Monday, August 22, 2022

06.02.168 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - சேலை நிகர்விழி - (வண்ணம்)

06.02.168 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - சேலை நிகர்விழி - (வண்ணம்)

2012-05-04

06.02.168 - சேலை நிகர்விழி - (பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி))

(திருச்சிராப்பள்ளி அருகே வடமேற்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான )

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


சேலை நிகர்விழி மாது மனையொடு

..... தேடு பொருளெனும் .. நினைவாலே

.. சேரும் அருவினை யாவும் அடியொடு

..... தீர வழியென .. உளன்நீயே

பாலை நிகர்திரு நீறு புனைபவர்

..... பாடி அடிதொழும் .. அருளாளா

.. பாவ மலைகெட நானும் உனதிரு

..... பாத மலர்களில் .. இடுவேனே

கோல மணியென வேலை விடமது

..... கூடும் அணிமிட .. றுடையானே

.. கோயில் எனவுளம் ஆக உனபெயர்

..... கூறி வழிபட .. மறவாத

பாலன் உயிரொடு வாழ நமனுயிர்

..... கால உதைதரு .. கழலானே

.. நீல முகிலடை சோலை மருவிய

..... ஞீலி வனமுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

சேலை நிகர் விழி மாது, மனையொடு,

..... தேடு பொருள் எனும் நினைவாலே

.. சேரும் அருவினை யாவும் அடியொடு

..... தீர வழி என உளன் நீயே;

பாலை நிகர் திருநீறு புனைபவர்

..... பாடி அடிதொழும் அருளாளா;

.. பாவ-மலை கெட நானும் உனது இரு

..... பாதமலர்களில் இடுவேனே;

கோல மணி என வேலை விடமது

..... கூடும் அணி மிடறு உடையானே;

.. கோயில் என உளம் ஆக உன பெயர்

..... கூறி வழிபட மறவாத

பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர்

..... கால உதைதரு கழலானே;

.. நீல-முகில் அடை சோலை மருவிய

..... ஞீலிவனம் உறை பெருமானே.


சேலை நிகர்விழி மாது மனையொடு தேடு பொருள் எனும் நினைவாலே சேரும் அருவினை யாவும் அடியொடு தீர வழி என உளன் நீயே - சேல்மீன் போன்ற கண்ணுடைய மனைவி, வீடு, குடும்பம், ஈட்டும் செல்வம் என்ற எண்ணங்களால் வந்தடையும் அரிய தீவினைகள் எல்லாம் அடியோடு தீர்ந்துவிட வழியாக இருப்பவன் நீ; (சேல் - ஒருவகை மீன்); (நிகர்த்தல் - ஒத்தல்); (மனை - வீடு; குடும்பம்); (தேடுதல் - சம்பாதித்தல்); (அடியொடு - அடியோடு - முழுவதும்); (வழி - மார்க்கம்; உபாயம்);


பாலை நிகர் திருநீறு புனைபவர் பாடி அடிதொழும் அருளாளா - பால் போன்ற வெண்ணீற்றை அணிகின்ற பக்தர்களெல்லாம் திருப்புகழைப் பாடி திருவடியை வணங்கும் அருளாளனே;

பாவமலை கெட நானும் உனது இரு பாத மலர்களில் இடுவேனே - (அவர்களைப்போல) என் மலை போன்ற பாவங்கள் எல்லாம் தீர்ந்துபோகுமாறு நானும் உன் இருதிருவடிகளில் பாமாலை இடுவேன்;


கோல மணி என வேலை விடமது கூடும் அணி மிடறு உடையானே - அழகிய கருமணியைப் போல கடல் விடம் சேர்கின்ற அழகிய கண்டத்தை உடையவனே; (கோலம் - அழகு); (வேலை - கடல்); (அணி - அழகு); (மிடறு - கண்டம்);


கோயில் எனளம் ஆக உன பெயர் கூறி வழிபட மறவாத பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர் கால உதைதரு கழலானே - தன் மனமே உன் கோயில் ஆகுமாறு எப்போதும் உனது திருநாமத்தைச் சொல்லித் தொழுதுவந்த மார்க்கண்டேயர் உயிரோடு நிலைத்து வாழ அருள்செய்து, வீரக்கழல் அணிந்த திருவடியால் எமனை உதைத்து அவன் உயிரைக் கக்கவைத்தவனே; (உன பெயர் - '' ஆறாம் வேற்றுமை உருபு - உனது திருநாமம்); (கால்தல் - கக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.38.2 - "காலனைக் கால வைத்தார்"); (உதைதரு கழல் - உதைத்த கழல்; தரு - துணைவினை);


நீலமுகில் அடை சோலை மருவிய ஞீலிவனம் உறை பெருமானே - கார்மேகம் அடைகின்ற (வானோங்கு) சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! (நீலமுகில் - நீலமேகம் - கார்மேகம்); (ஞீலிவனம் - திருப்பைஞ்ஞீலி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.167 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - எந்நாளும் மயலுறு - (வண்ணம்)

06.02.167 – பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி) - எந்நாளும் மயலுறு - (வண்ணம்)

2012-05-04

06.02.167 - எந்நாளும் மயலுறு - (பைஞ்ஞீலி (திருப்பைஞ்ஞீலி))

(திருச்சிராப்பள்ளி அருகே வடமேற்கே 20 கிமீ தூரத்தில் உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தன்னான தனதன .. தனதான )


எந்நாளும் மயலுறு .. மதியாலே

.. இஞ்ஞால மிசையுழல் .. அடியேனும்

அந்நாலு மறைமொழி .. அயன்மாலும்

.. அண்ணாத அடிதொழ .. அருளாயே

அந்நாரி தனையிடம் .. உடையானே

.. அஞ்ஞான இருளறு .. சுடரானே

பைந்நாகம் முடிமிசை .. அணிவோனே

.. பைஞ்ஞீலி தனிலுறை .. பெருமானே.


எந்நாளும் மயல் உறு மதியாலே இஞ்-ஞாலமிசை உழல் அடியேனும் - எப்பொழுதும் மயங்குகின்ற சிந்தையாலே இப்பூமியில் வருந்தும் அடியேனும்; (மயல் - மயக்கம்); (ஞாலம் - பூமி); (உழல்தல் - சுழல்தல்; அலைதல்);

அந் நாலுமறை மொழி அயன், மாலும் அண்ணாத அடி தொழ அருளாயே - அந்த நால்வேதங்களை உரைக்கும் பிரமனும் திருமாலும் அடைய இயலாத நின் திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக; (அண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);

அம் நாரிதனை இடம் உடையானே - அழகிய உமையை இடப்பாகம் உடையவனே; (அம் - அழகிய); (நாரி - பெண்);

அஞ்ஞான இருள் அறு சுடரானே - அஞ்ஞான இருளைப் போக்கும் சோதியே; (அறுத்தல் - தீர்த்தல்):

பைந்நாகம் முடிமிசை அணிவோனே - படம் உடைய நாகப்பாம்பைத் தலைமேல் அணிபவனே; (பை - பாம்புப்படம்);

பைஞ்ஞீலிதனில் உறை பெருமானே - திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.166 – நெய்த்தானம் (திருநெய்த்தானம்) - கலரைக் கூடி - (வண்ணம்)

06.02.166 – நெய்த்தானம் (திருநெய்த்தானம்) - கலரைக் கூடி - (வண்ணம்)

2012-04-22

06.02.166 - கலரைக் கூடி - (நெய்த்தானம் (திருநெய்த்தானம்))

(இக்கால வழக்கில் "தில்லைஸ்தானம்" - திருவையாறு அருகே உள்ள தலம்)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனனத் தான தனனத் தான

தனனத் தான .. தனதான )


