Tuesday, June 30, 2015

01.05 - பொது - "சிவன் பேர் செப்பும் என் நா"


01.0
5 -
பொது - "சிவன் பேர் செப்பும் என் நா"



2007-11-13
பொது 
"சிவன் பேர் செப்பும் என் நா"
-----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.)



1)
பெற்ற(து) எல்லாம் என்னால் என்று பெருமை பேசியது
குற்றம் என்(று)அ றிந்தேன்; தில்லைக் கூத்தா; உன்கழலே
உற்ற துணைஎன்(று) இன்(று)உ ணர்ந்தேன்; ஓடி வரும்எமனைச்
செற்ற சிவனே; மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



செற்ற - அழித்த; (செறுதல் - அழித்தல்);



2)
எல்லை இல்லா ஆசைக் கடலை என்றன் அகந்தையெனும்
கல்லைக் கட்டிக் கொண்டு கடக்கக் கருதித் துயருற்றேன்;
தொல்லை போக்கித் துணையாய் வரும்உன் தூய கழல்என்றே,
தில்லைச் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



தொல்லை - துன்பம்;



3)
உய்யும் வழியை உணரா(து) இந்த உலகில் உழன்றுநிதம்
பொய்யும் புரட்டும் பேசி வாழ்வில் பொருளைத் தேடிமனம்
தொய்யும் நிலையை மாற்றப், புரங்கள் சுட்டு நீறாகச்
செய்யும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



நீறு - சாம்பல்;



4)
பேரும் புகழும் விரும்பித் தினமும் பெரிதும் உற்றதுயர்
தீரும் வழிஉன் திருத்தாள் என்று தெரிந்து கொண்டேனே;
பாரும் விண்ணும் படைத்தாய்; முடிமேல் பாம்பும் பிறைமதியும்
சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



பாரும் விண்ணும் படைத்தாய் - பூமியையும் வானுலகையும் படைத்தவனே;



5)
ஆரும் இங்கே துணைஆ கார்என்(று) அறியா(து) உழன்றிருந்தேன்;
நேரும் இடர்கள் நீக்கிக் காப்பாய் நீஎன்(று) இன்றுணர்ந்தேன்;
நீரும் நிலவும் அரவும் முடிமேல் நிலவ இடத்திலுமை
சேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



நேர்தல் - நிகழ்தல்; சம்பவித்தல்;



6)
ஓரும் அடியார் தங்கள் வினையை ஓட்டும் வழிஆனாய்;
ஊரும் அரவும் பிறையும் சடைமேல் உடையாய்; நறுங்கொன்றைத்
தாரும் அணிந்து, கையில் பிரமன் தலையில் இடுபிச்சை
தேரும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



ஓரும் - தியானிக்கும்; (ஓர்தல் - எண்ணுதல்);
நறுங்கொன்றை- மணம் கமழும் கொன்றைமலர்;
தார் - மார்பில் அணியும் மாலை;
தேர்தல் - கொள்ளுதல் (To acquire, obtain);



7)
பார்க்கும் பொருள்கள் எல்லாம் ஆன பரமா; பணியாத
ஆர்க்கும் காண இயலா அரனே; அரவு மதியோடு
நீர்க்கும் முடிமேல் இடம்தந் தருளும் நிமலா; எவ்வினையும்
தீர்க்கும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



ஆர்க்கும் - யாருக்கும்; (ஆர் = யார்);



8)
வானே வழியாய்ச் செல்லும் தன்தேர் மலையால் தடைப்படவும்,
நானே வலியன் என்று மலையை நகர்த்த முயல்இலங்கைக்
கோனே அலற நசுக்கிப் பின்வாள் கொடுத்த பெருமானே;
தேனே; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



வலியன் - வலிமையுள்ளோன் (Strong, powerful man);
முயல்இலங்கைக்கோன் - முயன்ற இலங்கைமன்னன் இராவணன்;
வாள் - சந்திரஹாஸம் என்ற வாள்;



9)
ஆடும் கடலில் பாம்புப் படுக்கை அதன்மேல் துயில்பவனும்
ஏடும் மணமும் மிகுந்த கமலத்(து) இருக்கும் நான்முகனும்
வாடும் படிநீ தீயாய் நிற்க, வானில் மண்ணிலவர்
தேடும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



ஏடு - பூவிதழ் (Petal);



10)
அல்லும் பகலும் வேத வழியை அகன்று விடுமாறு
சொல்லும் அவர்கள் அறியா மெய்யே; தொடரும் வினையையெலாம்
வெல்லும் வழியைக் காட்டும் முக்கண் வேந்தே; ஏற்றின்மேல்
செல்லும் சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



11)
பூவா இலையா என்னா(து), அடியைப் போற்றும் அன்பருக்குச்
சாவா நிலைதந் தருளும் முக்கண் தந்தை நீயலையோ;
மூவா முதலே; முடிவாம் பொருளே; முன்னர் நஞ்சுண்ட
தேவா; சிவனே, மறவா(து) உன்பேர் செப்பும் என்நாவே.



முக்கட் டந்தை - முக்கண் தந்தை;
நீயலையோ - நீ அல்லையோ - நீயன்றோ?
மூவா - மூப்பு இல்லாத;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

படிக்க எளிமையாக இருப்பதற்காக இப்பாடல்களில் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவ்விடங்களில் முதற்சொல்லின் கடைசி எழுத்து அடைப்புக்குறிகளுக்குள் காட்டப்பட்டுள்ளது.

01.04 - பொது - "எண்ணியது எய்தலாம்"


01.0
4 -
பொது - "எண்ணியது எய்தலாம்"



2007-11-09
பொது -
எண்ணியது எய்தலாம்
----------------------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு.)



1)
மந்திர அஞ்செழுத்(து) ஓதி
.. மலரடி தவிரவே(று) ஏதும்
சிந்தனை இலாதமார்க் கண்டர்
.. சிறப்புடன் இருந்திடக், கொல்ல
வந்தவன் தரையினில் வீழ்ந்து
.. மாளுமா(று) உதைத்தருள் செய்த
எந்தையை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(அஞ்சு எழுத்து - 'நமச்சிவாய' என்ற பஞ்சாட்சரம்;
எந்தை - எம் தந்தை;
அன்பர் - பக்தர்;
எய்துதல் - அடைதல்; )



2)
ஊற்றெனப் பெருகிடும் அன்போ(டு)
.. "உலகெலாம் பெற்றவா" என்று
போற்றிய வள்மகப் பேற்றுப்
.. பொழுதினில் பொங்கிய பொன்னி
ஆற்றினைக் கடக்கஒண் ணாத
.. அன்னையின் வடிவினில் வந்த
ஏற்றனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(* இப்பாடல் சுட்டும் நிகழ்ச்சியைத் திருச்சிராப்பள்ளித் தலவரலாற்றிற் காண்க;
'தாயும் ஆனவன்' - திருச்சிராப்பள்ளியில் உறையும் ஈசன் திருநாமம்.
போற்றுதல் - வணங்குதல்;
ஏறு - எருது; இடபம்;
ஏற்றன் - ஏற்றை உடையவன். விருஷப வாஹனன் - சிவன்;)



3)
அடையலாம் அமுதென எண்ணி,
.. அரவினைக் கயிறெனக் கொண்டு
கடலினைக் கடைந்தவர், அங்குக்
.. காய்விடம் எழமிக அஞ்சிப்
படர்சடை யாய்அருள் என்னப்
.. பரிந்ததை மிடற்றினில் வைத்த
இடபனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(அரவு - பாம்பு; இங்கே வாசுகி;
காய்விடம் - எரிக்கும் விஷம்; (காய்தல் - சுடுதல்; எரித்தல்; அழித்தல்);
பரிதல் - இரங்குதல்;
மிடறு - கழுத்து;
இடபம் - எருது; காளை; விருஷபம்;
இடபன் - இடபத்தை உடையவன் - சிவன்;)



4)
குறையிலாப் பூரண னாய்ஓர்
.. கூறுமை மங்கையைக் கொண்டு
பிறையொடு கொன்றையும் சூடும்
.. பேரரு ளாளனை, நான்கு
மறைகளும் மொழிபெரு மானை,
.. மானொரு கரத்தினில் ஏந்தும்
இறைவனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(பூரணன் - முழுமை ஆனவன்;
ஓர் கூறு உமை மங்கை - உருவில் ஒரு பாகம் பார்வதி;
பேர் அருளாளன் - பெரிய அருட்கடல் ஆனவன்;
மறை - வேதம்;)



5)
கரும்பினால் ஆனவில் ஒன்றைக்
.. கையினில் ஏந்திஐ வாச
அரும்புகள் அத்திரம் ஆக,
.. அருந்தவம் குலைத்திட எண்ணி
மருங்கடை மதனையெ ரித்த
.. மாதவன் வார்சடை மைந்தன்
இருங்கழல் வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(அரும்பு - மொட்டு. இங்கே மலருக்கு ஆகுபெயராக வந்தது;
அரும் தவம் - சிறந்த தவம்;
மருங்கு அடை - பக்கத்தில் வந்த;
மதன் - காமன்;
மாதவன் - பெரிய தவக்கோலத்தை உடையவன்; (அப்பர் தேவாரம் - 6.97.7 - "அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன் ..... மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.");
வார்சடை - நீள்சடை;
மைந்தன் - வீரன்;
இருமை - பெருமை (Greatness, largeness, hugeness, eminence);
இருங்கழல் - பெருமையோடு கூடிய திருவடிகள்; (திருவாசகம் - போற்றித் திருவகவல் - "இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி");
)



6)
பழியறு தமிழுரை நாவர்
.. பசிக்குண வொடுகுளம் சோலை
வழியினில் அமைத்துநின் றானை,
.. மலைமகள் பங்கனை, நெற்றி
விழியனைப், புனற்சடை யானை,

.. வெண்டலை யிற்பலி ஏற்கும்
எழிலனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



** பைஞ்ஞீலிக்குப் போகும் திருநாவுக்கரசரின் பசியைப் போக்க, வழியில் அவருக்குச் சிவன் கட்டுச்சோறு தந்தருளியது - பெரிய புராணத்தில் காண்க - திருநாவுக்கரசர் புராணம் #305: "காவுங் குளமும் முன்சமைத்து ...... ";


(பழி - குற்றம்; பாவம்;
அறுத்தல் - நீக்குதல்; இல்லாமற் செய்தல்;
பழியறு தமிழ் - பாவத்தைப் போக்கும் தமிழான தேவாரம்;
புனல் - இங்கே, கங்கை;
வெண்டலை - வெண் தலை - பிரம கபாலம்;
பலி - பிச்சை;
எழிலன் - அழகன்; சுந்தரன்;)



7)
முன்புல கங்களை ஆக்கு[ம்]
.. முதல்வனை, முடிவிலொ டுக்கிப்
பின்புமி ருக்கிற தேவைப்,
.. பிறைமதி சூடுபி ரானை,
என்பணி எந்தையை, எல்லா
.. இடரையும் களைந்தருள் கின்ற
இன்பனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(ஒடுக்குதல் - தன்னுள் ஒடுங்கச் செய்தல்;
தே - தெய்வம்;
பிரான் - தலைவன்; கடவுள்; சிவன்;
என்பு அணி எந்தை - எலும்பை ஆபரணமாகப் பூணும் எம் தந்தை;
களைதல் - நீக்குதல்;
இன்பன் - இன்பம் தருபவன்; ஆனந்தவடிவு ஆனவன்;)



8)
பாந்தளும் திங்களும் சேர்ந்து
.. பயில்சடை உடையவன் தாளை
ஆய்ந்தவர் தொழுதுவ லம்செய்
.. அம்மலை எடுத்தஇ லங்கை
வேந்தனின் உரம்கெட வெற்பின்
.. மேல்விரல் இட்டிசை கேட்ட
ஏந்தலை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(பாந்தள் - பாம்பு;
பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்;
தாள் - திருவடி;
ஆய்தல் - ஆராய்தல்; சிந்தித்தல்;
மலை - இங்கே கயிலை மலை;
உரம் - வலிமை;
வெற்பு - மலை;
ஏந்தல் - அரசன்; பெருமையில் சிறந்தவன்;)



9)
நரிகளைப் பரியென மாற்றி
.. நாடகம் ஆடுமெம் மானைப்,
பிரியமாய்த் திருவடி என்றும்
.. பேணினாள் பிட்டைஉண் பானை,
அரியொடு பிரமனும் தேடி
.. அலந்திட அவரிடை நின்ற
எரியனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(பரி - குதிரை;
எம்மான் - எம் சுவாமி; எம் தந்தை;
திருவடி பேணினாள் பிட்டு - திருவடியை வணங்கிய வந்தியின் பிட்டு;
அலத்தல் - துன்பமுறுதல்;
அவர் இடை நின்ற - அவர்களுக்கு நடுவில் நின்ற;
எரி - பிரகாசம்; நெருப்பு;
)



10)
வளிபுனல் வெளிஅனல் மண்ணாய்
.. வருகிற சிவனைஎண் ணாத
தெளிவிலா மனத்தவர் சொல்லும்
.. சிறுவழி சென்றுழ லாதே;
அளியொடு தொழுகிற பத்தர்
.. அகத்தினில் இரண்டற நிற்கும்
எளியனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(வளி - காற்று;
புனல் - நீர்;
வெளி - ஆகாயம்;
அனல் - தீ;
மண் - நிலம்;
அளி - அன்பு;
அகம் - உள்ளிடம்; மனம்;
இரண்டு அற - (அத்துவைதமாக) ஒன்றாகக் கலந்து; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.60.1 - "... பேத மின்றி அவரவ ருள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர்மாற் பேறரே");
எளியன் - எளிதில் பெறப்படுபவன்;)



11)
பூசனை புரிகிற போதோர்
.. பூக்குறைந் திடவொரு கண்ணை
வாசனை மலரென இட்டு
.. மாயவன் வணங்கிடக் கண்டு,
நேசமாய் ஆழியீந் தானை,
.. நினைபவர் நெஞ்சினை நீங்கா
ஈசனை வழிபடும் அன்பர்
.. எண்ணிய(து) எய்துவர் தாமே!



(* திருமால் ஆயிரம் தாமரைப் பூக்களால் ஈசனைப் பூசிக்கும் பொழுது ஒரு பூக் குறையத் தன் கண்ணைத் தோண்டி, அதையே மலராக இட்டு வழிபட்டுச் சக்கராயுதம் பெற்றதைத் திருவீழிமிழலைத் தலவரலாற்றிற் காண்க..
அப்பர் தேவாரம் - திருமுறை 4.107.9 - "கேழல தாகி...கண்ணிடந்து இட்டஅம் மாலவற்கு அன்று ஆழியும் ஈந்து..."


மாயவன் - திருமால்;
ஆழி - சக்கராயுதம்;
ஈதல் - அளித்தல்;
ஈசன் - இறைவன்; சிவன்;)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:

படிக்க எளிமையாக இருப்பதற்காக இப்பாடல்களில் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவ்விடங்களில் முதற்சொல்லின் கடைசி எழுத்து அடைப்புக்குறிகளுக்குள் காட்டப்பட்டுள்ளது.