Saturday, November 23, 2019

04.79 – பிரம்மதேசம்


04.79 – பிரம்மதேசம்

2014-10-14
பிரம்மதேசம் (திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் அருகுள்ள தலம் - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்)
--------------------------------
(12 பாடல்கள்)
(கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")

1)
ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன்
இருநதிச் சடையினன் ஏத்தும் அன்பருக்
கருநிதி ஆகிய ஐயன் தங்கிடம்
பெருமதில் புடையணி பிரம தேசமே.

ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன் - பிறைச்சந்திரனைத் திருமுடிமேல் சூடியவன்;
இருநதிச் சடையினன் - கங்கையைச் சடையில் தேரித்தவன்; (இருநதி - பெரிய நதி - கங்கை);
ஏத்தும் அன்பருக்கு அருநிதி ஆகிய ஐயன் தங்கு இடம் - துதிக்கும் பக்தர்களுக்கு அரிய செல்வம் ஆன தலைவன் உறையும் தலம்;
பெருமதில் புடை அணி பிரமதேசமே - பெரிய மதிலால் சூழப்பெற்ற பிரமதேசம் ஆகும்; (புடை - பக்கம்);

2)
வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு காலினார்
மஞ்ஞையின் மேல்வரு மைந்தன் தாதையார்
மைஞ்ஞவில் மிடற்றினர் மதியம் சூடிய
பிஞ்ஞக னாரிடம் பிரம தேசமே.

வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு காலினார் - கொடிய எமனுடைய உயிரை அழித்த காலை உடையவர்; (ஞமன் - நமன் - கூற்றுவன்);
மஞ்ஞையின்மேல் வரும் மைந்தன் தாதையார் - மயில்மேல் ஏறி வரும் முருகனுக்குத் தந்தையார்; (மஞ்ஞை - மயில்); (சுந்தரர் தேவாரம் - 7.86.1 - "விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை");
மைஞ்ஞவில் மிடற்றினர் - கருமை திகழும் கண்டத்தை உடையவர்; (ஞவில் - நவில்; நவில்தல் - தாங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.60.4 - "மைஞ்ஞவில் கண்டன் றன்னை" === கருமை படர்ந்த நீலகண்டன்);
மதியம் சூடிய பிஞ்ஞகனார் இடம் பிரமதேசமே.- சந்திரனை அணிந்த பிஞ்ஞகன் என்று அழைக்கப்படும் சிவபெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும். (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

3)
வேணியில் வெண்பிறை விளங்கு வேதியன்
மாணியைக் காத்தவன் மாக டற்கொரு
தோணியை ஒத்தவன் தோகை ஓர்புறம்
பேணிய கோனிடம் பிரம தேசமே.

வேணி - சடை;
மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர்;
மா கடற்கு ஒரு தோணியை ஒத்தவன் - பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு ஒப்பற்ற படகு போன்றவன்; (கடல் + கு = கடற்கு);
தோகை - பெண் - உமை;
பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்;
கோன் - தலைவன்;

4)
சிறப்புறு செந்தமிழ் செப்பி நாள்தொறும்
மறப்பில ராய்அடி வணங்கு வார்வினை
அறப்பரிந் தருள்பவன் அந்த மில்லவன்
பிறப்பிலி உறைவிடம் பிரம தேசமே.

மறப்பு இலராய் - மறவாதவர்கள் ஆகி;
வினை அறப் பரிந்து அருள்பவன் - வினைகள் தீர இரங்கி அருள்புரிபவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);
அந்தம் இல்லவன் பிறப்பிலி - சாதலும் பிறத்தலும் இல்லாதவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.8 - "வெந்தநீறணி மார்பிற்றோல்புனை அந்தமில்லவ னாடானை");

5)
நாருடை யார்க்கருள் நல்கும் நல்லவன்
கூருடை மழுவினன் கோல வெண்பிறை
நீரடை செஞ்சடை நிமலன் ஆயிரம்
பேருடை யானிடம் பிரம தேசமே.

நார் - அன்பு ; (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "பார்மலிந்தோங்கிப்... ... நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்");
கோல வெண்பிறை நீர் அடை செஞ்சடை நிமலன் - அழகிய வெண் திங்களும் கங்கையும் பொருந்திய செஞ்சடையை உடைய தூயன்;

6)
முத்தியை நல்கிடும் முதல்வன் முக்கணன்
மத்தம ணிந்தவன் மதுரை மன்னவன்
மொத்தினை ஏற்றவன் முன்னம் நஞ்சையுண்
பித்தனி ருப்பது பிரம தேசமே.

மத்தம் அணிந்தவன் - ஊமத்தமலரைச் சூடியவன்;
மதுரை மன்னவன் மொத்தினை ஏற்றவன் - பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டவன்; (மொத்து - அடி);
முன்னம் நஞ்சை உண் பித்தன் - முன்பு விடத்தை உண்ட பித்தன்; (பித்தன் - சிவன் திருநாமம்);
இருப்பது பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

7)
நறைமலர் கூவிளம் நம்பி இட்டவர்
குறைகளைத் தீர்ப்பவன் கொக்கின் தூவலும்
அறைபுனல் வானதி அரவம் கோணிய
பிறையணிந் தானிடம் பிரம தேசமே.