கலரைக் கூடி மதிகெட் டாறு

.. .. கசடுற் றீனம் .. மிகவாகிக்

.. கலியுற் றாயுள் முடிவுற் றாவி

.. .. கழலத் தீயுள் .. விழுவேனோ

மலமற் றாயுன் இருபொற் றாளில்

.. .. மலரிட் டோதி .. அடியேனும்

.. வரையற் றேறு வினையைத் தூள்செய்

.. .. வழியைச் சேர.. அருளாயே

நிலவைப் பாயும் நதியைப் பூவின்

.. .. நிரையைச் சூடும் .. முடியானே

.. நெடுவெற் பாட எறியத் தோள்கள்

.. .. நெரியத் தாளை .. இடுவோனே

அலைதெற் றாறு பணியச் சேரும்

.. .. அணிநெய்த் தானம் .. உறைவோனே

.. அலறிப் பாலன் அடையக் காலன்

.. .. அவனைக் காது .. பெருமானே.


பதம் பிரித்து:

கலரைக் கூடி, மதி கெட்டு, ஆறு

.. .. கசடு உற்று, ஈனம் மிக ஆகிக்,

.. கலி உற்று, ஆயுள் முடிவுற்று, ஆவி

.. .. கழலத், தீயுள் விழுவேனோ;

மலமற்றாய், உன் இரு பொற்றாளில்

.. .. மலர் இட்டு, ஓதி அடியேனும்,

.. வரை அற்று ஏறு வினையைத் தூள் செய்

.. .. வழியைச் சேர அருளாயே;

நிலவைப், பாயும் நதியைப், பூவின்

.. .. நிரையைச், சூடும் முடியானே;

.. நெடு-வெற்பு ஆட, எறி அத் தோள்கள்

.. .. நெரியத் தாளை இடுவோனே;

அலை தெற்று ஆறு பணியச் சேரும்

.. .. அணி நெய்த்தானம் உறைவோனே;

.. அலறிப் பாலன் அடையக், காலன்

.. .. அவனைக் காது பெருமானே.


கலரைக் கூடி மதி கெட்டு ஆறு கசடு உற்று ஈனம் மிக ஆகிக், கலி உற்று, ஆயுள் முடிவு உற்று, ஆவி கழலத் தீயுள் விழுவேன்; - தீயவரைச் சேர்ந்து, அறிவிழந்து, காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் என்ற ஆறு குற்றங்களும் மனத்தில் சேர்ந்துகொள்ள, அதனால் இழிவடைந்து, துன்புற்று, வாழ்நாள் ஆகி, உயிர் பிரிந்து தீயில் விழுந்துவிடுவேன். ஓலம்! (கலர் - கீழோர்; தீயவர்); (ஆறு கசடு - ஆறு குற்றங்கள் - அறுபகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்); (ஈனம் - இழிவு); (கலி - துன்பம்); (கழலுதல் - நீங்குதல்); (- ஓலம் - அபயக் குறிப்பு);


மலமற்றாய்; உன் இரு பொற்றாளில் மலர் இட்டு ஓதி அடியேனும், வரை அற்று ஏறு வினையைத் தூள்செய் வழியைச் சேர அருளாயே - நின்மலனே! உன் இரு பொன்னடிகளில் பூக்கள் தூவிப் பாடி வழிபட்டு அடியேனும், அளவின்றி மிகுந்த வினைகளைத் தூளாக்கும் வழியைச் சேர்வதற்கு அருள்புரிவாயாக! (மலம் அற்றாய் - நின்மலனே); (பொற்றாள் - பொன்னடி); (ஓதுதல் - பாடுதல்); (வரை - அளவு); (ஏறுதல் - மிகுதல்);


நிலவைப், பாயும் நதியைப், பூவின் நிரையைச் சூடும் முடியானே - சந்திரனையும், பாயும் கங்கையையும், பூங்கொத்துகளையும் திருமுடியில் சூடுபவனே! (நிரை - வரிசை; அடுக்கு);


நெடு-வெற்பு ஆட எறி அத் தோள்கள் நெரியத் தாளை இடுவோனே - உயர்ந்த பெரிய மலையான கயிலை அசையும்படி அதனைப் பெயர்த்து எறிய முயன்ற அந்த இருபது புஜங்களும் நசுங்குமாறு திருவடியை ஊன்றியவனே; (வெற்பு - மலை); (நெரிதல் - நசுங்குதல்);

அலை தெற்று ஆறு பணியச் சேரும் அணி நெய்த்தானம் உறைவோனே - அலைமோதும் காவிரி திருவடியை வணங்க அடைகின்ற அழகிய திருநெய்த்தானத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே; (தெற்றுதல் - மோதுதல்); (அணி - அழகு);

அலறிப் பாலன் அடையக் காலன் வனைக் காது பெருமானே - மார்க்கண்டேயர் அலறிச் சரணடைந்தபொழுது, காலனை உதைத்துக் கொன்ற பெருமானே; (பாலன் - இங்கே, மார்க்கண்டேயன்); (காதுதல் - கொல்லுதல்); (காலனவன் - அவன் - பகுதிப்பொருள்விகுதி);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.04.019 – திருநாவுக்கரசர் துதி - திருநீற்றைப் புனையடியார்

06.04.019 – திருநாவுக்கரசர் துதி - திருநீற்றைப் புனையடியார்

2012-04-15

6.4.19 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2012 (Apr 16/17)

----------------------------------

1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

திருநீற்றைப் புனையடியார் தூரத்தே தென்படினும்

ஒருதீட்டென் றலப்பமணர் உளம்கலங்க அவரடைத்த

பெருநீற் றறையினுள்ளும் பிறைசூடி கழல்பாடி

உருமாற்றம் இன்றியுய்ந்தார் உரைதமிழ்கள் உறுதுணையே.


திருநீற்றைப் புனைடியார் தூரத்தே தென்படினும் ஒரு தீட்டு என்று அலப்பு அமணர் உளம் கலங்க - திருநீறு பூசிய அடியார்களைத்ட் ஹூரத்தே கண்டாலும் தீட்டு என்று பிதற்றிய சமணர்கள் மனம் கலங்கும்படி; (புனைதல் - அணிதல்); (அலப்புதல் - பிதற்றுதல்);

அவர் அடைத்த பெரு-நீற்றறையினுள்ளும் பிறைசூடி கழல்பாடி - அந்தச் சமணர்கள் அடைத்த பெரிய சுண்ணாம்புக் காளவாயிலும் தியானிக்கும் சந்திரனைச் சூடிய சிவனது திருவடியைப் பாடி; (நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய்); (நீற்றறையினுள்ளும் - 1. நீற்றறையிலும்; 2. நீற்றறையில் தியானிக்கும்); (உள் - உள்ளே; ஏழாம் வேற்றுமை உருபு); (உள்ளுதல் - நினைதல்);

உரு மாற்றம் இன்றிய்ந்தார் உரை-தமிழ்கள் உறு-துணையே - (ஏழு நாள்களுக்குமுன் நீற்றறையில் இட்டவாறே) உடலில் எவ்வித மாறுபாடும் (ஊனமும்) இன்றி உய்ந்தவரான திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரமே நமக்குச் சிறந்த துணை;


(பெரிய புராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 692

வெண்பொடி பூசுந் தொண்டர் விரவினார் அவரை யெல்லாம்

கண்டுமுட் டடிகள் மார்கள் கேட்டுமுட் டியானுங் காதல்

வண்டுணத் துதைந்த கோதை மானியே இங்கு வந்த

பண்புமற் றிதுவே யாகும் பரிசுவே றில்லை என்றான்.

-- "வெண்மையான திருநீற்றைப் பூசும் சிவன் அடியார்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களையெல்லாம் கண்டதால் அடிகள்மார் 'கண்டு முட்டு'. அச்செய்தியைக் கேட்டதால் நானும் 'கேட்டு முட்டு'......" -- முட்டு = தீட்டு)


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பதிதோறும் தொழுதங்குப் பைஞ்ஞீலி செல்லுங்கால்

மதியாறு புனைகின்ற மணிகண்டன் வழிநின்று

பொதிசோறு தந்தருளப் பெற்றவர்சொல் புகழ்மாலை

நிதிநாடி நிதம்பாடில் வினையோடி நிறைவாமே.


தலங்கள் தோறும் ஈசனைப் போற்றி, (வெயிலில் பசியோடு) திருநாவுக்கரசர் அங்குத் திருப்பைஞ்ஞீலிக்குத் போகும்பொழுது, நிலவையும் கங்கையையும் சூடும் நீலகண்டன் அவ்வழியில் (சோலையும் குளமும் அமைத்துக்கொண்டு) காத்திருந்து அவர்க்குப் பொதிசோறு தந்து பசித்தீர்த்தருளினான். அந்நாயனார் அருளிய தேவாரம் என்ற நிதியை நாடித் தினமும் பாடினால், நம் வினைகளெல்லாம் நீங்கி, நாம் நிறைவை அடையலாம்.


(பெரிய புராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 305

காவுங் குளமும் முன்சமைத்துக் காட்டி வழிபோங் கருத்தினால்

மேவுந் திருநீற் றந்தணராய் விரும்பும் பொதிசோ றுங்கொண்டு

நாவின் தனிமன் னவர்க்கெதிரே நண்ணி இருந்தார் விண்ணின்மேல்

தாவும் புள்ளும் மண்கிழிக்குந் தனிஏ னமுங்காண் பரியவர்தாம்.)


3) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

தங்கள் சமயம் தனைநீங்கிச்

.. சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப்

பொங்கு வஞ்ச நெஞ்சமணர்

.. புகட்டு நச்சுச் சோறதனைப்

பங்கம் இல்லா அமுதாக்கிப்

.. பாலித் தானைப் பதியெங்கும்

துங்கத் தமிழால் துதியப்பர்

.. துணைம லர்த்தாள் துணைநமக்கே.


அமணர் - சமணர்;

பொங்கு வஞ்ச நெஞ்சமணர் - வஞ்சம் பொங்கும் மனத்தை உடைய சமணர்கள்;

பங்கம் - குற்றம்;

பாலித்தல் - காத்தல்;

பதி - தலம்;

துங்கம் - உயர்ச்சி; பெருமை; வெற்றி; மேன்மை;

துணை - இரண்டு; காப்பு;


(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.70.5

துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே

அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்ப தாகும்

வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா அமணர் தந்த

நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.)


4) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பாவியராய் உழல்வஞ்சப் பரசமய மிண்டரவர்

ஏவியவெங் கரியதனுக் கெள்ளளவும் அஞ்சாமல்

சேவினையே றெம்பெருமான் சேவடியே சிந்தித்த

நாவினுக்கு மன்னவர்சொல் நற்றமிழ்கள் நம்துணையே.


மிண்டர் - கல் நெஞ்சர்;

வெங்கரி - கொடிய வலிய யானை;

சே - காளை;

நற்றமிழ்கள் - தேவாரப் பதிகங்கள்;


(திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1

சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கட் சூளா மணியும்

வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்

அண்ணல் அரண்முரண் ஏறும் அகலம் வளாய அரவும்

திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்

.. அஞ்சுவதி யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.)


5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொல்லாத அமணர்கள் போதனையால் அன்றுபெரும்

கல்லோடு கட்டிநடுக் கடலாழ்த்தும் போதும்தம்

சொல்லாலெம் பெருமான்பேர் துணையென்று கரையேற

வல்லார்நம் வாகீசர் வாழியவர் மலர்த்தாளே.


போதனை - instruction, advice;

வாழி - வாழ்க;


(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.72.7

கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்

ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்

நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்

நல்ல நாமம் நவிற்றிஉய்ந் தேனன்றே.)


6) --- (கலிவிருத்தம் - கூவிளம் தேமா கூவிளம் தேமா - என்ற வாய்பாடு) ---

தாண்டவம் ஆடும் ஆண்டவன் தீயாய்

மூண்டள வின்றி நீண்டவன் தன்னைத்

தாண்டகம் பாடி வேண்டிய அன்பர்

மாண்டுணைத் தாளைப் பூண்டதென் நெஞ்சே.


