Thursday, January 18, 2024

07.30 – கச்சிக் கயிலாயநாதர் கோயில் - சக்கரம் கீறிச்

07.30 – கச்சிக் கயிலாயநாதர் கோயில்

2016-03-11

கச்சிக் கயிலாயநாதர் கோயில் (காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்)

--------------------------------

(12 பாடல்கள்) (நேரிசை வெண்பா.

எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

சக்கரம் கீறிச் சலந்தரனைச் செற்றவன்

செக்கர்வான் வண்ணத்தன் தீயுமிழும் அக்கன்

புயலாரும் கண்டன் புகழார்ந்த கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


சக்கரம் கீறிச் சலந்தரனைச் செற்றவன் - தரையில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவன்; (கீறுதல் - வரிகீறுதல் - To draw lines);

செக்கர்-வான் வண்ணத்தன் - செவ்வானம் போன்ற செம்மேனி உடையவன்;

தீ உமிழும் அக்கன் - தீயை உமிழும் நெற்றிக்கண் உடையவன்; (அக்கம் - அக்ஷம் - கண்);

புயல் ஆரும் கண்டன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (புயல் - மேகம்); (ஆர்தல் = ஒத்தல்); (அப்பர் தேவாரம் - 6.5.2 - "கார்மேகம் அன்ன மிடற்றாய் போற்றி");

புகழ் ஆர்ந்த கச்சிக் கயிலாய நாதன் தாள் காப்பு - புகழ் மிக்க காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை; (புயல் - மேகம்); (ஆர்தல் = நிறைதல்; மிகுதல்); (காப்பு - காவலாயுள்ளது); (சுந்தரர் தேவாரம் - 7.39.8 - "கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்கும்"); (பட்டினத்து அடிகள் - திருவிடைமருதூர் மும்மணிக் கோவை - 11.28.5 - "கண்ணென்றும் நந்தமக்கோர் காப்பென்றும்");


2)

விண்ணில் உறைதேவர் வேண்ட அவரமுதம்

உண்ண அருவிடம் உண்டருள் அண்ணல்

அயனார் சிரமொன் றறுத்தவன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


வானோர்கள் வேண்ட அவர்களுக்கு இரங்கி, அவர்கள் அமுதம் உண்ணும்பொருட்டுத் தான் கொடிய நஞ்சை உண்ட பெருமான்; பிரமனுடைய தலை ஒன்றை அறுத்தவன்; காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

அயனார் - பிரமன்; ஆர் விகுதி பெற்று வந்தது; (சம்பந்தர் தேவாரம் - 3.89.5 - "பிரமனார் சிரமறுத்த இறைவனது...");


3)

கண்ணை இடந்திட்டுக் கைதொழுத கேசவனுக்

கெண்ணிய சக்கரம் ஈந்தருள் அண்ணல்

அயிரா வணமேறான் ஆனேற்றன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


கண்ணை இடந்து இட்டுக் கைதொழுத கேசவனுக்கு எண்ணிய சக்கரம் ஈந்தருள் அண்ணல் - ஆயிரம் தாமரையில் ஒரு பூக்குறையக் கண்டு தம் மலர்க்கண் ஒன்றைத் தோண்டிப் பூவாக இட்டு அருச்சித்த திருமாலுக்கு அவர் கருதிய சக்கராயுதத்தை அருள்புரிந்தவன்; (இடத்தல் - தோண்டுதல்); (எண்ணுதல் - கருதுதல்; நினைத்தல்);

அயிராவணம் ஏறான் ஆனேற்றன் - அயிராவணம் என்ற யானையின்மேல் ஏறிச் செல்லாமல் எருதின்மேல் ஏறிச் செல்பவன்; (அயிராவணம் - சிவபெருமானுடைய யானை); (அப்பர் தேவாரம் - 6.25.1 - "அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட");

கச்சிக் கயிலாய நாதன் தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


4)

தக்கன்செய் வேள்வி தகர்த்துத் தலையரிந்த

முக்கண் முதல்வனென்றும் மூவாத சொக்கன்

தயிர்பால் மகிழ்ந்தாடும் சங்கரன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


தக்கன் செய்த வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டியவன்; முக்கண் உடைய முதல்வன்; என்றும் மூப்பு இல்லாமல் இளமையோடு திகழும் அழகன்; தயிர், பால் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்; நன்மை செய்யும் சங்கரன்; காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

மூவாத - மூத்தல் இல்லாத; சொக்கன் - அழகன்; சுந்தரன்; (சம்பந்தர் தேவாரம் - 3.109.6 - "தக்கனைத் தலையரி தழலுருவர்");


5)

பெருமத வேழம் பிளிற உரித்த

ஒருவன் கருதும் உருவன் அருவன்

அயிலார்சூ லத்தன் அழகார்ந்த கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


பெரிய மதயானை பிளிறும்படி அதன் தோலை உரித்தவன்; ஒப்பற்றவன்; அடியவர்கள் விரும்பும் உருவம் எல்லாம் உடையவன்; அருவமாகவும் உள்ளவன்; கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவன்; அழகிய காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

ஒருவன் - ஒப்பற்றவன்; அயில் - கூர்மை; ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்;


6)

தேவாரம் பாடுவார் தீவினை தீர்த்தொரு

நாவாயாய் வான்சேர்க்கும் நல்லவன் மேவார்

எயில்மூன்றை எய்தவன் ஏராரும் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


தேவாரம் பாடிப் பணியும் பக்தர்களுடைய தீவினைகளைத் தீர்த்துப், பிறவிக்கடலைக் கடப்பிக்கும் கப்பலாகி, அவர்களைச் சிவலோகம் சேர்க்கும் நல்லவன்; பகைவர்களது முப்புரங்களை ஒரு கணை எய்து அழித்தவன்; அழகிய காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;

நாவாய் - படகு; கப்பல்; மேவார் - பகைவர்; எயில் - கோட்டை; ஏர் - அழகு;


7)

கானத்தால் போற்றிசெயும் காதலர்க் கன்புடையான்

வானத்தார் வாழ்த்தும் மணிகண்டன் ஏனத்

தெயிறாரும் மார்பன் எழிலாரும் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


கானத்தால் போற்றிசெயும் காதலர்க்கு அன்புடையான் - இசைபாடி வழிபடும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்; (கானம் - இசைப்பாட்டு); (போற்றிசெய்தல் - துதித்தல்); (காதலர் - அன்புள்ளவர்; பக்தர்);

வானத்தார் வாழ்த்தும் மணிகண்டன் - தேவர்கள் துதிக்கும் நீலகண்டன்;

ஏனத்து எயிறு ஆரும் மார்பன் - பன்றிக்கொம்பை மார்பில் அணிந்தவன்; (ஏனம் - பன்றி); (எயிறு - பல்); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "முற்றலாமை இளநாகமோடு ஏன முளைக்கொம்பு அவைபூண்டு");

எழில் ஆரும் கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - அழகிய காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


8)

பித்தாகி வெற்பினைப் பேர்த்த இராவணன்வாய்

பத்தால் பரவவொரு பாதவிரல் வைத்தான்

குயிலார் மொழியுமையோர் கூறுடையான் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


பித்தாகி வெற்பினைப் பேர்த்த இராவணன் வாய் பத்தால் பரவ ஒரு பாதவிரல் வைத்தான் - மதிமயங்கிக் கயிலைமலையை பெயர்க்க முயன்ற இராவணனுடைய பத்து வாய்களும் போற்றிப் பாடுமாறு திருப்பாதத்தின் விரல் ஒன்றை ஊன்றியவன்; (பித்து - அறியாமை; பைத்தியம்); (வெற்பு - மலை - கயிலைமலை); (பரவுதல் - புகழ்தல்);

குயில் ஆர் மொழி உமை ஓர் கூறு உடையான் - குயில் போன்ற இனிய மொழியுடைய உமையை ஒரு கூறாக உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.16.1 - "குயிலாரு மென்மொழியாள் ஒரு கூறாகி");

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


9)

அந்தகன்றன் மார்பில் அயிற்சூலம் பாய்ச்சியவன்

சந்தத் தமிழ்சொல் தமரிடர்தீர் தந்தை

அயனோ டரிநே டருஞ்சோதி கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


அந்தகன்தன் மார்பில் அயிற்-சூலம் பாய்ச்சியவன் - அந்தகாசுரனை மார்பில் கூர்மை பொருந்திய சூலத்தால் குத்தியவன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (அயில் - கூர்மை); (பாய்ச்சுதல் - குத்துதல்); (அப்பர் தேவாரம் - 6.96.5 - "அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்");

சந்தத் தமிழ் சொல் தமர் இடர் தீர் தந்தை - சந்தத்தமிழான தேவாரத்தைப் பாடும் அடியவர்களுடைய துன்பத்தைத் தீர்க்கும் தந்தை; (தமர் - அடியவர்);

அயனோடு அரி நேடு அருஞ்சோதி - பிரமனும் திருமாலும் தேடிய அரிய சோதி; (நேடு - தேடு);

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


10)

நல்ல நெறியறியார் நாளுமுரை பொய்யொழிமின்

அல்லும் பகலுநினை அன்பரைக் கொல்லக்

கயிறேந்து காலனைக் காய்ந்தபிரான் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


நல்ல-நெறி அறியார் நாளும் உரை பொய் ஒழிமின் - நல்ல மார்க்கத்தை அறியாதவர்கள் ஓயாமல் உரைக்கின்ற பொய்களை நீங்குங்கள்; (நெறி - மார்க்கம்);

அல்லும் பகலு(ம்) நினை அன்பரைக் கொல்லக் கயிறு ஏந்து காலனைக் காய்ந்த பிரான் - இரவும் பகலும் நினைத்து வழிபட்ட மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசத்தை ஏந்தி அடைந்த காலனைச் சினந்து உதைத்த பெருமான்; (கயிறு - பாசம்); (காய்தல் - அழித்தல்; சினத்தல்);

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


11)

மன்மதனை நீறுசெய்த மாதவன் வாரணிந்த

மென்முலையாள் பங்கமர் வேடத்தன் வன்மை

பயில்தோள்கள் எட்டினில் பால்நீற்றன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


மன்மதனை நீறுசெய்த மா-தவன் - காமனைச் சாம்பலாக்கிய பெரிய தவக்கோலத்தை உடையவன்; (கருவூர்த் தேவர் - திருவிசைப்பா - 9.10.9 - "கீழ்க்கோட்டூர் மாதவன் மணியம்பலத்துள் நின்றாடும் மைந்தன்");

வார் அணிந்த மென்முலையாள் பங்கு அமர் வேடத்தன் - கச்சு அணிந்த மென்மையான் முலைகளையுடைய உமையை ஒரு பங்காக உடைய கோலம் உடையவன்; (வார் - முலைக்கச்சு); (அமர்தல் - விரும்புதல்); (வேடம் - கோலம்);

வன்மை பயில்-தோள்கள் எட்டினில் பால்-நீற்றன் - வலிமை பொருந்திய எட்டுப் புயங்களில் பால் போன்ற திருநீற்றைப் பூசியவன்; (வன்மை - வலிமை); (பயில்தல் - பொருந்துதல்);

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


12)

காடவர்கோன் தன்கனவில் கற்கோயில் நாள்மாற்றென்

றாடவலான் பூசலார்க் கன்புடையான் மாட

மயிலாப்பூர் மேயான் மணிகண்டன் கச்சிக்

கயிலாய நாதன்தாள் காப்பு.


காடவர்கோன்தன் கனவில், "கற்கோயில் நாள் மாற்று" என்று ஆட-வலான் - பல்லவ மன்னனது கனவில் சென்று, "அடுத்த நாள் யாம் பூசலார் கட்டிய கோயிலுக்குச் செல்கின்றோம்; அதனால் நீ கட்டிய (காஞ்சிபுரம் கைலாசநாதர்) கற்கோயிலின் கும்பாபிஷேக தினத்தை வேறொரு நாளில் வைத்துக்கொள்" என்று சொன்னவன்; கூத்தாடுபவன்; (காடவர்கோன் - பல்லவ மன்னன்); (ஆடுதல் - சொல்லுதல்; கூத்தாடுதல்); ("ஆடவலான்" என்ற சொற்றொடரை இப்படி இருமுறை இயைத்துக் "கூத்தாடுபவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

பூசலார்க்கு அன்பு உடையான் - பூசலார் நாயனாருக்கு அன்பு உடையவன்;

மாட மயிலாப்பூர் மேயான் - மாடிக்கட்டடங்கள் மிக்க மயிலாப்பூரில் எழுந்தருளியவன்; (அப்பர் தேவாரம் - 6.11.7 - "நிரையார் மணிமாட நீடூரானை");

மணிகண்டன் - நீலமணி கண்டன்;

கச்சிக் கயிலாய நாதன்தாள் காப்பு - காஞ்சிபுரத்தில் உள்ள கயிலாயநாதன் திருவடிகளே நமக்குத் துணை;


பிற்குறிப்புகள் :

இப்பதிகத்தில் ஈசனது அட்டவீரட்டச் செயல்கள் சுட்டப்பெறுகின்றன: திரிபுரம் எரித்தது (திருவதிகை), ஜலந்தரனை வதம் செய்தது (திருவிற்குடி), தக்கன் யாகம் அழித்து (திருப்பறியலூர்), மன்மதனை எரித்தது (திருக்குறுக்கை), எமனை அழித்தது (திருக்கடவூர்), யானையை வதம் செய்தது (திருவழுவூர்), அந்தகனை அழித்தது (திருக்கோவலூர்), பிரமன் தலை கொய்தது (திருக்கண்டியூர்);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


07.29 – கச்சி அனேகதங்காவதம் - பண்ணிற் பொலிதமிழ்

07.29 – கச்சி அனேகதங்காவதம்

2016-03-10

கச்சி அனேகதங்காவதம்

--------------------------------

(கட்டளைக் கலித்துறை) (தேவாரத்தில் "திருவிருத்தம்" என்ற அமைப்பு);

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.94.1 - "ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய்")


1)

பண்ணிற் பொலிதமிழ் கொண்டடி போற்றிசெய் பத்தரினி

மண்ணிற் பிறவிகள் இன்றி மகிழ வரமருள்வான்

வண்ணக் கடிமலர் வாளி மதனனை மாய்த்தநுதற்

கண்ணன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


பண்ணிற் பொலி தமிழ் கொண்டு அடி போற்றிசெய் பத்தர் - பண் பொருந்திய தேவாரம் பாடித் திருவடியைத் துதிக்கும் பக்தர்கள்;

இனி மண்ணில் பிறவிகள் இன்றி மகிழ வரம் அருள்வான் - மீண்டும் உலகில் பிறவாமல் இன்புறும்படி வரம் அருள்பவன்;

வண்ணக் கடிமலர் வாளி மதனனை மாய்த்த நுதற்கண்ணன் - அழகிய வாசமலர்களை அம்பாக உடைய மன்மதனை அழித்த நெற்றிக்கண்ணன்; (வண்ணம் - அழகு); (கடி - வாசனை); (வாளி - அம்பு); (மதனன் - மன்மதன்); (மாய்த்தல் - கொல்லுதல்; அழித்தல்);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


2)

