார்க்கு,
நலங்கள் கொடுப்பான் நகர் மூன்(று) எரித்தான்,
விலங்காய் இருக்கும் வினைக்கட்(டு) அழித்தே.


சலம் - ஜலம் - நீர்;
ஆர்தல் - அணிதல்;
ஆர்த்தல் - ஒலித்தல்;
சிலம்பு ஆர் - சிலம்பு அணிந்த; / சிலம்பு ஒலிக்கிற;
நகர் மூன்று எரித்தான் - முப்புரங்களை எரித்த சிவன்;
விலங்கு - தளை (shackles);
வினைக்கட்டு - கர்மபந்தம்;


(அப்பர் தேவாரம் - 4.1.6 -
"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
.. தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்")



7)
நடிக்கின்ற நாதன் கடல்கக்கு நஞ்சைக்
குடிக்கின்ற கண்டன் கொடுங்கால னம்மைப்
பிடிக்கின்ற போதில் பெருங்காவ லாவான்
அடிக்கன்பு செய்தால் பவம்தீரு மன்றே.



பதம் பிரித்து:
நடிக்கின்ற நாதன், கடல் கக்கு நஞ்சைக்
குடிக்கின்ற கண்டன், கொடும் காலன் நம்மைப்
பிடிக்கின்ற போதில் பெரும் காவல் ஆவான்
அடிக்(கு) அன்பு செய்தால் பவம் தீரும் அன்றே.


நடித்தல் - கூத்தாடுதல்; நாட்டியம் ஆடுதல்;
கக்கு நஞ்சு - வினைத்தொகை - கக்கிய விடம்;
பவம் - பிறவி;



8)
சினங்கொண் டுவெற்பைப் பெயர்க்கும் செருக்கன்
தனைத்தன் விரல்கொண் டடர்நீ லகண்டன்
தனக்கோர் நிகர்தான் இலன்தன் மலர்த்தாள்
நினைப்போர் மனத்தில் வசிப்பான் மகிழ்ந்தே.



பதம் பிரித்து:
சினம் கொண்டு வெற்பைப் பெயர்க்கும் செருக்கன்தனைத்
தன் விரல் கொண்(டு) அடர் நீலகண்டன்,
தனக்(கு) ஓர் நிகர்தான் இலன், தன் மலர்த் தாள்
நினைப்போர் மனத்தில் வசிப்பான் மகிழ்ந்தே.


வெற்பு - மலை - இங்கே, கயிலை மலை;
செருக்கன் - கர்வம் உடையவன் - இங்கே, இராவணன்;
அடர் நீலகண்டன் - வினைத்தொகை - அடர்த்த (நசுக்கிய) நீலகண்டன் ;
நிகர்தான் இலன் - ஒப்பே இல்லாதவன்;



9)
அரிக்கும் மலர்மேல் அயற்கும் வளர்தீ
உருக்கொண் டுயர்ந்தே நெருங்கற் கொணாத
ஒருத்தன், திருப்பேர் விருப்போ டுரைப்போர்
கருத்தில் மகிழ்வோ டிருக்கும் பிரானே.



பதம் பிரித்து:
அரிக்கும் மலர்மேல் அயற்கும், வளர் தீ
உருக் கொண்(டு) உயர்ந்தே, நெருங்கற்(கு) ஒணாத
ஒருத்தன், திருப்பேர் விருப்போ(டு) உரைப்போர்
கருத்தில் மகிழ்வோ(டு) இருக்கும் பிரானே.


அரிக்கும் - விஷ்ணுவிற்கும்;
அயற்கும் - அயனுக்கும் - பிரமனுக்கும்;
வளர்தல் - பெரிதாதல்; நீளுதல்;
வளர் தீ - வினைத்தொகை - நீள்கிற சோதி;
ஒணாத - ஒண்ணாத – இயலாத;
ஒருத்தன் - ஒப்பில்லாதவன்;
கருத்து - மனம்; எண்ணம்;
(அரிக்கும்மலர்மேல் - ங்கே சந்தத்திற்காக "ம்" ஒற்று விரிந்ததாகக் கொள்ளலாம்)



10)
மருட்டிப் புறன்கள் புகல்வோர் மனத்தில்
இருட்டே நிறைந்தீ சனைத்தே றகில்லார்
உருக்கொண் டுமிங்கே விருப்போ டுபூசித்(து)
இருக்கின் றஅன்பர்க்(கு) அருள்வான் மிகுத்தே.



பதம் பிரித்து:
மருட்டிப் புறன்கள் புகல்வோர், மனத்தில்
இருட்டே நிறைந்(து), ஈசனைத் தேற கில்லார்;
உருக் கொண்டும், இங்கே விருப்போடு பூசித்(து)
இருக்கின்ற அன்பர்க்(கு) அருள்வான் மிகுத்தே.


மருட்டுதல் - ஏமாற்றுதல் (to cheat); மயக்குதல் (to entice); பயமுறுத்துதல் (to threaten, menace);
புறன் - பழிச்சொல்; புறங்கூற்று (maliciously false statements; slander);
இருட்டு - இருள்; அறியாமை;
தேற கில்லார் - தெளிய மாட்டார்; உணர மாட்டார்;
உருக்கொள்ளுதல் - வடிவு எடுத்தல்;
மிகுத்து - மிகவும்;
("உருக்கொண்டும்" என்றதால், அருவ நிலையும் சுட்டப்பெற்றது);



11)
விரைந்தோடு நீரும் சிரம்சேரு மங்கே
இரைந்தாடு பாம்பும் பிறையோடு காணும்
அரன்தாள் பணிந்தே மகிழ்கின் றபத்தர்
இரக்கும் வரம்தந் தருள்வான் உவந்தே.



பதம் பிரித்து:
விரைந்(து) ஓடு நீரும் சிரம் சேரும் அங்கே
இரைந்(து) ஆடு பாம்பும் பிறையோடு காணும்
அரன் தாள் பணிந்தே மகிழ்கின்ற பத்தர்
இரக்கும் வரம் தந்(து) அருள்வான் உவந்தே.


ஓடு நீர், ஆடு பாம்பு - வினைத்தொகை;
இரைதல் - ஒலித்தல்; சீறுதல்;
இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்;
உவத்தல் - மகிழ்தல்; விரும்புதல்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பாடல்களின் யாப்புக் குறிப்பு:
புஜங்கம் என்பது சமஸ்கிருத பாடல் அமைப்புகளுள் ஒன்று.
புஜங்க அமைப்பின் இலக்கணம்:
4 அடிகள்; ஓர் அடிக்கு 4 "தனானா" - அதாவது - "லகு-குரு-குரு" இருக்கும்.
லகு = குறில்.
குரு = நெடில்/நெடில்+ஒற்று/குறில்+ஒற்று. அடி ஈற்றுக் குறிலும் 'குரு' எனக் கருதப்படும்



ஆதி சங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் - பலரும் அறிந்த ஒரு துதி. அதிலிருந்து ஒரு பாடல்:



मयूराधिरूढं महावाक्यगूढं
मनोहारिदेहं महच्चित्तगेहम् |
महीदेवदेवं महावेदभावं
महादेवबालं भजे लोकपालम् || 3 ||


மயூராதி ரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரி தேஹம் மஹத்சித்த கேஹம்
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜேலோக பாலம். (3).



இதைக் கீழ்க்கண்டவாறு சீர் பிரித்தால் "லகு-குரு-குரு" இலக்கண அமைப்புத் தெளிவாகும்:
மயூரா திரூடம் மஹாவாக் யகூடம்
மனோஹா ரிதேஹம் மஹத்சித் தகேஹம்
மஹீதே வதேவம் மஹாவே தபாவம்



மஹாதே வபாலம் பஜேலோ கபாலம்.).

No comments:

Post a Comment