Friday, March 31, 2023

08.02.184 – கச்சி ஏகம்பம் - கொற்றத்தினை அத்தத்தினை - (வண்ணம்)

08.02.184 – கச்சி ஏகம்பம் - கொற்றத்தினை அத்தத்தினை - (வண்ணம்)

2007-05-01

08.02.184 - கொற்றத்தினை அத்தத்தினை - (கச்சி ஏகம்பம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன

தத்தத்தன தத்தத் தனதன .. தனதான )

(முத்தைத்தரு பத்தித் திருநகை - திருப்புகழ்)


கொற்றத்தினை அத்தத் தினைமிக

.. .. .. இச்சித்துல கத்திற் பலபல

.. .. குற்றத்தினை மிக்குச் செயவரு .. வினைகூடக்

.. கொட்டத்தொடு சுற்றிப் பெரியவர்

.. .. .. திட்டத்திரி துட்டச் சிறுமதி

.. .. கொச்சைத்தனம் அற்றுத் திருவடி .. தொழுவேனோ


புற்றுப்பணி சுற்றித் திகழ்தர

.. .. .. அச்சைத்தரு மற்பற் புலியுரி

.. .. பொற்பட்டென நச்சித் தரிதிரு .. உடையானே

.. பொய்த்தத்துவ மட்டர்க் கவ(ம்)மலி

.. .. .. பிட்டர்க்கறி வற்றுப் புறனுரை

.. .. பொக்கத்தின ருக்குப் பழவினை .. களையானே


பற்றற்றுள பத்தர்க் கருளிடு

.. .. .. பக்கத்தின தட்பத் திரையடை

.. .. பட்டுச்சடை நிற்கப் பனிமதி .. புனைவோனே

.. பக்கத்தினில் வெற்புக் கிறைமகள்

.. .. .. வைத்துக்கலை பற்றிச் சுரரடி

.. .. பற்றிப்புகழ் செப்பக் கடல்விடம் .. அணிவோனே


பெற்றக்கொடி கட்டித் திகழ்தளி

.. .. .. பெற்றுத்திரு வுற்றுப் பொலிதரு

.. .. பெற்றிப்புரி கச்சிப் பதிதனில் .. உறைவோனே

.. பிட்டுக்கென அற்றைத் தினமடி

.. .. .. பட்டுத்தரு மிக்குத் தனமது

.. .. பெற்றுத்தரு பெட்பைப் புவிமொழி .. பெருமானே.



பதம் பிரித்து:

கொற்றத்தினை அத்தத்தினை மிக

.. .. .. இச்சித்து, உலகத்திற் பலபல

.. .. குற்றத்தினை மிக்குச் செய, அருவினை கூடக்,

.. கொட்டத்தொடு சுற்றிப், பெரியவர்

.. .. .. திட்டத் திரி துட்டச் சிறுமதி,

.. .. கொச்சைத்தனம் அற்றுத், திருவடி தொழுவேனோ;


புற்றுப்-பணி சுற்றித் திகழ்தர,

.. .. .. அச்சைத் தரு மற்-பற்-புலியுரி

.. .. பொற்பட்டு என நச்சித் தரி-திரு உடையானே;

.. பொய்த்-தத்துவ மட்டர்க்கு, அவ(ம்) மலி

.. .. .. பிட்டர்க்கு, அறிவு அற்றுப் புறன் உரை

.. .. பொக்கத்தினருக்குப் பழவினை களையானே;


பற்றற்று உள பத்தர்க்கு அருளிடு

.. .. .. பக்கத்தின; தட்பத்-திரை அடை-

.. .. பட்டுச் சடை நிற்கப், பனி-மதி புனைவோனே;

.. பக்கத்தினில் வெற்புக்கு இறை-மகள்

.. .. .. வைத்துக், கலை பற்றிச், சுரர் அடி

.. .. பற்றிப் புகழ் செப்பக் கடல்-விடம் அணிவோனே;


பெற்றக்-கொடி கட்டித் திகழ்-தளி

.. .. .. பெற்றுத், திருவுற்றுப் பொலிதரு

.. .. பெற்றிப்-புரி கச்சிப்-பதிதனில் உறைவோனே;

.. பிட்டுக்கு என அற்றைத்-தினம் அடி

.. .. .. பட்டுத், தருமிக்குத் தனமது

.. .. பெற்றுத்தரு பெட்பைப் புவி மொழி பெருமானே.


கொற்றத்தினை அத்தத்தினை மிக இச்சித்து, லகத்திற் பலபல குற்றத்தினை மிக்குச் செய, ருவினை கூடக் - வெற்றியையும் பொருளையும் மிகவும் விரும்பி, உலகில் பற்பல குற்றங்களை மிகுந்து செய்ய, அதனால் வருகின்ற அரிய வினைகள் பெருக; (கொற்றம் - வெற்றி); (அத்தம் - அர்த்தம் - பொருள்); (இச்சித்தல் - விரும்புதல்); (செய வருவினை = 1. செய்ய அருவினை; 2. செய்ய வரு வினை);

கொட்டத்தொடு சுற்றிப், பெரியவர் திட்டத் திரி துட்டச் சிறுமதி, கொச்சைத்தனம் அற்றுத், திருவடி தொழுவேனோ - ஆணவத்தோடு சுற்றி, ஆன்றோர்கள் பழிக்கும்படி அலைகின்ற, கொடிய சிற்றறிவும் இழிவும் நீங்கி, உன் திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக; (கொட்டம் - செருக்கு; ஆணவம்); (திரிதல் - சுற்றுதல்; கெடுதல்); (துட்டம் - துஷ்டம் - தீமை; கொடுமை); (சிறுமை - அற்பத்தனம்; குற்றம்); (மதி - அறிவு); (கொச்சை - இழிவு);


புற்றுப்-பணி சுற்றித் திகழ்தர, அச்சைத் தரு மற்-பற்-புலியுரி பொற்பட்டு என நச்சித் தரி-திரு உடையானே - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பு சுற்றி இருக்க, அச்சத்தைத் தரும் வலிய பற்களையுடைய புலியின் தோலைச் சிறந்த பட்டாடை போல விரும்பி அணிந்த திரு உடையவனே; (பணி - பாம்பு); (தருதல் - ஒரு துணைவினை); (அச்சு - அச்சம்); (மல் - வலிமை); (மற்பற்புலி - மல் பல் புலி - வலிய பல்லை உடைய புலி); (பொற்பட்டு - அழகிய பட்டு; "பொற்றுகில்" என்று இலக்கியங்களில் வருவதை ஒத்த பிரயோகம்); (குலோத்துங்க சோழனுலா - 218. "நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின் பொற்றுகி றந்தருளிப் போதென்பார் - மற்றிவள்"); (நச்சுதல் - விரும்புதல்); (தரித்தல் - அணிதல்; உடுத்தல்);

பொய்த்-தத்துவ மட்டர்க்கு, (ம்) மலி பிட்டர்க்கு, றிவு அற்றுப் புறன் உரை பொக்கத்தினருக்குப் பழவினை களையானே - பொருளற்ற பொய்த்தத்துவங்களைப் போற்றும் மூடர்களுக்கு, நெறிக்குப் புறம்பான வீணர்களுக்கு, அறிவின்றிப் பழிமொழிகளைப் பேசும் வஞ்சகர்களுக்கு, அவர்களது பழைய வினையைத் தீர்த்தல் செய்யாதவனே; (மட்டன் - மூடன்); (அவம் - பயனின்மை; கேடு); (பிட்டன் - பிரஷ்டன் - நெறியிலிருந்து வழுவியவன்); (பொக்கம் - குற்றம்; வஞ்சகம்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");


பற்றற்று ள பத்தர்க்கு அருளிடு பக்கத்தின – பற்றற்று இருக்கும் பக்தர்களுக்கு அருளும் அன்புடையவனே; (பக்கம் - பக்ஷம் - அன்பு);

தட்பத்-திரை டைபட்டுச் சடை நிற்கப், பனி-மதி புனைவோனே - குளிர்ந்த கங்கையைத் தடுத்து நிறுத்திய சடையில் குளிர்ந்த திங்களை அணிந்தவனே; (தட்பம் - குளிர்ச்சி); (திரை - அலை; நதி); (பனி - குளிர்ச்சி);

பக்கத்தினில் வெற்புக்கு இறை-மகள் வைத்துக், கலை பற்றிச் - திருமேனியில் இடப்பக்கத்தில் இமவான் மகளைப் பாகமாக வைத்து, மானை ஏந்தி; (இறை - அரசன்); (கலை - மான்);

சுரர் அடி பற்றிப் புகழ் செப்பக் கடல்-விடம் அணிவோனே - தேவர்கள் திருவடியைப் பற்றித் துதிக்கப், பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவனே; ( சுரர் - தேவர்);


பெற்றக்-கொடி கட்டித் திகழ்-தளி பெற்றுத், திருவுற்றுப் பொலிதரு பெற்றிப்-புரி கச்சிப்-பதிதனில் றைவோனே - இடபக்கொடி கட்டப்பெற்று விளங்குகின்ற கோயில்கள் பல இருக்கப்பெற்றுச்செல்வமும் சிறப்பும் பொலியும் பெருமையுடைய ஊரான காஞ்சிபுரத்தில் கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளியவனே; (பெற்றம் - எருது); (தளி - கோயில்); (திரு - சிறப்பு; நன்மை; செல்வம்); (பொலிதல் - விளங்குதல்); (பெற்றி - பெருமை); (புரி - நகரம்; ஊர்); (பதி - தலம்);


பிட்டுக்கு என அற்றைத்-தினம் அடிபட்டுத், தருமிக்குத் தனமது பெற்றுத் தரு பெட்பைப் புவி மொழி பெருமானே - முன்பு (மதுரையில்) பிட்டு உண்ண விரும்பிப் பிரம்படி பட்டுத், தருமிக்கு (ஒரு பாடல் தந்து) பாண்டிய மன்னனிடமிருந்து பொன்னைப் பெற்றுத் தந்த அன்பையும் பெருமையையும் உலகம் சொல்லித் துதிக்கின்ற பெருமானே; (தருமி - மதுரையில் வாழ்ந்த சிவபக்தர்; திருவிளையாடற் புராணத்தில் காண்க); (தனம் - செல்வம்; பொன்); (பெட்பு - அன்பு; பெருமை; தன்மை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Friday, March 24, 2023

07.15 – நாலூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்) - அறம் பல நால்வர்க்கு

07.15 – நாலூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்)

2015-12-22

நாலூர் மயானம் - (ஞானபரமேஸ்வரர் கோயில் - நாலூர் திருமெய்ஞ்ஞானம்)

(இத்தலம் கும்பகோணம் - குடவாசல் இடையே உள்ளது.)

------------------

(அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் "கூவிளம் கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு; அரையடியுள் வெண்டளை பயிலும்);

(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்");

(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்");


1)

அறம்பல நால்வர்க் கருள ஆலதன் கீழமர்ந் தானும்

புறம்பயம் மேய பிரானும் போற்றிசெய் அன்பர் வினைகள்

அறும்படி இன்னருள் நல்கி அருந்துணை ஆகிடு வானும்

நறும்பொழில் சூழ்ந்தழ காரும் நாலூர் மயானத் தரனே.


அறம் பல நால்வர்க்கு அருள ஆலதன்கீழ் அமர்ந்தானும் - சனகாதியருக்குப் போதிக்கக் கல்லாலின்கீழ் அமர்ந்த தட்சிணாமூர்த்தியும்;

புறம்பயம் மேய பிரானும் - திருப்புறம்பயம் என்ற தலத்தில் உறையும் தலைவனும்;

போற்றிசெய் அன்பர் வினைகள் அறும்படி இன்னருள் நல்கி அருந்துணை ஆகிடுவானும் - துதிக்கும் பக்தர்களின் வினைகள் நீங்குமாறு இனிது அருள்புரிந்து அரிய துணை ஆகின்றவனும்;

நறும் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் நாலூர் மயானத்து அரனே - வாசம் கமழும் சோலைகள் சூழ்ந்த அழகிய நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


2)

வெம்புலித் தோலை அரையில் வீக்கிய விண்ணவர் கோனும்

வம்பு திகழ்மல ரோடு மதியணி வார்சடை யானும்

எம்பெரு மானடி போற்றி என்றின் தமிழ்த்தொடை பாடி

நம்பும வர்க்கினி யானும் நாலூர் மயானத் தரனே.


வெம்புலித் தோலை அரையில் வீக்கிய விண்ணவர் கோனும் - கொடிய புலியின் தோலை அரையில் கட்டியவனும், தேவர்கள் தலைவனும்; (வீக்குதல் - கட்டுதல்);

வம்பு திகழ் மலரோடு மதி அணி வார் சடையானும் - மணம் கமழும் பூக்களோடு திங்களையும் அணிந்த நீண்ட சடையை உடையவனும்; (வம்பு - வாசனை);

"எம் பெருமான் அடி போற்றி" என்று இன் தமிழ்த்தொடை பாடி நம்புமவர்க்கு இனியானும் - "எங்கள் பெருமானே நின் திருவடி போற்றி" என்று இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி விரும்பி வழிபடும் பக்தர்களுக்கு இனியவனும்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்)

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


3)

தரைமிசைச் சக்கரம் கீறிச் சலந்தர னைத்தடிந் தானும்

வரையினை வில்லென ஏந்தி வல்லரண் மூன்றெரித் தானும்

திரைமலி வானதி தன்னைச் செஞ்சடை யிற்கரந் தானும்

நரைவிடை ஊர்தியி னானும் நாலூர் மயானத் தரனே.


தரைமிசைச் சக்கரம் கீறிச் சலந்தரனைத் தடிந்தானும் - தரைமேல் ஒரு சக்கரத்தைக் காலால் வரைந்து, அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்தவனும்; (கீறுதல் - To draw lines; வரிகீறுதல்; எழுதுதல்); (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

வரையினை வில் என ஏந்தி வல் அரண் மூன்று எரித்தானும் - மேருமலையை வில்லாக ஏந்தி வலிய முப்புரங்களை எரித்தவனும்; (வரை - மலை);

திரை மலி வானதி தன்னைச் செஞ்சடையிற் கரந்தானும் - அலை மிகுந்த கங்கையைச் செஞ்சடையில் ஒளித்தவனும்; (திரை - அலை); (வானதி - வான் நதி - கங்கை);

நரை விடை ஊர்தியினானும் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனும்; (நரை - வெண்மை);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


4)

முக்கண் உடைய பிரானும் முருகனைப் பெற்றுகந் தானும்

தக்கனைத் தண்டித்த கோனும் தலைமலி மாலையி னானும்

தொக்கடி போற்றிய வானோர் துயர்கெட மேருவில் லேந்தி

நக்கெயில் மூன்றெரித் தானும் நாலூர் மயானத் தரனே.


பிரான் - தலைவன்;

உகத்தல் - மகிழ்தல்;

தலை மலி மாலை - மண்டையோடுகள் கோத்த மாலை;

தொக்கு அடி போற்றிய வானோர் துயர் கெட மேருவில் ஏந்தி, நக்கு எயில் மூன்று எரித்தானும் - ஒன்றாகக் கூடித் திருவடியைத் துதித்த தேவர்களது துன்பம் தீரும்படி மேருமலையை வில்லாக ஏந்தித், தன் சிரிப்பினால் முப்புரங்களையும் எரித்தவனும்; (தொகுதல் - 1. To assemble, collect, accumulate; கூடுதல்); (தொகுதல் - இறந்த கால வினையெச்சத்தில் 'தொக்கு' என்று வரும்; அதேபோல், நகுதல் - நக்கு என்று ஆகும்); (அப்பர் தேவாரம் - 6.5.10 - "தொக்கணா என்றிருவர் தோள்கை கூப்பத் துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி" - தொக்கு - கூடி. "அண்ணால்" என்பது மருவி, "அண்ணா" என வழங்கும்; அஃது இங்கு இடைக்குறையாக வந்தது);


5)

கண்ணி எனமுடி மீது கதிர்மதி யம்புனைந் தானும்

கண்ணிற் கனலுடை யானும் காதலி பங்குடை யானும்

பண்ணிய தீவினை தீரப் பதமலர் போற்றி வணங்கி

நண்ணிய வர்க்கருள் நல்கும் நாலூர் மயானத் தரனே.


கண்ணி என முடிமீது கதிர்-மதியம் புனைந்தானும் - தலையில் அணியும் மாலை போல ஒளி வீசும் சந்திரனை அணிந்தவனும்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை);

கண்ணிற் கனல் உடையானும் - தீப் பொருந்திய நெற்றிக்கண் உடையவனும்;

காதலி பங்கு டையானும் - உமையை ஒரு பங்காக உடையவனும்;

பண்ணிய தீவினை தீரப் பதமலர் போற்றி வணங்கி நண்ணியவர்க்கு அருள் நல்கும் - செய்த தீவினை தீரவேண்டித் திருவடித்தாமரையைப் போற்றி வணங்கிச் சரணடைந்தவர்களுக்கு அருள் செய்யும்; (நண்ணுதல் - அடைதல்);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


6)

பாலன நீறணிந் தேத்து பாலன் நடுக்குற வந்த

காலனைக் காய்கழ லானும் கனல்மழு வாளுடை யானும்

ஆலிரு நீழல் இடமா அமர்ந்து மறைவிரித் தானும்

நாலிரு தோள்களி னானும் நாலூர் மயானத் தரனே.


பால் அன நீறு அணிந்து ஏத்து பாலன் நடுக்குற வந்த - பால் போன்ற வெண்திருநீற்றை அணிந்து வழிபட்ட சிறுவரான மார்க்கண்டேயர் அஞ்சும்படி அவரை வந்தடைந்த;

காலனைக் காய் கழலானும் - காலனைச் சினந்து உதைத்த கழல் அணிந்த திருவடியை உடையவனும்; (காய்தல் - அழித்தல்);

கனல் மழுவாள் உடையானும் - ஒளி வீசும் மழுப்படையை உடையவனும்;

ஆல் இரு-நீழல் இடமா அமர்ந்து மறை விரித்தானும் - கல்லால மரத்தின் அகன்ற நீழலே சிறந்த இடமாக விரும்பி அங்கே சனகாதியருக்கு வேதப்பொருளை விளக்கியவனும்; (இருநீழல் - இருமை + நீழல்; இருமை - பெருமை; நீழல் - நிழல் - தானம்); (சம்பந்தர் தேவாரம் - 1.12.2 - "தழையார்வட வியவீதனில் தவமேபுரி சைவன்" - வட விய வீதனில் - ஆலமரத்தினது அகன்ற நீழலில்);

நாலிரு தோள்களினானும் - எட்டுப் புயங்கள் உடையவனும்;

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


7)

மேகம் தவழ்கயி லாய வெற்பில் உறைந்தருள் வானும்

ஆகம் தனில்அர வத்தை ஆரம் எனஅணிந் தானும்

பாகம் உமைக்களித் தானும் பாய்புலித் தோலதன் மீது

நாகம் அரைக்கசைத் தானும் நாலூர் மயானத் தரனே.


மேகம் தவழ் கயிலாய வெற்பில் உறைந்தருள்வானும் - மேகம் உலவும் கயிலைமலையில் இருப்பவனும்; (வெற்பு - மலை);

ஆகம்-தனில் அரவத்தை ஆரம் என அணிந்தானும் - திருமேனியில் பாம்பை மாலை போல அணிந்தவனும்; (ஆகம் - மேனி); (ஆரம் - ஹாரம் - மாலை);

பாகம் உமைக்கு அளித்தானும் - உமைக்கு ஒரு பங்கை அளித்தவனும்;

பாய்புலித்தோல் அதன்மீது நாகம் அரைக்கு அசைத்தானும் - பாயும் புலியின் தோல்மேல் பாம்பை அரையில் கட்டியவனும்; ( அசைத்தல் - கட்டுதல்);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


8)

தென்னிலங் கைக்கிறை கத்தத் திருவிரல் ஒன்றிட் டவனும்

பின்னவன் இன்னிசை பாடப் பேரொடு நாள்நல்கி னானும்

சென்னியின் மேற்பிறை யானும் சேவடி வாழ்த்து மவர்க்கு

நன்னிலை தந்தருள் வானும் நாலூர் மயானத் தரனே.


தென் இலங்கைக்கு இறை கத்தத் திருவிரல் ஒன்று இட்டவனும் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணன் கத்துமாறு திருவடி விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவனும்;

பின் வன் இன்னிசை பாடப் பேரொடு நாள் நல்கினானும் - பின்னர், அவன் இனிய இசை பாடி இறைஞ்ச, அவனுக்கு "இராவணன்" (அழுதவன்) என்ற பெயரையும் நீண்ட ஆயுளையும் அருளியவனும்;

சென்னியின்மேல் பிறையானும் - திருமுடிமேல் பிறைச்சந்திரனை அணிந்தவனும்; (சென்னி - தலை);

சேவடி வாழ்த்துமவர்க்கு நன்னிலை தந்தருள்வானும் - சிவந்த திருவடியை வாழ்த்தும் பக்தர்களுக்கு நற்கதி அருள்பவனும்; (நன்னிலை - நற்கதி);

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


9)

பங்கயன் பாம்பணை மேலான் பறந்தும் அகழ்ந்தும் அறியாப்

பொங்கழல் வண்ணத்தி னானும் போற்றும் அடியவர் நெஞ்சே

தங்கிட மாஉடை யானும் தனிவிடை ஊர்தியி னானும்

நங்கையொர் பங்குடை யானும் நாலூர் மயானத் தரனே.


பங்கயன் பாம்பு அணை மேலான் பறந்தும் அகழ்ந்தும் அறியாப் - தாமரையில் உறையும் பிரமனும் பாம்பைப் படுக்கையாக உடைய திருமாலும் அன்னமாகிப் பறந்தும் பன்றியாகி அகழ்ந்தும் அறியாத;

பொங்கு அழல் வண்ணத்தினானும் - பொங்கும் தீயின் உரு உடையவனும்; (வண்ணம் - வடிவு);

போற்றும் அடியவர் நெஞ்சே தங்கு இடமா உடையானும் - வழிபடும் பக்தர்கள் மனமே கோயிலாகக் கொண்டவனும்; (தங்கு இடமா - தங்குகின்ற இடமாக);

தனி விடை ஊர்தியினானும் - ஒப்பற்ற இடப வாகனம் உடையவனும்;

நங்கை ஒர் பங்கு உடையானும் - உமையை ஒரு பங்கில் உடையவனும்;

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


10)

தென்சொல் வடசொல் இரண்டும் செப்பும் சிவனைத் தொழாது

புன்சொல் உரைத்துழல் கின்ற புரட்டர்க் கருள்புரி யானும்

புன்சடை மேற்பிறை யானும் போற்றிடு வார்க்கெளி யானும்

நன்செய் புடையணி கின்ற நாலூர் மயானத் தரனே.


தென்சொல் வடசொல் இரண்டும் செப்பும் சிவனைத் தொழாது - தமிழ் சமஸ்கிருதம் என்ற இருமொழிகளிலும் பல நூல்களும் பாமாலைகளும் போற்றுகின்ற சிவபெருமானை வழிபடாமல்;

(சம்பந்தர் தேவாரம் - 1.77.4 – "தம் மலரடி ஒன்றடியவர் பரவத் தமிழ்ச்சொலும் வடசொலும் தாள்நிழற் சேர" - தமிழ்ச் சொல், வடசொற்களால் இயன்ற தோத்திரங்கள் அவர்தம் திருவடிகளைச் சார இருக்கும் அடிகள் ஆவர் என்கின்றது);

(சம்பந்தர் தேவாரம் - 2.92.7 - "தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில்நரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்" - அடியவர் தமிழிலும் வடமொழியிலும் திசைமொழிகளிலும் அழகிய யாழ்நரம்பை மீட்டித் தங்கள் மனத்து இருள் நீங்கப் பாடித் தொழும் புகலூரில்);

(அப்பர் தேவாரம் - 5.18.3 - "ஆரியம் தமிழோடு இசை ஆனவன்" - வடமொழியும் தமிழும் இசையும் ஆனவன்);

புன்சொல் உரைத்து ழல்கின்ற புரட்டர்க்கு அருள்புரியானும் - பழித்துப் பேசி உழல்கின்ற வஞ்சகர்களுக்கு அருளாதவனும்; (புரட்டர் - மாறாட்டக்காரர் - Deceiver; equivocator; liar);

புன்சடைமேல் பிறையானும் - செஞ்சடைமேல் சந்திரனை அணிந்தவனும்; (புன்சடை - செஞ்சடை);

போற்றிடுவார்க்கு எளியானும் - தொழும் பக்தர்களால் எளிதில் அடையப்படுபவனும்;

நன்செய் புடை ணிகின்ற நாலூர் மயானத்து அரனே - நன்செய் வயல்கள் சூழ்ந்த நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


11)

பன்மணி ஆர்முடி வானோர் பரவிப் பணியும் பரனும்

சொன்மணி ஆர்தமிழ் பாடித் துதித்தவர்க் கன்புடை யானும்

பொன்மணி ஆர்வடம் போலப் புற்றர வம்புனைந் தானும்

நன்மணி கண்டத்தி னானும் நாலூர் மயானத் தரனே.


பன்-மணி ஆர் முடி வானோர் பரவிப் பணியும் பரனும் - பல இரத்தினங்கள் பொருந்திய கிரீடம் அணிந்த தேவர்கள் துதித்து வணங்கும் பரமனும்; (மணி - நவரத்தினங்கள்; அழகு); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

சொல்-மணி ஆர் தமிழ் பாடித் துதித்தவர்க்கு அன்பு உடையானும் - அழகிய சொற்கள் என்ற மணிகள் பொருந்திய தமிழ்ப்பாமாலைகள் பாடித் துதிக்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவனும்;

பொன் மணி ஆர் வடம் போலப் புற்றரவம் புனைந்தானும் - பொன்னும் மணியும் பொருந்திய ஒரு மணிமாலை போலப் புற்றில் வாழும் இயல்புடைய பாம்பை அணிந்தவனும்; (வடம் - மணிவடம் - String of gems); சரம் - chains of a necklace);

நன் மணிகண்டத்தினானும் - நல்ல நீலமணி போல் திகழும் கண்டத்தை உடையவனும்;

நாலூர் மயானத்து அரனே - நாலூர் மயானத்தில் எழுந்தருளியிருக்கும் ஹரன்.


பிற்குறிப்புகள்:

1) யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் "கூவிளம் கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு;

  • அரையடியுள் வெண்டளை பயிலும்;

  • 3-ஆம் சீர் 4-ஆம் சீர் இடையே வெண்டளை இருக்கவேண்டியது இல்லை.

  • அரையடியின் ஈற்றுச் சீர் (3,6-ஆம் சீர்கள்) மாச்சீராகவே அமையும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


2) உதாரணம்:

சம்பந்தர் தேவாரம் - 2.67.1 -

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்

விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்

கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்

பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே


3) நாலூர் மயானம் - தேவாரப் பாடல் பெற்ற தலம்.

(இவ்வூரில் இன்னொரு பகுதியில் வேறொரு கோயில் உள்ளது - நாலூர் "பலாசவனநாதர் கோயில்". அது தேவார வைப்புத்தலம்).


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


07.14 – கண்டீஸ்வரம் (நெல்லிக்குப்பம் அருகே) - தாளத்தினைக் கையேந்திய

07.14 – கண்டீஸ்வரம் (நெல்லிக்குப்பம் அருகே)

2015-12-15

கண்டீஸ்வரம்

(ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில்)

(இத்தலம் கடலூர் - பண்ருட்டி இடையே நெல்லிக்குப்பம் அருகே உள்ளது)

------------------

(கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்")

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா");


1)

தாளத்தினைக் கையேந்திய தளிர்மேனியள் காண

மேளத்தினைக் கணமார்த்திட வெங்காட்டினில் ஆடி

காளத்தினை மிடறேந்திறை கண்டீச்சரத் தண்ணல்

தாளைத்தினம் தொழுவார்வினை தழல்சேர்விற காமே.


* தாளத்தினைக் கையேந்திய தளிர்மேனியள் - "ஹஸ்த தாளாம்பிகை" - இத்தலத்து இறைவி திருநாமம்;


தாளத்தினைக் கை ஏந்திய தளிர்மேனியள் காண - கையில் தாளத்தை ஏந்திய, தளிர்போல் மேனி உடைய உமை காண;

மேளத்தினைக் கணம் ஆர்த்திட வெங்காட்டினில் ஆடி - பலவிதத் தோற்கருவிகளைப் பூதகணங்கள் வாசிக்கச், சுடுகாட்டில் ஆடியவன்; (வெங்காடு - சுடுகாடு);

காளத்தினை மிடறு ஏந்து இறை - கருமையைக் கண்டத்தில் தாங்கும் இறைவன்; (காளம் - கருமை; நஞ்சு); (மிடறு - கண்டம்);

கண்டீச்சரத்து அண்ணல் தாளைத் தினம் தொழுவார் வினை தழல் சேர் விறகு ஆமே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் சிவபெருமான் திருவடியை நாள்தோறும் வணங்கும் அடியவர்களுடைய வினைகள் தீ சேர்ந்த விறகு ஆகும் ( = சாம்பல் ஆகும்);


(அப்பர் தேவாரம் - 4.11.3 -

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகிலவை ஒன்றும் இல்லைஆம்

பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே);


2)

செவிநாசிகண் உடல்வாயெனும் இவையைந்தையும் வென்ற

தவர்நால்வருக் காலின்புடை அறமோதிய தலைவர்

கவினார்பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேய

சிவனார்கழல் தொழுவார்வினை தீசேர்விற காமே.


செவி நாசி கண் உடல் வாய் எனும் இவை ஐந்தையும் வென்ற - ஐம்புலன்களையும் வென்ற; (மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளும் இங்குச் சொல்லப்பட்டன); (அப்பர் தேவாரம் - 5.47.7 - "மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந்து ஆக்கும் ஐவர்");

தவர் நால்வருக்கு ஆலின்புடை அறம் ஓதிய தலைவர் - சனகாதி முனிவர்கள் நால்வருக்குக் கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருளை ஓதிய தலைவர்; (தவர் - தவசியர்); (ஆல் - கல்லால மரம்);

கவின் ஆர் பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேய - அழகிய சோலைகள் சூழ்ந்த திருக்கண்டீஸ்வரத்தில் உறையும்; (சூழ்தரு - சூழ்; தருதல் - ஒரு துணைவினை);

சிவனார் கழல் தொழுவார் வினை தீ சேர் விறகு ஆமே - சிவபெருமானார் திருவடியை வணங்கும் அடியவர்களுடைய வினைகள் தீ சேர்ந்த விறகு ஆகும் ( = சாம்பல் ஆகும்);


3)

கொடியாரிடை மடவாளொரு கூறாகிய கூத்தன்

இடியார்குரல் எருதேறிய இறைவன்மறை நாவன்

கடியார்பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான்

அடியார்பழ வினையாயின அழல்சேர்விற காமே.


கொடி ஆர் இடை மடவாள் ஒரு கூறு ஆகிய கூத்தன் - கொடி போன்ற சிற்றிடை உடைய உமை ஒரு பாகம் ஆன கூத்தன்;

இடி ஆர் குரல் எருது ஏறிய இறைவன் - இடி போன்ற குரலை உடைய இடபத்தை ஊர்தியாக உடைய இறைவன்;

மறை நாவன் - வேதம் ஓதியவன்;

கடி ஆர் பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான் - மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருக்கண்டீஸ்வரத்தில் உறைபவன்;

அடியார் பழவினை ஆயின அழல் சேர் விறகு ஆமே - அப்பெருமான் அடியவர்களுடைய வினைகள் தீ சேர்ந்த விறகு ஆகும் ( = சாம்பல் ஆகும்);


4)

நீரார்சடை அதன்மேல்வளர் நிலவைப்புனை நிமலன்

கூரார்மழு மறியேந்திய குழகன்விடைக் கொடியன்

காரார்பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான்

சீரார்கழல் தினமுந்தொழத் தீராவினை விடுமே.


நீர் ஆர் சடை அதன்மேல் வளர் நிலவைப் புனை நிமலன் - கங்கை பொருந்திய சடையின்மேல் வளரும் திங்களை அணிந்த நின்மலன்;

கூர் ஆர் மழு மறி ஏந்திய குழகன் - கூர்மை பொருந்திய மழுவையும் மான்கன்றையும் கையில் ஏந்தியவன்;

விடைக் கொடியன் - இடபக்கொடி உடையவன்;

கார் ஆர் பொழில் புடைசூழ்தரு கண்டீச்சரம் மேயான் - கருமை பொருந்திய (அடர்ந்த) சோலைகள் சூழ்ந்த திருக்கண்டீஸ்வரத்தில் உறைபவன்;

சீர் ஆர் கழல் தினமும் தொழத் தீரா வினை விடுமே - அப்பெருமானின் பெருமை மிக்க திருவடிகளைத் தினமும் வழிபட்டால், தீராத வினைகளெல்லாம் நீங்கும்;


5)

வெண்மால்விடை ஒன்றேறிய விகிர்தன்திரை ஆரும்

தண்மாநதி அடைவேணியன் தழலேந்திய கையன்

கண்மூன்றுடை அடிகள்கவின் கண்டீச்சரம் மேயான்

ஒண்மாண்கழல் தொழுவார்களைத் தொடராவினை தானே.


வெண் மால் விடை ஒன்று ஏறிய விகிர்தன் - வெண்மையான பெரிய இடபத்தை ஊர்தியாக உடையவன், விகிர்தன் என்ற திருநாமம் உடையவன்; (விகிர்தன் - மாறுபட்ட செயலினன்);

திரை ஆரும் தண் மா நதி அடை வேணியன் - அலை மிக்க குளிர்ந்த பெரிய கங்கையை அடைத்த சடையை உடையவன்; (வேணி - சடை);

தழல் ஏந்திய கையன் - தீயைக் கையில் ஏந்தியவன்;

கண் மூன்று உடை அடிகள் - முக்கண் உடைய கடவுள்;

கவின் கண்டீச்சரம் மேயான் ஒண் மாண் கழல் தொழுவார்களைத் தொடரா வினைதானே - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானுடைய ஒளி பொருந்திய மாட்சிமையுடைய கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் அன்பர்களை வினை தொடராது; (கவின் கண்டீச்சரம் - "ஆர்" என்ற சொல்லை வருவித்துக்கொள்க; "கவின் ஆர் கண்டீச்சரம்" - அழகிய கண்டீஸ்வரம்); (சம்பந்தர் தேவாரம் - 1.128.1 - அடி-6 - "ஓரால் நீழல் ஒண்கழல் இரண்டும்"); (திருக்குறள் - 3 - "மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்");


6)

முண்டத்தினில் வெண்ணீறணி முதல்வன்தனி விடையன்

அண்டத்தவர் உயிர்வாழ்ந்திட அருநஞ்சினை உண்டு

கண்டத்தினில் கறையேற்றவன் கண்டீச்சரம் மேய

துண்டப்பிறை முடியான்கழல் தொழுவார்க்கிலை துயரே.


முண்டத்தினில் வெண்ணீறு அணி முதல்வன் - நெற்றியில் வெண்மையான திருநீற்றைப் பூசிய முதல்வன்; (முண்டம் - நெற்றி); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.9 - "திருமுண்டம் தீட்ட மாட்டாது" - "திரு" என்றது, "விபூதி" என்னும் பொருட்டாய்த், திருநீற்றை உணர்த்திற்று);

தனி விடையன் - ஒப்பற்ற இடப ஊர்தியன்;

அண்டத்தவர் உயிர்வாழ்ந்திட அருநஞ்சினை உண்டு கண்டத்தினில் கறையேற்றவன் - எல்லாரும் உயிர்வாழ்வதற்காக, உண்ணுவதற்கு அரிய விடத்தை உண்ட நீலகண்டன்; (அண்டம் - பூமி, வானம், பிரபஞ்சம்);

கண்டீச்சரம் மேய துண்டப்பிறை முடியான் கழல் தொழுவார்க்கு இலை துயரே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் சந்திரசேகரன் திருவடியை வணங்கும் அன்பர்களைத் துயரம் அணுகாது; (துண்டப் பிறை முடி - பிறைத்துண்டம் அணிந்த திருமுடி);


7)

நாமந்தனை மறவாத்தவர் நசியாதுயிர் வாழச்

சேமந்தரு பெருமான்நறை திகழுங்கணை எய்த

காமன்றனைப் பொடிசெய்தவன் கண்டீச்சரம் மேயான்

தூமென்மலர்ப் பாதந்தனைத் தொழுவார்க்கிலை துயரே.


நாமந்தனை மறவாத் தவர் நசியாது உயிர் வாழச் சேமம்-தரு பெருமான் - திருநாமத்தை மறவாமல் எப்போதும் நினைந்து வழிபட்ட தவசிரேஷ்டரான மார்க்கண்டேயர் அழிவின்றி என்றும் உயிர்வாழ அருள்புரிந்த பெருமான்; (தவர் - தவசி); (நசிதல் - அழிதல்; நசித்தல் - சாதல்); (சேமம் - க்ஷேமம் - காவல்);

நறை திகழும் கணை எய்த காமன்-தனைப் பொடி செய்தவன் - வாசம் திகழும் மலர்க்கணையை எய்த மன்மதனைச் சாம்பல் ஆக்கியவன்;

கண்டீச்சரம் மேயான் தூ மென்மலர்ப் பாதம்-தனைத் தொழுவார்க்கு இலை துயரே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானின் தூய மென்மையான மலர் போன்ற பாதங்களை வணங்கும் அன்பர்களைத் துயரம் அணுகாது;


8)

தலைபத்துடை மதியற்றவன் தடவெற்பதன் கீழே

அலறத்திரு விரலிட்டவர் அரையிற்புலித் தோலர்

கலைபற்றிய கையார்கவின் கண்டீச்சரம் மேயார்

அலரிட்டவர் அடிவாழ்த்திடும் அடியார்க்கிடர் இலையே.


