Saturday, December 18, 2021

06.01.109 - சிவன் - குளம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

திருவெம்பாவை ஸ்பெஷல்!

2009-12-28

06.01.109 - சிவன் - குளம் - சிலேடை

-----------------------------------------------

தன்னடைந்தார் தாகந் தணிவிக்கும் மேலும்நீர்

மன்னி யிருக்கும் மலர்களுந் - துன்னுமே

ஆடவரும் பெண்களு மங்கே படியடைவர்

கோடனிலாச் சூடி குளம்.


சொற்பொருள்:

அடைதல் - 1) சேர்தல்; 2) சரண்புகுதல்;

தாகம் - 1) நீர்வேட்கை; 2) ஆசை;

தணிவித்தல் - 1) நீக்குதல்; தீர்த்தல்; 2) பூர்த்திசெய்தல்; நிறைத்தல்; (11.20.5 - "விநாயகனே வேட்கைதணி விப்பான்" - வேட்கை - ஆசை. 'தணிவிப்பான்' என்பதற்கு, 'நிரப்புவான் போக்குவான்' என இரு பொருளும் கொள்க.);

மேலும் - 1) பின்னும்; 2) மேலே; (உம் - அசை);

மன்னுதல் - 1) நிலைபெறுதல்; 2) தங்குதல்; 2) மிகுதல்;

துன்னுதல் - செறிதல்; பொருந்துதல்; நெருங்குதல்;

ஆடுதல் - நீராடுதல்;

ஆடவரும் - 1) நீராட வருகின்ற; 2) ஆண்களும்;

படி - 1) படிக்கட்டு (steps); 2) நிலம்;

கோடனிலா - கோடல் நிலா - 1) வளைந்த பிறைச்சந்திரன்; 2) காந்தள் மலரும் சந்திரனும்;

கோடல் - 1) கோடுதல்; வளைதல்; (சம்பந்தர் தேவாரம் - 3.23.11 - "கோடல்வெண் பிறையனை"); 2) காந்தள் மலர்; (சம்பந்தர் தேவாரம் - 2.29.9 - "கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்");


* திருவெம்பாவை - 13 : "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் ...";


குளம்:

தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னை அடைந்தவர்களின் தாகத்தைத் தீர்க்கும்;

மேலும், நீர் மன்னியிருக்கும் - அதன்பின்னும், நீர் மிகுந்திருக்கும்;

மலர்களும் துன்னுமே - தாமரை முதலிய பூக்கள் செறிந்திருக்கும்;

ஆட வரும் பெண்களும் அங்கே படி அடைவர் - நீராட வருகிற பெண்களும் அங்கே படிக்கட்டைச் சேர்வார்கள்;


சிவன்:

தன் அடைந்தார் தாகம் தணிவிக்கும் - தன்னைச் சரணடைந்தவர்களின் ஆசைகளைத் தீர்ப்பான்; (அவர்கள் வேண்டும் வரங்கள் தருவான்);

மேலும் நீர் மன்னியிருக்கும்; மலர்களும் துன்னுமே - அவன் உச்சிமேல் கங்கை என்றும் தங்கியிருக்கும்; பூக்களும் பொருந்தி இருக்கும்;

ஆடவரும் பெண்களும் அங்கே படி அடைவர் - ஆண்களும் பெண்களும் நிலத்தில் வீழ்ந்து வணங்குவார்கள்;

கோடல் நிலாச் சூடி - காந்தள் மலரையும் வளைந்த பிறைச்சந்திரனையும் சூடிய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

06.01.108 - சிவன் - வாழை இலை - புறச்சமயிகள் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-12-24

06.01.108 - சிவன் - வாழை இலை - புறச்சமயிகள் - சிலேடை

-----------------------------------------------

(இப்பாடலை மூன்று விதமாகப் பொருள்கொள்ளல் ஆம்)


கூறார்மெய் வண்ணங் கொடுதரையை உற்றாலு

மாறா மதியோடு வந்தவர் - வேறாப்

பொருள்பட வென்றும் புகல்வார் சடையோ

டிருப்பவர்வான் வாழையிலை யென்று.


சொற்பொருள்:

கூறு - பாதி; பங்கு;

கூறுதல் - சொல்லுதல்;

ஆர்தல் - பொருந்துதல்;

மெய் - 1) உடல்; 2) உண்மை;

வண்ணம் - குணம்; இயல்பு; நிறம்; வடிவு;

கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமையுருபு;

தரை - பூமி; நிலம்;

உறுதல் - அடைதல்;

மாறுதல் - வேறுபடுதல்; சரிப்படுதல்;

மாறு - வேறுபாடு (Mutation, change);

மதி - 1) சந்திரன்; 2) அறிவு;

- இடபம்; எருது;

ஓடு - மூன்றாம் வேற்றுமையுருபு;; மண்டையோடு;

வேறு - 1. பிறிது (Other, that which is different); 5. எதிரிடையானது (That which is opposite); 8. சிறப்புடையது (That which is special or distinct; that which is distinguished or particularised);

புகல்தல் - சொல்லுதல்;

வார்தல் - நெடுமையாதல்;

வான் - வானுலகம்; பெருமை; அழகு; நன்மை;

- தலைவன்; அரசன்;

அயில் - ஐயில் என வந்தது; ஐயில் - அயில் - முதற்போலி. (மயல் - மையல் என வருவது போன்றது). (கம்பராமாயணம் - "பெருகு ஐயில் பெயர்த்தனர், தலையைப் பேணவர்" - ஐயில் - அயில் - முதற்போலி); (Digital Tevaram on IFP site: சம்பந்தர் தேவாரம் - 3.114.2 - "பரந்து இலங்கு ஐயில் சூலம் (அது) என்பதே" - ஐயில் - அயில் (போலி: syllable or letter resembling another in sound));

அயில் - வேல்; இங்கே மூவிலை வேல் - திரிசூலம்;

ஐயில் ஐ - சூலபாணி; / தலைவரில் தலைவன்; ('இல்', 'இன்' - ஐந்தாம் வேற்றுமை உருபு);


வாழை இலை:

கூறு ஆர் மெய் வண்ணம் கொடு தரையை உற்றாலும்,

மாறா மதியோடு வந்தவர், வேறாப்

பொருள்பட என்றும் புகல்வார் --- சடையோடு

இருப்பவர் --- வான் வாழை இலை என்று.


(முழு இலையாக அல்லாமல்) ஒரு பகுதியாக இருக்கும் வடிவத்தோடு (ஏடு), (பசிய) நிறத்தோடு, (பந்தியில்) தரையை வந்தடைந்தாலும், நிலையான ஞானத்தோடு வந்தவர்களான சடையுடையவர்கள் (தவசிகள்), அதனைச் சிறப்பித்து 'உயர்ந்த வாழை இலை" என்று சொல்வார்கள்.

(அது தரையில் இருந்தாலும், அதனை 'வான் இலை' என்றே சொல்வார்கள்.

(பச்சைநிறம் அல்லாமல் வேறு நிறத்தோடு உள்ள சருகை உண்கலமாக இட்டாலும் சிறப்பாக ஏற்பர் - என்றும் பொருள்கொள்ளல் ஆம்);


புறச்சமயிகள்:

கூறார் மெய்; வண்ணம்கொடு தரையை உற்றாலும்,

மாறு ஆம் மதியோடு வந்து, அவர் வேறாப்

பொருள்பட என்றும் புகல்வார் --- "சடையோடு

இருப்பவர் வான் வாழ் ஐ இலை" என்று.


உண்மையைச் சொல்லமாட்டார்கள்; (இறைவன் சகுணமாகி) உருவத்தோடு பூமியில் தோன்றினாலும், முரண்பட்ட கருத்தோடு (திரிந்த அறிவோடு) அவர்கள் வேறுவிதமாகப் பேசுவார்கள் - "சடையோடு இருப்பவர் வானுலகில் உறையும் தலைவன் இல்லை" என்று.


சிவன்:

கூறு ஆர் மெய் வண்ணம்கொடு தரையை உற்றாலும்,

ஆறு ஆ மதி ஓடு உவந்தவர்; வேறாப்

பொருள்பட, என்றும் புகல், "வார் சடையோடு

இருப்பவர், வான் வாழ் ஐயில் ஐ" என்று.


அர்த்தநாரீஸ்வரக் கோலத்தோடு பூமியில் தோன்றினாலும், கங்கையையும் இடபத்தையும் சந்திரனையும் பிரமன் மண்டையோட்டையும் விரும்புபவர்; "நீண்ட சடையோடு இருப்பவர்; வானுலகில் இருக்கின்ற, சூலம் ஏந்தும் தலைவர்" என்று அவரைச் சிறப்பித்து என்றும் சொல்வாயாக. ("ஐயில் ஐ - தலைவரின் தலைவர்" என்றுகொண்டு, தேவர் கோவிற்கும் தலைவன் என்றும் கொள்ளலாம்)


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Tuesday, December 14, 2021

06.01.107 - சிவன் - தமிழ்நாட்டுப் பேருந்து (Bus in Tamil Nadu) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-12-20

06.01.107 - சிவன் - தமிழ்நாட்டுப் பேருந்து (Bus in Tamil Nadu) - சிலேடை

-----------------------------------------------

ஓர்பக்கம் பெண்ணுக்கென் றுண்டுவந் தூரேறும்

பாரிடம் போற்றுமுன்னும் பின்னுமுறும் - பேரிருக்கும்

ஆர்க்கும் அரவம் அமரும் இருக்கைமலி

நீர்ச்சடையன் பேருந்து நேர்.


சொற்பொருள்:

உண்டுவந்தூரேறும் - 1) உண்டு; வந்து ஊர் ஏறும்; 2) உண்டு; உவந்து ஊர் ஏறும்;

ஊர் ஏறும் - 1) ஊர் மக்கள் ஏறுவர்; 2) ஊர்கின்ற இடபமும்;

பாரிடம் - 1) பூமி; தேசம்; 2) பூதகணம்;

முன் - 1) இடத்தால் முன்; 2) காலத்தால் முன்;

பின் - 2) இடத்தால் பின்; 2) காலத்தால் பின்;

உறுதல் - இருத்தல்;

பேர் - 1) பெயர்; 2) புகழ்;

ஆர்த்தல் - 1) ஒலித்தல்; 2) கட்டுதல்;

அரவம் - 1) ஒலி; சத்தம்; 2) பாம்பு;

அமர்தல் - 1) இருத்தல் (உட்கார்தல்); 2) விரும்புதல்;

இருக்கை - 1) ஆசனம்; 2) வேதத்தை; (இருக்கு - ரிக்வேதம்; வேதம்);

மலிதல் - மிகுதல்;

பேருந்து - Bus;

நேர் - ஒப்பு;


தமிழ்நாட்டுப் பேருந்து:

ஓர் பக்கம் பெண்ணுக்கு என்று உண்டு - பெண்களுக்கு ஒரு பக்கத்து இருக்கைகளை ஒதுக்கியிருப்பர்;

வந்து ஊர் ஏறும் - ஊர்மக்கள் வந்து ஏறுவார்கள்;

பாரிடம் போற்றும் - நாட்டிலுள்ளோர் போற்றுவர்; (பார் - பூமி; தேசம்); (சம்பந்தர் தேவாரம் - 2.104.4 - "பார்கொள் பாரிடத்தவர் தொழும் பவளத்தை" - உலகில் பல இடங்களிலும் உள்ள மக்கள் வந்து தொழும் பவளத்தை);

முன்னும் பின்னும் உறும் பேர் இருக்கும் - முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் (நிறுவனத்தின், செல்லும் ஊரின்) பெயர் எழுதப்பெற்றிருக்கும்;

ஆர்க்கும் அரவம் - சத்தம் ஒலிக்கும்;

அமரும் இருக்கை மலி - உட்காரும் ஆசனங்கள் நிறைந்த;

பேருந்து.


சிவன்:

ஓர் பக்கம் பெண்ணுக்கு என்று உண்டு - அர்த்தநாரீஸ்வரன்;

உவந்து ஊர் ஏறும் பாரிடம் போற்றும் - மகிழ்ந்து ஊர்கின்ற இடபத்தையும் உலகம் போற்றும்;

பாரிடம் போற்றும் - பூதகணங்கள் போற்றும்;

முன்னும் பின்னும் உறும் பேர் இருக்கும் - காலத்தைக் கடந்தவன் என்ற புகழ் இருக்கும்;

ஆர்க்கும் அரவம் - பாம்பை (அரைநாணாகக்) கட்டியவன்;

அமரும் இருக்கை - வேதத்தை விரும்பியவன்;

மலி நீர்ச்சடையன் - மிகுந்த நீருடைய கங்கையைச் சடையில் உடைய சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.121 – பொது - வேதனைக்கிடமான - (வண்ணம்)

06.02.121 – பொது - வேதனைக்கிடமான - (வண்ணம்)

2009-12-19

6.2.121) வேதனைக்கிடமான - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தத்தன தான தத்தன

தான தத்தன .. தனதான )


(இந்த அமைப்பில் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் உள்ளதா என்று அறியேன்)


வேத னைக்கிட மான இப்புவி

.. .. மீது மற்றொரு .. வடிவோடு

.. மீள வைத்திடு தீவி னைப்பொதி

.. .. வேர றுத்திட .. நினையாயோ

வாதை யற்றுல வாத நற்றிரு

.. .. வாழ்வி லுற்றிட .. நிதமோதாய்

.. மாத வத்தினர் நாந விற்றிட

.. .. வான ளித்திடும் .. அரனாமம்

ஆத ரத்தொடு பூச லுட்செயும்

.. .. ஆக மத்தளி .. மகிழீசன்

.. ஆவி பற்றிடு கால னைக்கழ

.. .. லாலு தைத்தவன் .. அருளாளன்

வேதன் அச்சுதன் நேட மிக்கொளி

.. .. வீசி டத்தழல் .. உருவானான்

.. வேணி யிற்புனல் ஆர உத்தமி

.. .. மேனி யிற்றிகழ் .. பெருமானே.


பதம் பிரித்து:

வேதனைக்கு இடம் ஆன இப்புவி

.. .. மீது மற்றொரு வடிவோடு

.. மீள வைத்திடு தீவினைப்-பொதி

.. .. வேரறுத்திட நினையாயோ?

வாதையற்று உலவாத நற்றிரு

.. .. வாழ்வில் உற்றிட நிதம் ஓதாய்,

.. மாதவத்தினர் நா நவிற்றிட

.. .. வான் அளித்திடும் அரன் நாமம்;

ஆதரத்தொடு பூசல் உட்செயும்

.. .. ஆகமத்-தளி மகிழ் ஈசன்;

.. ஆவி பற்றிடு காலனைக்

.. .. கழலால் உதைத்தவன்; அருளாளன்;

வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி

.. .. வீசிடத் தழல் உரு ஆனான்;

.. வேணியில் புனல் ஆர, உத்தமி

.. .. மேனியில் திகழ் பெருமானே.


* "மனமே" என்ற விளி தொக்கு நின்றது;

* 3-ஆம் அடி - பூசலார்க்கு அருள்செய்ததைச் சுட்டியது.


சொற்பொருள்:

வாதை - துன்பம்;

உலவாத - அழியாத; குறையாத;

வான் - வானுலகம்;

ஆதரம் - அன்பு;

பூசல் - பூசலார் நாயனார்;

உள் - உள்ளம்;

தளி - கோயில்;

நேடுதல் - தேடுதல்;

வேணி - சடை;

ஆர்தல் - பொருந்துதல்;


வேதனைக்கு இம் ஆன இப்புவி மீது மற்றொரு வடிவோடு மீள வைத்திடு தீவினைப்-பொதி வேரறுத்திட நினையாயோ - (மனமே) துன்பங்களுக்கு இடமான இவ்வுலகில் இன்னொரு உடம்பில் மீண்டும் பிறவி அளிக்கும் பாவமூட்டையை முற்றிலும் தீர்ப்பதற்கு எண்ணமாட்டாயா?

வாதைற்றுலவாத நல் திரு வாழ்வில் உற்றிட நிதம் ஓதாய் - வாழ்வில் படும் துன்பங்கள் நீங்கி என்றும் அழியாத பாக்கியத்தைப் பெறுவதற்குத் தினமும் சொல்வாயாக;

மா தவத்தினர் நா நவிற்றி வான் அளித்திடும் அரன் நாமம் - பெரும் தவசிகள் தம் வாயால் சொல்ல, வானுலகத்தை அளிக்கின்ற சிவன் திருநாமம் ஆன நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை;