நறை - தேன்; வாசனை;
கூவிளம் - வில்வம்;
நம்புதல் - விரும்புதல்;
கொக்கின் தூவல் - கொக்கு வடிவில் நின்ற அசுரனை அழித்து அவன் இறகினைச் சூடியவர் சிவபெருமான்; (தூவல் - இறகு);
அறைபுனல் வானதி - ஒலிக்கின்ற நீரை உடைய கங்கை;
கோணிய பிறை - வளைந்த பிறைச்சந்திரன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.11 - "கோணிய பிறை சூடியைக்..." );

8)
திண்ணிய நெஞ்சினன் தேர்க டாவிட
எண்ணிவெற் பிடந்தவன் எய்க்க ஊன்றினார்
கண்ணமர் நெற்றியர் கரிய மென்குழற்
பெண்ணிடத் தாரிடம் பிரம தேசமே.

திண்ணிய நெஞ்சினன், தேர் கடாவிட எண்ணி வெற்பு இடந்தவன் - கல் நெஞ்சன், இரதத்தைச் செலுத்த எண்ணிக் கயிலைமலையைப் பேர்த்தவன்;
எய்க்க ஊன்றினார் - அந்த இராவணன் வருந்துமாறு விரலை ஊன்றியவர்;
கண் அமர் நெற்றியர் - நெற்றிக்கண் உடையவர்;
கரிய மென்குழற் பெண் இடத்தார் இடம் பிரமதேசமே - கரிய, மென்மையான கூந்தலையுடைய, உமையை இடப்பாகத்தில் உடைய சிவபெருமானார் உறையும் தலம் பிரமதேசம்;

9)
கரியவன் நான்முகன் காண்ப தற்கொணா
எரியவன் ஒருகணை ஏவி ஒன்னலர்
திரியரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள்
பெரியவன் உறைவிடம் பிரம தேசமே.

கரியவன் நான்முகன் காண்பதற்கு ஒணா எரியவன் - திருமால் பிரமன் இவர்களால் காண இயலாத சோதி அவன்;
ஒரு கணை ஏவி - ஓர் அம்பை எய்து;
ஒன்னலர் திரி அரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள் பெரியவன் - பகைவர்களது, எங்கும் திரிந்த முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி செய்த பெருமான்;
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

10)
குற்றமி குத்தவர் கூறும் பொய்ம்மொழி
வெற்றுரை இடரினில் வீழ்த்தும் நீங்குமின்
பெற்றமு கந்தவன் பேணு வார்க்கருள்
பெற்றியன் உறைவிடம் பிரம தேசமே.

குற்றம் மிகுத்தவர் கூறும் பொய்ம்மொழி வெற்றுரை இடரினில் வீழ்த்தும் - குற்றம் மிகுந்தவர்கள் சொல்கின்ற பொய்களும் பயனற்ற வார்த்தைகளும் துன்பத்தில் தள்ளும்;
நீங்குமின் - ஆதலால், அவற்றை/அவர்களை நீங்குங்கள்;
பெற்றம் உகந்தவன் - இடபவாகனத்தை விரும்பியவன்; (பெற்றம் - இடபம்; எருது); (உகத்தல் - விரும்புதல்);;
பேணுவார்க்கு அருள் பெற்றியன் - போற்றி வழிபடுபவர்களுக்கு அருள்கின்ற தன்மைய் உடையவன்; (பெற்றி - இயல்பு; பெருமை);
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

11)
கருதிவந் தேத்திடக் கவலை தீர்ப்பவன்
பொருதுவெங் கரியுரி போர்த்த மார்பினன்
எருதுகந் தேறிறை இலந்தை நீழலைப்
பெரிதுகந் தானிடம் பிரம தேசமே.

கருதி வந்து ஏத்திடக் கவலை தீர்ப்பவன் - விரும்பி வந்து வழிபடும் பக்தர்களுடைய கவலையைத் தீர்ப்பவன்;
பொருது வெங் கரி உரி போர்த்த மார்பினன் - போர் செய்த கொடிய யானையின் தோலை மார்பில் போர்த்தவன்;
எருது உகந்து ஏறு இறை - இடப வாகனத்தை விரும்பிய இறைவன்;
இலந்தை நீழலைப் பெரிது உகந்தான் இடம் பிரமதேசமே - இலந்தைமரத்தின் கீழே விரும்பி இருப்பவன் உறையும் தலம் பிரமதேசம் ஆகும். (சம்பந்தர் தேவாரம் - 3.115.1 - "ஆலநீழ லுகந்த திருக்கையே" - சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர்);
* இலந்தை - இத்தலத்தின் தலவிருட்சம்;

12)
துணிமதிக் கண்ணியைச் சூடு சுந்தரன்
மணியணி மிடற்றினன் மங்கை பங்கினன்
பணியணி மார்பினன் பாதம் பற்றினார்
பிணியறுப் பானிடம் பிரம தேசமே.

துணிமதி - பிறைச்சந்திரன்;
கண்ணி - தலையில் அணியும் மாலைவகை;
மணி அணி மிடற்றினன் - நீலமணியை அணிந்த கண்டத்தை உடையவன்;
பணி அணி மார்பினன் - பாம்பை மாலையாக அணிந்த மார்பை உடையவன்; (பணி - நாகம்);
பாதம் பற்றினார் பிணி அறுப்பான் - திருவடியைச் சரண் அடைந்தவர்களுடைய தளைகளை நீக்குபவன்;
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

அன்போடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
  • கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு;.
  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;
  • (சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 -
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.)

2) பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=540
-------------- --------------

04.78 – மூவலூர்


04.78மூவலூர்

2014-09-13
மூவலூர் (மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை");
(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு");

1)
மகிழ்வென நாடொறும் வஞ்சவைம் புலன்களின் வழியில் ஏகி
அகழ்குழி விழுந்திடர் அடைவது தீர்ந்திட அடையென் நெஞ்சே
புகழ்மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை புனலி னோடு
முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.

மகிழ்வு என நாள்தொறும் வஞ்ச ஐம்புலன்களின் வழியில் ஏகி - இன்பம் என்று எண்ணித் தினமும் வஞ்சமுடைய ஐம்புலன்களின் வழியிலேயே சென்று;
அகழ்குழி விழுந்து இடர் அடைவது தீர்ந்திட அடையென் நெஞ்சே - அகழ்ந்த குழியில் விழுந்து அல்லல் அடைவது நீங்கிட, என் நெஞ்சமே (மூவலூரை) அடைவாயாக;
புகழ்மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை - புகழ்மிக்க திருநாமத்தைச் சொல்பவர்க்கு வழித்துணை ஆனவன்;
புனலினோடு முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவலூரே - கங்கையோடு இளநிலாவைச் சூடிய முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் மூவலூரை;

அகழ்தல் - தோண்டுதல்;
முகிழ்த்தல் - அரும்புதல்; தோன்றுதல்;

* மூவலூரில் ஈசன் திருநாமம் - மார்க்கசகாயேஸ்வரர்;

2)
தளைவினை தருதுயர் தானழி வெய்திடச் சாரென் நெஞ்சே
வெளைவிடை ஊர்தியன் வெம்புலித் தோலினன் மேரு வில்லி
வளையணி மாதிடம் மகிழ்பரன் கூவிளம் வன்னி மத்தம்
முளைமதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.

தளைவினை - பந்தித்த வினைகள்;
சார்தல் - அடைதல்;
வெளைவிடை - வெள்ளைவிடை;
வெம்புலித் தோலினன் - கொடிய புலியின் தோலை அணிந்தவன்;
மேரு வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
வளை அணி மாது இடம் மகிழ் பரன் - வளையலை அணியும் உமையை இடப்பக்கம் விரும்பிய பரமன்;
கூவிளம் - வில்வம்;

3)
இப்படி இகல்வினை எப்படி நீங்குமென் றெண்ணு நெஞ்சே
செப்பிடு வேன்வழி சென்றடி போற்றிடாய் சேவ தேறும்
ஒப்பிலன் வெங்கரி உரியினைப் போர்த்தவன் உரம லிந்த
முப்புரம் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

இகல்வினை - பகைக்கின்ற / பொருதுகின்ற வினைகள்;
சேஅது ஏறும் ஒப்பிலன் - இடபவாகனத்தை உடைய ஒப்பற்றவன்;
வெங்கரி உரியினைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;
உரம் மலிந்த முப்புரம் எய்தவன் - வலிய முப்புரங்களை ஓர் அம்பினை ஏவி அழித்தவன்;

4)
வந்திடர் செய்திடு வல்வினை ஆயின மாய வேண்டில்
செந்தமிழ் மாலைகள் செப்பிய நாவொடு சேரென் நெஞ்சே
வெந்தவெண் பொடியணி மேனியன் வேணியன் மேரு வில்லால்
முந்தரண் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.

செந்தமிழ் மலைகள் - செம்மை பொருந்திய தமிழான தேவாரப் பதிகங்கள் ;
வேணியன் - சடையினன்;
முந்து அரண் மூன்று எரி - முன்பு முப்புரங்களை எரித்த;

5)
மரணமும் பிறவியும் வருநிலை மாய்ந்திட வாழ்த்து நெஞ்சே
பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்றுழல் பித்தன் அத்தன்
சரணமென் றடிதொழும் தன்னடி யார்க்கரண் சாம வேதன்
முரணெயில் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.

மரணமும் பிறவியும் வரும் நிலை மாய்ந்திட, வாழ்த்து நெஞ்சே - இறப்பும் பிறப்பும் தொடர்ந்து வரும் நிலையானது அழிய, மனமே, நீ வாழ்த்துவாயாக;
பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்று உழல் பித்தன், அத்தன் - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரியும் பேரருளாளன், நம் தந்தை;
சரணம் என்று அடிதொழும் தன் அடியார்க்கு அரண், சாம வேதன் - திருவடியில் சரண்புகுந்த அடியவர்களுக்குக் காவல் ஆனவன், சாமவேதத்தைப் பாடியவன் (சாமகானப் பிரியன்);
முரண் எயில் மூன்று எரி முக்கணன் மேவிய மூவலூரே - பகைத்த முப்புரங்களையும் எரித்தவன், நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

6)
காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே
சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்
தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற
மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

காவல் இங்கு ஆர் எனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே - இங்கே நமக்குப் பாதுகாவல் யார் என்று கவலைப்படுவது ஒழிய, மனமே, நீ எண்ணுவாயாக;
சேவல் அம் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் - அழகிய சேவற்கொடியை உடைய முருகனுக்குத் தந்தை;;
செருந்தி கொக்கின் தூவலும் சூடிய தூயவன் - செருந்தி மலரையும் கொக்கிறகையும் முடிமேல் சூடிய தூயன்; (செருந்தி - ஒரு மலரின் பெயர்); (தூவல் - இறகு); (சம்பந்தர் தேவாரம் - 1.24.6 - "கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார்"); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும்" - கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன்);
இமையவர் துயரம் மாற மூ அரண் எய்தவன் - தேவர்களது துன்பம் தீர முப்புரங்களையும் ஓரம்பால் எய்தவன்; (மாறுதல் - நீங்குதல்; இல்லையாதல்); (அரண் - கோட்டை);
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

7)
படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணியென் நெஞ்சே
அடிதொழு வானவர்க் கருளிய அங்கணன் அண்ட வாணன்
கொடியிடை மாதொரு கூறினன் குளிர்மதி கொன்றை யோடு
முடிமிசைக் கங்கையன் முக்கணன் மேவிய மூவ லூரே.

படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணி என் நெஞ்சே - பூமியில் பல துன்பங்களை அனுபவிப்பது ஒழிய, என் மனமே, நீ தொழுவாயாக;
அடிதொழு வானவர்க்கு அருளிய அங்கணன் - வழிபட்ட தேவர்களுக்கு அருள்செய்த அருட்கண் உடையவன்;
அண்ட வாணன் - அண்ட முழுதும் வாழ்நன் (வாழ்பவன்). வாணன் மரூஉமொழி; (சம்பந்தர் தேவாரம் - 2.7.10 - "...திரு வாஞ்சியத் தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை யல்லலே");
கொடி இடை மாது ஒரு கூறினன் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
குளிர்மதி கொன்றையோடு முடிமிசைக் கங்கையன் - திருமுடிமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் கொன்றைமலரையும் கங்கையையும் சூடியவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

8)
துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே
தென்னிலங் கைக்கிறை சென்னிபத் தடர்வுசெய் தேவ தேவன்
பன்னரும் சீரினன் பாய்புலித் தோலினன் பாவ நாசன்
முன்னொடு பின்னவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே - நம்மைப் பொருந்திய வினைகள் எல்லாம் அழியவேண்டுமென்று நீ விரும்பினால், மனமே, துதிப்பாயாக; (துன்னுதல் - பொருந்துதல்; அடைதல்; செறிதல்); (வேண்டுதல் - விரும்புதல்);
தென் இலங்கைக்கு இறை சென்னி பத்து அடர்வுசெய் தேவதேவன் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய தேவாதிதேவன்;
பன்னரும் சீரினன் - பேசுவதற்கு அரிய புகழை உடையவன்;
பாய்புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை அணிந்தவன்;
பாவ நாசன் - பாவங்களை அழிப்பவன்;
முன்னொடு பின்னவன் - ஆதியும் அந்தமும் ஆயவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

9)
வெம்மலை போல்வினை விலகியின் புற்றிட விரும்பு வாயேல்
கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டடி இணைதொழக் குறுகு நெஞ்சே
செம்மலர் மேலயன் திரைமிசைத் துயிலரி தேடு சோதி
மும்மலம் அற்றவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

வெம் மலைபோல் வினை விலகி இன்புற்றிட விரும்புவாயேல் - கொடிய, மலைபோல் உள்ள வினைகள் நீங்கி இன்பம் பெற விரும்பினால்; (வெம்மை - கடுமை);
கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டு அடி இணை தொழக் குறுகு நெஞ்சே - பறித்த பூக்களாலும் செந்தமிழான தேவாரப் பாமாலைகளாலும் இரு திருவடிகளை வழிபட, நெஞ்சே, அடைவாயாக; (குறுகுதல் - அணுகுதல்);
செம்மலர் மேலயன் திரைமிசைத் துயில் அரி தேடு சோதி - தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல்மேல் துயிலும் திருமாலும் தேடிய தழற்பிழம்பு ;
மும்மலம் அற்றவன் - தூயவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

10)
கிறித்தவம் செய்பவர் கேப்பையில் நெய்யெனல் கேட்க வேண்டா
பறித்தநன் மலர்களைப் பத்தர்கள் இட்டடி பரவும் ஊராம்
எறித்திடு பிறையினன் இமையவர் தேரினில் ஏறி அச்சை
முறித்தெயில் படநகு முக்கணன் மேவிய மூவ லூரே.

