Saturday, February 27, 2016

02.89 – எதிர்கொள்பாடி ("மேலைத் திருமணஞ்சேரி")

02.89எதிர்கொள்பாடி ("மேலைத் திருமணஞ்சேரி")



2013-06-29
எதிர்கொள்பாடி (இக்காலத்தில் "மேலைத் திருமணஞ்சேரி")
---------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா கூவிளம்' - அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 2.100.1 - "படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம் விட்ட போதின்கண்")



1)
தாரத் தோடு மக்களும் தவிக்கத் தழல்பு காமுனம்
வாரத் தோடு வார்கழல் வணங்கச் சேரென் நெஞ்சமே
தேரச் சிறத்தாள் இட்டவன் திரியும் புரங்கள் சுட்டவன்
ஈரச் சடையன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



தாரத்தோடு மக்களும் தவிக்கத் தழல் புகாமுனம் - மனைவியும் மக்களும் தவிக்கும்படி, (உன் உயிர் பிரிந்து இவ்வுடல்) தீயில் புகுவதன் முன்னமே;
வாரம் - அன்பு;
வார்கழல் - வினைத்தொகை - நீண்ட கழல்கள் - திருவடி;
தேர் அச்சு இறத் தாள் இட்டவன் - தேவர்கள் செய்த தேரின் அச்சு முரியுமாறு ஏறியவன்;
ஈரச் சடையன் மேவும் ஊர் - கங்காதரன் உறைகின்ற தலம்;
எழில்கொள் எதிர்கொள்பாடியே - அழகிய எதிர்கொள்பாடி;



2)
கயலொண் கண்ணி மாரழக் கால னூர்செ லாமுனம்
புயல்மி டற்றன் பொன்னடி போற்றச் சேரென் நெஞ்சமே
வெயிலில் நிழல்போல் காப்பவன் வெள்ளச் சடையன் மேவலர்
எயில்கள் எரித்த ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



கயல் ஒண் கண்ணிமார் அழக் - கயல்மீன் போன்ற கண் உடைய பெண்கள் - மனைவியும் மற்ற சுற்றத்தினரும் அழும்படி;
காலனூர் செலாமுனம் - எமபுரத்திற்குச் செல்வதன்முன்னம்;
புயல் மிடற்றன் - மேகம் போன்ற கண்டம் உடையவன்;
(திருக்கோவையார் - 23 வேந்தற்குற்றுழிப்பிரிவு - # 10 - "தேன்றிக் கிலங்கு .... திண்டோட் கொண்டற் கண்டன்..." - திண்ணிய தோள்களையுங் கொண்டல்போலுங் கண்டத்தையும் உடையான்; கொண்டல் = மேகம்);
மேவலர் - பகைவர்;
எயில் - கோட்டை;



3)
ஊரார் தொடரப் பாடைமேல் ஊர்வ லம்செ லாமுனம்
பேரா அன்பால் வார்கழல் பேணச் சேரென் நெஞ்சமே
வாரார் முலையாள் பங்கினன் வானோர் தம்மைக் காத்தருள்
ஏரார் கண்டன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



ஊரார் தொடரப் பாடைமேல் ஊர்வலம் செலாமுனம் - ஊரில் உள்ளோர் எல்லாம் தொடர்ந்து வர, இவ்வுடல் பாடைமேல் ஊர்வலம் போவதன் முன்னமே;
பேரா அன்பால் - மாறாத பக்தியோடு;
வார்கழல் பேணச் சேரென் நெஞ்சமே - (சிவபெருமானின்) நீண்ட திருவடிகளை வணங்குவதற்கு அடை என் மனமே; (பேணுதல் - போற்றுதல்);
வார் ஆர் முலையாள் - வார் அணிந்த முலைமங்கை - உமையம்மை;
ஏர் ஆர் கண்டன் - அழகிய கண்டத்தன் - நீலகண்டன்;



4)
கூற வொண்ணா வாதைசெய் கூற்றத் தாரி ழாமுனம்
நீற ணிந்து நீள்கழல் நினைந்து சேரென் நெஞ்சமே
ஆற ணிந்த செஞ்சடை அண்ணல் ஆலம் உண்டவன்
ஏற தேறும் ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



கூற ஒண்ணா வாதைசெய் கூற்றத்தார் இழாமுனம் - சொல்ல இயலாத துன்பத்தைத் தரும் எமதூதர்கள் வந்து இழுத்துச்செல்வதன் முன்னமே; (வாதை - துன்பம்);



5)
திரளாய்ச் சுற்றம் ஆர்த்தழத் தீயி னுட்பு காமுனம்
பொருளா வதுபொற் றாளெனப் போற்றிச் சேரென் நெஞ்சமே
அருளார் கண்ணன் ஆதியாய் அந்த மான சங்கரன்
இருளார் கண்டன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



திரள் ஆய்ச் சுற்றம் ஆர்த்து அழத் தீயினுள் புகாமுனம் - கூட்டம் ஆகி உறவினர்கள் ஒலித்து அழ, இவ்வுடல் தீயில் புகுவதன் முன்னமே; (ஆர்த்து அழ - கூவி அழ);
பொருள் ஆவது பொற்றாள் எனப் - மெய்ப்பொருள் ஆவது பொன்னடி என்று;
அருள் ஆர் கண்ணன் - அங்கணன்;
ஆதி ஆய் அந்தம் ஆன சங்கரன் - முதல் ஆகி முடிவும் ஆன சங்கரன்; (சங்கரன் - நன்மை செய்பவன);
இருள் ஆர் கண்டன் - நீலகண்டன்;



6)
நேற்றி ருந்தார் இன்றவர் நீறா னாரெ னாமுனம்
நாற்ற மலர்க ளால்தொழ நாடு வாயென் நெஞ்சமே
தோற்றம் அந்தம் அற்றவன் துண்டத் திங்கள் சென்னிமேல்
ஏற்று கந்த ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



நேற்று இருந்தார் இன்று அவர் நீறு ஆனார் எனாமுனம் - நேற்று உயிரோடு இருந்தார், இன்று அவர் சாம்பல் ஆகிவிட்டார் என்று பிறர் சொல்வதன் முன்னமே; (நீறு - சாம்பல்);
நாற்றம் - வாசனை; (நாற்ற மலர்கள் - மணம் பொருந்திய மலர்கள்);
தோற்றம் அந்தம் - முதலும் முடிவும்;
துண்டத் திங்கள் - பிறைச்சந்திரன்;
ஏல்தல்/ஏற்றல் - சுமத்தல்; தாங்குதல்;
உகத்தல் - மகிழ்தல்; விரும்புதல்;



7)
சுமையாய் நால்வர் தோள்மிசைத் தூக்கும் நாளெய் தாமுனம்
கமையார் எந்தை வார்கழல் கருதிச் சேரென் நெஞ்சமே
உமையாள் கூறன் உண்பலி ஓர்சி ரத்தில் ஏற்பவன்
இமையா முக்கண் ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



சுமையாய் நால்வர் தோள்மிசைத் தூக்கும் நாள் எய்தாமுனம் - இவ்வுடலை நான்குபேர் தோளில் சுமக்கும் தினம் வந்தடைவதன்முன்;
கமை ஆர் எந்தை வார்கழல் - நம் குற்றங்களை எல்லாம் பொறுத்து அருளும் தந்தையாகிய சிவபெருமானுடைய கழல் அணிந்த திருவடியை; (கமை - க்ஷமை - பொறுமை; அருள்; (क्षमा - Patience, forbearance, forgiveness);
கருதுதல் - எண்ணுதல்; விரும்புதல்;
உமையாள் கூறன் - உமைபங்கன்;
உண் பலி ஓர் சிரத்தில் ஏற்பவன் - பிரமகபாலத்தில் ஐயம் தேர்பவன்;
இமையா முக்கண் ஈசன் - இமைத்தல் இல்லாத மூன்று கண்களை உடைய இறைவன்;



8)
சுருக்கை வீசும் தூதுவர் துன்னி இடர்செய் யாமுனம்
இருக்கு நாவர் தாளிணை ஏத்திச் சேரென் நெஞ்சமே
தருக்கி மலைய சைத்தவன் தலைகள் பத்த டர்த்தவர்
எருக்கும் சூடும் ஈசரூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



சுருக்கு - கண்ணி (Noose, snare, trap) - காலபாசம் (Yama's noose, as an instrument of death);
துன்னுதல் - நெருங்குதல்; அடைதல்;
இருக்கு நாவர் - வேதநாவர் - வேதங்களை ஓதிய நாவை உடையவர் - சிவபெருமான்;
தாளிணை - இரு திருவடிகள்;
தருக்குதல் - அகந்தைகொள்ளுதல் (To be proud, vain, arrogant);
தலைகள் பத்து அடர்த்தவர் - பத்துத் தலைகளையும் நசுக்கியவர்; (அடர்த்தல் - நசுக்குதல்);
எருக்கும் சூடும் ஈசர் - (தலையில் சந்திரன், கங்கை, பாம்பு, கொன்றை,,, இவற்றோடு) எருக்கம்பூவும் அணியும் இறைவர்;
(சம்பந்தர் தேவாரம் - 2.85.9 "பலபல வேடமாகும் பரன்.... சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்.....");



9)
அண்டித் தூதர் வந்ததால் ஆவி போய்வி ழாமுனம்
தண்ட மிழ்ப்பா மாலைகள் சாத்திச் சேரென் நெஞ்சமே
கொண்டல் வண்ண னோடயன் கோவென் றேத்த ஓங்கினான்
இண்டை வேணி ஈசனூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



அண்டித் தூதர் வந்ததால் - எமதூதர்கள் நெருங்கி வந்து அடைந்ததால்;
ஆவி போய் விழாமுனம் - உயிர் நீங்கி இவ்வுடல் விழுவதன் முன்னமே;
தண் தமிழ்ப் பாமாலைகள் - தேவாரம் திருவாசகம் முதலியன;
சாத்துதல் - அணிதல் (To put on, adorn);
கொண்டல் வண்ணன் - மேக நிறத்தினன் - திருமால்;
அயன் - பிரமன்;
கோ - தலைவன்;
ஓங்குதல் - உயர்தல்;
இண்டை வேணி ஈசன் ஊர் - சடையில் இண்டையை அணியும் ஈசன் உறையும் தலமான;
(இண்டை - தலையில் அணியும் மாலைவகை; வேணி - சடை);



10)
உளறல் தன்னைத் தத்துவம் உய்யும் நெறியென் றோதுவார்
அளவில் பொய்கள் சொல்லுவார் அவர்சொல் நீங்கி வம்மினீர்
வளைவில் கொண்டு முப்புரம் மாயக் கணையை எய்தவன்
இளவெள் ளேற தேறியூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



உளறல் தன்னைத் தத்துவம், உய்யும் நெறின்று ஓதுவார் - பொருளற்ற வார்த்தைகளையெல்லாம் பெரிய தத்துவம் என்றும், உய்கின்ற மார்க்கம் என்றும் பேசுவார்கள்;
அளவு இல் பொய்கள் சொல்லுவார் - பல பொய்களைச் சொல்வார்கள்;
அவர் சொல் நீங்கி வம்மினீர் - அவர்கள் பேச்சை நீங்கி வாருங்கள்;
வளை வில் கொண்டு முப்புரம் மாயக் கணையை எய்தவன் - வளைத்த வில்லால் முப்புரங்களும் அழியக் கணை தொடுத்தவன்; (மாய்தல் - அழிதல்);
இள வெள் றுஅது ஏறி ஊர் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம்;



11)
வாழ வேண்டில் நெஞ்சமே வணங்கி ஒல்லை சேர்திநீ
போழம் மதிபு னைந்தவன் பூவைத் தூவி வானவர்
வேழம் வந்து போற்றிய விகிர்தன் பவள மேனியன்
ஏழை கூறன் மேவுமூர் எழில்கொள் எதிர்கொள் பாடியே.



வாழ வேண்டில் நெஞ்சமே வணங்கி ஒல்லை சேர்தி நீ - மனமே, நீ நற்கதி பெற விரும்பினால், ஈசனை வணங்கி விரைந்து அடைவாயாக;
(ஒல்லை - சீக்கிரம்; விரைவாக;
சேர்தி - சேர்; (இகர ஈற்று ஏவல் வினைமுற்று);
போழ் அம் மதி புனைந்தவன் - பிளவுபட்ட அழகிய பிறைச்சந்திரனை அணிந்தவன்; (போழ்தல் - பிளவுபடுதல்/பிளத்தல்; போழ் - துண்டம்);
பூவைத் தூவி வானவர் வேழம் வந்து போற்றிய - மலர் தூவி ஐராவதம் வழிபட்ட; ('வானவரும் வேழமும்' என்று உம்மைத்தொகையாகவும் கொள்ளலாம்);
விகிர்தன் - மாறுபட்ட செயலினன்; கடவுள்;
பவள மேனியன் - பவளம் போல் செம்மேனியன்;
ஏழை கூறன் மேவும் ஊர் - உமைபங்கனான சிவபெருமான் உறையும் தலமான; (ஏழை - பெண் - உமை);


* ஐராவதம் வணங்கியதால் இத்தலத்து ஈசன் திருநாமம் 'ஐராவதேசுவரர்'. தலபுராணத்திற் காண்க.


இலக்கணக் குறிப்பு :
இகர ஈற்று ஏவல் வினைமுற்று.
தகரம் ஊர்ந்து வருதல் பெரும்பான்மை. உதாரணம்: கொணர்தி, நாடுதி, எண்ணுதி.
சிறுபான்மை தகரம் ஊராதும் வரும். உதாரணம்: ஏத்தி, நாடி;
(11.22.2 - சிவபெருமான் திருவந்தாதி: "மாலை ஒருபால் மகிழ்ந்தானை ... நஞ் சுண்டற் கொளியானை ஏத்தி உளம்" - 'ஏத்தி' என்பது தகர ஒற்றுப் பெறாது வந்த இகர ஈற்று ஏவல் வினைமுற்று. 'துதிப்பாயாக' என்பது பொருள்.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு :
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் - 'மா மா கூவிளம்' - என்ற அரையடி வாய்பாடு;
(சம்பந்தர் பதிகம் 2.100 அமைப்பை ஓரளவு ஒத்தது)
2) சம்பந்தர் தேவாரம் - 2.100.1 - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்
படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம் விட்ட போதின்கண்
இடைகொள் வாரெ மக்கிலை யெழுக போது நெஞ்சமே
குடைகொள் வேந்தன் மூதாதை குழகன் கோவ லூர்தனுள்
விடைய தேறுங் கொடியினான் வீரட் டானஞ் சேர்துமே.
3) எதிர்கொள்பாடி - ஐராவதேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=505
எதிர்கொள்பாடி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=45

----------- --------------

02.88 – பொது - (நான்காரைச் சக்கரபந்தம்)

 2.88 – பொது - (நான்காரைச் சக்கரபந்தம்)

(12 பாடல்கள்)

முற்குறிப்பு: இப்பதிகம் மிறைக்கவி (சித்ரகவி). இப்பதிகப் பாடல்களின் அமைப்பை வடமொழியில் பத்மபந்தம் (padmabandham) என்கின்றனர். தமிழில் "நான்காரைச் சக்கரபந்தம்" என்றும் அழைக்கின்றனர். (சக்கர பந்தம் - ஒரு சக்கரம் வரைந்து, அதனுள் நடுவிடம் (center), ஆரக்கால்கள் (radii), வட்டை (rim / circumference) ஆகிய இடங்களில் எல்லாம், பாட்டின் எழுத்துகளைப் பந்திப்பது (அடக்குவது) ஆகும்.)


இப்பதிகப் பாடல்களில் ஒவ்வோர் அடியும் - வட்டத்தின் நடுவெழுத்திலிருந்து தொடங்கி ஓர் ஆரத்தின் வழியே கால்சுற்று வந்து மீண்டும் வட்டத்தின் மையத்திற்கு வந்துசேரும் அமைப்பு.


1)

திரிபுர தகனம் - நான்காரைச் சக்கரபந்தம்

மேவாரழியவருமே

மேருவரையேந்துமே

மேதுந்துபியாலுமே

மேலுயாவோதரவாமே.


மேவார் அழிய வருமே - பகைவர்கள் அழியுமாறு வருவான்;

மேரு வரை ஏந்துமே - மேரு மலையை (வில்லாக) ஏந்துவான்;

மே துந்துபி ஆலுமே - சிறந்த துந்துபிகள் ஒலிக்கும்;

மேல் உயா ஓது 'அர' ஆமே - வான் உய்ந்து ஓதும் 'ஹர' (என்ற ஒலி) எழும்.

மே - சிறந்த; துந்துபி - பேரிகை; வாத்தியம்; ஆலுதல் - ஒலித்தல்; மேல் - வான் - தேவர்கள்; உயா - 'உய்யா' என்பது இடைக்குறை விகாரம் பெற்றது. உய்யா - உய்ந்து; செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம்.


2)

சிவபெருமான் - நான்காரைச் சக்கரபந்தம்

சேரரகத்தரசே

சேரதமாம்பரிசே

சேரிபலியோசிரசே

சேரசினமாரரசே.


சேரர் அகத்து அரசே - சேரமான் பெருமாள் நாயனார் மனத்தில் உறையும் மன்னனே;

சே ரதம் ஆம் பரிசே - இடபமே தேர் ஆகும் (வாகனம் ஆகும்) தன்மை உடையவனே;

சேரி பலியோ சிரசே - ஊரார் இடும் பிச்சையும் (பிரமன்) மண்டையோட்டிலே;

சேர் அசினம் மார் அரசே - தோல் (அஜினம்) சேரும் மார்பை உடைய தலைவனே;

சேரர் - சேரநாட்டு மன்னன்; அரசு - அரசன்; தலைவன்; சே - இடபம்; சேரி - ஊர்; பலி - பிச்சை; அசினம் - அஜினம் - விலங்குகளின் தோல்; இலக்கணக்குறிப்புகள் :

1) ரதம் - இரதம் - யாப்பு நோக்கி முதற்குறையாக வந்தது.

2) சேரிபலி - சேரிப்பலி - ஊர்ப்பிச்சை - ஊர் இடும் பிச்சை; யாப்பு நோக்கிப் ('ப்') பகர ஒற்றுக் கெட்டது;


3)

சிவபெருமான் சேர்விடம் - நான்காரைச் சக்கரபந்தம்

(சேர்விடம் - சேர்வு இடம் / சேர் விடம்)

தேவர்நாடுமுனதே

தேனமுதாநஞ்சதே

தேசஞ்சக்கரதே

தேரகஞ்சேர்வதே.


தேவர் நாடும் உனதே - வானநாடும் (தேவலோகமும்) உன்னுடையதே; ("உடையான்", எல்லார்க்கும் தலைவன்);

தேன் அமுது ஆம் நஞ்சு அதே - (உனக்குத்) தேனும் அமுதும் போல் ஆகும் விடமே;

தேசு அஞ்சு அக்கர தே - ஒளி பொருந்திய, திருவைந்தெழுத்தாக விளங்கும் தெய்வமே;

தேர் அகம் சேர்வதே - நீ பொருந்தியிருப்பது (உன்னை) நாடும் மனத்தையே;

தேசு - ஒளி; அஞ்சு அக்கரம் - பஞ்சாக்ஷரம் - திருவைந்தெழுத்து; தே - தெய்வம்; தேர்தல் - ஆராய்தல்; தேடுதல்; சிந்தித்தல்; அகம் - மனம்; சேர்தல் - பொருந்துதல்; இலக்கணக்குறிப்புகள்:

1) தே - பொதுவாகத் 'தேவே' என்று விளியாக வரினும், இங்கு அண்மைவிளியாகத் 'தே' என்றே வந்தது.