தாண்டவம் ஆடும் ஆண்டவன் - நடராஜன்;

தீயாய் மூண்டு அளவு இன்றி நீண்டவன் - திருமாலும் பிரமனும் தேடுமாறு அளவில்லாச் சோதியாக உயர்ந்தவன்;

தாண்டகம் - திருநாவுக்கரசர் தேவாரத்தில் பயிலும் ஒரு யாப்பு வகை; (தாண்டகச்சதுரர் - திருநாவுக்கரசு நாயனார்);

மாண்டுணைத்தாள் - மாண் துணைத்தாள் - மாட்சிமை உடைய இரு திருவடிகள்; (மாண்தல் - மாட்சிமைப்படுதல்);

பூண்தல் - தரித்தல்; அணிதல்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.02.165 – வேதிகுடி (திருவேதிகுடி) - அறியாமை மிகவாகி - (வண்ணம்)

06.02.165 – வேதிகுடி (திருவேதிகுடி) - அறியாமை மிகவாகி - (வண்ணம்)

2012-04-12

06.02.165 - அறியாமை மிகவாகி - வேதிகுடி (திருவேதிகுடி)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனதான தனதான தனதான தனதான

தனதான தனதான .. தனதான )

(ஓரளவு இதனை ஒத்த சந்தம் - "தனதானத் தனதான" - இறவாமற் பிறவாமல் - திருப்புகழ் - அவிநாசி)


அறியாமை மிகவாகி இருதாளை நினையாமல்

.. .. அலைபோல வருமாசை .. அதனாலே

.. அழியாத மலைபோல வளர்தீய வினைகூடி

.. .. அடுகாலன் எறிபாசம் .. விழுவேனோ

வெறியாரும் மலரோடு புனலோடு புகையோடு

.. .. விரைநாறு தமிழ்மாலை .. அவையோடு

.. விலகாத வினைதீர எளிதான வழியான

.. .. விடையேறும் உனையோத .. அருளாயே

மறிமானும் இலையாரும் நுனைவேலும் ஒளியோடு

.. .. வடியாரும் மழுவாளும் .. உடையானே

.. வளையாரும் இறையாளை ஒருபாகம் அமரீச

.. .. வளராத பிறைசூடு .. சடையானே

செறிசோலை தனில்நாளும் மலர்பூவி னிடையூறு

.. .. தெளிதேறல் அளிநாடி .. இசைபாடச்

.. சினைமீது துணையோடு கரிதான குயில்கூவு

.. .. திருவேதி குடிமேவு .. பெருமானே.


அறியாமை மிக ஆகி, இரு தாளை நினையாமல், அலைபோல வரும் ஆசை அதனாலே அழியாத மலைபோல வளர் தீய வினை கூடி, அடு காலன் எறி பாசம் விழுவேனோ - அறியாமையே மிகுந்து, உன் இரு திருவடிகளை எண்ணாமல், அலைபோல வந்துகொண்டேயிருக்கும் ஆசைகளால், அழியாத மலையைப்போல் வளர்கிற தீவினைகள் பெருகிக், கொல்லும் எமன் வீசும் பாசத்தில் விழுவேனோ? (அடுதல் - கொல்லுதல்); (எறிதல் - வீசியெறிதல்);


வெறி ஆரும் மலரோடு, புனலோடு, புகையோடு, விரை நாறு தமிழ் மாலை அவையோடு, விலகாத வினை தீர எளிதான வழியான, விடை ஏறும் உனை ஓத அருளாயே - விட்டு நீங்காத பாவங்கள் எல்லாம் தீர்வதற்கு எளிய வழியாக உள்ளவனும் இடபவாகனத்தை உடையவனும் ஆன உன்னை, வாசம் மிகுந்த பூக்களாலும், நீராலும், தூபத்தாலும், வாசம் கமழும் தமிழ்ப்பாமாலைகளாலும் அடியேன் போற்ற அருள்புரிவாயாக! (வெறி - வாசனை); (விரை - வாசனை); (நாறுதல் - மணத்தல்); (புனல் - ஜலம்); (புகை - தூபம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.1.6 - "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்");


மறி மானும், இலை ஆரும் நுனை வேலும், ஒளியோடு வடி ஆரும் மழுவாளும் உடையானே - மான்கன்றும், இலைபோன்ற நுனியை உடைய சூலமும், பிரகாசமான கூர்மையான மழுவும் உடையவனே; (மறிமான் - மான்கன்று); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; ஒத்தல்); (நுனை - முனை); (வடி - கூர்மை);

வளை ஆரும் இறையாளை ஒரு பாகம் அமர் ஈச - வளையல் பொருந்திய முன்கையை உடைய உமையம்மையை ஒரு பங்காக விரும்பும் ஈசனே; (இறை - முன்கை); (அமர்தல் - விரும்புதல்);

வளராத பிறைசூடு சடையானே - இளம்பிறைச்சந்திரனைச் சூடும் சடையை உடையவனே; (வளராத - இளைய என்னும் பொருளில்); (சுந்தரர் தேவாரம் - 7.38.3 - "வளராத பிறையும் வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை");


செறி சோலைதனில் நாளும் மலர் பூவினிடை ஊறு தெளி தேறல் அளி நாடி இசை பாடச், சினைமீது துணையோடு கரிதான குயில் கூவு திருவேதிகுடி மேவு பெருமானே - அடர்ந்த சோலைகளில் தினமும் மலர்கின்ற பூக்களில் ஊறுகின்ற தெளிந்த தேனை நாடி வண்டுகள் ரீங்காரம் செய்ய, மரக்கிளைகளில் தன் துணையோடு கருங்குயில் கூவுகின்ற திருவேதிகுடியில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே. (தேறல் - தேன்); (அளி - வண்டு); (சினை - மரக்கிளை);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Friday, August 19, 2022

06.02.164 – வேதிகுடி (திருவேதிகுடி) - மேதினியில் வாழ்விதனில் - (வண்ணம்)

06.02.164 – வேதிகுடி (திருவேதிகுடி) - மேதினியில் வாழ்விதனில் - (வண்ணம்)

2012-04-06

06.02.164 - மேதினியில் வாழ்விதனில் - வேதிகுடி (திருவேதிகுடி)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானதன தானதன தானதன தானதன

தானதன தானதன .. தனதான )

(சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென - திருப்புகழ் - பொது)


மேதினியில் வாழ்விதனில் நாளுமிக ஆசைகொடு

.. .. வேதனைக ளேஅடையும் .. அடியேனும்

.. மேலைவினை தீரவுன தார்கழலை ஓதுதலை

.. .. மேவுமன மேயடைய .. அருளாயே

போதியலும் ஆரமொடு பாவிரவு மாலையொடு

.. .. பூவனைய தாள்தொழுத .. முனிகாதப்

.. போனநமன் மாளவுதை பாதகரி ஈருரிவை

.. .. போர்வையென மார்பிலணி .. ஒருவீரா

பாதியுடல் நாரிதிகழ் நாதவலை மோதுநதி

.. .. பாய்சடையில் நாகமதி .. புனைவோனே

.. பாரிடமு லாவுசுடு கானினடம் ஆடிமகிழ்

.. .. பாசுபத நீலமணி .. மிடறானே

வேதியனும் நாரணனும் ஏனமன மாயடியு

.. .. மேலுமறி யாதவளர் .. எரியானே

.. மேதிவிளை யாடிமகிழ் நீர்நிலையில் மீனுகளும்

.. .. வேதிகுடி மேயசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

மேதினியில் வாழ்வு-இதனில் நாளும் மிக ஆசைகொடு

வேதனைகளே அடையும் அடியேனும்

மேலைவினை தீர, உனது ஆர்-கழலை ஓதுதலை

மேவு மனமே அடைய அருளாயே;


போது இயலும் ஆரமொடு, பா விரவு மாலையொடு,

பூ அனைய தாள் தொழுத முனி காதப்

போன நமன் மாள உதை பாத; கரி ஈர்-உரிவை

போர்வை என மார்பில் அணி ஒரு வீரா;


பாதி உடல் நாரி திகழ் நாத; அலைமோது நதி

பாய் சடையில் நாகம் மதி புனைவோனே;

பாரிடம் உலாவு சுடுகானில் நடம் ஆடி மகிழ்

பாசுபத; நீலமணி மிடறானே;


வேதியனும் நாரணனும் ஏனம் அனமாய் அடியும்

மேலும் அறியாத வளர் எரியானே;

மேதி விளையாடி மகிழ் நீர்நிலையில் மீன் உகளும்

வேதிகுடி மேய சிவபெருமானே.


மேதினியில் வாழ்வு-தனில் நாளும் மிக ஆசைகொடு வேதனைகளே அடையும் அடியேனும் - உலகவாழ்வில் என்றும் மிகுந்த ஆசைகொண்டு துன்பமே அடைகின்ற நானும்; (மேதினி - பூமி); (கொடு - கொண்டு);

மேலைவினை தீர, து ஆர்-கழலை ஓதுதலை மேவு மனமேடைய அருளாயே - என் பழவினை தீருமாறு, உன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை ஓதுவதை விரும்பும் மனமே பெற அருள்வாயாக; (மேலைவினை - பழவினை); (ஆர்த்தல் - ஒலித்தல்); (மேவுதல் - விரும்புதல்);


போது இயலும் ஆரமொடு, பா விரவு மாலையொடு, பூனைய தாள் தொழுத முனி காதப் போன நமன் மாளதை பாத - பூக்கள் பொருந்திய மாலையோடு பாமாலையும் கொண்டு உன் மலரடியைத் தொழுத முனிவரான மார்க்கண்டேயரைக் கொல்லச் சென்ற காலனே மாளுமாறு உதைத்த பாதனே; (போது - பூ); (ஆரம் - மாலை); (விரவுதல் - பொருந்துதல்); (அனைய - ஒத்த); (காதுதல் - கொல்தல்);

கரி ஈர்-ரிவை போர்வைன மார்பில் அணி ஒரு வீரா - யானையின் உரித்த தோலைப் போர்வை போல மார்பில் அணிந்த ஒப்பற்ற வீரனே; (கரி - யானை); (ஈர் உரிவை - உரித்த தோல்);


பாதிடல் நாரி திகழ் நாத - பாதி மேனியில் உமை விளங்கும் நாதனே;

லைமோது நதி பாய் சடையில் நாகம் மதி புனைவோனே - அலைமோதும் கங்கை பாயும் சடையில் பாம்பையும் சந்திரனையும் அணிந்தவனே;

பாரிடம் உலாவு சுடுகானில் நடம் ஆடி மகிழ் பாசுபத - பூதகணங்கள் இருக்கும் சுடுகாட்டில் கூத்து ஆடி மகிழும் பாசுபதனே; (பாரிடம் - பூதம்); (பாசுபதன் - சிவன்; பாசுபத வேடம் - மயானத்துச் சாம்பல் என்பு, தலையோடு, மயிர்க்கயிறு முதலியன பூணுதல்);

நீலமணி மிடறானே - நீலமணி கண்டனே;


வேதியனும் நாரணனும் ஏனம் அனமாய் அடியும் மேலும் அறியாத வளர் எரியானே - பிரமனும் திருமாலும் அன்னமும் பன்றியும் ஆகி அடிமுடி தேடி அறிய ஒண்ணாத எல்லையற்ற சோதி வடிவினனே; (வேதியன் - பிரமன்); (ஏனம் - பன்றி); (அனமாய் - அன்னமாய்); (எரி - நெருப்பு); ("வேதியனும் நாரணனும் ஏனம் அனமாய்" - எதிர்நிரல்நிறையாகி வந்தன);

மேதி விளையாடி மகிழ் நீர்நிலையில் மீன் உகளும் வேதிகுடி மே சிவபெருமானே - எருமை விளையாடி மகிழும் குளத்தில் மீன்கள் தாவுகின்ற திருவேதிகுடியில் எழுந்தருளிய சிவபெருமானே; (மேதி - எருமை); (உகள்தல் - தாவுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------