கிறித்தவம் - ("கிறி + தவம்" / "கிறித்து + அவம்");
கிறித்தவம் செய்பவர்கள் - 1. பொய்த்தவம் செய்பவர்கள்; (கிறி - பொய்); 2. வஞ்சித்துக் கேடு செய்பவர்கள் ; (கிறித்தல் - வஞ்சித்தல்); (அவம் - கேடு);
(சம்பந்தர் தேவாரம் - 2.23.10 - "புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் ஒத்தவ் வுரைசொல்...");
(அப்பர் தேவாரம் - 6.67.10 - "...பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக் கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே");
கேப்பையில் நெய் எனல் - கேழ்வரகில் நெய் ஒழுகுகின்றது என்று சொல்வதை;
கேட்க வேண்டா - அப்பேச்சைப் பொருளாகக் கொள்ளாதீர்கள்;
பறித்த நன் மலர்களைப் பத்தர்கள் இட்டு அடி பரவும் ஊர் ஆம் - புதுமலர்களைத் தூவிய அடியவர்கள் போற்றுகின்ற ஊர் ஆவது; (பரவுதல் - துதித்தல்);
எறித்திடு பிறையினன் - ஒளிவீசும் பிறைச்சந்திரனை அணிந்தவன்; (எறித்தல் - ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.22.1 - "செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி");
இமையவர் தேரினில் ஏறி அச்சை முறித்து எயில் பட நகு - தேவர்கள் செய்த தேரில் ( / தேவர்களே பாகங்களாக அமைந்த தேரில்) ஏறி, அதன் அச்சை முறித்து, முப்புரங்களும் அழியும்படி சிரித்த; (எயில் - கோட்டை); (படுதல் - அழிதல்); (நகுதல் - சிரித்தல்);
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூர்;
"அப்பெருமானைத் தொழுது உய்க" என்பது குறிப்பு ;

11)
நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவ றுக்கும்
காவலன் கணைதொடு காமனைக் காய்ந்தவன் கடல்நஞ் சுண்டும்
சாவிலன் தண்மதிச் சடையினன் அந்தகன் தனைய ழித்த
மூவிலை வேலினன் முக்கணன் மேவிடம் மூவ லூரே.

நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவு அறுக்கும் காவலன் - தினமும் ஈசன் நாமத்தைச் சொல்லும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்துக் காப்பவன்; (நலிவு - துன்பம்); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்);
கணைதொடு காமனைக் காய்ந்தவன் - மலர்க்கணை தொடுத்த மன்மதனைச் சாம்பலாக்கியவன்;
கடல்நஞ்சு உண்டும் சாவு இலன் - ஆலகால விடத்தை உண்டும் இறவாதவன்;
தண்மதிச் சடையினன் - சடையில் குளிர்ந்த சந்திரனைச் சூடியவன்;
அந்தகன்தனை அழித்த மூவிலை வேலினன் - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்தவன்; (மூவிலை வேல் - திரிசூலம்);
முக்கணன் மேவிடம் மூவலூரே - நெற்றிக்கண்ணனான அப்பெருமான் உறைகின்ற இடம் மூவலூர்;. "அத்தலத்தைச் சென்றடைந்து தொழுது உய்க" என்பது குறிப்பு ;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்புகள் :
1) மூவலூர் - மார்க்கசகாயேஸ்வரர் கோயில் : http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm

2) இத்தலத்தில் (மூவலூரில்) சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். ஆனால் அப்பதிகம் கிடைத்திலது. (பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் 437-ஆம் பாடல் காண்க: "மூவ லூருறை முதல்வரைப் பரவிய மொழியால்...");
----------- --------------

Saturday, October 26, 2019

04.77 – கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) ('சாக்கோட்டை')


04.77 – கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) ('சாக்கோட்டை')

2014-08-29
கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) (கும்பகோணம் அருகுள்ள 'சாக்கோட்டை')
----------------------------------
( 12 பாடல்கள் )
(அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் 'கூவிளம் கூவிளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு; அரையடியுள் வெண்டளை பயிலும்);
(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்");
(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்");

1)
சேர்வினை தீர்வழி என்று தேடிவந் துன்னை அடைந்தேன்
ஆர்விடம் தன்னை மிடற்றில் அடைத்தவ னேஅருள் நல்காய்
ஊர்விடை யின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய்
கார்வயல் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

சேர்வினை - வினைத்தொகை - பல பிறவிகளிற் சேர்த்த வினைகள்;
உன்னை அடைந்தேன் - உன்னைச் சரணடைந்தேன்;
ஆர் விடம்தன்னை - உண்ட விடத்தை; பரவிய நஞ்சை; (ஆர்தல் - உண்ணுதல்; பரவுதல்);
மிடற்றில் - கண்டத்தில்;
ஊர்விடையின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய் - இடபவாகனத்தின்மேல் ஏறிச்சென்று ஊரர் இடும் பிச்சையை ஏற்பவனே; (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்); (விடை - இடபம்);
கார்வயல் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - நீர் நிரம்பிய வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கார் - நீர்);

2)
பழவினை தீர்வழி என்று பாடிவந் துன்னை அடைந்தேன்
மழவிடை ஒன்றை நயந்த மன்னவ னேஅருள் நல்காய்
கழலினிற் கண்மலர் இட்ட கரியவற் காழியை ஈந்தாய்
கழனிகள் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

பழவினை தீர்வழி என்று பாடிவந்து உன்னை அடைந்தேன் - என் பழவினைகள் தீரும் வழி என்று உன் புகழைப் பாடிவந்து உன்னைச் சரணடைந்தேன்;
மழ விடை ஒன்றை நயந்த மன்னவனே அருள் நல்காய் - ஓர் இளைய எருதினை வாகனமாக விரும்பிய அரசனே, அருள்வாயாக;
கழலினிற் கண்மலர் இட்ட கரியவற்கு ஆழியை ஈந்தாய் - உன் திருவடியில் தன் மலர்க்கண்ணை மலராக இட்டு வழிபட்ட திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்தவனே; (இது திருவீழிமிழலை வரலாறு);
கழனிகள் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கழனி - வயல்);

3)
அரும்பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன்
கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவ னேஅருள் நல்காய்
சுரும்பமர் கொன்றை அரவம் தூமதி சேர்செஞ் சடையாய்
கரும்பொழில் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

அரும் பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன் - நீக்குதற்கு அரிய பிறவிப்பிணி தீரவேண்டிப் பக்தியோடு உன்னைச் சரணடைந்தேன்;
கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவனே அருள் நல்காய் - கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனை எரித்தவனே, அருள்வாயாக; (வேள் - மன்மதன்);
சுரும்பு அமர் கொன்றை அரவம் தூ மதி சேர் செஞ்சடையாய் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலர், பாம்பு, தூய திங்கள் இவற்றையெல்லாம் செஞ்சடையில் அணிந்தவனே; (அமர்தல் - விரும்புதல்);
கரும் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - அடர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கருமை - கறுப்பு; பெருமை; பசுமை);
(சம்பந்தர் தேவாரம் - 2.47.10 - "உரிஞ்சாய வாழ்க்கை ... கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்...");

4)
வந்தடை வல்வினை தீர வண்டமிழ் பாடி அடைந்தேன்
சந்திர னைச்சடை வைத்த சங்கர னேஅருள் நல்காய்
வந்தனை செய்யிமை யோர்கள் மகிழ்வுற முப்புரம் அட்டாய்
கந்த மலர்ப்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

வண்டமிழ் - வண் தமிழ் - வளப்பமான தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன;
வந்தனை செய் இமையோர்கள் மகிழ்வுற முப்புரம் அட்டாய் - வந்தித்த தேவர்கள் மகிழும்படி முப்புரங்களை அழித்தவனே; (அடுதல் - அழித்தல்);
கந்த மலர்ப்பொழில் - வாசமலர்கள் நிறைந்த சோலை;

5)
ஒளிவிடம் இன்றித் துரத்தும் உறுவினைக் கஞ்சி அடைந்தேன்
அளிவிடம் தன்னை அயின்ற அணிமிடற் றாய்அருள் நல்காய்
தளியென அன்பர் அகத்தில் தங்கிடு வாய்நறை உண்டு
களியளி ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

ஒளிவு இடம் இன்றித் துரத்தும் உறுவினைக்கு அஞ்சி அடைந்தேன் - தப்பி ஒளித்துக்கொள்ள எவ்விடமும் இல்லாதபடி என்னைத் துரத்தும் மிக்க தீவினைக்கு அஞ்சி உன்னைச் சரணடைந்தேன்;
அளி விடம் தன்னை அயின்ற அணிமிடற்றாய் அருள் நல்காய் - அள்ளி நஞ்சை உண்ட அழகிய நீலகண்டத்தை உடையவனே, அருள்வாயாக; (அளி விடம்தன்னை - விடத்தை அள்ளி; "அள்ளி" என்பது எதுகைநோக்கி இடைக்குறையாக அளி என்று வந்தது; அள்ளுதல் - கையால் முகத்தல்; "அளிவிடம்" என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, "கடல் அளித்த நஞ்சை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அயில்தல் - உண்ணுதல்);
தளி என அன்பர் அகத்தில் தங்கிடுவாய் - அன்பர் நெஞ்சே கோயிலாகக் கொண்டவனே; (தளி - கோயில்);
நறை உண்டு களி அளி ஆர் பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - தேனை உண்டு களிக்கின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே;
(நறை - தேன்); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);

6)
தீவினை ஆயின தீரச் செந்தமிழ் பாடி அடைந்தேன்
சேவினை ஊர்திந யந்த செஞ்சடை யாய்அருள் நல்காய்
நாவினில் நாமம தோதும் நற்றவர்க் காநமற் செற்றாய்
காவிடை வண்டறை கின்ற கலயநல் லூர்ப்பெரு மானே.

சேவினை ஊர்தி நயந்த செஞ்சடையாய் - இடபத்தை வாகனமாக விரும்பிய, செஞ்சடையினனே; (சே - இடபம்);
நாவினில் நாமமதோதும் - நாவினால் திருப்பெயறை ஓதும்; ('ஆல்' என்னாமல் 'இல்' என்றது உருபுமயக்கம் ); (அப்பர் தேவாரம் - 6.62.9 - "எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான் என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னி" - உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்து);
நற்றவர்க்கா நமற் செற்றாய் - நல்ல தவமுடைய மார்க்கண்டேயருக்காகக் காலனை அழித்தவனே;
(நமற் செற்றாய் - நமனைச் செற்றாய்); (செறுதல் - அழித்தல்);
(இலக்கணக் குறிப்பு: பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு. அதுபோல், முதற்சொல்லின் கடைசியில் 'ன்' இருக்கின் அது 'ற்' என்று திரியவும் செய்யும்);
காவிடை வண்டு அறைகின்ற - சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற;

7)
மாமலை போலுள பாவம் மாய்வுற உன்னை அடைந்தேன்
கோமள வல்லியை வாமம் கொண்டவ னேஅருள் நல்காய்
தூமதி யத்தினை நாகம் சுற்றிடச் செஞ்சடை வைத்தாய்
காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

மா மலைபோல் உள பாவம் மாய்வு உற உன்னை அடைந்தேன் - பெரிய மலைபோல் உள்ள தீவினை அழியவேண்டி உன்னைச் சரணடைந்தேன்;
கோமளவல்லியை வாமம் கொண்டவனே அருள் நல்காய் - மென்கொடி போன்ற உமையை இடப்பக்கம் பாகமாகக் கொண்டவனே, அருள்வாயாக; (கோமளம் - மென்மை; அழகு; இளமை); (வல்லி - கொடி);
தூ மதியத்தினை நாகம் சுற்றிடச் செஞ்சடை வைத்தாய் - தூய திங்களைப் பாம்பு சுற்றிக்கொள்ளும்படி அவற்றைச் சிவந்த சடையில் அணிந்தவனே;
காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (காமரு - அழகிய);

8)
நெடிய வினைத்தொடர் நீங்க நின்கழல் போற்றி அடைந்தேன்
முடியினிற் கங்கையைத் தாங்கும் முக்கண னேஅருள் நல்காய்
கொடிய அரக்கனும் பாடிக் கும்பிடக் கண்டு மகிழ்ந்தாய்
கடிமலர் ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

கொடிய அரக்கனும் பாடிக் கும்பிடக் கண்டு மகிழ்ந்தாய் - இராவணனை நசுக்கிப் பின் அவன் அழுது இசைபாடி வழிபடக் கண்டு இரங்கி அருளியவனே;
கடி மலர் ஆர் பொழில் - வாச மலர்கள் நிறைந்த சோலை;

9)
பண்ணிய வல்வினை தீரப் பைந்தமிழ் பாடி அடைந்தேன்
தண்ணில வைச்சடை மீது தாங்கிறை யேஅருள் நல்காய்
மண்ணகழ் மாலொடு வேதன் வாழ்த்திடு மாறுயர் சோதீ
கண்ணிறை பூமலி சோலைக் கலயநல் லூர்ப்பெரு மானே.

பைந்தமிழ் - பசிய தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன; (பைம்மை - பசுமை; பசுமை - குளிர்ச்சி; அழகு;.... );
தண் நிலவைச் சடைமீது தாங்கு இறையே அருள் நல்காய் - குளிர்ந்த திங்களைச் சடையின்மேல் தாங்கிய இறைவனே, அருள்வாயாக;
மண் அகழ் மாலொடு வேதன் வாழ்த்திடுமாறு உயர் சோதீ - மண்ணை அகழ்ந்த திருமாலும் பிரமனும் போற்றும்படி ஓங்கிய சோதியே; (வேதன் - பிரமன்); (சோதீ - சோதியே);
கள் நிறை பூ மலி சோலைக் கலயநல்லூர்ப் பெருமானே - தேன் நிறைந்த பூக்கள் மிக்க சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கண்ணிறை - கள் நிறை); (மலிதல் - மிகுதல்);

10)
அவிவழி கட்கழைக் கின்ற அறிவிலர் சொற்களை நீங்கும்
புவியினில் பெற்றஇவ் வாழ்வின் பொருளென அஞ்செழுத் தோதிச்
செவியினிற் சீரினைக் கேட்கும் சிந்தையர்க் கின்பம் அளிப்பான்
கவினுறு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

