Saturday, November 23, 2019

04.79 – பிரம்மதேசம்


04.79 – பிரம்மதேசம்

2014-10-14
பிரம்மதேசம் (திருநெல்வேலி - அம்பாசமுத்திரம் அருகுள்ள தலம் - பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில்)
--------------------------------
(12 பாடல்கள்)
(கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு).
(சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன் சோதி வானவன்")

1)
ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன்
இருநதிச் சடையினன் ஏத்தும் அன்பருக்
கருநிதி ஆகிய ஐயன் தங்கிடம்
பெருமதில் புடையணி பிரம தேசமே.

ஒருமதிக் கீற்றினை உச்சி வைத்தவன் - பிறைச்சந்திரனைத் திருமுடிமேல் சூடியவன்;
இருநதிச் சடையினன் - கங்கையைச் சடையில் தேரித்தவன்; (இருநதி - பெரிய நதி - கங்கை);
ஏத்தும் அன்பருக்கு அருநிதி ஆகிய ஐயன் தங்கு இடம் - துதிக்கும் பக்தர்களுக்கு அரிய செல்வம் ஆன தலைவன் உறையும் தலம்;
பெருமதில் புடை அணி பிரமதேசமே - பெரிய மதிலால் சூழப்பெற்ற பிரமதேசம் ஆகும்; (புடை - பக்கம்);

2)
வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு காலினார்
மஞ்ஞையின் மேல்வரு மைந்தன் தாதையார்
மைஞ்ஞவில் மிடற்றினர் மதியம் சூடிய
பிஞ்ஞக னாரிடம் பிரம தேசமே.

வெஞ்ஞமன் தன்னுயிர் வீட்டு காலினார் - கொடிய எமனுடைய உயிரை அழித்த காலை உடையவர்; (ஞமன் - நமன் - கூற்றுவன்);
மஞ்ஞையின்மேல் வரும் மைந்தன் தாதையார் - மயில்மேல் ஏறி வரும் முருகனுக்குத் தந்தையார்; (மஞ்ஞை - மயில்); (சுந்தரர் தேவாரம் - 7.86.1 - "விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை");
மைஞ்ஞவில் மிடற்றினர் - கருமை திகழும் கண்டத்தை உடையவர்; (ஞவில் - நவில்; நவில்தல் - தாங்குதல்); (அப்பர் தேவாரம் - 4.60.4 - "மைஞ்ஞவில் கண்டன் றன்னை" === கருமை படர்ந்த நீலகண்டன்);
மதியம் சூடிய பிஞ்ஞகனார் இடம் பிரமதேசமே.- சந்திரனை அணிந்த பிஞ்ஞகன் என்று அழைக்கப்படும் சிவபெருமான் உறையும் இடம் பிரமதேசம் ஆகும். (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்);

3)
வேணியில் வெண்பிறை விளங்கு வேதியன்
மாணியைக் காத்தவன் மாக டற்கொரு
தோணியை ஒத்தவன் தோகை ஓர்புறம்
பேணிய கோனிடம் பிரம தேசமே.

வேணி - சடை;
மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர்;
மா கடற்கு ஒரு தோணியை ஒத்தவன் - பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்கு ஒப்பற்ற படகு போன்றவன்; (கடல் + கு = கடற்கு);
தோகை - பெண் - உமை;
பேணுதல் - போற்றுதல்; விரும்புதல்;
கோன் - தலைவன்;

4)
சிறப்புறு செந்தமிழ் செப்பி நாள்தொறும்
மறப்பில ராய்அடி வணங்கு வார்வினை
அறப்பரிந் தருள்பவன் அந்த மில்லவன்
பிறப்பிலி உறைவிடம் பிரம தேசமே.

மறப்பு இலராய் - மறவாதவர்கள் ஆகி;
வினை அறப் பரிந்து அருள்பவன் - வினைகள் தீர இரங்கி அருள்புரிபவன்; (அறுதல் - தீர்தல்; இல்லாமற்போதல்);
அந்தம் இல்லவன் பிறப்பிலி - சாதலும் பிறத்தலும் இல்லாதவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.112.8 - "வெந்தநீறணி மார்பிற்றோல்புனை அந்தமில்லவ னாடானை");

5)
நாருடை யார்க்கருள் நல்கும் நல்லவன்
கூருடை மழுவினன் கோல வெண்பிறை
நீரடை செஞ்சடை நிமலன் ஆயிரம்
பேருடை யானிடம் பிரம தேசமே.

நார் - அன்பு ; (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "பார்மலிந்தோங்கிப்... ... நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்");
கோல வெண்பிறை நீர் அடை செஞ்சடை நிமலன் - அழகிய வெண் திங்களும் கங்கையும் பொருந்திய செஞ்சடையை உடைய தூயன்;

6)
முத்தியை நல்கிடும் முதல்வன் முக்கணன்
மத்தம ணிந்தவன் மதுரை மன்னவன்
மொத்தினை ஏற்றவன் முன்னம் நஞ்சையுண்
பித்தனி ருப்பது பிரம தேசமே.

மத்தம் அணிந்தவன் - ஊமத்தமலரைச் சூடியவன்;
மதுரை மன்னவன் மொத்தினை ஏற்றவன் - பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்டவன்; (மொத்து - அடி);
முன்னம் நஞ்சை உண் பித்தன் - முன்பு விடத்தை உண்ட பித்தன்; (பித்தன் - சிவன் திருநாமம்);
இருப்பது பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

7)
நறைமலர் கூவிளம் நம்பி இட்டவர்
குறைகளைத் தீர்ப்பவன் கொக்கின் தூவலும்
அறைபுனல் வானதி அரவம் கோணிய
பிறையணிந் தானிடம் பிரம தேசமே.

நறை - தேன்; வாசனை;
கூவிளம் - வில்வம்;
நம்புதல் - விரும்புதல்;
கொக்கின் தூவல் - கொக்கு வடிவில் நின்ற அசுரனை அழித்து அவன் இறகினைச் சூடியவர் சிவபெருமான்; (தூவல் - இறகு);
அறைபுனல் வானதி - ஒலிக்கின்ற நீரை உடைய கங்கை;
கோணிய பிறை - வளைந்த பிறைச்சந்திரன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.11 - "கோணிய பிறை சூடியைக்..." );

8)
திண்ணிய நெஞ்சினன் தேர்க டாவிட
எண்ணிவெற் பிடந்தவன் எய்க்க ஊன்றினார்
கண்ணமர் நெற்றியர் கரிய மென்குழற்
பெண்ணிடத் தாரிடம் பிரம தேசமே.

திண்ணிய நெஞ்சினன், தேர் கடாவிட எண்ணி வெற்பு இடந்தவன் - கல் நெஞ்சன், இரதத்தைச் செலுத்த எண்ணிக் கயிலைமலையைப் பேர்த்தவன்;
எய்க்க ஊன்றினார் - அந்த இராவணன் வருந்துமாறு விரலை ஊன்றியவர்;
கண் அமர் நெற்றியர் - நெற்றிக்கண் உடையவர்;
கரிய மென்குழற் பெண் இடத்தார் இடம் பிரமதேசமே - கரிய, மென்மையான கூந்தலையுடைய, உமையை இடப்பாகத்தில் உடைய சிவபெருமானார் உறையும் தலம் பிரமதேசம்;

9)
கரியவன் நான்முகன் காண்ப தற்கொணா
எரியவன் ஒருகணை ஏவி ஒன்னலர்
திரியரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள்
பெரியவன் உறைவிடம் பிரம தேசமே.

கரியவன் நான்முகன் காண்பதற்கு ஒணா எரியவன் - திருமால் பிரமன் இவர்களால் காண இயலாத சோதி அவன்;
ஒரு கணை ஏவி - ஓர் அம்பை எய்து;
ஒன்னலர் திரி அரண் மூன்றினில் தீயைச் சேர்த்தருள் பெரியவன் - பகைவர்களது, எங்கும் திரிந்த முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி செய்த பெருமான்;
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

10)
குற்றமி குத்தவர் கூறும் பொய்ம்மொழி
வெற்றுரை இடரினில் வீழ்த்தும் நீங்குமின்
பெற்றமு கந்தவன் பேணு வார்க்கருள்
பெற்றியன் உறைவிடம் பிரம தேசமே.

குற்றம் மிகுத்தவர் கூறும் பொய்ம்மொழி வெற்றுரை இடரினில் வீழ்த்தும் - குற்றம் மிகுந்தவர்கள் சொல்கின்ற பொய்களும் பயனற்ற வார்த்தைகளும் துன்பத்தில் தள்ளும்;
நீங்குமின் - ஆதலால், அவற்றை/அவர்களை நீங்குங்கள்;
பெற்றம் உகந்தவன் - இடபவாகனத்தை விரும்பியவன்; (பெற்றம் - இடபம்; எருது); (உகத்தல் - விரும்புதல்);;
பேணுவார்க்கு அருள் பெற்றியன் - போற்றி வழிபடுபவர்களுக்கு அருள்கின்ற தன்மைய் உடையவன்; (பெற்றி - இயல்பு; பெருமை);
உறைவிடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

11)
கருதிவந் தேத்திடக் கவலை தீர்ப்பவன்
பொருதுவெங் கரியுரி போர்த்த மார்பினன்
எருதுகந் தேறிறை இலந்தை நீழலைப்
பெரிதுகந் தானிடம் பிரம தேசமே.

கருதி வந்து ஏத்திடக் கவலை தீர்ப்பவன் - விரும்பி வந்து வழிபடும் பக்தர்களுடைய கவலையைத் தீர்ப்பவன்;
பொருது வெங் கரி உரி போர்த்த மார்பினன் - போர் செய்த கொடிய யானையின் தோலை மார்பில் போர்த்தவன்;
எருது உகந்து ஏறு இறை - இடப வாகனத்தை விரும்பிய இறைவன்;
இலந்தை நீழலைப் பெரிது உகந்தான் இடம் பிரமதேசமே - இலந்தைமரத்தின் கீழே விரும்பி இருப்பவன் உறையும் தலம் பிரமதேசம் ஆகும். (சம்பந்தர் தேவாரம் - 3.115.1 - "ஆலநீழ லுகந்த திருக்கையே" - சிவபெருமான் கல்லால நிழலை விரும்பி இருப்பிடமாகக் கொண்டவர்);
* இலந்தை - இத்தலத்தின் தலவிருட்சம்;

12)
துணிமதிக் கண்ணியைச் சூடு சுந்தரன்
மணியணி மிடற்றினன் மங்கை பங்கினன்
பணியணி மார்பினன் பாதம் பற்றினார்
பிணியறுப் பானிடம் பிரம தேசமே.

துணிமதி - பிறைச்சந்திரன்;
கண்ணி - தலையில் அணியும் மாலைவகை;
மணி அணி மிடற்றினன் - நீலமணியை அணிந்த கண்டத்தை உடையவன்;
பணி அணி மார்பினன் - பாம்பை மாலையாக அணிந்த மார்பை உடையவன்; (பணி - நாகம்);
பாதம் பற்றினார் பிணி அறுப்பான் - திருவடியைச் சரண் அடைந்தவர்களுடைய தளைகளை நீக்குபவன்;
இடம் பிரமதேசமே - அப்பெருமான் உறையும் தலம் பிரமதேசம் ஆகும்;

அன்போடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
  • கலிவிருத்தம் - 'விளம் விளம் மா கூவிளம்' என்ற வாய்பாடு;.
  • மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வாரா;
  • (சம்பந்தர் தேவாரம் - 3.23.1 - "உருவினார் உமையொடும் ஒன்றி நின்றதோர்...")
  • (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 -
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.)

2) பிரம்மதேசம் கைலாசநாதர் கோயில் - தினமலர் தளத்தில்: https://temple.dinamalar.com/New.php?id=540
-------------- --------------

No comments:

Post a Comment