ஏலும் வகையினில் தொண்டுசெய் வாரைவிண் ஏற்றுமரன்

ஆல நிழலமர் ஐயன் அடியை அருச்சனைசெய்

பாலனைக் காத்துப் பரிவில் நமனைப் படவுதைத்த

காலன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


ஏலும் வகையினில் தொண்டு செய்வாரை விண் ஏற்றும் அரன் - இயலும் அளவில் திருத்தொண்டு செய்து திருவடியை வழிபடும் பக்தர்களைச் சிவலோகத்திற்கு உயர்த்தும் ஹரன்; (ஏல்தல் - ஏலுதல் - இயலுதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.31.1 - "அடியார்கள் மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக் கற்றவன்" - அடியவர்களைத் தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான்);

ஆல நிழலமர் ஐயன் அடியை அருச்சனைசெய் பாலனைக் காத்துப் - கல்லால மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருக்கும் ஈசன் திருவடியை அருச்சித்த மார்க்கண்டேயரைக் காத்து; (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்); (ஐயன் - குரு; தலைவன்);

பரிவு இல் நமனைப் பட உதைத்த காலன் - இரக்கம் இல்லாத காலனை அழியும்படி உதைத்த காலினன், காலகாலன்; (பரிவில் - பரிவு இல் - இரக்கம் இல்லாத); (படுதல் - சாதல்; அழிதல்);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


==== line-2x) ஆல நிழலில் அமர்ந்த பிரானை அருச்சனைசெய்


3)

மெய்யினில் நீற்றினைப் பூசி உளங்கசி மெய்யடியார்

வெய்ய வினைத்தொடர் வீட்டி அருள்புரி விண்ணவர்கோன்

ஐயன் அருநடம் ஆடிடும் அண்ணல் அழல்திகழும்

கையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


மெய்யினில் நீற்றினைப் பூசி உளம் கசி மெய்யடியார் - உடம்பில் திருநீற்றைப் பூசி மனம் உருகி வழிபடும் மெய்யன்பர்களுடைய;

வெய்ய வினைத்தொடர் வீட்டி அருள்புரி விண்ணவர்கோன் - கொடிய வினைத்தொடரை அழித்து அருள்கின்றவன், தேவர்கள் பெருமான்; (வெய்ய - கொடிய); (வீட்டுதல் - அழித்தல்; நீக்குதல்);

ஐயன் அரு-நடம் ஆடிடும் அண்ணல் - தலைவன், அரிய திருநடம் ஆடும் கடவுள்;

அழல் திகழும் கையன் - தீயைக் கையில் ஏந்தியவன்; (அழல் - நெருப்பு);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


4)

கரையும் மனத்தொடு கைதொழும் அன்பரைக் காத்தருள்வான்

திரைமலி கங்கையைச் செஞ்சடை ஏற்ற சிவபெருமான்

வரையை வளைத்துப் புரமெரி மைந்தன் மதியணிந்த

அரையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


கரையும் மனத்தொடு கைதொழும் அன்பரைக் காத்தருள்வான் - கசிந்து உருகும் மனத்தோடு கைகூப்பி வணங்கும் பக்தர்களைக் காப்பவன்;

திரை மலி கங்கையைச் செஞ்சடை ஏற்ற சிவபெருமான் - அலை மிகுந்த கங்கையைச் செஞ்சடையில் ஏற்ற சிவன்; (திரை - அலை); (மலிதல் - மிகுதல்);

வரையை வளைத்துப் புரம் எரி மைந்தன் - மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை எரித்த வீரன்; (வரை - மலை); (மைந்தன் - வீரன்);

மதி அணிந்த அரையன் - சந்திரனை அணிந்த அரசன்; (அரையன் - அரசன்);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


5)

தெண்ட னிடும்அடி யார்பழ வல்வினை தீர்த்தருள்வான்

பண்டு சுரர்கள் கடைந்த கடலில் படுவிடத்தைக்

கண்டு நடுங்கிக் கழல்தொழு தேத்தக் கரந்தருள்செய்

கண்டன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


தெண்டனிடும் அடியார் பழ-வல்வினை தீர்த்து அருள்வான் - வணங்கும் பக்தர்களின் பழைய வலிய வினைகளைத் தீர்ப்பவன்; (தெண்டனிடுதல் - தண்டனிடுதல் - நமஸ்கரித்தல்);

பண்டு, சுரர்கள் கடைந்த கடலில் படுவிடத்தைக் கண்டு நடுங்கிக் - முன்பு, தேவர்கள் அமுது வேண்டிக் கடைந்த பாற்கடலில் தோன்றிய கொடிய நஞ்சைக் கண்டு அஞ்சி; (பண்டு - முற்காலம்); (சுரர் - தேவர்); (படுதல் - உண்டாதல்; தோன்றுதல்; சம்பவித்தல்); (படு - கொடிய);

கழல் தொழுது ஏத்தக் கரந்து அருள்செய் கண்டன் - திருவடியை வழிபடவும் அவர்களுக்கு இரங்கி அதனைக் கண்டத்தில் ஒளித்தவன்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


6)

நறைமலி பூக்கொடு போற்றடி யார்க்கு நலமருள்வான்

பிறையையும் பாம்பையும் ஒன்றிட வைத்த பெருமையினான்

அறைகழல் வாழ்த்திய அண்டர்க் கிரங்கி அருள்மிடற்றில்

கறையன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


நறை மலி பூக்கொடு போற்று அடியார்க்கு நலம் அருள்வான் - தேன் மிக்க பூக்களால் வழிபடும் பக்தர்களுக்கு நன்மை அருள்பவன்; (நறை - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்);

பிறையையும் பாம்பையும் ஒன்றிட வைத்த பெருமையினான் - திருமுடிமேல் பிறைச்சந்திரனையும் நாகத்தையும் சேர்ந்து வாழ வைத்த பெருமையுடையவன்;

அறை-கழல் வாழ்த்திய அண்டர்க்கு இரங்கி அருள் மிடற்றில் கறையன் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியைத் துதித்த தேவர்களுக்கு இரங்கி அருளிய கண்டத்தில் கறையை உடையவன்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


7)

இயலும் வகையில் இணையடி போற்றில் இனிதருள்வான்

கயலை நிகர்த்தகண் ணாளொரு பங்கன் கனவிடையான்

அயிலுடை மூவிலை வேலினன் நால்வர்க் கறமுரைத்த

கயிலைக் கிறையிடம் கச்சி அனேகதங் காவதமே.


இயலும் வகையில் இணையடி போற்றில் இனிது அருள்வான் - இயன்றவாறு இரு திருவடிகளைப் போற்றினால் இனிய அருளைப் பொழிபவன்; (போற்றில் - போற்றினால்);

கயலை நிகர்த்த கண்ணாள் ஒரு பங்கன் - கயல்மீன் போன்ற கண்களை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;

கனவிடையான் - பெரிய, பெருமை மிக்க இடபத்தை வாகனமாக உடையவன்; (கனம் - பெருமை; பருமன்); (விடை - எருது); (அப்பர் தேவாரம் - 5.3.9 - "காழியானைக் கனவிடை ஊருமெய் வாழியானை");

அயில்உடை மூவிலை வேலினன் - கூர்மையுடைய திரிசூலம் ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (மூவிலை வேல் - மூன்று இலை போன்ற முனையுடைய வேல் - திரிசூலம்);

நால்வர்க்கு அறம் உரைத்த கயிலைக்கு இறை - (கல்லால மரத்தின்கீழே) சனகாதியர்கள் நால்வருக்கு மறைப்பொருளை விளக்கிய கயிலாயநாதன்;

இடம் கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


8)

பத்திமை கொண்டு பரவிடு பத்தர் பழவினைதீர்

அத்தன் அரையில் அரவினை நாணென ஆர்த்தபிரான்

பத்துத் தலையனை ஓர்விரல் ஊன்றிப் பனிமலைக்கீழ்க்

கத்தவைத் தானிடம் கச்சி அனேகதங் காவதமே.


பத்திமை கொண்டு பரவிடு பத்தர் பழவினை தீர் அத்தன் - பக்தியால் போற்றித் துதிக்கும் பக்தர்களுடைய பழைய வினைகளைத் தீர்க்கும் தந்தை; (பத்திமை - பக்தி; காதல்); (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); (அப்பர் தேவாரம் - 6.54.3 - "பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள் பாமாலை பாடப் பயில்வித்தானை");

அரையில் அரவினை நாண் என ஆர்த்த பிரான் - அரையினில் பாம்பை அரைநாணாகக் கட்டிய தலைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்); (பிரான் - தலைவன்);

பத்துத் தலையனை ஓர் விரல் ஊன்றிப் பனிமலைக்கீழ்க் கத்தவைத்தான் - பத்துத்தலை உடைய இராவணனை ஒரு விரலை ஊன்றிக் கயிலைமலையின் கீழே நசுக்கி அவனை அலறச்செய்தவன்; (பனிமலை - இங்கே, பனி பொருந்திய கயிலைமலை);

இடம் கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


9)

சமயங்கள் ஆறென நின்றவன் தாளைத் தலைவணங்கித்

தமிழ்மறை பாடும் அடியவர் தம்வினை சாய்த்தருள்வான்

கமலத் தயனரி காணற் கரிய கனலுருக்கொள்

அமலன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


சமயங்கள் ஆறு என நின்றவன் தாளைத் தலைவணங்கித் - (சைவம், சாக்தம், வைஷ்ணவம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் என்ற) ஷண்மதங்கள் காட்டும் இறைவனான அவன் திருவடியைத் தலையால் வணங்கித்;

தமிழ்மறை பாடும் அடியவர்தம் வினை சாய்த்தருள்வான் - தமிழ்வேதமாகிய திருமுறைகளைப் பாடுகின்ற பக்தர்களுடைய வினைகள் அழிப்பான்; (சாய்த்தல் - அழித்தல்); (பெரிய புராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.319 - "பன்னு தமிழ்மறை யாம்பதிகம் பாடித்");

கமலத்து அயன் அரி காணற்கு அரிய கனல்-உருக் கொள் அமலன் - தாமரைப்பூமேல் உறையும் பிரமனும் திருமாலும் தேடியும் காண இயலாத அரிய சோதியின் வடிவம் கொண்டவன், தூயவன்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


10)

அருத்தம் இலாததைத் தத்துவம் என்னும் அவர்நெறிகள்

வருத்தத்தை மாற்றகில் லாவினை மாய்த்திட வல்லபிரான்

நிருத்தம் பயிலும் நிமலன் சுடலையின் நீறணிந்த

கருத்தன் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


அருத்தம் இலாததைத் தத்துவம் என்னும் அவர் நெறிகள் வருத்தத்தை மாற்றகில்லா - பொருளற்ற வார்த்தைகளைத் தத்துவம் என்று பேசும் அவர்கள் சொல்லும் மார்க்கங்கள் துன்பத்தைத் தீர்க்கமாட்டா; (அருத்தம் - அர்த்தம் - பொருள்); (கில்தல் - இயலுதல்);

வினை மாய்த்திட வல்ல பிரான் - பக்தர்களின் வினையை அழிக்கவல்ல தலைவன்;

நிருத்தம் பயிலும் நிமலன் - இடைவிடாது கூத்தாடுகின்ற தூயன்; (நிருத்தம் - ஆடல்); (பயில்தல் - தொடர்ந்து செய்தல்); (நிமலன் - மலங்கள் அற்றவன்); (திருக்கோவையார் - 6.1 - "நிருத்தம் பயின்றவன் சிற்றம்பலத்து");

சுடலையின் நீறு அணிந்த கருத்தன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய கடவுள்; (சுடலை - சுடுகாடு); (கருத்தன் - கர்த்தா - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 3.16.1 - நிணம்படு சுடலையின் நீறு பூசி);

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


11)

கடகரி தன்னை உரித்தவன் வானவர் கைதொழவும்

கடல்விடம் உண்டருள் கண்டன் நுதலிடைக் கண்ணுடையான்

அடல்விடை ஊர்தியன் ஆறும் பிறையும் அணிந்தசடைக்

கடவுள் இடம்திருக் கச்சி அனேகதங் காவதமே.


கடகரி தன்னை உரித்தவன் - மதயானையின் தோலை உரித்தவன்; (கடகரி - மதம் பொழிகின்ற யானை);

வானவர் கைதொழவும் கடல்விடம் உண்டு அருள் கண்டன் - தேவர்கள் இறைஞ்சவும் அவர்களுக்கு இரங்கிக் கடல்விஷத்தை உண்ட நீலகண்டன்;

நுதலிடைக் கண் உடையான் - நெற்றியில் கண் உடையவன்; (நுதல் - நெற்றி);

அடல்விடை ஊர்தியன் - வலிய, வெற்றி உடைய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (அடல் - வலிமை; வெற்றி);

ஆறும் பிறையும் அணிந்த சடைக் கடவுள் - கங்கையையும் பிறைச்சந்திரனையும் சடையில் அணிந்த கடவுள்;

இடம் திருக்-கச்சி அனேகதங்காவதமே - அப்பெருமான் உறையும் இடம் காஞ்சிபுரத்தில் உள்ள அனேகதங்காவதம் என்ற கோயில் ஆகும்;


பிற்குறிப்புகள் :

கச்சி அனேகதங்காவதம் - இத்தலம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலிருந்து சுமார் 1000 அடி தூரத்தில், அதே சாலையில் SSKV பள்ளிக்கூடத்தின் பின்னே உள்ளது.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


07.28 – இடைச்சுரம் (திருவடிசூலம்) - வழிபடு மறையவன்

07.28 – இடைச்சுரம் (திருவடிசூலம்)

2016-03-09

இடைச்சுரம் (இக்காலத்தில் - திருவடிசூலம்) (இத்தலம் செங்கல்பட்டு அருகே உள்ளது)

-----------------------

(வஞ்சி விருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்")

(சம்பந்தர் தேவாரம் - 1.114.1 - "குருந்தவன் குருகவன் கூர்மையவன்")


1)

வழிபடு மறையவன் வாழ்வுபெறக்

கழல்கொடு கூற்றுதை கருணையினான்

அழலுறு மேனியன் அமர்பதிதான்

எழிலுறு வயலணி இடைச்சுரமே.


வழிபடு மறையவன் வாழ்வு பெறக் - வழிபட்ட மறைச்சிறுவரான மார்க்கண்டேயர் இறவாது உயிர்வாழும்படி;

கழல்கொடு கூற்று உதை கருணையினான் - கழல் அணிந்த திருவடியினால் எமனை உதைத்த அன்பு உடையவன்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);

அழல் உறு மேனியன் அமர் பதிதான் - தீப்போலச் செம்மேனி உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் ஆவது; (உறுதல் - ஒத்தல்); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

எழில் உறு வயல் அணி இடைச்சுரமே - அழகிய வயல்கள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (உறுதல் - பொருந்துதல்; மிகுதல்);


2)

ஓரடல் விடையினன் உலகமுய்ய

நீரடை சடையினன் நீள்மதியன்

காரடை மிடறினன் கருதுமிடம்

ஏருடை வயலணி இடைச்சுரமே.


ஓர் அடல் விடையினன் - ஒப்பற்ற வலிய இடபத்தை ஊர்தியாக உடையவன்; (ஓர் - ஒப்பற்ற); (அடல் - வலிமை; வெற்றி);

உலகம் உய்ய நீர் அடை சடையினன் - உலகம் உய்யும்படி கங்கையைச் சடையில் அடைத்தவன்; (திருவாசகம் - திருச்சாழல் - 8.12.7 - "சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம் பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ");

நீள்மதியன் - பிறைச்சந்திரனை அணிந்தவன்;

கார் அடை மிடறினன் கருதும் இடம் - கருமை அடைந்த கண்டத்தை உடைய ஈசன் விரும்பும் இடம்; (கார் - கருமை); (கருதுதல் - விரும்புதல்);

ஏர் உடை வயல் அணி இடைச்சுரமே - அழகிய வயல்கள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (ஏர் - அழகு; கலப்பை; உழவு);


3)

ஆறிய சிந்தையர் அடிபரவிக்

கூறிய கோமகன் குளிர்மதியன்

மாறிலன் மகிழிடம் மந்திகள்போய்

ஏறிடும் மதிலணி இடைச்சுரமே.


