Sunday, July 17, 2016

03.02-91 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



91)
பிறவிப் பயன்உணராப் பேதை மனமே;
குறையா வினைக்குன்றும் குன்றும், இறையேனும்
நீவான்மி யூரை நினைத்தால், இருமைக்கும்
ஈவான்; இலையே இடர்.



பேதை மனமே - அறிவற்ற நெஞ்சமே;
இறையேனும் - சிறிதளவேனும்; (இறை - சிறிதளவு);
வினைக்குன்று - மலை அளவு உள்ள வினைகள்;
குன்றுதல் - அழிவடைதல்;
இருமைக்கும் - இம்மைக்கும் மறுமைக்கும்;
இலையே இடர் - இடர் இல்லையே; (இடர் - துன்பம்);
குறிப்பு : "இறையேனும் நீ வான்மியூரை நினைத்தால்" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்; ("இறையேனும் நீ வான்மியூரை நினைத்தால், குறையா வினைக்குன்றும் குன்றும்" & "இறையேனும் நீ வான்மியூரை நினைத்தால், இருமைக்கும் ஈவான்");



92)
இடர்நீங்க, யான்ஒன் றியம்புவேன் நெஞ்சே;
படர்சடை மேல்நதி பாயும் கடவுளவன்
மேவும் திருவான்மி யூர்சென்று வேண்டுவினை
யாவும் ஒழியும் அகன்று.



(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! இடர் நீங்க யான் ஒன்று இயம்புவேன்;
படர்சடை மேல் நதி பாயும் கடவுள்அவன் மேவும் திருவான்மியூர் சென்று வேண்டு;
வினை யாவும் அகன்று ஒழியும்.)


படர்சடை - (வினைத்தொகை) - படர்ந்த சடை;
அகலுதல் - நீங்குதல்; பிரிதல்;



93)
அகலா வினைகள் அறநெஞ்சே, வெற்பன்
மகளை இடப்பால் மகிழும் பகவான்
திருவான்மி யூர்மேய செல்வனைப் போற்றாய்;
ஒருவாதை இல்லை உனக்கு.



அகலா - நீங்காத; (அகலுதல் - நீங்குதல்; பிரிதல்);
அற - அழிவதற்கு; (அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்);


அகலா வினைகள் அற, நெஞ்சே - மனமே, நீங்காத வினைகள் எல்லாம் அழிவதற்கு;
வெற்பன் மகளை இடப்பால் மகிழும் பகவான் - மலையான் மகளான பார்வதியை இடது பக்கத்தில் ஒரு பங்காக விரும்பும் கடவுள்; (அப்பர் தேவாரம் - 5.55.1 - "வீறு தானுடை வெற்பன் மடந்தையோர் கூற னாகிலும்...");
திருவான்மியூர் மேய செல்வனைப் போற்றாய் - திருவான்மியூரில் உறையும் செல்வனைப் போற்றுவாயாக;
ஒரு வாதை இல்லை உனக்கு. - உனக்கு ஒரு துன்பமும் இல்லை;



94)
உனக்குனக்கென் றென்றும் ஒளித்துவைத்த நெஞ்சே;
உனக்கொன் றுரைப்பேன்; ஒருநாள் உனக்கும்
வருவான் நமன்அன்று வந்துதவு வார்ஆர்?
திருவான்மி யூர்இன்றே சேர்.



பதம் பிரித்து:
உனக்கு உனக்கு என்று என்றும் ஒளித்துவைத்த நெஞ்சே;
உனக்கு ஒன்று உரைப்பேன்; ஒரு நாள் உனக்கும்
வருவான் நமன்; அன்று வந்து உதவுவார் ஆர்?
திருவான்மியூர் இன்றே சேர்.


நமன் - எமன்;



95)
சேர்த்துவைத்த செல்வமுயிர் சென்ற பிறகிங்கே
ஆர்க்கென்று, நெஞ்சே, அறிவாயோ? ஆர்க்கும்
திரைசூழ்ந்த வான்மியூர்ச் செஞ்சடை அப்பன்
குரையார் கழல்பற்றிக் கொள்.



(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! சேர்த்து வைத்த செல்வம், உயிர் சென்ற பிறகு, இங்கே ஆர்க்கு என்று அறிவாயோ? ஆர்க்கும் திரை சூழ்ந்த வான்மியூர்ச் செஞ்சடை அப்பன் குரை ஆர் கழல் பற்றிக்கொள்.)


ஆர்க்கு - யாருக்கு?
ஆர்க்கும் திரை சூழ்ந்த - ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த; (ஆர்த்தல் - ஒலித்தல்); (திரை - அலை; கடல்);
குரை ஆர் கழல் - ஒலி பொருந்திய கழல் அணிந்த திருவடியை; (குரை - ஒலி);



96)
கொள்ளைகொண்டென் நெஞ்சிற் குடிகொண்டான், சென்னிமேல்
வெள்ளம் தரித்த விமலனவன் உள்ள
திருவான்மி யூர்சென்று சேவடி ஏத்தி
இருப்பதே இன்பம் எனக்கு.



(உரைநடை அமைப்பில்:
சென்னி மேல் வெள்ளம் தரித்த விமலன், கொள்ளைகொண்டு என் நெஞ்சில் குடிகொண்டான்; அவன் உள்ள திருவான்மியூர் சென்று சேவடி ஏத்தி இருப்பதே இன்பம் எனக்கு. )


சென்னி மேல் வெள்ளம் தரித்த விமலன் - கங்காதரனான தூயவன்; (வெள்ளம் - நீர் - கங்கை); (விமலன் - மலமற்றவன்);
சேவடி - சிவந்த திருவடி;
ஏத்துதல் - துதித்தல்;
(அபப்ர் தேவாரம் - 5.42.5 - "துன்பம் இல்லை துயரில்லையாம் இனி ...... இன்பன் சேவடி ஏத்தியிருப்பதே.");



97)
எனக்கேன் அவன்மேல் எழுந்தது காதல்
எனஅறியேன்; வான்மியூர் ஈசன் மனத்தில்
நிறைந்திருக்கத், துன்பங்கள் நில்லா தோடி
மறைந்திடும்; வாழ்வேன் மகிழ்ந்து.



(உரைநடை அமைப்பில்:
ஏன் எனக்கு அவன் மேல் காதல் எழுந்தது என அறியேன்;
மனத்தில் வான்மியூர் ஈசன் நிறைந்திருக்கத்,
துன்பங்கள் நில்லாது ஓடி மறைந்திடும்; மகிழ்ந்து வாழ்வேன்.)



98)
மகிழ்ந்திருக்க வேண்டில் மனமேநீ வானோர்
புகழ்ந்திடநஞ் சுண்ட பொறையன் திகழ்மதி
சேர்சடையன் மேவு திருவான்மி யூர்சென்று
பார்வதி கோனைப் பணி.



பதம் பிரித்து:
மகிழ்ந்து இருக்க வேண்டில், மனமே! நீ,
வானோர் புகழ்ந்திட நஞ்சு உண்ட பொறையன்,
திகழ் மதி சேர் சடையன் மேவு திருவான்மியூர் சென்று
பார்வதி கோனைப் பணி.


முன்னம் - முன்பு;
வானோர் புகழ்ந்திட நஞ்சு உண்ட பொறையன் - தேவர்கள் துதிக்க, ஆலகால விடத்தை உண்ட அருளாளன்; (பொறை - அருள்); (அப்பர் தேவாரம் - 6.56.9 - "பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி");
திகழ் மதி சேர் சடையன் - சடையில் பிரகாசிக்கும் சந்திரனை அணிந்தவன்;
மேவுதல் - உறைதல்;
பார்வதி கோன் - உமாபதி;



99)
பணியூரும் வேணியன் பன்றியின் கொம்பை
அணியா அணிந்த அரன்மேல் தணியா
விருப்பினால், வான்மியூர் மேயானைப் போற்றி
இருப்பதே வேலை இனி.



பணி ஊரும் வேணியன் - நாகம் ஊர்கின்ற சடையை உடையவன்; (பணி - நாகப்பாம்பு ); (வேணி - சடை);
பன்றியின் கொம்பை அணியா அணிந்த - பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த; (அணியா - அணியாக; அணி - ஆபரணம்; அழகு);
அரன்மேல் தணியா விருப்பினால், - ஹரன் மீது கொண்ட ஆராக் காதலால்;
வான்மியூர் மேயானைப் போற்றி இருப்பதே வேலை இனி - திருவான்மியூரில் உறையும் பெருமானை இனி என்றும் போற்றுவேன்; (இனி - இப்பொழுது; இனிமேல்);



100)
இனியனே! என்றும் இருக்கும் இறையே!
புனிதனே! தேவர்கள் போற்றும் தனியனே!
மாசில் மணியே மருந்தீசா என்றவன்சீர்
பேசிலினி இல்லை பிறப்பு.



இனியன் - இனிமையானவன்;
புனிதன் - தூய்மையானவன்
தனியன் - தனியாக இருப்பவன் - ஏகன்; ஒப்பற்றவன்; ஒருவன்; (தனி - ஒப்பின்மை);
மாசு இல் மணியே - குற்றமற்ற மணி போன்றவனே;
மருந்தீசா என்று அவன் சீர் பேசில் இனி இல்லை பிறப்பு - "மருந்தீசனே" என்று சிவபெருமான் புகழைப் போற்றிப் பேசினால், பிறவித்தொடர் நீங்கும்; (சீர் - புகழ்);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்





03.02-81 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



81)
பிறவிகள் எத்தனை பெற்றால்தான் என்ன,
உறவென எந்நாளும் உன்னைப் பெறவேண்டி
வான்மியூர் சென்று வழுத்துகிற எண்ணத்தை
நான்மறவேன் என்றருளி னால்.



(உரைநடை அமைப்பில்:
எந்நாளும் உன்னை உறவு எனப் பெற வேண்டி,
வான்மியூர் சென்று வழுத்துகிற எண்ணத்தை
நான் மறவேன் என்று அருளினால்,
பிறவிகள் எத்தனை பெற்றால்தான் என்ன?)


வழுத்துதல் - வாழ்த்துதல்; துதித்தல்;



82)
அருளினாய் நால்வேதம், அன்புருவாம் உண்மைப்
பொருளினாய்; தாளிணையைப் போற்றில் இருளினைப்
போக்கும் மருந்தீசா; போர்விடையாய்; நீயன்றோ
காக்கும் கருணைக் கடல்.



(உரைநடை அமைப்பில்:
நால்வேதம் அருளினாய்; அன்பு உரு ஆம் உண்மைப் பொருளினாய்! போர்விடையாய்! தாளிணையைப் போற்றில் இருளினைப் போக்கும் மருந்தீசா! நீ அன்றோ காக்கும் கருணைக் கடல்.)


அருளினாய் - அருள்செய்தவனே;
அன்பு உரு ஆம் - அன்பே வடிவம் ஆன;
பொருளினாய் - பொருள் ஆனவனே;
தாளிணையைப் போற்றில் இருளினைப் போக்கும் மருந்தீசா - இரு திருவடிகளை வழிபட்டால், அவ்வன்பர்களின் அறியாமையை நீக்கி அருளும் மருந்தீசனே;
போர்விடையாய் - போர் செய்யவல்ல இடபத்தை வாகனமாக உடையவனே;


83)
கடலிற் புயலிற் கலம்போல, இந்த
உடலிலுள ஐவர் உகைக்க இடருற்று
வாடுகின்றேன்; பாராய் மருந்தீசா நின்புகழைப்
பாடுமடி யேனைப் பரிந்து.



உகைத்தல் - செலுத்துதல் - To drive, as a carriage; to ride, as a horse; to row, as a boat; to discharge, as an arrow;


கடலிற் புயலிற் கலம் போல - கடலில் புயலில் அலைக்கழிப்படும் படகு போல,
இந்த உடலில் உ ஐவர் உகைக்க, இடர் உற்று வாடுகின்றேன் - இவ்வுடலில் உள்ள ஐம்புலன்கள் என்னைச் செலுத்த, வருந்துகின்றேன்;
பாராய் மருந்தீசா, நின் புகழைப் பாடும் அடியேனைப் பரிந்து - .மருந்தீசனே, உன் புகழைப் பாடும் அடியேனை அருட்கண்ணால் நோக்கி அருள்வாயாக;



84)
பரிந்துவந்தாய் வந்திக்குப், பாண்டிய நாட்டில்;
தெரிந்துகொண்டேன், பேரின்பத் தேனைச் சொரிந்தருளும்
வள்ளல்நீ என்று; மருந்தீசா, நான்விடா
துள்ளத்து வைத்தேன் உனை.



(உரைநடை:
பாண்டிய நாட்டில் வந்திக்குப் பரிந்து வந்தாய்;
பேரின்பத் தேனைச் சொரிந்து அருளும் வள்ளல் நீ என்று தெரிந்துகொண்டேன்;
மருந்தீசா! நான் விடாது உனை உள்ளத்து வைத்தேன்.)


வந்தி - திருவிளையாடற் புராணத்தில் குறிப்பிடப்பெறும் ஓர் அன்பர்; (பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலைக் காண்க);
விடுதல் - நீங்குதல்; போக விடுதல்; பிரிதல்;
உள்ளத்து - உள்ளத்தில்;



85)
"உனையே ஒழிவின்றி உன்னும் மனம்தா"
எனவான்மி யூர்மே விறையைத் தினமும்
புகழ்பாடி நிற்பார்க்குப் பொல்லா வினையை
அகற்றி விடும்அவன் அன்பு.



பதம் பிரித்து:
"உனையே ஒழிவு இன்றி உன்னும் மனம் தா"
என வான்மியூர் மேவு இறையைத் தினமும்
புகழ்பாடி நிற்பார்தம் பொல்லா வினையை
அகற்றிவிடும் அவன் அன்பு.


உன்னுதல் - நினைத்தல்;
ஒழிவு இன்றி - இடைவிடாமல்;
வான்மியூர் மேவு இறையை - திருவான்மியூரில் உறையும் இறைவனை;
தினமும் புகழ்பாடி நிற்பார்தம் பொல்லா வினையை - புகழைப் பாடும் அடியவர்களுடைய பழைய தீவினைகளை;
அன்பு - பக்தி; கருணை;



86)
அன்பனை, மாலும் அயனும் அறியாத
என்பொனை, வெண்ணிற ஏற்றனைக் கன்மனத்தேன்
சிந்தையில் நின்ற திருவான்மி யூரனை,
வந்தனை செய்யுமென் வாய்.



கன்மனத்தேன் - கல் மனத்தேன்;


அன்பனை - அன்பின் வடிவம் ஆனவனை; அடியவர்மேல் அன்பு உடையவனை;
மாலும் அயனும் அறியாத - விஷ்ணுவும் பிரமனும் அறியாத;
என் பொனை - என் பொன்னை;
வெண்ணிற ஏற்றனை - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனை;
ல் மனத்தேன் சிந்தையில் நின்ற திருவான்மியூரனை, - கல்லைப் போன்ற மனம் உடைய என் மனத்தில் தங்கிய திருவான்மியூர் ஈசனை;
வந்தனை செய்யும் என் வாய் - என் வாய் துதிக்கும்;



87)
வாயிருந்தும் ஊமையே வாழ்த்தா மடமாந்தர்;
நீயிவரை நாடாதே நெஞ்சமே; போயிணைவாய்
நட்டமகிழ் வான்மியூர் நம்பனடி யார்குழாம்;
மட்டில்லா நன்மை வரும்.



பதம் பிரித்து:
வாய் இருந்தும் ஊமையே, வாழ்த்தா மட மாந்தர்;
நீ இவரை நாடாதே, நெஞ்சமே, போய் இணைவாய்
நட்டம் மகிழ் வான்மியூர் நம்பன் அடியார் குழாம்;
மட்டு இல்லா நன்மை வரும்.


போய் இணைவாய் - சென்று அடைவாயாக;
நட்டமகிழ் - நட்டம் மகிழ் - திருநடம் செய்து மகிழும்;
நம்பன் - விருப்பிற்குரியவன் - சிவன்;
அடியார் குழாம் - அடியவர் திருக்கூட்டம்;
மட்டில்லா - அளவில்லாத;



88)
வருமானம் எண்ணிப் பெருமானை எண்ணாய்;
ஒருநாள் உயிர்கொள் நமனும் வருவான்;
வருமுன் மனமே திருவான்மி யூரை
விருப்போ டடைந்து விடு.



வருமானம் எண்ணிப் பெருமானை எண்ணாய் - பணத்தை எண்ணுவதிலேயே ஈடுபட்டுப் பெருமானை எண்ணமாட்டாய்;
ஒரு நாள் உயிர்கொள் நமனும் வருவான் - திடீரென்று ஒரு நாள் உயிரைக்கொள்ளும் எமனும் வந்துவிடுவான்;
வருமுன் மனமே திருவான்மியூரை விருப்போடு அடைந்துவிடு - மனமே, அப்படி எமன் வருவதன் முன்னமே திருவான்மியூரை அன்போடு அடைந்துவிடு;



89)
விடுவாயோ போற்றாது? வெவ்வினைக் கட்டால்
கெடுவாயோ? என்நெஞ்சே, கேள்நீ; சுடுவினைகள்
வெந்தழிய வான்மியூர் மேயானை வேண்டுமுக்கண்
தந்தையவன் நற்றுணை தான்.



முக்கட் டந்தையவன் நற்றுணை தான். - முக்கண் தந்தைஅவன் நல் துணைதான்.

விடுவாயோ போற்றாது? - போற்றாமல் இருப்பாயோ?
வெவ்வினைக் கட்டால் கெடுவாயோ? - (அப்படி இருந்து) கொடிய வினைக்கட்டால் அழிவாயோ? (வெவ்வினை - கொடிய வினை);
என் நெஞ்சே, கேள் நீ; - என் மனமே, நீ கேட்பாயாக;
சுடுவினைகள் வெந்தழிய வான்மியூர் மேயானை வேண்டு - சுடுகின்ற வினையெல்லாம் வெந்து சாம்பலாகத் திருவான்மியூரில் உறையும் ஈசனை இறைஞ்சு;
முக்கண் தந்தையவன் நற்றுணை தான் - முக்கண்ணுடைய தந்தை நல்ல துணைவனே.



90)
தானேயாய் நின்ற தலைவன் திருவடியை
ஊனே உருகிநிதம் உள்குவாய்; வானே
பெறும்வழி வான்மியூர்ப் பெம்மான்தாள் போற்றல்;
இறுமே வினைப்பிறவி யே.



ஊழிக்காலத்தில் தன்னந்தனியாக நிற்கும் தலைவனது திருவடியைத் தினமும், இந்த உடலே உருகும்படி, எண்ணி வழிபடுவாயாக. திருவான்மியூர் பெருமானைப் போற்றுவதே வானுலகையும் பெறக்கூடிய வழி ஆகும். அது வினையால் வரும் பிறவியையும் அழிக்கும்.


நிதம் - தினமும்;
உள்குதல் - நினைத்தல்; எண்ணுதல்; ஆராய்தல்;
வான் - வானுலகம்;
இறுதல் - முடிதல்;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



03.02-71 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)

03.02 – வான்மியூர் - (திருவான்மியூர் அந்தாதி)



27 January 2007 - 08 February 2007
திருவான்மியூர் அந்தாதி
-----------------------------
(வெண்பா)



71)
பிறவியே இல்லாப் பெருவாழ் வளிக்கும்,
உறவின் உறுதுணையாம் ஓதில் நறவினும்
சிந்தையில் தித்திக்கும், வான்மியூர் மேவிய
எந்தை திருவைந் தெழுத்து.



பதம் பிரித்து:
பிறவியே இல்லாப் பெருவாழ்வு அளிக்கும்;
உறவின் உறுதுணை ஆம்; ஓதில், நறவினும்
சிந்தையில் தித்திக்கும்; வான்மியூர் மேவிய
எந்தை திரு ஐந்தெழுத்து.


பிறவியே இல்லாப் பெருவாழ்வு அளிக்கும் - பிறப்பினை அறுத்துச் சிவலோக வாழ்வு தரும்;
உறவின் உறுதுணை ஆம்; - தாய் தந்தை மக்கள் சுற்றத்தார் என்றுள்ள உறவுகளைவிடச் சிறந்த துணை ஆகும்; (உறவின் - இன் - ஐந்தாம் வேற்றுமை உருபு - ஒப்புமைப் பொருளில் வந்தது);
ஓதில், நறவினும் சிந்தையில் தித்திக்கும்; - ஓதினால், ஓதுபவர் மனத்தில் தேனைவிட இனிமை பயக்கும்; (ஓதில் - ஓதினால்); (நறவு - தேன்; நறவினும் - இன் - ஐந்தாம் வேற்றுமை உருபு - ஒப்புமைப்பொருளில் வந்தது)
வான்மியூர் மேவிய எந்தை திரு ஐந்தெழுத்து - திருவான்மியூரில் உறையும் எம் தந்தையின் திருப்பெயரான 'நமச்சிவாய' என்ற திருவைந்தெழுத்து;


நறவு - தேன்;
எந்தை - எம் தந்தை;
திரு ஐந்தெழுத்து - நமசிவாய;



72)
எழுத்தஞ்சை எண்ணி இணையடி தன்னை
வழுத்து மடநெஞ்சே; வாழ்வில் விழுத்துணையாய்
வந்து புரப்பான் மருந்தீசன்; அவன்அருளால்
வெந்துவிடும் தொல்லை வினை.



வழுத்துதல் - துதித்தல் (To praise, extol);
விழுத்துணை - சிறந்த துணை;
புரப்பான் - காப்பான்; (புரத்தல் - காத்தல்);
வெந்துவிடும் - எரிந்துவிடும்; (வேதல் - எரிதல்);
தொல்லை - பழைய;



73)
தொல்லை வினையாலே துன்பம் விளையுமென்ற
சொல்லை அறிவாய்; துயர்நீங்கி எல்லை
இலாஇன்பம் எய்தமருந் தீசன் திருத்தொண்
டலால்வழி இல்லை அறி.



பதம் பிரித்து:
தொல்லை வினையாலே துன்பம் விளையும் என்ற
சொல்லை அறிவாய்; துயர் நீங்கி, எல்லை
இலா இன்பம் எய்த, மருந்தீசன் திருத்தொண்டு
அலால் வழி இல்லை அறி.


(மனமே என்ற சொல் தொக்கு நின்றது).


தொல்லை வினை - பழவினை
எல்லை இலா இன்பம் எய்த - முடிவு இல்லாத இன்பம் அடைய - பேரின்பம் பெற;
அலால் - அல்லால்;
மருந்தீசன் திருத்தொண்டு அலால் வழி இல்லை அறி - மனமே, மருந்தீசன் திருப்பணிகள் செய்வதைத் தவிர வேறு உபாயம் இல்லை என்று அறிவாயாக;


(சம்பந்தர் தேவாரம் - திருமுறை - 1.116.1 -
அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திரு நீலகண்டம்.)



