Tuesday, October 23, 2018

04.57 – முதுகுன்றம் (விருத்தாசலம்)


04.57 முதுகுன்றம் (விருத்தாசலம்)



2014-03-29
முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)
----------------------------------
(12 பாடல்கள்)
(சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்).
(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")



1)
சந்திர னேறிய தாழ்சடை அண்ணல்
வந்தனை செய்தடை வானவ ருக்கா
முந்தடை யார்புர மூன்றையு மெய்த
மைந்தன வன்பதி மாமுது குன்றே.



பதம் பிரித்து:
சந்திரன் ஏறிய தாழ்சடை அண்ணல்;
வந்தனை செய்து அடை வானவருக்கா,
முந்து அடையார் புரம் மூன்றையும் எய்த
மைந்தன் அவன் பதி மா முதுகுன்றே.


வானவருக்கா - வானவர்களுக்காக; (கடைக்குறை விகாரம்);
முந்து - முற்காலத்தில்; அடையார் - பகைவர்; மைந்தன் - வீரன்;
பதி - தலம்; மா - அழகிய; முதுகுன்று - திருமுதுகுன்றம் - விருத்தாசலம்;



2)
தேன்மல ரால்தொழு சீலர கத்தன்
கூன்மதி கூவிள மாறணி கூத்தன்
ஆன்மிசை யான்அர வார்த்தவ னங்கை
மான்மறி யன்பதி மாமுது குன்றே.



சீலர் அகத்தன் - சீலர்கள் உள்ளத்தில் உறைபவன்;
கூன் மதி - வளைந்த பிறைச்சந்திரன்;
கூவிளம் - வில்வம்;
ஆறு - கங்கை;
ஆன் மிசையான் - இடபத்தின்மேல் ஏறுபவன்; (ஆன் - பசு; இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 1.77.5 - "...அண்ணலானூர்தி யேறுமெம்மடிகள்..."); (சம்பந்தர் தேவாரம் - 2.80.5 - "வெள்ளையெருத்தின் மிசையார்");
அரவு ஆர்த்தவன் - பாம்பைக் கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்);
அங்கை மான்மறியன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;



3)
ஊன்படை வேடன தோர்கணு கந்தான்
மான்பர சார்கர னூலணி மார்பன்
கூன்பிறை கோளர வம்புனை கூத்தன்
வான்பணி கோன்பதி மாமுது குன்றே.



பதம் பிரித்து:
ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான்;
மான் பரசு ஆர் கரன்; நூல் அணி மார்பன்;
கூன்பிறை, கோள் அரவம் புனை கூத்தன்;
வான் பணி கோன் பதி மா முதுகுன்றே.


ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான் - கண்ணப்பருக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது;
மான் பரசு ஆர் கரன் - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்; ("மான் - பெரியோன்" என்று கொண்டும் பொருள் கொள்ளல் ஆம்); பரசு - மழு); (ஆர்தல் - பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்"); (சுந்தரர் தேவாரம் - 7.25.8 - "பரசா ருங்கரவா பதி னெண்கண முஞ்சூழ")
நூல் - முப்புரி நூல் - பூணூல்;
கூன் பிறை, கோள் அரவம் புனை கூத்தன் - வளைந்த பிறைச்சந்திரனையும் கொடிய பாம்பையும் அணிந்த கூத்தன்;
வான் பணி கோன் - தேவர்கள் போற்றும் தலைவன்;



4)
மும்மத வெங்கரி முன்னுரி செய்தான்
அம்மதி சூடிய செஞ்சடை அண்ணல்
விம்மிய வானவ ருய்ந்திட நஞ்சுண்
மைம்மிட றன்பதி மாமுது குன்றே.



மும்மத வெம் கரி முன் உரி செய்தான் - மும்மதங்களையுடைய கொடிய யானையின் தோலை முன்னம் உரித்தவன்;
அம்மதி - அம் மதி - அழகிய திங்கள்;
விம்முதல் - தேம்பி அழுதல்; வருந்துதல்;
நஞ்சு உண் மைம் மிடறன் - விடத்தை உண்ட நீலகண்டன்;



5)
பன்னிய வன்மறை பால்மதி பாம்பு
துன்னிய சென்னிய னீறணி தூயன்
உன்னிய வர்க்கரு ளுத்தம னென்றும்
மன்னிய வன்பதி மாமுது குன்றே.



பன்னியவன் மறை - வேதங்களைப் பாடியவன்; (பன்னுதல் - பாடுதல்);
பால்மதி பாம்பு துன்னிய சென்னியன் - பால் போன்ற வெண்ணிறப் பிறைச்சந்திரனும் பாம்பும் நெருங்கித் திகழ்கின்ற முடி உடையவன்; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்);
நீறு அணி தூயன் - திருநீற்றைப் பூசிய பரிசுத்தன்;
உன்னியவர்க்கு அருள் உத்தமன் - தன்னை எண்ணிப் போற்றும் அன்பர்களுக்கு அருள்புரியும் உத்தமன்; (உன்னுதல் - நினைதல்; எண்ணுதல்;);
என்றும் மன்னியவன் - என்றும் நிலைத்து இருப்பவன்;



6)
செஞ்சுட ரார்திரு மேனிய னஞ்சொல்
வஞ்சியை அன்பொடு வாமம கிழ்ந்தான்
அஞ்சல ளித்திடு மஞ்சன கண்டன்
வஞ்சமி லான்பதி மாமுது குன்றே.



செஞ்சுடர் ஆர் திரு மேனியன் - இளஞாயிறுபோல் திகழும் திருமேனி உடையவன்;
அஞ்சொல் வஞ்சியை அன்பொடு வாமம் மகிழ்ந்தான் - அழகிய மொழி பேசும், கொடிபோன்ற உமையம்மையை இடப்பக்கம் விரும்பியவன்;
அஞ்சல் அளித்திடும் மஞ்சு அன கண்டன் - அபயம் அளிக்கின்ற, மேகம் போல் திகழும் நீலகண்டன்;
வஞ்சம் இலான் - ஒளித்தல் இல்லாதவன்; - வரங்களை வாரி வழங்குபவன்;



7)
கோல்வளை யாள்கொழு நன்மணி மார்பின்
மேல்விட நாகமு மேவிடு மீசன்
கால்வெளி மண்ணெரி நீரென ஆனான்
மால்விடை யான்பதி மாமுது குன்றே.



கோல்வளையாள் கொழுநன் - திரண்ட வளையல்களை அணிந்த உமைக்குக் கணவன்; (கோல் - திரட்சி); (கொழுநன் - கணவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - "குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி...");
மணி மார்பின்மேல் விட நாகமும் மேவிடும் ஈசன் - அழகிய மார்பின்மேல் நச்சுப்பாம்புகளும் திகழும் இறைவன்; (மேவுதல் - பொருந்துதல்; விரும்புதல்);
கால் வெளி மண் எரி நீர் என ஆனான் - காற்று, ஆகாயம், நிலம், நெருப்பு, நீர் என்று ஐம்பூதங்களாக ஆனவன்; (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களின் முறை யாப்பு நோக்கி மாறிவந்தது);
மால் விடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;



8)
கார்நிற வாளவு ணன்முடி பத்தை
ஓர்விர லூன்றிநெ ரித்திசை கேட்டுப்
பேர்தரு பிஞ்ஞக னுண்பலி தேரும்
வார்சடை யான்பதி மாமுது குன்றே.



கார் நிற வாள் அவுணன் முடி பத்தை ஓர் விரல் ஊன்றி நெரித்து - கரிய நிறம் உடைய கொடிய அரக்கனுடைய தலைகள் பத்தையும் ஒரு விரலை ஊன்றி நசுக்கி;
இசை கேட்டுப் பேர் தரு பிஞ்ஞகன் - பின், அவன் இசைபாடிப் போற்றியதைக் கேட்டு இரங்கி, அவனுக்கு இராவணன் ('அழுதவன்') என்ற பேரைத் தந்து அருள்புரிந்தவன், தலைக்கோலம் உடையவன்;
(சம்பந்தர் தேவாரம் - 1.11.8 - "முன்னிற்பவ ரில்லாமுர ணரக்கன் ... பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த ...." - பேர் - மலைக்கீழகப்பட்டு அழுதமையால் உண்டான இராவணன் என்னும் பெயர்; கீர்த்தியுமாம். )
உண்பலி தேரும் - பிச்சை ஏற்கும்; (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.2 - "... ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்");
வார் சடையான் - நீள்சடையை உடையவன்;





9)
ஆழ்கட லானல ரானறி யாத
கேழ்கிள ருந்தழ லானவ னன்பர்
ஊழ்வினை தீர்த்தரு ளுத்தம னிந்து
வாழ்சடை யான்பதி மாமுது குன்றே.



ஆழ்கடலான் அலரான் அறியாத - ஆழமான கடல்மேல் இருக்கும் திருமாலும் மலர்மேல் இருக்கும் பிரமனும் அறியாத; (அப்பர் தேவாரம் - 6.21.10 - "திரையானுஞ் செந்தா மரைமே லானுந் தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார்" - திரையான் - நீரிடைக் கிடப்பான் ; திருமால்);
கேழ் கிளரும் தழல் ஆனவன் - ஒளி மிக்க சோதி ஆனவன்; (கேழ் - ஒளி; கிளர்தல் - மேலெழுதல்; வளர்தல்; மிகுதல்);
அன்பர் ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் - பக்தர்களின் பழவினைகளைத் தீர்த்து அருள்கின்ற உத்தமன்;
இந்து வாழ் சடையான் - திங்கள் தங்குகின்ற சடையை உடையவன்; (இந்து - சந்திரன்);



10)
புந்தியி லார்பல பொய்யுரை சொல்லி
நிந்தனை செய்தலை நீசரை நீங்கும்
வந்தனை செய்தடை மாணிபி ழைக்க
வந்தப ரன்பதி மாமுது குன்றே.



புந்தி இலார், பல பொய்யுரை சொல்லி நிந்தனை செய்து அலை நீசரை நீங்கும் - அறிவற்றவர்களும் பல பொய்களைச் சொல்லி இகழ்ந்து திரிகின்றவர்களுமான கீழோர்களை விட்டு அகலுங்கள்;
வந்தனை செய்து அடை மாணி பிழைக்க வந்த பரன் - வழிபாடு செய்து அடைக்கலம் புகுந்த மார்க்கண்டேயர் உயிர்பிழைக்கும்படி வந்து அருளிய பரமன்;



11)
கள்ளல ரேவிய காமன தாகம்
வெள்ளிய நீறது வாகவி ழித்தான்
உள்ளிடு பத்தரை உம்பரி லேற்றும்
வள்ளல வன்பதி மாமுது குன்றே.



கள்ளலர் ஏவிய - கள் அலர் ஏவிய - தேன்மலர்களைக் கணையாக எய்த;;
காமனது ஆகம் வெள்ளிய நீறுஅது ஆக விழித்தான் - மன்மதனின் உடலைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;
உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும் வள்ளல் - தன்னை மனத்தில் இருத்தித் தியானிக்கும் அன்பர்களை வானுலகில் ஏற்றுகின்ற வள்ளல்; (உள்ளுதல் - நினைத்தல்; உள் - மனம்; இடுதல் - வைத்தல்; ஒரு துணைவினை;)



12)
மான்றிக ழுங்கர வாமழு வாளா
ஈன்றவ னேஉல கங்களை என்னை
ஏன்றுகொ ளாயென ஏத்திடு வார்க்கு
வான்றரு வான்பதி மாமுது குன்றே.



மான் திகழும் கரவா - மானை ஏந்திய கரத்தை உடையவனே;
மழுவாளா - மாழுவாள் உடையவனே;
ஈன்றவனே உலகங்களை என்னை - எல்லா உலகங்களையும் படைத்தவனே; என் தந்தையே; (குறிப்பு: "ஈன்றவனே உலகங்களை, ஈன்றவனே என்னை" என்று இயைத்துப் பொருள்கொள்க);
"என்னை ஏன்றுகொளாய்" என ஏத்திடுவார்க்கு வான் தருவான் - "என்னை ஏற்றுக்கொள்வாயாக" என்று போற்றும் பக்தர்களுக்கு வானுலகம் தருபவன்;
(குறிப்பு : "என்னை" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க);
பதி மாமுது குன்றே - அப்பெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" என்ற சந்தம்.
வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.
குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.
லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).
அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.
வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)



2) உதாரணம்: - லிங்காஷ்டகம் -
"ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஶோபித லிங்கம்
ஜன்மஜ து:க விநாஶக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாஶிவலிங்கம்"



3) முதுகுன்றம் (விருத்தாசலம்) - விருத்தகிரீஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=493
முதுகுன்றம் (விருத்தாசலம்) - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=236
----------- --------------

No comments:

Post a Comment