Thursday, December 29, 2022

06.05.029 - அரன் ஆத்திசூடி

06.05 – பலவகை

2014-09-21

06.05.029 - அரன் ஆத்திசூடி

-------------------------------------------------------

ஆத்தி சூடிய கூத்தப் பெருமான்

கீர்த்தி பாடக் கிட்டும் இன்பமே.


  1. அன்பே சிவம்

  2. ஆலயம் பேணு

  3. இன்தமிழ் பாடு

  4. ஈனர்சொல் கேளேல்

  5. உண்மையை நாடு

  6. ஊனுணல் தவிர்

  7. எழும்போது ஏத்து

  8. ஏழைமை ஒழி

  9. ஐந்தெழுத்து ஓது

  10. ஒண்பொடி பூசு

  11. ஓயாது உதவு

  12. ஔடதம் அரன்பேர்

  13. அஃதே உய்வழி


With notes: அரன் ஆத்திசூடி


ஆத்தி சூடிய கூத்தப் பெருமான்

கீர்த்தி பாடக் கிட்டும் இன்பமே.


ஆத்திமலரை அணிந்த நடராஜப் பெருமானது புகழைப் பாடினால் நமக்கு இன்பம் கிடைக்கும் / நம்மை இன்பம் வந்தடையும்;


அன்பே சிவம்

அன்பும் சிவமும் ஒன்றே.

(திருமந்திரம் - "அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்");

ஆலயம் பேணு

கோயில்களைப் போற்று; கோயிலுக்குச் சென்று வழிபடு; (பேணுதல் - போற்றுதல்; பாதுகாத்தல்; மதித்தல்; வழிபடுதல்);

(கொன்றைவேந்தன் - "ஆலயம் தொழுவது சாலவும் நன்று");

இன்-தமிழ் பாடு

(தேவாரம், திருவாசகம், முதலிய) இனிய தமிழ்ப் பாமாலைகளைப் பாடு;

ஈனர்-சொல் கேளேல்

கீழோர்களது பேச்சைக் கேட்பது கூடாது. (ஈனர் - இழிந்தோர் - கீழோர்); (கேட்டல் - ஏற்றுக்கொள்ளுதல்; கேளேல் - கேளாதே);

உண்மையை நாடு

சத்தியத்தை விரும்பு; ( நாடுதல் - விரும்புதல்);

ஊன் உணல் தவிர்

புலால் உண்பதைத் தவிர்க்கவேண்டும்; (உணல் - உண்ணல் என்பதன் இடைக்குறை);

(கொன்றைவேந்தன் - "நோன்பென் பதுவே கொன்று தின்னாமை")

எழும்போது ஏத்து

காலையில் துயிலெழும்பொழுது இறைவனைத் துதி; (ஏத்துதல் - துதித்தல்);

(சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "வழுவாள் 'பெருமான் கழல் வாழ்க' எனா எழுவாள்");

ஏழைமை ஒழி

அறியாமையை / வறுமையைத் தீர்; (ஏழைமை - அறியாமை; வறுமை);

நமது அறியாமையையும் வறுமையையும் போக்கிக்கொள்ள முயலவேண்டும்; ( = Learn well & Save some money for the future); (கொன்றைவேந்தன் - "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு");

பிறரது அறியாமையையும் வறுமையையும் தீர்க்க முயலவேண்டும்; ( = Educate others & Eradicate poverty)

ஐந்தெழுத்து ஓது

"நமச்சிவாய" என்ற திருவைந்தெழுத்தை ஓது; (ஓதுதல் - சொல்லுதல்; ஜபம் செய்தல்);

ஒண்-பொடி பூசு

திருநீற்றைப் பூசு; (ஒண்-பொடி - ஒளியுடைய திருநீறு);

ஓயாது உதவு

எப்பொழுதும் பிறருக்கு உதவி செய்;

ஔடதம் அரன்-பேர்

சிவபெருமானது திருநாமம் மருந்து ஆகும்; அது நம் பிறவிப்பிணியையும் தீர்க்கும்; (ஔடதம் - ஔஷதம் - மருந்து);

(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 -

"மருந்து-அவை மந்திரம் மறுமை நன்னெறி-அவை மற்றுமெல்லாம்

அருந்துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே");

அஃதே உய்-வழி

அதுவே (சிவபெருமான் திருநாமமே) நாம் உய்யும் நெறி ஆகும்; (உய்தல் - ஈடேறுதல்);


2023-01-02

அரன் ஆத்திசூடி - (மெய்யெழுத்துகள்)

-------------------------------------------------------

  1. முக்கணன்-புகழ் மொழி

  2. இங்கிதம் அறி

  3. இச்சகம் காக்க

  4. அஞ்சுவது அஞ்சு

  5. துட்டரை நீங்கு

  6. வெண்ணீறு அணி

  7. உத்தமரோடு இணங்கு

  8. செந்தமிழ் ஓது

  9. அப்பனுக்கு ஆட்செய்

  10. இம்மையின் பயன் அறி

  11. வெய்யசொல் சொல்லேல்

  12. நேர்மை தவறேல்

  13. வல்லவாறு உதவு

  14. ஒவ்வாதது உண்ணேல்

  15. வீழ்புனல் சேமி

  16. உள்ளுக நல்லதே

  17. பெற்றோரைப் பேணு

  18. பொன்னடி போற்றி வாழ்


With notes: அரன் ஆத்திசூடி - (மெய்யெழுத்துகள்)


முக்கணன்-புகழ் மொழி

மூன்று கண்களையுடைய பெருமானது புகழைச் சொல்; (மொழிதல் - சொல்லுதல்);

