Sunday, August 30, 2015

02.18 – திருவாலங்காடு - (அப்பனிடம் ஆலங்காடு)

02.18 – திருவாலங்காடு - (அப்பனிடம் ஆலங்காடு)



2011-05-06
திருவாலங்காடு
"அப்பனிடம் ஆலங்காடு"
-------------------------------------
(எண்சீர் விருத்தம் - "விளம் விளம் மா தேமா" என்ற அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - “புண்ணியர் பூதியர் பூத நாதர்”)



1)
கோலவெண் டிங்களுங் கோள ராவுங்
.. கொக்கிற குங்குரா மலருஞ் சூடி
ஏலவெண் பொடியணி மார்பன் முன்னம்
.. இன்னமு தடைந்திடு வோமென் றெண்ணி
வேலையை வெற்பினை மத்தாக் கொண்டு
.. விண்ணவர் கடைந்தபோ தங்கெ ழுந்த
ஆலம துண்டருள் செய்த வெங்கள்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



பதம் பிரித்து:
கோல வெண் திங்களும், கோள் அராவும்,
.. கொக்கிறகும், குரா மலரும் சூடி,
ஏல வெண் பொடி அணி மார்பன்; முன்னம்
.. இன் அமுது அடைந்திடுவோம் என்று எண்ணி
வேலையை வெற்பினை மத்தாக் கொண்டு
.. விண்ணவர் கடைந்தபோது அங்கு எழுந்த
ஆலம் அது உண்டு அருள் செய்த எங்கள்
.. அப்பன் இடம் திருவாலங்காடே.


கோல - அழகிய;
கோள் அரா - கொடிய பாம்பு;
கொக்கிறகு - கொக்கிறகம்பூ; கொக்கினது இறகு; (சுந்தரர் தேவாரம் - 7.94.3 - "கோல அரவுங் கொக்கின் இறகும்" - சிவபெருமான் கொக்குருவம் கொண்ட குரண்டாசுரன் என்ற அசுரனை அழித்து, அதன் அடையாளமாகக் கொக்கிறகைச் சடையில் அணிந்தமையைக் கந்தபுராணத்துட் காண்க. இனி, 'கொக்கிறகு' என்பதொரு மலரும் உண்டு.)
ஏல வெண் பொடி - வாசம் கமழ் திருநீறு;
வேலை - கடல்;
வெற்பு - மலை;


2)
கருமணி மிடற்றினன் எழுத்தஞ் சோதிக்
.. கைதொழும் பத்தரைக் காத்த வர்க்குத்
தருவென வேண்டுவ ரங்கள் எல்லாம்
.. தந்தருள் செய்பவன் தன்னொப் பில்லான்
அருவமும் உருவமும் ஆணும் பெண்ணும்
.. ஆகிய அற்புதன் ஆலின் கீழே
அருமறை நால்வருக் குரைக்கும் எங்கள்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கருமணி மிடற்றினன் - நீலகண்டன்; (மிடறு - கண்டம்);
எழுத்து அஞ்சு ஓதி - திருவைந்தெழுத்தை ஓதி;
பத்தரைக் காத்து அவர்க்குத் தரு ன வேண்டு வரங்கள் எல்லாம் தந்தருள் செய்பவன் - பக்தர்களைக் காத்து அவர்களுக்குக் கற்பகமரம் போல் வேண்டிய வரங்களை எல்லாம் கொடுப்பவன்; (தரு - கற்பக மரம்);
தன்னொப்பில்லான் - தனக்கு ஓர் ஒப்பு இல்லாதவன்;





3)
கானையும் மன்றெனக் கருதி ஆடும்
.. கண்ணுத லான்தொழும் அன்பர் கட்குத்
தேனையும் பாலையும் ஒத்தி னிப்பான்
.. தெளிவினைத் தந்திரு வினையைத் தீர்ப்பான்
மானையும் மழுவையும் கையில் ஏந்தி
.. மால்விடை மேல்வரும் மாதோர் பாகன்
ஆனையின் ஈருரி போர்த்த எங்கள்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கான் - காடு - சுடுகாடு;
மன்று - சபை;
கண்ணுதலான் - நெற்றிக்கண்ணன்;
ருவினையைத் தீர்ப்பான் - எல்லா வினைகளையும் தீர்ப்பவன்;
ஈர் உரி - உரித்த தோல்;



4)
குழைமனத் தொடுதொழும் அம்மைக் காகக்
.. குவிகரத் திடைப்பழந் தன்னை ஈவான்
மழவிடை யாயருள் என்று வாழ்த்தி
.. மலரடி வழிபடும் அன்பர் தங்கள்
பழவினை தீர்த்தருள் பரமன் சுற்றும்
.. பல்கணப் படைபல பறைகள் ஆர்ப்ப
அழலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



அம்மை - காரைக்கால் அம்மையார்;
மழ விடையாய் - இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாக உடையவனே;
ஆர்த்தல் - ஒலித்தல்;
அழல் எரி - அழல்கிற தீ; (வினைத்தொகை); (அழல்தல் - எரிதல்; பிரகாசித்தல்);



5)
கனைகடல் தனைக்கடை நாளெ ழுந்த
.. கரியவி டந்தனை உண்ட கண்டன்
சினமறு சிந்தையர் ஆகி என்றும்
.. சேவடி தனைநினை சீலர் தங்கள்
முனைவினை தீர்த்தருள் முக்கண் அண்ணல்
.. முளைமதி சூடிக ணங்கள் சூழ
அனலெரி அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கனைகடல்தனைக் கடை நாள் எழுந்த - பாற்கடலைக் கடைந்த நாளில் தோன்றிய;
சினம் அறு சிந்தையர் - சினத்தை நீங்கிய மனத்தினர்;
முனைவினை - முன்னை வினை;
முளைமதி சூடி - பிறையைச் சூடியவன்;
அனல் எரி - அனலும் எரி; (வினைத்தொகை);



6)
சங்கர பேயுருத் தருக வென்று
.. தாள்பணிந் தம்மையார் வேண்ட ஆங்கே
அங்கருள் புரிந்தவன் அன்பர்க் கன்பன்
.. அயன்சிரம் அதிற்பலி தேரும் ஐயன்
கங்குலிற் பூதக ணங்கள் சூழக்
.. கரடிகை துடியொடு பறைமு ழங்க
அங்கியைக் கையினில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



சங்கர - அண்மை விளி - சங்கரனே;
ஆங்கு - அப்படி;
அங்கு - அவ்விடம்;
பலி தேர்தல் - பிச்சை எடுத்தல்;
கங்குல் - இரவு;
கரடிகை, துடி, பறை - பலவிதப் பறைவாத்தியங்கள்;
அங்கி - நெருப்பு;



7)
மணிமிட றன்மலை தலையால் ஏறும்
.. மாண்புகண் டவரையன் றம்மை யென்றான்
பணிபவர்க் கருங்கனி ஒத்தி ருப்பான்
.. பழவினைத் தொகுதியைப் பறைத்த ருள்வான்
துணிமதி முடிமிசைச் சூடி அல்லில்
.. சுற்றிலும் பூதக ணங்கள் ஆர்ப்ப
அணிகுழல் மலைமகள் காண ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



மணிமிடறன் - நீகண்டன்;
தலையால் ஏறும் - தலையால் நடத்தலாவது, தலைதாழ இருகைகளையும் தரையில் ஊன்ற வைத்து நடப்பதாம்;
மாண்பு கண்டு அவரை ன்று அம்மை என்றான் - அவரது பக்தியை மெச்சி அவரை அன்று அம்மையே என்றவன்;
அரும் கனி - அரிய பழம்; ('கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி' - அப்பர் தேவாரம் - 6.32.1); ('கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்' - திருவிசைப்பா - 9.5.1)
பறைத்தல் - அழித்தல்;
துணிமதி - பிறைச்சந்திரன்; (வினைத்தொகை)
அல் - இரவு;
ஆர்ப்ப - ஒலிக்க;
அணிகுழல் - அழகிய கூந்தல்;


(பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - பாடல் 58 -
வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண் உமையே மற்றிப்
பெருமைசேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை
அருகுவந் தணைய நோக்கி அம்மையே என்னுஞ் செம்மை
ஒருமொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்.)



8)
பேர்க்கமு யன்றவ ரக்கன் தன்னைப்
.. பெருமலை மேல்விரல் இட்ட டர்த்தான்
நாக்குகள் பத்தினால் பாடக் கேட்டு
.. நாளொடு வாளையும் நல்கு நாதன்
பூக்கமழ் சடைமிசைத் திங்கள் சூடி
.. பூதக ணம்புடை சூழ மொந்தை
ஆர்க்கநள் ளிருளினில் நட்டம் ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



பேர்க்க முயன்ற அரக்கன் - கயிலையைப் பெயர்க்க முயன்ற இராவணன்;
நாளொடு வாளையும் - நீண்ட ஆயுளையும் சந்திரஹாசம் என்ற வாளையும்;
மொந்தை - ஒருகட்பறைவகை (A drum with one face);
ஆர்க்க - ஒலிக்க;



9)
போதியல் பிரமனும் புள்ளூர் மாலும்
.. பொன்னடி முடியிவை காண வொண்ணாச்
சோதியன் தொழுமடி யார்கட் கென்றும்
.. துணையவன் தூயவன் அஞ்சொல் மாதோர்
பாதியன் பூரணன் வடியார் சூலப்
.. படையினன் பாரெலாம் படைத்தொ டுக்கும்
ஆதியன் அனலினை ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



போது இயல் பிரமன் - தாமரை மலரில் உறையும் நான்முகன்; (போது - பூ; இயல்தல் - தங்குதல்);
புள் ஊர் மால் - பறவைமேல் செல்லும் திருமால்; (புள் - பறவை; ஊர்தல் - செல்லுதல்);
போது இயல் பிரமனும் புள் ஊர் மாலும் பொன்னடி முடி இவை காண ஒண்ணா - ஈசன் முடியைப் பிரமனும், ஈசன் அடியை மாலும் தேடியது எதிர்நிரல்நிறையாக வந்தது;
அஞ்சொல் மாது - அழகிய சொல்லையுடைய பார்வதி;
பாதியன் பூரணன் - முரண்தொடை;
வடி ஆர் சூலப் படை - கூரான சூலாயுதம்; (வடி - கூர்மை);
ஒடுக்குதல் - லயிக்கச்செய்தல்; சம்ஹாரம் செய்தல்;
ஆதியன் - முதல்வன்;



10)
கங்குலை ஒத்திருள் நிலவும் நெஞ்சர்
.. கருத்தனை அறிகிலார் கண்ணி லாரே
திங்களும் நாகமும் சேர்ந்து லாவும்
.. சென்னியன் சேவடி போற்றும் மாணி
சங்கர னேயருள் என்னக் காலன்
.. தனையுதைத் தடியரின் உயிரைக் காத்த
அங்கணன் அனலினை ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



கங்குல் - இரவு;
கருத்தன் - கர்த்தா - கடவுள் (God, as Creator);
மாணி - அந்தணச் சிறுவன் - மார்க்கண்டேயர்;
என்ன - என்று வேண்ட;
அங்கணன் - அழகிய அருட்கண்ணன் - சிவன்;



11)
பேரழ குடலெனக் கெதற்கென் றன்று
.. பேயுரு வேண்டிய டைந்த அம்மை
சீரடிக் கீழமர்ந் தினிது பாடத்
.. திருவருள் புரிந்தவன் தேவ தேவன்
நீரடை சடையுடை நிமலன் கண்ணார்
.. நெற்றியன் பாரிடம் முழவொ லிக்க
ஆரழல் அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பனி டந்திரு வாலங் காடே.



பதம் பிரித்து:
"பேர் அழகு உடல் எனக்கு எதற்கு" என்று அன்று
.. பேய் உரு வேண்டி அடைந்த அம்மை
சீர் அடிக்கீழ் அமர்ந்து இனிது பாடத்
.. திருவருள் புரிந்தவன்; தேவ தேவன்;
நீர் அடை சடையுடை நிமலன்; கண் ஆர்
.. நெற்றியன்; பாரிடம் முழவு ஒலிக்க,
ஆர் அழல் அங்கையில் ஏந்தி ஆடும்
.. அப்பன் இடம் திருவாலங்காடே.


அம்மை - காரைக்கால் அம்மையார்;
சீர் அடி - சிறந்த திருவடி;
தேவ தேவன் - தேவர்கட்குத் தேவன்;
பாரிடம் - பூதம்;
ஆர் அழல் - அரிய நெருப்பு - பொறுத்தற்கரிய தீ, பண்புத்தொகை; ஆர்ந்த அழல் என வினைத்தொகையுமாம்;


(பெரிய புராணம் - காரைக்கால் அம்மையார் புராணம் - பாடல்கள் 60 & 61 -
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.


கூடுமா றருள்கொ டுத்துக் குலவுதென் திசையில் என்றும்
நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங் காட்டில்
ஆடுமா நடமும் நீகண் டானந்தஞ் சேர்ந்தெப் போதும்
பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான்.)



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :



1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு :
ண்சீர் விருத்தம் - 'விளம் விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு.
காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் இவ்வமைப்பு என்று கருதுகின்றேன்.
இவ்வமைப்பு ஓரளவிற்குக் கீழ்க்காணும் சம்பந்தர் பதிக அமைப்பை ஒத்துள்ளது.



2) சம்பந்தர் தேவாரம் - 1.8.1 -
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார் திங்கட்
கண்ணிய ரென்றென்று காத லாளர் கைதொழு தேத்த விருந்த வூராம்
விண்ணுயர் மாளிகை மாட வீதி விரைகமழ் சோலை சுலாவி யெங்கும்
பண்ணியல் பாடல றாத வாவூர்ப் பசுபதி யீச்சரம் பாடு நாவே.



தானன தானன தான தான" என்ற அரையடிச் சந்தம்.
தானன வரும் இடத்தில் தான (தேமா) / தானான (தேமாங்காய்) வரலாம். அப்படித் தான (தேமா) வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.



3) காரைக்கால் அம்மையார் அருளிய மூத்த திருப்பதிகம் - 11.2.9 -
துத்தம்,கைக் கிள்ளை, விளரி, தாரம்,
.. உழை,இளி ஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி, கொக்கரை, தக்கை யோடு,
.. தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்
.. தமருகம், குடமுழா, மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும் எங்கள்
.. அப்ப னிடம்திரு ஆலங் காடே 



4) திருவாலங்காடு - வடாரண்யேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=115

-------------- --------------

02.17 – பொது - (உயிரானான் போற்றி)

02.17 – பொது - (உயிரானான் போற்றி)



2011-04-30
பொது
"உயிரானான் போற்றி"
----------------------------
(12 பாடல்கள் - அகர வரிசையில் - அ முதல் ஔ வரை - தொடங்கும் பாடல்கள்)
(அறுசீர் ஆசிரிய விருத்தம் - 'விளம் விளம் தேமா' என்ற அரையடி வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் 2.66.1 - மந்திர மாவது நீறு)



1)
அம்மையும் அப்பனும் ஆகி
.. அருள்மழை பொழிகிற ஐயன்
செம்மலை போன்றொளிர் மெய்யன்
.. திருவடி தொழுமடி யார்கள்
இம்மையில் இடர்களி லாமல்
.. இன்புற நல்வரம் நல்கும்
செம்மலின் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



மெய்யன் - மெய்ப்பொருளாக உள்ளவன்; திருமேனி உடையவன்;



2)
ஆதியும் அந்தமும் ஆகி
.. அனைத்தையும் ஆள்கிற ஐயன்
பாதியும் முழுமையும் ஆவான்
.. பதமலர் பணியடி யார்க்கு
மேதியி னான்அணு காத
.. மேல்நிலை யைத்தரும் வீரன்
நாதியன் சேவடி போற்றி
.. நம்பெரு மானடி போற்றி.



மேதியினான் - எருமையை வாகனமாக உடையவன் - எமன்; (மேதி - எருமை);
நாதியன் - தலைவன்; (நாதி - Protector; காப்பாற்றுவோன்);



3)
இருவரும் மூவரும் ஆகி
.. எளியனும் அரியனும் ஆகும்
பெருமையன் நுண்ணியன் நாளும்
.. பிணைமலர் கொடுபணி அன்பர்
அருவினை யாலிடர் எய்தி
.. அலமரா வணம்அருள் செய்யும்
திருவனின் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



இருவரும் மூவரும் ஆகி - சிவமும் சக்தியும் ஆகி, மும்மூர்த்திகளும் ஆகி;
எளியனும் அரியனும் ஆகும் - எளிதில் அடையப்படுபவனும் அரிதில் அடையப்படுபவனும் ஆகின்ற;
பெருமையன் நுண்ணியன் - பருமையான பொருள்கள் யாவற்றிலும் மிகப் பருமையானவன், நுண்ணியன யாவற்றினும் மிக நுண்ணியன்;
நாளும் பிணைமலர் கொடு பணி அன்பர் - தினமும் தொடுத்த மலர்களால் வழிபடும் பக்தர்கள்; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு);
அலமரா வணம் - துன்புறாதபடி; (அலமருதல் - கலங்குதல்; வருந்துதல்);
திருவன் - செல்வன்(அப்பர் தேவாரம்- 5.13.5 - "திருவனே திரு வீழிமிழலையுள் குருவனே");



4)
ஈறொடு முதலென ஆகி
.. ஈறொடு முதலிலா ஈசன்
வேறொரு துணையிலை என்று
.. விரைமலர்த் தாள்பணி வார்க்குப்
பேறருள் புரிகிற பெம்மான்
.. பிறைமதி ஒளிர்சடை எந்தை
சீறர வன்பதம் போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



(சம்பந்தர் தேவாரம் – 3.52.7 - “ஆதியந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே”;
திருவாசகம் - திருவெம்பாவை - 7 - “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை”);
விரைமலர்த்தாள் பணிவார்க்கு - மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை வணங்குபவர்களுக்கு;
பேறருள் - பேறு அருள்;
சீறரவன் - சீறு அரவன் - சீறும் பாம்பை அணிந்தவன்; (5.79.5 - "... பொங்கரவனை...")



5)
உருவமும் அருவமும் ஆகி
.. உயிர்களுக் கருள்கிற நேசன்
வருவதும் போவதும் இல்லான்
.. மலரடி வாழ்த்தடி யாரின்
இருவினை வேரறச் செய்வான்
.. இமையவர்க் காவெயில் எய்த
செருவனின் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



இமையவர்க்கா எயில் எய்த செருவன் - தேவர்களுக்காக முப்புரங்களை எரித்தலாகிய போரைச் செய்தவன்; (அப்பர் தேவாரம் - 5.83.9 - "கருவனைக் ... புர மூன்றெய்த செருவனைத் தொழத் தீவினை தீருமே.");



6)
ர்விடை ஊர்திவி ரும்பி
.. உமையொடு வருகிற ஈசன்
நீர்மலர் கொடுதொழு வார்க்கு
.. நிம்மதி யைத்தரும் இன்பன்
பேர்பல உடையவன் பூமேற்
.. பிரமனின் சிரத்தினில் பிச்சை
தேர்பவன் சேவடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஓர் விடை ஊர்தி விரும்பி - ஒப்பற்ற இடபத்தை ஊர்தியாக விரும்பியவன் - இடபவாகனன்;
நீர் மலர் கொடு தொழுவார்க்கு - நீராலும் பூக்களாலும் வழிபடுபவர்களுக்கு; (கொடு - கொண்டு - மூன்றாம் வேற்றுமைச் சொல்லுருபு);
பூமேல் பிரமனின் சிரத்தினில் - பூமியில் பிரமனின் மண்டையோட்டில்; / தாமரைப்பூவின் மேல் இருக்கும் பிரமனின் மண்டையோட்டில்;
பிச்சை தேர்பவன் - பிச்சை ஏற்பவன்;



7)
எவ்வணம் ஏத்தினும் அன்பர்
.. எண்ணிய வண்ணம ருள்வான்
வெவ்விடம் திகழ்மணி கண்டன்
.. விரைந்தடி யாருயிர் தன்னை
வவ்விட வருநம னாரை
.. மலரடி யாலுதை செய்த
செவ்வழல் வணன்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



வணம் - வண்ணம் - வகை (Way, manner, method); நிறம்;
எவ்வணம் - எவ்வண்ணம் - எப்படி;
வெவ்விடம் - கொடிய விஷம்;
வவ்வுதல் - கவர்தல் (To snatch);
நமனார் - காலன்; எமன்;
செவ்வழல்வணன் - செந்தீப் போன்ற நிறம் உடைய மேனியன்;


(சேரமான் பெருமாள் நாயனார் அருளிய திருக்கயிலாய ஞான உலா - திருமுறை 11.8
".... .....
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் எவ்வுருவும்
தானேயாய் நின்றளிப்பான் .... " -
எவர் ஒருவர் எந்த உருவத்தில் வைத்து உள்ளத்தில் இடையறாது தியானிக்கின்றார்களோ அவருக்கு அந்த உருவமாய்த் தோன்றியே அதன்வழி அருளற்பாலதாய அருளைச் சிவபெருமானே அருளுவான். இங்ஙனம் எந்த உருவத்தையும் தனது உருவமாகவே கொண்டு அருள்புரிகின்ற சிவபெருமான் ...)



8)
ஏசும னத்தொடு சற்றும்
.. எண்ணுதல் இன்றியிவ் வெற்பை
வீசுவேன் என்றவன் தன்னை
.. மெல்விரல் இட்டழ வைத்தான்
மாசுணம் நாணது வாக
.. மலைவிலால் முப்புரம் எய்த
தேசுடை யான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஏசு - குற்றம்; ஏசுதல் - இகழ்தல்;
ஏசுமனம் - ஏசுகிற மனம்; குற்றம் உடைய மனம்;
வெற்பு - மலை;
மாசுணம் - பாம்பு;
மலைவிலால் - மலைவில்லால்;
தேசு - ஒளி; புகழ்; பெருமை;



9)
ஐந்தலை அரவமும் ஆறும்
.. அம்புலி யோடணி ஐயன்
வந்தனை செய்பவர் தங்கள்
.. வல்வினை தீர்த்தருள் செய்வான்
முந்தயன் மாலிவ ரால்தன்
.. முடியடி காணுதற் கொண்ணாச்
செந்தழ லான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



முந்தயன் மாலிவரால் - முந்து அயன் மால் இவரால் - முன்னர்ப் பிரமன் விஷ்ணு என்ற இவர்களால்; (முந்து - முன்பு);
செந்தழலான் - செந்தீ ஆனவன்;



10)
ஒளியடை யாமதி யார்கள்
.. உண்மையை ஒளித்துழல் வார்கள்
தெளிவிலா அவர்களின் சொல்லைத்
.. தீதென நீங்கிய நல்லார்
அளிமனத் தால்பணிந் தேத்த
.. அவர்க்கருள் புரிபவன் கங்கை
தெளிசடை யான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஒளி டையா மதியார்கள் - தெளிவில்லாத மதியை உடையவர்கள்; (ஒளி - வெளிச்சம்; ஞானம்);
தீது - தீமை; குற்றம்;
அளிமனம் - அளிகிற மனம் - குழைந்த மனம்;
கங்கை தெளிசடையான் - கங்கை தெளிக்கும் சடையை உடையவன்;



11)
ஓவுதல் தோன்றுதல் இல்லான்
.. ஒழிவிலா துன்னுவார் உள்ளம்
மேவுநற் றளியெனக் கொள்வான்
.. வேதனை தருவினைப் பந்தம்
யாவும றுத்தருள் செய்யும்
.. அங்கணன் ஆயிழை கூறன்
சேவுடை யான்அடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஓவுதல் - முடிதல்;
உன்னுவார் - தியானிப்பவர்; கருதுபவர்;
மேவுதல் - விரும்புதல்; உறைதல்;
தளி - கோயில்;
மேவு நற்றளி - மேவு நல் தளி - விரும்பி உறையும் நல்ல கோயில்;
வேதனை தருவினைப் பந்தம் யாவும் அறுத்து - துன்பம் தரும் வினைக்கட்டுகளை எல்லாம் போக்கி;
அங்கணன் - அருட்கண் உடையவன் (gracious-eyed);
ஆயிழை - பெண்; பார்வதி;
கூறன் - ஒரு கூறாக உடையவன்;
சே உடையான் - இடபத்தை ஊர்தியாக உடையவன்;



12)
ஔவிட வந்தடை கின்ற
.. அருவினை தீர்த்தருள் செய்வான்
செவ்வழி வண்டினம் பாடும்
.. செழும்பொழில் இடைமரு தூரன்
கொவ்வையின் கனியன வாயாள்
.. கூறினன் அம்பவ ளம்போல்
செவ்வணன் திருந்தடி போற்றி
.. சிவபெரு மானடி போற்றி.



ஔவுதல் - வாயாற் பற்றுதல் (To grasp, seize, take hold of, with the mouth);
செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்; நல்ல மார்க்கம்;
இடைமருதூரன் - திருவிடைமருதூரில் உறையும் சிவபெருமான்;
கொவ்வையின் கனி அன வாயாள் கூறினன் - கொவ்வைக்கனி போலச் சிவந்த வாயை உடைய பார்வதியை ஒரு கூறாக உடையவன்;
அம் பவளம் போல் செவ்வணன் - அழகான பவளம் போன்ற சிவந்த நிறத்தினன்;
திருந்து அடி - அழகிய திருவடி; பொலிவுடைய திருவடி;



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • "விளம் விளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு.
  • இது ஓரளவிற்குக் கீழ்க்குறித்துள்ள சம்பந்தர் தேவாரத்தின் அமைப்பில் உள்ளது.



2) சம்பந்தர் தேவாரம் - 2.68.2 -
அரவினொ டாமையும் பூண்டு வந்துகில் வேங்கை யதளும்
விரவுந் திருமுடி தன்மேல் வெண்டிங்கள் சூடி விரும்பிப்
பரவுந் தனிக்கடம் பூரிற் பைங்கண்வெள் ளேற்றண்ணல் பாதம்
இரவும் பகலும் பணிய வின்ப நமக்கது வாமே.


சம்பந்தரின் இத்தேவாரப் பதிகத்தின் அமைப்பு:
  • "தானன தானன தானா" என்ற அரையடி அமைப்பு.
  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்துகள்; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்துகள்.
  • அரையடிக்குள் வெண்டளை பயிலும்.
  • விளச்சீர் வரும் இடத்தில் மாச்சீரோ மாங்காய்ச்சீரோ வரலாம்.
  • அரையடியின் ஈற்றுச் சீர் மாச்சீர்.

----------------- ----------------