Saturday, February 17, 2018

04.12 – பாற்றுறை


04.12பாற்றுறை



2013-09-25
பாற்றுறை ( திருவானைக்காவிலிருந்து கல்லணை செல்லும் வழியில் கல்லணைக்கு அருகே 'பனையபுரம்' என்ற ஊருக்குப் பக்கத்தில் இத்தலம் உள்ளது)
----------------------------------
(கலிவிருத்தம் - 'விளம் விளம் மா விளம்' என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")



1)
சுழியினார் கங்கையைச் சூடும் முடியினார்
விழியினால் மன்மதன் வேவ நோக்கினார்
பழியிலார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
அழிவிலார் அடியடை அன்பர்க் கின்பமே.



சுழியின் ஆர் கங்கை - நீர்ச்சுழிகள் மிக்க கங்கை; (இன் - அசை); பழி இலார் - குற்றம் அற்றவர்; பாங்கர் - பக்கம்;



2)
திங்களும் கங்கையும் திகழும் முடியனை
அங்கையில் அழலனை ஆகத் துமையொரு
பங்கனைக் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைத்
தங்கிய சம்புவைச் சார இன்பமே.



ஆகம் - மேனி; தங்குதல் - நிலைத்து உறைதல்; சம்பு - சுகத்தைத் தருபவன் - சிவன்; சார்தல் - பொருந்துதல்;
இலக்கணக் குறிப்பு : "பாற்றுறைத் தங்கிய" - (பாற்றுறையின்கண் தங்கிய) - ஏழாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் வலி மிகும்.



3)
விடையனை நான்மறை விரித்த ஆலனைப்
புடையினில் பெண்ணனைப் பொலியும் கூர்மழுப்
படையனைக் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைச்
சடையனை அடிதொழச் சாரும் இன்பமே.



விரித்தல் - விளக்கிச்சொல்லுதல்; ஆலன் - கல்லால மரத்தின்கீழ் இருப்பவன்; (சுந்தரர் தேவாரம் - 7.85.9 - "...கூடலை யாற்றூரில் ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே"); புடை - பக்கம்; படை - ஆயுதம்;



4)
வடியினார் சூலமும் மழுவும் ஏந்தினார்
கொடியனார் இடுபலி கொள்ளக் கடையடை
படிறனார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறைக்
குடியினார் அடிதொழக் கூடும் இன்பமே.



வடி - கூர்மை; கொடி அனார் - கொடி போன்ற பெண்கள்; இடுபலி - இடுகின்ற பிச்சை; கடை அடை - வீட்டின் வாயிலை அடைகின்ற; படிறன் - பொய்யன்; வஞ்சகன்; குடியினார் - வாழ்விடமாக உடையவர்;



5)
அம்புலி கூவிளம் அரவு சூடியைக்
கொம்பனை யாளொரு கூறு நாடியைப்
பைம்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நம்பனை அடிதொழ நாளும் இன்பமே.



கூவிளம் - வில்வம்; சூடி - சூடியவன்; கொம்பு அனையாள் - பூங்கொம்பு போன்ற பார்வதி; நாடி - நாடியவன் - விரும்பியவன்; (ஆடுபவன் - ஆடி, சூடுபவன் - சூடி, பாடுபவன் - பாடி, என்பன போல், நாடுபவன் - நாடி); (உதாரணம்: திருவாசகம் - 8.39.2 - "சடையானே தழலாடீ"); பைம்புனல் - "பைம்புனல் என்பதில், பசுமை - புதுமையின் மேலும், குளிர்ச்சியின்மேலும் நின்றது". நம்பன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர்; விரும்பத் தக்கவன் என்பது பொருள்;



6)
குரவனார் சடைமிசைக் கோல மதியினார்
அரவனார் ஆதியும் அந்தம் ஆகிய
பரமனார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
பரவினார் பழவினை பறையும் திண்ணமே.



குரவன் - தலைவன்; கோல மதி - அழகிய பிறைச்சந்திரன்; அரவன் - பாம்பை அணிந்தவன்; பரவினார் - துதிப்பவர்கள்; (பரவுதல் - புகழ்தல்; துதித்தல்); பறைதல் - அழிதல்;



7)
சூடினார் கொன்றையைச் சுடலை தனில்நடம்
ஆடினார் அன்பருக் கன்பர் அருமறை
பாடினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
நாடினார் பழவினை நலியும் திண்ணமே.



நாடினார் - நாடியவர்கள்; நலிதல் - அழிதல்;



8)
மதியிலாத் தசமுகன் வாட ஓர்விரல்
நுதியினால் நெரித்தருள் நோக்கும் கயிலையம்
பதியினார் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மதியினார் அடிதொழ மல்கும் இன்பமே.



மதி இலாத் தசமுகன் - அறிவற்ற இராவணன்; நுதி - நுனி; அருள் நோக்குதல் - அருட்பார்வையால் நோக்குதல்; கயிலை அம் பதியினார் - அழகிய கயிலையில் உறைபவர்; (பதி - உறைவிடம்); (அம் - அழகிய; சாரியை என்றும் கொள்ளலாம்); மதியினார் - பிறை சூடியவர்; (அப்பர் தேவாரம் - 4.37.6 - "....நெய்த் தான மேய கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே."); மல்குதல் - மிகுதல்; நிறைதல்;



9)
பூவினான் மாலிவர் போற்று சோதியான்
சேவினான் திரிபுரம் செற்ற சிலையினான்
பாவினால் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேவினான் அடிதொழ வீடும் வினைகளே.



பூவினான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்; மால் - திருமால்; சே - எருது; சிலை - வில்; பாவினால் - பாமாலைகளைப் பாடி; மேவுதல் - உறைதல்; வீடுதல் - நீங்குதல்;



10)
பேய்மனப் பிட்டர்கள் பேசும் பொய்விடும்
ஆய்மல ராற்றொழும் அன்பர்க் கன்பினன்
பாய்புனற் கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மேயவன் அடிதொழ வீடும் வினைகளே.



பிட்டர் - பிரட்டர் (பிரஷ்டர் என்ற வடசொல்லின் திரிபு) - நெறியிலிருந்து வழுவினவர்; ஆய்மலராற்றொழும் - ஆய்மலரால் தொழும் - ஆய்ந்தெடுத்த சிறந்த பூக்களால் வழிபடும்; மேயவன் - உறைபவன்;



11)
துணிமதி சூடியைச் சூலப் படையனை
அணியுமை பங்கனை அரையில் நாணெனப்
பணியணி கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை
மணியினை அடிதொழ மல்கும் இன்பமே.



துணிமதி - பிறைச்சந்திரன்; (துணிதல் - வெட்டுண்ணுதல்); அணி - அழகு; அரையில் நாண் என - இடுப்பில் அரைநாணாக; பணி அணி - நாகப்பாம்பை அணிந்த; (பணி - நாகம்); கொள்ளிடப் பாங்கர்ப் பாற்றுறை மணியினை - கொள்ளிடக் கரையில் உள்ள திருப்பாற்றுறையில் உறைகின்ற மணி போன்றவனை;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) யாப்புக் குறிப்பு :
கலிவிருத்தம் - 'விளம் விளம் மா விளம்' என்ற வாய்பாடு.
மூன்றாம் சீர் (மாச்சீர்) குறில் / குறில்+ஒற்று என்று முடியும்.
இவ்வமைப்புப் பெரும்பாலும் கீழ்க்காணும் தேவாரப் பதிகங்களை ஒத்தது.
சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்"
திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்"
அப்பதிகங்களில் அடிதோறும் ஈற்றுச் சீர் கூவிளம். ஆனால் இப்பதிகத்தில் அடி ஈற்றுச் சீரில் அக்கட்டுப்பாடு இன்றி எவ்வகை விளச்சீரும் வரலாம்.



2) பாற்றுறை - திமூலேஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=116



----------- --------------

04.11 – ஆக்கூர்



04.11ஆக்கூர்



2013-09-21
ஆக்கூர் (இத்தலம் திருக்கடவூர்க்கு அருகே உள்ளது)
----------------------------------
( 12 பாடல்கள் )
(திருக்குறுந்தொகை அமைப்பில் - கலிவிருத்தம்)



1)
வையம் வந்து வணங்கும் வரதனோர்
கையில் வெள்ளைக் கபாலம் தனையேந்தி
ஐயம் தேரும் அணியாரும் ஆக்கூரில்
தையல் பங்கினன் தான்தோன்றி அப்பனே.



ஐயம் - பிச்சை; தேர்தல் - கொள்ளுதல்; தேரும் - கொள்வான்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); அணி ஆரும் - அழகிய; தையல் - பெண் - இங்கே பார்வதி; தான்தோன்றியப்பன் - ஆக்கூர் ஈசன் திருநாமம்;
(இலக்கணக் குறிப்பு : செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று - ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.)



2)
எங்கும் என்றும் இருப்பவன் அன்பர்க்குப்
பொங்கும் இன்பம் அருளிப் புரப்பவன்
அங்கம் பூணும் அணியாரும் ஆக்கூரில்
சங்கம் ஆர்கரன் தான்தோன்றி அப்பனே.



அங்கம் - எலும்பு; பூணும் - அணிபவன்; (செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று); சங்கம் ஆர் கரன் - வளையல் பொருந்திய கையினன் - அர்த்தநாரீஸ்வரன்;



3)
கண்ணி ரண்டும் கசியக் கரம்கூப்பி
எண்ணி நிற்கும் அடியார்க் கிடர்நீக்கி
அண்ணி நிற்கும் அணியாரும் ஆக்கூரில்
தண்ண திச்சடைத் தான்தோன்றி அப்பனே.



அண்ணி - நெருங்கி; (அண்ணி நிற்கும் - அடுத்திருப்பான்); (அண்ணுதல் - கிட்டுதல்); தண்ணதிச்சடை - தண் நதிச் சடை - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கிய;



4)
அஞ்சி உம்பர் அடிதொழக் கண்டத்தில்
நஞ்ச டைத்தவன் நன்னீர் நதியடை
அஞ்ச டைப்பரன் அணியாரும் ஆக்கூரில்
தஞ்ச ளிப்பவன் தான்தோன்றி அப்பனே.



உம்பர் - தேவர்; அஞ்சடைப்பரன் - அம் சடைப் பரன் - அழகிய சடையை உடைய மேலானவன்; தஞ்சு - தஞ்சம்;



5)
இலையே என்னா திரப்பவர்க் கீபவன்
சிலையால் மூவெயில் தீயெழச் செற்றவன்
அலையார் சென்னி அணியாரும் ஆக்கூரில்
தலையாய் நின்றவன் தான்தோன்றி அப்பனே.



இலை - இல்லை; சிலை - வில்; மூ எயில் - முப்புரம்; அலை ஆர் சென்னி - கங்காதரன்;
(இலக்கணக் குறிப்பு : அடையடுத்த ஆகுபெயர்: வெற்றிலை நட்டான் - இலை என்னும் சினைப் பெயர் அடையடுத்து முதற்பொருளுக்கு ஆனமையால் அடையடுத்த ஆகுபெயர்.).
(உதாரணம்: சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ" - 'திருமேனி' என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது);
தலை - தலைவன்;



6)
விமலன் மாவடு வைக்கண மங்கலக்
கமரில் வந்து கடித்தவன் இன்னமு
தமரர்க் கீந்தான் அணியாரும் ஆக்கூரில்
தமருக் குற்றவன் தான்தோன்றி அப்பனே.



விமலன் - மலமற்றவன்; கமர் - நிலத்தில் இருக்கும் வெடிப்பு ; இன் அமுது அமரர்க்கு ஈந்தான் - இனிய அமுதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தவன்; தமர் - அடியவர்கள்; உற்றவன் - சுற்றத்தான்; (அப்பர் தேவாரம் - 6.85.6 - "உற்றவன்காண் உறவெல்லாம் ஆவான் தான்காண்"); (அப்பர் தேவாரம் - 6.95.1 - "அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ");
* மாவடுவைக் கணமங்கலக் கமரில் வந்து கடித்தவன் - அரிவாட்டாய நாயனார்க்கு அருளியதைச் சுட்டியது; கணமங்கலம் - அரிவாட்டாய நாயனார் வாழ்ந்த ஊர்; (கணமங்கலம் - சோழ நாட்டில் திருத்துறைப்பூண்டியின் வடபால் உள்ளது);



7)
மங்கை பங்கனே கங்கை முடியனே
எங்கள் நாதனே என்றடி யார்தொழும்
அங்கைத் தீயன் அணியாரும் ஆக்கூரில்
சங்க டங்களை தான்தோன்றி அப்பனே.



அங்கைத் தீயன் - கையில் தீயை ஏந்தியவன்; சங்கடம் களை - வருத்தத்தைப் போக்கும்;



8)
கருவம் மிக்குக் கயிலையைப் பேர்த்தவன்
வெருவப் பாத விரலிட் டடர்த்துவாள்
அருளும் அண்ணல் அணியாரும் ஆக்கூரில்
தருக ரத்தினன் தான்தோன்றி அப்பனே.



கருவம் - கர்வம் - செருக்கு; ஆணவம்; மிக்கு - மிகுந்து; வெருவ - அஞ்சும்படி; (வெருவுதல் - பயப்படுதல்); பாத விரல் இட்டு அடர்த்து - திருப்பாத விரல் ஒன்றைச் சற்று ஊன்றி அவனை நசுக்கி; வாள் அருளும் அண்ணல் - இராவணனுக்குச் சந்திரஹாசம் என்ற வாளை அருளிய பெருமான்; தரு கரத்தினன் - கொடுக்கின்ற கையை உடையவன்; (வரத ஹஸ்தன்);



9)
செங்கண் மாலொடு செந்தா மரையானும்
எங்கும் நேடிய எல்லையில் சோதியன்
அங்கண் அண்ணல் அணியாரும் ஆக்கூரில்
தங்கு கின்றவன் தான்தோன்றி அப்பனே.



செங்கண் மாலொடு செந்தாமரையானும் - செங்கண் உடைய திருமாலும் செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும்; எங்கும் நேடிய - வானிற் பறந்தும் மண்ணை அகழ்ந்தும் தேடிய; எல்லை இல் சோதியன் - அளவற்ற சோதி ஆனவன்; அங்கண் அண்ணல் - அருள்நோக்கு உடைய பெருமான்; தங்குகின்றவன் - நீங்காது உறைகின்றவன்;



10)
கடையர் கட்டிய கட்டுரை கொள்ளன்மின்
சடையில் வெண்பிறை சூடிதன் தாளிணை
அடைய வல்லார்க் கணியாரும் ஆக்கூரில்
தடைகள் தீர்ப்பவன் தான்தோன்றி அப்பனே.



கடையர் - கீழோர்; இழிந்தோர்; கட்டிய கட்டுரை - புனைந்து கூறும் பொய்ம்மொழிகள்; கொள்ளன்மின் - ஏற்றுக் கொள்ளாதீர்கள்;
"தன் தாளிணை அடைய வல்லார்க்குத் தடைகள் தீர்ப்பவன் அணி ஆரும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனே" என்று இயைக்க.



11)
ஈந்து வந்த சிறப்புலி ஏத்திய
பாந்தள் வேணியன் பாற்கடல் நஞ்சினை
ஆர்ந்த கண்டன் அணியாரும் ஆக்கூரில்
சார்ந்த வர்க்கருள் தான்தோன்றி அப்பனே.



ஈந்து உவந்த சிறப்புலி - கொடுத்து மகிழ்ந்த சிறப்புலி; ('ஈந்து வந்த' என்றுகொண்டு, 'எப்பொழுதும் ஈதலைச் செய்த சிறப்புலி' என்றும் பொருள் கொள்ளலாம்);
63 நாயன்மார்களுள் சிறப்புலி நாயனார் ஒருவர். அவர் ஆக்கூரில் வாழ்ந்தவர். (7.39.6 - திருத்தொண்டத்தொகை - "...சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்...");
பாந்தள் - பாம்பு; வேணி - சடை; ஆர்தல் - உண்ணுதல்; சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; பொருந்தியிருத்தல்;



12)
சலமு லாவிய தாழ்சடைச் சங்கரன்
அலகில் சீரன் அருந்தமிழ் பாடித்தேன்
அலரிட் டார்கட் கணியாரும் ஆக்கூரில்
சலமி லாதவன் தான்தோன்றி அப்பனே.



சலம் உலாவிய தாழ்சடை - கங்கை உலாவுகின்ற தாழும் சடையை உடைய; (சலம் - ஜலம் - நீர்); அலகு இல் சீரன் - அளவில்லாத புகழ் உடையவன்; அரும் தமிழ் பாடித் தேன் அலர் இட்டார்கட்கு - அரிய தமிழான தேவாரம் திருவாசகம் முதலியன பாடித் தேன் பொருந்திய மலர் தூவும் அடியவர்களுக்கு ; சலம் இலாதவன் - வஞ்சம் இன்றி அருள்பவன்; (சலம் - வஞ்சனை; பட்சபாதம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்..."); அணி அரும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனே - அழகிய ஆக்கூரில் உறைகின்ற, தான்தோன்றி அப்பன் என்ற திருநாமம் உடைய சிவபெருமான்;



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) ஆக்கூர் - தான்தோன்றீஸ்வரர் கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=208



----------- --------------




04.10 – பூவாளூர்


04.10பூவாளூர்



2013-09-04
பூவாளூர் (இத்தலம் லால்குடிக்கு அருகு உள்ளது )
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.43.1 - "கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தம் கதிர்மதியம்")



1)
கானாறு கணையெய்த காமனுடல் பொடிசெய்தாய்
வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்துகந்தாய்
ஊனாறு சிரமேந்தீ உன்னடியேற் கருள்புரியாய்
பூநாறு பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



கான் - மணம்; வாசனை; நாறுதல் - மணம் வீசுதல்; வானாறு - வான் ஆறு - கங்கை; வார்தல் - நீள்தல்; ஏந்தீ - ஏந்தியே - ஏந்தியவனே என்ற விளி;
கான் நாறு கணை எய்த காமன் உடல் பொடி செய்தாய் - மணம் வீசும் மலர்க்கணையை எய்த மன்மதன் உடலை எரித்துச் சாம்பலாக்கியவனே;
வானாறு மதித்துண்டம் வார்சடையில் வைத்து உகந்தாய் - கங்கையையும் பிறைச்சந்திரனையும் நீண்ட சடையில் சூடி மகிழ்ந்தவனே;
ஊன் நாறு சிரம் ஏந்தீ; உன் அடியேற்கு அருள்புரியாய் - புலால் நாற்றம் வீசும் பிரமன் தலையை ஏந்தியவனே; உன் பக்தனான எனக்கு அருள்புரிவாயாக;
பூ நாறு பொழில் ஆரும் பூவாளுர் மேயவனே - பூக்கள் மணம் வீசும் சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.



2)
நற்றவனே நாளுமுனை நம்பியடி பணிவார்கட்
குற்றவனே ஊர்விடையொன் றுகந்தேறும் கொற்றவனே
சொற்றமிழால் துணையடியே துதிப்பேற்கும் அருள்புரியாய்
புற்றரவா பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



நம்புதல் - விரும்புதல்; உற்றவன் - உற்ற துணையாக இருப்பவன்; கொற்றவன் - அரசன்; சொற்றமிழ் - சொல் + தமிழ்; துணையடி - இரு திருவடிகள்; துதிப்பேற்கும் - துதிக்கின்ற அடியேனுக்கும்; புற்றரவா - புற்றில் வாழும் தன்மை உடைய அரவத்தை அணிந்தவனே;



3)
பண்ணியலும் பாடலுக்கு மிழலைதனில் படியருள்வாய்
தண்ணியலும் சந்திரனைச் சடைவைத்தாய் அடிபரவில்
பண்ணியவல் வினைதீர்ப்பாய் பணிந்தேற்குப் பரிந்தருளாய்
புண்ணியனே பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



* அடி-1 திருவீழிமிழலையில் சம்பந்த்ருக்கும் அப்பருக்கும் தினமும் படிக்காசு அருளியதைச் சுட்டியது.
தண் - குளிர்ச்சி; பரவில் - பரவினால்; துதித்தால்; பணிந்தேற்கு - பணிந்து தொழும் எனக்கு; பரிதல் - இரங்குதல்;



4)
முன்னிடையாய் முடிவானாய் மூவாத முக்கண்ணா
மின்னிடையாள் பங்கினனே வெள்விடையாய் மழுப்படையாய்
என்னுடையாய் என்றுன்னை ஏத்தலல்லால் மற்றறியேன்
புன்சடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



முன் இடை ஆய் முடிவு ஆனாய் - முதல், நடு ஆகி முடிவு ஆனவனே;
மூவாத முக்கண்ணா - என்றும் இளமையோடு இருக்கும் முக்கண்ணனே;
மின் இடையாள் பங்கினனே - மின்னற்கொடி போல் நுண்ணிய இடையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்தவனே;
வெள் விடையாய் - வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவனே;
மழுப்படையாய் - மழுவாயுதத்தை ஏந்தியவனே;
என் உடையாய் என்று உன்னை ஏத்தல் அல்லால் மற்று அறியேன் - 'என் சுவாமீ ' என்று உன்னைத் துதித்தல் அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன்;
புன்சடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே - செஞ்சடை உடையவனே; சோலைகள் பொருந்திய பூவாளூர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே. (அருள்புரிவாயாக).



5)
துரிசடையா நெஞ்சத்தார் துதிசெய்து மகிழ்கின்ற
பரிசுடையாய் பாரிடங்கள் முழவார்க்கப் பல்பிணங்கள்
எரிசுடலை யிடையாடீ இணையடியை மறவேனே
புரிசடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



துரிசு - குற்றம்; பரிசு - குணம்; பெருமை; பாரிடம் - பூதம்; முழவு ஆர்க்க - முழவுகளை ஒலிக்க; பல்பிணங்கள் எரி சுடலையிடை ஆடீ - பல பிணங்கள் எரியும் சுடலையில் ஆடுபவனே; புரிசடையாய் - முறுக்கிய சடையை உடையவனே;



6)
கற்சிலையைக் கையேந்திக் கணையொன்றால் புரமெரித்த
அற்புதனே தொழுமிரதிக் கருள்புரிந்தாய் உன்னிரண்டு
நற்பதமே நாடிவந்தேன் நரைவிடையாய் நஞ்சுண்ணும்
பொற்புடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



கற்சிலை - கல் + சிலை - மேருமலையாகிய வில்; தொழும் இரதிக்கு அருள்புரிந்தாய் - தொழுத இரதிக்கு இரங்கி மன்மதனுக்கு உயிர்கொடுத்தவனே; (இரதிக்கு அருள்புரிந்த வரலாற்றைப் பூவாளூர்த் தலபுராணத்திற் காண்க). பொற்பு - தன்மை;



7)
நதியணியும் நாதாஉன் நாமத்தை மறவேனே
துதியடியார்க் கணியாகித் துயர்துடைப்பாய் இரதிக்குப்
பதியவனை உயிர்ப்பித்த பரிவுடையாய் பழையவனே
புதியவனே பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



இரதிக்குப் பதி - மன்மதன்;



8)
வலியதனைக் கருதிவந்து மலையெடுத்த வாளரக்கன்
மெலியவொரு விரலூன்றி மிகவுமருள் புரிந்தவனே
கலியடையா வாறென்னைக் காத்தருளாய் கண்ணுதலே
புலியதளாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



வலி அதனை - தன் வலிமையை; வாள் அரக்கன் - கொடிய இராவணன்; (வாள் - கொடுமை); மெலிதல் - வருந்துதல்; கலி - துன்பம்; புலி அதளாய் - புலித்தோலை அணிந்தவனே; (அதள் - தோல்);



9)
கருவமலி நெஞ்சினராய்க் கழலுச்சி காணமுயல்
இருவரறி தற்கரிய எரியானாய் இருள்கொண்ட
ஒருமிடறு திகழ்வோனே உனைப்பரவும் எனக்கருளாய்
பொருவிடையாய் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



கருவம் மலி நெஞ்சினராய்க் கழல் உச்சி காண முயல் இருவர் - ஆணவத்தோடு அடியும் முடியும் தேடிய திருமாலும் பிரமனும்; (கருவம் - கர்வம், செருக்கு); (அப்பர் தேவாரம் - இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை - 5.95.6 - "...தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே"); ஒரு மிடறு - ஒப்பற்ற கண்டம்; பரவுதல் - புகழ்தல்; துதித்தல்; பொருதல் - போர்செய்தல்;



10)
நள்ளார்கள் அரனடியை; நாக்கொண்டு பொய்யல்லால்
விள்ளார்கள்; அவர்பிதற்றும் வெற்றுரையைப் பொருளாகக்
கொள்ளார்கள் நன்மதியோர்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்
புள்ளார்பூம் பொழிலாரும் பூவாளுர் மேயவனே.



நள்ளார்கள் - விரும்பமாட்டார்கள்; (நள்ளுதல் - நட்டல் - விரும்புதல்); நாக்கொண்டு - நாக்கால்; பொய் அல்லால் - பொய்யைத் தவிர வேறு ஒன்றும்; விள்ளார்கள் - சொல்லமாட்டார்கள்; (விள்ளுதல் - சொல்லுதல்); கொள்ளார்கள் - மதிக்கமாட்டார்கள்;
கொள்ளார்கள் நன்மதியோர் கும்பிடுவார் வினைதீர்ப்பான் - "....கொள்ளார்கள் நன்மதியோர்; நன்மதியோர் அரனடியைக் கும்பிடுவார்; கும்பிடுவார் வினைதீர்ப்பான்...." என்றும் பொருள்கொள்ளலாம்;
புள் ஆர் பூம்பொழில் - பறவைகள் ஒலிக்கும் சோலைகள்;



11)
நாகமணி மார்பினனே நயந்துண்ட நஞ்சதனால்
மேகமணி கண்டத்தாய் வெற்பரையன் மங்கையொரு
பாகமணி ஆகத்தாய் பணிவார்க்குப் பரிவாய்முப்
போகமணி வயல்சூழ்ந்த பூவாளுர் மேயவனே.



பதம் பிரித்து:
நாகம் அணி மார்பினனே; நயந்து உண்ட நஞ்சு அதனால்
மேகம் அணி கண்டத்தாய்; வெற்பு அரையன் மங்கை ஒரு
பாகம் அணி ஆகத்தாய்; பணிவார்க்குப் பரிவாய்; முப்
போகம் அணி வயல் சூழ்ந்த பூவாளுர் மேயவனே.


மேகமணி கண்டத்தாய் - மேக மணி கண்டத்தாய் / மேகம் அணி கண்டத்தாய்; (அப்பர் தேவாரம் - 6.68.4 - "ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை ... கார்மேக மிடற்றானை ..."); (திவ்வியப்பிரபந்தம் - பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - #2267 - "...மெய்த்தவத்தால் காண்பரிய மேகமணி வண்ணனையான் எத்தவத்தால் காண்பன்கொல் இன்று");
முப்போகமணி வயல் - முப்போகம் அணி வயல் / முப்போக மணி வயல்;
பாம்பை மாலையாக மார்பில் அணிந்தவனே; விரும்பி உண்ட விடத்தால் கழுத்தில் மேகம்போல் கருமை திகழ்பவனே; மலைமகளை ஒரு பாகமாகக் கொண்ட திருமேனி உடையவனே; பணிகின்ற பக்தர்களுக்கு இரங்குபவனே; வருடத்திற்கு மூன்று போகம் விளைச்சல் திகழும் செழுமையான வயல்கள் சூழ்ந்த பூவாளுர் என்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவனே.



அன்பொடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்புகள் :
1) பூவாளூர் - திருமூலநாதர் சுவாமி கோயில் : தினமலர் தளத்தில் : http://temple.dinamalar.com/New.php?id=2229



----------- --------------