Saturday, July 16, 2022

06.04.016 – திருநாவுக்கரசர் துதி - மூண்ட பேரன்பினால்

06.04.016 – திருநாவுக்கரசர் துதி - மூண்ட பேன்பினால்


2011-04-23

6.4.16) திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2011 (Apr 27/28)

----------------------------------

(வெண்பா)

(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

மூண்டபே ரன்பினால் முக்கட் பெருமானைத்

தாண்டவம் ஆடும் தலைவனைத் - தாண்டகத்

தண்டமிழால் போற்றிய நாவரசர் தாளிணை

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


மூண்ட பேர்-அன்பினால் - உள்ளத்தில் பொங்கி எழுந்த மிகுந்த அன்பால்;

முக்கட் பெருமானைத் - முக்கண் உடைய பெருமானை;

தாண்டவம் ஆடும் தலைவனைத் - கூத்து ஆடும் தலைவனை;

தாண்டகத் தண் தமிழால் போற்றிய - திருத்தாண்டகப் பதிகங்கள் என்ற குளிர்ந்த தமிழ்ப் பாமாலைகளால் துதித்த;

நாவரசர் தாள்-இணை உண்டு என்றும் என் உள்ளத்துள் - திருநாவுக்கரசரது இரு திருவடிகள் என் நெஞ்சில் என்றும் உள்ளன;


2)

கல்லினைக் கட்டிக் கடலினுள் ஆழ்த்தினும்

எல்லையில் அன்போ டெழுத்தஞ்சைச் - சொல்லிக்கார்க்

கண்டன் அருளால் கரையேறி னார்கழல்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


* கல்லே தெப்பமாகிக் கடலில் மிதந்து உய்ந்தது;

எல்லை இல் அன்போடு எழுத்தஞ்சைச் சொல்லிக் - அளவற்ற பக்தியோடு நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தை ஓதி;

கார்க்கண்டன் - நீலகண்டன்;


3)

நறுந்தொடையாய் நாள்தொறும் நம்பெரு மாற்குக்

குறுந்தொகைநாம் சூட்டிநம் குற்றம் - அறுந்தினி

மண்டலத்தில் வாரா வழிதந்த அப்பரடி

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


* குறுந்தொகை - ஐந்தாம் திருமுறையான திருக்குறுந்தொகைப் பாடல்கள்;

நறும் தொடை - மணம் வீசும் மாலை;

நம்பெருமாற்குக் - நம் பெருமானுக்கு;

குற்றம்- தீவினை;

அறுதல் - தீர்தல்; இல்லாமற் போதல்;

மண்டலம் - பலவகைப் புவனங்கள்; ('மண் தலம் = பூமி' என்றும் கொள்ளலாம்);

மண்டலத்தில் வாரா வழி - பிறவித்தொடரை அறுக்கும் வழி;

(அப்பர் தேவாரம் - 6.81.1 - "மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்");

(சம்பந்தர் தேவாரம் - 3.28.11 - "ஞானசம் பந்தன்சொல் கோலத்தால் பாடுவார் குற்றம்அற் றார்களே.)


4)

அப்பூதி மைந்தனுக் காருயிர் ஈந்தவர்

இப்பூமி உய்யவந்த எம்தலைவர் - எப்போதும்

தொண்டுபுரி நாவரசர் தூமலர்ப் பாதங்கள்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


* அரவு தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்தது;

அப்பூதி - 63 நாயன்மார்களுள் ஒருவரான அப்பூதி அடிகள்;


5)

காலையும் மாலையும் கண்ணுதலான் சீர்பரவி

மாலை அகற்றிடும் வண்டமிழ் - மாலைகள்

விண்டதிரு நாவுக் கரசரின் மென்மலர்த்தாள்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


மாலை - 1) சாயங்காலம்; 2) அறியாமையை; 3) மலர்களால் தொடுத்த மாலை;

(* மடக்கு - ஒரு பாடலில் ஒரு சொல்லோ சொற்றொடரோ பொருள்வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை);

வண்டமிழ் - வண் தமிழ் - வளமான தமிழ் - தேவாரம்;

விண்ட - சொன்ன; (விள்ளுதல் - சொல்லுதல்);


6)

வஞ்சத்தை நெஞ்சத்தில் வைத்தவர்கள் அன்புடைமை

கிஞ்சித்தும் இல்லாத கேடரளி - நஞ்சத்தை

உண்டு சிவனருளால் உய்ந்தவப்பர் தாளிணை

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


* சமணர் தந்த நஞ்சு கலந்த உணவை உண்டு சிவனருளால் உய்ந்தது;

அரவு தீண்டி இறந்த அப்பூதி அடிகள் மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்தது;

கிஞ்சித்தும் - சிறிதும்;

அளி நஞ்சத்தை - அளித்த விஷத்தை; (அப்பர்க்கு உணவில் விஷத்தைக் கலந்து உண்பித்ததைச் சுட்டியது);

உண்டு - 1) அருந்தி; 2) உள்ளது; (* மடக்கு - ஒரு பாடலில் ஒரு சொல்லோ சொற்றொடரோ பொருள்வேறுபட்டு மீண்டும் மீண்டும் வருவதாகிய சொல்லணிவகை);

உய்ந்தவப்பர் - உய்ந்த அப்பர்;


7)

நெய்யாடும் நின்மலனார் நீலகண்டர் நீண்மலைமேல்

மையார்கண் மாதொடுறை கோலத்தை - ஐயாற்றில்

கண்டு களித்ததிரு நாவுக் கரசர்தாள்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


* கயிலைக் காட்சியைத் திருவையாற்றில் கண்டது;

நெய் ஆடுதல் - நெய்யால் அபிஷேகம் செய்யப்பெறுதல்;

நின்மலன் - மலமற்றவன்;

நீண்மலை - நீள் மலை - புகழால் உயர்ந்த திருக்கயிலை மலை;

மை ஆர் கண் மாது - மையணிந்த கண் உடைய பார்வதி;


8)

வண்டுசேர் மாமயி லாடுதுறை வள்ளலை

அண்டர்தம் நாயகனை ஆலாலம் - உண்டுதிகழ்

கண்டனைக் காதலொடு கைதொழுத அப்பரடி

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


வண்டு சேர் மா மயிலாடுதுறை - வண்டுகள் சேரும் பொழில் சூழ்ந்த அழகிய மயிலாடுதுறை;

(அப்பர் தேவாரம் - 5.39.3 -

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்

கண்டு வீற்றிருக்கும் கருத்தொன்றிலோம்

வண்டு சேர் மயிலாடுதுறை அரன்

தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே.);


9)

பண்டை வினைகள் பறைய, எமபடர்கள்

அண்டும் அவலநிலை அற்றுய்யத் - தொண்டர்க்குத்

தண்டமிழ்த்தேன் தந்தஉழ வாரப் படையாளி

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


பண்டைவினை - பழவினை;

பறைதல் - அழிதல்;

எமபடர் - எமதூதர்;

தண்டமிழ்த்தேன் - தண் தமிழ்த் தேன் -- குளிர்ந்த தேன் போன்ற தேவாரம்;

உழவாரப் படையாளி - உழவாரப் படையால் திருக்கோயில்களைத் தூய்மை செய்து தொண்டுபுரிந்த திருநாவுக்கரசர்; (உழவாரப்படை - உழவாரம் - புல் செதுக்கும் கருவி);


10)

உலகம் இருள்நீங்கி உய்யவருஞ் சைவம்

நிலவத் தமிழும் நிலவ - நிலவணிவான்

தொண்டிற் சிறந்த திலகவதி தம்பியின்தாள்

உண்டென்றும் என்னுள்ளத் துள்.


உய்யவருஞ் சைவம் - உய்ய, அரும் சைவம்;


உலகத்தோர் அறியாமை நீங்கி உய்யவும், சைவநெறி தழைக்கவும், தமிழும் தழைக்கவும், சந்திரனைச் சூடிய சிவபெருமானது தொண்டில் சிறந்த திலகவதியாரின் தம்பியான திருநாவுக்கரசரின் திருப்பாதம் என்றும் என் உள்ளத்துள் உண்டு.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment