Tuesday, October 23, 2018

04.57 – முதுகுன்றம் (விருத்தாசலம்)


04.57 முதுகுன்றம் (விருத்தாசலம்)



2014-03-29
முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)
----------------------------------
(12 பாடல்கள்)
(சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்).
(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")



1)
சந்திர னேறிய தாழ்சடை அண்ணல்
வந்தனை செய்தடை வானவ ருக்கா
முந்தடை யார்புர மூன்றையு மெய்த
மைந்தன வன்பதி மாமுது குன்றே.



பதம் பிரித்து:
சந்திரன் ஏறிய தாழ்சடை அண்ணல்;
வந்தனை செய்து அடை வானவருக்கா,
முந்து அடையார் புரம் மூன்றையும் எய்த
மைந்தன் அவன் பதி மா முதுகுன்றே.


வானவருக்கா - வானவர்களுக்காக; (கடைக்குறை விகாரம்);
முந்து - முற்காலத்தில்; அடையார் - பகைவர்; மைந்தன் - வீரன்;
பதி - தலம்; மா - அழகிய; முதுகுன்று - திருமுதுகுன்றம் - விருத்தாசலம்;



2)
தேன்மல ரால்தொழு சீலர கத்தன்
கூன்மதி கூவிள மாறணி கூத்தன்
ஆன்மிசை யான்அர வார்த்தவ னங்கை
மான்மறி யன்பதி மாமுது குன்றே.



சீலர் அகத்தன் - சீலர்கள் உள்ளத்தில் உறைபவன்;
கூன் மதி - வளைந்த பிறைச்சந்திரன்;
கூவிளம் - வில்வம்;
ஆறு - கங்கை;
ஆன் மிசையான் - இடபத்தின்மேல் ஏறுபவன்; (ஆன் - பசு; இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 1.77.5 - "...அண்ணலானூர்தி யேறுமெம்மடிகள்..."); (சம்பந்தர் தேவாரம் - 2.80.5 - "வெள்ளையெருத்தின் மிசையார்");
அரவு ஆர்த்தவன் - பாம்பைக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்);
அங்கை மான்மறியன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;



3)
ஊன்படை வேடன தோர்கணு கந்தான்
மான்பர சார்கர னூலணி மார்பன்
கூன்பிறை கோளர வம்புனை கூத்தன்
வான்பணி கோன்பதி மாமுது குன்றே.



பதம் பிரித்து:
ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான்;
மான் பரசு ஆர் கரன்; நூல் அணி மார்பன்;
கூன்பிறை, கோள் அரவம் புனை கூத்தன்;
வான் பணி கோன் பதி மா முதுகுன்றே.


ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான் - கண்ணப்பருக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது;
மான் பரசு ஆர் கரன் - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்; ("மான் - பெரியோன்" என்று கொண்டும் பொருள் கொள்ளல் ஆம்); பரசு - மழு); (ஆர்தல் - பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்"); (சுந்தரர் தேவாரம் - 7.25.8 - "பரசா ருங்கரவா பதி னெண்கண முஞ்சூழ")
நூல் - முப்புரி நூல் - பூணூல்;
கூன் பிறை, கோள் அரவம் புனை கூத்தன் - வளைந்த பிறைச்சந்திரனையும் கொடிய பாம்பையும் அணிந்த கூத்தன்;
வான் பணி கோன் - தேவர்கள் போற்றும் தலைவன்;



4)
மும்மத வெங்கரி முன்னுரி செய்தான்
அம்மதி சூடிய செஞ்சடை அண்ணல்
விம்மிய வானவ ருய்ந்திட நஞ்சுண்
மைம்மிட றன்பதி மாமுது குன்றே.



மும்மத வெம் கரி முன் உரி செய்தான் - மும்மதங்களையுடைய கொடிய யானையின் தோலை முன்னம் உரித்தவன்;
அம்மதி - அம் மதி - அழகிய திங்கள்;
விம்முதல் - தேம்பி அழுதல்; வருந்துதல்;
நஞ்சு உண் மைம் மிடறன் - விடத்தை உண்ட நீலகண்டன்;



5)
பன்னிய வன்மறை பால்மதி பாம்பு
துன்னிய சென்னிய னீறணி தூயன்
உன்னிய வர்க்கரு ளுத்தம னென்றும்
மன்னிய வன்பதி மாமுது குன்றே.



பன்னியவன் மறை - வேதங்களைப் பாடியவன்; (பன்னுதல் - பாடுதல்);
பால்மதி பாம்பு துன்னிய சென்னியன் - பால் போன்ற வெண்ணிறப் பிறைச்சந்திரனும் பாம்பும் நெருங்கித் திகழ்கின்ற முடி உடையவன்; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்);
நீறு அணி தூயன் - திருநீற்றைப் பூசிய பரிசுத்தன்;
உன்னியவர்க்கு அருள் உத்தமன் - தன்னை எண்ணிப் போற்றும் அன்பர்களுக்கு அருள்புரியும் உத்தமன்; (உன்னுதல் - நினைதல்; எண்ணுதல்;);
என்றும் மன்னியவன் - என்றும் நிலைத்து இருப்பவன்;



6)
செஞ்சுட ரார்திரு மேனிய னஞ்சொல்
வஞ்சியை அன்பொடு வாமம கிழ்ந்தான்
அஞ்சல ளித்திடு மஞ்சன கண்டன்
வஞ்சமி லான்பதி மாமுது குன்றே.



செஞ்சுடர் ஆர் திரு மேனியன் - இளஞாயிறுபோல் திகழும் திருமேனி உடையவன்;
அஞ்சொல் வஞ்சியை அன்பொடு வாமம் மகிழ்ந்தான் - அழகிய மொழி பேசும், கொடிபோன்ற உமையம்மையை இடப்பக்கம் விரும்பியவன்;
அஞ்சல் அளித்திடும் மஞ்சு அன கண்டன் - அபயம் அளிக்கின்ற, மேகம் போல் திகழும் நீலகண்டன்;
வஞ்சம் இலான் - ஒளித்தல் இல்லாதவன்; - வரங்களை வாரி வழங்குபவன்;



7)
கோல்வளை யாள்கொழு நன்மணி மார்பின்
மேல்விட நாகமு மேவிடு மீசன்
கால்வெளி மண்ணெரி நீரென ஆனான்
மால்விடை யான்பதி மாமுது குன்றே.



கோல்வளையாள் கொழுநன் - திரண்ட வளையல்களை அணிந்த உமைக்குக் கணவன்; (கோல் - திரட்சி); (கொழுநன் - கணவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - "குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி...");
மணி மார்பின்மேல் விட நாகமும் மேவிடும் ஈசன் - அழகிய மார்பின்மேல் நச்சுப்பாம்புகளும் திகழும் இறைவன்; (மேவுதல் - பொருந்துதல்; விரும்புதல்);
கால் வெளி மண் எரி நீர் என ஆனான் - காற்று, ஆகாயம், நிலம், நெருப்பு, நீர் என்று ஐம்பூதங்களாக ஆனவன்; (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களின் முறை யாப்பு நோக்கி மாறிவந்தது);
மால் விடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;



8)
கார்நிற வாளவு ணன்முடி பத்தை
ஓர்விர லூன்றிநெ ரித்திசை கேட்டுப்
பேர்தரு பிஞ்ஞக னுண்பலி தேரும்
வார்சடை யான்பதி மாமுது குன்றே.



கார் நிற வாள் அவுணன் முடி பத்தை ஓர் விரல் ஊன்றி நெரித்து - கரிய நிறம் உடைய கொடிய அரக்கனுடைய தலைகள் பத்தையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கி;
இசை கேட்டுப் பேர் தரு பிஞ்ஞகன் - பின், அவன் இசைபாடிப் போற்றியதைக் கேட்டு இரங்கி, அவனுக்கு இராவணன் ('அழுதவன்') என்ற பேரைத் தந்து அருள்புரிந்தவன், தலைக்கோலம் உடையவன்;
(சம்பந்தர் தேவாரம் - 1.11.8 - "முன்னிற்பவ ரில்லாமுர ணரக்கன் ... பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த ...." - பேர் - மலைக்கீழகப்பட்டு அழுதமையால் உண்டான இராவணன் என்னும் பெயர்; கீர்த்தியுமாம். )
உண்பலி தேரும் - பிச்சை ஏற்கும்; (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.2 - "... ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்");
வார் சடையான் - நீள்சடையை உடையவன்;





9)
ஆழ்கட லானல ரானறி யாத
கேழ்கிள ருந்தழ லானவ னன்பர்
ஊழ்வினை தீர்த்தரு ளுத்தம னிந்து
வாழ்சடை யான்பதி மாமுது குன்றே.