ஆதரத்தொடு பூசல் உள் செயும் ஆகமத்-தளி மகிழ் ஈசன் - பூசலார் நாயனார் பெருவிருப்போடு தம் உள்ளத்தில் எழுப்பிய ஆகம விதிப்படி அமைந்த கோயிலில் மகிழ்ந்து எழுந்தருளிய ஈசன்; (செயும் - செய்யும்);

ஆவி பற்றிடு காலனைக் கழலால் உதைத்தவன் - (மார்க்கண்டேயரின்) உயிரைக் கொல்ல வரும் எமனைக் காலால் உதைத்தவன்;

அருளாளன் - பேரருள் உடையவன்;

வேதன் அச்சுதன் நேட மிக்கு ஒளி வீசிடத் தழல் உருனான் - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடுமாறு மிகுந்த ஒளி வீசச் சோதியாகி நின்றவன்;

வேணியில் புனல் ஆர, உத்தமி மேனியில் திகழ் பெருமானே - சடையில் கங்கை பொருந்தத், திருமேனியில் உமையை ஒரு கூறாக உடைய பெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.120 – பொது - தீனருக்களியாது - (வண்ணம்)

06.02.120 – பொது - தீனருக்களியாது - (வண்ணம்)

2009-12-17

6.2.120) தீனருக்களியாது - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன .. தந்ததான )


(ஏது புத்திஐ யாஎ னக்கினி - திருப்புகழ் - திருத்தணிகை)


தீன ருக்களி யாது நற்றவ

.. .. சீல ருக்களி யாது பற்றொடு

.. .. தேடி வைக்கிற மாடும் எத்துணை .. நெஞ்ச மேமா

.. சேனை சுற்றிட நாடு பற்பல

.. .. ஆள லுற்றவர் காலன் உய்த்திடு

.. .. சேவ கர்த்தடு காவ லற்றவர் .. வென்றி லாரே


ஊனை விட்டுயிர் ஓட லுற்றதும்

.. .. ஓவெ னக்குடி ஓல மிட்டழு

.. .. தூரி னப்புறம் ஈமம் இட்டிட .. வெந்த நீறே

.. ஓவும் அத்தினம் ஆர்நி னைத்திடு

.. .. நாளும் மட்டலர் தூவி நற்றமிழ்

.. .. ஓதில் இத்தரை மீதும் நிச்சயம் .. இன்பம் ஆமே


வான வர்க்கமு தாக அப்பெரு

.. .. வாரி கக்கிய கார்வி டத்தினை

.. .. மாமி டற்றினி லேம றைத்தருள் .. உம்பர் நாதன்

.. மாழை மைக்கணி கோம ளக்கொடி

.. .. மாது மைக்கொரு கூறு வைத்தவன்

.. .. வார ணத்துரி மார்பி னிற்புனை .. கின்ற வீரன்


ஞான மெய்ப்பொருள் வாளி உய்த்திடு

.. .. வேள்த னைச்சுடும் ஓர்நு தற்கணன்

.. .. நார ணற்கலர் மேல னுக்கரி .. தென்ற சோதி

.. நாமம் நித்தலும் நாவு ரைத்தவர்

.. .. நேயன் அற்புத சேம வைப்பவன்

.. .. நாகம் நற்புனல் ஏறு பொற்சடை .. எம்பி ரானே.


பதம் பிரித்து:

தீனருக்கு அளியாது, நற்றவ

.. .. சீலருக்கு அளியாது, பற்றொடு

.. .. தேடி வைக்கிற மாடும் எத்துணை நெஞ்சமே? மா

.. சேனை சுற்றிட நாடு பற்பல

.. .. ஆளலுற்றவர் காலன் உய்த்திடு

.. .. சேவகர்த் தடு காவல் அற்றவர்; வென்றிலாரே;


ஊனை விட்டு உயிர் ஓடலுற்றதும்

.. .. ஓ எனக் குடி ஓலமிட்டு அழுது

.. .. ஊரின் அப்புறம் ஈமம் இட்டிட வெந்த நீறே;

.. ஓவும் அத்தினம் ஆர்? நினைத்திடு;

.. .. நாளும் மட்டு-அலர் தூவி நற்றமிழ்

.. .. ஓதில், இத்தரை மீதும் நிச்சயம் இன்பம் ஆமே;


வானவர்க்கு அமுது ஆக, அப்-பெரு

.. .. வாரி கக்கிய கார்-விடத்தினை

.. .. மா மிடற்றினிலே மறைத்தருள் உம்பர் நாதன்;

.. மாழை மைக்-கணி, கோமளக்-கொடி,

.. .. மாது-உமைக்கு ஒரு கூறு வைத்தவன்;

.. .. வாரணத்து உரி மார்பினிற் புனைகின்ற வீரன்;


ஞான மெய்ப்பொருள்; வாளி உய்த்திடு

.. .. வேள்தனைச் சுடும் ஓர் நுதற்கணன்;

.. .. நாரணற்கு அலர் மேலனுக்கு அரிது என்ற சோதி;

.. நாமம் நித்தலும் நா உரைத்தவர்

.. .. நேயன், அற்புத சேம வைப்பு-அவன்;

.. .. நாகம் நற்புனல் ஏறு பொற்சடை எம்பிரானே.


சொற்பொருள்:

தீனர் - வறியவர்;

அளியாது - 1) அன்பு இல்லாமல்; (அளிதல்) 2) கொடாமல்; (அளித்தல்);

மாடு - செல்வம்; பொருள்;

எத்துணை - எவ்வளவு; எக்-காப்பு; (துணை - அளவு; காப்பு) ;

குடி - குடும்பம்; வீடு;

ஊரின் அப்புறம் - ஊரின் வெளியே;

ஓவுதல் - சாதல்;

வாரி - கடல்;

கார் விடம் - கரிய விஷம் - ஆலகாலம்;

மா மிடறு - அழகிய கழுத்து;

மாழை - மாவடு;

மை - கண்ணுக்கு இடும் அஞ்சனம்;

கோமளம் - மென்மை;

வாரணம் - யானை;

உரி - தோல்;

வாளி - அம்பு;

வேள் - மன்மதன்;

அலர் மேலன் - தாமரைமேல் உறையும் பிரமன்;

சேம வைப்பு - சேமநிதி; வைப்புநிதி;


தீனருக்கு அளியாது, நற்றவ சீலருக்கு அளியாது, பற்றொடு தேடி வைக்கிற மாடும் த்துணை நெஞ்சமே? - நெஞ்சே! வறியோர்க்கும் தவசிகளுக்கும் கொடுத்து மகிழாமல், ஆசையாய்த் தேடி வைக்கின்ற பொருள் எல்லாம் எது வரை? துணையாக வருமா?


மா சேனை சுற்றிட நாடு பற்பல ஆளலுற்றவர் காலன் உய்த்திடு சேவகர்த் தடு காவல் அற்றவர்; வென்றிலாரே - பெரிய படைகள் சூழப் பல நாடுகளை ஆண்ட அரசர்களும் எமதூதர்களைத் தடுக்கின்ற காவல் இல்லாதவர்கள்; அத்தூதர்களை அவர் எவரும் வென்றது இல்லை;

("சேவகர்த் தடு காவல் அற்றவர்" - இலக்கணக் குறிப்பு : இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவு கருதி வல்லொற்று மிகும்; "ஒன்னலர்ச் செகுத்தான்" = ஒன்னலரைச் செகுத்தான் என்பது பொருள்.)


ஊனை விட்டுயிர் ஓடலுற்றதும் னக் குடி ஓலமிட்டு அழுது ரின் அப்புறம் ஈமம் இட்டிட வெந்த நீறே - உடம்பிலிருந்து உயிர் பிரிந்தபின், "" என்று குடும்பத்தினர் ஒப்பாரிவைத்து அழுது, பிறகு ஊரின் புறத்தே உள்ள சுடுகாட்டில் எரியில் இட்டபின் சுட்ட சாம்பலே;

ஓவும் அத்தினம் ஆர்? - உடல் அழியும் அந்த நாளில் யார் துணை?

நினைத்திடு - எண்ணு;

நாளும் மட்டு-லர் தூவி நற்றமிழ் தில், இத்தரை மீதும் நிச்சயம் இன்பம் ஆமே - தினமும் வாசமலர் தூவி நல்ல தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட்டால், (மறுமை இன்பம் மட்டுமல்லாமல்) இம்மை இன்பங்களும் உறுதியே;


வானவர்க்கு அமுது ஆ, அப்-பெரு வாரி கக்கிய கார்-விடத்தினை மா மிடற்றினிலே மறைத்தருள் உம்பர் நாதன் - தேவர்களுக்கு அமுதம் கிட்டுமாறு, அந்தப் பெரிய பாற்கடல் உமிழ்ந்த கரிய விடத்தை அழகிய கண்டத்தில் ஒளித்தருளிய தேவதேவன்;

மாழை மைக்-கணி, கோமளக்-கொடி, மாது-மைக்கு ஒரு கூறு வைத்தவன் - மாவடு ஒத்த, மை அணிந்த கண்களை உடையவளும், மென்மையான கொடி போன்றவளுமான அழகிய உமைக்கு ஒரு பாகத்தை வைத்தவன்;

வாரணத்துரி மார்பினிற் புனைகின்ற வீரன் - யானைத்தோலை மார்பில் போர்த்த வீரன்;


ஞான மெய்ப்பொருள் - ஞானமே வடிவான மெய்ப்பொருள்;

வாளி உய்த்திடு வேள்தனைச் சுடும் ஓர் நுதற்கணன் - கணை தொடுத்த மன்மதனைச் சுட்ட ஒப்பற்ற நெற்றிக்கண்ணன்;

நாரணற்கு அலர் மேலனுக்கு அரிது என்ற சோதி - நாராயனனுக்கும் பூமேல் இருக்கும் பிரமனுக்கும் காண அரிது என்று உயர்ந்த சோதி;

நாமம் நித்தலும் நாரைத்தவர் நேயன், அற்புத சேம வைப்பு-வன் - திருநாமத்தைத் தினமும் நாவால் சொல்லும் பக்தர்களுக்கு அன்பன்; அவர்களுக்கு அற்புதமான சேமநிதி ஆனவன்;

நாகம் நற்புனல் ஏறு பொற்சடை எம்பிரானே - பாம்பையும் நல்ல கங்கையையும் பொற்சடையில் சூடிய எம்பெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Monday, December 13, 2021

06.01.106 - சிவன் - வீரன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2009-12-14

06.01.106 - சிவன் - வீரன் - சிலேடை

-----------------------------------------------

சிலையதன் நாணரவஞ் செய்யும் பகைவர்

அலையுமதில் மாயும் அபயம் - நிலவிடும்

கையில் வளையும் தனுக்காட்டும் ஓர்வீரன்

மையணி கண்டத்தெம் மான்.


சொற்பொருள்:

சிலை - 1) வில்; 2) மலை;

அரவம் - 1) ஒலி; 2) பாம்பு;

அலையுமதில் - 1) அலையும் அதில்; 2) அலையும் மதில்;

வளையும் - 1) வளைகின்ற; 2) வளையலும்;

தனு - 1) வில்; 2) உடல்;

மை - கருமை;


வீரன் வில்:

சிலையதன் நாண் அரவம் செய்யும் - வில்லினது நாண் ஒலி எழுப்பும்;

பகைவர் அலையும் அதில் மாயும் - அலைபோல் வரும் பகைவர் படையும் அதனால் அழியும்;

அபயம் நிலவிடும் - அச்சம் இல்லாத நிலை இருக்கும்;

கையில் வளையும் தனுக் காட்டும் - (அந்த அபய நிலையைக்) கையில் (ஏந்திப் போர்செய்யும்பொழுது) வளைகின்ற வில் காட்டும்;

ஓர் வீரன் வில் - ஒரு வீரன்;


சிவன்:

சிலையதன் நாண் அரவம் செய்யும் - மேருமலை என்ற வில்லினது நாண் பாம்பு ஆகும்;

பகைவர் அலையும் மதில் மாயும் - அசுரர்களது திரிகின்ற மும்மதில்களும் (அந்த வில்லால்) அழியும்;

அபயம் நிலவிடும் - (தேவர்களுக்கு) அச்சமின்மை கிட்டும்;

கையில் வளையும் தனுக் காட்டும் - கையில் வளையலையும் திருமேனி காட்டும்; (அர்த்தநாரீஸ்வரக் கோலம்);

மை அணி கண்டத்து எம்மான் - கருமையைக் கண்டத்தில் அணிந்த எம் பெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------