அவி வழிகட்கு அழைக்கின்ற அறிவிலர் சொற்களை நீங்கும் - அழிகின்ற மார்க்கங்களுக்கு வாரும் என்று அழைக்கின்ற அறிவிலிகளது பேச்சை மதிக்கவேண்ட; (அவிதல் - அழிதல்); (அவித்தல் - கெடுத்தல்); (நீங்கும் - நீங்குங்கள்);
புவியினில் பெற்ற இவ் வாழ்வின் பொருள் என அஞ்செழுத்து ஓதிச் - மனிதப்பிறவியின் பயன் என்று திருவைந்தெழுத்தை ஓதி; (பொருள் - பயன்);
செவியினிற் சீரினைக் கேட்கும் சிந்தையர்க்கு இன்பம் அளிப்பான் - காதால் சிவனது திருப்புகழைக் கேட்கும் விருப்பம் உடையவர்களுக்கு இன்பத்தை அளிப்பவன்; (செவியினில் - செவியினால் - உருபு மயக்கம்);
கவினுறு - அழகிய;

11)
சிலந்தியின் தொண்டினைக் கண்டு செகந்தனை ஆள்நிலை தந்தான்
சலந்தரி செஞ்சடை ஈசன் தரைமிசை ஆழியைக் கீறிச்
சலந்தரன் தன்னை அழித்த சதுரினன் பூதங்கள் தம்மைக்
கலந்தவன் நங்கையொர் பங்கன் கலயநல் லூர்ப்பெரு மானே.

* அடி-1 - திருவானைக்கா வரலாறு - சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தது;
* அடி-2, 3 - சலந்தராசுரனை அழித்த வரலாறு;

சிலந்தியின் தொண்டினைக் கண்டு செகந்தனை ஆள் நிலை தந்தான் - திருவானைக்காவில் சிலந்தி செய்த திருத்தொண்டைக் கண்டு மகிழ்ந்து அச்சிலந்தியை உலகை ஆளும் கோச்செங்கட்சோழ அரசனாகப் பிறப்பித்தவன்; (செகம் - உலகம்);
சலம் தரி செஞ்சடை ஈசன் - கங்கையைச் சிவந்த சடையில் தரித்த ஈசன்;
தரைமிசை ஆழியைக் கீறிச் சலந்தரன் தன்னை அழித்த சதுரினன் - நிலத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்த வல்லவன்; (ஆழி - சக்கரம்); (சதுர் - சாமர்த்தியம்; ஆற்றல்; (சதுர்+இன்+அன் = சதுரினன் = சதுரன் = சமர்த்தன்);
பூதங்கள் தம்மைக் கலந்தவன் - ஐம்பூதங்களாகிக் கலந்து நின்றவன்; பூதகணங்களொடு இருப்பவன்; (திருவாசகம் - 8.31.10 - "பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்"); (அப்பர் தேவாரம் - 6.1.1 - "அரியானை ... கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே");
நங்கை ஒர் பங்கன் - உமை ஒரு பங்கன்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;

12)
நெய்தழு வுந்திரி சூலன் நீர்தழு வுஞ்சடை அண்ணல்
மைதழு வும்மணி கண்டன் மான்மறி ஏந்திய கையன்
பொய்தழு வாமனத் தோடு புதுமலர் தூவிநின் றேத்திக்
கைதொழு வார்துயர் தீர்க்கும் கலயநல் லூர்ப்பெரு மானே.

நெய் தழுவும் திரிசூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (தழுவுதல் - சூழ்தல்; பூசுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலை வேல்..." - ஆயுதங்கள் துருப்பிடியாவாறு நெய் பூசிவைத்தல் மரபு);
நீர் தழுவும் சடை அண்ணல் - சடையில் கங்கையைத் தாங்கிய தலைவன்;
மை தழுவும் மணிகண்டன் - கரிய மணி திகழும் கண்டத்தை உடையவன்; (மை - கறுப்பு );
மான்மறி ஏந்திய கையன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;
பொய் தழுவா மனத்தோடு புதுமலர் தூவிநின்று ஏத்திக் கைதொழுவார் துயர் தீர்க்கும் - வஞ்சம் அற்ற மனத்தர் ஆகிப் புதிய பூக்களைத் தூவி வாழ்த்திக் கைகூப்பி வணங்கும் பக்தர்களது துயரைத் தீர்ப்பவன்;
கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :

 1) யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் "கூவிளம் கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு;

  • அரையடியுள் வெண்டளை பயிலும்;

  • 3-ஆம் சீர் 4-ஆம் சீர் இடையே வெண்டளை இருக்கவேண்டியது இல்லை.

  • அரையடியின் ஈற்றுச் சீர் (3,6-ஆம் சீர்கள்) மாச்சீராகவே அமையும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


2) உதாரணம்:

சம்பந்தர் தேவாரம் - 2.67.1 -

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்

விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்

கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்

பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே


3) கலயநல்லூர் - திருக்கலயநல்லூர் - இக்காலத்தில் 'சாக்கோட்டை' என்ற பெயரில் வழங்குகின்றது. இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.
கலயநல்லூர் ('சாக்கோட்டை') - அமிர்தகடேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=379
திருக்கலயநல்லூர் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=76
----------- --------------