ஆழ்கடலான் அலரான் அறியாத - ஆழமான கடல்மேல் இருக்கும் திருமாலும் மலர்மேல் இருக்கும் பிரமனும் அறியாத; (அப்பர் தேவாரம் - 6.21.10 - "திரையானுஞ் செந்தா மரைமே லானுந் தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார்" - திரையான் - நீரிடைக் கிடப்பான் ; திருமால்);
கேழ் கிளரும் தழல் ஆனவன் - ஒளி மிக்க சோதி ஆனவன்; (கேழ் - ஒளி; கிளர்தல் - மேலெழுதல்; வளர்தல்; மிகுதல்);
அன்பர் ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் - பக்தர்களின் பழவினைகளைத் தீர்த்து அருள்கின்ற உத்தமன்;
இந்து வாழ் சடையான் - திங்கள் தங்குகின்ற சடையை உடையவன்; (இந்து - சந்திரன்);



10)
புந்தியி லார்பல பொய்யுரை சொல்லி
நிந்தனை செய்தலை நீசரை நீங்கும்
வந்தனை செய்தடை மாணிபி ழைக்க
வந்தப ரன்பதி மாமுது குன்றே.



புந்தி இலார், பல பொய்யுரை சொல்லி நிந்தனை செய்து அலை நீசரை நீங்கும் - அறிவற்றவர்களும் பல பொய்களைச் சொல்லி இகழ்ந்து திரிகின்றவர்களுமான கீழோர்களை விட்டு அகலுங்கள்;
வந்தனை செய்து அடை மாணி பிழைக்க வந்த பரன் - வழிபாடு செய்து அடைக்கலம் புகுந்த மார்க்கண்டேயர் உயிர்பிழைக்கும்படி வந்து அருளிய பரமன்;



11)
கள்ளல ரேவிய காமன தாகம்
வெள்ளிய நீறது வாகவி ழித்தான்
உள்ளிடு பத்தரை உம்பரி லேற்றும்
வள்ளல வன்பதி மாமுது குன்றே.



கள்ளலர் ஏவிய - கள் அலர் ஏவிய - தேன்மலர்களைக் கணையாக எய்த;;
காமனது ஆகம் வெள்ளிய நீறுஅது ஆக விழித்தான் - மன்மதனின் உடலைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;
உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும் வள்ளல் - தன்னை மனத்தில் இருத்தித் தியானிக்கும் அன்பர்களை வானுலகில் ஏற்றுகின்ற வள்ளல்; (உள்ளுதல் - நினைத்தல்; உள் - மனம்; இடுதல் - வைத்தல்; ஒரு துணைவினை;)



12)
மான்றிக ழுங்கர வாமழு வாளா
ஈன்றவ னேஉல கங்களை என்னை
ஏன்றுகொ ளாயென ஏத்திடு வார்க்கு
வான்றரு வான்பதி மாமுது குன்றே.



மான் திகழும் கரவா - மானை ஏந்திய கரத்தை உடையவனே;
மழுவாளா - மாழுவாள் உடையவனே;
ஈன்றவனே உலகங்களை என்னை - எல்லா உலகங்களையும் படைத்தவனே; என் தந்தையே; (குறிப்பு: "ஈன்றவனே உலகங்களை, ஈன்றவனே என்னை" என்று இயைத்துப் பொருள்கொள்க);
"என்னை ஏன்றுகொளாய்" என ஏத்திடுவார்க்கு வான் தருவான் - "என்னை ஏற்றுக்கொள்வாயாக" என்று போற்றும் பக்தர்களுக்கு வானுலகம் தருபவன்;
(குறிப்பு : "என்னை" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க);
பதி மாமுது குன்றே - அப்பெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்.
வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.
குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)



2) உதாரணம்: - லிங்காஷ்டகம் -
"ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஶோபித லிங்கம்
ஜன்மஜ து:க விநாஶக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஶிவலிங்கம்"



3) முதுகுன்றம் (விருத்தாசலம்) - விருத்தகிரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493
முதுகுன்றம் (விருத்தாசலம்) - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=236
----------- --------------

04.56 – மணஞ்சேரி (திருமணஞ்சேரி)


04.56மணஞ்சேரி (திருமணஞ்சேரி)



2014-03-22
மணஞ்சேரி (திருமணஞ்சேரி)
------------------
(கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு")



1)
கொங்கலர் சூடும் குழலியொர் பங்கன் குளிராரும்
திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன்
மங்கையர் மைந்தர் வந்தடி போற்றும் மணஞ்சேரிச்
சங்கரன் அன்பர் தங்களுக் கின்பம் தருவானே.



கொங்கு அலர் சூடும் குழலிர் பங்கன் - வாசமலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (கொங்கு - வாசனை);
குளிர் ஆரும் திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன் - குளிர்ந்த சந்திரனைத் தன் தலைமேல் திகழவைத்த செல்வன்;
மங்கையர் மைந்தர் வந்து அடி போற்றும் மணஞ்சேரிச் சங்கரன் - இளம் பெண்களும் அவர்கள் கணவர்களும் வந்து வழிபாடு செய்கின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற சங்கரன்; (௳இந்தன் - மைந்தன் - இளைஞன்); (சங்கரன் - சுகத்தைச் செய்பவன்);
அன்பர் தங்களுக்கு இன்பம் தருவானே - தன் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவன் / அளிப்பான்;
(அப்பர் தேவாரம் - 4.32.3 - "நங்களுக் கருள தென்று நான்மறை ஓது வார்கள் தங்களுக் கருளும் எங்கள் தத்துவன்" - நமக்கு அருள் கிடைக்கும் என்னும் உறுதியுடன் நான்மறைகளை ஓதும் அந்தணர்களுக்கு அவ்வாறே அருள் புரியும் தத்துவன்);



2)
யாதொரு நேரும் அற்றவன் அங்கை அழலேந்தி
போதொடு வாசப் புகையொடு கண்ணிற் பொழிவோடு
மாதர்க ளோடு மைந்தர்கள் போற்றும் மணஞ்சேரிக்
காதொரு தோடன் கழல்தொழு வார்கள் கவலாரே.



யாதொரு நேரும் அற்றவன் - எவ்வித ஒப்பும் இல்லதவன்; (நேர் = ஒப்பு);
அங்கை அழல் ஏந்தி - கையில் தீயை ஏந்துபவன்;
போதொடு வாசப் புகையொடு கண்ணில் பொழிவோடு மாதர்களோடு மைந்தர்கள் போற்றும் - பெண்களும் ஆண்களும் கண்கள் கசியப் பூக்கள், தூபம் இவற்றால் வழிபாடு செய்கின்ற; (போது - பூ); (வாசப் புகை - தூபம்);
மணஞ்சேரிக் காது ஒரு தோடன் கழல் தொழுவார்கள் கவலாரே - திருமணஞ்சேரியில் உறைகின்றவனும் ஒரு காதில் தோட்டினை அணிந்தவனுமான சிவபெருமானது திருவடியைத் தொழும் பக்தர்களது கவலைகள் தீரும்; (கவலார் - வருத்தம் அடையமாட்டார்);



3)
தேரினில் ஏறித் திரிபுரம் செற்ற சிலைவில்லான்
ஆரியன் அன்பர் கோரிய வெல்லாம் அருளின்ப
வாரியன் நீல மணிதிகழ் கண்டன் மணஞ்சேரி
நாரியொர் பாலன் பேர்சொலக் காலன் நணுகானே.



சிலைவில்லான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (சிலை - மலை);
ஆரியன் - பெரியோன்; ஆசிரியன்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");
அன்பர் கோரிய எல்லாம் அருள் இன்ப வாரியன் - பக்தர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அருள்கின்ற இன்பக்கடல் ஆனவன்; (கோருதல் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்); (வாரி - கடல்); (திருவாசகம் - 8.8.2 - "....ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்" - 'ஆசை' என்பது, இங்கு, கருணையின்மேல் நின்றது. வாரியன் - கடலாய் உள்ளவன்.);
நாரி ஒர் பாலன் - பெண்ணை ஒரு பக்கத்தில் உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.119.6 - "பாதியோர் மாதர் மாலுமோர் பாகர் பங்கயத் தயனுமோர் பாலர்"); (அப்பர் தேவாரம் - 5.98.5 - "கூறே றும்உமை பாகமோர் பாலராய்"); (அப்பர் தேவாரம் - 4.88.1 - "மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய பாலனை");
நணுகான் - நெருங்கமாட்டான்;



4)
பையர வோடு பான்மதி வைத்துப் பகைதீர்த்துத்
தையலொர் பாகம் தாங்கிய கோனைச் சடையானை
மையணி கண்ணர் மாலைகள் பாடு மணஞ்சேரிச்
செய்யனை நாடும் சிந்தையி னார்க்குத் தெளிவாமே.