இங்கிதம் அறி

சமயோசிதமாக நடந்துகொள்; இங்கே எது நன்மை தரும் என்று அறிந்து செயல்படு;

(1. இங்கிதம் - சமயோசிதமாக நடத்தல்; 2. "இங்கு இதம்"; இதம் - ஹிதம் - நன்மை);

இச்சகம் காக்க

இந்த உலகைப் பாதுகாக்க; ("Protect the environment & save the habitats");

(சகம் - ஜகத் - உலகம்);

அஞ்சுவது அஞ்சு

(பழி, பாவம், கேடு, முதலிய) அஞ்சவேண்டியவற்றுக்கு அஞ்சுவது அறிவுடைமை;

திருக்குறள் 428 -

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

துட்டரை நீங்கு

தீயோர்களிடமிருந்து விலகி இரு; (துட்டர் - துஷ்டர் - தீயவர்கள்);

வெண்ணீறு அணி

திருநீற்றைப் பூசு;

உத்தமரோடு இணங்கு

மேன்மக்களோடு (நற்குணம் உள்ளவர்களோடு) நட்புக்கொள்; (இணங்குதல் - நட்புக்கொள்ளுதல்);

செந்தமிழ் ஓது

தேவாரம், திருவாசகம் முதலிய சிறந்த நன்மை தருகின்ற தமிழ்ப்பாமாலைகளைக் கற்றுப் பாடு; (ஓதுதல் - படித்தல்; பாடுதல்);

அப்பனுக்கு ஆட்செய்

எல்லாருக்கும் தந்தையான ஈசனுக்குத் தொண்டுசெய்;

இம்மையின் பயன் அறி

இந்த மனிதப்பிறவி பெற்றதன் பயனை அறிந்து அதற்கேற்ப நடந்துகொள்; (இம்மை - இப்பிறவி);

வெய்யசொல் சொல்லேல்

கடுஞ்சொற்களைச் சொல்லாதே; (வெய்ய - கொடிய);

நேர்மை தவறேல்

எப்பொழுதும் நேர்மையைக் கடைப்பிடி; (நேர்மை - உண்மை; நீதி; அறம்);

வல்லவாறு உதவு

இயன்ற அளவில் பிறருக்கு உதவி செய்; (வல்லவாறு - இயன்ற அளவில்);

ஒவ்வாதது உண்ணேல்

உடலுக்குத் தீங்கு செய்யக்கூடியதை உண்ணாதே;

வீழ்புனல் சேமி

மழைநீரை வீணாக்காமல் குளங்களிலும் ஏரிகளிலும் சேமிக்கவேண்டும்; (Rainwater harvesting); (வீழ்தல் - விழுதல்); (புனல் - நீர்);

உள்ளுக நல்லதே

நல்லதையே நினை; (உள்ளுதல் - நினைதல்);

பெற்றோரைப் பேணு

(ஔவையார் - ஆத்திசூடி - "தந்தைதாய்ப் பேண்")

பொன்னடி போற்றி வாழ்

ஈசனது பொன் போன்ற திருவடியை வணங்கி இன்புற்று வாழ்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Wednesday, December 28, 2022

07.02 – மீயச்சூர்

07.02 – மீயச்சூர்

2015-09-05

மீயச்சூர்

--------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")


1)

எரியன நிறமுடை எந்தை வெங்கரி

உரிதனைப் போர்த்தவன் உரகத் தாரினன்

விரிபொழில் சூழ்தரு மீயச் சூரரன்

பரிவினர் தம்வினை பாற்றும் ஈசனே.


எரி அன நிறமுடை எந்தை - தீப்போன்ற செம்மேனியுடைய எம் தந்தை;

வெங்கரி உரிதனைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;

உரகத் தாரினன் - பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);

விரிபொழில் சூழ்தரு மீயச்சூர் அரன் - விரிந்த சோலைகள் சூழ்ந்த மீயச்சூரில் உறையும் ஹரன்; (தருதல் - ஒரு துணைவினை);

பரிவினர் தம்வினை பாற்றும் ஈசனே - பக்தர்களுடைய வினைகளை நீக்கும் ஈசன்; (பரிவு - அன்பு; பக்தி); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);


2)

அரையினிற் கச்சென அரவம் ஆர்த்தவன்

வரையினை வில்லென வளைக்க வல்லவன்

விரைகமழ் பொழிலணி மீயச் சூரரன்

கரைமனத் தன்பரைக் காக்கும் ஈசனே.


அரையினில் கச்சு என அரவம் ஆர்த்தவன் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; ((ஆர்த்தல் - கட்டுதல்);

வரையினை வில் என வளைக்க வல்லவன் - மேருமலையை வில்லாக வளைத்தவன்; (வரை - மலை)

விரை கமழ் பொழில் அணி மீயச்சூர் அரன் - மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த மீயச்சூரில் உறையும் ஹரன்; (விரை - வாசனை);

கரை-மனத்து அன்பரைக் காக்கும் ஈசனே - உருகும் மனம் உடைய பக்தர்களைக் காக்கும் ஈசன்;


3)

தண்ணில வைச்சடைத் தாங்கு சங்கரன்

பெண்ணொரு பங்கினன் பெற்றம் ஊர்ந்தவன்

விண்ணுயர் பொழிலணி மீயச் சூரரன்

நண்ணிய வர்க்கருள் நல்கும் ஈசனே.


தண்-நிலவைச் சடைத் தாங்கு சங்கரன் - குளிர்ந்த சந்திரனைச் சடையில் தாங்கிய சங்கரன்;

பெண்ரு பங்கினன் - உமைபங்கன்;

பெற்றம் ஊர்ந்தவன் - இடப வாகனன்; (பெற்றம் - இடபம்);

விண்யர் பொழில் அணி மீயச்சூர் அரன் - வானோங்கு சோலை சூழ்ந்த மீயச்சூரில் உறையும் ஹரன்;

நண்ணியவர்க்கு அருள் நல்கும் ஈசனே - அடைந்தவர்க்கு அருள்புரியும் ஈசன்;


4)

கடலுமிழ் நஞ்சினைக் கண்டம் இட்டவன்

உடலினில் ஒருபுறம் உமைக்குத் தந்தவன்

விடைதிகழ் கொடியினன் மீயச் சூரரன்

தொடைபுனை வார்வினை துடைக்கும் ஈசனே.


தொடை புனைவார் வினை துடைக்கும் ஈசன் - பாமாலைகள் / பூமாலைகள் புனையும் பக்தர்களுடைய வினைகளை நீக்கும் ஈசன்; (தொடை - பூமாலை; பாட்டு); (துடைத்தல் - நீக்குதல்; அழித்தல்);


5)

மாதவர் வைகலும் வாழ்த்தும் வானவன்

போதர வம்புனை பொற்ச டைப்பரன்

வேதம தோதிய மீயச் சூரரன்

பாதம டைந்தவர் பாவம் தீர்ப்பனே.


மாதவர் வைகலும் வாழ்த்தும் வானவன் - பெரும் தவசிகள் தினந்தோறும் போற்றி வணங்கும் இறைவன்; (வைகலும் - நாள்தோறும்); (வானவன் - அழியாத வீட்டுலகினன்). (அப்பர் தேவாரம் - 4.11.1 - “சொற்றுணை வேதியன் சோதி வானவன்”);

போது அரவம் புனை பொற்சடைப் பரன் - பூக்களையும் பாம்பையும் பொன்போன்ற சடையில் அணியும் பரமன்;

வேதமது ஓதிய மீயச்சூர் அரன் - வேதத்தைப் பாடியருளிய மீயச்சூர் ஹரன்; (வேதமது - "அது" பகுதிப்பொருள்விகுதி);

பாதம் அடைந்தவர் பாவம் தீர்ப்பனே - தன் திருவடியைச் சரண்டைந்தவர்களது பாவத்தைத் தீர்ப்பான்;


6)

மேகமு லாம்பொழில் மீயச் சூரரன்

பாகன மொழியுமை பங்கன் சந்திர

சேகரன் சேவடி சிந்தை செய்தவர்

சோகம கற்றிடும் துணைவ னல்லனே.


மேகம் உலாம் பொழில் மீயச்சூர் அரன் - மேகம் உலவும் சோலை சூழ்ந்த திருமீயச்சூரில் உறையும் ஹரன்; (சம்பந்தர் தேவாரம் - 2.91.11 - "மையு லாம்பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்");

பாகு அன மொழி உமை பங்கன் - பாகு போன்ற இனிய மொழி பேசும் உமையை ஒரு பங்கு உடையவன்;

சந்திரசேகரன் - பிறைசூடி;

சேவடி சிந்தை செய்தவர் சோகம் அகற்றிடும் துணைவன் நல்லனே - சிவந்த திருவடியைத் தியானிக்கும் பக்தர்களுடைய சோகத்தை நீக்கும் துணைவன், நல்லவன்; (துணைவனல்லனே = துணைவன் நல்லனே / துணைவன் அல்லனே); (அல்லனே - அல்லனோ);


7)

வெள்ளெரு தேறிறை மீயச் சூரரன்

வெள்ளம ராப்புனை மின்னற் சடையினன்

நள்ளிருள் ஆடிடும் நாதன் சேவடி

உள்ளிடு வார்வினை ஒழியும் ஒல்லையே.


வெள்ளெருது ஏறு இறை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய இறைவன்;

வெள்ளம் அராப் புனை மின்னற் சடையினன் - கங்கையையும் பாம்பையும் அணிந்த, மின்னல் போன்ற சடையை உடையவன்;

நள்ளிருள் ஆடிடும் நாதன் - ஊழிக்காலத்தில் ஆடுகின்ற கூத்தன்;

சேவடி உள்ளிடுவார் வினை ஒழியும் ஒல்லையே - அவன் திருவடியைத் தியானிக்கும் பக்தர்களுடைய வினையெல்லாம் விரைவில் ஒழியும்; (உள்ளுதல் - எண்ணுதல்); (உள் இடுதல் - மனத்தில் வைத்தல்); (ஒல்லை - சீக்கிரம்; விரைவில்); (அப்பர் தேவாரம் - 5.1.9 - “கைதொழுவார் வினை ஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே”);


8)

மாலியல் மனத்தொடு மலையைப் பேர்த்தவன்

ஓலிட ஊன்றிய ஒருவன் மூவிலை

வேலினன் விரிபொழில் மீயச் சூரரன்

பாலன நீற்றினன் பத்தர்க் கன்பனே


மால் இயல் மனத்தொடு மலையைப் பேர்த்தவன் - அறியாமை தங்கிய மனத்தோடு கயிலைமலையை பெயர்த்த இராவணன்; (மால் - அறியாமை; மயக்கம்); (இயல்தல் - தங்குதல்; பொருந்துதல்);

ஓலிட ஊன்றிய ஒருவன் - கத்தி அழும்படி பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கிய பெருமான்; (ஓலிடுதல் - சத்தமிடுதல்);