தலை பத்து உடை மதி அற்றவன் தட வெற்பு அதன் கீழே அலறத் திருவிரல் இட்டவர் - பத்துத் தலைகளை உடையவனும் அறிவற்றவனுமான இராவணன் கயிலைமலையின்கீழ் அலறும்படி அம்மலைமேல் ஒரு திருவிரலை ஊன்றி அவனை நசுக்கியவர்; (தட வெற்பு - பெரிய மலை - கயிலைமலை);

அரையில் புலித்தோலர் - அரையில் புலியின் தோலை அணிந்தவர்;

கலை பற்றிய கையார் - மானைக் கையில் பற்றியவர்; (கலை - மான்);

கவின் கண்டீச்சரம் மேயார் - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானார்; (கவின் கண்டீச்சரம் - "ஆர்" என்ற சொல்லை வருவித்துக்கொள்க; "கவின் ஆர் கண்டீச்சரம்" - அழகிய கண்டீஸ்வரம்);

அலர் இட்டு அவர் அடி வாழ்த்திடும் அடியார்க்கு இடர் இலையே - பூக்களைத் தூவி அப்பெருமானாரின் திருவடிகளைப் போற்றும் அடியவர்களுக்கு இடர் இல்லை;


9)

அனமாயுயர் மலரான்நிலம் அகழ்மாலிவர் நேட

முனமாரழல் உருவாகிய முதல்வன்முடி வில்லான்

கனலார்நுதற் கண்ணன்கவின் கண்டீச்சரம் மேயான்

தனைநீர்மலர் கொண்டேத்திடச் சாராவினை தானே.


அனமாய் உயர் மலரான் நிலம் அகழ் மால் இவர் நேட - அன்னமாகி உயர்ந்த பிரமனும், பன்றியாகி நிலத்தை அகழ்ந்த திருமாலும் தேடும்படி; (அனம் - அன்னம் - இடைக்குறை விகாரம்);

முனம் ஆர் அழல் உரு ஆகிய முதல்வன் - முன்னர் அரிய சோதி உருக்கொண்ட முதல்வன்; (முனம் - முன்னம் - இடைக்குறை விகாரம்);

முடிவு இல்லான் - எல்லையற்றவன்; இறப்பு இல்லாதவன்;

கனல் ஆர் நுதற் கண்ணன் - நெருப்புப் பொருந்திய நெற்றிக்கண் உடையவன்;

கவின் கண்டீச்சரம் மேயான்தனை நீர் மலர் கொண்டு ஏத்திடச் சாரா வினை தானே - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானை நீராலும் மலராலும் வழிபடும் பக்தர்களை வினைகள் அணுகமாட்டா;


10)

வெண்ணீறது தரியாருரை வெற்றுச்சொலை விடுமின்

பண்ணார்மொழிப் பாவைக்கொரு பாகம்தரு பரமா

கண்ணார்நுதல் உடையாய்கவின் கண்டீச்சரம் மேயாய்

அண்ணாவருள் புரியாயெனும் அன்பர்க்கிடர் இலையே.


வெண்ணீறு அது தரியார் உரை வெற்றுச்சொலை விடுமின் - திருநீற்றைப் பூசாதவர்களும், பிறர் திருநீறு பூசுவதைப் பொறுக்கமாட்டாதவர்களும் சொல்லும் பொருளற்ற பேச்சை மதிக்கவேண்டா; (தரித்தல் - அணிதல்; பொறுத்தல்);

"பண் ஆர் மொழிப் பாவைக்கு ஒரு பாகம் தரு பரமா - "இனிய மொழி உடைய உமைக்கு ஒரு பாகம் தந்தவனே;

கண் ஆர் நுதல் உடையாய் - நெற்றிக்கண் உடையவனே;

கவின் கண்டீச்சரம் மேயாய் - அழகிய திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமானே;

அண்ணா அருள்புரியாய்" எனும் அன்பர்க்கு இடர் இலையே - அண்ணலே, தந்தையே, அருள்வாயாக" என்று வாழ்த்தி வணங்கும் பக்தர்களுக்கு இடர் இல்லை;


11)

ஒருமாமலர் குறைவுற்றிட உடனேமலர்க் கண்ணைத்

திருமாலிட ஆழிப்படை அருள்செய்தவன் செருச்செய்

கருமானதன் உரிபோர்த்தவன் கண்டீச்சரம் மேய

பெருமானடி தொழுவார்நலம் பெறுவார்பிற வாரே.


ஒரு மா மலர் குறைவு உற்றிட உடனே மலர்க் கண்ணைத் திருமால் இட ஆழிப்படை அருள்செய்தவன் - (ஆயிரம் தாமரைமலர்களில்) ஒரு பூக் குறையக் கண்டு, உடனே தன் மலர்க்கண்ணையே இடந்து பூவாக இட்டுத் திருமால் அருச்சிக்கவும், மகிழ்ந்து அவனுக்குச் சக்கராயுதத்தைக் கொடுத்தவன்; (இதனைத் திருவீழிமிழலைத் தலவரலாற்றில் காண்க);

செருச்செய் கருமான் அதன் உரி போர்த்தவன் - போர் செய்த யானையின் தோலைப் போர்த்தவன்; (கருமான் - கரிய மிருகமான யானை); (சம்பந்தர் தேவாரம் - 3.78.6 - "செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்து");

கண்டீச்சரம் மேய பெருமான் அடி தொழுவார் நலம் பெறுவார் பிறவாரே - திருக்கண்டீஸ்வரத்தில் உறையும் பெருமான் திருவடிகளை வழிபடும் அன்பர்கள் நன்மை எய்துவர்; இனிப் பிறவி எய்தமாட்டார்;


பிற்குறிப்புகள்:

1) திருக்கண்டீஸ்வரம் - ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில் - இந்தக் கோயில், கடலூர் பண்ருட்டி இடையே நெல்லிக்குப்பம் என்ற ஊரை அடுத்து உள்ளது.

2) இந்தக் கோயிலில் பலகையில் - "வடுகூர் என்ற பாடல் பெற்ற தலம் இது" என்று எழுதியிருக்கக் காணலாம். ஆனால், விழுப்புரம் புதுச்சேரி இடையே உள்ள "திருவாண்டார் கோயில்" என்ற தலத்தையே "வடுகூர்" என்று மற்ற நூல்களெல்லாம் கூறுகின்றன.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------