Thursday, August 11, 2022

06.02.161 – பொது - நான் ஓதற்கு - (வண்ணம்)

06.02.161 – பொது - நான் ஓதற்கு - (வண்ணம்)

2012-01-16

06.02.161 - நான் ஓதற்கு - (பொது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தானானத் .. தனதான )

(நீதானெத் தனையாலும் - திருப்புகழ் - திருவாரூர்)


நானோதற் .. கறியாமல்
.. நாளாகிக் .. கழியாமல்
தேனார்நற் .. றமிழால்நின்
.. சீர்பாடற் .. கருளாயே
கானாகத் .. துரிமூடீ
.. காதோர்பொற் .. குழையானே
வானோருக் .. கமுதீவாய்
.. மானார்கைப் .. பெருமானே.

பதம் பிரித்து:
நான் ஓதற்கு அறியாமல்,
.. நாள் ஆகிக் கழியாமல்,
தேன் ஆர் நற்றமிழால் நின்
.. சீர் பாடற்கு அருளாயே;
கான் நாகத்து உரி மூடீ;
.. காது ஓர் பொற்குழையானே;
வானோருக்கு அமுது ஈவாய்;
.. மான் ஆர் கைப் பெருமானே.

நான் ஓதற்கு அறியாமல், நாள் ஆகிக் கழியாமல் - நான் உன்னை ஓத அறியாமல் வீணே நாள்கள் சென்று இறந்து அழிந்துவிடாமல்; (கழிதல் - சாதல்; அழிதல்);
தேன் ஆர் நற்றமிழால் நின் சீர் பாடற்கு அருளாயே - மணக்கும் இனிய நல்ல தமிழால் உன் புகழைப் பாடுவதற்கு அருள்புரிவாயாக; (தேன் - இனிமை; வாசனை); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; ஒத்தல்); (சீர் - புகழ்);
கான் நாகத்து உரி மூடீ - காட்டுயானைத்தோலைப் போர்வையாக அணிந்தவனே; (கான் - காடு); (நாகம் - யானை); (உரி - தோல்); (மூடீ - மூடியவனே); (சம்பந்தர் தேவாரம் - 2.17.3 - "ஆகம் மழகா யவள்தான் வெருவ நாகம் முரிபோர்த்தவன்")
காது ஓர் பொற்குழையானே - ஒரு காதில் பொற்குழை அணிந்தவனே (அர்த்தநாரீஸ்வரன்); (சம்பந்தர் தேவாரம் - 1.30.5 - "காதார் கனபொற் குழைதோ டதிலங்கத்")
வானோருக்கு அமுது ஈவாய் - (விஷத்தை உண்டு) தேவர்களுக்கு அமுதத்தைக் கொடுத்தவனே;
மான் ஆர் கைப் பெருமானே - மானைக் கையில் ஏந்திய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment