Monday, May 28, 2018

04.37 – பொது - பல்லாண்டு


04.37 – பொது - பல்லாண்டு



2013-12-26
பல்லாண்டு
----------------------------
(முதல் மூன்று அடிகள் - அறுசீர். நாலாம் அடி எழுசீர்)
(சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு - 9.29.1 - "மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப்")



1)
செம்மலர்ப் பாதம் தொழுதெழு சிந்தையர் என்றும் சிறந்திருக்க
மும்மலம் அற்றவன் மூவரின் முன்னவன் மூப்பும் முடிவுமிலான்
இம்மையும் அம்மையும் நற்றுணை என்று விளங்கிடும் எம்பெருமான்
அம்மையைப் பங்கினில் வைத்து மகிழ்ந்த அரனுக்கே பல்லாண்டு கூறுதுமே.



செம்மலர்ப் பாதம் தொழுதெழு சிந்தையர் என்றும் சிறந்து இருக்க - தாமரை போன்ற திருவடிகளைத் தொழுது எழும் சிந்தை உடைய அடியவர்கள் என்றும் சிறந்து வாழ்க!
(சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும்" - தவறாமல் 'பெருமான் திருவடிகள் வாழ்க' என்று கூறிக் கொண்டே துயில் எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவள்);
இம்மையும் அம்மையும் நற்றுணை - இப்பிறப்பிலும் இதன் பின்னும் நமக்கு நல்ல துணையாக உள்ளவன்;



2)
சீர்மலி பாதம் தொழுதெழு சிந்தையர் என்றும் சிறந்திருக்க
நீர்மலி செஞ்சடை மீது நிரைமலர்க் கொன்றையும் சூடியவன்
ஊர்விடை ஒன்றை உகந்தவன் ஒண்ணுதல் மாதினைப் பங்கமர்ந்தான்
ஓர்மணி போல மிடற்றினில் நஞ்சை ஒளித்தாற்குப் பல்லாண்டு கூறுதுமே.



சீர் - நன்மை; புகழ்;
மலிதல் - மிகுதல்;
ஊர் விடை - ஏறிச்செல்லும் இடபம்;
ஒண்ணுதல் மாது - ஒள் நுதல் மாது - ஒளி பொருந்திய நெற்றியை உடைய உமையம்மை;
பங்கு அமர்ந்தான் - ஒரு பாகமாக விரும்பியவன்;
ஒளித்தாற்கு - ஒளித்தான்+கு - ஒளித்தவனுக்கு;



3)
சிவன்கழல் வாழ்த்தி எழுந்திடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
தவன்முனி நால்வருக் காலின்கீழ்ச் சங்கைகள் தீர்த்தருள் சற்குரவன்
பவன்பல பேர்கள் உடையவன் பார்வதி பங்கன் படர்சடையான்
நவன்மிக மூத்தவன் என்று திகழும்நம் நம்பற்குப் பல்லாண்டு கூறுதுமே.



சிவன்கழல் வாழ்த்தி எழுந்திடும் சிந்தையர் - சிவபெருமான் திருவடியை வாழ்த்திக்கொண்டே துயிலெழும் மனம் உடைய பக்தர்கள்; சிவபெருமான் திருவடியை வாழ்த்தி உயர்கின்ற மனத்தை உடையவர்கள் என்றும் பொருள்கொள்ளலாம்.
தவன் - தவ வடிவினன்;
முனி நால்வருக்கு ஆலின்கீழ்ச் சங்கைகள் தீர்த்தருள் சற்குரவன் - சனகாதியர் நால்வருக்குக் கல்லால மரத்தின்கீழ் வேதப்பொருளை ஐயமறக் கற்பித்த சற்குரு;
(சங்கை - சந்தேகம்);
பவன் - என்றும் இருப்பவன்; சிவன் திருநாமங்களுள் ஒன்று;
நவன் - புதியவன்; (நவம் - புதுமை);
(திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.9 - "முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே");
நம்பற்கு - நம்பனுக்கு; (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; விரும்பத்தக்கவன்);



4)
சேவமர்ந் தான்கழல் வாழ்த்திடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
மூவரும் தேவரும் போற்றிசெய் முக்கணன் ஆறங்கம் நான்மறைசொல்
நாவலன் நாரியைப் பாகம் நயந்தவன் மாணிதன் ஆருயிர்க்குக்
காவலன் பாற்கடல் நஞ்சைக் கரந்தருள் கண்டற்குப் பல்லாண்டு கூறுதுமே.



சே அமர்ந்தான் - இடபத்தை ஊர்தியாக விரும்பும் சிவபெருமான்;
நாவலன் - (சுந்தரர் தேவாரம் - 7.48.34 - "ஓவுநாள் ... பாண்டிக் கொடுமுடி நாவலா ..." - மறைகளையும், மறைகளின் பொருளையும் சொல்பவனாதல் பற்றி, இறைவனை, நாவலன் என்று அருளினார்);
நயத்தல் - விரும்புதல்; மகிழ்தல்;
மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்;
கண்டற்கு - கண்டனுக்கு;



5)
செஞ்சடை யான்கழல் வாழ்த்திடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
மஞ்சடை யுங்கயி லாய மலையினன் தாளடை வான்மதிசேர்
குஞ்சியன் சம்பந்தர் நற்றமிழ் கூறப்பொற் கிண்ணத்தில் பாலளித்த
வஞ்சியைப் பங்கினில் வைத்து மகிழ்ந்தவெம் மானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.



மஞ்சு அடையும் கயிலாய மலையினன் - மேகம் பொருந்தும் கயிலைமலைமேல் இருப்பவன்;
தாள் அடை வான்மதி சேர் குஞ்சியன் - பாதத்தில் சரண்புகுந்த வெண்மதியைத் தலைமேல் அணிந்தவன்; (குஞ்சி - குடுமி; தலை);
சம்பந்தர் நற்றமிழ் கூறப் பொற்கிண்ணத்தில் பால் அளித்த வஞ்சியைப் பங்கினில் வைத்து மகிழ்ந்த - திருஞான சம்பந்தர் நற்றமிழ் பாடித் துதிக்கும்படி அவருக்குப் பொற்கிண்ணத்தில் ஞானப்பாலைக் கொடுத்த உமையம்மையை ஒரு பங்காக விரும்பிய; (வஞ்சி - வஞ்சிக்கொடி போன்ற உமை - உவம ஆகுபெயர்);
எம் மான் - எம் தலைவன்; (மான் - பெரியோன்);



6)
தினமரன் தாளிணை போற்றிடும் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
வனமுறை வேடனின் வாய்க்கல சப்புனல் மஞ்சனம் ஏற்றுகந்தான்
மனமுரு கிப்பணி காரைக்கால் மாதினை அம்மையே என்றழைத்தான்
வனமுலை மங்கையைப் பங்கினில் வைத்து மகிழ்ந்தாற்குப் பல்லாண்டு கூறுதுமே.



வனம் உறை வேடனின் வாய்க்கலசப் புனல் மஞ்சனம் ஏற்று உகந்தான் - காட்டில் வாழ்ந்த கண்ணப்பர் தம் வாயிற் கொணர்ந்த நீரால் அபிஷேகம் செய்ய அதை ஏற்று மகிழ்ந்தவன்; (மஞ்சனம் - அபிஷேகம்); (சம்பந்தர் தேவாரம் - 3.69.4 - "வேயனைய ... வாய்கலச மாகவழி பாடுசெய்யும் வேடன் ..." - வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர்);
வன முலை - அழகிய முலை; (வனம் - அழகு);
மகிழ்ந்தாற்கே - மகிழ்ந்தவனுக்கே;



7)
தேனெனத் தித்திக்கும் சேவடிச் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
ஆனினுக் காக அருஞ்செயல் ஆற்று மனுவுக் கருள்புரிந்து
வானினைத் தந்தவன் ஓட்டை மறைத்துண்மைத் தொண்டர்க் கிளமைதந்தான்
மானன நோக்கி மடந்தையைப் பாகம் மகிழ்ந்தாற்குப் பல்லாண்டு கூறுதுமே.



தேனெனத் தித்திக்கும் சேவடிச் சிந்தையர் - தேன் போல் இனிக்கும் சிவந்த திருவடியை மனத்தில் வைத்த அடியவர்கள்;
ஆனினுக்காக அரும் செயல் ஆற்று மனுவுக்கு அருள்புரிந்து வானினைத் தந்தவன் - பசுவின் துன்பத்தைக் கண்டு தன் மகனையே தேர்க்காலில் ஊர்ந்த மனுநீதிச் சோழனுக்குப் பேரருள் புரிந்தவன்; (பெரிய புராணத்தில் இவ்வரலாற்றைக் காண்க);
ஓட்டை மறைத்து உண்மைத் தொண்டர்க்கு இளமை தந்தான் - மெய்த்தொண்டிற் சிறந்திருந்த திருநீலகண்டரிடம் கொடுத்து வைத்திருந்த திருவோட்டை மறைத்துப் பின் அவர்க்கு இளமையைத் தந்தவன்; (பெரிய புராணத்தில் திருநீலகண்ட நாயனார் வரலாற்றைக் காண்க);
மான் அன நோக்கி மடந்தையைப் பாகம் மகிழ்ந்தாற்கு - மான் போன்ற நோக்கினை உடைய உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவனுக்கு;



8)
சேமம் தரும்கழ லேநினை சிந்தையர் என்றும் சிறந்திருக்க
சாமம் இசைத்துப் பணிந்த தசமுக னுக்குத் தயைபுரிந்தான்
காமன் மனைவிக் கிரங்கிய கண்ணுதல் வாள்நெடுங் கண்ணுமையை
வாமம் மகிழ்ந்தவன் வஞ்சமில் லாதருள் வள்ளற்குப் பல்லாண்டு கூறுதுமே.



சேமம் - க்ஷேமம் - நல்வாழ்வு; காவல்;
தசமுகன் - பத்துத்தலைகளை உடைய இராவணன்;
காமன் மனைவிக்கு இரங்கிய கண்ணுதல் - இரதி வேண்ட, அவளுக்கு இரங்கி அருள்புரிந்த நெற்றிக்கண்ணன்;
வாள் நெடும் கண் உமையை - ஒளி பொருந்திய, நீண்ட கண்களை உடைய உமாதேவியை;
வாமம் - இடப்பக்கம்;
வஞ்சம் இல்லாது அருள் வள்ளற்கு - வஞ்சமின்றி வழங்கும் வள்ளலுக்கு;



9)
செய்ய திருவடி யேநினை சிந்தையர் என்றும் சிறந்திருக்க
வையம் அளந்தானும் வாச மலரானும் வாழ்த்தும் அழலுருவன்
மெய்யில் ஒளிர்திரு நீற்றினன் வேதம் மொழிந்தவன் வெற்பரையன்
தையல் ஒருபங்கன் தன்னொப்பில் லாத தலைவற்குப் பல்லாண்டு கூறுதுமே.



செய்ய - சிவந்த;
வையம் அளந்தான் - திருமால்;
வாச மலரான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;
அழல் உருவன் - சோதி வடிவினன்;
மெய்யில் ஒளிர்திரு நீற்றினன் - திருமேனியில் ஒளிரும் திருநீற்றினைப் பூசியவன்; ('உண்மையில் ஒளிர்கிறவன்; திருநீறு பூசியவன்' என்றும் பொருள்கொள்ளலாம். உபநிடத வாக்கியம் - முண்டகோபநிஷத் - 2-2-10 - "தமேவ பாந்தம் அநுபாதி சர்வம்" - When he shines, everything shines after him);
தையல் - பெண்;
தன் ஒப்பு இல்லாத தலைவற்கு - தனக்கு எவ்வித ஒப்பும் இல்லாத தலைவனுக்கு;



10)
திருநாமம் செப்ப மறவாத சிந்தையர் என்றும் சிறந்திருக்க
பெருமானின் பேர்சொல்ல அஞ்சிடும் பிட்டரும் துட்டரும் போயகல
ஒருமானும் சூலமும் கையில் உடையவன் நால்வருக் காலதன்கீழ்க்
குருவான மூர்த்தி குழையொரு காதணி கோமாற்குப் பல்லாண்டு கூறுதுமே.



பிட்டர் - பிரஷ்டர் - மதத்துக்குப் புறம்பானவர்கள்;
துட்டர் - துஷ்டர் - தீயவர்கள்;
குழை ஒரு காது அணி கோமாற்கு - ஒரு காதில் குழையை அணியும் அர்த்தநாரீஸ்வரனாகிய கோமானுக்கு; (அப்பர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்குங் குடியல்லோம் ... நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.")



11)
தென்மணி வாசகம் செப்புநற் சிந்தையர் என்றும் சிறந்திருக்க
பொன்மணி முத்தென்று போற்றிப் புலவர் புனைமாலை ஏற்றருள்வான்
பன்மணி ஆர்முடி வானவர் பைம்மலர் கொண்டு பரவுகின்ற
நன்மணி கண்டன் எரிபுரை செம்மேனி நாதற்குப் பல்லாண்டு கூறுதுமே.



தென் மணிவாசகம் செப்பு நல் சிந்தையர் என்றும் சிறந்து இருக்க - இனிய திருவாசகத்தைச் சொல்கின்ற நல்ல சிந்தை உடைய அன்பர்கள் என்றும் சிறந்து வாழ்க! (தென் - இனிய; அழகிய); (மணிவாசகம் - சிறந்த வாசகம் - திருவாசகம்);
பொன் மணி முத்து என்று போற்றிப் புலவர் புனைமாலை ஏற்றருள்வான் - பொன்னே, மணியே, முத்தே என்றெல்லாம் போற்றிப் புலவர்கள் புனைகின்ற தமிழ்மாலையை ஏற்று அருள்பவன்;
பல் மணி ஆர் முடி வானவர் பைம்மலர் கொண்டு பரவுகின்ற நல் மணிகண்டன் - பல இரத்தினங்கள் பொருந்திய கிரீடங்களை அணிந்த தேவர்கள் பசிய பூக்களால் போற்றுகின்ற நல்ல மணிகண்டன்; (பை - பசுமை; அழகு); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.13 - "பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்");
எரிபுரை செம்மேனி நாதற்குப் பல்லாண்டு கூறுதுமே - தீப்போல் செம்மேனி உடைய நாதனுக்குப் பல்லாண்டு கூறுவோம். (புரைதல் - ஒத்தல்);
(அப்பர் தேவாரம் - 4.4.3 - "நீறுமெய் பூசவல் லானு நினைப்பவர் நெஞ்சத்து ளானும் ஏறுகந் தேறவல் லானும் எரிபுரை மேனியி னானும்" -- எரி புரை மேனி - தீவண்ண மேனி);



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :

1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:

  • வெண்டளை தழுவி, முதல் மூன்று அடிகள் அறுசீராகவும், ஈற்றடி எழுசீராகவும் நடக்கும் கொச்சக ஒருபோகு. - a.k.a கலித்தாழிசை.

  • முதல் மூன்று அடிகள் - அறுசீர். நாலாம் அடி எழுசீர்.

  • ஒவ்வோர் அடியினுள்ளும் வெண்டளை பயிலும். (அடிகளிடையே வெண்டளை அவசியம் இல்லை).

  • அடிகளின் ஈற்றுச்சீர் விளங்காய்ச் சீர். அடியினுள் வேறெங்கும் விளங்காய்ச்சீர் வாராது. (கட்டளைக் கலித்துறை போன்றே).

2) உதாரணம்: சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு - 9.29.1 -

"மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகலப்

பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனியெல் லாம்விளங்க

அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து

பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.");

----------------- ----------------

04.36 – பூவனூர்


04.36 – பூவனூர்



2013-12-25
பூவனூர்
---------------------------------
(அறுசீர் விருத்தம் - 'மா காய் மா காய் மா தேமா' என்ற வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி")



1)
நாவார் தமிழ்பாடி நம்பா அருளென்று நாடு வார்க்கு
நாவாய் எனவாகி நன்றே புரியீசன் நாரி பங்கன்
சாவாப் பெருமையினான் தண்ணார் மதிசூடி தங்கும் ஊராம்
பூவார் மதுவுண்டு வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.



நா ஆர் தமிழ் பாடி நம்பா அருள் என்று நாடுவார்க்கு - நாவிற் பொருந்திய தேவாரம் திருவாசகம் பாடி, 'நம்பனே, அருளாய்' என்று வணங்கும் அன்பர்களுக்கு;
நாவாய் எனகி நன்றே புரிசன் - இப்பிறவிக்கடலைக் கடப்பிக்கும் படகாகி நன்மைசெய்யும் ஈசன்; (நாவாய் - மரக்கலம்);
நாரி பங்கன், சாவாப் பெருமையினான், தண்ர் மதி சூடி தங்கும் ஊர் ஆம் - உமைபங்கனும், இறப்பு இல்லாதவனும், குளிர்ந்த சந்திரனைச் சூடியவனுமான சிவபெருமான் உறைகின்ற தலம் ஆவது;
பூ வார் மது உண்டு வண்டு ஆர் பொழில் சூழ்ந்த பூவனூரே - பூவில் சொரியும் தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த பூவனூர்; (சம்பந்தர் தேவாரம் - 3.49.2 - "நம்பு வாரவர் நாவி னவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது வொப்பது" - வம்பு நாண்மலர் வார் மது - வாசனையுடைய புதிய மலரில் சொரிகின்ற தேன்);



2)
காதார் குழையானே கையில் மழுவானே கரிய கண்டா
ஓதா தருமறைகள் எல்லாம் உணர்வோனே உம்பர் போற்றும்
பாதா எனவேத்திப் பணிவார் வினைதீர்க்கும் பரமன் ஊராம்
போதார் மதுவுண்டு வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.



காது ஆர் குழையானே கையில் மழுவானே கரிய கண்டா - காதில் குழையை அணிந்தவனே, கையில் மழுவை ஏந்தியவனே, நீலகண்டனே;
ஓதாது அருமறைகள் எல்லாம் உணர்வோனே - (அப்பர் தேவாரம் - 6.55.11 - "உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி .. ஓதாதே வேத முணர்ந்தாய் போற்றி" - 'ஓதாது உணர்ந்தாய்' என்றது, 'இயற்கை உணர்வுடையவனே' என்றவாறு);
உம்பர் போற்றும் பாதா என ஏத்திப் பணிவார் வினை தீர்க்கும் பரமன் ஊர் ஆம் - "தேவர்கள் போற்றும் திருப்பாதனே" என்று துதித்து வழிபடும் அன்பர்களது வினையைத் தீர்க்கும் பரமன் உறையும் தலம் ஆவது;
போது ஆர் மது ண்டு வண்டு ஆர் பொழில் சூழ்ந்த பூவனூரே- பூவில் பொருந்திய தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த பூவனூர்;



3)
காக்கும் கழல்பாடிக் கையால் மலர்தூவிக் கருது வார்க்குத்
தாக்கும் வினைதீர்க்கும் தாதை அழலாரும் சடையில் நீரைத்
தேக்கும் பெருமான்உண் பலியோர் சிரமேற்கும் செல்வன் ஊராம்
பூக்கள் கமழ்சோலை புடைசூழ்ந் தழகாரும் பூவ னூரே.



தாதை - தந்தை;
அழல் ஆரும் சடை - தீப்போன்ற சடை; (ஆர்தல் - ஒத்தல்); )(அப்பர் தேவாரம் - 4.57.6 - 'காரழல் கண்ட மேயாய்... நீரழற் சடையு ளானே...' - நீர் - கங்கையைச்சூடிய, அழற் சடை - உவமத்தொகை. அழல்போலும் ஒளிர் செஞ்சடை);
உண்பலி ஓர் சிரம் ஏற்கும் செல்வன் - பிச்சையைப் பிரமன் தலையோட்டில் ஏற்கின்ற செல்வன்;



4)
தனையே நினைவார்க்குத் தஞ்சம் அளித்தருளும் சாம வேதன்
அனலோர் கரமேந்தி அல்லில் நடமாடும் ஐயன் ஓர்பால்
மினலேர் இடைமாதைப் பங்கா விரும்பியவன் மேவும் ஊராம்
புனலார் முகில்வந்து புகுவான் பொழில்சூழ்ந்த பூவ னூரே.



தனையே நினைவார்க்குத் தஞ்சம் அளித்தருளும் - தன்னையே எண்ணி வழிபடும் அடியார்க்கு அபயம் அருளும்;
சாமவேதன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; (சம்பந்தர் தேவாரம் - 3.56.2 - "சடையினன் சாமவேதன் சரி கோவண வன்மழுவாட் படையினன்");
அனல் ஓர் கரம் ஏந்தி அல்லில் நடம் ஆடும் ஐயன் - ஒரு கையில் தீயை ஏந்தி இரவில் கூத்தாடும் தலைவன்;
ஓர் பால் மினல் ஏர் இடை மாதைப் பங்கா விரும்பியவன் - மின்னல் போன்ற இடையை உடைய உமையை ஒரு பக்கம் பங்காக விரும்பி ஏற்றவன்; (மினல் - மின்னல் - இடைக்குறை விகாரம்); (ஏர்தல் - ஒத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.7.9 - "புகலிந்நகர் மின்னிடை மாதொடும் வீற்றிருந்த விமலனன்றே");
புனல் ஆர் முகில் வந்து புகு வான் பொழில் - நீர் நிறைந்த மேகம் வந்து நுழையும் அழகிய சோலை;



5)
ஓதக் கடல்நஞ்சம் உண்டான் புகழ்பாடி ஓம்பு வார்க்கு
வாதைத் தொடரறுப்பான் மலையான் மகளோர்பால் வைத்து கந்தான்
சீதப் புனலோடு திங்கள் சடையேறும் சீரன் ஊராம்
போதைப் புகழ்வண்டார் பொழில்கள் புடைசூழ்ந்த பூவ னூரே.



ஓதக் கடல் - மிக்க நீரையுடைய கடல்; (ஓதம் - நீர்; அலை);
வாதைத் தொடர் - துன்பத்தொடர்; (வாதை - துன்பம்; வேதனை);
அறுப்பான் - அறுப்பவன்; தீர்ப்பவன்; (அறுத்தல் - நீக்குதல்; தீர்த்தல்);
சீதப் புனல் - குளிர்ந்த நீர் - கங்கை;
சீரன் - புகழ் உடையவன்;
போதைப் புகழ் வண்டு ஆர் பொழில்கள் - பூக்களைப் புகழ்ந்து வண்டு ஒலிக்கும் சோலைகள்; (போது - பூ); (ஆர்த்தல் - ஒலித்தல்);



6)
கடியார் மலர்தூவிக் கமழும் தமிழ்பாடும் காத லார்க்கு
மடியா வினைதீர்த்து வானம் தருகின்ற வள்ளல் எம்மான்
துடியார் கரத்தீசன் தூமா மதிசூடி சூலன் ஊராம்
பொடியார் உடலோடு பூவைப் புகழ்வண்டார் பூவ னூரே.



கடி ஆர் மலர் - வாசனை பொருந்திய பூ;
காதலார் - அன்பு உடையவர்கள் - அடியவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.26.5 - "ஏனப்பூண் .... கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர் ...");
மடிதல் - அழிதல்; சாதல்;
துடி - உடுக்கை;
பொடி ஆர் உடலோடு பூவைப் புகழ் வண்டு ஆர் பூவனூரே - மகரந்தப் பொடி பொருந்திய உடலோடு பூவைப் புகழ்ந்து வண்டு பாடுகின்ற பூவனூர்;
(பெரிய புராணத்தில் - திருமலைச் சருக்கம் 5. தடுத்தாட்கொண்ட புராணம் - பாடல் 242 - "மன்று ளாடுமது வின்னசை யாலே .... கமல வண்டலர் கைதைத் துன்று நீறுபுனை மேனிய வாகித் தூய நீறுபுனை தொண்டர்க ளென்னச் சென்று சென்றுமுரல் கின்றன ....." என்ற பாடலையும் காண்க);



7)
நாகா பரணத்தான் நஞ்சார் மணிகண்டன் நயக்கும் ஊராம்
பாகார் மொழிமாதைப் பாகம் உடையானே பாய்வெள் ளேற்றுப்
பாகா படர்சடைமேல் பனிவெண் பிறையானே பரம என்று
போகா வினைதீரப் போற்றித் தொழுவார்சேர் பூவ னூரே.



நஞ்சு ஆர் மணிகண்டன் - விடத்தை உண்ட நீலகண்டன்;
பாகு ஆர் மொழி மாது - பாகு போன்ற இன்மொழி பேசும் உமையம்மை; (சம்பந்தர் தேவாரம் - 3.2.10 - "கலவ மாமயி லார்இய லாள்கரும் பன்ன மென்மொழி யாள்...." - கரும்பு போன்று இனிய மொழியை மென்மையாகப் பேசுபவள் - உமை);
பாய் வெள் ஏற்றுப் பாகா - பாய்ந்து செல்லும் வெள்ளை இடபத்தைச் செலுத்துபவனே; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-34: "மெய்யா விமலா விடைப்பாகா" - விடை - எருது. அதனைச் செலுத்துவோனை, "பாகன்" என்றது, மரபு வழுவமைதி);
போகா வினை தீர - நீங்காத வினைகளெல்லாம் தீரும்படி;



8)
செல்லா திழிதேரால் சினமே மிகவோடிச் சிலையி டந்த
அல்லார் நிறத்தரக்கன் அழவோர் விரலூன்றி அடர்த்த அண்ணல்
வில்லால் வியனரணம் மூன்றும் விழவெய்தான் மேவும் ஊராம்
பொல்லா வினைதீரப் போற்றித் தொழுவார்சேர் பூவ னூரே.



செல்லாது இழி தேரால் சினமே மிக, ஓடிச் சிலை இடந்த - வானிற் செல்லும் தேர் கயிலைமலைமேல் செல்லாமல் தரையில் இறங்கியதால் மிகக் கோபம் கொண்டு ஓடிப்போய் மலையைப் பேர்த்த; (சிலை - மலை);
அல் ஆர் நிறத்து அரக்கன் அழ, ஓர் விரல் ஊன்றி அடர்த்த அண்ணல் - கரிய மேனி உடைய அரக்கனான இராவணன் அழும்படி, ஓர் விரலை ஊன்றி அவனை நசுக்கிய அண்ணல்; (அல் - இரவு; இருள்); (ஆர்தல் - ஒத்தல்);
வில்லால் வியன் அரணம் மூன்றும் விழ எய்தான் மேவும் ஊர் ஆம் - பெரிய முப்புரங்களும் அழியும்படி வில்லினால் எய்தவன் விரும்பி உறையும் ஊர் ஆகும்; (அப்பர் தேவாரம் - 6.5.1 - "எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி ... வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி");
பொல்லா வினை தீரப் போற்றித் தொழுவார் சேர் பூவனூரே - பாவங்கள் தீர வேண்டிப் பணியும் அடியவர்கள் சென்றடையும் திருப்பூவனூர்.



9)
எழிலார் மலரோன்மால் எங்கும் மிகநேடி எய்த மாட்டா
அழலாய் உயரீசன் அடியார் அகவாசன் ஆதி மூர்த்தி
நிழலார் மழுவாளன் நீறார் மணிமார்பன் நின்ற ஊராம்
பொழிலார் மலரில்தேன் மகிழ்வண் டறையோவாப் பூவ னூரே.



எழில் ஆர் மலரோன் மால் - தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும்;
எங்கும் மிக நேடி எய்த மாட்டா அழலாய் உயர் ஈசன் - வானிலும் மண்ணிலும் மிகத் தேடியும் அடைய ஒண்ணாத சோதியகி உயர்ந்த ஈசன்;;
அடியார் அக வாசன் - அன்பர் உள்ளத்தில் தங்கியிருப்பவன்; (அகம் - உள்ளம்; வாசன் - வசிப்பவன்);
நிழல் ஆர் மழுவாளன் - ஒளி திகழும் மழுவாள் உடையவன்;
நீறு ஆர் மணி மார்பன் - திருநீறு பூசிய அழகிய மார்பை உடையவன்;
பொழில் ஆர் மலரில் தேன் மகிழ் வண்டு அறை ஓவாப் பூவனூரே - சோலையில் பூக்களில் மதுவை உண்டு மகிழ்கின்ற வண்டுகளின் ரீங்காரம் ஓயாத திருப்பூவனூர்;



10)
காணாக் குருடர்களாய்க் கள்ளம் பலபேசும் கையர் சொல்லைப்
பேணா தொழிவீரே பேரா வினைதீர்க்கும் பெரிய தேவன்
நாணா அரையினிலோர் நாகம் தனைவீக்கும் நம்பன் ஊராம்
பூணாப் பொடியணிந்த வண்டார் பொழில்சூழ்ந்த பூவ னூரே.



கையர் - கீழோர்;
பேணாது ஒழிவீர் - மதியாமல் நீங்குங்கள்;
பேரா வினை தீர்க்கும் பெரிய தேவன் - நீங்காத பாவத்தையெல்லாம் நீக்கும் மகாதேவன்;
நாணா அரையினில் ஓர் நாகம்தனை வீக்கும் நம்பன் - அரைநாணாக ஒரு நாகப்பாம்பைக் கட்டியிருக்கும் சிவபெருமான்; (வீக்குதல் - கட்டுதல்); (நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);
பூணாப் பொடி அணிந்த வண்டு ஆர் பொழில் - மேனிமேல் அலங்காரமாக மகரந்தத் தாதுக்களை அணிந்த வண்டுகள் ரீங்காரம் செய்யும் சோலை; (பூண் - அணி ;
யாப்புக் குறிப்பு: 'குருடர்களாய்' - ஒற்று நீக்கி அலகிடுக - கருவிளங்காய்ச் சீர்;



11)
கவியால் கழல்போற்றிக் காதல் மிகவூறிக் கசிப வர்க்குத்
தவியா நிலையீவான் தலைமேற் பிறைதன்னைத் தாங்கும் ஈசன்
செவியோர் குழைகாட்டும் மெய்யன் பவளம்போற் செய்யன் ஊராம்
புவியோர் பசிதீர்க்கும் பொன்னார் வயல்சூழந்த பூவ னூரே.



கவி - பாடல்;
காதல் - அன்பு;
தவியா நிலை ஈவான் - வருத்தம் இல்லாத இன்பநிலையை அளிப்பவன்;
செவி ஓர் குழை காட்டும் மெய்யன் - ஒரு காதில் குழையை அணிந்த திருமேனியன் - அர்த்தநாரீஸ்வரன்; (மெய்யன் - திருமேனி உடையவன்; மெய்ப்பொருளாக உள்ளவன்);
செய்யன் - சிவந்த நிறம் உடையவன்;
புவியோர் பசி தீர்க்கும் பொன் ஆர் வயல் சூழந்த பூவனூரே - மக்களின் பசியைத் தீர்க்கும் பொன் போன்ற நெல்மணிகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த பூவனூர்;
(சம்பந்தர் தேவாரம் - 1.30.2 - "ஒன்னார் புரமூன் றுமெரித் தவொருவன் உறைவா வது... பொன்னார் வயற்பூம் புகலிந் நகர்தானே.");



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
அறுசீர் விருத்தம் - 'மா காய் மா காய் மா தேமா' என்ற வாய்பாடு.
இதனில் 2-ஆம், 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.
இது 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற அறுசீர் அமைப்பை ஒட்டியது. ஆனால், அதனில் காய்ச்சீர் வரும் இடங்களுள், 1-ஆம், 3-ஆம் சீர்களில் பெரும்பாலும் மாச்சீர்கள் அமைய வருவது. அவ்வாய்பாட்டில் காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். அப்படி அமைந்தது இப்பதிகம்.
2) உதாரணம்-1: சம்பந்தர் தேவாரம் - 2.72.1 -
"பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி
அந்தா ரரவணிந்த வம்மா னிடம்போலும் அந்தண் சாரல்
வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்
செந்தேன் றெளியொளிரத் தேமாங் கனியுதிர்க்குந் திருநணாவே."
3) உதாரணம்-2: திருஞான சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி”
4) பூவனூர் - இத்தலம் நீடாமங்கலம் - மன்னார்குடி மார்க்கத்தில் நீடாமங்கலத்திற்குத் தெற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது .
5) திருப்பூவனூர் - சதுரங்க வல்லபநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=331
-------------- --------------