ஆறிய சிந்தையர் அடி பரவிக் கூறிய கோமகன் - தணிந்த மனம் உடைய அடியவர்கள் திருவடியை வாழ்த்திக் கூறிய தலைவன்; (கோமகன் - அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 1.50.1 - "ஒல்லை ஆறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய சொல்லை ஆறித்");

குளிர் மதியன் - குளிர்ந்த திங்களை அணிந்தவன்;

மாறு இலன் மகிழ் இடம் - ஒப்பற்றவனான சிவபெருமான் விரும்பி உறையும் தலம்; (மாறு - ஒப்பு );

மந்திகள் போய் ஏறிடும் மதில் அணி இடைச்சுரமே - குரங்குகள் ஏறுகின்ற மதிலை உடைய திருவிடைச்சுரம் ஆகும்;


4)

அறைகடல் நஞ்சினை ஆர்ந்தழகார்

கறைமிட றுடையவன் கண்ணுதலான்

மறையொரு நான்கையும் வாய்மொழிந்த

இறையவன் உறைபதி இடைச்சுரமே.


அறைகடல் நஞ்சினை ஆர்ந்து அழகு ஆர் கறைமிடறு உடையவன் - ஒலிக்கின்ற கடலில் எழுந்த விடத்தை உண்டு அழகிய நீலகண்டம் உடையவன்; (அறைதல் - ஒலித்தல்); (ஆர்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்);

கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்; (நுதல் - நெற்றி);

மறை ஒரு நான்கையும் வாய்மொழிந்த இறையவன் உறை பதி இடைச்சுரமே - நால்வேதங்களைப் பாடியருளிய இறைவன் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


5)

நீறமர் மார்பினன் நேரிழையைக்

கூறமர் கொள்கையன் குளிர்மதியம்

ஆறமர் சடையினன் அடலுடைய

ஏறமர் இறைபதி இடைச்சுரமே.


நீறு அமர் மார்பினன் - மார்பில் திருநீற்றைப் பூசியவன்;

நேரிழையைக் கூறு அமர் கொள்கையன் - உமையை ஒரு கூறாக விரும்பியவன்;

குளிர் மதியம் ஆறு அமர் சடையினன் - குளிர்ந்த சந்திரனையும் கங்கையையும் சடையில் உடையவன்;

அடல் உடைய ஏறு அமர் இறை பதி இடைச்சுரமே - வலிய எருதை வாகனமாக விரும்பும் இறைவன் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


6)

காவல அருளெனக் கைதொழுது

பூவலர் கொடுசுரர் போற்றிடவும்

மேவலர் முப்புரம் வேவவெய்த

ஏவலன் உறைபதி இடைச்சுரமே.


"காவல அருள்" எனக் கைதொழுது - "காவலனே! அருள்வாயாக" என்று கைகூப்பி வணங்கி;

பூஅலர் கொடு சுரர் போற்றிடவும் - (அன்று) பூத்த அழகிய மலர்களால் தேவர்கள் துதிக்கவும்; (பூத்தல் - மலர்தல்); (பூ - மலர்; அழகு); (அலர் - மலர்); (சுரர் - தேவர்);

மேவலர் முப்புரம் வேவ எய்த ஏ வலன் - பகைவர்களது முப்புரங்களும் வெந்து அழியும்படி அம்பு எய்தவன்; (மேவலர் - பகைவர்); (ஏ வலன் - அம்பு எய்தலில் வல்லவன்); (சுந்தரர் தேவாரம் - 7.17.1 - "மேவலர் முப்புரம் தீயெழுவித்தவர் ஓரம்பினால் ஏவலனார்");

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


7)

அசைவிலன் ஆற்றினை அணிசடையின்

மிசைமதி புனையரன் விரும்புமிடம்

நசையொடு நறைமலர் நாடுவண்டின்

இசைமலி பொழிலணி இடைச்சுரமே.


அசைவு இலன் - அசைவற்றவன்; (அசைவு இலன் - அசலன் - அசைவில்லாதவன்);

ஆற்றினை அணி சடையின்மிசை மதி புனை அரன் விரும்பும் இடம் - கங்கையை அணிந்த சடையின்மேல் சந்திரனைச் சூடிய ஹரன் விரும்பி உறையும் தலம்;

நசையொடு நறைமலர் நாடு வண்டின் இசைமலி பொழில் அணி இடைச்சுரமே - விருப்பத்தோடு தேன்மலர்களை அடைகின்ற வண்டுகளின் இசை மிகுந்த சோலை சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்; (நசை - விருப்பம்; ஆசை); (நறை - தேன்); (மலிதல் - மிகுதல்)


8)

வைதரு மலையசை வாளரக்கன்

கைதலை நெரித்தவர் கனல்மழுவர்

கொய்தவர் அயன்சிரம் கூடலரூர்

எய்தவர் உறைபதி இடைச்சுரமே.


வைது அரு மலை அசை வாள் அரக்கன் கை தலை நெரித்தவர் - (தன் தேர் ஓடாது கீழே இறங்கியதும்) இகழ்ந்து பேசிக் கயிலைமலையைப் பேர்க்க முயன்ற கொடிய அரக்கனான இராவணனுடைய கைகளையும் தலைகளையும் நசுக்கியவர்;

கனல் மழுவர் - பிரகாசிக்கும் மழுவை ஏந்தியவர்;

கொய்தவர் அயன் சிரம் - பிரமன் தலையைக் கிள்ளிப் பறித்தவர்;

கூடலர் ஊர் எய்தவர் - பகைவர்களது ஊர்களான முப்புரங்களை ஓர் அம்பால் எய்தவர்; (கூடலர் - கூடார் - பகைவர்);

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமானார் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


9)

செம்மலர்க் கண்ணனும் திசைமுகனும்

அம்மலர் அடிமுடி அறிவரியான்

இம்மையும் அம்மையும் இன்பமருள்

எம்மிறை உறைபதி இடைச்சுரமே.


செம்மலர்க் கண்ணனும் திசைமுகனும் - தாமரை போன்ற கண்களை உடைய திருமாலும் பிரமனும்; (செம்மலர் - தாமரை); (திசைமுகன் - நான்முகன்);

அம் மலர்அடி முடி அறிவு அரியான் - (தேடியும்) அழகிய மலர் போன்ற திருவடியையும் முடியையும் அறிய ஒண்ணாத பெருமான்; (அம் - அழகு; அந்த);

இம்மையும் அம்மையும் இன்பம் அருள் எம் இறை - அடியவர்களுக்கு இகபர சுகங்களை அருளும் எம் கடவுள்; (இம்மை - இப்பிறப்பு); (அம்மை - இப்பிறப்பின் பின் எய்தும் நிலை); (அப்பர் தேவாரம் - 5.14.4 - "இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மையேல் பிறவித்துயர் நீத்திடும்");

உறை பதி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


10)

வஞ்சக நெஞ்சினர் வாயுரைக்கும்

நஞ்சன சொல்விடும் நன்றறிவீர்

வெஞ்சின விடையினன் வீடருளும்

எஞ்சிவன் உறைபதி இடைச்சுரமே.


வஞ்சக நெஞ்சினர் வாய் உரைக்கும் நஞ்சு அன சொல் விடும் நன்று அறிவீர் - நல்லதை அறிந்தவர்களே! மனத்தில் வஞ்சம் உடையவர்கள் சொல்லும் விஷம் போன்ற சொல்லை நீங்குங்கள்; (அன - அன்ன - போன்ற); (விடும் - விடுங்கள்; நீங்குங்கள்);

வெஞ்சின விடையினன் - மிக்க சினம் உடைய இடபத்தை வாகனமாகக் கொண்டவன்;

வீடு அருளும் எம் சிவன் உறை பதி இடைச்சுரமே - வீடுபேறு அருள்கின்ற எம் சிவபெருமான் உறையும் தலம் திருவிடைச்சுரம் ஆகும்;


11)

நடமிடச் சுடலையை நாடுமரன்

வடமர நிழலமர் மறைமுதல்வன்

இடமலை மகளமர் எம்பெருமான்

இடமலர்ப் பொழிலணி இடைச்சுரமே.


நடம் இடச் சுடலையை நாடும் அரன் - கூத்தாடச் சுடுகாட்டை விரும்பும் ஹரன்;

வடமர நிழல் அமர் மறைமுதல்வன் - கல்லால மரத்தின் அடியில் அமர்ந்த தட்சிணாமூர்த்தி; (வடமரம் - கல்லால மரம்); (மறைமுதல்வன் - மறைமுதல் - சிவன்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.5 - "அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடும்");

இடம் மலைமகள் அமர் எம்பெருமான் - இடப்பக்கத்தில் உமாதேவியைப் பங்காக விரும்பிய எம்பெருமான்; (இடம் + மலைமகள் = இடமலைமகள்; இங்கே, புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்);

இடம் மலர்ப்பொழில் அணி இடைச்சுரமே - அப்பெருமான் உறையும் தலம் மலர்ச்சோலைகள் சூழ்ந்த திருவிடைச்சுரம் ஆகும்;


பிற்குறிப்புகள் :

1) யாப்புக் குறிப்பு:

  • வஞ்சிவிருத்தம் - "தானன தானன தானதனா" என்ற சந்தம். ("விளம் விளம் விளங்காய்");

  • தானன என்பது தனதன என்றும், தானதனா என்பது தனதனனா / தானதானா / தனனதானா என்றும் வரலாம்;

  • சந்தப்பாடல்களில் இடையின ஒற்றுகள் சில இடங்களில் அலகிடப்படா;

2) சம்பந்தர் தேவாரம் - 1.112.5 -

வீறுநன் குடையவள் மேனிபாகம்

கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்

தேறலுண் டெழுதரு சிவபுரமே.


வி. சுப்பிரமணியன்

----------- --------------