Sunday, July 31, 2022

06.02.152 – கச்சி ஏகம்பம் - மிகுத்துப்புரி தீவினை - (வண்ணம்)

06.02.152 – கச்சி ஏகம்பம் - மிகுத்துப்புரி தீவினை - (வண்ணம்)

2011-08-06

06.02.152 - மிகுத்துப்புரி தீவினை - (கச்சி ஏகம்பம்)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத்தன தானன தானன

தனத்தத்தன தானன தானன

தனத்தத்தன தானன தானன .. தந்த தான )

(மதப்பட்டவி சாலக போலமு - திருப்புகழ் - திருப்புக்கொளியூர் அவிநாசி)


மிகுத்துப்புரி தீவினை யாயின

.. வெருட்டிப்பல பேரிடர் நாடொறும்

.. விளைத்துத்தொடர் வாழ்விது போயிரு .. கண்க ளால்நீர்

உகுத்துத்தமிழ் மாலைகள் நாவினொ

.. டுரைத்துத்திகழ் சேவடி யேதொழும்

.. உளத்தைத்தமி யேனுற ஆரருள் .. தந்து காவாய்

தொகுத்துப்புனை பூவொடு நீரொடு

.. துதித்துப்பணி மாணியை நாடிய

.. சுருக்கைப்பிடி காலனை வார்கழல் .. ஒன்றை வீசிச்

செகுத்துப்பரி வோடருள் நாயக

.. திரைத்துப்புனல் பாய்சடை யாயணி

.. திருக்கச்சியை யேயிட மாவுடை .. எம்பி ரானே.


பதம் பிரித்து:

மிகுத்துப் புரி தீவினை ஆயின

.. வெருட்டிப் பல பேர்-இடர் நாள்தொறும்

.. விளைத்துத் தொடர் வாழ்வு இது போய், இரு கண்களால் நீர்

உகுத்துத், தமிழ் மாலைகள் நாவினொடு

.. உரைத்துத், திகழ் சேவடியே தொழும்

.. உளத்தைத் தமியேன் உற ஆரருள் தந்து காவாய்;

தொகுத்துப் புனை பூவொடு நீரொடு

.. துதித்துப் பணி மாணியை நாடிய,

.. சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச்

செகுத்துப், பரிவோடு அருள் நாயக;

.. திரைத்துப் புனல் பாய் சடையாய்; அணி

.. திருக்கச்சியையே இடமா உடை எம்பிரானே.


* 3ம் அடி - மார்க்கண்டேயர்க்கு அருள்செய்ததைச் சுட்டியது.


மிகுத்துப் புரி தீவினை ஆயின வெருட்டிப் பல பேர்-இடர் நாள்தொறும் விளைத்துத் தொடர் வாழ்வு இது போய் - ஆணவத்தால் செய்த/செய்கின்ற தீவினையெல்லாம் என்னை அச்சுறுத்திப் பல பெரும் துன்பங்களைத் தினமும் உண்டாக்கித் தொடர்கின்ற இந்த வாழ்க்கை நீங்கி; (மிகுத்தல் - செருக்குதல்; பெருக்குதல்); (வெருட்டுதல் - அச்சுறுத்துதல்); (பேர் இடர் - பெரும் துன்பம்);

இரு கண்களால் நீர் உகுத்துத், தமிழ் மாலைகள் நாவினொடு உரைத்துத் - இரு கண்களால் கண்ணீர் சொரிந்து, தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடி; (உகுத்தல் - சிந்துதல்; சொரிதல்);

திகழ் சேவடியே தொழும் உளத்தைத் மியேன் உற ஆரருள் தந்து காவாய் - விளங்கும் உன் சிவந்த திருவடியையே வழிபடும் உள்ளத்தைக் கதியற்ற அடியேன் பெறுமாறு அரிய அருள் புரிந்து என்னைக் காத்தருள்க;


தொகுத்துப் புனை பூவொடு நீரொடு துதித்துப் பணி மாணியை நாடிய - பல பூக்களைச் சேகரித்து மாலை கட்டிச் சூட்டி, நீரால் அபிஷேகம் செய்து போற்றிப் பணிந்த மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய; (தொகுத்தல் - திரட்டுதல்); (புனைதல் - அலங்கரித்தல்; கட்டுதல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

சுருக்கைப் பிடி காலனை வார்-கழல் ஒன்றை வீசிச் செகுத்துப், பரிவோடு அருள் நாயக - கையில் சுருக்கினைப் பிடித்த காலனை நீண்ட கழல் அணிந்த திருவடி ஒன்றை விசி உதைத்து அழித்து, மார்க்கண்டேயருக்கு இரங்கிய அருளிய தலைவனே; (சுருக்கு - Noose;) (வார் கழல் - நீண்ட கழலை அணிந்த திருவடி); (செகுத்தல் - அழித்தல்);


திரைத்துப் புனல் பாய் சடையாய் - அலைமோதிக் கங்கை பாயும் சடையினனே; (திரைத்தல் - அலையெழுதல்);

அணி திருக்கச்சியையே இடமா உடை எம்பிரானே - அழகிய திருக்கச்சி ஏகம்பத்தையே இடமாக உடைய எம்பெருமானே; (அணி - அழகிய); (கச்சி - கச்சி ஏகம்பம்); (இடமா - இடமாக);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.04.018 – சுந்தரர் துதி - வாடும் மனமே

06.04.018 – சுந்தரர் துதி - வாடும் மனமே

2011-08-05

06.04.018) சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2011-Aug-05/06

-------------------------

(நேரிசை வெண்பா)

(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

வாடும் மனமே வழியறிவாய் மன்றினுள்

ஆடும் பரமன் அடிமையெனத் - தேடியிடம்

வந்து வழக்காடி ஆட்கொண்ட மாபத்தர்

சுந்தரர் சொல்லே துணை.


தேடியிடம் - இடம் தேடி;

மா பத்தர் - பெரும் பக்தர்;


2)

மனமே மகிழ வழியிது கேளாய்

வினைதீர்ந்து செல்வம் விளையும்; - புனற்சடையன்

தந்தபொன்னை ஆற்றிலிட்டா ரூர்க்குளத்தில் தானெடுத்த

சுந்தரர் சொல்லே துணை.


3)

காலனுக் கஞ்சிக் கலங்கும் மனமேஓர்

பாலனுக்கா அன்றவன்மேல் பாய்ந்தவெஞ் - சூலனுக்குச்

சந்ததம் சந்தத் தமிழ்மாலை சாத்திய

சுந்தரர் சொல்லே துணை.


பாய்ந்தவெஞ்சூலன் - பாய்ந்த எம் சூலன்; பாய்ந்த வெம் சூலன்; (வெம்மை - கொடுமை; கோபம்; பராக்கிரமம்);

சந்ததம் - எப்பொழுதும்;

சாத்துதல் - அணிதல்;


4)

முன்பு முதலையுண்ட பாலகனைப் பெற்றவர்கள்

இன்புற இங்கெமனை ஈயச்சொல் - அன்புருவாம்

தந்தையே என்றுதமிழ் பாடித் தருவித்த

சுந்தரர் சொல்லே துணை.


தருவித்தல் - வருவித்தல்;


* சுந்தரர் தேவாரம் - 7.92.4

உரைப்பார் உரைஉகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய்

அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளி யூர்அவி னாசியே

கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.


5)

சங்கிலிக்குச் செய்த சபதத்தை மீறியதால்

தங்கண் இழந்து தடுமாறி - அங்கணன்முன்

நொந்தழு தாரூரில் நோக்கமடைந் தின்புற்ற

சுந்தரர் சொல்லே துணை.


நோக்கம் - பார்வை;


* சுந்தரர் தேவாரம் - 7.95.2

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்

குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை கொத்தை யாக்கினீர்

எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்

மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே.


6)

மனைவியின் கோபத்தை மாற்ற எனக்கிங்

குனையன்றி உற்றார்ஆர் உள்ளார் - எனவிரவில்

நந்தியவன் தூது நடந்துதவும் நல்லடியார்

சுந்தரர் சொல்லே துணை.


பதம் பிரித்து:

"மனைவியின் கோபத்தை மாற்ற, எனக்கு இங்கு

உனை அன்றி உற்றார் ஆர் உள்ளார்?" - என, இரவில்

நந்தி-அவன் தூது நடந்து உதவும் நல்-அடியார்

சுந்தரர் சொல்லே துணை.


என - என்று சொல்ல;

நந்தி - சிவபெருமான்; (7.92.7 - "நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே" - 'நந்தி' என்னும் வடசொல் , 'இன்பம் உடையவன்' எனப் பொருள்படும்);


7)

போவாரைக் கொள்ளைகொள் இம்முருகன் பூண்டியில்

மேவாமல் வேறூர் விரும்பாயோ - நாவார

வந்தித் தரனருளால் மாண்பொருளைப் பெற்றுமகிழ்

சுந்தரர் சொல்லே துணை.


"என்று" நாவார வந்தித்து - என்று ஒரு சொல்லை வருவித்துக்கொள்க.

மேவுதல் - உறைதல்;

மாண் பொருள் - மிகுந்த பொருள்;


* சுந்தரர் தேவாரம் - 7.49.1

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமைசொல்லித்

திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்குமிடம்

முடுகு நாறிய வடுகர் வாழ்முரு கன்பூண்டி மாநகர்வாய்

இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக் கிங்கிருந் தீர்எம்பி ரானீரே.


8)

காவிரி வெள்ளத்தை நீந்திக் கடக்ககில்லேன்

பூவிரிகா ஐயாறா ஓவெனக் - கூவியழை

செந்தமிழால் நீர்விலகிச் செல்வழி நல்கமகிழ்

சுந்தரர் சொல்லே துணை.


கடக்ககில்லேன் - கடக்கும் ஆற்றல் இல்லேன்;

"பூ-விரி-கா ஐயாறா ஓ" எனக் கூவி அழை - பூக்கள் மலரும் சோலை திகழும் திருவையாற்றுப் பெருமானே! ஓலம்" என்று கூவி அழைத்த;


* சுந்தரர் தேவாரம் - 7.77.9

கதிர்க்கொள் பசியே ஒத்தேநான் கண்டே னும்மைக் காணாதேன்

எதிர்த்து நீந்த மாட்டேன்நான் எம்மான் தம்மான் தம்மானே

விதிர்த்து மேகம் மழைபொழிய வெள்ளம் பரந்து நுரைசிதறி

அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகேளோ !


9)

அந்தமில் ஐயன் அருந்துணைவன் என்றுதனைத்

தந்தருள் செய்த தகைமையினால் - நிந்தையைப்போல்

கந்தமலி பாவால் கழலிணையைப் பாடியருள்

சுந்தரர் சொல்லே துணை.


அந்தம் இல் ஐயன் - முடிவு இல்லாத தலைவன்;

அரும் துணைவன் - அரிய தோழன்;

கந்தமலிபா - கந்தம் மலி பா - மணம் மிகுந்த பாமாலை;


10)

முனிவரெலாம் மால்நான் முகன்வர வேற்கும்

இனியவன்ஆர் என்றுவியப் பெய்தத் - தனிவிடையார்

நந்தமர் ஊரனெனும் நம்பி நலந்திகழும்

சுந்தரர் சொல்லே துணை.


தனி விடையார் - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாகக் கொண்டவர்;

நந்தமர் ஊரன் - நம் தமர் ஊரன் - நம் தோழன், "ஆரூரன்" என்னும் பெயரினன்;

நம்பி - ஆணிற் சிறந்தோன்;


* சுந்தரர் தேவாரம் - 7.100.9

இந்திரன் மால்பிரமன் னெழி லார்மிகு தேவரெல்லாம்

வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த யானை யருள்புரிந்து

மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான்

நந்தமர் ஊரனென்றான் நொடித் தான்மலை உத்தமனே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Saturday, July 30, 2022

06.02.151 – நின்றியூர் (திருநின்றியூர்) - தெரிகின்ற தீயை - (வண்ணம்)

06.02.151 – நின்றியூர் (திருநின்றியூர்) - தெரிகின்ற தீயை - (வண்ணம்)

2011-07-16

06.02.151 - தெரிகின்ற தீயை - (நின்றியூர் (திருநின்றியூர்))

(இக்கால வழக்கில் "திருநன்றியூர்" - மயிலாடுதுறை அருகே உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதந்த தானத் தனதந்த தானத்

தனதந்த தானத் .. தனதான )


தெரிகின்ற தீயைத் தொடவென்று மோடித்

.. .. தெளிவின்றி வாடித் .. தவியாமல்

.. சினமின்றி ஆசைப் புயலின்றி மாயத்

.. .. திரைவென்று வாழற் .. கருளாயே

பரிகின்ற தாயிற் பெரிதுன்ற னேயப்

.. .. பதமென்று பேசப் .. படுவோனே

.. பணிகொண்ட பேருக் கணிநின்று பாவப்

.. .. படைகொன்று வானைத் .. தருவோனே

இரிகின்ற தேவர்க் குயிர்தந்து பாலித்

.. .. தெரிநஞ்சை வாயிட் .. டதனாலே

.. இருள்கண்ட தீயொத் தொளிர்கின்ற ஆகத்

.. .. திணைகின்ற மாதுக் .. கினியானே

திரிகின்ற மாமுப் புரமன்று வேவச்

.. .. சிலையொன்றில் ஏவைப் .. பிணைவீரா

.. சிறைவண்டு பாடித் திரள்கின்ற சோலைத்

.. .. திருநின்றி யூரிற் .. பெருமானே.


பதம் பிரித்து:

தெரிகின்ற தீயைத் தொட என்றும் ஓடித்

தெளிவு இன்றி வாடித் தவியாமல்,

சினம் இன்றி ஆசைப் புயல் இன்றி மாயத்

திரை வென்று வாழற்கு அருளாயே;


பரிகின்ற தாயிற் பெரிது உன்றன் நேயப்

பதம் என்று பேசப்படுவோனே;

பணிகொண்ட பேருக்கு அணி நின்று பாவப்

படை கொன்று வானைத் தருவோனே;


இரிகின்ற தேவர்க்கு உயிர் தந்து பாலித்து

எரி-நஞ்சை வாய் இட்டு அதனாலே

இருள்-கண்ட; தீ ஒத்து ஒளிர்கின்ற ஆகத்து

இணைகின்ற மாதுக்கு இனியானே;


திரிகின்ற மா முப்புரம் அன்று வேவச்

சிலை ஒன்றில் ஏவைப் பிணை வீரா;

சிறை வண்டு பாடித் திரள்கின்ற சோலைத்

திருநின்றியூரிற் பெருமானே.


தெரிகின்ற தீயைத் தொட என்றும் ஓடித், தெளிவு இன்றி வாடித் தவியாமல் - தீ வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெளிவில்லாமல் சென்று அத்தீயில் விழுந்து வாடி வருந்தாமல்;

சினம் இன்றி, ஆசைப் புயல் இன்றி, மாயத் திரை வென்று வாழற்கு அருளாயே - கோபம், ஆசை இவற்றை நீங்கி, மாயக்கடலை வென்று இனிது வாழ்வதற்கு அருள்வாயாக; (மாயத் திரை - மாயக்கடல்);


பரிகின்ற தாயின் பெரிது உன்றன் நேயப் பதம் என்று பேசப்படுவோனே - அன்புடைய தாயை விடச் சிறந்த அன்பு உடையவன் என்று புகழப்படுபவனே; (தாயின் பெரிது - தாயினும் சிறந்தது); (உன்றன் நேயப் பதம் - உன் அன்புத் திருவடி; உன் அன்பின் தன்மை); (திருவாசகம் - சிவபுராணம் - 8.1 - "தாயிற் சிறந்த தயாவான தத்துவனே");

பணிகொண்ட பேருக்கு அணி நின்று பாவப் படை கொன்று வானைத் தருவோனே - அடியவர்களுக்கு அருகே காக்கும் படையாக நின்று, அவர்களைத் தாக்க வரும் பாவப்படையை அழித்துச் சிவலோகத்தைக் கொடுப்பவனே; (பணிகொள்ளுதல் - தொண்டனாக ஏற்றுக்கொள்ளுதல்); (அணி நின்று - சமீபத்தில் இருந்து; படையாக இருந்து); (அணி - சமீபத்தில்; படை); (அண்ணுதல் - கிட்டுதல்);


இரிகின்ற தேவர்க்கு உயிர் தந்து பாலித்து, எரி-நஞ்சை வாய் இட்டு அதனாலே இருள்-கண்ட - (பாற்கடலைக் கடைந்தபோது விளைந்த விஷத்தைக் கண்டு) அஞ்சி ஓடிய தேவர்கள் அழியாமல் அவர்களைக் காத்து, எரிக்கும் நஞ்சை உண்டு அதனால் கறுத்த கண்டத்தை உடையவனே; (இரிதல் - அஞ்சி ஓடுதல்); (பாலித்தல் - காத்தல்); (இருள்தல் - கறுத்தல்);

தீ ஒத்து ஒளிர்கின்ற ஆகத்து இணைகின்ற மாதுக்கு இனியானே - தீப்போல் ஒளிரும் செம்மேனியில் ஒரு பாகமாக இணையும் பார்வதிக்கு இனியவனே; (ஆகம் - உடல்);


திரிகின்ற மா முப்புரம் அன்று வேவச் சிலைன்றில்வைப் பிணை வீரா - எங்கும் திரியும் பெரிய முப்புரங்களும் அன்று வெந்து அழியும்படி ஒரு வில்லில் அம்பைப் பூட்டிய வீரனே; (சிலை - வில்; மலை); (- அம்பு); (பிணைத்தல் - சேர்த்தல்);

சிறை வண்டு பாடித் திரள்கின்ற சோலைத் திருநின்றியூரிற் பெருமானே - இறகுகளை உடைய வண்டுகள் ரீங்காரம் செய்து திரளும் சோலை சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. (சிறை - இறகு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.150 – பொது - மாதைக் காசை - (வண்ணம்)

06.02.150 – பொது - மாதைக் காசை - (வண்ணம்)

2011-06-15

06.02.150 - மாதைக் காசை - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானத் தானத் .. தனதான )

(நாடித் தேடித் தொழுவார்பால் - திருப்புகழ் - திருவானைக்கா)


மாதைக் காசைத் .. தினம்நாடி

.. மாயத் தேபுக் .. கழிவேனோ

வேதத் தாயைப் .. பணியாத

.. வீணர்க் கேகத் .. தொலைவாகிப்

பாதச் சீரைத் .. தமிழாலே

.. பாடிப் பேணத் .. தவறாத

காதற் சீலர்க் .. கணியானே

.. கானத் தாடற் .. பெருமானே.


பதம் பிரித்து:

மாதைக் காசைத் தினம் நாடி,

.. மாயத்தே புக்கு அழிவேனோ;

வேதத்தாயைப் பணியாத

.. வீணர்க்கு ஏகத் தொலைவு ஆகிக்,

பாதச் சீரைத் தமிழாலே

.. பாடிப் பேணத் தவறாத

காதற் சீலர்க்கு அணியானே;

.. கானத்து ஆடற் பெருமானே.


மாதைக் காசைத் தினம் நாடி, மாயத்தே புக்கு அழிவேனோ - பெண், பொருள் என்ற ஓயா ஆசையால் மாயையுள் அழுந்தி அழியாதவாறு அருள்வாயாக; (மாயம் - மாயை);

வேதத்தாயைப் பணியாத வீணர்க்கு ஏகத் தொலைவு ஆகிக் - வேதத்தில் விளங்கும் உன்னைப் பணியாத வீணர்களுக்கு மிகவும் தூரமாய்க்; (வேதத்தாயை - வேதங்களிடையே விளங்கும் உன்னை); (ஏகத் தொலைவு - மிகவும் தூரம்); (அப்பர் தேவாரம் - 6.12.5 - "வேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்");

பாதச் சீரைத் தமிழாலே பாடிப் பேணத் தவறாத காதற் சீலர்க்கு அணியானே - உன் திருவடிப் புகழைத் தமிழால் பாடிப் போற்றத் தவறாத அன்புடைய சீலர்களுக்கு அண்மையில் இருப்பவனே; (சீர் - புகழ்); (பேணுதல் - போற்றுதல்);

கானத்து ஆடற் பெருமானே - சுடுகாட்டில் கூத்தாடலை உடைய பெருமானே.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.149 – புகலி (காழி) - அலையு மனமும் - (வண்ணம்)

06.02.149 – புகலி (காழி) - அலையு மனமும் - (வண்ணம்)

2011-06-11

06.02.149 - அலையு மனமும் - (புகலி (காழி))

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனன தனன தனன தனன

தனன தனன .. தனதான )


(திமிர உததி - திருப்புகழ் - பழநி)

(கரிய பெரிய - திருப்புகழ் - பழநி)


அலையு மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் .. அடியேனை

.. அவதி மலியு நெறியில் அழிவை

.. .. அடைய விரைய .. உகையாமுன்

இலையு மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய .. தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய .. அருளாயே

உலவு நதியும் ஒளிரு மதியும்

.. .. உரகம் அருகு .. முடிமீதே

.. உடைய ஒருவ மயிலை அனைய

.. .. உமையும் உடலில் .. ஒருபாதி

இலகும் இறைவ புகலி நகரில்

.. .. எழுது மறையை .. மகிழ்வோனே

.. இருவர் பரவு பரம கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


பதம் பிரித்து:

அலையும் மனமும் உலகில் நசையும்

.. .. அதிக வினையும் அடியேனை

.. அவதி மலியும் நெறியில் அழிவை

.. .. அடைய விரைய உகையாமுன்,

இலையும் மலரும் இயலும் இசையும்

.. .. இசையும் இனிய தமிழோடே

.. இயலும் வகையில் உனது சரண

.. .. இணையை அடைய அருளாயே;

உலவும் நதியும் ஒளிரும் மதியும்

.. .. உரகம் அருகு முடிமீதே

.. உடைய ஒருவ; மயிலை அனைய

.. .. உமையும் உடலில் ஒரு பாதி

இலகும் இறைவ; புகலி நகரில்

.. .. எழுது மறையை மகிழ்வோனே;

.. இருவர் பரவு பரம; கொடியில்

.. .. எருதை உடைய பெருமானே.


அலையும் மனமும் உலகில் நசையும் அதிக வினையும் அடியேனை அவதி மலியும் நெறியில் அழிவை அடைய விரைய உகையாமுன் - அலைபாய்கின்ற மனமும், உலக ஆசைகளும், மிகுந்திருக்கும் பழைய வினைகளும் என்னைத் துன்பம் மிகும் பாதையில் அழிவை அடைய விரையும்படி செலுத்துவதன்முன்னம்; (நசை - ஆசை); (அவதி - துன்பம்); (உகைத்தல் - செலுத்துதல்);

இலையும், மலரும், இயலும் இசையும் இசையும் இனிய தமிழோடே, இயலும் வகையில் உனது சரண இணையை அடைய அருளாயே - வில்வ இலைகளாலும், பலவகை மலர்களாலும், இயல் இசை என்ற இரண்டும் பொருந்திய தமிழ்ப்பாடல்களோடும், இயன்ற வகையில் உன்னைப் போற்றி உன் இணையடியை அடைவதற்கு அருள்வாயாக; (சரண இணை - இரண்டு திருவடிகள்); (அடைதல் - சரண்புகுதல்; சேர்தல்);

உலவும் நதியும், ஒளிரும் மதியும், உரகம் அருகு முடிமீதே உடைய ஒருவ - கங்கையையும் ஒளிவீசும் சந்திரனையும் பாம்பின் அருகே தலைமீது அணியும் ஒப்பற்றவனே; (உரகம் - பாம்பு);

மயிலை அனைய உமையும் உடலில் ஒரு பாதி இலகும் இறைவ - மயில் போன்ற பார்வதியை ஒரு கூறாக உடையவனே;

புகலி நகரில் எழுது மறையை மகிழ்வோனே - புகலி நகரில் (சீகாழியில்) எழுதப்பெறும் வேதமாகிய சம்பந்தர் தேவாரத்தை விரும்பியவனே; (எழுது மறை - சம்பந்தர் தேவாரம்); (பெரிய புராணம்: "வண்டமிழால் எழுதுமறை மொழிந்தபிரான் திருப்புகலி மருங்கு சார்ந்தார்")

இருவர் பரவு பரம - திருமால் பிரமன் இருவரும் வணங்கும் பரமனே;

கொடியில் எருதை உடைய பெருமானே - இடபக் கொடியை உடைய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Saturday, July 16, 2022

06.02.148 – காழி - இக்குச் சாறென - (வண்ணம்)

06.02.148 – காழி - இக்குச் சாறென - (வண்ணம்)

2011-05-29

06.02.148 - இக்குச் சாறென - (காழி)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தத் தானன தானன தானன

தத்தத் தானன தானன தானன

தத்தத் தானன தானன தானன .. தனதான )


(அக்குப் பீளைமு ளாவிளை - திருப்புகழ் - சிதம்பரம்)


இக்குச் சாறென ஆரமு தேயென

.. இட்டத் தோடுச தாமனை வாழ்வெனும்

.. எட்டிச் சாறதில் வீழ்மட மேமலி .. அடியேனும்

இக்குப் பாயம்வி ழாமுன மோவென

.. இச்சித் தார்கள ழாமுன மாசுணம்

.. எற்புத் தாரணி வாயுனை நாடிட .. அருளாயே

பக்கத் தாயிழை சேர்திரு மேனிய

.. பற்றற் றார்பணி பூதிய சேவடி

.. பற்றித் தேவர்கள் காவென மூவெயில் .. எரியீசா

நக்கித் தேனுண மாமல ரார்பொழில்

.. நச்சிச் சேரளி பாடிடு காழியில்

.. நற்பொற் றாளடி யார்தொழ மேவிய .. பெருமானே


பதம் பிரித்து:

இக்குச்-சாறு என, ஆரமுதே என,

.. இட்டத்தோடு சதா மனை-வாழ்வு எனும்

.. எட்டிச்-சாறு-அதில் வீழ் மடமே மலி அடியேனும்,

இக்-குப்பாயம் விழாமுனம், ""வென

.. இச்சித்தார்கள் அழாமுனம், மாசுணம்

.. எற்புத்-தார் அணிவாய், உனை நாடிட அருளாயே;

பக்கத்து ஆயிழை சேர் திருமேனிய;

.. பற்றற்றார் பணி பூதிய; சேவடி

.. பற்றித் தேவர்கள் "கா"வென மூவெயில் எரி-ஈசா;

நக்கித் தேன் உண மாமலர் ஆர் பொழில்

.. நச்சிச் சேர் அளி பாடிடு காழியில்,

.. நற்பொற்றாள் அடியார் தொழ மேவிய பெருமானே.


இக்குச்-சாறு என, ஆரமுதே என, - இனிக்கும் கருப்பஞ்சாறு என்றும், அரிய அமுதம் என்றும் எண்ணி; (இக்கு - கரும்பு);

இட்டத்தோடு சதா மனை-வாழ்வு எனும் எட்டிச்-சாறு-அதில் வீழ் மடமே மலி அடியேனும் - விருப்பத்தோடு எப்பொழுதும் மனைவாழ்க்கை என்ற (கசக்கின்ற) எட்டிச்சாற்றில் போய் விழுகின்ற அறியாமையே மிகும் நானும்; (எட்டி - எட்டிக்காய்); (மடம் - அறியாமை); (மலிதல் - மிகுதல்);

இக்-குப்பாயம் விழாமுனம், ""வென இச்சித்தார்கள் அழாமுனம் - சட்டை போன்ற இவ்வுடல் விழுந்துவிடுவதன்முன்னே, குடும்பத்தினர் எல்லாம் "" என்று அழுவதன்முன்னே; (குப்பாயம் - சட்டை; உடல்); (திருவாசகம் - ஆசைப்பத்து - 8.25.2 - "தோல்போர்த்த குப்பாயம் புக் கிருக்ககில்லேன்"); (இச்சித்தார்கள் - விரும்பியவர்கள்);

மாசுணம் எற்புத்-தார் அணிவாய், உனை நாடிட அருளாயே - பாம்பையும் எலும்பு மாலையையும் அணிபவனே, உன்னை விரும்பி அடைய அருள்புரிவாயாக; (மாசுணம் - பாம்பு); (எற்புத்தார் - என்பு+தார் - எலும்புமாலை);

பக்கத்து ஆயிழை சேர் திருமேனிய - ஒரு பக்கத்தில் பார்வதி கூறாகச் சேர்கின்ற திருமேனியை உடையவனே; (ஆயிழை - பெண்);

பற்றற்றார் பணி பூதிய - பற்றற்றவர்கள் வணங்கும் திருநீறு பூசிய பெருமானே; (பூதிய - பூதியனே என்ற விளி); (பூதி - சாம்பல்; திருநீறு; செல்வம்);

சேவடி பற்றித் தேவர்கள் "கா"வென மூவெயில் எரி-ஈசா - உன் சிவந்த திருவடியைப் பிடித்துக்கொண்டு "காத்தருள்" என்று தேவர்கள் வேண்டவும், முப்புரங்களை எரித்த ஈசனே;

நக்கித் தேன் உண மாமலர் ஆர் பொழில் நச்சிச் சேர் அளி பாடிடு காழியில் - நக்கித் தேன் உண்பதற்காக வண்டுகள் அழகிய மலர்கள் நிறைந்த சோலைகளை விரும்பிச் சேர்ந்து ரீங்காரம் செய்து பாடுகின்ற சீகாழிப்பதியில்; (ஆர்தல் - நிறைதல்); (நச்சுதல் - விரும்புதல்); (அளி - வண்டு);

நற்பொற்றாள் அடியார் தொழ மேவிய பெருமானே - நல்ல பொன்னடியை அடியார்கள் தொழ எழுந்தருளிய சிவபெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.147 – பொது - கழலிணையை ஏத்தற்கு - (வண்ணம்)

06.02.147 – பொது - கழலிணையை ஏத்தற்கு - (வண்ணம்)

2011-05-23

06.02.147 - கழலிணையை ஏத்தற்கு - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதனன தாத்தத் .. தனதான )

(A thiruppugazh with a slightly different syllabic pattern -

வசனமிக வேற்றி மறவாதே - திருப்புகழ் - பழநி)


கழலிணையை ஏத்தற் .. கறியாத

.. கடுவினையர் கூட்டிற் .. சுழலாமல்

அழகுதரு நீற்றைப் .. புனைவார்கள்

.. அணியையடை பேற்றைத் .. தருவாயே

அழைபுகலி யார்க்குப் .. பெருஞான

.. அமுதையுமை ஊட்டற் .. கருள்வோனே

மழவிடைய நாற்றக் .. கணையேவு

.. மதனையெரி நாட்டப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கழலிணையை ஏத்தற்கு அறியாத

.. கடுவினையர் கூட்டிற் சுழலாமல்,

அழகுதரு நீற்றைப் புனைவார்கள்

.. அணியை அடை பேற்றைத் தருவாயே;

அழை புகலியார்க்குப் பெரு-ஞான

.. அமுதை உமை ஊட்டற்கு அருள்வோனே;

மழ-விடைய; நாற்றக் கணை ஏவு

.. மதனை எரி நாட்டப் பெருமானே.


கழல் இணையை ஏத்தற்கு அறியாத கடுவினையர் கூட்டிற் சுழலாமல் - திருவடிகளைத் துதிக்க அறியாத தீவினையாளர்களோடு கூடித் திரிந்து மனம் வருந்தாமல்; (கடுவினையர் - தீவினையாளர்கள்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

அழகு தரு நீற்றைப் புனைவார்கள் அணியை அடை பேற்றைத் தருவாயே - அழகு தரும் திருநீற்றைப் பூசும் பக்தர்குழாத்தைச் சேர்கின்ற பேற்றை எனக்குத் தந்தருள்வாயாக; (அணி - குழாம்; கூட்டம்); (அழகுதரு நீறு - சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "சுந்தரமாவது நீறு");

அழை புகலியார்க்குப் பெருஞான அமுதை உமை ஊட்டற்கு அருள்வோனே - "அம்மே, அப்பா" என்று அழுது அழைத்த சம்பந்தருக்கு அரிய ஞானப்பாலை உமையம்மை ஊட்டுமாறு அருள்செய்தவனே; (புகலியார் - புகலி என்ற சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (பெரிய புராணம் - 12.28.63 - "திருத்தோணிச் சிகரம்பார்த்து அம்மேஅப் பாஎன்றென்று அழைத்தருளி அழுதருள");

மழவிடைய - இளைய ஏற்றை ஊர்தியாக உடையவனே; (மழ - இளமை);

நாற்றக் கணை ஏவு மதனைரி நாட்டப் பெருமானே - வாசம் கமழும் அம்பினை (மலர்க்கணையை) ஏவிய மன்மதனை எரித்த நெற்றிக்கண் உடைய பெருமானே; (நாற்றம் - வாசனை); (மதன் - காமன்); (நாட்டம் - கண்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------