74)
அறியா துழன்றே அவதிப் படும்இச்
சிறியேனும் அஞ்செழுத்துச் செப்பிப் பிறியாத
வெம்பவநோய் விட்டு விலகவருள் வான்மியூர்
உம்பனே இல்லையுனக் கொப்பு.



பதம் பிரித்து:
அறியாது உழன்றே அவதிப்படும் இச்
சிறியேனும் அஞ்செழுத்துச் செப்பிப் பிறியாத
வெம்பவநோய் விட்டு விலக அருள் வான்மியூர்
உம்பனே இல்லை உனக்கு ஒப்பு.


அஞ்செழுத்துச் செப்பிப் - திருவைந்தெழுத்தைச் சொல்லி;
பிறியாத வெம்பவநோய் விட்டு விலக அருள் - நீங்குவதற்கு அரிய பிறவிப்பிணி நீங்க அருளும்; (பிறிதல் - பிரிதல் - விட்டுவிலகுதல்); (வீடுதல் - அழிதல்);
வான்மியூர் உம்பனே - திருவான்மியூர்த் தேவனே; (உம்பன் - மேலோன்; தேவன்); (அப்பர் தேவாரம் - 4.71.6 - "...ஞாலம் ஏத்தும் உம்பனை உம்பர் கோனை....")
இல்லை உனக்கு ஒப்பு - உனக்கு ஒப்பு இல்லை;



75)
ஒப்பொன் றிலாத உமைகோன் திருமுடிமேல்
அப்பும் மதியும் அணிகின்ற அப்பனொரு
கல்லையும் பூவாக் கருதுமருந் தீசனன்பிற்
கெல்லை எனவொன் றிலை.



பதம் பிரித்து:
ஒப்பு ஒன்று இலாத உமைகோன்; திருமுடிமேல்
அப்பும் மதியும் அணிகின்ற அப்பன்; ஒரு
கல்லையும் பூவாக் கருது மருந்தீசன் அன்பிற்கு
எல்லை என ஒன்று இலை.


அப்பு - நீர் - கங்கை;
கல்லையும் பூவாக் கருது - கல்லையும் பூவாக விரும்பி ஏற்ற; (சாக்கிய நாயனார் கல்லெறிந்து சிவனை வழிபட்ட வரலாற்றைப் பெரிய புராணத்தில் காண்க);
எல்லை - அளவு;
இலை - இல்லை;



76)
இலையாவ திட்டெம் இறைவனே என்று
தலையால் வணங்கினால் தாழ்வு நிலைதன்னை
மாற்றிவான் ஈவான் மருந்தீசன்; போற்றிஎன்று
கூற்றுவரு முன்நெஞ்சே கூறு.



பதம் பிரித்து:
இலையாவது இட்டு, "எம் இறைவனே" என்று
தலையால் வணங்கினால், தாழ்வு நிலை தன்னை
மாற்றி, வான் ஈவான் மருந்தீசன்; "போற்றி" என்று
கூற்று வருமுன் நெஞ்சே கூறு.


இலையாவது இட்டு - (பூ இல்லாவிடினும்) ஓர் இலையையாவது தூவி;
தாழ்வு நிலை தன்னை - தாழ்வு நிலையை;
வான் - வான் உலகம்; சிவலோக வாழ்வு;
ஈவான் - அளிப்பான்;
கூற்று - எமன்;


(சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார்....");



77)
கூறுமை சேரும் குழகனைத், தூயவெண்
நீறுமெய் சேரும் நிமலனைத், தேறுமெய்
அன்பர் வினையை அறுக்குமருந் தீசனைத்,
துன்பமற, நெஞ்சே துதி.



(உரைநடை அமைப்பில்:
நெஞ்சே! துன்பம் அறக், கூறு உமை சேரும் குழகனைத்,
தூய வெண் நீறு மெய் சேரும் நிமலனைத்,
தேறும் மெய் அன்பர் வினையை அறுக்கும் மருந்தீசனைத் துதி.)


கூறு உமை சேரும் - பார்வதி உடலில் ஒரு பாகம் ஆன
குழகன் - இளமை உடையவன்; அழகன்;
நீறு - திருநீறு;
மெய் - உடல்;
நிமலன் - மலம் அற்றவன் - தூயன்;
தேறும் மெய் அன்பர் - அறிந்து தெளிகிற உண்மைப் பக்தர்; (தேறுதல் - தெளிதல்);
அறுத்தல் - இல்லாமல் செய்தல்; நீக்குதல்;



78)
துதிக்க நினைவாய் துயர்உறு நெஞ்சே;
மதியை, அரவை, மலரை, நதியை
அணிவான் பதிஆம் அணிவான் மியூரைப்
பணிவார் இலரே பழி.



துயர் உறு - துன்பப்படுகிற;
மதி - சந்திரன்;
அரவு - பாம்பு;
மலர் - கொன்றை முதலிய பூக்கள்;
நதி - கங்கை;
அணிவான் பதி ஆம் - அணிபவனுடைய இடம் ஆகும்;
அணி வான்மியூர் - அழகிய திருவான்மியூர்;
பணிவார் இலரே பழி - வணங்குபவர்கள் பாவம் இல்லாதவரே; (பழி - பாவம்; குற்றம்);



79)
பழியைப் பெருக்கிப் படுநரகில் வீழ்தல்
ஒழிமனமே; தீவினைகள் ஒல்லை அழியத்,
தொழுவாய் மருந்தீசன் தூமென் மலர்த்தாள்;
மழுவாளன் காப்பான் மகிழ்ந்து;



பழியைப் பெருக்கிப் படுநரகில் வீழ்தல் ஒழி மனமே; - மனமே, பாவத்தைப் பெருக்கிக் கொடிய நரகத்தில் விழுவதை ஒழிவாய்;
தீவினைகள் ஒல்லை அழியத், - பாவம் எல்லாம் சீக்கிரம் அழிவதற்கு;
தொழுவாய் மருந்தீசன் தூமென் மலர்த்தாள்; - மருந்தீசனின் தூய மென்மையான மலர் போன்ற பாதத்தைத் தொழுவாயாக;
மழுவாளன் காப்பான் மகிழ்ந்து - மழுவை ஏந்தும் சிவபெருமான் மகிழ்ந்து உன்னை காப்பான்;



80)
மகிழ்கின்றாய் பொய்யில் மயங்கியே; சென்று
புகழ்கின்றாய் அற்பரைப்; பொன்போல் திகழ்கின்ற
மேனியனை வான்மியூர் மேயவனை ஏத்தாயேல்
ஏனியம் பிப்பிறவி யே.



பதம் பிரித்து:
மகிழ்கின்றாய் பொய்யில் மயங்கியே;
சென்று புகழ்கின்றாய் அற்பரைப்;
பொன்போல் திகழ்கின்ற மேனியனை, வான்மியூர் மேயவனை ஏத்தாயேல்
ஏன் இயம்பு இப்பிறவியே.


மகிழ்தல் - விரும்புதல்; களித்தல்;
பொய் - நிலையற்றவை;
பொன்போல் திகழ்கின்ற மேனியனை - பொன்னார் மேனியனை;
வான்மியூர் மேயவனை - திருவான்மியூரில் உறையும் பெருமானை;
ஏத்தாயேல் - துதிசெய்யாவிடில்; ஏத்தாய் என்றால்; (ஏல் - If, used as an ending in a conjuctional sense, as in வந்தாயேல் - என்றால்);
ஏன் இயம்பு இப்பிறவியே = இப்பிறவி ஏன் இயம்பு - இப்பிறவியின் பயன் என்ன என்று சொல்?;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்