Saturday, October 26, 2019

04.77 – கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) ('சாக்கோட்டை')


04.77 – கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) ('சாக்கோட்டை')

2014-08-29
கலயநல்லூர் - (திருக்கலயநல்லூர்) (கும்பகோணம் அருகுள்ள 'சாக்கோட்டை')
----------------------------------
( 12 பாடல்கள் )
(அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் 'கூவிளம் கூவிளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு; அரையடியுள் வெண்டளை பயிலும்);
(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்");
(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்");

1)
சேர்வினை தீர்வழி என்று தேடிவந் துன்னை அடைந்தேன்
ஆர்விடம் தன்னை மிடற்றில் அடைத்தவ னேஅருள் நல்காய்
ஊர்விடை யின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய்
கார்வயல் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

சேர்வினை - வினைத்தொகை - பல பிறவிகளிற் சேர்த்த வினைகள்;
உன்னை அடைந்தேன் - உன்னைச் சரணடைந்தேன்;
ஆர் விடம்தன்னை - உண்ட விடத்தை; பரவிய நஞ்சை; (ஆர்தல் - உண்ணுதல்; பரவுதல்);
மிடற்றில் - கண்டத்தில்;
ஊர்விடையின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய் - இடபவாகனத்தின்மேல் ஏறிச்சென்று ஊரர் இடும் பிச்சையை ஏற்பவனே; (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்); (விடை - இடபம்);
கார்வயல் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - நீர் நிரம்பிய வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கார் - நீர்);

2)
பழவினை தீர்வழி என்று பாடிவந் துன்னை அடைந்தேன்
மழவிடை ஒன்றை நயந்த மன்னவ னேஅருள் நல்காய்
கழலினிற் கண்மலர் இட்ட கரியவற் காழியை ஈந்தாய்
கழனிகள் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

பழவினை தீர்வழி என்று பாடிவந்து உன்னை அடைந்தேன் - என் பழவினைகள் தீரும் வழி என்று உன் புகழைப் பாடிவந்து உன்னைச் சரணடைந்தேன்;
மழ விடை ஒன்றை நயந்த மன்னவனே அருள் நல்காய் - ஓர் இளைய எருதினை வாகனமாக விரும்பிய அரசனே, அருள்வாயாக;
கழலினிற் கண்மலர் இட்ட கரியவற்கு ஆழியை ஈந்தாய் - உன் திருவடியில் தன் மலர்க்கண்ணை மலராக இட்டு வழிபட்ட திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்தவனே; (இது திருவீழிமிழலை வரலாறு);
கழனிகள் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கழனி - வயல்);

3)
அரும்பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன்
கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவ னேஅருள் நல்காய்
சுரும்பமர் கொன்றை அரவம் தூமதி சேர்செஞ் சடையாய்
கரும்பொழில் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.

அரும் பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன் - நீக்குதற்கு அரிய பிறவிப்பிணி தீரவேண்டிப் பக்தியோடு உன்னைச் சரணடைந்தேன்;
கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவனே அருள் நல்காய் - கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனை எரித்தவனே, அருள்வாயாக; (வேள் - மன்மதன்);
சுரும்பு அமர் கொன்றை அரவம் தூ மதி சேர் செஞ்சடையாய் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலர், பாம்பு, தூய திங்கள் இவற்றையெல்லாம் செஞ்சடையில் அணிந்தவனே; (அமர்தல் - விரும்புதல்);
கரும் பொழில் சூழ்ந்து அழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - அடர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கருமை - கறுப்பு; பெருமை; பசுமை);
(சம்பந்தர் தேவாரம் - 2.47.10 - "உரிஞ்சாய வாழ்க்கை ... கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்...");

4)
வந்தடை வல்வினை தீர வண்டமிழ் பாடி அடைந்தேன்
சந்திர னைச்சடை வைத்த சங்கர னேஅருள் நல்காய்
வந்தனை செய்யிமை யோர்கள் மகிழ்வுற முப்புரம் அட்டாய்
கந்த மலர்ப்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

வண்டமிழ் - வண் தமிழ் - வளப்பமான தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன;
வந்தனை செய் இமையோர்கள் மகிழ்வுற முப்புரம் அட்டாய் - வந்தித்த தேவர்கள் மகிழும்படி முப்புரங்களை அழித்தவனே; (அடுதல் - அழித்தல்);
கந்த மலர்ப்பொழில் - வாசமலர்கள் நிறைந்த சோலை;

5)
ஒளிவிடம் இன்றித் துரத்தும் உறுவினைக் கஞ்சி அடைந்தேன்
அளிவிடம் தன்னை அயின்ற அணிமிடற் றாய்அருள் நல்காய்
தளியென அன்பர் அகத்தில் தங்கிடு வாய்நறை உண்டு
களியளி ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

ஒளிவு இடம் இன்றித் துரத்தும் உறுவினைக்கு அஞ்சி அடைந்தேன் - தப்பி ஒளித்துக்கொள்ள எவ்விடமும் இல்லாதபடி என்னைத் துரத்தும் மிக்க தீவினைக்கு அஞ்சி உன்னைச் சரணடைந்தேன்;
அளி விடம் தன்னை அயின்ற அணிமிடற்றாய் அருள் நல்காய் - அள்ளி நஞ்சை உண்ட அழகிய நீலகண்டத்தை உடையவனே, அருள்வாயாக; (அளி விடம்தன்னை - விடத்தை அள்ளி; "அள்ளி" என்பது எதுகைநோக்கி இடைக்குறையாக அளி என்று வந்தது; அள்ளுதல் - கையால் முகத்தல்; "அளிவிடம்" என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, "கடல் அளித்த நஞ்சை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (அயில்தல் - உண்ணுதல்);
தளி என அன்பர் அகத்தில் தங்கிடுவாய் - அன்பர் நெஞ்சே கோயிலாகக் கொண்டவனே; (தளி - கோயில்);
நறை உண்டு களி அளி ஆர் பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - தேனை உண்டு களிக்கின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே;
(நறை - தேன்); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);

6)
தீவினை ஆயின தீரச் செந்தமிழ் பாடி அடைந்தேன்
சேவினை ஊர்திந யந்த செஞ்சடை யாய்அருள் நல்காய்
நாவினில் நாமம தோதும் நற்றவர்க் காநமற் செற்றாய்
காவிடை வண்டறை கின்ற கலயநல் லூர்ப்பெரு மானே.

சேவினை ஊர்தி நயந்த செஞ்சடையாய் - இடபத்தை வாகனமாக விரும்பிய, செஞ்சடையினனே; (சே - இடபம்);
நாவினில் நாமமதோதும் - நாவினால் திருப்பெயறை ஓதும்; ('ஆல்' என்னாமல் 'இல்' என்றது உருபுமயக்கம் ); (அப்பர் தேவாரம் - 6.62.9 - "எண்ணாரும் புகழானே உன்னை யெம்மான் என்றென்றே நாவினில்எப் பொழுதும் உன்னி" - உன்னை என் தலைவன் என்று நாவினால் எப்பொழுதும் கூறி மனத்தால் நினைத்து);
நற்றவர்க்கா நமற் செற்றாய் - நல்ல தவமுடைய மார்க்கண்டேயருக்காகக் காலனை அழித்தவனே;
(நமற் செற்றாய் - நமனைச் செற்றாய்); (செறுதல் - அழித்தல்);
(இலக்கணக் குறிப்பு: பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு. அதுபோல், முதற்சொல்லின் கடைசியில் 'ன்' இருக்கின் அது 'ற்' என்று திரியவும் செய்யும்);
காவிடை வண்டு அறைகின்ற - சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற;

7)
மாமலை போலுள பாவம் மாய்வுற உன்னை அடைந்தேன்
கோமள வல்லியை வாமம் கொண்டவ னேஅருள் நல்காய்
தூமதி யத்தினை நாகம் சுற்றிடச் செஞ்சடை வைத்தாய்
காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

மா மலைபோல் உள பாவம் மாய்வு உற உன்னை அடைந்தேன் - பெரிய மலைபோல் உள்ள தீவினை அழியவேண்டி உன்னைச் சரணடைந்தேன்;
கோமளவல்லியை வாமம் கொண்டவனே அருள் நல்காய் - மென்கொடி போன்ற உமையை இடப்பக்கம் பாகமாகக் கொண்டவனே, அருள்வாயாக; (கோமளம் - மென்மை; அழகு; இளமை); (வல்லி - கொடி);
தூ மதியத்தினை நாகம் சுற்றிடச் செஞ்சடை வைத்தாய் - தூய திங்களைப் பாம்பு சுற்றிக்கொள்ளும்படி அவற்றைச் சிவந்த சடையில் அணிந்தவனே;
காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (காமரு - அழகிய);

8)
நெடிய வினைத்தொடர் நீங்க நின்கழல் போற்றி அடைந்தேன்
முடியினிற் கங்கையைத் தாங்கும் முக்கண னேஅருள் நல்காய்
கொடிய அரக்கனும் பாடிக் கும்பிடக் கண்டு மகிழ்ந்தாய்
கடிமலர் ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

கொடிய அரக்கனும் பாடிக் கும்பிடக் கண்டு மகிழ்ந்தாய் - இராவணனை நசுக்கிப் பின் அவன் அழுது இசைபாடி வழிபடக் கண்டு இரங்கி அருளியவனே;
கடி மலர் ஆர் பொழில் - வாச மலர்கள் நிறைந்த சோலை;

9)
பண்ணிய வல்வினை தீரப் பைந்தமிழ் பாடி அடைந்தேன்
தண்ணில வைச்சடை மீது தாங்கிறை யேஅருள் நல்காய்
மண்ணகழ் மாலொடு வேதன் வாழ்த்திடு மாறுயர் சோதீ
கண்ணிறை பூமலி சோலைக் கலயநல் லூர்ப்பெரு மானே.

பைந்தமிழ் - பசிய தமிழ் - தேவாரம் திருவாசகம் முதலியன; (பைம்மை - பசுமை; பசுமை - குளிர்ச்சி; அழகு;.... );
தண் நிலவைச் சடைமீது தாங்கு இறையே அருள் நல்காய் - குளிர்ந்த திங்களைச் சடையின்மேல் தாங்கிய இறைவனே, அருள்வாயாக;
மண் அகழ் மாலொடு வேதன் வாழ்த்திடுமாறு உயர் சோதீ - மண்ணை அகழ்ந்த திருமாலும் பிரமனும் போற்றும்படி ஓங்கிய சோதியே; (வேதன் - பிரமன்); (சோதீ - சோதியே);
கள் நிறை பூ மலி சோலைக் கலயநல்லூர்ப் பெருமானே - தேன் நிறைந்த பூக்கள் மிக்க சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கண்ணிறை - கள் நிறை); (மலிதல் - மிகுதல்);

10)
அவிவழி கட்கழைக் கின்ற அறிவிலர் சொற்களை நீங்கும்
புவியினில் பெற்றஇவ் வாழ்வின் பொருளென அஞ்செழுத் தோதிச்
செவியினிற் சீரினைக் கேட்கும் சிந்தையர்க் கின்பம் அளிப்பான்
கவினுறு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.

அவி வழிகட்கு அழைக்கின்ற அறிவிலர் சொற்களை நீங்கும் - அழிகின்ற மார்க்கங்களுக்கு வாரும் என்று அழைக்கின்ற அறிவிலிகளது பேச்சை மதிக்கவேண்ட; (அவிதல் - அழிதல்); (அவித்தல் - கெடுத்தல்); (நீங்கும் - நீங்குங்கள்);
புவியினில் பெற்ற இவ் வாழ்வின் பொருள் என அஞ்செழுத்து ஓதிச் - மனிதப்பிறவியின் பயன் என்று திருவைந்தெழுத்தை ஓதி; (பொருள் - பயன்);
செவியினிற் சீரினைக் கேட்கும் சிந்தையர்க்கு இன்பம் அளிப்பான் - காதால் சிவனது திருப்புகழைக் கேட்கும் விருப்பம் உடையவர்களுக்கு இன்பத்தை அளிப்பவன்; (செவியினில் - செவியினால் - உருபு மயக்கம்);
கவினுறு - அழகிய;

11)
சிலந்தியின் தொண்டினைக் கண்டு செகந்தனை ஆள்நிலை தந்தான்
சலந்தரி செஞ்சடை ஈசன் தரைமிசை ஆழியைக் கீறிச்
சலந்தரன் தன்னை அழித்த சதுரினன் பூதங்கள் தம்மைக்
கலந்தவன் நங்கையொர் பங்கன் கலயநல் லூர்ப்பெரு மானே.

