Saturday, December 3, 2022

06.01.144 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2014-02-09

06.01.144 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை

-----------------------------------------------

மண்ணிருக்கும் காலெரியும் நீராகி வானண்ணும்

மண்ணிதம் சுற்றிவரும் வாழ்விக்கும் - திண்ணம்

முடிவில் நெருப்புருவம் பூணுமொரு முக்கண்

அடிகள் செயற்கைக்கோள் ஆங்கு.


சொற்பொருள்:

கால் - வாயு;

எரிதல் - தீப்பற்றி எரிதல்;

எரி - தீ;

வான் - 1. ஆகாயம்; 2. அழகு; பெருமை;

நண்ணுதல் - 1. அடைதல்; / 2. பொருந்துதல்;

மண் - 1. நிலம்; பூமி; / 2. உலகமக்கள்;

முடிவில் - 1. இறுதியில்; / 2. முடிவு இல் - எல்லையற்ற;

அடிகள் - கடவுள்;

ஆங்கு - 1. ஓர் உவமவுருபு; 2. ஓர் அசைச்சொல்;


செயற்கைக்கோள் (Satellite):

மண் இருக்கும் கால் எரியும், நீர் ஆகி, வான் நண்ணும் - பூமியில் இருக்கும் வாயுக்கள் (ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்) எரியும். அதனால் நீர் (நீராவி) உண்டாகி, (அதன் விளைவாக, ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்) ஆகாயத்தை அடையும்;

மண் நிதம் சுற்றிவரும் - எப்போதும் பூமியைச் சுற்றும்;

மண் வாழ்விக்கும் - மக்கள் இனிது வாழ உதவும்; ("மண்" என்ற சொல்லைத் தீவகமாகக் கொண்டு இப்படி இருமுறை இயைக்கலாம்);

("நிதம் சுற்றிவரும் மண் வாழ்விக்கும்" - என்றும் இயைக்கலாம் - தினமும் சுற்றிவருகின்ற மண்ணுலகை நல்லபடி வாழ்விக்கும்);

திண்ணம் முடிவில் நெருப்பு உருவம் பூணும் - நிச்சயம் கடைசியில் (சில ஆண்டுகளுக்குப்பின் பூமியை நோக்கி விழும்போது வாயுமண்டலத்தில் எரியும்பொழுது) தீயின் உருவத்தைக் கொள்ளும்;

செயற்கைக்கோள்.


சிவன்;

மண் இருக்கும்; கால் எரியும் நீர் ஆகி, வான் நண்ணும் - நிலத்தில் இருப்பவன்; காற்று, தீ, நீர் இவையும் ஆகி, வானிலும் பொருந்துபவன்; (ஐம்பூதங்களாகத் திகழ்பவன்); (கால் எரியும் நீர் - காலும் எரியும் நீரும் - உம்மைத்தொகை);

நண்ணும் மண் நிதம் சுற்றிவரும் - தொழுவதற்கு அடைந்த மக்கள் தினமும் வலம்செய்வார்கள்;

வாழ்விக்கும் திண்ணம் - (அவ்வடியார்களை) நிச்சயம் காத்து அருள்வான்;

முடிவு இல் நெருப்பு உருவம் பூணும் - எல்லையற்ற சோதி வடிவானவன்;

ஒரு முக்கண் அடிகள் - ஒப்பற்ற முக்கட்கடவுளான சிவபெருமான்.


இலக்கணக் குறிப்பு:

செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.

(.டு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment