Saturday, November 23, 2019

04.79 – பிரம்மதேசம்


04.79 – பிரம்மதேசம்

2014-10-14
பிரம்மதேசம் (திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் அருகுள்ள தலம் - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்)
--------------------------------
(12 பாடல்கள்)
(கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")

1)
ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன்
இருநதிச் சடையினன் ஏத்தும் அன்பருக்
கருநிதி ஆகிய ஐயன் தங்கிடம்
பெருமதில் புடையணி பிரம தேசமே.

ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன் - பிறைச்சந்திரனைத் திருமுடிமேல் சூடியவன்;
இருநதிச் சடையினன் - கங்கையைச் சடையில் தேரித்தவன்; (இருநதி - பெரிய நதி - கங்கை);
ஏத்தும் அன்பருக்கு அருநிதி ஆகிய ஐயன் தங்கு இடம் - துதிக்கும் பக்தர்களுக்கு அரிய செல்வம் ஆன தலைவன் உறையும் தலம்;
பெருமதில் புடை அணி பிரமதேசமே - பெரிய மதிலால் சூழப்பெற்ற பிரமதேசம் ஆகும்; (புடை - பக்கம்);

2)
வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு காலினார்
மஞ்ஞையின் மேல்வரு மைந்தன் தாதையார்
மைஞ்ஞவில் மிடற்றினர் மதியம் சூடிய
பிஞ்ஞக னாரிடம் பிரம தேசமே.

வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு காலினார் - கொடிய எமனுடைய உயிரை அழித்த காலை உடையவர்; (ஞமன் - நமன் - கூற்றுவன்);
மஞ்ஞையின்மேல் வரும் மைந்தன் தாதையார் - மயில்மேல் ஏறி வரும் முருகனுக்குத் தந்தையார்; (மஞ்ஞை - மயில்); (சுந்தரர் தேவாரம் - 7.86.1 - "விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை");
மைஞ்ஞவில் மிடற்றினர் - கருமை திகழும் கண்டத்தை உடையவர்; (ஞவில் - நவில்; நவில்தல் - தாங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.60.4 - "மைஞ்ஞவில் கண்டன் றன்னை" === கருமை படர்ந்த நீலகண்டன்);
மதியம் சூடிய பிஞ்ஞகனார் இடம் பிரமதேசமே.- சந்திரனை அணிந்த பிஞ்ஞகன் என்று அழைக்கப்படும் சிவபெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும். (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

3)
வேணியில் வெண்பிறை விளங்கு வேதியன்
மாணியைக் காத்தவன் மாக டற்கொரு
தோணியை ஒத்தவன் தோகை ஓர்புறம்
பேணிய கோனிடம் பிரம தேசமே.

வேணி - சடை;
மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர்;
மா கடற்கு ஒரு தோணியை ஒத்தவன் - பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு ஒப்பற்ற படகு போன்றவன்; (கடல் + கு = கடற்கு);
தோகை - பெண் - உமை;
பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்;
கோன் - தலைவன்;

4)
சிறப்புறு செந்தமிழ் செப்பி நாள்தொறும்
மறப்பில ராய்அடி வணங்கு வார்வினை
அறப்பரிந் தருள்பவன் அந்த மில்லவன்
பிறப்பிலி உறைவிடம் பிரம தேசமே.

மறப்பு இலராய் - மறவாதவர்கள் ஆகி;
வினை அறப் பரிந்து அருள்பவன் - வினைகள் தீர இரங்கி அருள்புரிபவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);
அந்தம் இல்லவன் பிறப்பிலி - சாதலும் பிறத்தலும் இல்லாதவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.8 - "வெந்தநீறணி மார்பிற்றோல்புனை அந்தமில்லவ னாடானை");

5)
நாருடை யார்க்கருள் நல்கும் நல்லவன்
கூருடை மழுவினன் கோல வெண்பிறை
நீரடை செஞ்சடை நிமலன் ஆயிரம்
பேருடை யானிடம் பிரம தேசமே.

நார் - அன்பு ; (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "பார்மலிந்தோங்கிப்... ... நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்");
கோல வெண்பிறை நீர் அடை செஞ்சடை நிமலன் - அழகிய வெண் திங்களும் கங்கையும் பொருந்திய செஞ்சடையை உடைய தூயன்;

6)
முத்தியை நல்கிடும் முதல்வன் முக்கணன்
மத்தம ணிந்தவன் மதுரை மன்னவன்
மொத்தினை ஏற்றவன் முன்னம் நஞ்சையுண்
பித்தனி ருப்பது பிரம தேசமே.

மத்தம் அணிந்தவன் - ஊமத்தமலரைச் சூடியவன்;
மதுரை மன்னவன் மொத்தினை ஏற்றவன் - பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டவன்; (மொத்து - அடி);
முன்னம் நஞ்சை உண் பித்தன் - முன்பு விடத்தை உண்ட பித்தன்; (பித்தன் - சிவன் திருநாமம்);
இருப்பது பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

7)
நறைமலர் கூவிளம் நம்பி இட்டவர்
குறைகளைத் தீர்ப்பவன் கொக்கின் தூவலும்
அறைபுனல் வானதி அரவம் கோணிய
பிறையணிந் தானிடம் பிரம தேசமே.

நறை - தேன்; வாசனை;
கூவிளம் - வில்வம்;
நம்புதல் - விரும்புதல்;
கொக்கின் தூவல் - கொக்கு வடிவில் நின்ற அசுரனை அழித்து அவன் இறகினைச் சூடியவர் சிவபெருமான்; (தூவல் - இறகு);
அறைபுனல் வானதி - ஒலிக்கின்ற நீரை உடைய கங்கை;
கோணிய பிறை - வளைந்த பிறைச்சந்திரன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.11 - "கோணிய பிறை சூடியைக்..." );

8)
திண்ணிய நெஞ்சினன் தேர்க டாவிட
எண்ணிவெற் பிடந்தவன் எய்க்க ஊன்றினார்
கண்ணமர் நெற்றியர் கரிய மென்குழற்
பெண்ணிடத் தாரிடம் பிரம தேசமே.

திண்ணிய நெஞ்சினன், தேர் கடாவிட எண்ணி வெற்பு இடந்தவன் - கல் நெஞ்சன், இரதத்தைச் செலுத்த எண்ணிக் கயிலைமலையைப் பேர்த்தவன்;
எய்க்க ஊன்றினார் - அந்த இராவணன் வருந்துமாறு விரலை ஊன்றியவர்;
கண் அமர் நெற்றியர் - நெற்றிக்கண் உடையவர்;
கரிய மென்குழற் பெண் இடத்தார் இடம் பிரமதேசமே - கரிய, மென்மையான கூந்தலையுடைய, உமையை இடப்பாகத்தில் உடைய சிவபெருமானார் உறையும் தலம் பிரமதேசம்;

9)
கரியவன் நான்முகன் காண்ப தற்கொணா
எரியவன் ஒருகணை ஏவி ஒன்னலர்
திரியரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள்
பெரியவன் உறைவிடம் பிரம தேசமே.

கரியவன் நான்முகன் காண்பதற்கு ஒணா எரியவன் - திருமால் பிரமன் இவர்களால் காண இயலாத சோதி அவன்;
ஒரு கணை ஏவி - ஓர் அம்பை எய்து;
ஒன்னலர் திரி அரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள் பெரியவன் - பகைவர்களது, எங்கும் திரிந்த முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி செய்த பெருமான்;
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

10)
குற்றமி குத்தவர் கூறும் பொய்ம்மொழி
வெற்றுரை இடரினில் வீழ்த்தும் நீங்குமின்
பெற்றமு கந்தவன் பேணு வார்க்கருள்
பெற்றியன் உறைவிடம் பிரம தேசமே.

குற்றம் மிகுத்தவர் கூறும் பொய்ம்மொழி வெற்றுரை இடரினில் வீழ்த்தும் - குற்றம் மிகுந்தவர்கள் சொல்கின்ற பொய்களும் பயனற்ற வார்த்தைகளும் துன்பத்தில் தள்ளும்;
நீங்குமின் - ஆதலால், அவற்றை/அவர்களை நீங்குங்கள்;
பெற்றம் உகந்தவன் - இடபவாகனத்தை விரும்பியவன்; (பெற்றம் - இடபம்; எருது); (உகத்தல் - விரும்புதல்);;
பேணுவார்க்கு அருள் பெற்றியன் - போற்றி வழிபடுபவர்களுக்கு அருள்கின்ற தன்மைய் உடையவன்; (பெற்றி - இயல்பு; பெருமை);
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

11)
கருதிவந் தேத்திடக் கவலை தீர்ப்பவன்
பொருதுவெங் கரியுரி போர்த்த மார்பினன்
எருதுகந் தேறிறை இலந்தை நீழலைப்
பெரிதுகந் தானிடம் பிரம தேசமே.

கருதி வந்து ஏத்திடக் கவலை தீர்ப்பவன் - விரும்பி வந்து வழிபடும் பக்தர்களுடைய கவலையைத் தீர்ப்பவன்;
பொருது வெங் கரி உரி போர்த்த மார்பினன் - போர் செய்த கொடிய யானையின் தோலை மார்பில் போர்த்தவன்;
எருது உகந்து ஏறு இறை - இடப வாகனத்தை விரும்பிய இறைவன்;
இலந்தை நீழலைப் பெரிது உகந்தான் இடம் பிரமதேசமே - இலந்தைமரத்தின் கீழே விரும்பி இருப்பவன் உறையும் தலம் பிரமதேசம் ஆகும். (சம்பந்தர் தேவாரம் - 3.115.1 - "ஆலநீழ லுகந்த திருக்கையே" - சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர்);
* இலந்தை - இத்தலத்தின் தலவிருட்சம்;

12)
துணிமதிக் கண்ணியைச் சூடு சுந்தரன்
மணியணி மிடற்றினன் மங்கை பங்கினன்
பணியணி மார்பினன் பாதம் பற்றினார்
பிணியறுப் பானிடம் பிரம தேசமே.

துணிமதி - பிறைச்சந்திரன்;
கண்ணி - தலையில் அணியும் மாலைவகை;
மணி அணி மிடற்றினன் - நீலமணியை அணிந்த கண்டத்தை உடையவன்;
பணி அணி மார்பினன் - பாம்பை மாலையாக அணிந்த மார்பை உடையவன்; (பணி - நாகம்);
பாதம் பற்றினார் பிணி அறுப்பான் - திருவடியைச் சரண் அடைந்தவர்களுடைய தளைகளை நீக்குபவன்;
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

அன்போடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
  • கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு;.
  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;
  • (சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 -
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.)

2) பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=540
-------------- --------------

04.78 – மூவலூர்


04.78மூவலூர்

2014-09-13
மூவலூர் (மயிலாடுதுறையை அடுத்து உள்ள தலம்)
----------------------------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் விளம் விளம் மா தேமா' என்ற வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.91.1 - "கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடிமுல்லை");
(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்ட வுண்டு");

1)
மகிழ்வென நாடொறும் வஞ்சவைம் புலன்களின் வழியில் ஏகி
அகழ்குழி விழுந்திடர் அடைவது தீர்ந்திட அடையென் நெஞ்சே
புகழ்மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை புனலி னோடு
முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.

மகிழ்வு என நாள்தொறும் வஞ்ச ஐம்புலன்களின் வழியில் ஏகி - இன்பம் என்று எண்ணித் தினமும் வஞ்சமுடைய ஐம்புலன்களின் வழியிலேயே சென்று;
அகழ்குழி விழுந்து இடர் அடைவது தீர்ந்திட அடையென் நெஞ்சே - அகழ்ந்த குழியில் விழுந்து அல்லல் அடைவது நீங்கிட, என் நெஞ்சமே (மூவலூரை) அடைவாயாக;
புகழ்மிகு திருப்பெயர் புகல்பவர் வழித்துணை - புகழ்மிக்க திருநாமத்தைச் சொல்பவர்க்கு வழித்துணை ஆனவன்;
புனலினோடு முகிழ்மதி சூடிய முக்கணன் மேவிய மூவலூரே - கங்கையோடு இளநிலாவைச் சூடிய முக்கண்ணன் எழுந்தருளியிருக்கும் மூவலூரை;

அகழ்தல் - தோண்டுதல்;
முகிழ்த்தல் - அரும்புதல்; தோன்றுதல்;

* மூவலூரில் ஈசன் திருநாமம் - மார்க்கசகாயேஸ்வரர்;

2)
தளைவினை தருதுயர் தானழி வெய்திடச் சாரென் நெஞ்சே
வெளைவிடை ஊர்தியன் வெம்புலித் தோலினன் மேரு வில்லி
வளையணி மாதிடம் மகிழ்பரன் கூவிளம் வன்னி மத்தம்
முளைமதி சூடிய முக்கணன் மேவிய மூவ லூரே.

தளைவினை - பந்தித்த வினைகள்;
சார்தல் - அடைதல்;
வெளைவிடை - வெள்ளைவிடை;
வெம்புலித் தோலினன் - கொடிய புலியின் தோலை அணிந்தவன்;
மேரு வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
வளை அணி மாது இடம் மகிழ் பரன் - வளையலை அணியும் உமையை இடப்பக்கம் விரும்பிய பரமன்;
கூவிளம் - வில்வம்;

3)
இப்படி இகல்வினை எப்படி நீங்குமென் றெண்ணு நெஞ்சே
செப்பிடு வேன்வழி சென்றடி போற்றிடாய் சேவ தேறும்
ஒப்பிலன் வெங்கரி உரியினைப் போர்த்தவன் உரம லிந்த
முப்புரம் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

இகல்வினை - பகைக்கின்ற / பொருதுகின்ற வினைகள்;
சேஅது ஏறும் ஒப்பிலன் - இடபவாகனத்தை உடைய ஒப்பற்றவன்;
வெங்கரி உரியினைப் போர்த்தவன் - கொடிய யானையின் தோலைப் போர்த்தவன்;
உரம் மலிந்த முப்புரம் எய்தவன் - வலிய முப்புரங்களை ஓர் அம்பினை ஏவி அழித்தவன்;

4)
வந்திடர் செய்திடு வல்வினை ஆயின மாய வேண்டில்
செந்தமிழ் மாலைகள் செப்பிய நாவொடு சேரென் நெஞ்சே
வெந்தவெண் பொடியணி மேனியன் வேணியன் மேரு வில்லால்
முந்தரண் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.

செந்தமிழ் மலைகள் - செம்மை பொருந்திய தமிழான தேவாரப் பதிகங்கள் ;
வேணியன் - சடையினன்;
முந்து அரண் மூன்று எரி - முன்பு முப்புரங்களை எரித்த;

5)
மரணமும் பிறவியும் வருநிலை மாய்ந்திட வாழ்த்து நெஞ்சே
பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்றுழல் பித்தன் அத்தன்
சரணமென் றடிதொழும் தன்னடி யார்க்கரண் சாம வேதன்
முரணெயில் மூன்றெரி முக்கணன் மேவிய மூவ லூரே.

மரணமும் பிறவியும் வரும் நிலை மாய்ந்திட, வாழ்த்து நெஞ்சே - இறப்பும் பிறப்பும் தொடர்ந்து வரும் நிலையானது அழிய, மனமே, நீ வாழ்த்துவாயாக;
பிரமனின் தலையினில் பிச்சையை ஏற்று உழல் பித்தன், அத்தன் - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரியும் பேரருளாளன், நம் தந்தை;
சரணம் என்று அடிதொழும் தன் அடியார்க்கு அரண், சாம வேதன் - திருவடியில் சரண்புகுந்த அடியவர்களுக்குக் காவல் ஆனவன், சாமவேதத்தைப் பாடியவன் (சாமகானப் பிரியன்);
முரண் எயில் மூன்று எரி முக்கணன் மேவிய மூவலூரே - பகைத்த முப்புரங்களையும் எரித்தவன், நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

6)
காவலிங் காரெனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே
சேவலங் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் செருந்தி கொக்கின்
தூவலும் சூடிய தூயவன் இமையவர் துயர மாற
மூவரண் எய்தவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

காவல் இங்கு ஆர் எனக் கவல்வது நீங்கிடக் கருது நெஞ்சே - இங்கே நமக்குப் பாதுகாவல் யார் என்று கவலைப்படுவது ஒழிய, மனமே, நீ எண்ணுவாயாக;
சேவல் அம் கொடியுடைச் சேந்தனைப் பெற்றவன் - அழகிய சேவற்கொடியை உடைய முருகனுக்குத் தந்தை;;
செருந்தி கொக்கின் தூவலும் சூடிய தூயவன் - செருந்தி மலரையும் கொக்கிறகையும் முடிமேல் சூடிய தூயன்; (செருந்தி - ஒரு மலரின் பெயர்); (தூவல் - இறகு); (சம்பந்தர் தேவாரம் - 1.24.6 - "கொங்கு செருந்தி கொன்றை மலர்கூடக் கங்கை புனைந்த சடையார் காழியார்"); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலுங் கூவிளங் கண்ணியும்" - கொக்கின் வடிவமாய் வந்த அசுரனை அழித்து அவன் இறகைச் சூடியவன் இறைவன்);
இமையவர் துயரம் மாற மூ அரண் எய்தவன் - தேவர்களது துன்பம் தீர முப்புரங்களையும் ஓரம்பால் எய்தவன்; (மாறுதல் - நீங்குதல்; இல்லையாதல்); (அரண் - கோட்டை);
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

7)
படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணியென் நெஞ்சே
அடிதொழு வானவர்க் கருளிய அங்கணன் அண்ட வாணன்
கொடியிடை மாதொரு கூறினன் குளிர்மதி கொன்றை யோடு
முடிமிசைக் கங்கையன் முக்கணன் மேவிய மூவ லூரே.

படிமிசைப் பல்லிடர் படுவது நீங்கிடப் பணி என் நெஞ்சே - பூமியில் பல துன்பங்களை அனுபவிப்பது ஒழிய, என் மனமே, நீ தொழுவாயாக;
அடிதொழு வானவர்க்கு அருளிய அங்கணன் - வழிபட்ட தேவர்களுக்கு அருள்செய்த அருட்கண் உடையவன்;
அண்ட வாணன் - அண்ட முழுதும் வாழ்நன் (வாழ்பவன்). வாணன் மரூஉமொழி; (சம்பந்தர் தேவாரம் - 2.7.10 - "...திரு வாஞ்சியத் தண்ட வாணனடி கைதொழு வார்க்கில்லை யல்லலே");
கொடி இடை மாது ஒரு கூறினன் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
குளிர்மதி கொன்றையோடு முடிமிசைக் கங்கையன் - திருமுடிமேல் குளிர்ச்சி பொருந்திய சந்திரனையும் கொன்றைமலரையும் கங்கையையும் சூடியவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

8)
துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே
தென்னிலங் கைக்கிறை சென்னிபத் தடர்வுசெய் தேவ தேவன்
பன்னரும் சீரினன் பாய்புலித் தோலினன் பாவ நாசன்
முன்னொடு பின்னவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

துன்னிய வினையவை தொலைவுற வேண்டிடில் துதிசெய் நெஞ்சே - நம்மைப் பொருந்திய வினைகள் எல்லாம் அழியவேண்டுமென்று நீ விரும்பினால், மனமே, துதிப்பாயாக; (துன்னுதல் - பொருந்துதல்; அடைதல்; செறிதல்); (வேண்டுதல் - விரும்புதல்);
தென் இலங்கைக்கு இறை சென்னி பத்து அடர்வுசெய் தேவதேவன் - அழகிய இலங்கைக்கு அரசனான இராவணனது பத்துத் தலைகளையும் நசுக்கிய தேவாதிதேவன்;
பன்னரும் சீரினன் - பேசுவதற்கு அரிய புகழை உடையவன்;
பாய்புலித் தோலினன் - பாயும் புலியின் தோலை அணிந்தவன்;
பாவ நாசன் - பாவங்களை அழிப்பவன்;
முன்னொடு பின்னவன் - ஆதியும் அந்தமும் ஆயவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

9)
வெம்மலை போல்வினை விலகியின் புற்றிட விரும்பு வாயேல்
கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டடி இணைதொழக் குறுகு நெஞ்சே
செம்மலர் மேலயன் திரைமிசைத் துயிலரி தேடு சோதி
மும்மலம் அற்றவன் முக்கணன் மேவிய மூவ லூரே.

வெம் மலைபோல் வினை விலகி இன்புற்றிட விரும்புவாயேல் - கொடிய, மலைபோல் உள்ள வினைகள் நீங்கி இன்பம் பெற விரும்பினால்; (வெம்மை - கடுமை);
கொய்ம்மலர் செந்தமிழ் கொண்டு அடி இணை தொழக் குறுகு நெஞ்சே - பறித்த பூக்களாலும் செந்தமிழான தேவாரப் பாமாலைகளாலும் இரு திருவடிகளை வழிபட, நெஞ்சே, அடைவாயாக; (குறுகுதல் - அணுகுதல்);
செம்மலர் மேலயன் திரைமிசைத் துயில் அரி தேடு சோதி - தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல்மேல் துயிலும் திருமாலும் தேடிய தழற்பிழம்பு ;
மும்மலம் அற்றவன் - தூயவன்;
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூரை;

10)
கிறித்தவம் செய்பவர் கேப்பையில் நெய்யெனல் கேட்க வேண்டா
பறித்தநன் மலர்களைப் பத்தர்கள் இட்டடி பரவும் ஊராம்
எறித்திடு பிறையினன் இமையவர் தேரினில் ஏறி அச்சை
முறித்தெயில் படநகு முக்கணன் மேவிய மூவ லூரே.

கிறித்தவம் - ("கிறி + தவம்" / "கிறித்து + அவம்");
கிறித்தவம் செய்பவர்கள் - 1. பொய்த்தவம் செய்பவர்கள்; (கிறி - பொய்); 2. வஞ்சித்துக் கேடு செய்பவர்கள் ; (கிறித்தல் - வஞ்சித்தல்); (அவம் - கேடு);
(சம்பந்தர் தேவாரம் - 2.23.10 - "புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள் ஒத்தவ் வுரைசொல்...");
(அப்பர் தேவாரம் - 6.67.10 - "...பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக் கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் கேடிலியை நாடுமவர் கேடி லாரே");
கேப்பையில் நெய் எனல் - கேழ்வரகில் நெய் ஒழுகுகின்றது என்று சொல்வதை;
கேட்க வேண்டா - அப்பேச்சைப் பொருளாகக் கொள்ளாதீர்கள்;
பறித்த நன் மலர்களைப் பத்தர்கள் இட்டு அடி பரவும் ஊர் ஆம் - புதுமலர்களைத் தூவிய அடியவர்கள் போற்றுகின்ற ஊர் ஆவது; (பரவுதல் - துதித்தல்);
எறித்திடு பிறையினன் - ஒளிவீசும் பிறைச்சந்திரனை அணிந்தவன்; (எறித்தல் - ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.22.1 - "செஞ்சடைக் கற்றை முற்றத் திளநிலா வெறிக்குஞ் சென்னி");
இமையவர் தேரினில் ஏறி அச்சை முறித்து எயில் பட நகு - தேவர்கள் செய்த தேரில் ( / தேவர்களே பாகங்களாக அமைந்த தேரில்) ஏறி, அதன் அச்சை முறித்து, முப்புரங்களும் அழியும்படி சிரித்த; (எயில் - கோட்டை); (படுதல் - அழிதல்); (நகுதல் - சிரித்தல்);
முக்கணன் மேவிய மூவலூரே - நெற்றிக்கண்ணன் உறைகின்ற மூவலூர்;
"அப்பெருமானைத் தொழுது உய்க" என்பது குறிப்பு ;

11)
நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவ றுக்கும்
காவலன் கணைதொடு காமனைக் காய்ந்தவன் கடல்நஞ் சுண்டும்
சாவிலன் தண்மதிச் சடையினன் அந்தகன் தனைய ழித்த
மூவிலை வேலினன் முக்கணன் மேவிடம் மூவ லூரே.

நாவினில் நாடொறும் நற்பெயர் தாங்கினார் நலிவு அறுக்கும் காவலன் - தினமும் ஈசன் நாமத்தைச் சொல்லும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்துக் காப்பவன்; (நலிவு - துன்பம்); (அறுத்தல் - இல்லாமற் செய்தல்);
கணைதொடு காமனைக் காய்ந்தவன் - மலர்க்கணை தொடுத்த மன்மதனைச் சாம்பலாக்கியவன்;
கடல்நஞ்சு உண்டும் சாவு இலன் - ஆலகால விடத்தை உண்டும் இறவாதவன்;
தண்மதிச் சடையினன் - சடையில் குளிர்ந்த சந்திரனைச் சூடியவன்;
அந்தகன்தனை அழித்த மூவிலை வேலினன் - அந்தகாசுரனைச் சூலத்தால் குத்தி அழித்தவன்; (மூவிலை வேல் - திரிசூலம்);
முக்கணன் மேவிடம் மூவலூரே - நெற்றிக்கண்ணனான அப்பெருமான் உறைகின்ற இடம் மூவலூர்;. "அத்தலத்தைச் சென்றடைந்து தொழுது உய்க" என்பது குறிப்பு ;

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்புகள் :
1) மூவலூர் - மார்க்கசகாயேஸ்வரர் கோயில் : http://www.shaivam.org/siddhanta/sp/spt_v_moovalur.htm

2) இத்தலத்தில் (மூவலூரில்) சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். ஆனால் அப்பதிகம் கிடைத்திலது. (பெரியபுராணத்தில் சம்பந்தர் புராணத்தில் 437-ஆம் பாடல் காண்க: "மூவ லூருறை முதல்வரைப் பரவிய மொழியால்...");
----------- --------------