Monday, April 16, 2018

04.28 – அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்)


04.28 – அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்)



2013-11-30
அரிசிற்கரைப் புத்தூர் (இக்கால வழக்கில் - 'அழகாபுத்தூர்')
---------------
(கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்....");
(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா ");



1)
பெருவற்கடம் அதிலும்பணி பிழையாதவர் நாளும்
ஒருபொன்பெற அருள்செய்தவன் உலராச்சடை உடையான்
கருவண்டினம் இசையார்த்தடை கவினார்பொழில் சூழ்ந்த
பொருவண்டிரை அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



* புகழ்த்துணை நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்திற் காண்க.
(சம்பந்தர் தேவாரம் - 2.63.7 - ".... அலந்த வடியா னற்றைக் கன்றோர் காசெய்திப் புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே." - வறுமையுற்ற புகழ்த் துணையார் என்னும் சிவமறையவர் அன்றைக்கன்று ஒரு காசினை அருளப் பெற்றுப் புலர்ந்த காலையிலும் மாலையிலும் போற்றி வழிபட்ட புத்தூராகும்.)


பெரு வற்கடம் அதிலும் பணி பிழையாதவர் நாளும் ஒரு பொன் பெற அருள்செய்தவன் - பெரிய பஞ்சகாலத்திலும் தொண்டிற் சிறந்து நின்ற புகழ்த்துணை நாயனார்க்குத் தினமும் ஒரு காசு அருளிப் புரந்தவன்; (வற்கடம் - பஞ்சம்);
உலராச் சடை உடையான் - சடையில் எப்பொழுதும் ஈரம் உடையவன்; (ஈரம் மிக்கவன் = தயை / இரக்கம் உள்ளவன். அப்பெருமான் சடையிலும் ஈரம்!);
கரு வண்டினம் இசை ஆர்த்து அடை கவின் ஆர் பொழில் சூழ்ந்த - கரிய வண்டுகள் இசைபாடி அடையும் அழகிய சோலை சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்);
பொரு வண் திரை அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - வளப்பமான அலை மோதுகின்ற அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன். (பொருதல் - மோதுதல்; தாக்குதல்); (வண்மை - வலிமை; வளப்பம்); (திரை - அலை);
(சுந்தார் தேவாரம் - 7.48.9 - "சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் எம்பொன் மாமணீ என்று" - "எமக்குப் புகலிடமானவன் ; எம் தந்தை ; எம் தலைவன் ; எம் தந்தைக்கும் தலைவன் ; எங்கள் பொன் ; எங்கள் மணி" என்று சொல்லி);



2)
சேதித்தவன் அயனார்சிரம் தினமுந்திரு நாமம்
ஓதித்தவம் செய்ம்மாணியின் உயிர்காத்தருள் செய்தான்
ஆதித்தவன் வடவாலதன் அடியில்மறை நான்கைப்
போதித்தவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



சேதித்தவன் அயனார் சிரம் - பிரமன் தலையில் ஒன்றை வெட்டியவன்; (சேதித்தல் - வெட்டுதல்); (அப்பர் தேவாரம் - 6.20.1 - "ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால் சேதித்த திருவடியை" - வாள் என்றது, நகத்தை. சேதித்த - அறுத்த);
தினமும் திருநாமம் ஓதித் தவம் செய்ம் மாணியின் உயிர் காத்தருள் செய்தான் - அஞ்செழுத்து ஓதித் தவம் செய்த மார்க்கண்டேயரது உயிரைக் காத்தவன்; (மாணி - இங்கே மார்க்கண்டேயர்);
ஆதித்தவன் - ஆதி + தவன் - ஆதியாக இருப்பவன்; தவவடிவினன்; (எதுகைநோக்கி 'த்' மிக்கு வந்தது);
வட ஆல் - கல்லால மரம்;



3)
ஆரேத்தினும் அருளும்சிவன் அணியாமிட றதனில்
காரேற்றவன் சடைமீதொரு கலையார்மதி கங்கை
நீரேற்றவன் நீற்றைப்புனை நிமலன்மழ வெள்ளைப்
போரேற்றினன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



ஆர் ஏத்தினும் அருளும் சிவன் - தொழுபவர் எத்தகையவரே ஆயினும் அவர்களுக்கு அருள்புரியும் சிவபெருமான்;
அணியா மிடறு அதனில் கார் ஏற்றவன் - கண்டத்தில் அணியாகக் கருமையை ஏற்றவன்;
சடைமீது ஒரு கலை ஆர் மதி, கங்கை நீர் ஏற்றவன் - சாபத்தால் தேய்ந்து தேய்ந்து ஒருகலை மட்டுமே இருந்த பிறைச்சந்திரனையும், கங்கை ஆற்றையும் சடைமேல் ஏற்றவன்;
நீற்றைப் புனை நிமலன் - திருநீறு பூசிய நிர்மலன்;
மழ வெள்ளைப் போர் ஏற்றினன் - இளமை உடைய, வெண்ணிறம் உடைய, போர் செய்ய வல்ல, இடபத்தை ஊர்தியாக உடையவன்;
அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன்.



4)
பனையுற்றகை வேழத்துரி போர்க்கும்பரன் பணிவார்
வினையற்றிட அருள்செய்பவன் வேதன்சிரம் ஏந்தி
மனையுற்றிடு பலிதேர்பவன் மடவாளொரு பங்கன்
புனலெற்றிடும் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



உறுதல் - ஒத்தல் (To resemble); அடைதல் ( To approach, gain access to, reach);






பனை உற்ற கை வேழத்து உரி போர்க்கும் பரன் - பனை போன்ற துதிக்கை உடைய யானையின் தோலைப் போர்வையாகக் கொண்ட பரமன்; (உறுதல் - ஒத்தல்);
பணிவார் வினை அற்றிட அருள்செய்பவன் - அடியவர்களை வினையை அழிப்பவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);
வேதன்சிரம் ஏந்தி மனை உற்று இடு பலி தேர்பவன் - பிரமன் மண்டையோட்டை ஏந்தி இல்லங்களை அடைந்து அவர்கள் இடும் பிச்சை ஏற்பவன்; (உறுதல் - அடைதல்);
புனல் எற்றிடும் - அலை மோதுகின்ற; (எற்றுதல் - மோதுதல்; அடித்தல்);



5)
அணையாரெயில் ஒருமூன்றையும் அரிகாலெரி சேர்ந்த
கணையாலொரு நொடியிற்சுடு கயிலைக்கிறை நாளும்
துணைநீயென மணமாமலர் தூவித்தொழு வார்க்குப்
புணையானவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



அணையார் எயில் ஒரு மூன்றையும் - பகைவர்களது முப்புரங்களையும்; (அணையார் - பகைவர்); (எயில் - கோட்டை);
அரி கால் எரி = திருமால், வாயு, அக்னி;
கயிலைக்கு இறை - கயிலாய நாதன்;
புணை - தெப்பம்; (பிறவிக்கடலைக் கடக்கத் தெப்பமாக உள்ளவன்);



6)
எழிலார்கழல் இணையில்மலர் இட்டுத்தொழு பத்தர்
சுழலாவணம் வினைதீர்த்துயர் சுகமேஅருள் கின்ற
தொழிலானவன் நறையுண்டளி சுரமேழ்முரல் கின்ற
பொழில்சூழ்கிற அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



எழில் ஆர் கழல்இணையில் மலர் இட்டுத் தொழு பத்தர் சுழலாவணம் - அழகிய இரு திருவடிகளில் பூக்களைஉத் தூவி வழிபடும் பக்தர்கள் வருந்தாதபடி; (சுழலுதல் - சஞ்சலப்படுதல்; சோர்தல்);
வினை தீர்த்து உயர் சுகமே அருள்கின்ற தொழில் ஆனவன் - வினைகளை அழித்து பேரின்பத்தையே அருளும் தொழிலை உடையவன்; (உயர் சுகம் - பேரின்பம்); (தொழில் - செயல்; வேலை); (சுகமே அருள்கின்ற தொழிலானவன் - சம்பு என்ற பெயரை உடையவன் என்பதைச் சுட்டியது. (சம்பு - Šiva, as bestowing happiness; [சுகத்தைத் தருபவன்] சிவன்) );
(சுந்தரர் தேவாரம் - 7.1.9 - "மழுவாள்வலன் ஏந்தீமறை யோதீமங்கை பங்கா தொழுவாரவர் துயராயின தீர்த்தல்லுன தொழிலே...");
நறை உண்டு அளி சுரம் ஏழ் முரல்கின்ற - தேனை உண்டு வண்டுகள் ஏழு சுரங்களை ரீங்காரம் செய்கின்ற;



7)
திரியும்புரம் நல்குந்துயர் தீரக்கணை ஒன்றால்
எரியும்படி எய்தான்மழ ஏற்றன்மத யானை
உரியும்புனை ஒருவன்பெயர் ஓதின்மிக நன்மை
புரியும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



மழ ஏற்றன் - இளைய விடையை ஊர்தியாக உடையவன்; (மழ - இளமை); (ஏறு - எருது);
மதயானை உரியும் புனை ஒருவன் - (திங்கள், அரவு, கங்கை, எனப் பலவற்றோடு) ஆண்யானையின் தோலையும் அணிகின்ற ஒப்பற்றவன்;
பெயர் ஓதின் மிக நன்மை புரியும் பரன் - அவன் திருநாமத்தை ஓதினால் மிகவும் நன்மை செய்யும் மேலானவன்;



8)
கறைமிக்கவன் முடிபத்திறக் கயிலைக்கிரி மீது
நறைமிக்கமென் பாதத்தொரு விரலிட்டவர் நதியைச்
சிறையிட்டவர் அன்பால்புகழ் செப்பிப்பணி வார்க்குப்
பொறைமிக்கவர் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



கறை மிக்கவன் முடி பத்து இறக் கயிலைக்கிரி மீது - கரிய நிறம் மிக்கவனும் குற்றம் மிக்கவனும் ஆன இராவணனுடைய பத்துத்தலைகளும் நெரியும்படி கயிலைமலையின்மேல்; (கறை - குற்றம்; கறுப்பு நிறம்); (இறுதல் - முறிதல்; நெரிதல்);
நறை மிக்க மென் பாதத்து ஒரு விரல் இட்டவர் - வாசனை மிகுந்த திருப்பாதத்தின் ஒரு விரலை ஊன்றியவர்; (நறை - வாசனை);
நதியைச் சிறை இட்டவர் - கங்கையைச் சடையுள் அடைத்தவர்; (சிறை - அணை (Dam, bank)); (திருவாசகம் - கோயில் திருப்பதிகம் - 8.22.5 - "சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயுந் திருப்பெருந் துறையுறை சிவனே");
அன்பால் புகழ் செப்பிப் பணிவார்க்குப் பொறை மிக்கவர் - பக்தியோடு ஈசன் புகழைப் பாடிப் பணியும் அன்பர்களுக்கு மிகுந்த தயை உடையவர்; (பொறை - தயை; பொறுமை); (திருவாசகம் - அடைக்கலப்பத்து - 8.24.2 - "வெறுப்பனவே செய்யும்என் சிறுமையைநின் பெருமையினாற் பொறுப்பவனே");
அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவர்.



9)
கடிபங்கய மலரானொடு கடல்மேல்துயில் மாலும்
முடியுங்கழல் அறியாவணம் முடிவில்சுடர் ஆனான்
வெடிசெய்துடி ஏந்துங்கரன் விரையார்சர வேளைப்
பொடிசெய்தவன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



கடிபங்கய மலரானொடு கடல்மேல் துயில் மாலும் - வாசத் தாமரைமேல் இருக்கும் பிரமனும் கடல்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும்; (கடி - வாசனை); (பங்கயம் - பங்கஜம் - தாமரை);
முடியும் கழல் அறியாவணம் - தன் திருமுடியையும் திருவடியையும் அறிய ஒண்ணாதபடி;
முடிவு இல் சுடர் ஆனான் - எல்லை இல்லாத சோதி ஆனவன்;
வெடி செய் துடி ஏந்தும் கரன் - வெடி போல் ஒலிக்கும் உடுக்கையைக் கையில் ஏந்தியவன்; (அப்பர் தேவாரம் - 4.73.6 - "விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை தரித்ததோர் கோல" - வெடிபடு தமருகம் - வெடி போன்ற ஒலியை உண்டாக்கும் உடுக்கை.)
விரை ஆர் சர வேளைப் பொடிசெய்தவன் - மணம் பொருந்திய அம்புகளை (மலர்க்கணை) உடைய காமனைச் சாம்பல் ஆக்கியவன்; (விரை - வாசனை); (சரம் - அம்பு ); (வேள் - மன்மதன்);



10)
மாற்றும்வழி என்றேநிதம் வாயில்வரை வந்து
தூற்றும்மொழி சொல்லித்திரி துரிசர்க்கரு ளாதான்
தோற்றம்முடி வில்லாவரன் தொழுவார்துணை உம்பர்
போற்றும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



மாற்றும் வழி - (உம்) நெறியை மாற்றுங்கள்;
துரிசர்க்கு அருளாதான் - குற்றம் உடையவர்களுக்கு அருள் இல்லாதவன்; (துரிசு - குற்றம்);
தோற்றம் முடிவு இல்லா அரன் - ஆதியும் அந்தமும் இல்லாத ஹரன்;
தொழுவார் துணை - துழுகின்ற அன்பர்களுக்குத் துணைவன்;
உம்பர் போற்றும் பரன் - தேவர்களெல்லாம் வணங்குகின்ற பரமன்;



11)
ஊணும்பலி பெண்ணாணலி உடையும்புலி அதளே
நாணும்பட நாகம்மென நாளும்புகழ் வாரைப்
பேணும்பதி பிறைவெண்மதி சூடாமணி யாகப்
பூணும்பரன் அரிசிற்கரைப் புத்தூருறை பொன்னே.



ஊணும் பலி, பெண் ஆண் அலி, உடையும் புலி அதளே, நாணும் பட நாகம் என - "உணவும் பிச்சை; ஆண் பெண் அலி; உடை ஆவதும் புலித்தோல்; அரைநாண் படம் உடைய நாகப்பாம்பு" என்று சிவபெருமான் சிறப்புகளைப் பேசி;
நாளும் புகழ்வாரைப் பேணும் பதி - தினந்தோறும் துதிக்கும் பக்தர்களைக் காக்கும் தலைவன்;
பிறைவெண்மதி சூடாமணியாகப் பூணும் பரன் - வெண்பிறைச்சந்திரனைத் தலையில் சூடாமணி போல அணிகின்ற மேலானவன்;
அரிசிற்கரைப் புத்தூர் உறை பொன்னே - அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறைகின்ற பொன் போன்றவன்.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்) - இத்தலம் கும்பகோணம்- நாச்சியார் கோவில் வழியில் உள்ளது.
2) அரிசிற்கரைப் புத்தூர் (அழகாபுத்தூர்) - படிக்காசு நாதர் (சொர்ணபுரீஸ்வரர்) கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=346
3) இலக்கணக் குறிப்புகள் :
செய்ம்மாணி - செய் + மாணி; - வினைத்தொகை;
புணர்ச்சி விதி : கை, பை, செய், நெய் போன்ற சொற்களை அடுத்து மெல்லினத்தில் தொடங்கும் சொல் வந்தால் அம்மெல்லினம் ஒற்று மிகும்.
உதாரணம் - திருநாவுக்கரசர் தேவாரம் - 4.80.5 -
செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன்
மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான்
கைஞ்ஞின்ற வாடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.
-------------- --------------

04.27 – வல்லம் (திருவலம்)


04.27 – வல்லம் (திருவலம்)



2013-11-29
வல்லம் (திருவல்லம் - இக்கால வழக்கில் 'திருவலம்')
------------------
(கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு")



1)
வெண்டலை ஏந்தி வெள்விடை ஏறி விடநாகம்
வண்டிரை கொன்றை மலரணி ஈசன் மகிழ்கின்ற
தெண்டிரை வந்து திருவடி போற்று திருவல்லம்
கண்டலர் தூவிக் கைதொழு தல்லல் களைவோமே.



வெண் தலை ஏந்தி - வெள்ளிய மண்டையோட்டை ஏந்தியவன்;
வெள் விடை ஏறி - வெண்ணிற இடபத்தின்மேல் ஏறியவன்;
விடநாகம் வண்திரை (/வண்டு இரை) கொன்றை மலர் அணி ஈசன் மகிழ்கின்ற - விடம் உடைய நாகப்பாம்பையும், கங்கையையும், வண்டுகள் ஆரவாரிக்கின்ற கொன்றைமலரையும் முடிமேல் அணிகின்ற ஈசன் விரும்பி உறைகின்ற; (வண்டிரை - வண்+திரை (=கங்கை) / வண்டு+இரை (வண்டு ஒலிக்கின்ற));
(சம்பந்தர் தேவாரம் - 2.29.2 - "வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்");
(சம்பந்தர் தேவாரம் - 3.76.2 - ".... குழகன்றனிடமாம் வண்டிரை நிழற்பொழிலின்..." - வண்டு இரை - வண்டுகள் ஆரவாரிக்கின்ற);
தெண் திரை வந்து திருவடி போற்று திருவல்லம் கண்டு - தெளிந்த ஆற்றின் அலைகள் வந்து திருவடியை வணங்கும் திருவல்லத்தைத் தரிசித்து;
அலர் தூவிக் கைதொழுது அல்லல் களைவோமே - பூக்கள் தூவிக் கைகளால் தொழுது நம் துன்பத்தைத் தீர்ப்போம்.



2)
பூணுர கங்கள் பொலிதிரு மேனிப் புகழாளன்
வாணுத லாளை வாமமு கந்தான் மகிழ்கின்ற
சேணுயர் கின்ற திண்மதில் சூழ்ந்த திருவல்லம்
பேணுதல் செய்து பேரிடர் தன்னைப் பிரிவோமே.



பூண் உரகங்கள் - பூணுகின்ற பாம்புகள்;
வாள் நுதலாள் - ஒளிபொருந்திய நெற்றியை உடையவள் - உமையம்மை; (வாணுதலாள் = வாள் நுதலாள்);
வாமம் உகந்தான் - இடப்பக்கம் விரும்பியவன்;
சேண் - ஆகாயம்;
திண் மதில் - வலிமை மிகுந்த மதிற்சுவர்;
பேணுதல் - போற்றுதல்;
பேர் இடர் - பெரிய துன்பம்;



3)
நித்தியன் நெற்றி நேத்திரன் நாகம் நிலவாறு
மத்தம ணிந்த வார்சடை அண்ணல் மகிழ்கின்ற
தெத்தென வென்று தேன்முரல் கின்ற திருவல்லம்
பத்தியொ டுற்றுப் பாதமி ரண்டைப் பணிவோமே.



நித்தியன் - அழிவற்றவன்;
நெற்றி நேத்திரன் - நெற்றிக்கண்ணன்;
நாகம் நிலவு ஆறு மத்தம் அணிந்த - பாம்பையும் சந்திரனையும் கங்கையையும் ஊமத்த மலரையும் சூடிய;
தேன் முரல்கின்ற - வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற;
பத்தியொடு உற்று - பக்தியோடு சென்றடைந்து; (உறுதல் - அடைதல்);



4)
பூவது கொண்டு பொன்னடி போற்றல் புரியாமல்
ஏவது ஆக்கும் காமனை அங்கம் இலனாக்கி
சேவது வாயில் பார்க்கிற கோயில் திருவல்லம்
நாவது கொண்டு நற்றமிழ் பாட நலமாமே.



* இத்தலத்தில் இடபம் சுவாமியை நோக்கி இராமல் அவருக்கு எதிர்ப்புறமாகக் கிழக்கு நோக்கியுள்ளது.


பூ அது கொண்டு பொன்னடி போற்றல் புரியாமல் - பூவால் பொன்னடியைப் போற்றாமல்;
ஏ அது ஆக்கும் காமனை – பூவினை அம்பு ஆக்கும் மன்மதனை;
அங்கம் இலன் ஆக்கி - உடலற்றவனாகச் செய்தவன்; (ஆக்கி - ஆக்கியவன்);
சே அது வாயில் பார்க்கிற கோயில் திருவல்லம் - இடபம் உள்ளே ஈசனை நோக்காமல் வாயிலை நோக்கியபடி இருக்கும் கோயிலான திருவல்லத்தில்;
நா அது கொண்டு நற்றமிழ் பாட நலம் ஆமே - நாவினால் தேவாரம் முதலியன பாடினால் நன்மை விளையும்;
இலக்கணக் குறிப்பு : ஏ அது ஆக்கும் = "ஏவதுவாக்கும்" என்றும் புணரும். உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 1.112.6 - "மாறெதிர் வருதிரி புரமெரித்து நீறது வாக்கிய நிமலனகர்";



5)
வான்மிக வாழ்த்த வல்விடம் உண்ட மணிகண்டன்
மான்மறி ஏந்தி மாதொரு பங்கன் மகிழ்கின்ற
தேன்மலர் நாடிச் சிறையளி ஆர்க்கும் திருவல்லம்
வான்மலர் தூவி வந்தனை செய்தல் வழியாமே.



வான் - 1) தேவர்கள்; 2) அழகிய; சிறந்த;
மான்மறி - மான் கன்று;
சிறை அளி ஆர்க்கும் - சிறகுடைய வண்டு ஒலிக்கும்;
வான்மலர் தூவி வந்தனை செய்தல் வழி ஆமே - அழகிய பூக்களைத் தூவி வழிபடுவது உய்யும் வழி ஆகும்;



6)
கொம்பன மங்கை கூறமர் எந்தை குளிர்திங்கள்
வம்பவிழ் கொன்றை மலரணி ஈசன் வடவாற்கீழ்ச்
செம்பொருள் சொன்ன சிவனுறை கின்ற திருவல்லம்
நம்பிய டைந்து நாம்தொழு தேத்த நலமாமே.



கொம்பு அன மங்கை கூறு அமர் எந்தை - பூங்கொம்பு போன்ற உமையம்மையை ஒரு கூறாக விரும்பிய எம் தந்தை;
குளிர் திங்கள் வம்பு அவிழ் கொன்றை மலர் அணி ஈசன் - குளிர்ந்த திங்களையும் வாசம் கமழும் கொன்றைமலரையும் சூடிய ஈசன்;
வட ஆல் கீழ்ச் செம்பொருள் சொன்ன சிவன் உறைகின்ற திருவல்லம் - கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருளை விளக்கிய சிவபெருமான் உறைகின்ற திருவல்லத்தை; (வடவால் - கல்லார மரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.132.1 - "ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங் கீரிருவர்க் கிரங்கிநின்று");
நம்பி அடைந்து நாம் தொழுது ஏத்த நலம் ஆமே - விரும்பி அடைந்து நாம் தொழுது போற்றினால் நன்மை உண்டாகும்.



7)
கந்தனை ஈன்ற கண்ணுதல் எந்தை கழல்போற்று
சந்திர னுக்குத் தண்ணருள் செய்து தலையேற்றான்
செந்தழல் மேனிச் சிவனுறை கின்ற திருவல்லம்
வந்தனை செய்தல் வல்வினை தீரும் வழியாமே.



கந்தனை ஈன்ற கண்ணுதல் எந்தை - முருகனை பெற்ற நெற்றிக்கண்ணனான எம் தந்தை;



8)
வரையசைத் தானை வாடநெ ரித்து வரமீந்தான்
சிரைதலை ஏந்திச் சில்பலி தேரும் சிவன்மேவும்
திரைபுனல் எற்றும் கரையினில் உள்ள திருவல்லம்
கரைமனத் தோடு கைதொழு தல்லல் களைவோமே.



வரை அசைத்தானை வாட நெரித்து வரம் ஈந்தான் - கயிலைமலையை அசைத்த இராவணனை வாடுமாறு நசுக்கிப் பின் அவனுக்கு வரம் கொடுத்தவன்;
சிரைதலை ஏந்திச் சில்பலி தேரும் சிவன் மேவும் - மயிரற்ற மண்டையோட்டை ஏந்திச் சிறு அளவில் இடும் பிச்சை ஏற்கும் சிவன் உறைகின்ற; (சிரைதலை - சிரைத்த தலை - மயிரற்ற மண்டையோடு); (அப்பர் தேவாரம் - 6.5.3 - "சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி");
திரைபுனல் எற்றும் கரையினில் உள்ள திருவல்லம் - அலைக்கின்ற ஆற்றுநீர் மோதுகின்ற கரையில் உள்ள திருவல்லத்தை; (திரைதல் - அலையெழுதல்); (எற்றுதல் - மோதுதல்; அடித்தல்);
கரை மனத்தோடு கைதொழுது அல்லல் களைவோமே - கரைகின்ற மனத்தோடு கைகளால் தொழுது நம் அல்லகளைத் தீர்ப்போம்.



9)
பங்கய னோடு பாற்கட லானும் பதமேத்த
அங்கள வில்லா ஆரழல் ஆனான் அமர்கின்ற
செங்கயல் பாயும் செய்புடை சூழ்ந்த திருவல்லம்
கொங்கலர் தூவிக் கும்பிட அல்லல் குறுகாவே.



பங்கயன் - தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்;
பாற்கடலான் - பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமால்;
அங்கு அளவு இல்லா ஆரழல் ஆனான் - அங்கே அளவற்ற சோதி ஆனவன்;
செம் கயல் பாயும் செய் புடை சூழ்ந்த திருவல்லம் - சிவந்த கயல்மீன்கள் பாயும் வயல்கள் சூழ்ந்த திருவல்லம்;
கொங்கு அலர் - வாச மலர்;
குறுகா - அணுகா; அடையா; (குறுகுதல் - அணுகுதல்);



10)
வலையினை வீசும் வஞ்சகர் வார்த்தை மதியாதீர்
அலைமலி கங்கை அஞ்சடை ஏற்ற அருளாளன்
சிலையினை ஏந்தித் திரிபுரம் எய்தான் திருவல்லம்
நிலையினன் நற்றாள் நினைவது வான்சேர் நெறிதானே.



மதியாதீர் - மதியேன்மின் - நீங்கள் மதிக்க வேண்டா;
அம் சடை - அழகிய சடை;
சிலை - மலை; வில்; (மேருமலை என்ற வில்);
திரிபுரம் எய்தான் - திரிந்த முப்புரங்களை எய்தவன்;
திருவல்லம் நிலையினன் - திருவல்லத்தில் நிலைத்து உறைகின்ற சிவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.76.1 - "மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம் நிலையினான்");
வான் சேர் நெறி - வானுலகம் சேரும் வழி ஆகும்;



11)
இகழ்தரு தக்கன் வேள்வித கர்த்த எரிவண்ணன்
உகள்தரு மானை ஒருகரம் ஏந்தி உரகத்தார்
திகழ்தரு மார்பன் திருவலம் மேய சிவனெம்மான்
புகழ்தனை ஓதப் புரிவினை எல்லாம் பொடியாமே.






தருதல் - ஒரு துணைவினைச்சொல்;
இலக்கணக் குறிப்பு : புணர்ச்சி விதி : ழ்+= ; ள்+= ;
(இகடரு, உகடரு, திகடரு, புகடனை = (இகழ்தரு, உகள்தரு, திகழ்தரு, புகழ்தனை));
உகள்தல் - பாய்தல்; (சம்பந்தர் தேவாரம் - 2.109.4 - "குலவும் நீள்வயற் கயலுகள் கோட்டூர்நற் கொழுந்தே");
("மான் உகளும்" பிரயோக உதாரணம் - சங்க இலக்கியத்தில் - குறுந்தொகை - "பிணையொடு மார்ந்த மானே றுகளுங் கானம்" = பிணையொடும் ஆர்ந்த - பெண் மானோடு வயிறு நிரம்ப உண்ட; மான் ஏறு உகளும் - ஆண் மான் துள்ளுகின்ற; கானம் - காடு);
உரகத் தார் - பாம்பு மாலை;
புரிவினை - செய்வினை;
பொடி ஆம் - சாம்பல் ஆகும்; அழியும்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்;
தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்;



2) சம்பந்தர் தேவாரம் - 1.98.1 -
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ன்றுடையானை மையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே.



3) திருவல்லம் (திருவலம்) - (இத்தலம் வேலூர் - காட்பாடி அருகே உள்ளது) - வில்வநாதேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=119
-------------- --------------