மூவிலை வேலினன் - திரிசூலத்தை ஏந்தியவன்;

விரிபொழில் மீயச்சூர் அரன் - பரந்த சோலைகள் சூழ்ந்த திருமீயச்சூரில் உறைகின்ற ஹரன்;

பால் அன நீற்றினன் - பால் போன்ற வெண்ணீறு பூசியவன்;

பத்தர்க்கு அன்பனே - பக்தர்களுக்கு அன்பு உடையவன்; (- ஈற்றசை);


9)

மாணியின் உருவினில் மண்ணி ரந்தவன்

வாணியின் நாயகன் வணங்கும் சோதியன்

வேணியன் விரிபொழில் மீயச் சூரரன்

பேணிய வர்க்கொரு தோணி ஆவனே.


மாணியின் உருவினில் மண் இரந்தவன் வாணியின் நாயகன் வணங்கும் சோதியன் - வாமனன் வடிவில் வந்து மாபலியிடம் மூவடி நிலம் யாசித்த திருமால், சரசுவதியின் கணவனான பிரமன் இவர்கள் இருவரும் வணங்கும்படி நின்ற ஒளிவடிவினவன்;

வேணியன் - சடையினன்;

மீயச்சூர் அரன் பேணியவர்க்கு ஒரு தோணி ஆவனே - திருமீயச்சூரில் உறையும் பெருமான், தன்னைப் போற்றும் அடியவர்களுக்குப் பிறவிக்கடலைக் கடப்பிக்கும் ஒப்பற்ற படகு ஆவான்; (தோணி - ஓடம்; கப்பல்);


10)

நித்தலும் பொய்யுரை நீசர் புன்னெறி

கத்திடு வார்அவை கருதி டேன்மினீர்

வித்தகன் விரிபொழில் மீயச் சூரரன்

நித்தியன் தாள்தொழும் நேயர்க் கின்பமே.


நித்தலும் பொய்ரை நீசர் புன்னெறி கத்திடுவார் - ஓயாமல் பொய்களே சொல்லும் கீழோர்கள் சிறுநெறிகளைக் கத்துவார்கள்; (நித்தலும் - தினமும்); (நீசர் - கீழோர்); (புன்னெறி - சிறுநெறிகள்; இழிந்த மார்க்கங்கள்);

அவை கருதிடேன்மின் நீர் - அவற்றை நீங்கள் கருதவேண்டா; (கருதிடேன்மினீர் - கருதிடேல்+மின்+நீர்); (ஏல் - எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி); (மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);

வித்தகன் - பேரறிவாளன்; வல்லவன்;

விரி-பொழில் மீயச்சூர் அரன் - பரந்த சோலைகள் சூழ்ந்த திருமீயச்சூரில் உறைகின்ற ஹரன்;

நித்தியன் தாள் தொழும் நேயர்க்கு இன்பமே - அழிவற்ற அப்பெருமானது திருவடியை வணங்கும் அன்பர்களுக்கு என்றும் இன்பமே; (நித்தியன் - அழிவற்றவன்); (நேயர் - அன்பர்; பக்தர்);


11)

படமணி பாம்புகள் படரும் மேனியில்

இடமணி மலைமகள் இருக்கும் எம்பிரான்

விடமணி மிடறினன் மீயச் சூரரன்

வடமணி மார்பனை வாழ்த்தி வாழ்மினே.


படம் அணி பாம்புகள் படரும் மேனியில் - படத்தை உடைய நாகப்பாம்புகள் படர்கின்ற திருமேனியில்;

இடம் அணி மலைமகள் இருக்கும் எம்பிரான் - இடப்பக்கம் ஒரு பாகமாக அழகிய உமை இருக்கும் எம்பெருமான்;

விட மணி மிடறினன் - கண்டத்தில் ஆலகால விஷத்தை நீலமணியாக உடையவன்; ("விடம் அணி மிடறினன்" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம்);

மீயச்சூர் அரன் - திருமீயச்சூரில் உறைகின்ற ஹரன்;

வடம் அணி மார்பனை வாழ்த்தி வாழ்மினே - மாலை அணிந்த மார்பு உடையவனை வாழ்த்தி இன்பவாழ்வு வாழுங்கள்; (வடம் - மாலை; சரம்); (சம்பந்தர் தேவாரம் - 3.121.5 - "பொன்னினார் கொன்றை இருவடம் கிடந்து பொறிகிளர் பூணநூல் புரள");


பிற்குறிப்பு :

1) யாப்புக் குறிப்பு:

  • கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - "தானன தானன தான தானன" என்ற சந்தம்;

  • முதல் இரு சீர்களில் தானன என்பது தனதன என்றும் வரலாம்;

  • மூன்றாம் சீரில் தான என்பது தனன என்றும் வரலாம்.

  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;

  • (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்")

  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 -

சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே.)


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


07.01 – மருகல்

07.01 – மருகல்

2015-09-04

மருகல்

------------------

(வஞ்சித்துறை - "தான தானன" என்ற சந்தம். திருவிருக்குக்குறள் அமைப்பு)

தான என்பது தனன என்றும் வரலாம்.

தானன என்பது தனதன என்றும் வரலாம்).

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே")


1)

கன்னி ஒருபுடை

மன்னும் வடிவுடை

மன்னன் மருகலை

உன்னி உய்யுமே.


உமை ஒரு பக்கம் திகழும் கோலம் உடைய தலைவன் உறையும் திருமருகலை எண்ணி உய்யுங்கள்; (கன்னி - உமை); (அப்பர் தேவாரம் - 4.42.3 - “கன்னியை யொருபால் வைத்து”); (புடை - பக்கம்; பகுதி); (மன்னுதல் - நிலைத்தல்); (உன்ணுதல் - எண்ணுதல்);


2)

வெள்ளச் சடையினன்

வெள்ளை விடையினன்

வள்ளல் மருகலை

உள்ளல் நன்மையே.


கங்கையைச் சடையில் உடையவன்; வெண்ணிற எருதை வாகனமாக உடையவன்; பக்தர்கள் நினைத்த வரங்களை எல்லாம் கொடுத்து அருள்கின்ற வள்ளலான சிவபெருமான் உறையும் திருமருகலை எண்ணுதல் நன்மையே; (வெள்ளம் - நீர் - கங்கை); (உள்ளல் - உள்ளுதல் - எண்ணுதல்); (அப்பர் தேவாரம் - 5.71.5 - "விசயமங்கைப் பிரான் உள்ளல் நோக்கியென் உள்ளுள் உறையுமே");


3)

சந்த ஞானசம்

பந்தன் பரவிய

மைந்தன் மருகலைச்

சிந்தை செய்ம்மினே.


சந்தத் தமிழ் பாடிய திருஞானசம்பந்தர் போற்றி வணங்கிய ஈசன் உறையும் திருமருகலைத் தியானியுங்கள்; (மைந்தன் - இளைஞன்; வீரன்; வலிமையுடையவன்); (சிந்தை செய்ம்மின் - எண்ணுங்கள்);


4)

புதியன் பொற்சடை

நதியன் நளிர்தரு

மதியன் மருகலைத்

துதிமின் நன்மையே.


புதியன் - நவன்;

பொற்சடை நதியன் - பொன் போன்ற சடையில் கங்கையை உடையவன்;

நளிர்தரு மதியன் - குளிர்ந்த சந்திரனை அணிந்தவன்; (நளிர்தல் - குளிர்தல்); (தருதல் - ஒரு துணைவினை);

மருகலைத் துதிமின் நன்மையே - அப்பெருமான் உறையும் திருமருகலைத் துதியுங்கள்; நன்மை வந்தடையும்; (துதிமின் - துதியுங்கள்; மின் - முன்னிலை ஏவல் பன்மை விகுதி);


5)

அஞ்சி அமரர்கள்

கெஞ்ச நஞ்சையுண்

மஞ்சன் மருகலை

நெஞ்சில் நினைமினே.


அஞ்சி அமரர்கள் கெஞ்ச, நஞ்சை உண் மஞ்சன் - அஞ்சிய தேவர்கள் தங்களைக் காக்கவேண்டி இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட வீரன்; (மஞ்சன் - மைந்தன் என்பதன் போலி); (மைந்தன் - இளைஞன்; வீரன்; வலிமையுடையவன்);

மருகலை நெஞ்சில் நினைமினே - அப்பெருமான் உறையும் திருமருகலை மனத்தில் நினையுங்கள்;


6)

அணியன் முடிமிசைப்

பணியன் மிடறினில்

மணியன் மருகலைப்

பணிய வம்மினே.


அணியன் - அடியார்க்கு அருகில் உள்ளவன்;

முடிமிசைப் பணியன் - திருமுடிமேல் பாம்பை அணிந்தவன்; (பணி - நாகப்பாம்பு);

மிடறினில் மணியன் - கண்டத்தில் நீலமணி உடையவன்;

மருகலைப் பணிய வம்மினே - அப்பெருமான் உறையும் திருமருகலை வணங்க வாருங்கள்; (வம்மின் - வாருங்கள்);


7)

உருவும் அருவுமாம்

ஒருவன் உமையொடு

மருவு மருகலை

உருகிப் பரவுமே.


உருவும் அருவும் ஆம் ஒருவன் - அருவமாகவும் உருவமாகவும் இருக்கும் ஒப்பற்றவன்; (ஒருவன் - ஒப்பற்றவன்);

உமையொடு மருவு மருகலை உருகிப் பரவுமே - அப்பெருமான் உமையோடு எழுந்தருளிய திருமருகலைத் துதியுங்கள்; (பரவுதல் - துதித்தல்; பாடுதல்);


8)

பத்து முடியனைக்

கத்த ஊன்றிய

அத்தன் மருகலைப்

பத்தி செய்ம்மினே


பத்து முடியனைக் கத்த ஊன்றிய - பத்துத்தலை இராவணனைக் கத்தும்படி திருப்பாத விரலை ஊன்றி அவனை நசுக்கிய;

அத்தன் மருகலைப் பத்தி செய்ம்மினே - நம் தந்தை சிவன் உறையும் திருமருகலைப் பக்தி செய்யுங்கள்; (அத்தன் - தந்தை); (பத்தி - பக்தி);


9)

நேடி அயனரி

வாடி வாழ்த்தெரி

ஆடி மருகலை

நாடி வாழ்மினே.


நேடி அயன் அரி வாடி வாழ்த்து எரி - பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி வாடி வணங்கிய சோதி;

எரி ஆடி - தீயாடி - தீயின்கண் ஆடுபவன் - நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவன் - சிவபெருமான்;

மருகலை நாடி வாழ்மினே - அப்பெருமான் உறையும் திருமருகலை விரும்பி அடைந்து வாழுங்கள்; (நாடுதல் - விரும்புதல்; நினைதல்; கிட்டுதல்);

இலக்கணக்குறிப்பு : இப்பாடலில் "எரி" என்ற சொல் இடைநிலைத்தீவகமாக இருபுறமும் பொருந்திப் பொருள்தருமாறு அமைந்தது;


10)

மாசு நெஞ்சுடை

நீசர் சொல்விடும்

ஈசன் மருகலான்

நேசர்க் கின்பமே.


மாசு நெஞ்சு-உடை நீசர் சொல் விடும் - மனத்தில் அழுக்கு (/ குற்றம்) நிரம்பிய கீழோர்கள் சொல்லும் சொற்களை நீங்குங்கள்; அவர்கள் பேச்சை மதியாதீர்கள்; (நீசர் - கீழோர்);

ஈசன் மருகலான் நேசர்க்கு இன்பமே - திருமருகலில் உறையும் ஈசனது பக்தர்களுக்கு என்றும் இன்பமே; (நேசர் - அன்பர்);


11)

சுண்ண நீறணி

அண்ணல் அழலன

வண்ணன் மருகலை

நண்ணி உய்யுமே.


சுண்ண நீறு அணி அண்ணல் - கலவைச் சந்தனம்போலத் திருநீற்றை அணியும் பெருமான்;

அழல் அன வண்ணன் - தீப்போன்ற செம்மேனியன்;

மருகலை நண்ணி உய்யுமே - அப்பெருமான் உறையும் திருமருகலை அடைந்து உய்யுங்கள்;


பிற்குறிப்பு:

யாப்புக் குறிப்பு - வஞ்சித்துறை - "தான தானன" என்ற சந்தம். திருவிருக்குக்குறள் அமைப்பு.

தான என்பது தனன என்றும் வரலாம்.

தானன என்பது தனதன என்றும் வரலாம்.

(சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே")


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


Tuesday, December 27, 2022

05.50 – கோடி - (குழகர் கோயில்)

05.50 – கோடி - (குழகர் கோயில்)

2015-09-04

கோடி - (குழகர் கோயில்)

(வேதாரண்யத்திற்குத் தெற்கே உள்ள தலம். இக்காலத்தில் "குழகர் கோயில்")

–---------------------------------------------------------------

(12 பாடல்கள்)

(அறுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று");


1)

விரைகொள் பூக்கள் தூவியும் வேறு தொண்டு மேவியும்

கரையும் நெஞ்ச ராய்நிதம் கைகள் கூப்பு வார்க்கருள்

அரையன் என்றும் பூரணன் ஆல மர்ந்த ஆரணன்

குரைகொள் ஓதம் வந்தெறி கோடி மேய கூத்தனே.


விரைகொள் பூக்கள் தூவியும் வேறு தொண்டு மேவியும் - வாசமலர்களைத் தூவியும் வேறு தொண்டுகள் விரும்பிச் செய்தும்; (விரை - வாசனை); (மேவுதல் - விரும்புதல்);

கரையும் நெஞ்சராய் நிதம் கைகள் கூப்புவார்க்கு அருள் - உருகும் மனம் உடையவர்கள் ஆகித் தினமும் கைகூப்பி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற;

அரையன் - அரசன்;

என்றும் பூரணன் = எப்பொழுதும் முழுமையானவன்; (அரையன் பூரணன் - சொல்லமைப்பால் முரண்தொடை);

ஆல் அமர்ந்த ஆரணன் - கல்லால மரத்தின்கீழ் இருக்கும் வேதப்பொருளானவன்; (ஆரணம் - வேதம்);

குரைகொள் ஓதம் வந்து எறி கோடி மேய கூத்தன் - ஒலிக்கின்ற அலைகள் வந்து மோதுகின்ற திருக்கோடியில் எழுந்தருளியிருக்கும் கூத்தப்பெருமான்; (குரை - ஒலி); (ஓதம் - கடல்அலை);


2)

ஒளிரும் நீறு சாந்தமாம் உண்மை அன்பர் கட்கெலாம்

எளியன் வெள்ளை ஏறமர் ஈசன் ஏழை அஞ்சவே

களிறெ திர்ந்த போதினிற் கையி னாலு ரித்தவன்

குளிரும் ஓதம் வந்துலாம் கோடி மேய கூத்தனே.


ஒளிரும் நீறு சாந்தம் ஆம் உண்மை அன்பர்கட்கு-லாம் எளியன் - ஒளி வீசும் திருநீறே சந்தனம் ஆகும் மெய்யடியார்களால் எளிதில் அடையப்பெறுபவன்; (சாந்தம் - சந்தனம்);

வெள்ளை ஏறு அமர் ஈசன் - வெள்ளை எருதை வாகனமாக விரும்பியவன்;

ஏழை அஞ்சவே களிறு எதிர்ந்த போதினில் கையினால் உரித்தவன் - உமை அஞ்சும்படி யானை வந்து போர் செய்தபொழுது அதன் தோலைக் கையால் பற்றி உரித்தவன்; (ஏழை - உமை); (எதிர்தல் - எதிர்த்தல்);

குளிரும் ஓதம் வந்துலாம் கோடி மேய கூத்தனே - குளிர்ந்த அலைகள் வந்து உலவுகின்ற திருக்கோடியில் எழுந்தருளியிருக்கும் கூத்தப்பெருமான்;


3)

நீல கண்டன் ஆர்கழல் நெஞ்சில் என்றும் எண்ணிடு

பாலன் அஞ்ச வந்துவன் பாசம் வீசு கூற்றுயிர்

கால வேவு தைத்தவன் கையில் மான்த ரித்தவன்

கோல நீல வேலைசூழ் கோடி மேய கூத்தனே.


ஆர் கழல் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடி;

பாலன் - மார்க்கண்டேயர்;

வன் பாசம் வீசு கூற்று உயிர் காலவே உதைத்தவன் - வலிய பாசத்தை வீசிய காலனை உயிர் கக்குமாறு உதைத்தவன்; (காலுதல் - கக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.38.2 - "காலனைக் கால வைத்தார்");

கோல நீல வேலை - அழகிய கரிய கடல்;


4)

தவள நீற்ற ராய்த்தலை தாழ்த்தும் அன்பர் நெஞ்சினன்

பவளம் ஒத்த செஞ்சடைப் பானி லாவை வைத்தவன்

துவளு கின்ற பூங்கொடி தோன்று கின்ற மெல்லிடைக்

குவளைக் கண்ணி பங்கினன் கோடி மேய கூத்தனே.


தவள நீற்றராய் - வெண் திருநீற்றைப் பூசியவர்கள் ஆகி; (தவளம் - வெண்மை);

செஞ்சடைப் பானிலாவை வைத்தவன் - செஞ்சடையில் பால் போன்ற நிலாவை அணிந்தவன்; (பானிலா - பால்+நிலா);

துவளுகின்ற பூங்கொடி தோன்றுகின்ற மெல்லிடைக் குவளைக் கண்ணி பங்கினன் - துவளும் பூங்கொடி போன்ற மெலிந்த இடையையும் குவளை மலர் போன்ற கண்ணையும் உடைய உமையை ஒரு பாகமாக உடையவன்;


5)

அம்பை ஏவு மன்மதன் ஆகம் நீறு செய்தவன்

வம்பு நாறு பூவினால் மாலை கட்டி வாழ்த்துவார்

வெம்ப வத்தை வீட்டுவான் வேதம் ஓது நாவினன்

கொம்ப னாளொர் கூறினன் கோடி மேய கூத்தனே.


மன்மதன் ஆகம் நீறு செய்தவன் - காமனது உடம்பைச் சாம்பலாக்கியவன்;

வம்பு நாறு பூவினால் - மணம் கமழும் பூக்களால்;

வெம்-பவத்தை வீட்டுவான் - கொடிய பிறவிப்பிணியைத் தீர்ப்பான்;

கொம்பு அனாள் ஒர் கூறினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் – 2.112.3 - "மங்கைகூறினன்");


6)

வாயி னால்வ ழுத்துவார் வாதை நல்கு வல்வினை

நோயி லாது வாழவே நோக்கு வான ருட்கணால்

தாயி னல்ல சங்கரன் தன்னை எண்ணு வார்மனம்

கோயி லாக நின்றவன் கோடி மேய கூத்தனே.


பதம் பிரித்து:

வாயினால் வழுத்துவார் வாதை நல்கு வல்வினை

நோய் இலாது வாழவே நோக்குவான் அருட்கணால்;

தாயின் நல்ல சங்கரன்; தன்னை எண்ணுவார் மனம்

கோயிலாக நின்றவன்; கோடி மேய கூத்தனே.


வாதை நல்கு வல்வினை - துன்பம் தரும் வலிய வினைகள்;

நோக்குவான் அருட்கணால் - அருட்கண்ணால் நோக்குவான்;


7)

சமயம் ஆறும் ஆக்கினான் தாளை நாளும் ஏத்திடும்

தமரை வானம் ஏற்றுவான் சாம வேதி சக்கரம்

கமலக் கண்ணற் கீந்தவன் கைகள் பன்னி ரண்டுடைக்

குமர னைப்ப யந்தவன் கோடி மேய கூத்தனே.


சமயம் ஆறும் ஆக்கினான் - ஷண்மதங்களை ஆக்கியவன்;

தாளை நாளும் ஏத்திடும் தமரை வானம் ஏற்றுவான் - தினமும் திருவடியை வாழ்த்தும் அடியவர்களைச் சிவலோகத்திற்கு ஏற்றுபவன்; (தமர் - அடியவர்);

சாம வேதி - சாமவேதம் ஓதுபவன்;

சக்கரம் கமலக்கண்ணற்கு ஈந்தவன் - சக்கராயுதத்தைத் திருமாலுக்குக் கொடுத்தவன்;

கைகள் பன்னிரண்டுடைக் குமரனைப் பயந்தவன் - முருகனைப் பெற்றவன்; (பயத்தல் - To beget, generate, give birth to; பெறுதல்);


8)

வானி லோடு தேர்நிலம் வந்த தாற்பொ ருப்பெடு

கோனி ராவ ணன்தலைக் கொத்த டர்த்த தாளினான்

தேனி லாவு கொன்றையார் சென்னி மீது நாகமும்

கூனி லாவும் வைத்தவன் கோடி மேய கூத்தனே.


வானில் ஓடு தேர் நிலம் வந்ததால் பொருப்பு எடு கோன் இராவணன் தலைக்கொத்து அடர்த்த தாளினான் - ஆகாயத்தில் பறந்து செல்லும் தேர் ஓடாமல் கீழே இறங்கியதால், கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற அரக்கர்கோன் இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய திருவடியினன்; (பொருப்பு - மலை);

தேன் நிலாவு கொன்றை ஆர் சென்னி மீது நாகமும் கூன் நிலாவும் வைத்தவன் - தேன் திகழும் கொன்றைமலரை அணிந்த திருமுடிமேல் பாம்பையும் வளைந்த பிறைச்சந்திரனையும் வைத்தவன்; (கூன் - வளைந்த);


9)

கடிமி குந்த போதினான் கண்ணன் நேட மாவழல்

வடிவ தாகி ஓங்கினான் வார மாகி வாழ்த்திடும்

அடியர் நெஞ்சில் நின்றவன் அண்டர் அஞ்சி வேண்டவும்

கொடிய நஞ்சை உண்டவன் கோடி மேய கூத்தனே.


கடி மிகுந்த போதினான் கண்ணன் நேட மா அழல் வடிவது ஆகி ஓங்கினான் - வாசனை மிக்க தாமரைப்பூவில் உறையும் பிரமனும் திருமாலும் தேடும்படி பெரிய ஜோதி ஆகி ஓங்கியவன்; (நேட - தேட); (அழல் - தீ);

வாரம் ஆகி வாழ்த்திடும் அடியர் நெஞ்சில் நின்றவன் - அன்பு உடையவர்கள் ஆகித் துதிப்பவர்கள் மனத்தில் இருப்பவன்; (வாரம் - அன்பு);

அண்டர் - தேவர்கள்;


10)

வஞ்ச நெஞ்சர் சொல்லிடும் வார்த்தை யில்ம யங்கிடேல்

அஞ்செ ழுத்தை ஓதினார் அல்லல் நீக்கும் அங்கணன்

தஞ்ச மென்று தாள்பணி தண்ம திக்கி ரங்கினான்

குஞ்சி மீது கொன்றையான் கோடி மேய கூத்தனே.


வஞ்ச நெஞ்சர் சொல்லிடும் வார்த்தையில் மயங்கிடேல் - மனத்தில் வஞ்சனை உடையவர்கள் சொல்லும் வார்த்தைகளில் மயங்காதே;

அஞ்செழுத்தை ஓதினார் அல்லல் நீக்கும் அங்கணன் - திருவைந்தெழுத்தை ஓதுபவ்ர்களது துன்பத்தைத் தீர்க்கும் அருட்கண்ணன்; (அங்கணன் - அருட்கண் உடையவன்);

தஞ்சம் என்று தாள் பணி தண்-மதிக்கு இரங்கினான் - திருவடியில் சரண்புகுந்த குளிர்ந்த சந்திரனுக்கு இரங்கியவன்;

குஞ்சி மீது கொன்றையான் - தலையில் கொன்றைமலரை அணிந்தவன்; (குஞ்சி - உச்சிமயிர்; தலை);


11)

இன்று நேற்று நாளையாய் என்றும் உள்ள எம்பிரான்

மன்றி லாடி வார்கழல் வான கத்து ளோரெலாம்

சென்று வாழ்த்த மூவெயில் தீயில் வேவ வில்லெனக்

குன்றை ஏந்து கையினான் கோடி மேய கூத்தனே.


மன்றில் ஆடி - தில்லையம்பலத்தில் ஆடுபவன்;

வானகத்து உளோர் எலாம் - தேவர்களெல்லாம்;

மூ எயில் - முப்புரம்;

வில்னக் குன்றை ஏந்து கையினான் - கையில் மேருமலையை வில்லாக ஏந்தியவன்;


12)

பறைகள் ஆர்த்துப் பாரிடம் பாட நட்டம் ஆடுவான்

கறைகொள் கண்டன் வேணியிற் கங்கை சூடி அன்பராய்

நறைகொள் நற்ற மிழ்த்தொடை நாளும் ஓது நாவினர்

குறைகள் தீர்த்த கொள்கையான் கோடி மேய கூத்தனே.


பறைகள் ஆர்த்துப் பாரிடம் பாட நட்டம் ஆடுவான் - பறைகளை ஒலித்துப் பூதங்கள் பாடத் திருநடம் செய்பவன்; (பாரிடம் - பூதகணங்கள்); (நட்டம் - கூத்து);

கறைகொள் கண்டன் - நீலகண்டன்;

வேணியில் கங்கைசூடி அன்பராய் - சடையில் கங்கையை அணிந்த பெருமானுக்குப் பத்தர்கள் ஆகி;

நறைகொள் நற்றமிழ்த்தொடை நாளும் ஓது நாவினர் - மணம் மிக்க நல்ல தமிழ்ப்பாமாலைகளைத் தினமும் பாடி வழிபடுபவர்களது;

குறைகள் தீர்த்த கொள்கையான் - குறைகளைத் தீர்த்து அருள்பவன்;

கோடி மேய கூத்தனே - திருக்கோடியில் உறைகின்ற கூத்தன்;


பிற்குறிப்புகள் :

1. கோடி - தலப்பெயர்க் குறிப்பு:

  • தருமை ஆதீன உரையிற் காண்பது : திருமறைக்காட்டு எல்லையின் கோடியில் இருக்கும் அழகராதல் பற்றி, இங்கு உள்ள பெருமான், "கோடிக் குழகர்" எனப் படுவர். அவரது பெயரே, பின்னர் அத்தலத்திற்கும் ஆயிற்று. அக்கடற்கரையையும், "கோடிக்கரை" என்பர்.

  • சுந்தரர் தேவாரம் - 7.32.5 - "கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே";

  • அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - "நீலமுகி லானகுழல் ... குழகர் கோடிநகர் மேவிவளர் பெருமாளே" - குழகர் என்னும் திருநாமத்துடன் சிவபெருமான் வீற்றிருக்கும் கோடி என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே;


2. யாப்புக் குறிப்பு:

  • அறுசீர்ச் சந்த விருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4 சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5 சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6 சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


வி. சுப்பிரமணியன்

-------------------