* அடி-1 - திருவானைக்கா வரலாறு - சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தது;
* அடி-2, 3 - சலந்தராசுரனை அழித்த வரலாறு;

சிலந்தியின் தொண்டினைக் கண்டு செகந்தனை ஆள் நிலை தந்தான் - திருவானைக்காவில் சிலந்தி செய்த திருத்தொண்டைக் கண்டு மகிழ்ந்து அச்சிலந்தியை உலகை ஆளும் கோச்செங்கட்சோழ அரசனாகப் பிறப்பித்தவன்; (செகம் - உலகம்);
சலம் தரி செஞ்சடை ஈசன் - கங்கையைச் சிவந்த சடையில் தரித்த ஈசன்;
தரைமிசை ஆழியைக் கீறிச் சலந்தரன் தன்னை அழித்த சதுரினன் - நிலத்தில் ஒரு வட்டத்தை வரைந்து அதனைக்கொண்டு சலந்தராசுரனை அழித்த வல்லவன்; (ஆழி - சக்கரம்); (சதுர் - சாமர்த்தியம்; ஆற்றல்; (சதுர்+இன்+அன் = சதுரினன் = சதுரன் = சமர்த்தன்);
பூதங்கள் தம்மைக் கலந்தவன் - ஐம்பூதங்களாகிக் கலந்து நின்றவன்; பூதகணங்களொடு இருப்பவன்; (திருவாசகம் - 8.31.10 - "பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்"); (அப்பர் தேவாரம் - 6.1.1 - "அரியானை ... கனலைக் காற்றைக் கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே");
நங்கை ஒர் பங்கன் - உமை ஒரு பங்கன்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);
கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;

12)
நெய்தழு வுந்திரி சூலன் நீர்தழு வுஞ்சடை அண்ணல்
மைதழு வும்மணி கண்டன் மான்மறி ஏந்திய கையன்
பொய்தழு வாமனத் தோடு புதுமலர் தூவிநின் றேத்திக்
கைதொழு வார்துயர் தீர்க்கும் கலயநல் லூர்ப்பெரு மானே.

நெய் தழுவும் திரிசூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (தழுவுதல் - சூழ்தல்; பூசுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலை வேல்..." - ஆயுதங்கள் துருப்பிடியாவாறு நெய் பூசிவைத்தல் மரபு);
நீர் தழுவும் சடை அண்ணல் - சடையில் கங்கையைத் தாங்கிய தலைவன்;
மை தழுவும் மணிகண்டன் - கரிய மணி திகழும் கண்டத்தை உடையவன்; (மை - கறுப்பு );
மான்மறி ஏந்திய கையன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;
பொய் தழுவா மனத்தோடு புதுமலர் தூவிநின்று ஏத்திக் கைதொழுவார் துயர் தீர்க்கும் - வஞ்சம் அற்ற மனத்தர் ஆகிப் புதிய பூக்களைத் தூவி வாழ்த்திக் கைகூப்பி வணங்கும் பக்தர்களது துயரைத் தீர்ப்பவன்;
கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :

 1) யாப்புக் குறிப்பு :

  • அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் "கூவிளம் கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு;

  • அரையடியுள் வெண்டளை பயிலும்;

  • 3-ஆம் சீர் 4-ஆம் சீர் இடையே வெண்டளை இருக்கவேண்டியது இல்லை.

  • அரையடியின் ஈற்றுச் சீர் (3,6-ஆம் சீர்கள்) மாச்சீராகவே அமையும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


2) உதாரணம்:

சம்பந்தர் தேவாரம் - 2.67.1 -

மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்

விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்

கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்

பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே


3) கலயநல்லூர் - திருக்கலயநல்லூர் - இக்காலத்தில் 'சாக்கோட்டை' என்ற பெயரில் வழங்குகின்றது. இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது.
கலயநல்லூர் ('சாக்கோட்டை') - அமிர்தகடேஸ்வரர் கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=379
திருக்கலயநல்லூர் - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=76
----------- --------------

Saturday, October 12, 2019

03.04.074 - சிவன் - பழைய தமிழ் இலக்கிய நூல் - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2008-01-16

03.04.74 - சிவன் - பழைய தமிழ் இலக்கிய நூல் - சிலேடை

-------------------------------------------------------

பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் அஞ்செழுத்துக்

கோவை அதுஎன்றும் கூறுவர் - சேவை

புரிவதென்றோ என்றும் புகல்வர் பழைய

அரிய தமிழ்நூல் அரன்!


சொற்பொருள்:

பா - பாட்டு;

பாவை - பெண் - பார்வதி;

பாவையும் - 1. பாடலையும்; / 2. பார்வதியையும் (வேற்றுமைத்தொகை - '' உருபு தொக்கு நிற்கின்றது);

பக்கம் - 1. புத்தகத்தின் பக்கம்; / 2. அருகு; உடலின் ஒரு பக்கம்;

கோ - தலைவன்;

கோவை - கோக்கப்பட்டது; தொடுக்கப்பட்டது;

அஞ்செழுத்துக்கோவை - 1. அஞ்சு + எழுத்து + கோவை - வினைத்தொகை - அஞ்சுகின்ற எழுத்துக் கோவை (செய்யுள்); / 2. நமச்சிவாய என்ற பஞ்சாட்சரத் தலைவனை;

சேவை - 1. சே! வை! / 2. தொண்டு;

புரிவது - 1. பொருள் விளங்குவது; / 2. செய்வது;

அரிய - அருமையான;


தமிழ் இலக்கிய நூல்:

பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் - (அதன்) பக்கங்களில் பாடல்கள் இருக்கும்;

"அஞ்சு எழுத்துக் கோவை அது" என்றும் கூறுவர் - அஞ்சுகின்ற, எழுத்துகளால் கோக்கப்பட்டது அது என்றும் (சிலர்) சொல்வார்கள்; (- 'அது மிகவும் கடினமான நூல்' என்பார்கள்).

"சே! வை! புரிவது என்றோ" என்றும் புகல்வர் - (அதனைப் படிப்பதற்காக எடுக்கப் போகும் நண்பரிடம்) "சே! வை! (இது எல்லாம்) நமக்கு எப்பொழுது புரியப்போகின்றது!" என்றும் சொல்வார்கள்;

பழைய அரிய தமிழ் நூல் - (அத்தகையது) பழைய அருமையான தமிழ் இலக்கியப் புத்தகம்;


சிவன்:

பாவையும் பக்கத்தில் கொண்டிருக்கும் அஞ்செழுத்துக் கோவை - பார்வதியையும் தன் உடலில் ஒரு புறம் கொண்டு இருக்கின்றவனும், 'நமச்சிவாய' என்ற அஞ்சு எழுத்துத் தலைவனும் ஆன சிவனை;

"அது" என்றும் கூறுவர் - (வட மொழியில்) 'அது' என்றும் சொல்வார்கள்; (தமிழிலும் 'மெய்ப்பொருள்' என்பார்கள்). (வடமொழியில் பரம்பொருளை "அது" என்றும் சொல்வது உண்டு. "தத்துவமஸி" என்ற மஹாவாக்கியத்தில்: தத் - அது. த்வம் - நீ, அஸி - ஆகின்றாய்);

"சேவை புரிவது என்றோ" என்றும் புகல்வர் - (பக்தர்கள்) 'தொண்டு செய்வது எந்நாளோ' என்று சொல்லித் தொழுவார்கள்;

பழைய அரிய அரன் - அனைத்திற்கும் முற்பட்ட தொன்மையான, அருமையான, ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Friday, October 11, 2019

04.76 – கற்குடி (திருக்கற்குடி) ('உய்யக்கொண்டான்மலை')


04.76 – கற்குடி (திருக்கற்குடி) ('உய்யக்கொண்டான்மலை')

2014-08-24
கற்குடி (திருக்கற்குடி) (திருச்சிராப்பள்ளி அருகுள்ள 'உய்யக்கொண்டான்மலை')
----------------------------------
(அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் 'கூவிளம் கூவிளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு; அரையடியுள் வெண்டளை பயிலும்);
(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்");
(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த்திங்கட் சூளா மணியும்");

1)
நார்மலி நெஞ்சினர் நாளும் நாவினில் நாமம் அணிந்து
நீர்மலர் கொண்டடி போற்ற நினைவரம் தந்தருள் செய்வான்
கூர்மழு ஏந்திய கையன் கூவிள மாலையன் நஞ்சால்
கார்முகில் போல்திகழ் கண்டன் கற்குடி மேய பிரானே.

நார் மலி நெஞ்சினர் நாளும் நாவினில் நாமம் அணிந்து - அன்புடைய பக்தர்கள் திருவைந்தெழுத்தை ஓதி; (நார் - அன்பு);
(சம்பந்தர் தேவாரம் - 4.41.11 - "நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்"); (8.7.2 - திருவெம்பாவையில் 'பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்' என்ற இடத்தில் பாசம் என்ற சொல்லும் இதே போல் அன்பு என்ற பொருளில் வரக்காணலாம்);
நீர் மலர்கொண்டு அடி போற்ற நினை வரம் தந்தருள் செய்வான் - நீராலும் பூவாலும் வழிபாடு செய்ய, அவர்கள் விரும்பிய வரங்களைத் தருபவன்;
கூர்மழு ஏந்திய கையன் - கயில் கூரிய மழுப்படையை ஏந்தியவன்;
கூவிள மாலையன் - வில்வமாலை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);
நஞ்சால் கார்முகில் போல் திகழ் கண்டன் - ஆலகால விடத்தால் கரிய மேகம் போல் திகழ்கின்ற கண்டத்தை உடையவன்; (கார்முகில் - கார்காலத்து மேகம்);
கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்; (பிரான் - தலைவன்; கடவுள்);

2)
படபடெ னத்துடி ஆர்த்துப் பல்கணம் சூழ்ந்திசை பாட
நடுவிருள் மாநடம் ஆடும் நாயகன் நான்மறை நாவன்
நடுநடுத் தோடிய தேவர் நனிமகிழ் வெய்திடு மாறு
கடுவிடம் உண்டருள் கண்டன் கற்குடி மேய பிரானே.

படபடெனத் துடி ஆர்த்துப் பல்கணம் சூழ்ந்து இசை பாட - படபடவென்று உடுக்குகள் ஒலித்துப் பல பூதகணங்கள் சுற்றி நின்று இசை பாட;
நடுவிருள் - நள்ளிருள்; (சம்பந்தர் தேவாரம் - 2.84.11 - "கடல்வரை யோதமல்கு ... இடுபறை யொன்ற ... நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினை கெடுதலாணை நமதே" );
நடுநடுத்தல் - நடுங்குதல்; மிக அஞ்சுதல்;
நனி - மிக;
கடுவிடம் - கொடிய நஞ்சு;


3)
பருமணி ஆர்முடி போலப் பன்னகம் ஆர்சடை அண்ணல்
அருமணி மாணியைக் காத்த அரண்அவன் ஈரிரு வர்க்குக்
குருமணி யாய்அறம் சொன்ன குழகன் அணங்கொரு கூறன்
கருமணி காட்டிய கண்டன் கற்குடி மேய பிரானே.

பருமணி ஆர் முடி போலப் பன்னகம் ஆர் சடை அண்ணல் - பெரிய மணிகள் பொருந்திய கிரீடம் போலப் பாம்பைச் சடைமேல் அணிந்த கடவுள்;
அருமணி மாணியைக் காத்த அரண் அவன் - அரிய மணி போன்ற மார்க்கண்டேயரைக் காத்த அரண் போன்றவன்;
ஈரிருவர்க்குக் குருமணியாய் அறம் சொன்ன குழகன் - முனிவர்கள் நால்வர்க்குக் குருவாகி மறைப்பொருளை விரித்துரைத்த இளைஞன்;
அணங்கு ஒரு கூறன் - அர்த்தநாரீஸ்வரன்;
கருமணி காட்டிய கண்டன் - நீலகண்டன்;

4)
குடமுழ வம்பறை கொட்டிக் கூளிகள் சூழ்ந்திசை பாட
உடல்சுடு கானிடை அல்லில் ஒள்ளெரி ஏந்தி நடிப்பான்
அடல்விடை ஒன்றுடை அண்ணல் அடிதொழு வானவர் உய்யக்
கடல்விடம் உண்டருள் கண்டன் கற்குடி மேய பிரானே.

குட முழவம் - குடமுழா என்ற வாத்தியம்; (Large hemispherical loud-sounding drum);
கூளி - பூதகணங்கள்;
உடல்சுடுகான் - உடலை எரிக்கின்ற சுடுகாடு;
அல் - இரவு;
ஒள் எரி - ஒளி வீசும் தீ;
நடித்தல் - ஆடுதல்;
அடல் விடை - வலிய இடபம்;

5)
மறையணி நாவினர் என்றும் வாழ்த்தி வணங்கிடும் நாதன்
நறையணி நற்றமிழ்ப் பித்தன் நம்பிய வர்க்கருள் அத்தன்
சிறையணி வண்டினம் நாடும் தேன்திகழ் கொன்றை அணிந்தான்
கறையணி கின்ற மிடற்றன் கற்குடி மேய பிரானே.

மறை - வேதம்;
நறையணி நற்றமிழ்ப் பித்தன் - மணம் மிக்க தமிழ்ப்பாமாலைகளை விரும்புபவன்; (நறை - தேன்; வாசனை);
நம்பியவர்கு அருள் அத்தன் - விரும்பிப் பக்தியோடு வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற தந்தை; (நம்புதல் - விரும்புதல்);
சிறை - இறகு;
மிடற்றன் - கண்டன்; (மிடறு - கண்டம்);

6)
ஆவினில் ஐந்துகந் தாடி அங்கமும் வேதமும் ஓதி
சேவினை ஏறிவந் தையம் தேர்ந்துழல் கின்றவன் அங்கை
மூவிலை வேலினன் நக்கு முப்புரம் தீப்புகச் செய்தான்
காவியங் கண்ணியொர் பங்கன் கற்குடி மேய பிரானே.

ஆடி, ஓதி, செய்தான் - ஆடியவன், ஓதியவன், செய்தவன்;
ஆவினில் ஐந்து - ஆனஞ்சு - பால், தயிர், நெய் முதலியன;
அங்கமும் வேதமும் - நான்மறையும் ஆறங்கமும்;
சேவினை ஏறி - இடபவாகனத்தின்மேல் ஏறி; (சே - எருது); (சேவின்மேல் என்னாமல் சேவினை என்று வந்ததை உருபு மயக்கமாகக் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - 4.89.6 - "... விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே போந்தார் ...")
ஐயம் தேர்தல் - பிச்சை ஏற்றல்;
மூவிலை வேல் - திரிசூலம்;
நக்கு - சிரித்து;
காவியங் கண்ணி - குவளைப்பூப் போலும் கண்களை உடையவளாகிய உமையம்மை; (காவி - கருங்குவளை); (சுந்தரர் தேவாரம் - 7.68.3 - "பூவில்வா சத்தைப் பொன்னினை ... காவியங் கண்ணி பங்கனை...");

7)
அந்தம் இலாவொரு தேவன் ஆனையின் ஈருரி போர்த்தான்
முந்தெயில் மூன்றெரி செய்த மொய்ம்பினன் நான்மறை நாவன்
ஐந்தொழில் செய்திடும் ஐயன் ஆறுமு கந்திகழ் கின்ற
கந்தனைப் பெற்றவள் பங்கன் கற்குடி மேய பிரானே.

* 1 முதல் 6 வரை எண்ணலங்காரம் அமைந்த பாடல்;
ஈருரி - உரித்த தோல்; ஈரம் பொருந்திய தோல்;
முந்து எயில் மூன்று எரிசெய்த மொய்ம்பினன் - முன்னம் முப்புரங்களை எரித்த வீரன்; (மொய்ம்பு - வலிமை; தோள்);
ஐந்தொழில் - பஞ்சகிருத்தியம் - சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அனுக்கிரஹம் என்ற கடவுளின் ஐந்தொழில்;
கந்தனைப் பெற்றவள் பங்கன் - அப்பர் தேவாரம் - 5.19.9 - "நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்";

8)
மெய்வலி தன்னை நினைந்து வெற்பை இடந்த அரக்கன்
நைவுற ஓர்விரல் ஊன்றி நல்லிசை கேட்டருள் நாதன்
நெய்யணி மூவிலை வேலன் நீறணி மேனியன் ஓர்பால்
கையினில் சங்கணி கோலன் கற்குடி மேய பிரானே.

மெய்வலி தன்னை நினைந்து வெற்பை இடந்த அரக்கன் - தன் உடல் வலிமையை எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை;
நைவுற - வருந்தும்படி; (நைவு - வருந்துகை - Suffering);
நெய் அணி மூவிலை வேலன் - நெய் (எண்ணெய்) தடவப்பெற்ற திரிசூலத்தை ஏன்டியவன்; (ஆயுதங்களுக்கு எண்ணெய் பூசி வைத்தல் வழக்கம்);
நீறு அணி மேனியன் - திருநீற்றை மேனியிற் பூசியவன்;
ஓர்பால் கையினில் சங்கு அணி கோலன் - ஒரு பக்கம் வளையல் அணிந்த கோலத்தை உடையவன்; (சங்கு - வளையல்); (சூலம்-சூலன், சீலம்-சீலன், வேடம்-வேடன், என்பன போல், கோலம்-கோலன்);
(சம்பந்தர் தேவாரம் - 3.81.1 - "சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி" - சங்கு அமரும் - சங்கு வளையல் பொருந்திய);

9)
விண்ணுயர் அன்னம தாகி மேலினை நேடிய வேதன்
மண்ணை இடந்தடி நேடு மாலறி யாஅழல் வண்ணன்
பண்ணமர் செந்தமிழ் பாடும் பத்தருக் கின்னருள் செய்வான்
கண்ணொரு மூன்றுடை அண்ணல் கற்குடி மேய பிரானே.

விண் உயர் அன்னம் அது ஆகி மேலினை நேடிய வேதன் - வானில் உயர்ந்த அன்னப்பறவை ஆகி திருமுடியைத் தேடிய பிரமன்; (வேதன் - பிரமன்);
மண்ணை இடந்து அடி நேடு மால் அறியா அழல்வண்ணன் - நிலத்தை அகழ்ந்து திருவடியைத் தேடிய திருமால் இவர்களால் அறியப்படாத சோதி வடிவினன்;
பண் அமர் செந்தமிழ் பாடும் பத்தருக்கு இன்னருள் செய்வான் - பண் பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடும் பக்தர்களுக்கு இனிய அருள் செய்பவன்;
கண்ணொரு மூன்றுடை அண்ணல் - முக்கட் பரமன்;
கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;

10)
பற்பல பொய்களைப் பேசிப் பாழ்ங்குழிக் கேஅழைக் கின்ற
அற்பரின் சொற்களைத் தள்ளும் அஞ்செழுத் தோதடி யார்க்கு
நற்பதம் நல்கிடும் நம்பன் நண்ணலர் முப்புரம் எய்தான்
கற்பெரு வில்லினை ஏந்திக் கற்குடி மேய பிரானே.

பாழ்ங்குழி - நாசக்குழி;
தள்ளும் - தள்ளுங்கள்; மதிக்கவேண்டா;
அஞ்செழுத்து ஓது அடியார்க்கு நற்பதம் நல்கிடும் நம்பன் - திருவைந்தெழுத்தை ஓதும் அடியவர்களுக்கு நற்கதியை அருளும் சிவபெருமான்; (நம்பன் - விரும்பத்தக்கவன் - சிவன் திருநாமம்);
நண்ணலர் முப்புரம் எய்தான் கற்பெரு வில்லினை ஏந்தி - பகைவர்களது முப்புரங்களை மேருமலையை வில்லாக ஏந்தி எய்தவன்; (நண்ணலர் - பகைவர்); (கற்பெருவில் - கல் + பெரு + வில் - மலையால் ஆன பெரிய வில்); (கல் - மலை);

(திருமந்திரம் - ஏழாம் தந்திரம் - 10.7.34.5 -
"குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே.");

11)
சொற்சுவை மிக்கு விளங்கும் தூய தமிழ்த்தொடை பாடும்
நற்சுவை தன்னை உணர்ந்த நாவினர் தீவினை தீர்ப்பான்
பொற்சபை நாடகன் நாகம் பூணிறை முப்புரம் செற்ற
கற்சிலை ஏந்திய கையன் கற்குடி மேய பிரானே.

சொற்சுவை மிக்கு விளங்கும் தூய தமிழ்த்தொடை பாடும் - தேவாரம், திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடுகின்ற;
நற்சுவை தன்னை உணர்ந்த நாவினர் தீவினை தீர்ப்பான் - நல்ல சுவையை உணர்ந்த நாவினை உடையவர்களது தீவினைய்த் தீர்ப்பவன்;
பொற்சபை நாடகன் - பொன்னம்பலத்தில் ஆடும் கூத்தன்;
நாகம் பூண் இறை - நாகாபரணன்;
முப்புரம் செற்ற கற்சிலை ஏந்திய கையன் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்தி முப்புரங்களை அழித்தவன்; (கல் - மலை; சிலை - வில்);
கற்குடி மேய பிரானே - திருக்கற்குடியில் எழுந்தருளிய பெருமான்;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
அறுசீர் விருத்தம் - பெரும்பாலும் 'கூவிளம் கூவிளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு; அரையடியுள் வெண்டளை பயிலும்;
3-ஆம் சீருக்கும் 4-ஆம் சீருக்கும் இடையே வெண்டளை இருக்கவேண்டியது இல்லை.
அரையடியின் ஈற்றுச் சீர் (3,6-ஆம் சீர்கள்) மாச்சீராகவே அமையும்.
விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.
விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.
அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.

2) உதாரணம்:
சம்பந்தர் தேவாரம் - 2.67.1 -
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே

3) கற்குடி - திருக்கற்குடி - இக்காலத்தில் 'உய்யக்கொண்டான்மலை ' என்ற பெயரில் வழங்குகின்றது. இத்தலம் திருச்சிராப்பள்ளி அருகே உள்ளது - உஜ்ஜீவநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=154
திருக்கற்குடி - தேவாரம் தளத்தில்: http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=82
----------- --------------