Friday, August 27, 2021

05.18 – வேட்களம் (திருவேட்களம்)

05.18 – வேட்களம் (திருவேட்களம்)


2015-01-19

வேட்களம் (திருவேட்களம்) (சிதம்பரத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்")


1)

இசைமலிந்த இணையடியை ஏத்தியதிங் களைச்சடையின்

மிசையணிந்த சிவபெருமான் விரைமலர்த்தாள் மனத்திருத்தித்

திசையனைத்தும் இருள்சூழ்ந்த செறிகானில் தவம்செய்த

விசயனுக்குப் படையீந்த வேடனிடம் வேட்களமே.


இசை மலிந்த இணையடியை ஏத்திய திங்களைச் சடையின்மிசை அணிந்த சிவபெருமான் - புகழ் மிக்க இரு திருவடிகளைத் துதித்த சந்திரனைச் சடையின்மேல் சூடிய சிவபெருமான்; (இசை - புகழ்); (மிசை - மேல்);

விரைமலர்த்தாள் மனத்து இருத்தித் - வாசம் மிக்க மலர் போன்ற திருவடியை மனத்தில் வைத்து;

திசை அனைத்தும் இருள் சூழ்ந்த செறிகானில் தவம் செய்த - எல்லாத் திசைகளிலும் இருள் சூழும் அடர்ந்த காட்டில் தவம் செய்த;

விசயனுக்குப் படை ஈந்த வேடன் இடம் வேட்களமே - அருச்சுனனுக்குப் பாசுபாதாஸ்திரத்தை அருளிய வேடன் கோலத்தில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்; (விசயன் - அருச்சுனன்); (படை - அஸ்திரம்; ஆயுதம்); (வேடன் - வேட்டுவன்; வேடதாரி);


2)

அல்லேந்து கண்டத்தன் அடியிணையை மறவாது

சொல்லேந்து தமிழ்பாடித் துதிப்போர்க்குத் துணையாவான்

மல்லேந்து திரள்தோளன் விசயற்கு வரம்நல்க

வில்லேந்திக் கானிற்செல் வேடனிடம் வேட்களமே.


அல் ஏந்து கண்டத்தன் - இருள் தங்கும் கண்டத்தை உடையவன்; (அல் - இரா; இருள்;)

மல் ஏந்து திரள் தோளன் - வலிமை மிக்க திரண்ட தோள்களை உடையவன்;


3)

செங்கோலன் மனுவுக்குத் திருவருள்செய் ஆரூரன்

கங்காளன் கரிகாடன் கலவமயில் மடமாது

பங்காளன் தவஞ்செய்த பார்த்தனுக்குப் படைநல்க

வெங்கானிற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.


செங்கோலன் மனு - நீதி தவறாது ஆட்சி செய்த மனுநீதிச் சோழன்;

கங்காளன் - எலும்பை அணிந்தவன்;

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்; (கரிகாடு - சுடுகாடு);

கலவமயில் மடமாது பங்காளன் - ஏழை பங்காளன் - அர்த்தநாரீஸ்வரன்; (கலவமயில் - கலாபமயில் - தோகையுடைய மயில்); (மடமாது - அழகிய பெண்);

பார்த்தனுக்குப் படை நல்க வெங்கானில் கேழல் எய்த - அருச்சுனனுக்குப் பாசுபட்ஹாஸ்திரத்தை அருளக் கொடிய காட்டில் பன்றியை அம்பால் எய்த; (கேழல் - பன்றி);


4)

ஆண்டுபதி னாறாயிற் றென்றடைந்த அடற்கூற்றே

மாண்டுவிட உதைத்தருளி மார்க்கண்டர் உயிர்காத்தான்

பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்தன்று பன்றியெய்து

வேண்டுபடை தந்தருளும் வேடனிடம் வேட்களமே.


ஆண்டு பதினாறு ஆயிற்று என்று அடைந்த அடல்-கூற்றே மாண்டுவிட உதைத்தருளி - மார்க்கண்டேயருக்குப் பதினாறு வயது ஆயிற்று என்று அவரைக் கொல்ல நெருங்கிய வலிய எமனே மாளும்படி எமனை உதைத்து;

பாண்டுமகன் பார்த்தனுக்குப் பரிந்து - பாண்டுவின் மகனாகிய அருச்சுனனுக்கு இரங்கி;


5)

பண்ணமரும் தமிழ்பாடிப் பரவடியார் தமக்குவினை

நண்ணலிலா நன்னிலையை நல்கியருள் நம்பெருமான்

கண்ணமரும் நெற்றியினான் கானகத்தே கருங்குழலி

வெண்ணகையா ளோடடைந்த வேடனிடம் வேட்களமே.


பண் அமரும் தமிழ் பாடிப் பரவு அடியார் தமக்கு - இசையோடு பாடும் தேவாரம் பாடித் துதிக்கும் பக்தர்களுக்கு;

வினை நண்ணல் இலா நன்னிலை நல்கியருள் நம் பெருமான் - வினைகள் நெருங்காத நற்கதியைக் கொடுக்கும் நம் பெருமான்;

கண் அமரும் நெற்றியினான் - நெற்றிக்கண்ணன்;

கானகத்தே கருங்குழலி வெண்ணகையாளோடு அடைந்த வேடன் இடம் வேட்களமே - கரிய குழலும் வெண்பற்களும் உடைய உமையம்மையுடன் வேடன் கோலத்தில் காட்டில் வந்த பெருமான் உறையும் தலம் திருவேட்களம்;


6)

வஞ்சியவள் வெருவுறவே வந்தெதிர்ந்த மலைபோன்ற

குஞ்சரத்தை உரிசெய்து போர்வையெனக் கொண்டுகந்தான்

அஞ்செழுத்தே நினைந்திருந்த அருச்சுனனுக் கருள்செய்ய

வெஞ்சரத்தாற் கேழலெய்த வேடனிடம் வேட்களமே.


வஞ்சியவள் வெருவுறவே வந்து எதிர்ந்த மலை போன்ற குஞ்சரத்தை உரிசெய்து போர்வை எனக் கொண்டுகந்தான் - உமை அஞ்ச, வந்து போர்செய்த மலை போன்ற யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன்; (குஞ்சரம் - யானை);

வெஞ்சரத்தால் கேழல் எய்த - கொடிய அம்பால் பன்றியை எய்த;


7)

வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே

தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் மார்பிலரா

ஆரத்தான் அடர்கானில் அருச்சுனனோ டமர்செய்த

வீரத்தான் ஈரமிகு வேடனிடம் வேட்களமே.


வாரத்தால் தொழுவார்தம் வல்வினைகள் எல்லாமே தீரத்தான் அருள்புரியும் சிவபெருமான் - அன்போடு தொழும் பக்தர்களது வலிய வினையெல்லாம் தீரவே அருளும் சிவபெருமான்; (வாரம் - அன்பு);

மார்பில் அரா ஆரத்தான் - மார்பில் பாம்பு மாலை அணிந்தவன்; (அரா - பாம்பு; ஆரம் - மாலை);


அடர்கானில் அருச்சுனனோடு அமர்செய்த வீரத்தான் - அடர்ந்த காட்டில் அருச்சுனனோடு போரிட்ட விரம் மிக்கவன்; (அமர்செய்தல் - போரிடுதல்); (சுந்தரர் தேவாரம் 7.66.4 - "வீரத் தால்ஒரு வேடுவ னாகி விசைத்தொர் கேழலைத் துரந்துசென் றணைந்து");

ஈரம் மிகு - தயை மிக்க; (கங்காதரன் என்றும் கொள்ளலாம்);


8)

குன்றையசை இலங்கைக்கோன் கோலமுடி பத்துமிற

அன்றுவிரல் ஒன்றூன்றி ஆரருள்கள் செய்தபிரான்

பன்றியதன் பின்சென்று பார்த்தற்குப் பரிந்தபரன்

வென்றிவிடை ஒன்றுடைய வேடனிடம் வேட்களமே.


குன்றை அசை இலங்கைக்கோன் கோலமுடி பத்தும் இற - கயிலையைப் பெயர்த்த இராவணனது அழகிய கிரீடம் அணிந்த பத்துத்தலைகளும் நசுங்கும்படி; (குன்று - கயிலைமலை);

அன்று விரல் ஒன்று ஊன்றி ஆரருள்கள் செய்த பிரான் - முன்பு திருவிரல் ஒன்றை ஊன்றிப் பின் அரிய அருள் செய்த பெருமான்; (ஆரருள்கள் - பேரருள்);

பன்றிஅதன்பின் சென்று பார்த்தற்குப் பரிந்த பரன் - பன்றிப்பின் போய்ப் பார்த்தனுக்கு அருளிய பரமன்;

வென்றி விடை - வெற்றியை உடைய இடபம்;


9)

வளைகோடு திகழ்கேழல் வானிலுயர் அன்னமிவர்

தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்றபிரான்

தளையேதும் இலன்முன்னம் தனஞ்சயனோ டமர்செய்து

விளையாடிப் படையருள்செய் வேடனிடம் வேட்களமே.


வளைகோடு திகழ்கேழல் - வளைந்த கொம்பு உடைய பன்றி - பன்றி வடிவில் சென்ற திருமால்; (கோடு - பன்றி, யானை இவற்றின் தந்தம்); (கேழல் - பன்றி);

வானில் உயர் அன்னம் - வானில் பறந்து சென்ற அன்னப்பறவை - அன்னவடிவில் சென்ற பிரமன்;

இவர் தளர்வாகிக் கழல்போற்றத் தழலாகி நின்ற பிரான் - இவ்விருவரும் அடிமுடி காணாமல் தளர்ந்து திருவடியை வணங்குமாறு சோதி வடிவில் ஓங்கிய தலைவன்;

தளை ஏதும் இலன் - மும்மலக்கட்டு இல்லாதவன்; (தளை - பந்தம்);

தனஞ்சயனோடு அமர் செய்து விளையாடி - அருச்சுனனோடு போரிட்டுத் திருவிளையாடல் புரிந்து;


10)

வாட்டமறு மறைநெறியை மருவாத மதியீனர்

காட்டுவழி மதியேன்மின் கண்ணுதலான் கழல்மனத்தில்

நாட்டிவழி படுவார்க்கு நல்லவன்பாண் டவனுக்கு

வேட்டுவனாய்ச் சென்றருள்செய் வேடனிடம் வேட்களமே.


வாட்டம் அறு மறைநெறியை மருவாத - துன்பத்தைத் தீர்க்கின்ற வேதநெறியைப் பின்பற்றாத; (மருவுதல் - தழுவுதல்);

மதியீனர் காட்டுவழி மதியேன்மின் - அறிவற்றோர் காட்டுகின்ற நெறியை நீங்கள் மதிக்கவேண்டா; (காட்டுவழி - நல்வழி இருக்கக், காட்டின் வழியே செல்லும் ஆபத்தான வழி); (மதியேன்மின் - மதியேல்+மின் - எதிர்மறைப் பன்மை ஏவல் - மதியாதீர்கள்);

கண்ணுதலான் கழல்மனத்தில் நாட்டி வழிபடுவார்க்கு நல்லவன் - நெற்றிக்கண்ணன் தன் திருவடியை மனத்தில் வைத்து வழிபடும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்;

பாண்டவனுக்கு வேட்டுவனாய்ச் சென்று அருள்செய் வேடன் இடம் வேட்களமே - அருச்சுனனுக்கு வேடனாகச் சென்று அருளிய கோலம் உடையவன் உறையும் தல் திருவேட்களம்; (வேடன் - கோலம் உடையவன்);


11)

கரும்புபிடி மன்மதனைக் கண்ணுதலால் நோக்கியவன்

சுரும்புமுரல் கொன்றையொடு தூமதியும் புனைமுடியன்

பெரும்புகழே பேசியடி பேணுகின்ற அடியார்கள்

விரும்புவரம் தந்தருளும் வேடனிடம் வேட்களமே.


கரும்பு பிடி மன்மதனைக் கண்ணுதலால் நோக்கியவன் - கரும்பை வில்லாகக் கையில் ஏந்துகின்ற காமனை நெற்றிக்கண்ணால் நோக்கி எரித்தவன்; (அப்பர் தேவாரம் - 4.102.5 - "கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்..." - கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான்); (அப்பர் தேவாரம் - 6.20.2 - "பண்டனங்கற் பார்த்தானைப்" - அனங்கன் - மன்மதன். பார்த்தான் - விழித்து எரித்தான்.);

சுரும்பு முரல் கொன்றையொடு தூமதியும் புனை முடியன் - வண்டுகள் ரீங்காரம் செய்யும் கொன்றைமலரையும் வெண் திங்களையும் முடிமேல் அணிந்தவன்;

பெரும் புகழே பேசி அடி பேணுகின்ற அடியார்கள் விரும்புவரம் தந்தருளும் வேடன் இடம் வேட்களமே - ஈசனது பெரிய புகழையே பேசித் திருவடியைப் போற்றும் பக்தர்கள் விரும்பிய வரங்களைத் தந்தருளும் கோலம் உடையவன் உறையும் தலம் திருவேட்களம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Thursday, August 26, 2021

05.17 – கோயில் (தில்லை - சிதம்பரம்)

05.17 – கோயில் (தில்லை - சிதம்பரம்)


2015-01-04

கோயில் (தில்லை - சிதம்பரம்)

-----------------------

(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' என்ற அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே")


1)

கட்டத் தொடர்தீரக் கையால் மலர்தூவி

இட்டத் தொடுநாளும் ஏத்திப் பணிகின்ற

சிட்டர்க் கருள்வானைச் சிற்றம் பலமேய

நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.


கட்டத் தொடர் - கஷ்டத்தொடர் - துன்பத்தொடர்;

இட்டம் - விருப்பம்;

சிட்டர் - உயர்ந்தோர்;

நட்டப் பெருமான் - நடராஜன்;

நம்பி - விரும்பி; நம்பிக்கையோடு;


2)

ஓடும் புனல்திங்கள் உரகம் அணிகொன்றை

சூடும் முடியானைச் சுண்ணப் பொடியானை

மாடு வளர்தில்லை மன்றில் திருநட்டம்

ஆடும் கழலானை அன்பால் தொழுவோமே.


ஓடும் புனல் திங்கள் உரகம் அணிகொன்றை சூடும் முடியானைச் - கங்கை, பிறைச்சந்திரன், பாம்பு, அழகிய கொன்றைமலர் இவற்றையெல்லாம் திருமுடிமேல் அணிந்தவனை; (உரகம் - பாம்பு); (அணி - அழகு);

சுண்ணப் பொடியானை - திருநீற்றைப் பூசியவனை; திருநீற்றையே நறுமணப் பொடியாகப் பூசிக் கொள்பவனை;

மாடு வளர் தில்லை மன்றில் திருநட்டம் ஆடும் கழலானை - செல்வம் உயர்கின்ற தில்லை அம்பலத்தில் கூத்தாடுபவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.80.5 - "செல்வ நெடுமாடம் ... செல்வம் உயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன்...");


3)

முடிக்குத் தலைமாலை முளைவெண் மதிசூடி

வெடிக்கும் துடியேந்தி விண்ணின் றிழியாற்றைக்

குடிக்கும் சடையானைக் தில்லைக் குடியானை

நடிக்கும் பெருமானை நம்பித் தொழுவோமே.


முடிக்குத் தலைமாலை - தலைக்குத் தலைமாலை;

வெடிக்கும் துடி - பெருத்த ஓசையோடு அதிரும் உடுக்கு; (4.73.6 - "வெடிபடு தமருகங் கை தரித்ததோர் கோல" - வெடிபடு தமருகம் - வெடி போன்ற ஒலியை யுண்டாக்கும் உடுக்கை);

விண்ணின்று இழி ஆற்றைக் குடிக்கும் சடையானைக் - வானிலிருந்து இறங்கிய கங்கையை உள்ளடக்கிய சடையை உடையவனை;

தில்லைக் குடியானை - தில்லையில் நீங்காது உறைபவனை; (குடி - உறைவிடம்);

நடிக்கும் பெருமானை - நடராஜனை;


இலக்கணக் குறிப்பு: நின்று - ஐந்தாம்வேற்றுமைப் பொருள்பட வரும் ஓரிடைச் சொல்;

உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 1.82.11 - "மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்" - (மேல்நின்று இழி கோயில் - விண்ணிழிகோயில்) - விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக் கோயிலில்;


4)

பார்த்தற் கருள்செய்யப் பன்றிப் பின்சென்ற

மூர்த்தம் உடையானை முடிவில் புகழானைத்

தீர்த்தச் சடையானைச் சிற்றம் பலமேய

கூத்தப் பெருமானைக் கூறி மகிழ்வோமே.


பார்த்தற்கு - பார்த்தனுக்கு - அருச்சுனனுக்கு;

மூர்த்தம் - வடிவம்; (கிராதர் - வேட்டுவ வடிவம் - மாஹேஸ்வர மூர்த்தங்களுள் ஒன்று);

முடிவு இல் புகழானை - என்றும் இருக்கும் புகழ் உடையவனை;

தீர்த்தச்சடை - கங்கைச்சடை; (தீர்த்தம் - நீர்; தூய்மை);


5)

சனித்துத் தரைமீது தவிக்கும் நிலைமாற்றி

இனித்தொல் வினைநண்ணா இன்ப நிலைநல்கும்

தனித்தன் மையினானைக் கனக சபைதன்னில்

குனித்தல் உடையானைக் கூறி மகிழ்வோமே.


சனித்தல் - ஜனித்தல் - பிறத்தல்;

இனித் தொல்வினை நண்ணா - இனிமேல் பழவினைகள் அணுகாத;

தனித் தன்மையினானை - ஒப்பற்ற தன்மை உடையவனை;

கனகசபை - பொன்னம்பலம்;

குனித்தல் - ஆடுதல்;


6)

தலையின் மிசைநாகம் தண்வெண் மதியோடு

குலவும் பெருமானைக் கூடார் புரமெய்த

சிலைவில் உடையானைச் சிற்றம் பலமேய

அலகில் நடத்தானை அன்பால் தொழுவோமே.


தலையின்மிசை நாகம் தண் வெண் மதியோடு குலவும் பெருமானை - திருமுடிமேல் பாம்பு குளிர்ந்த வெண் பிறைச்சந்திரனோடு விளங்குகின்ற பெருமானை; (குலவுதல் - விளங்குதல்; மகிழ்தல்; உலாவுதல்);

கூடார் புரம் எய்த - பகைவர்களது முப்புரங்கள்மேல் கணையைச் செலுத்தி அழித்த;

சிலைவில் உடையானை - மலையை வில்லாக உடையவனை; (சிலை - மலை);

சிற்றம்பலம் மேய அலகு இல் நடத்தானை - தில்லையில் சிற்றம்பலத்தில் உறைகின்ற, அளவில்லாத திருக்கூத்து ஆடுபவனை;

அன்பால் தொழுவோமே - பக்தியோடு வழிபடுவோம்.


7)

பருக்கைம் மதமாவைப் பற்றி உரிசெய்தான்

இருக்கை மொழிநாவன் ஏத்தும் அடியார்வான்

இருக்க அருள்செய்து தில்லை எழில்மன்றில்

நிருத்தம் புரிவானை நித்தம் நினைவோமே.


பருக் கைம் மதமாப் பற்றி உரிசெய்தான் - பருத்த துதிக்கையை உடைய ஆண் யானையைப் பிடித்து அதன் தோலை உரித்தவன்;

இருக்கை மொழி நாவன் - வேதத்தை மொழிந்தவன்; (இருக்கு - ரிக்வேதம் - வேதம்);

ஏத்தும் அடியார் வான் இருக்க அருள்செய்து - துதிக்கும் பக்தர்களுக்குச் சிவலோக வாழ்வை அருளி;

தில்லை எழில்மன்றில் நிருத்தம் புரிவானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (நிருத்தம் - ஆடல்);

நித்தம் நினைவோமே - தினந்தோறும் நினைப்போம்;


8)

தடந்தோள் வலியுன்னித் தருக்கிக் கயிலாயம்

இடந்தான் முடிபத்தை இறுத்த விரலானை

மடந்தை பிரியானைத் தில்லை மணிமன்றில்

நடஞ்செய் பெருமானை நம்பித் தொழுவோமே.


தடம் தோள் வலி உன்னித் தருக்கி - தன் பெரிய புஜங்களின் வலிமையை எண்ணிக் கருவத்தோடு;

கயிலாயம் இடந்தான் முடி பத்தை இறுத்த விரலானை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது பத்துத் தலைகளையும் அழித்த திருவிரல் உடையவனை;

மடந்தை பிரியானைத் - உமைபங்கனை;

தில்லை மணிமன்றில் நடம் செய் பெருமானை - அழகிய தில்லை அம்பலத்தில் ஆடுபவனை; (மணீ - அழகு);

நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்;


9)

பன்றி அடிநேடப் பறவை முடிநேட

அன்று வரையின்றி நின்ற அழலானைத்

துன்றி அடியார்கள் துதிக்க அணிதில்லை

மன்றில் நடிகோனை வாழ்த்தி மகிழ்வோமே.


பன்றி - பன்றி உருக்கொண்ட திருமால்;

பறவை - அன்ன உருக்கொண்ட பிரமன்;

நேட - தேட;

வரையின்றி - எல்லையின்றி;

அழலான் - அழல் வடிவினன்; (அழல் - நெருப்பு);

துன்றுதல் - நெருங்குதல் (To be close, thick, crowded together;);

நடி கோன் - நடிக்கின்ற தலைவன் - நடராஜன்;


10)

வருத்தம் மிகவாக்கும் வழிகள் தமில்நின்று

பொருத்தம் இலசொல்லும் பொய்யர்க் கருளானைத்

திருத்தம் உடையானைச் சிற்றம் பலமேய

நிருத்தப் பெருமானை நித்தம் நினைவோமே.


வழிகள்தமில் - வழிகள்தம்மில் - வழிகளில்; நெறிகளில்;

நின்று - நின்றுகொண்டு; ஒழுகி;

பொருத்தம் இல சொல்லும் - தகாத வார்த்தைகளைச் சொல்கின்ற; பொருத்தமற்ற சொற்களைக் கூறுகின்ற;

"வருத்தம் மிக ஆக்கும் பொய்யர்; வழிகள்தமில் நின்று, பொருத்தம் இல சொல்லும் பொய்யர்" என்றும் இயைக்கலாம்.

திருத்தம் உடையான் - புனிதன்; கங்காதரன்; (திருத்தம் - புனிதம்; தீர்த்தம்);

நிருத்தம் - நடனம்;


11)

மட்டு மலிபூவார் மாலை தமிழ்மாலை

இட்டு மனமார ஏத்தின் வினையென்ற

கட்டைக் களைவானைக் கனக சபைமேய

நட்டப் பெருமானை நம்பித் தொழுவோமே.


மட்டு மலி பூ ஆர் மாலை - தேனும் வாசனையும் மிகுந்த பூக்கள் நிறைந்த மாலை; (மட்டு - தேன்; வாசனை); (மலிதல் - மிகுதல்; நிறைதல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

தமிழ்மாலை - தமிழ்ப் பாமாலை;

மட்டு மலி பூ ஆர் மாலை தமிழ்மாலை - வாசப் பூமாலையும் பாமாலையும் (உம்மைத்தொகை);

இட்டு - சாத்தி - அணிந்து; (சாத்துதல் - அணிதல்);

மனமார ஏத்தின் - மனம் மகிழ்ந்து துதித்தால்; (ஆர்தல் - நிறைதல்);

வினை என்ற கட்டைக் களைவானைக் - பழவினைப் பந்தத்தைத் தீர்ப்பவனை;

கனகசபை மேய நட்டப் பெருமானை - பொன்னம்பலத்தில் உறைகின்ற நடராஜனை;

நம்பித் தொழுவோமே - விரும்பி வணங்குவோம்;


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்பு :

1) யாப்புக்குறிப்பு :

கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற அமைப்பு.

மாங்காய்ச்சீர் வரும் இடங்களில் பொதுவாக புளிமாங்காய்ச்சீர் வரும்; ஒரோவழி (சில சமயம்) கூவிளமும் வரலாம்.


2) சம்பந்தர் தேவாரம் - 1.80.1 -

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே

செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே

பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.

-------------------


Wednesday, August 25, 2021

05.16 – சிக்கல்

05.16 – சிக்கல்


2014-12-28

சிக்கல் 

-----------------------

(வஞ்சித்துறை - - 'மா விளம்' என்ற வாய்பாடு - திருவிருக்குக்குறள் அமைப்பு)

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


1)

தக்கன் வேள்வியில்

துக்கம் செய்தவன்

நக்கன் சிக்கலைப்

புக்குப் போற்றுமே.


தக்கன் செய்த வேள்வியை அழித்தவனும் திகம்பரனுமான சிவபெருமான் உறையும் சிக்கலை அடைந்து போற்றுங்கள்;


2)

அல்லில் ஆடுவான்

கொல்லை ஏறமர்

செல்வன் சிக்கலைச்

சொல்லி உய்ம்மினே.


இருளில் கூத்தாடுபவனும் இடபவாகனம் உடைய செல்வனுமான சிவபெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்;


3)

காவ லார்புரம்

வேவ நக்கமா

தேவன் சிக்கலிற்

கோவைக் கூறுமே.


காவல் ஆர் புரம் - காவல் பொருந்திய முப்புரங்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.100.6 - "கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங்..." - கடி அரண் - காவலோடு கூடிய அரண்);

வேவ நக்க மாதேவன் - வெந்து அழியச் சிரித்த மகாதேவன்;

சிக்கலிற் கோவைக் கூறுமே - சிக்கலில் உறையும் தலைவனைப் புகழுங்கள்; (கோ - தலைவன்);


4)

தையல் பங்கமர்

செய்யன் சிக்கலில்

ஐயன் தாள்தொழ

உய்யல் திண்ணமே.


தையல் பங்கு அமர் செய்யன் - உமாதேவியை ஒரு பங்காக விரும்பும் செம்மேனிப் பெருமான்;

சிக்கலில் ஐயன் - சிக்கலில் உறையும் தலைவன்;

தாள் தொழ உய்யல் திண்ணமே - அவனது திருவடியைத் தொழுதால் உய்தி நிச்சயம்;


5)

கொக்கின் தூவலார்

செக்கர் அஞ்சடைச்

சிக்க லானடி

துக்கம் நீக்குமே.


கொக்கிறகை அணிந்த அழகிய செஞ்சடையை உடைய, சிக்கலில் உறையும் பெருமான் திருவடி நம் துக்கத்தைப் போக்கும்; (தூவல் - இறகு); (செக்கர் - சிவப்பு); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);


6)

கண்ணில் தீயினன்

விண்ணி னார்தொழும்

அண்ணல் சிக்கலை

நண்ணல் நன்மையே.

தீ உமிழும் நெற்றிக்கண்ணனும், தேவர் தொழும் தலைவனுமான பெருமான் உறையும் சிக்கலை அடைந்தால் நன்மை கிட்டும்; (நண்ணல் - நண்ணுதல் - அடைதல்);


7)

வாசப் பூவினால்

தேசன் சிக்கலில்

ஈசன் தாள்தொழ

நாசம் பாவமே.


ஒளிவடிவினனும் சிக்கலில் உறைபவனுமான ஈசனது திருவடியை மணம் மிக்க பூக்கள் தூவி வணங்கினால் நம் பாவங்கள் அழியும்; (தேசன் - ஒளியுருவினன்); ("தேசன், சிக்கலில் ஈசன் தாள் வாசப் பூவினால் தொழப் பாவம் நாசமே" - என்று இயைக்க).


8)

மலையெ டுத்தவன்

அலற ஊன்றிய

தலைவன் சிக்கலை

வலம்வந் துய்ம்மினே.


கயிலையைப் பெயர்த்த இராவணனை அவன் அலறும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கிய சிவபெருமான் உறையும் சிக்கலை வலம்செய்து உய்யுங்கள்;


9)

அரிய யன்தொழும்

பெரியன் ஆலமர்

குரவன் சிக்கலை

உரைசெய் துய்ம்மினே.


அரி அயன் தொழும் பெரியன் - திருமாலும் பிரமனும் வணங்கும் பெரியவன்;

ஆல் அமர் குரவன் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தி;

சிக்கலை உரைசெய்து உய்ம்மினே - அப்பெருமான் உறையும் சிக்கலைப் போற்றி உய்யுங்கள்;


10)

சைவன் தாள்தொழாக்

கையர் சொல்விடும்

மெய்யன் சிக்கலை

எய்தி உய்ம்மினே.


சைவன் தாள் தொழாக் கையர் சொல் விடும் - சிவபெருமான் திருவடியைத் தொழாத கீழோர்களது (வஞ்சகர்களது) சொற்களை மதியாமல் நீங்குங்கள்; (சைவன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (கையர் - கீழோர்; வஞ்சகர்);

மெய்யன் சிக்கலை எய்தி உய்ம்மினே - மெய்ப்பொருளாக உள்ள சிவபெருமானது சிக்கலை அடைந்து உய்யுங்கள்;


11)

நிகரி லான்பொழில்

திகழும் சிக்கலில்

பகவன் தாள்தொழ

மிகவும் நன்மையே.


நிகர் இலான் - ஒப்பற்றவனும்;

பொழில் திகழும் சிக்கலில் பகவன் - சோலை சூழ்ந்த சிக்கலில் உறைகின்ற பகவானுமான;

தாள் தொழ மிகவும் நன்மையே - சிவபெருமானது திருவடியைத் தொழுதால் பேரின்பம் கிட்டும்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, August 24, 2021

05.15 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)

05.15 – கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்)


2014-12-28

கொண்டீச்சரம் (திருக்கொண்டீச்சரம்) (நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.81.1 - "சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியை");

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.50.1 - "விரும்புந் திங்களுங் கங்கையும் விம்மவே");



1)

பண்ட ரங்கனைப் பார்வதி பங்கனை

அண்டர் அண்டனை அன்பின் உருவனைக்

கொண்டற் கண்டனைக் கொண்டீச் சரவனைத்

தொண்ட ராய்த்தொழு வார்க்கிலை துன்பமே.


பண்டரங்கன் - பாண்டரங்கக் கூத்தாடுவோன்; (பாண்டரங்கம் - கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது);

அண்டர் அண்டனை - தேவதேவனை;

கொண்டற்கண்டன் - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடையவன் - நீலகண்டன்; (கொண்டல் - மேகம்); (திருக்கோவையார் - 23.10 - "திண் டோட்கொண்டற் கண்டன்...");

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

தொண்டராய்த் தொழுவார்க்கு இலை துன்பமே - தொண்டர்களாகி வணங்குபவர்களுக்குத் துன்பம் இல்லை;


2)

சூல னைப்புலித் தோலனை முப்புரி

நூல னைப்பத்து நூறு பெயரனைக்

கோல வார்சடைக் கொண்டீச் சரவனை

ஏலு மாறு வணங்குவார்க் கின்பமே.


சூலனைப் புலித்தோலனை முப்புரி நூலனைப் - சூலபாணியைப், புலித்தோல் ஆடை அணிந்தவனை, பூணூல் திகழும் மார்பினனை;

பத்து நூறு பெயரனை - ஆயிரம் திருநாமங்கள் உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.56.11 - "பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரனை...");

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

ஏலுமாறு வணங்குவார்க்கு இன்பமே- இயன்றவகையில் (/ பொருந்துமாறு) வணங்கும் பக்தர்களுக்கு இன்பமே; (அப்பர் தேவாரம் - 5.43.9 - "கால மான கழிவதன் முன்னமே ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்");


3)

மன்றில் ஆடியை மாதவர் நெஞ்சினில்

நின்ற சோதியை நெற்றியிற் கண்ணனைக்

குன்ற வில்லியைக் கொண்டீச் சரவனைச்

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே.


மன்றில் ஆடியை - அம்பலக் கூத்தனை;

மாதவர் நெஞ்சினில் நின்ற சோதியை - பெரும் தவத்தோர் நெஞ்சில் குடிகொண்ட ஜோதிவடிவினனை;

நெற்றியில் கண்ணனைக் குன்ற வில்லியைக் - நெற்றிக்கண் உடையவனை, மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே - சென்று வழிபட்டால் தீவினை நீங்கும்;


4)

பெற்றம் ஏறும் பிரானைப் பெருவிடம்

துற்ற கண்டனைத் தூமதி சூடியைக்

குற்றம் இல்லியைக் கொண்டீச் சரவனைப்

பற்றி னார்தம் பழவினை பாறுமே.


பெற்றம் ஏறும் பிரானைப் - இடப வாகனனை; (பெற்றம் - இடபம்);

பெருவிடம் துற்ற கண்டனைத் - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை; (துற்றுதல் - உண்ணுதல்);

தூமதி சூடியைக் - சந்திரனைச் சூடியவனை;

குற்றம் இல்லியைக் - மாசற்றவனை;

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

பற்றினார்தம் பழவினை பாறுமே - சரணடைந்த பக்தர்களது பழைய வினை அழியும்; (பாறுதல் - அழிதல்);


5)

போதை இட்டடி போற்றிய வானவர்

வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக்

கோதை பங்கனைக் கொண்டீச் சரவனை

வேத னைத்தொழ வீடும் வினைகளே.


போதை இட்டு அடி போற்றிய வானவர் வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக் - பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்களது துன்பத்தை தீர்த்த, மேருவில் ஏந்தியவனை; (போது - மலர்); (வாதை - துன்பம்); (வரை - மலை); (சிலை - வில்);

கோதை பங்கனைக் - உமைபங்கனை; (கோதை - பெண்கள் தலைமயிர்; பெண்);

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைன்ற பெருமானை;

வேதனைத் தொழ வீடும் வினைகளே - வேதநாயகனை வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);





6)

நாறு கூவிளம் நாகம் இளமதி

ஏறு செஞ்சடை ஏந்தலை மேனியிற்

கூறு பெண்ணனைக் கொண்டீச் சரவனைக்

கூறு வாரைக் குறுகா வினைகளே.


நாறு கூவிளம் நாகம் இளமதி ஏறு செஞ்சடை ஏந்தலை - மணம் கமழ் வில்வம், பாம்பு, பிறைச்சந்திரன் இவற்றையெல்லாம் சிவந்த சடையின்மேல் அணிகின்ற தலைவனை; (கூவிளம் - வில்வம்); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);

மேனியிற் கூறு பெண்ணனைக் - திருமேனியில் ஒரு பாதி பெண் ஆனவனை;

கொண்டீச்சரவனைக் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

கூறுவாரைக் குறுகா வினைகளே - துதிக்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா; (குறுகா - அடையா; நெருங்கா); (குறுகுதல் - அணுகுதல்);


7)

அமரர் கோனை அடிதொழு மாணிக்கா

நமனைச் செற்றருள் நம்பனை மஞ்ஞையூர்

குமரன் தாதையைக் கொண்டீச் சரவனை

விமல னைத்தொழ வீடும் வினைகளே.


அமரர் கோனை - தேவர்கள் தலைவனை;

அடிதொழு மாணிக்கா நமனைச் செற்றருள் நம்பனை - வணங்கிய மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த நம்பனை; (மாணிக்கா - மாணிக்காக - மார்க்கண்டேயருக்காக); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

மஞ்ஞை ஊர் குமரன் தாதையைக் - மயில்மேல் ஏறும் முருகனுக்குத் தந்தையை; (மஞ்ஞை - மயில்); (ஊர்தல் - ஏறுதல்; ஏறிநடத்துதல்);

கொண்டீச்சரவனைக் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

விமலனைத் தொழ வீடும் வினைகளே - தூயனை வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);


8)

இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன்

முடிபத் திற்றிட ஊன்றிய மூர்த்தியைக்

கொடிமேல் ஏற்றனைக் கொண்டீச் சரவனை

அடிக ளைத்தொழும் அன்பருக் கின்பமே.


இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன் - இடிபோலப் பெருமுழக்கம் செய்து அழகிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய; (சம்பந்தர் தேவாரம் - 1.112.8 - "எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன் முழுவலி யடக்கிய முதல்வனகர்");

முடி பத்து இற்றிட ஊன்றிய மூர்த்தியைக் - பத்துத்தலைகளும் நசுங்கும்படி பாதவிரலை ஊன்றிய பெருமானை; (இறுதல் - அழிதல்);

கொடிமேல் ஏற்றனை - இடபச் சின்னம் உடைய கொடியை உடையவனை;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற சிவபெருமானை;

அடிகளைத் தொழும் அன்பருக்கு இன்பமே. - இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு இன்பமே; (அடிகள் - கடவுள்);


9)

அரவின் மேல்துயில் அச்சுதன் நான்முகன்

பரவ நின்ற பரஞ்சுட ரைத்திங்கள்

குரவம் சூடிய கொண்டீச் சரவனை

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே


அரவின்மேல் துயில் அச்சுதன் நான்முகன் பரவ நின்ற பரஞ்சுடரைத் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமால் பிரமன் இருவரும் (அடிமுடி தேடிப்) போற்றுமாறு ஓங்கிய மேலான சோதியை;

திங்கள் குரவம் சூடிய - சந்திரனையும் குராமலரையும் சூடிய;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற சிவபெருமானை;

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே - அடையும் பக்தர்களது கொடியவினை அழியும்; (விரவுதல் - அன்பு கலந்து ஒன்றாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.94.5 - "பரவு வாரையு முடையார் ... விரவு வாரையு முடையார்");


10)

அல்லி ருக்கும் அகத்தினர் பொய்ம்மொழி

புல்லர் புன்னெறி அல்லற் புகுத்துமால்

கொல்லை ஏற்றனைக் கொண்டீச் சரவனைச்

சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே.


அல் இருக்கும் அகத்தினர் - வஞ்சமும் அறியாமையும் நிறைந்த மனத்தை உடையவர்கள்; (அல் - இருள்; அறியாமை; மயக்கம் (Confusion, delusion)); (அகம் - மனம்);

பொய்ம்மொழி புல்லர் புன்னெறி - பொய்களையே உரைக்கும் கீழோர்களது சிறுநெறிகள்;

அல்லற் புகுத்துமால் - அல்லலில் சேர்க்கும்; (ஆல் - அசைச்சொல்);

கொல்லை ஏற்றனை - இடப வாகனனை; (கொல்லை ஏறு - 1. "கொல்லேறு" என்பது ஐகாரச் சாரியை பெற்று , "கொல்லை ஏறு" என நின்றது. 2. கொல்லை - முல்லைநிலக்காடு; முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்றும் அமையும்);

கொண்டீச்சரவனைச் சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே - திருக்கொண்டீச்சரத்துப் பெருமானைத் துதிப்பவர்களது பழவினைகள் தீரும்;


11)

ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை

நாட்டம் மூன்றுடை யானை நகையினாற்

கோட்டை மூன்றெரி கொண்டீச் சரவனைப்

பாட்டி னால்தொழு வார்வினை பாறுமே.


ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்குத் திரியும் ஒப்பற்றவனை;

நாட்டம் மூன்று உடையானை - முக்கண்ணனை; (நாட்டம் - கண்);

நகையினால் கோட்டை மூன்று எரி கொண்டீச்சரவனைப் - சிரிப்பினால் முப்புரங்களை எரித்த திருக்கொண்டீச்சரத்துப் பெருமானை; (நகை - சிரிப்பு );

பாட்டினால் தொழுவார் வினை பாறுமே - துதிகள் பாடி வழிபடுவார்களது வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.5 - ".. .. வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஓட்டி னார்வினை யொல்லையே.");


வி. சுப்பிரமணியன்

----------- --------------