பையரவு - படத்தை உடைய நாகப்பாம்பு;
பான்மதி - பால் மதி - வெண் திங்கள்;
தையல் ஒர் பாகம் தாங்கிய கோனை - உமையை ஒரு பாகமாக உடைய தலைவனை;
மை அணி கண்ணர் - மை தீட்டப்பெற்ற கண்களையுடைய பெண்கள்;
மாலைகள் பாடு - பாமாலைகள் பாடித் துதிக்கின்ற; (பாடுதல் - துதித்தல்); (மாலை - சொல்மாலை; பாமாலை);
செய்யன் - செம்மேனியன்;



5)
இண்டைகள் கட்டி இணையடி போற்றும் இணையில்மார்க்
கண்டரைக் காத்துக் காலனைச் செற்ற கரிகாடன்
வண்டமிழ் வாயர் மகிழ்வொடு போற்றும் மணஞ்சேரிக்
கொண்டலங் கண்டன் குரைகழல் போற்றக் குறைபோமே.



இண்டை - ஒருவித மாலை;
இணை இல் மார்க்கண்டர் - ஒப்பற்ற மார்க்கண்டேயர்;
காலனைச் செற்ற - இயமனை உதைத்து அழித்த;
கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;
வண்டமிழ் வாயர் - வண் தமிழ் வாயர் - தேவாரம் திருவாசகம் பாடும் வாயை உடையவர்கள்;
கொண்டலங் கண்டன் - கொண்டல் அம் கண்டன் - மேகம் போல் அழகிய கண்டத்தை உடையவன்;
குரைகழல் போற்றக் குறை போமே - அப்பெருமானுடைய (ஒலிக்கின்ற கழலை அணிந்த) திருவடியை வழிபட்டால் குறைகள் தீரும்;



6)
சிரமலி மாலை திகழ்முடி மீது திரையாறு
விரவிடு கின்ற வேணியி னானை விடையானை
மரமலி சோலை வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி
வரதனை வாழ்த்த மங்கலம் மல்கும் மகிழ்வாமே.



சிரம் மலி மாலை திகழ் முடிமீது திரைஆறு விரவிடுகின்ற வேணியினானை - தலைமாலை அணிந்த திருமுடியின்மேல் அலைகள் இருக்கும் கங்கை பொருந்துகின்ற சடையானை;
விடையானை - இடப வாகனனை;
மரம் மலி சோலை வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி வரதனை - மரங்கள் நிறைந்த சோலையும் வயலும் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற வரதனை; (வரதன் - வரம் அருள்பவன்)
வாழ்த்த மங்கலம் மல்கும் மகிழ்வு ஆமே - போற்றி வழிபட்டால், திரு மிகும், இன்புற்று வாழலாம்;



7)
தளைகளி லாத தன்மையன் எந்தை தனிநாதன்
வளையொரு கையன் வல்விடம் உண்ட மணிகண்டன்
வளமலி கின்ற வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி
இளமதி சூடி இணையடி ஏத்த இடர்போமே.



தளைகள் இலாத தன்மையன் - மும்மலக்கட்டு அற்றவன்; (சுதந்திரன்);
எந்தை தனி நாதன் - எம் தந்தை, ஒப்பற்ற தலைவன்; (தனி - ஒப்பில்லாத);
வளைரு கையன் - ஒரு கையில் வளையல் அணிந்தவன் - உமைபங்கன்;
வல்விடம் உண்ட மணிகண்டன் - கொடிய நஞ்சை உண்ட நீலகண்டன்;
வளம் மலிகின்ற வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி - வளம் மிக்க வயல் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற;
இளமதி சூடி இணையடி ஏத்த இடர் போமே - இளம்பிறையை அணிந்த பெருமானது இரு திருவடிகளைத் துதித்தால் துன்பம் நீங்கும்;



8)
அருவரை பேர்த்த அவுணன தாற்றல் அழிவிக்கத்
திருவிரல் ஒன்றைச் சிறிதள விட்ட சிவனெம்மான்
வருமடி யார்கள் மனமகிழ் வெய்து மணஞ்சேரி
எருதமர் ஈசன் இணையடி ஏத்த இடர்போமே.



அருவரை பேர்த்த அவுணனது ஆற்றல் அழிவிக்க - கயிலைமலையை பெயர்த்த அரக்கனின் (இராவணனின்) வலிமையை அழிக்க; (சம்பந்தர் தேவாரம் - 1.97.8 - "...அரக்கன் திண்டோள் அழிவித் தானக் காலத்திற்...");
திருவிரல் ஒன்றைச் சிறிது அவு இட்ட சிவன் எம்மான் - திருப்பாத விரல் ஒன்றைச் சிறிதளவே ஊன்றிய சிவன், எம் தலைவன்;
வரும் அடியார்கள் மனமகிழ்வு எய்து மணஞ்சேரி - வந்து வழிபடும் பக்தர்கள் மனத்தில் இன்பம் அடைகின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;
எருது அமர் ஈசன் இணையடி ஏத்த இடர் போமே - இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஈசனது இரு திருவடிகளைப் போற்றினால் துன்பம் தீரும்;



9)
வேணுவை ஏந்தி மேய்த்தவன் வேதன் மிகநேடி
நாணுற ஓங்கு நம்பனை நட்டம் நவில்வானை
வாணுதல் மாதர் மலர்கொடு போற்று மணஞ்சேரித்
தாணுவை நெஞ்சில் தரித்தவர்க் கில்லை தடுமாற்றே.



வேணுவை ஏந்தி மேய்த்தவன் - வேணுகோபாலன் - திருமால்; (வேணு - புல்லாங்குழல்);
வேதன் - பிரமன்;
மிக நேடி நாணுற ஓங்கு நம்பனை - அவ்விருவரும் அடிமுடி தேடி நாணும்படி எல்லையின்றி ஓங்கிய சிவனை; (நேடுதல் - தேடுதல்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);
நட்டம் நவில்வானை - திருநடம் செய்பவனை;
வாணுதல் மாதர் - வாள் நுதல் மாதர் - ஒளிபொருந்திய நெற்றியை உடைய பெண்கள்;
தாணு - ஸ்தாணு - சிவன் திருநாமங்களுள் ஒன்று;
தடுமாற்று - தடுமாற்றம் - மனக்கலக்கம்;



10)
வீண்மொழி பேசும் மிண்டர்கள் என்றும் விரவாதான்
நாண்மலர்ப் பாதன் நங்கையொர் பங்கன் நலம்நாடி
வாண்முக மாதர் வந்தடி போற்று மணஞ்சேரி
நீண்மதி சூடி நினைபவர் நெஞ்சில் நிறைவானே.



மிண்டர் - கல்நெஞ்சர்;
விரவாதான் - விரவாதவன்; சேராதவன்; (விரவுதல் - அடைதல்; கலத்தல்); (அப்பர் தேவாரம் - 6.46.8 - "மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை..."); (அப்பர் தேவாரம் - 6.87.7 - "வெய்யவன்காண் ... மெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்..." - பொய்யர் மனத்துட் புகாதவன்);
நாண்மலர்ப் பாதன் - புதிதகப் புத்த மலர் போன்ற பாதத்தை உடையவன்;
நங்கைர் பங்கன் - உமைபங்கன்;
வாண்முக மாதர் - வாள் முக மாதர் - ஒளி பொருந்திய முகத்தை உடைய பெண்கள்;
நீண்மதி சூடி - நீள்மதி சூடி - திங்களை அணிந்தவன்;



11)
வெண்டிரை ஆரும் வேலையு மிழ்ந்த விடமுண்ட
கண்டனை நெற்றிக் கண்ணனை வீரக் கழலானை
வண்டறை கின்ற வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி
அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே.



வெண் திரை ஆரும் வேலை உமிழ்ந்த விடம் உண்ட கண்டனை - வெண்ணிற அலைகள் பொருந்திய கடலான பாற்கடல் உமிழ்ந்த ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனை;
வீரக் கழலானை - வீரக்கழலை அணிந்த திருப்பாதனை;
வண்டு அறைகின்ற வண் பொழில் சூழ்ந்த மணஞ்சேரி - வண்டுகள் ஒலிக்கின்ற வளம் மிக்க சோலைகளால் சூழப்பெற்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;
அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே - சிவபெருமானைச் சரண்புக்க பக்தர்களைத் துன்பங்கள் நெருங்கா; (அண்டன் - சிவன்); (அண்டுதல் - சரண்புகுதல்);



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்;
தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்;



2) சம்பந்தர் தேவாரம் - 1.98.1 -
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ன்றுடையானை மையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே.



3) திருமணஞ்சேரி - (கீழைத் திருமணஞ்சேரி) - தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=273
தேவாரம் ஆர்க் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=222
-------------- --------------