2) தேனமுது - உம்மைத்தொகை - தேனும் அமுதும்;

3) அமுதாநஞ்சு - "அமுது ஆம் நஞ்சு" என்பதில் புணர்ச்சிவிதிப்படி மகர ஒற்றுக் கெடும்.


4)

இனியது வினவுதிரேல் - நான்காரைச் சக்கரபந்தம்

தேவகாவலனினிதே

தேனினிதேவினாவிதே

தேவினாதினிதேர்தே

தேர்தேசங்காவதே.


தேவகாவலன் இனிதே தேன் இனிதே? - தேவர்களைக் காக்கும் ஈசன் இனிமையா தேன் இனிமையா?

வினா இதே? - இதுவும் ஒரு வினாவோ?

தேவின் ஆது இனிது? - ஈசனினும் யாது இனியது?

ஏர் தே தேர் - நன்மையும் அழகும் பொருந்திய தெய்வத்தைச் சிந்திப்பாயாக;

தேசு அங்கு ஆவதே - அப்போது ஞானம் உண்டாகுமே;

- வினா ஏகாரம்; (இனிதே, இதே - என்ற இடங்களில்); - தேற்ற ஏகாரம்; (ஆவதே என்ற இடத்தில்); ஈற்றசை ஏகாரமாகவும் கொள்ளலாம்; தே - தெய்வம்; இன் - ஒப்புப் பொருளில் வரும் ஐந்தாம் வேற்றுமை உருபு; ஆது - யாது என்பதன் திரிபு; ஏர் - நன்மை; அழகு; தேர்தல் - ஆராய்தல்; தேடுதல்; சிந்தித்தல்; தேசு - ஒளி; ஞானம்;

5)

முப்புரம் எரித்தது - நான்காரைச் சக்கரபந்தம்

மேகமேகளமாருமே

மேருமாமலைவிலாமே

மேலாவிடவெரிவாமே

மேவாரிரிவாமேகமே.


மேகமே களம் ஆருமே - கழுத்து மேகத்தை ஒக்கும் (நீலகண்டன்);

மேரு மா மலை வில் ஆம் - பெரிய மேருமலை வில் ஆகும்;

ஏ மேலா விட எரிவு ஆமே - அம்பை மேலாகச் செலுத்தத் தீ எழும்;

மேவார் இரிவு ஆம் ஏகமே - பகைவர்க்கு மொத்தமாக அழிவு ஆகும்; அவன் ஒப்பற்ற ஒன்றே!

களம் - கழுத்து; கண்டம்; ஆர்தல் - ஒத்தல்; - அம்பு; மேலா - மேலாக - மேல் நோக்கி; எரிவு - எரித்தல்; தீ; மேவார் - பகைவர்; இரிவு - இரிதல் - அழிதல்; கெடுதல்; ஏகம் - ஒன்று; ஒப்பற்றது; மொத்தம்; மிகுதி;

6)

இனிது எது? - நான்காரைச் சக்கரபந்தம்

தேனினிதோதேவர்தே

தேர்வதுபலியதே

தேயலிலாய்காயாதே

தேயாகாவெனினினிதே.


தேன் இனிதோ? தேவர்தே - தேனோ இனியது? தேவர்க்கும் தேவன்

தேர்வது பலி அதே; - எடுப்பது பிச்சையே;

"தேயல் இலாய்; காயாதே; - (சிவபெருமானை) "அழியாதவனே; (என்னை) வருத்தாதே";

"தேயா; கா" எனின் இனிதே - "தியானிக்கப்படுபவனே! காவாய்!" என்றால் இனிமையே;

இனிது - இன்பம் தருவது; நன்மையானது; பலிதேர்தல் - பிச்சையெடுத்தல்; தேயல் - தேய்தல் - மெலிதல்; அழிதல்; சாதல்; காய்தல் - வருத்துதல்; கடிந்துகூறுதல்; விலக்குதல்; தேயன் - தியானிக்கப்படுபவன்;

7)

வினை மரிவே - நான்காரைச் சக்கரபந்தம்

வேரிமலிபூவணிவே

வேணிவனிதையுறைவே

வேறையுமிலையானைவே

வேனையாவினைமரிவே.


வேரி மலி பூ அணிவே; - தேன் மலிந்த பூ அணிவது;

வேணி வனிதை உறைவே; - சடையில் கங்கை மங்கை உறைவது;

வேறு ஐயும் இலையால்; நைவே ஏன்? - (அப்பெருமான் அல்லால்) வேறு தலைவனும் இல்லை; வருத்தம்தான் ஏன்? (அவனைத் தொழு);

நையா வினை மரிவே - (அப்படித் தொழுதால்) அழியா வினையும் அழியுமே.


வேரி - தேன்; அணிவு - அணிதல்; வேணி - சடை; வனிதை - பெண்; உறைவு - தங்குதல்; இருக்குமிடம்; - தலைவன்; ஆல் - அசைச்சொல்; நைவு - வருத்தம்; நைதல் - கெடுதல்; மரிவு - சாவு; (இறத்தல் - இறவு, அதுபோல் மரித்தல் - மரிவு);



8)

அரக்கனுக்குக் கனிவு - நான்காரைச் சக்கரபந்தம்

வாளவுணன்கனிவா

வானிகலறமருவா

வாருமறியாவருவா

வாருவமையாவுளவா.


வாள் அவுணன் கனிவு ஆவான் இகல் அற - கொடிய அரக்கனான இராவணன் வலிமை அற (நசுக்குண்டு) மனம் பண்படுவான்; ("கொடிய அரக்கனான இராவணன் வலிமை அற (அவனை நசுக்கிப் பின்) இரங்குவான்" என்றும் பொருள்கொள்ளலாம்);

மருவா ஆரும் அறியா அரு ஆவார் - அடையாதவர்கள் யாராலும் அறியப்படாத அருவும் ஆவார்;

உவமை யா உள? வா! - (அச்சிவபிரானுக்கு) உவமையாக எவை உள்ளன? (அவர்க்கு ஒப்பே இல்லை); (நெஞ்சே) வா! (அவரைத் தொழுவோம்). (Note: "உவமையா உளவா?" - "(அவர்க்கு எவையும்) உவமையாக உள்ளனவா?" என்றும் பொருள்கொள்ளலாம்).

வாள் அவுணன் - கொடிய அரக்கன் - இங்கே இராவணன்; கனிவு - இரக்கம்; இகல் - பகைமை; வலிமை; மருவுதல் - அடைதல்; தியானித்தல்; அரு - உருவம் அற்றது; யா - யாவை; - ஈற்றில் வரும் வினா இடைச்சொல்;

இலக்கணக் குறிப்பு: "அரக்கனுக்குக் கனிவு ஆவான்" என்று பொருள்கொண்டால், 'ஆவான்' முன் சொல்லிப் பின் 'அரு ஆவார்' என்றது ஒருமைபன்மை மயக்கம்.



9)

அடிமுடி தேடல் - நான்காரைச் சக்கரபந்தம்

வேதனோடுமானேடவே

வேடனேசோதிவடிவே

வேடிவணங்கிடவே

வேடகிவியனோதவே.


வேதனோடு மால் நேடவே - பிரமனும் திருமாலும் தேடுமாறு;

வேடனே, சோதி வடிவே - வேடத்தை உடையவனே, சோதி வடிவாகியவனே;

வேடி வணங்கிடவே - (அவர்கள் உன்னை) வேண்டி வணங்குமாறு;

வேள் தகி வியன் ஓதவே - மன்மதனை எரித்த பெருமையைப் போற்றுமாறு;

வேதன் - பிரமன்; மானேட - மால் நேட; நேடுதல் - தேடுதல்; வேடன் - வேடத்தன் - வேடத்தை உடையவன்; வேடி - வேண்டி - இடைக்குறையாக வந்தது; வேடகி - வேள் தகி - மன்மதனைத் தகித்த; வியன் - பெருமை; சிறப்பு; வியப்பு;

10)

தாள்தொழா வீணர் - நான்காரைச் சக்கரபந்தம்

தேவாமேனியோர்மாதே

தேமார்தாளையாராதே

தேராயாருமாவியதே

தேயவிழலேமேவாதே.


தேவா; மேனி ஓர் மாதே - தேவனே; மாதொரு பங்கனே;

தேம் ஆர் தாளை ஆராதே - (உன்) இனிமையும் வாசனையும் பொருந்திய திருவடியைப் பொருந்தாமல்,

தேரா யாரும் ஆவி அதே - (உன்னைச்) சிந்தியாத எவரும் (அடைவது) தம் ஆவியானது,

தேய விழல், ஏம் மேவாதே - வீணாகக் கழிந்து விழுவதே; (அவர்களை) இன்பம் அடையாது;

தேம் - இனிமை; வாசனை; ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்; உண்ணுதல்; தேர்தல் - சிந்தித்தல்; விழல் - விழுதல்; பயனின்மை; ஏம் - இன்பம்; மேவுதல் - அடைதல்; விரும்புதல்;

11)

ஆலை மறாத தேன் - நான்காரைச் சக்கரபந்தம்

யானைதேயவடுநாயா

யாநாடுமீசாவழியா

யாழிவரதாமலையா

யாலைமறாததேனையா.


யானை தேய அடு நாயா - (எதிர்த்து வந்த) யானை அழியுமாறு அதைக் கொன்ற கடவுளே;

யா[ம்] நாடும் ஈசா; அழியாய் - நாம் நாடுகின்ற ஈசனே; அழியாதவனே;

ஆழி வரதா; மலையாய் - (மாலுக்குச்) சக்கராயுதம் வரம் அருள்பவனே; கயிலை மலையானே; ("மயங்காதவனே" என்றும் பொருள்கொள்ளலாம்);

ஆலை மறாத தேன் ஐயா - தலைவனே; நீ ஆலகால விஷத்தை விரும்பி ஏற்ற தேன்!

தேய்தல் - சாதல்; அழிதல்; அடுதல் - கொல்லுதல்; அழித்தல்; நாயன் - கடவுள்; அரசன்; ஆழி - சக்கராயுதம்; வரதன் - வரம் கொடுப்பவன்; மலையாய் - கயிலையானே; மலைதல் இல்லாதவனே; மலைதல் - மயங்குதல்; ஆல் - ஆலகால விஷம்; மறாததேன் - மறாதது ஏன் / மறாத தேன்; மறாத - மறுத்தல் இன்றி ஏற்றுக்கொண்ட; இலக்கணக் குறிப்புகள்:

1) "யாம் + நாடும் = யாநாடும்" என்று புணரும்;

2) "மறுத்து" என்பதன் எதிர்ப்பதம் "மறாது";


12)

கழியருளே தருக - நான்காரைச் சக்கரபந்தம்

கருதண்ணாலழக

கழலவினைநலிக

கலிநடலையழிக

கழியருளேதருக.


கருது அண்ணால்; அழக - (அடியேன் / பக்தர்கள்) விரும்பும்/தியானிக்கும் அண்ணலே! அழகனே!

கழல வினை; நலிக கலி - (எம்) வினைகள் நீங்குக! கலி (துன்பம்/தரித்திரம்) நலிவுறுக!

நடலை அழிக - பொய்ம்மை/வஞ்சனை அழிக!

கழி அருளே தருக - (இவ்வாறு நிகழ நீ) பேரருள் புரிவாயாக!

கருதுதல் - விரும்புதல்; தியானித்தல்; அண்ணால் - அண்ணல் என்பதன் விளி - அண்ணலே; கழல்தல் - நீங்குதல்; கலி - துன்பம்; தரித்திரம்; நலிதல் - அழிதல்; நடலை - பொய்ம்மை; வஞ்சனை; கழி - மிகுந்த; இலக்கணக் குறிப்பு: "கழல" என்பதில் "" வியங்கோள் வினைமுற்று விகுதி.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------